அலுவலகத்தில் ஆதியின் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை பிரட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தான் கோகுல். அவன் வாய் தன் போக்கில் புலம்பிக்கொண்டிருந்தது.
‘கூட இருந்தும் உயிர் எடுத்தான், இப்போ கிளம்பி போயும் உயிர் எடுக்குறான்! இவன் சொல்லிக்காம போனதுக்கு இந்தம்மா என்கிட்ட காட்டுக்குரங்கு மாறி கத்திக்கிட்டே இருக்கு!’ என அவன் புலம்பலோடு கோப்புகளை பார்ப்பதும், எடுத்து வீசுவதுமாய் இருக்க,
“என்ன மிஸ்டர் கோகுல்? ஃபைல் கிடைச்சுதா இல்லையா?” அறையின் வாயிலிலேயே கடுகடுப்புடன் நின்றிருந்தாள் தன்யா.
‘நானா வச்சேன்! கேட்ட உடனே எடுத்து நீட்டுறதுக்கு?’ என அவன் மனம் வாதம் செய்தாலும், வெளியே பவ்வியமாய், “நோ மேம்! ஆதி எங்க வச்சான்னு தெரியல” என்று சொல்ல,
“ஹவ் இர்ரெஸ்பான்சிபில்? லீவ் வேணும்ன்னா சொல்லிட்டு போடுறது இல்லையா? இப்படி பொறுப்பில்லாம அவர் இஷ்டத்துக்கு காணாம போறாரு?” என்று கத்த,
‘ஐயோ இதையே தாம்மா மூணு நாளா கேட்குற?’ என கோகுல் மனம் சொல்ல,
“கால் பண்ணா நாட் ரீச்சபிள்! ஒரு பொறுப்புள்ள பொசிஷன்ல இருக்கவர் செய்யுற வேலையா இது? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல!” என்று தன்யா மேலும் கத்த,
“வாட் கேன் ஐ டூ ஃபார் தட் மேடம்?” என கேட்டே விட்டான் கோகுல். பாவம், அவனும் மூன்று நாட்களாய் அவளிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறான். ஆதி சொல்லாமல் சென்றுவிட்டதன் கோபம் எல்லாம் இவன் மீது தான் இறங்கிக்கொண்டிருக்கிறது.
“அவரை நீங்க தானே ரெக்கமன்ட் பண்ணீங்க? அப்போ உங்களை தானே நான் கேள்வி கேட்க முடியும்?” என்று தன்யா நியாயமாய் சொல்ல, “ஆமால்ல” என முனகினான் கோகுல்.
“என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது! அந்த ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஸன் கூட நம்ம போட்டுருந்த அக்ரீமென்டோட ‘ஃபேக் காப்பி’ இன்னும் ஒன் ஆர்’ல என் டேபிள்க்கு வந்தாகணும்…” என்றவள் அறை கதவை வேகமாய் அறைந்து சாற்றிவிட்டு செல்ல, கையில் இருந்த கோப்பைக்கொண்டு ‘படார், படார்’ என தலையிலேயே அடித்துக்கொண்டான் கோகுல்.
“ஒழுங்கா பத்திரிக்கை ஆபிஸ்லயே குப்பை கொட்டிருக்கலாம்! தேவையா இதெல்லாம் எனக்கு!?” என சலித்துக்கொள்ள, அவன் அலைபேசி சப்தமிட்டு அதிர்ந்தது.
‘ப்ச்’ என்ற சலிப்போடு “ஹலோ, யாரு?” என அவன் கேட்க, “மச்சி! ஹவ் ஆர் யூ டா?” என மறுமுனையில் சிரித்தான் ஆதி.
அவன் குரலை கேட்டதுமே ஆத்திரத்தில் கன்னாபின்னாவென கத்திவிட்டான் கோகுல்.
பின்பு, “டேய், நீ சொல்லாம போனதுக்கு உன் ஆளு என்னை ‘சுக்கா’வா வறுக்குதுடா, எப்போடா வந்து தொலைவ?” என திட்ட, “மூணே நாள் தானேடா ஆகுது!” என்று ஆதி சொல்ல,
“அடிக்கடி சொல்லுடா! பல வருஷமா கஷ்டப்படுற மாறி இருக்கு!” என்றான் கோகுல்.
ஆதி, “நான் போனது அவ்வளோ பீலிங்கா மச்சி உனக்கு?”
கோகுல், “ம்ம்ம்…? உன் முகரை! தேவையில்லாம என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத!” என்றான் கோகுல்.
“ஓகே, ஓகே! கூல்!!! இப்ப நான் எதுக்கு போன் பண்ணேனா?” என்று இழுத்த ஆதி, “ஹான், சொல்ல மறந்துட்டேனே! ‘இதான் என்னோட புது நம்பர், சேவ் பண்ணிக்கோ!” என்றிட,
“நான் உடனே போய் மேடம் கிட்ட உன் நம்பரை குடுக்குறேன்!” என்றான் கோகுல்.
“ஏய்…. நோ நோ நோ!” என்று அலறிய ஆதி, “இந்த நம்பர் உனக்கும், என் மாமனாருக்கும் மட்டும் தான் குடுத்துருக்கேன்!” என்று சொல்ல,
“ராஜகோபால் சாரையா சொல்ற?” என்று தெளிவுப்படுத்திக்கொண்டான் கோகுல்.
ஆதி ‘ஆம்’ என்றதும், “என்ன தான்டா ப்ளான்ல இருக்க நீ?” என்றான் கோகுல்.
“அதை சொல்லதான்டா பண்ணேன்! உனக்கு ‘பிரியா’ன்னு ஒருத்தி கால் பண்ணாளா?” என்று கேட்க,
“ஆமா, ஆமா உன் பிரண்ட்-ன்னு சொன்னா! அவ சென்னை வரப்போறாலாம், அந்த மேடம்க்காக நான் ரோட் ரோடா அலைஞ்சு திரிஞ்சு ‘சிங்கிள் பெட்ரூம்’ பிளாட் வாடகைக்கு பிடிக்க்கனுமாம்!” என குற்றமாய் சொன்னவன், “ஏன் அவங்க இந்த ஹாஸ்டல், ‘பிஜி’ல எல்லாம் தங்க மாட்டாங்களா?! பிளாட்’டே தான் வேணுமோ?” என்று கேட்க,
அதற்கு பதில் உரைக்காது, “பிளாட் பார்த்தியா இல்லையா நீ?” என்றான் ஆதி.
[the_ad id=”6605″]
“எனக்கென்ன வேலை வெட்டி இல்லன்னு நினைச்சுட்டு இருக்கியா? அதெல்லாம் பார்க்கல போடா” என்றான் கோகுல்.
“ஏன்டா, ஒரு பொண்ணே வந்து உதவி கேட்குது, இந்நேரத்துக்கு நாலு அஞ்சு பிளாட் பார்த்துருக்க வேண்டாமா? இப்படி இருந்தா எப்படிடா ‘கமிட்’ ஆவ?” என கிண்டலடித்தான் ஆதி.
கோகுல், “பிகர் வொர்த்தா இல்லையான்னு தெரியாம எல்லாம் இந்த கோகுல் களத்துல இறங்க மாட்டான்” என்றான் கெத்தாக.
ஆதி, “வொர்தா இல்லையான்னு நேர்ல பார்த்தே தெரிஞ்சுக்கோ! இன்னும் கொஞ்ச நேரத்துல அவ அங்க இருப்பா” என்றான்.
“இங்கயா? ஏன்? எதுக்கு? என்னாத்துக்கு?”
“அங்க தன்யாவுக்கு பி.ஏ’வா ஜாயின் பண்ணப்போறா! என் மாமனார் தான் அவளை அப்பாயின்ட் பண்ணப்போறாரு! எல்லாம் இந்த ‘ஐயா’வோட ஏற்ப்பாடு!” என்று ஆதி சொல்ல,
“எதுக்காம்?” என்றான் கோகுல்.
“நான் இல்லாத நேரம் முழுக்க தன்யா என்னையே நினைக்கணும்! என் மேல இருக்க காதல், அவ ஈகோ-வை தாண்டி வெளில வரணும்! அதுக்கு தான்!” என்றான் ஆதி.
“எனக்கு ஒன்னும் புரியல!!!” என்ற கோகுலிடம், “உனக்கு ‘பினாயில்’ ஊத்தி விளக்குற அளவுக்கு எனக்கு நேரமில்ல! பிரியா வந்தான்னா, கொஞ்சம் ‘கேர்’ பண்ணிக்கோ! ஷி இஸ் மை ‘யூஜி’ மேட்! அவளுக்கு என்னை தெரியுங்குற விஷயம் தன்யாவுக்கு தெரியக்கூடாது, நீ எதுவும் உளறி வச்சுடாத என்ன? அப்பறம், சீக்கிரமே அவளுக்கு ‘பிளாட்’ ஒன்னு ஏற்ப்பாடு பண்ணு! ரொம்ப நாள் அவளை ஹோட்டல்ல ஸ்டே பண்ண வைக்க முடியாது! புரியுதா? எனக்காக அவ ஹெல்ப் பண்ண ஒகே சொன்னதே பெருசு!” என்று பெரிதாய் பேச, வேண்டாவெறுப்பாய்,
“ம்ம்ம்.. ம்ம்ம்…” என முனகினான் கோகுல். அவன் ‘ம்ம்ம்’ சொன்னது தான் தாமதம் என ஆதி அழைப்பை நிறுத்திவிட, “டேய் டேய், இந்த ஆர்.கே க்ரூப்ஸ் பைல்லு….” என கோகுல் கத்துவது வீணாய் போனது.
காதில் இருந்து போனை எடுத்த கோகுல், திரையை பார்த்து, ‘த்தூ’ என துப்ப, அறையின் இன்டர்க்காம் சப்தமாய் ஒலித்தது.
“என்ன மிஸ்டர் கோகுல், ஃபைல்ல தேட சொன்னா, போன்ல யார்க்கிட்டையோ கொஞ்சிட்டு இருக்கீங்க?” என்றாள் தன்யா.
[the_ad id=”6605″]
ஷாக் அடித்ததை போல நிமிர்ந்தவன், சுற்றும் முற்றும் கண்களை அலைப்பாய விட, அங்கிருந்த சிசிடிவி கேமரா ‘ஏப்ரல் பூல், ஹிஹி’ என அவனைப்பார்த்து சிரித்தது.
“மேடம், மேடம் இன்னும் அஞ்சே நிமிஷம் ப்ளீஸ்!” என பலமுறை கெஞ்சி, அனுமதி வாங்கி, அறையையே தலைகீழாய் கவிழ்த்துப்போட்டு ஏசி’யிலும் கூட வியர்வை சிந்த, மாங்கு மாங்கென அவன் தேட, அவன் தேடலில் கிட்ட வேண்டிய பலனோ, ஆதியின் மேஜை மீதே, இன்டர்காம் அருகில், சௌகர்யமாய் அமர்ந்துக்கொண்டு, அவனைப்பார்த்து பாவமாய் உச்சுக்கொட்டிக்கொண்டிருந்தது.
தேடி சலித்தவன், ‘ஐயோ இதுக்குமேல முடியாதுடா சாமி’ என அலுத்துப்போய் நாற்காலியில் அமர்ந்து, தன் தலையை மேசை மீது கவிழ்த்துக்கொள்ள, ‘அலாரமாய்’ ஒலித்தது இன்டர்க்காம். பதறி நிமிர்ந்தவன், ‘ஐயோ’ என தயக்கத்தோடு அழைப்பை எடுக்க, ‘நான் இங்க இருக்கேன், பார்’ என கோகுலின் கண்களில் சிக்கியது அவன் தேடி திரிந்த கோப்பு!
உற்சாகம் மேலிட, “மேடம், கிடைச்சுருச்சு!” என்றவன், அறையை விட்டு வேகமாய் வெளியே ஓடினான்.
கையில் இருந்த ஃபைலை பார்த்தவன், ‘இப்பவாது கிடைச்சியே என் தெய்வமே’ என நன்றியுடன் எண்ணிக்கொண்டு புயலென தன்யாவின் அறை நோக்கி பாய, அவள் அறைக்கு செல்ல வேண்டிய திருப்பத்தில் கோகுல் வளையும்போது, எதிலோ வலுவாய் மோத, கையில் இருந்த ஃபைல் அந்தரத்தில் பறந்து தன் உள்ளே பொதித்து வைத்திருந்த காகிதங்களை மழையென பொழிய விட்டது.
இடித்ததில் இடப்பக்க தோள்பட்டை வலித்ததை விட, ஃபைலை தவறவிட்டதே பெரிதாய் பட, எதிரில் இடித்தது யாரென்றும் பாராது, “கண்ணு என்ன முதுகுல இருக்கா? இடியட்” என்று கடிந்துக்கொண்ட கோகுல், கீழே அமர்ந்து சிதறிய காகிதங்களை ஒன்று சேர்க்க, அவன் முகத்தருகே காகிதம் தாங்கி நீண்டு வந்தது ஓர் வளைக்கரம்.
முதலில் எரிச்சலாய் பார்த்தவன், அது ஒரு பெண்ணின் கரம் என்றதும் முகச்சுருக்கம் நீங்க, மெல்ல நிமிர, முகத்தின் முன்னே தவழ்ந்து விழுந்த முடிக்கற்றையை அள்ளி காதோரம் அடைத்தபடி இவனை சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்…!
பார்த்தவன், பார்த்த மாத்திரத்தில் இமைக்க மறந்து பேச்சின்றி போனான்.
பெண்களை ‘அரேபிய குதிரை’ என வர்ணிப்பதை கேட்டிருக்கான், பார்த்திருக்கிறான்! ஆனால், உண்மையில் ஓர் அரேபிய குதிரை, ‘பியூட்டி பார்லரில்’ இருந்து கிளம்பி வந்ததை போன்றதொரு பெண்ணை, நவீன மங்கையை அவன் இதுவரை கண்டு, மயங்கியதில்லை.
கண்ணை கூசாத ‘மேக்கப்’பில் பளிச்சென அவள் நின்றிருக்க, அவனுக்கு நாக்கு மேல் அன்னத்தோடு ஒட்டிக்கொண்டது. எச்சில் தொண்டைக்குழியை தாண்டி இறங்க மற(று)க்க, காணாததை கண்டவன் போல பார்த்துக்கொண்டே நின்றவன் கரம் பற்றி அவளிடம் இருந்த ஒற்றை காகிதத்தை கொடுத்தவள், “சாரி…” என்றாள்.
அந்த ஒரு வார்த்தையே அவனுக்கு ஸ்லொவ்மோஷனில், “ஸ்…ஆ…..ர்….ரி….!!!” என கேட்க, அடுத்த நிமிடத்தில், “ஹலோ மிஸ்.பிரியா! வெல்கம்!” என்ற ராஜகோபாலின் குரலில் வந்திருப்பவள், ‘பிரியா’ என அறிந்துக்கொண்ட கோகுல், ‘பிகர் வொர்த்து தான்… வொர்த்து தான்!!’ என உல்லாசமாய் எண்ணிக்கொண்டான்.
“ரொம்ப நேரம் ஆச்சா வந்து? ஷால் வீ மூவ்?” என்ற ராஜகோபாலின் அழைப்பில் சிலையென நின்ற கோகுலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவருடன் நகர்ந்தாள் பிரியா.
அவள் நகர்ந்து சென்ற பின்பு கூட அப்படியே நின்றவனுக்கு கையில் இருந்த ஃபைலை தன்யாவிடம் சேர்க்க வேண்டும் என்பது கூட மறந்துப்போனது.
‘எவளோ, எவளோ என்று நெடுநாள் இருந்தேன்,
இரவும் பகலும் சிந்தித்தேன்…
இவளே, இவளே என்று இதயம் தெளிந்தேன்!
இளமை, இளமை பாதித்தேன்!’ எஸ்.பி.பி கணீரென குரல் கொடுக்க, தன் பாக்கெட்டில் ஒலித்த அலைபேசியை எடுத்தான் கோகுல்.
ஆதி, “பிரியா வந்துட்டாளாடா?”
“வந்துட்டா டாஆஆ… வந்துட்….டா!!!!!” என்ற கோகுல் தன் நெஞ்சை இதமாய் நீவிக்கொண்டான்.
தன்யாவிடம் ப்ரியாவை அழைத்துச்சென்ற ராஜகோபால், “உனக்கு கொஞ்ச நாள் உதவியா இருப்பாங்க! கூடவே வச்சுக்கோ” என பிரியாவை சொல்ல, ‘தேவையே இல்லை’ என ஒற்றைக்காலில் நின்றாள் தன்யா.
‘தன் நண்பரின் மகளான பிரியாக்கு தொழில் கற்றுக்கொடுப்பதாக வாக்கு கொடுத்திருப்பதாக’ ஏதேதோ சொல்லி, தன்யாவிடம் ப்ரியாவை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து நழுவிக்கொண்டார் ராஜகோபால்.
அறைக்குள் ப்ரியாவும் தன்யாவும் மட்டுமே இருக்க, “இன்னும் ஏன் நிக்குறீங்க? போக வேண்டியது தானே?” என சிடுசிடுத்தாள் தன்யா.
“இல்ல, அங்கிள் உங்க ரூம்ம ஷேர் பண்ணிக்க சொன்னாங்க!” என பிரியா சொல்ல, ‘இதுவேறையா?’ என முன்நெற்றியில் அடித்துக்கொண்டாள் தன்யா.
பிரியா, “நான் இங்க இருக்கிறது உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்ன்னா சொல்லுங்க, நான் வேணுன்னா….” என இழுக்க,
“எதுக்கு? மறுபடி எங்கப்பா வந்து ‘லெக்சர்’ எடுக்கவா?” என கடுப்பாய் கேட்டவள், “உங்களுக்கு என்ன வேணுமோ, அதை எங்க ‘ஸ்டாப்’ கிட்ட சொல்லி அரேஞ் பண்ணிக்கோங்க! முடிஞ்சவரை என்கிட்ட பேசாதீங்க” என்றாள்.
[the_ad id=”6605″]
“மேம், ஐ திங்க், யூ ஆர் டிஸ்டர்ப்ட்!” என்று பிரியா தயங்கி சொல்ல, “அப்கோர்ஸ் ஐ ஆம்! இப்போ நீங்க வெளில போய்ட்டா, நான் கொஞ்சம் ப்ரீ’யா இருப்பேன்” என்றாள் தன்யா.
அதற்குமேல் பிரியா அங்கே நிற்கவில்லை. இதெல்லாம் எதிர்ப்பார்த்து தானே வந்திருந்தாள். சொல்லப்போனால் இதைவிடவும் சற்று அதிகமான காட்டத்தை தான் தன்யாவிடம் எதிர்ப்பார்த்திருந்தாள்.
தான் உடுத்தியிருந்த டிசைனர் சேலை நலுங்காதபடி, ஒயிலாய் நடந்து வந்தவள், இடக்கை முட்டியில் தொங்க விட்டிருந்த கைப்பையில் இருந்து அவளது அலைபேசியை வெளியே எடுக்க முனைய,
“ஹாய்” என அவள் முன்னே நின்றிருந்தான் கோகுல்.
அவனை கண்டதும் கண்கள் சிரிக்க, பதில் பார்வை பார்த்தாள் பிரியா.
அவள் வரும்வரை அவளிடம் எப்படியெல்லாம் பேச வேண்டும் என பல ஒத்திகைகளை நடத்தி பார்த்திருந்தவனுக்கு, இப்போது நேருக்கு நேரே கண்டதும், வார்த்தைகள் வர மறுத்து ‘தர்ணா’ செய்தது.
பிரியா, “வாட்…?”
கோகுல், “ஐ… (‘க்கும்…’) ஐ’ம் (‘க்கும்’…)!!!” ஒவ்வொரு வார்த்தைக்கும் தொண்டையை கனைத்துக்கொண்டிருந்தான்.
அவன் தடுமாற்றத்தை கண்டு நமட்டு சிரிப்பு சிரித்த பிரியா, “தொண்டைல கிச் கிச்’சா?” என்றாள் எள்ளல் வழிய.
“ஆங்?” என வாயை பிளந்தவனுக்கு அவள் தன்னை கிண்டல் செய்வது புரியவே சில நொடிகள் எடுத்தது. புரிந்த பின்னும் கூட அவனுக்கு கோபம் துளியும் வராது, அவளிடம் அசடு வழிய சிரித்தவன், “ஐயம், கோகுல்” என்றான் அறிமுகமாய்.
அவளோ இன்னும் அதிகமாய் முகத்தில் நக்கலை வழிய விட்டு, “தெரியுமே!” என்றாள் கைகளை கட்டிக்கொண்டு நின்றபடி.
கோகுல் ஆச்சர்யமாய், “எப்டி? எப்டி?” என்று கேட்க, “ஆதி சொன்னான்” என்றாள் சூசகமாய்.
ஆதி சொன்னான்’ என்றதுமே கோகுலின் ஆர்வம் ‘புஸ்’சென்று அமிழ்ந்து போனது.
‘எப்படியும் அவன் நம்மளை பத்தி எதுவும் உருப்படியா சொல்லிருக்க மாட்டான்’ என்ற முடிவோடு, “அவன் என்ன சொல்லிருந்தாலும் நீங்க அதை நம்பிடாதீங்க ப்ளீஸ்” என்றான் எச்சரிக்கையாய்.
அவள் முகத்தில் இருந்த ‘எள்ளல்’ மேலும் அதிகரிக்க, “ஆஹான்…” என்றாள் எழும் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
‘எதுக்கு இப்படி சிரிக்குறா?’ என கோகுல் மனம் துணுக்குற்றாலும், அப்பேச்சை மேற்கொண்டு வளர்க்காமல், காதல் ரூட்டில் பயணிக்க முடிவு செய்தான்.
“ஆக்சுவலி… வெல்…! நான் இதை உங்ககிட்ட சொல்லியே ஆகணும்! என்னன்னா, நீங்க அவ்வளோ அழகு! இதுவரைக்கும் இங்க யாரும் இப்படி ஒரு… இப்படியொரு அழகை பார்த்துருக்க மாட்டாங்க! அண்ட்….” என கோகுல் அவள் கண்களை சந்திக்காமல் பேசிக்கொண்டிருக்க,
“என்ன? வாரணம் ஆயிரம் ஆ?” என்றாள் பிரியா.
‘ஐயோ தெரிஞ்சுடுச்சோ?’ என்றெண்ணியவன், “இல்ல, சும்மா டைலாக் சொல்லிப்பாத்தேன்” என்றான் சிரித்து மழுப்பி.
“ஓகே மிஸ்டர் கோகுல்! உங்க காதல் வசனங்களை எல்லாம் கேட்க இப்போ எனக்கு நேரம் இல்லை! ப்ரீ’யா இருக்கப்போ சொல்றேன், என் ‘பிளாட்’க்கு வாங்க! பேசுவோம்” என்று சொல்ல,
‘பிளாட்’க்கு வாங்களா?’ என உள்ளுக்குள் அதிர்ந்தவன், “பிளாட் பார்த்துட்டீங்களா?” என்றான் வியப்பாய்.
“அதை நீங்க தானே பார்க்கணும்?” என அவள் அசராமல் சொல்ல, “ஹோ! பார்த்துடலாமே! இன்னைக்கு நைட்டு நீங்க நான் பார்க்குற ‘பிளாட்’ல தான் தங்குவீங்க!” என்று உறுதிமொழி சொன்னவன், தன்யா கேட்ட ஃபைலை கூட கொடுக்காது, மேனேஜரிடம் சென்று அரை நாள் விடுப்பு வாங்கிக்கொண்டு சிட்டென பறந்து சென்றான் ப்ரியாவுக்காக வீடு தேடி!