சுரேன் மாலத்தீவுகளில் செய்துக்கொண்டிருந்த வேலை முழுமூச்சுடன் இறுதிக்கட்டத்தை அடைந்து திறப்பு விழாவுக்கான வேலைகள் ஆரம்பிக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.
சென்னையில் இருந்தே, அங்கு செய்ய வேண்டிய வேலைகளை பணித்துக்கொண்டிருந்தான் சுரேந்தர். நிச்சயம் நின்று போனதில் இருந்து லட்சுமி சுரேந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மகனின் இழப்பு பெரிதென்றாலும், ‘போனதை நினைத்து, மகளின் வாழ்வை பறிகொடுப்பதா?’ என்ற ஆதங்கம் அவருக்கு.
திறப்பு விழாவுக்கு யார் யாரை அழைப்பது என்ற சிந்தையில் இருந்த சுரேன், ராஜகோபால் வீட்டிற்கு வந்ததை கவனிக்கவில்லை.
அவன் சிந்தையை கலைக்கும்படி, “என்ன சுரேன்? ஆல் செட்?” என்றார் ராஜகோபால்.
தந்தையின் குரல் கேட்டு திரும்பியவன், “யெஸ் ப்பா, அல்மோஸ்ட் எல்லாம் ஓவர்… சீஃப் கெஸ்ட் யாருன்னு முடிவு பண்ணிட்டு, அவர் குடுக்குற டேட்ஸ்க்கு தகுந்த மாறி ‘திறப்பு விழா’ டேட்’ட பிக்ஸ் பண்ணிடலாம்ன்னு யோசிக்குறேன் ப்பா” என்றவனிடம், “ம்ம்ம்” என்றார் ராஜகோபால்.
தனது முன்னேற்றம் குறித்து எப்போதும் அதீத ஆர்வத்துடன் இருக்கும் தந்தை, தன் பல நாள் முயற்சி ஈடேறும் நாள் அருகே இருக்கையில் அதன் உவகை சிறிதும் இன்றி, சம்பிரதாயமாய் பேசுவது சுரேனுக்கு வருத்ததை உண்டுப்பண்ணியது.
இந்நேரம் எந்த குளறுபடியும் நடவாமல் இருந்திருந்தால், சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது என தந்தை ஒரு மிக பெரிய பட்டியலே தயாரித்து தன் கையில் கொடுத்திருப்பார் என அவன் மனம் நினைக்க, எல்லாம் அவனால் வந்தது என்று ‘ஆதியை’ மனதில் வஞ்சித்துக்கொண்டிருந்தான் சுரேன்.
அந்நேரம் அவன் அலைபேசி சிணுங்கவே அதை எடுத்து பார்த்தவனுக்கு சேமிக்கப்படாத அந்த எண், யாரிடம் இருந்து வருகிறது என்பதை தெரிவிக்க, அழைப்பை எடுக்காது சைலென்டில் போட்டான்.
மூன்று நாட்களாய் அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்துக்கொண்டே இருக்கிறது. முதல் நாள் அழைப்பை ஏற்றவன், பேசுவது ‘மதுதேவா’ என்றறிந்ததும், அவன் உள்ளம் சற்று குளிர்ந்தது என்னவோ உண்மை.
ஆனால், அவள் சொன்ன காதலை அவன் உணரவும், ஏற்கவும் தயாராக இல்லை. பார்த்த மாத்திரத்தில் தன் மீது ஈர்ப்போ, காதலோ உண்டாக வாய்ப்பே இல்லை என்பதை ஸ்திரமாக நம்பினான்.
இந்த காதல் கட்டாயமாக பரிதாபத்திலோ அல்லது அண்ணன் செய்த தவறுக்கு பிராயசித்தமாகவோ மட்டுமே உண்டாகியிருக்கும் என முடிவு செய்தவன், அதை அவளிடம் கூற, ஒரு சதவிகிதம் கூட அவள் அதை ஏற்கவில்லை.
பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் புகைப்படத்தில் பார்த்து பிடித்து, நேரில் சில மணித்துளிகள் சந்தித்து முடிவு செய்வது வழக்கம் எனும்போது தன் காதலும் சாத்தியமே! என வாதாடுபவளிடம் பதில் பேச முடியாது சுரேன் அவள் அழைப்புகளை தவிர்க்க, மதுவும் விடாமல் முயன்றுக்கொண்டே இருக்கிறாள்.
“அட்டெண்ட் பண்ணு சுரேன்” ராஜகோபால் சொல்ல, “இல்லப்பா, இது ‘அன்வாண்டெட் கால்” என்ற சுரேன் மொத்தமாக அலைபேசியை அணைத்துவிட்டு தன் வேலைகளில் மூழ்க முயன்றான்.
முயன்றான் மட்டுமே!!! அவனால் முழு கவனம் செலுத்த முடியாமல் மதுவின் கலங்கிய கண்களும், காதலை உரைத்த அந்த நிமிடமும் நிமிடத்திற்கு ஒருமுறை வந்து தொல்லை செய்துக்கொண்டே தான் இருக்கின்றன.
ராஜகோபால் இருக்கையில் தளர்வோடு சாய்ந்து அமர, லட்சுமி சூடான காபியுடன் அங்கு வந்தார்.
“என்னங்க சீக்கிரமா வந்துருக்கீங்க!?”
‘ஹும்ம்’ என்ற பெருமூச்சோடு கண் திறந்தவர், “வைத்தீஸ்வரன் என்னை மீட் பண்ணனும்ன்னு சொன்னாரு… அதான் வீட்டுக்கு வந்தேன்” என்றிட,
“என்னங்க இது? புதுசா வீட்டுக்கு எல்லாம்?!” என்றார் லட்சுமி. தொழில் முறை உறவுகளை எப்போதும் வெளியிடத்திலோ, அலுவலகத்திலோ மட்டுமே சந்திப்பது ராஜகோபாலின் வழக்கம் ஆனதால், லட்சுமி அவ்வாறு கேட்க,
“ஆபிஸ்க்கு தான் வர சொன்னேன்… ஏதோ பர்சனலா பேசனும்ன்னு அவர்தான் வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு… நானும் ஒன்னும் சொல்லல” என்றார் குரலில் சுரத்தே இன்றி.
அந்நேரம் சரியாய் வைதீஷ்வரனின் கார் போர்டிகோவை அடைய, வரவேற்ப்பாய் எழுந்து வெளியே சென்றார் ராஜகோபால்.
“வாங்க வைத்தீஸ்வரன்”என்று கரம் குவிக்க, காரில் இருந்து வைத்தீஸ்வரனுடன் இறங்கினான் பிரகாஷ். அவரது ஒரே மகன்.
ராஜகோபாலுக்கு இவர்களின் வரவுக்கான காரணம் சிறிதாய் பொறி தட்டியது.
“ஹலோ அங்கிள்?” என்றான் பிரகாஷ்.
[the_ad id=”6605″]
“ஹவ் ஆர் யூ ராஜகோபால்?” என சம்பிரதாய கேள்வியுடன் உள்ளே நுழைந்த வைத்தீஸ்வரன், லட்சுமியை பார்த்ததும் இன்முகமாய், ‘வணக்கம்’ சொல்ல,
“ஹலோ ஆன்ட்டி” என படாரென காலிலேயே விழுந்துவிட்டான் பிரகாஷ்.
அதை எதிர்பார்த்திராத லட்சுமி வேகமாய் பின்னால் நகர்ந்தார் என்றால், அருகில் நின்றிருந்த சுரேன் சற்று எம்பி குதித்தே விட்டான்.
“என் பையன் ரொம்ப ரெஸ்பெக்ட்புல் பெலோவ்” என்றார் வைத்தீஸ்வரன்.
“தெரியுது” என்ற ராஜகோபால், இருவரையும் அமர சொல்லிவிட்டு, அவர்களுக்கு குடிக்க ஏதேனும் கொண்டு வருமாறு மனைவியை பணிந்தார்.
சுரேன் அவ்விடம் தான் இருப்பது அதிகப்படி என்பது போல தோன்ற, அவன் வேலையை தொடரலாம் என்றெண்ணி அங்கிருந்து நகரவே, “தம்பி, நீங்களும் இருங்க… ‘நம்ம’ குடும்ப விஷயம் பேசும்போது நீங்க இல்லன்னா எப்டி!?” என்றார் வைதீஸ்வரன்.
‘நம்ம குடும்பமா?’ என புருவம் சுருக்கியவன் தன் தந்தையை பார்க்க, அவர் விழி அசைவில் அவ்விடமே அமர்ந்தான் சுரேன்.
“அன்னைக்கு நடந்தது நிஜமாவே கஷ்டமா விஷயம் தான்… ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் குடும்பத்துல நடக்க இருந்த நல்ல காரியம், கண்ணு பட்ட மாறி தடையாகி போச்சு” என்று வைத்தீஸ்வரன் அனுதாபம் கூற,
“நடக்கணும்ன்னு இருக்குறது நடக்குது” என ஒரே வரியில் முடித்துக்கொண்டார் ராஜகோபால்.
“நடந்தது நடந்துப்போச்சுன்னு அப்படியே விட முடியாதே ராஜகோபால்… அடுத்து நடக்க வேண்டியதை பார்க்க வேண்டாமா?” என வைத்தீஸ்வரன் வினா எழுப்ப, விடை என்னவாய் இருக்கும் என்று தெரிந்தாலும் புரியாதது போல,
“இப்போ உடனே எதுவும் செய்ய முடியாதே வைத்தீஸ்வரன்” என்றார் ராஜகோபால்.
“அப்டி ஏன் நினைக்கிறீங்க!? சூட்டோட சூடா பொண்ணுக்கு வேற நல்ல இடமா பார்த்து கல்யாணம் செஞ்சு வச்சுட வேண்டியது தானே!? பிரச்சனை நடந்த இடத்திலேயே திரும்பவும் சம்பந்தம் வைக்குறது ஆகாத காரியமில்லையா!?”
சுரேனுக்கு அவர் சொல்வது சரியென்று பட்டது.
“அதெல்லாம் சரி வராது… தன்யாவுக்கு பிடிச்ச மாப்பிள்ளையா பார்க்கணும்ன்னு தான் இவ்ளோ நாள் பொறுத்தோம்… இப்ப இன்னொரு மாப்பிள்ளை தேடி அவளை சம்மதிக்க வைக்குறதெல்லாம் வாய்ப்பில்லை” என்று ராஜகோபால் சொல்ல, லட்சுமி காபி கோப்பைகளுடன் அங்கே வரவே,
[the_ad id=”6605″]
“பிடிவாதம் எல்லாம் எத்தனை நாளைக்கு இருக்கும்ன்னு நினைக்கிறீங்க!? கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும், எல்லாரும் என்ன பிடிச்சா கல்யாணம் செஞ்சுக்குறாங்க?!” என்ற வைத்தீஸ்வரன் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு,
“என்ன சொல்ற தங்கச்சி?” என்றார் லட்சுமிடம்.
இதுவரை நடந்த சம்பாஷனையை கேட்டுக்கொண்டிருந்தாலும், கேள்வி சட்டென தன்னிடம் திருப்பப்பட்டதும், என்ன சொல்வதென தெரியாது அவர் கணவரை பார்க்க,
“நீங்க என்ன சொல்றீங்க தம்பி?” என்று சுரேனை பார்த்து கேட்டார் வைத்தீஸ்வரன்.
“நான்… நான் என்ன?” என்று தயங்கியவன் பின்னே, “எனக்கும் கூட இப்போவே தன்யா கல்யாணத்தை முடிச்சுடலாம்ன்னு தான் தோணுது” என்றிட,
“அப்பறம் என்ன? உடனே நிச்சயத்தை முடிச்சுட்டு அடுத்த முகூர்த்தமே கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று உற்சாகமாய் சொன்னார் வைத்தீஸ்வரன்.
லட்சுமி திகைப்புடன் கணவரை நோக்க, அவரோ எவ்வித மாற்றமும் இன்றி மௌனமாய் அமர்ந்திருந்தார்.
சுரேன், “மாப்பிள்ளை பார்த்து சீக்கிரமே நிச்சயம் பண்ணிடலாம் அங்கிள்” என்று சொல்ல,
“ஏன் தம்பி, உங்களுக்கு என் புள்ளையை பார்த்தா மாப்பிள்ளையா தெரியாதா!? என் வம்சத்துக்கும் சொத்துக்கும் ஒரே வாரிசு… இவனை விட நல்ல மாப்பிள்ளையை எங்க போய் தேடுவீங்க?” என்று வந்த விஷயத்தை போட்டுடைக்க,
சுரேன் சங்கடமாய் பிரகாஷை ஏறிட்டான். ப்ளேசர், ஜீன்ஸில் ஸ்டைலாக அமர்ந்திருந்த பிரகாஷ், எந்தவிதத்திலும் குறைவாக தோன்றவில்லை சுரேனுக்கு.
தந்தையின் முடிவு என்னவாக இருக்கும் என அவன் அவரை பார்க்க, ராஜகோபால் இதில் யோசிக்கக்கூட ஒன்றும் இல்லை என்பதை போல சட்டென சொன்னார்,
“இல்ல வைதீஷ்வரன், என் பொண்ணுக்கு மாப்பிள்ளைன்னா அது என் பிரண்டோட பையன் ஆதி மட்டும் தான்… இது என் முடிவு மட்டும் இல்ல, என் பொண்ணோட முடிவும் தான்” என்று கூற,
“அதுதான் இனி நடக்காதுன்னு ஆகிடுச்சே” என்றார் வைத்தீஸ்வரன்.
“அதை நீங்க எப்டி சொல்ல முடியும்? இன்னைக்கு இருக்க நிலவரத்தை வச்சு எதையும் முடிவு செய்ய முடியாது வைத்தீஸ்வரன்” என்றார் ராஜகோபால்.
வைதீஷ்வரன் தனது கோவத்தை அடக்குவது அவர் இருக்கையின் கைப்பிடியை அழுத்திப்பிடிப்பதிலேயே தெரிய, “இதை நம்ம தொழில் போட்டியை மனசுல வச்சு நான் பேசுறேன்னு நினைக்காதீங்க… வேற யார் வந்து பொண்ணு கேட்டுருந்தாலும் நான் ‘முடியாது’ன்னு தான் சொல்லிருப்பேன்” என்றார் ராஜகோபால்.
“என் பையன் விருப்பப்பட்டுட்டாங்குற ஒரே காரணத்துக்காக தான் நான் திரும்ப திரும்ப உங்ககிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேன்… நம்ம பகையை கூட ஒரு நொடில மறந்துட்டு உறவாக நினைக்குறதுக்கு நீங்க காட்டுற மரியாதை இதானா!?” கோவத்தை அடக்கி வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி கேள்வி எழுப்பினார் வைத்தீஸ்வரன்.
“உங்க பையன் விருப்பத்தை நீங்க மதிக்குறப்போ, என் பொண்ணு விருப்பத்தை நானும் மதிக்குறதுல தப்பில்லையே?!” என்றார் ராஜகோபால்.
சுரேனுக்கோ அவனுக்கு தீங்கிழைத்தவனுக்கு தந்தை பரிந்து பேசுவதும், அதற்கு அன்னை அமைதி காப்பதும் எரிச்சல் தர,
“ஆனா தன்யாவுக்கு தான் அவனை பிடிக்கலல!?” என்றான் சுரேன்.
ராஜகோபால், “பிடிக்கலன்னு அவ உன்கிட்ட சொன்னாளா சுரேன்? பிடிக்காம தான் நிச்சயத்துக்கு சம்மதிச்சு சபைல வந்து நின்னாளா!? அவ வேண்டாம்ன்னு பிடிவாதம் பிடிச்சுருந்தா நம்மளால எதையுமே செஞ்சுருக்க முடியாது” என்று காட்டமாய் கூறியவர்,
“தன்யாவுக்கும் ஆதிக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம்… அவங்க சமாதானம் ஆன அடுத்த நிமிஷமே அவங்க கல்யாண ஏற்பாடு நடக்கும்…” என்றார் ராஜகோபால்.
“அப்பா, அவன் என் வாழ்க்கையை கெடுத்தவன்” சுரேன் அவர் முடிவில் அதிர்ந்து போய் சொல்ல, “அதுக்காக தன்யா வாழ்க்கையை கெடுக்க முடியாது சுரேன்… ஆதியை தவிர ஒருத்தன் தன்யா வாழ்க்கைல வரப்போறதே இல்ல” என்றார் தீர்மானமாக.
சுரேன் ‘ச்சை’ என கையில் இருந்த மொபைலை வீசிவிட்டு கோபத்துடன் அவன் அறைக்கு செல்ல,
வைத்தீஸ்வரன், “பொண்ணோட விருப்பத்தை மட்டுமே பார்க்க கூடாது ராஜகோபால்” என்றார் மாடியேறும் சுரேனை ஓர் பார்வை பார்த்தபடி.
“என் முடிவை நான் சொல்லிட்டேன்… உங்களுக்கு புரியும்ன்னு நினைக்குறேன்…” என்ற ராஜகோபால், மறுநொடி எழுந்து நின்று “தேங்க்ஸ் ஃபார் கமிங்” என கரம் நீட்ட, அவரது மறைமுக வழியனுப்புதலில் செந்தனலாய் உள்ளம் கொதித்த வைதீஷ்வரன், அவர் நீட்டிய கரத்தை சீற்றத்துடன் பார்த்து விட்டு விருட்டென வெளியேற, பிரகாஷ் தன்னால் முடிந்த மட்டும் முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
காரில் ஏறி பல நிமிடங்கள் ஆன பின்னும் வைதீஷ்வரனின் கோவம் அடங்கவில்லை.
தந்தையை பார்க்க பார்க்க பிரகாஷின் பிபி ஏறியது. தன் விருப்பத்திற்காக தொழிற்பகையையும் மறந்து இத்தனை தூரம் இறங்கி வந்திருப்பவரை அவமானப்படுத்தும்படி அவர்கள் நடந்துக்கொண்டதாக கோவம் கொண்டவன், எப்படியேனும் அவர் அடைந்த இந்த அவமானத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என உள்ளூர உறுதியாய் முடிவு செய்தான்.
அலுவலகத்திலோ, தன்யாவின் எரிமலை குழம்பில் இருந்து அசால்ட்டாக தப்பித்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.
ஒரே அறையில் தன்யாவின் கண்ப்படும் தொலைவில் பிரியா தன் மேசையை போட்டு அமர்ந்திருக்க, எதற்க்கென்றே தெரியாது தனது கோபத்தை அவள்மீது கொட்டிக்கொண்டிருந்தாள் தன்யா.
தான் என்ன செய்கிறோம்? எப்படி நடந்துக்கொள்கிறோம்? எதை எதிர்ப்பர்க்கிறோம்? என எந்த சிந்தனையும் இன்றி அவள் நிலையற்ற மனதுடன் இருக்க, அவளை ஒருவித பாவப்பட்ட கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரியா.
ஆதி அவளுடன் சேராத வரை தன்யா தன்னிலையில் இருக்க போவது இல்லை என்பது அவளை பார்த்த சில கணங்களிலேயே அறிந்துக்கொண்டாள் பிரியா. ஆனால், அதை உணர வேண்டியவளோ வீண் பிடிவாதத்தில் நாட்களை வீணடித்துக்கொண்டிருந்தாள்.
தன்யாவை பார்த்துக்கொண்டு பிரியா அமர்ந்திருக்க, அதைக்கண்டு எரிச்சலுற்ற தன்யா, அவள் முன் சொடுக்கிட்டு, “சும்மா கனவு காண தான் இங்கே வந்தீங்களா? வேலை செய்ய விருப்பம் இல்லன்னா எதுக்கு இங்க வரணும்?” என்றாள் காட்டமாய்.
அவள் நடந்துக்கொள்ளும் முறைக்கு யாராய் இருப்பினும் இந்த வேலையே வேண்டாம் என சென்றிருக்க வேண்டும். ஏனெனில், அத்தனை தூரம் எரிந்து விழுந்தாள் தன்யா.
ஆனால், பிரியாவோ கொஞ்சமும் அசராது, “நீங்க கேட்ட கொடேஷன் ரெடி பண்ணி உங்க டேபிள்ல வச்சு அரைமணி நேரமாச்சு… நீங்க எப்போ அதை செக் பண்ணுவீங்கன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன் மேம்” என்று சொல்ல,
தவறு தன்மீது உள்ளது என்பதை அறிந்ததும், இன்னும் ஏறித்தான் போனது அவள் சீற்றம்.
[the_ad id=”6605″]
“ஐ க்நோ தட்! உங்களுக்கு வேற வேலை எதுவும் இருந்தா பாருங்க” என்று தன்யா கடுப்படிக்க,
“என்ன வேலை செய்யட்டும்ன்னு நீங்க தான் மேம் சொல்லணும்” என்றாள் பிரியா.
“ப்ச்” என வெளிப்படையாய் சலித்தவள், “செய்ய ஒன்னும் இல்லன்னா தயவுசெஞ்சு கிளம்பி போங்க… ஐ நீட் சம் ஸ்பேஸ்” என்றாள் தன்யா.
“தென் ரைட்… பை மேம்” என அடுத்த நொடியே தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள் பிரியா.
‘என்ன இவ, எவ்வளோ அடிச்சாலும் தாங்குவா போல’ என தன்யாவுக்கு தோன்ற, ‘அந்த நிமிடம் அவள் அங்கிருந்து சென்றால் போதும்’ என்றே தோன்றியது.
மீண்டும் “பை மேம்” என கையசைத்து பிரியா வெளியேற, தன் தலையை இருகைகளால் தாங்கியபடி அமர்ந்துவிட்டாள் தன்யா.
நிசப்தமாய் இருந்த அவ்வறையில் அதன் அமைதியை குலைக்கும்படி ஒலித்தது அந்த பாடல்…
அவளுக்கு மருந்தாகவும் வலியாகவும் இருக்கும் அதே பாடல்…
‘அஞ்சு நாள் வரை
அவன் பொழிந்தது,
ஆசையின் மழை,
அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள்
நினைவினில் இருக்கும்…’
மெல்லிய ராகமாய் ஒலிக்க, ஆதியின் வசீகர புன்னகை அவள் கண்கள் முன்னே காட்சியாய் தோன்றி வதைக்க, “தேவா….” என கலங்கியது அவள் மனம்.
அவள் மனம் வேண்டுவது அவளுக்கு புரியாத புதிராய் இருந்தது.
சட்டென அறைக்கதவை திறந்து உள்ளே வந்த பிரியா, “சாரி மேம்… ஐ லெப்ட் மை மொபைல்” என சிரித்துக்கொண்டே, ஒலித்துக்கொண்டிருந்த அவள் அலைபேசியை எடுக்க,
உச்சகட்ட எரிச்சலில் “ஜஸ்ட் கெட் லாஸ்ட் பிரம் ஹியர்….” என்று உச்சஸ்தானியில் கத்தினாள் தன்யா.
மொபைலை எடுத்துக்கொண்ட பிரியா வேகவேகமாய் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
அவள் அலுவலகத்தை விட்டு வெளியேறுகையில் அவளுக்கு அழைத்த கோகுல் ஒரு முகவரியை கொடுத்து அங்கே வர சொல்ல, டேக்ஸி ஒன்றின் மூலம் அவ்விடம் விரைந்தாள் பிரியா.
மணி அப்போதே இரவு எட்டை நெருங்கி விட்டது.
அவன் சொன்ன முகவரியில் பிரியா இறங்கும்போது, “ஹாய் பிரியோ” என அவள் பின்னே வந்து நின்றிருந்தான் கோகுல்.
“ஹா….ய்” என சந்தேகமாய் இழுத்தவள், “இங்க எதுக்கு வர சொன்னீங்க?” என்றாள் அவனிடம்.
“போன்’லயே கேட்டிருக்கணும்… இங்க வந்து கேட்க்குறீங்க” என சிரித்தவன், “வாங்க சொல்றேன்” என அந்த அப்பார்ட்மென்டின் உள்ளே அழைத்து சென்றான்.
முதல் தளத்திலேயே இருந்த அந்த ஒற்றை படுக்கையறை பிளாட்’டை திறந்து காட்டியவன், “பிடிச்சுருக்கா?” என்று ஆர்வமாய் கேட்க,
“அதுக்குள்ள பார்த்துட்டீங்களா!?” என்றாள் ஆச்சரியமாய்.
“எஸ்… உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைச்சு அட்வான்ஸ் கூட குடுத்துட்டேன்… இன்னைக்கு நைட்’ல இருந்தே நீங்க இங்க ஸ்டே பண்ணிக்கலாம்” என்று சொல்ல,
“ஹவ் ஸ்வீட் யூ ஆர்?!!!” என செல்லமாக சொன்னாள் பிரியா.
அவள் புகழ்ச்சியில் வானில் பறந்த கோகுல், “உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப்போறேன்” என்றான் வழிசலாக.
“ம்ம்… யூ ஆர் சோ ஸ்வீட்… என்னை ரொம்ப மரியாதையா எல்லாம் பேச வேண்டாம்… ஜஸ்ட் ‘போ’ ‘வா’ன்னே சொல்லுங்க” என்று அவள் சொல்ல,
‘எகிறி குதித்தேன்… வானம் விழுந்தது’ என பேக்ரௌண்ட் மியூசிக் ஓடியது கோகுலுக்குள்.
குதிக்காத குறையாக மகிழ்ச்சியில் திளைத்தவன், “உன் லக்கேஜ் எல்லாம் எங்க இருக்குன்னு சொல்லு, நான் போய் கொண்டு வரேன்” என்றான் உடனே ஒருமைக்கு தாவி.
“லக்கேஜ் எதுவும் பெருசா இல்ல கோகுல்… நான் பார்த்துக்குறேன்” என்றுவிட்டாள் பிரியா.
அடுத்து என்ன பேச என கோகுலுக்கு தெரியவில்லை. வீட்டை அங்குல அங்குலமாக சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
அடுத்து பேச்சை துவங்க வேண்டுமே என, “ம்ம்ம்… அப்பறம்!?” என்றான் கோகுல்.
அவன் குரலில் திரும்பியவள், அவனை போலவே, “அப்பறம்….?!” என்றாள்.
அவனும் சிரித்து, “அப்….பறம்!?” என ராகம் போட, நன்றாய் அவனை நோக்கி திரும்பி கைக்காட்டி நின்றவள், “என்ன அப்புறம்!?” என்றாள் புருவம் உயர்த்தி.
அவள் நின்ற தோரணையில், அவள் அழகில் மயங்கிப்போனவன், தன் நெஞ்சை நீவிக்கொள்ள, உதடு கடித்து சிரிப்பை அடக்கினாள் பிரியா.
“என்னாச்சு கோகுல்?”
“உனக்கு ஒன்னும் தோணலையா பிரியா… என்னை பார்த்ததும் ஜில்லுன்னு காத்தடிச்சு, மனசு பறக்குறமாறி…?” அவள் கண்களை பார்க்காமல் கேட்டே விட்டான் கோகுல்.
அவள் அடக்க முயன்றும் சிரிப்பது வெளியே தெரிந்துவிட, “என்ன பிரியா?” என்றான் கோகுல்.
“நத்திங்.. நத்திங்…” என்றவள் முகத்தை சீராக்கிக்கொள்ள,
‘உப்ப்ப்…’ என காற்றை ஊதித்தள்ளிய கோகுல், “உன்னைத்தேடி கண்டுபிடிக்கவே எனக்கு 27வருஷம் ஆச்சு.. இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட என்னால வெயிட் பண்ண முடியாது! அதனால டக்குன்னு சொல்லிடுறேன்…” என சொல்லிக்கொண்டிருக்க,
“வெயிட்… வெயிட்… வெயிட்” என அவனை தடுத்தவள், “27 ஆ?” என்றாள் விழி விரித்து.
கோகுல், “அது… அது…!” என மாட்டிக்கொண்டதில் முழிக்க, பிரியா சிரிப்பதை கண்டதும், “27 தான்… ஒரு மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி” என்றான் மிதப்பாக.
“ஆஹான்…” அவள் சிரிப்பு குறைந்தப்பாடில்லை.
“ப்ச்… நான் சொல்ல வந்ததே வேற… அதை கேட்க்காம…” என கோவித்துக்கொண்டான் கோகுல்.
“ஓகே.. ஓகே… சொல்லுங்க”
பிரியா, “சொல்லுங்க” என்றதும், சொல்ல வந்தவன் அப்படியே ஸ்டக்காகி, “டக்குன்னு சொல்லுன்னா? மறந்துட்டேன்” என்றான் பரிதாபமாய்…
சட்டென வாய்விட்டே கலகலவென சிரித்தாள் பிரியா. அவள் புன்னகை அந்த பொருட்கள் நிரம்பா அறைதனில் அதிர்ந்து எதிரொலிக்க, “இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை… நான் சொல்ல வேண்டியதை நாளைக்கு சொல்றேன்” என்றான் கோகுல்.
அவளும் சரியென்று அவனை வழியனுப்ப, அப்பார்ட்மெண்ட் விட்டு கீழே இறங்கி சென்றவனின் கண்கள் தன்னிச்சையாய் அவள் பிளாட் பக்கம் திரும்பியது.
அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட செய்யும்படி, பால்கனியில் நின்று அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரியா.
கோகுலுக்கு இறக்கை கட்டி பறப்பதை போல இருந்தது. காற்றை கைகளால் ஓங்கி குத்தி, ஒரு குதி குதித்து அவன் சுற்றி நின்ற, அவன் செய்வதை பார்க்க வேடிக்கையாய் இருந்தது அவளுக்கு.
“பிரியாஆஆ….?!” இரவின் அமைதியில் பலமாய் கேட்டது அவன் குரல்.
“வாட்…!?”
கோகுல், “நான் உன்னை விரும்பல…
உன் மேல ஆசைப்படல…
நீ அழகா இருக்கன்னு நினைக்கல…
ஆனா, இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு…
யோசிச்சு சொல்லு…..”
‘சகியே… ஸ்நேகிதியே’ என்ற பின்னிசை இன்றி மாதவன் மாடுலேஷனில், கத்தி சொல்ல….
ஷாலினி போல மௌனம் காக்காத பிரியா, “யோசிச்சு நாளைக்கு சொல்லவா?” என்றாள் சிரிப்பை குறைக்காது.
கோகுலுக்கு கால் தரையில் படவில்லை. வானத்தில் பறந்துக்கொண்டிருந்தான்.
‘டேய், ஆதி! உன்னால எனக்கு நடக்கப்போற ஒரே நல்ல காரியம் இதான்டா’ என உள்ளூர குதூகலித்தவன், சாலையில் சர்க்கஸ்க்காரன் போல பைக்கில் வித்தைக்காட்டிக்கொண்டே அவன் வீட்டை அடைந்தான்.
அவனின் நல்ல நேரம் எதிரே எந்த தண்ணீ லாரியும் வரவில்லை.
-கலாட்டா தொடரும்…