Skip to content
Post Views: 899
அத்தியாயம் – 11
கனவுகள்
Advertisement
“The dream is the (disguised) fulfillment of a (suppressed, repressed) wish.”
― Sigmund Freud
கனவுகள்… கடவுளின் படைப்பில் மற்றொரு பிரம்மாண்டம். இந்த ஒற்றை வார்த்தைக்குள் எத்தனை பெரிய சக்தி அடங்கி உள்ளது. இதில் இரண்டு வகைகள். ஒன்று நாம் தூங்கும்போது வருவது. மற்றொன்று நாம் நமது சுய நினைவில் இருக்கும்போதே வருவது.
Advertisement
ஆனால், பிந்தயதை நாம் எண்ணங்கள் என்ற பெயரில் ஒதுக்கி விடுவோம். கனவுகளை அறிவியல் மூலம் ஆராய்ந்தால் பல அதிர்ச்சியான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
Advertisement
கனவுகளின் காரணிகள் நமது ஞாபகங்களாகவோ அல்லது நமது எதிர்பார்ப்புகளாகவோ தான் இருக்கின்றன. இதைப் பற்றி Sigmund Freud என்பவர் பல ஆராய்ச்சிகள் செய்தார். அதே போல் நமது மூளையும் இரண்டு பெரும் மதில்களுக்கு இடையில் தான் செயல்பட்டு வருகிறது. அவை Conscious mind மற்றும் Subconscious mind.
நாம் சுய நினைவுடன் இருக்கும் போது, நமது மூளையின் பத்து சதவீதத்தைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், நமது கனவிலோ நமது subconscious mind பல பரிமாணங்களில் செயல்பட்டு, எண்ணிலடங்கா காரியங்களைச் செய்கின்றது. அதை எப்படி நாம் நமக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஒருவேளை அந்த சூத்திரத்தை மனிதர்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கலாம் ! இந்தக் கருத்தைக் கொண்டு தான் ‘INCEPTION’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘Theory of Relativity’ – ஐ தனது கனவில் தோன்றியதை வைத்துத் தான் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.
Advertisement
******
அண்ட சராசரத்தில் பறப்பது போல் ஓர் உணர்வு… சுற்றிலும் கருப்பு மை பரவிக் கிடந்தது… மனதில் வெறுமை விரவிக் கிடந்தது….. தான் இந்த இடத்தில் தனித்து இருப்பது போன்ற பயம் மெல்ல மனதில் படர்ந்தது…. ஒரே ஒரு சின்ன புள்ளி தான் தெரிந்தது. சிறிது சிறிதாக அது பரவத் தொடங்கி அது வெடித்தது. அது சாதாரண வெடிப்பு போல் தோன்றவில்லை. ஒருவேளை, இதுதான் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிய பெருவெடிப்போ (Big Bang) ?
களம் மாறியது. என்ன ஓர் ஆச்சரியம். தான் எப்படி அந்த வெடிப்பில் இருந்து தப்பித்தோம் என்று கேள்வி கேட்ட அறிவை அந்த ரம்மியமான சூழல் அடக்கியது. இத்துனை அழகு ஒரே இடத்தில் குவியக் கூடுமா ? அருகிலே ஒரு பெரிய நீர்நிலை இருந்தது. அதில் இரு மீன்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு வட்ட பாதையில் நீந்திக் கொண்டு இருந்தன.
அதன் அழகால் ஈர்க்கப்பட்டுத் தொடச் சென்றபோது…

வேறு ஒரு காட்சி உருவாகியது. தேவதை போன்ற ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.
அவளுடைய வதனத்தை எந்த கவிஞனாலும் வர்ணிக்க முடியாது. அண்ட சராசரத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பையும் தாள்கள் ஆக்கி, அனைத்து நீர்நிலைகளையும் மையாக மாற்றி வைத்துக் கொண்டாலும் விளக்க இயலாது.
அவரைச் சுற்றி எட்டு வீரர்கள் கவச உடைகள் மற்றும் போர் ஆயுதங்களுடன் வெற்றி பெற்ற களிப்பில் இருந்தனர்.

ஒவ்வொருவரும் அந்தத் தேவதையின் முன் வந்து வணங்கி ஏதோ கேட்க அவரும் அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.
அதற்கு அடுத்துத் தோன்றிய காட்சி இதற்கு முன்னரே பார்த்தது தான் என்று தோன்றியது. வழக்கம் போல அவளைச் சந்திக்கும் பூக்களும் அவளைக் களிப்புடன் வரவேற்றன.
தூரத்தில் ஓர் ஆணும் பெண்ணும் நடந்து தன்னை நோக்கி வருவது போல் இருந்தது. அவளைக் கண்டு சிரித்தது போலவும் தோன்றியது. சற்று அருகில் வரவும்தான், அந்தப் பெண் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. இருவரையும் பார்க்கப் பார்க்க அவளுக்குத் தெவிட்டவில்லை.
அவள் அருகில் வந்து நின்ற இருவரும் அவளை அரவணைத்துக் கொண்டனர். முதல் முறையாக இது கனவு இல்லை என்பது போலத் தோன்றியது. பின்னர் அவளது காதில் ஏதோ சொல்ல, யாரோ தன்னை இழுப்பது போல தோன்ற… சிறிது நேரத்தில் அங்கு இருந்த காட்சி மாறியது.
அப்போது கண்ட காட்சியில் மொத்த உடலும் நடுங்கியது. தானே அங்கு எதிரில் ஒரு கட்டிலில் படுத்திருக்க, அவளது குடும்பத்தினர் அனைவரும் அவளைச் சுற்றி அமர்ந்து இருந்தனர்.
ஒருவேளை அப்படியும் இருக்குமோ …? தான் இறந்து விட்டோமோ ? என்று எண்ணத் தொடங்க… சட்டென்று மயங்கினாள். மறுபடியும் எழுந்திருந்த பொழுது…
******
கிரகம்: பூமி
இடம்: பெயர் தெரியாத பாலைவனம்
தனது புதிய வாகனத்தின் மூலம் அந்த வெடிப்பில் இருந்து தப்பித்த பொசய்டன், நேரம் இல்லாததால் ஏதோ ஓர் இடத்திற்குச் செல்லுமாறு வாகனத்தில் உத்தரவிட்டு விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.
மறுபடியும் அவருக்கு விழிப்பு வந்த போது ஏதோ ஒரு பாலைவனத்தில் இருந்தார். தான் வந்த வாகனம் படுமோசமாக சேதமாகி இருக்க, அதை இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்தார் பொசய்டன்.
அதைச் சரி செய்ய பயன்படுத்தும் சக்தியில், சீரஸின் வாரிசைக் கண்டுபிடிக்கலாம் என்று எண்ணியவர் தனது மனதை ஒரு நிலைப்படுத்தி, எந்த இடத்திலிருந்து அந்த அலைவரிசை வந்தது என்பதை அறிந்துகொண்டார்.
பின் தனக்கு நேரம் இல்லாததை உணர்ந்தவர், தன்னை மனிதர்கள் கண்ணில் படாதவாறு மாயமாக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் பறக்கத் தொடங்கினார். தனது இலக்கை நோக்கி பொசய்டன் காட்டுத் தீ போல வேகமாகச் செல்ல ஆரம்பித்தார்.
******
இடம் : பெங்களூர்
கதிரவன் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அதில் பயணித்து கொண்டிருந்தான்.
நந்தினி மெல்ல மெல்ல கண் திறக்க, சூரிய ஒளி சாளரங்கள் வழியே வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
துர்கா உடனே ஓடி வந்து, அவள் அருகில் அமர்ந்தார். பின்னர் அவள் மெதுவாக எழுந்து அமர உதவினார். அறையைச் சுற்றி தன் பார்வையைச் சுழற்ற, அங்கு துர்கா மட்டும் இருப்பது தெரிந்தது. சுற்றியிருந்த உடைந்த பொருட்களைக் கண்டதும் தான், முந்தைய நாள் நடந்தது அனைத்தும் சிறிது சிறிதாக ஞாபகம் வரத் தொடங்க, கண்ணை மூடினாள்.
அதைத் தொடர்ந்து அவள் கனவில் (கனவு என்று அவள் நினைத்தாள்) வந்த நினைவு சிதறல்கள் ஞாபகம் வர, தன்னை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்த தாயிடம்,

“அம்மா உண்மையிலே நான் யாருமா ? நேத்து ஆதி சொன்னது எல்லாம் உண்மையா ?” என்று தாய் தனது கூற்றை மறுத்து விட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள்.
துர்காவுக்கோ, தனது பகைவருக்குக் கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்ற வேதனையில் உழன்றவர், பதில் பேசாமல் இருக்கவும், நந்தினிக்கு ‘எல்லாம் உண்மைதான்’ என்று புரிந்தது.
“அப்படினா நான் ஒரு வேற்று கிரக வாசியா அம்மா ? நான் உங்க பொண்ணு …” என்று அவள் முடிப்பதற்குள்,
“நீ என் பொண்ணு தான் நந்துமா. நான் தான் உனக்கு அம்மா. யார் ஒத்துக்குளேனாலும் இது என்னைக்குமே மாறப்போறதில்ல” என்று கூறி அவளைக் கட்டி அணைத்துக் கொண்டார் துர்கா.
அவர்களது பேச்சு குரல் கேட்டு கண்ணன் அந்த அறைக்குள் நுழைந்தார். கண்ணன் மெதுவாக அவளது கைப்பற்றி, “நாங்க எல்லாரும் உன் கூட எப்பவும் இருப்போம் நந்துமா. நீ மனச போட்டு குழப்பிக்காத. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா” என்று தன்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.
அப்பொழுது அங்கே உள்ளே நுழைந்த ஆரியன், “என்ன ஒரே சென்டிமென்ட் சீனா ஓடுது ? ஓஹோ இந்த நண்டு எந்திரிச்சுட்டாளா ? அதான பார்த்தேன் ! அதிசயமா வெள்ள அபாய எச்சரிக்கை எல்லாம் கொடுத்து இருக்காங்களேன்னு !” என்று கூறி முடிக்க, அவன் நண்டு என்று கூறிய பொழுதே கட்டிலை விட்டு இறங்கிய நந்தினி, அவனைக் குத்த ஆரம்பித்தாள்.
“டேய் மண்டு, என்னைய நண்டுனு கூப்பிடாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன். இங்க பாருங்கம்மா இவன” என்று ஆரியனைக் குறை கூற, இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் இப்போது சண்டைக் கோழியாகச் சீறவும், அனைவரும் பட்டெனச் சிரித்துவிட்டனர்.
அப்பொழுது தான் ஆரியனின் செய்கையின் காரணம் நந்தினிக்குப் புரிய அவனை முறைத்து வைத்தாள்.
பிறகு, தந்தையிடம் சென்று சலுகையாக அவர் மடியில் தலை வைத்துப் படுக்க, கண்ணனும் அவள் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டு, நடந்த அனைத்தையும் ஆதியிலிருந்து அந்தம் வரை கூறினார்.
பின், “நந்துமா, இனிமே இதைப் பத்தி நீ யோசிக்க கூடாது. நேத்து நடந்த எல்லா விஷயத்தையும் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடுமா. இப்போ மணி எட்டு ஆகிடுச்சு. நீ போய் குளிச்சுட்டு வாம்மா. கீழே தாத்தா பாட்டி எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிரம் ரெடி ஆகுமா” என்று கூறியவர், துர்காவுடன் அங்கிருந்து சென்றார்.
ஆரியனும் கீழே செல்ல இறங்கப் போக, “ஆரி, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். முடிஞ்சா ஆதி” என்று கூறியவள், சட்டென்று நிறுத்தி பின்னர், “அவங்களையும் கூட்டிட்டு வா. சாப்பிட்டதுக்கு அப்புறம் பேசலாம்” என்றாள்.
“சரி நந்து, ஆனா நேத்து நைட்டே ஆதிக்கு ஒரு முக்கியமான வேலை வரவும், அவன் அப்பயே கிளம்பிட்டான். எப்ப வருவான்னு தெரியல. பார்க்கலாம்” என்றான் ஆரியன்.
நந்தினி யோசனையோடு தலையாட்ட, ஆரியன் கீழே சென்றான்.
அதன் பின் அவள் அனைவருடனும் சேர்ந்து கொள்ள, அனைவரும் எதுவும் நடக்காதது போலச் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தனர். அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதித்யன் அந்த அறைக்குள் சோர்ந்த முகத்துடன் நுழைந்தான்.
அவனைப் பின் தொடர்ந்து நான்கு, ஐந்து நபர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். பார்ப்பதற்குச் சாதாரணமானவர்கள் போன்று தோன்றினாலும், அவர்கள் கைகளில் இருந்த பிஸ்டல் அவர்களது பணியை எடுத்துரைத்தது. ஆரியனும் நந்தினியும் ஆதியைப் பார்க்க, அவன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைத்தான்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கண்ணனும், ஸ்ரீதரும் ஆதியிடம் சென்றனர்.
“ஆதி, என்னடா இது ? யார் இவங்க ? இவங்கள ஏன் இங்கு கூட்டிட்டு வந்திருக்க ?” என்று ஸ்ரீதர் கேட்டார்.
ஆதித்யன், சிறிது சங்கடப்பட்டு, “அவங்க நந்தினிய கூட்டிட்டு போக வந்து இருக்காங்கப்பா” என்று கூற,
“இல்லை என் பொண்ண நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்” என்று கத்தியவாறு துர்கா முன்னே வந்தார்.
“அத்தை, நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க. ஒண்ணும் இல்லை. சும்மா ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு, நந்தினிய என்னோட அனுப்பி வையுங்க. ஆரியனும் கூட வரட்டும். அவ எங்களோடு தான் இருப்பா, அத்தை. நாம இப்ப மறுக்க முடியாத நிலையில் இருக்குறோம். நிலைமைய கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கத்த. ஆனால், நந்தினி மேல் ஒரு சின்ன கீறல் கூட விழாம நான் பார்த்துக்குறேன், அத்தை” என்றான்.
அவனது வேலையைப் பற்றி நேற்று அவன் அவர்களிடம் கூறி இருக்க அனைவரும் சில நொடிகள் யோசித்தனர். கண்ணன் துர்காவை அமைதிப்படுத்தி விட்டு, “ஆதி, நான் உன்ன நம்பி என் பொண்ண அனுப்புறேன்பா. பத்திரம்” என்றார்.
அவனும் சம்மதமாக தலையாட்ட, ஆதித்யனும் ஆரியனும் நந்தினியும் கருப்பு உடைகளுடன் அங்கிருந்து செல்ல, ஒன்றும் செய்ய முடியாமல் மீதம் இருந்தவர்கள் தவித்துப் போயினர்.
******
இடம் : International Organisation for Alien Research, பெங்களூர்
நேரம் : முந்தைய நாள் இரவு
ஆதித்யன் தனக்கு வந்த அழைப்பை ஏற்றவுடன், உடனே தலைமையகத்துக்கு வருமாறு கூறப்பட, தனது குடும்பத்தினரிடம் அவசர வேலை இருப்பதாகக் கூறி விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
இரவு பதினொரு மணிக்கு அந்தக் காட்டுக்குள் இருந்த தலைமையகத்துக்குள் அவன் நுழைய, அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அங்கு ஓடிய தொலைக்காட்சியைப் பார்த்த பிறகு தான், அபாய நிலை அவனுக்குப் புரிய, உடனே ஆல்ஃபாவின் அறைக்குச் சென்றான்.
இவனைக் கண்டதும், “வாங்க மிஸ்டர். ஆதித்யன் ! உங்களுக்காகத்தான் ரொம்ப நேரமா காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஆல்ஃபா.
“என்ன சார் நடந்தது ? அந்த விண்வெளி விமானம் பூமிக்கு வர்றதுக்கு 36 மணி நேரங்கள் தேவாப்படும்னு சொன்னீங்க. ஆனா, இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்கு ?” என்று கேட்டான் ஆதித்யன்.
“நம்ம எதிர்பார்த்ததை விட அவர்கள் தொழில்நுட்பத்தில் நம்மை விட ரொம்ப அதிகமாக வளர்ந்து இருக்காங்க. வாய்ப்பு இருந்தால், அவர்களால் ஒளியை விட வேகமாகப் பயணிக்க முடியும் போல இருக்கு” என்றவுடன் அவனுக்கு நந்தினியின் முகம் மனதில் மின்னி மறைந்தது.
“அதுமட்டுமில்லாமல் இப்பொழுது நமக்கு இன்னும் முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக அந்த வெடிப்பு ஏற்பட்டதில் இருந்து ஒரு விமானம் தப்பித்து உள்ளது. அது பூமியில் எங்கே தரை இறங்கி உள்ளது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் எல்லா ஆல்ஃபாக்களும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். Emergency protocol – ஐ அமல்படுத்த உள்ளோம்” என்றார் ஆல்ஃபா.

அதிர்ச்சி அடைந்த ஆதித்யன், “சார், இப்பொழுது அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது ? நமது ஆராய்ச்சியின் விதிகள் படி நாம் இதைச் செய்யக் கூடாது. அந்த ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதால் நான் கடினப்பட்டு கண்டுபிடித்த ப்ரோட்டோடைப்பை ( Prototype ) நானே அழித்துவிட்டேன். நம் ஒப்பந்தத்தை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால், எவ்வளவு ஆபத்துகள் வேண்டுமானாலும் வரலாம். அமைதியாக இருப்பவர்களை நாமே சீண்டி விடுவது போல் இருக்காதா ?” என்று கேட்டான் ஆதித்யன்.
“டோன்ட் பீ ஸில்லி, மிஸ்டர். ஆதித்யன் ! அவர்கள் இங்கு வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? அது மட்டும் இல்லாமல் நாங்கள் உங்களிடம் அனுமதி கேட்கவில்லை, உத்தரவு கொடுக்கின்றோம்” என்றார் ஆல்ஃபா.
“நீங்கள் என்ன கூறினாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. சாரி மிஸ்டர். ஆல்ஃபா. இதை நான் ஒருமுறை உருவாக்கி விட்டால் போதும், பிறகு நமது அமைப்பை வளர்த்த நாடுகள் துஷ்பிரயோகம் செய்யக்கூடும். நீங்கள் கேட்கும் ஆயுதத்தின் சக்திகளைப் பற்றி உங்களிடம் முன்னரே கூறி இருக்கிறேன். இது அணு ஆயுதத்தை விடப் பலநூறு மடங்கு பயங்கரமானது” என்றான் ஆதித்யன்.
“மிஸ்டர். ஆதித்யன், பிரச்சனையோட தீவிரத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆயுதத்தை பயன்படுத்தினால் கூட அவர்களைச் சமாளிக்க முடியுமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதனால் உங்க வேலையே போகலாம். வாழ்நாள் முழுவதும் நீங்கள் சிறையில் கழிக்க வேண்டி இருக்கலாம். இப்படி யோசித்துப் பாருங்கள். இப்பொழுது இந்த உலகமே உங்களைத் தான் நம்பி இருக்கிறது. உங்களால் இந்த பிரச்சனை தீருமானால் நமது நாட்டுக்கே அது பெருமை தராதா?” என்று கேட்டார் ஆல்ஃபா.
“பெருமைக்காக என்றாலும், ஒரு பேரழிவை ஏற்படுத்த நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இப்பொழுது ஒரு கண்டுபிடிப்பாகப் பார்க்கப்பட்டாலும், பின்னர் இது ஒரு நாட்டையே அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படலாம். அன்று, இதே போல் ஜூலியஸ் ஓபன்ஹெய்மர் நினைத்து இருந்தால் ஹிரோஷிமாவும் நாகசாகியும் பாதிக்கப்பட்டு இருக்காது. இதற்காக நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் பரவாயில்லை, நான் அதற்குக் கட்டுப்படுகிறேன்” என்றான் ஆதித்யன்.
என்ன செய்வது என்று சிறிது நேரம் ஆல்ஃபா யோசித்தார். ஆதித்யனைப் போன்ற விஞ்ஞானிகள் நாட்டிற்கு மிகவும் தேவை. அவனைத் தண்டிக்க முடியாது. ஆனால், இப்பொழுது அவன் ஒத்துழைக்காவிட்டால், வேறு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நபர் உள்ளே வர அனுமதி கேட்க, வரச் சொன்னார் ஆல்ஃபா.
உள்ளே வந்த நபர், “சார் கண்டுபிடிச்சாச்சு ! இந்த இடத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் தான் எங்கேயாவது நடந்து இருக்கவேண்டும்” என்றார்.
ஆல்ஃபா மிகவும் சந்தோஷம் அடைந்தது அவர் முகத்திலே தெரிந்தது. “நீங்க கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க மிஸ்டர். பீட்டா” என்றார் ஆல்ஃபா.
“இப்பவாவது கொஞ்சம் யோசிங்க” என்று அவர் கூறும்போது, ஆதித்யன் ஏதோ கூற வர, “Let me finish, மிஸ்டர். ஆதித்யன். எதிர்காலத்தைக் காப்பாற்றுகிறேன் என்று எதிர்காலமே இல்லாமல் செய்து விடாதீர்கள்.
இன்று இந்த வெடிப்பு விஷயம் மட்டும் ஏற்படவில்லை. அது நடப்பதற்கான பெரிய காரணம் எங்களுக்குக் கிடைத்து இருக்கு. அந்த வெடிப்பு ஏற்படுவதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இங்கே பெங்களூரில், ஒரு இடத்தில் திடீரென்று கதிர்வீச்சு அதிகமாகி உள்ளது.
அப்போது நடந்த களேபரத்தில் நாங்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், இப்பொழுது அதை ஆராய்ந்து பார்த்த போது இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிட்டியது. அந்த கதிர்வீச்சும், நாம் ஆராய்ச்சி செய்த வேற்று கிரக வாசிகளின் கதிர்வீச்சும் ஒன்று தான். என்னுடைய யூகம் என்னவென்றால், பூமியில் இருந்து யாரோ ஒரு வேற்று கிரக வாசி தான் தகவல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியென்றால், இங்கும் அது போல் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம்.
அதனால், முதலில் அந்த வேற்று கிரக வாசியைக் கைது செய்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். நீங்கள் கொஞ்சம் ஒத்துழைத்தால், இதைச் சுலபமாக முடிக்கலாம்” என்றார் ஆல்ஃபா.
அவர் கூறியதைக் கேட்ட ஆதித்யன், ஒரு நிமிடம் தன் உணர்வுகள் மொத்தத்தையும் இழந்த நிலைக்குச் சென்றான். அவ்வளவு பெரிய விஞ்ஞானிக்கு இரண்டையும் நான்கையும் கூட்டினால் என்ன வரும் என்று தெரியாமலா இருக்கும். ஆனால், அந்தப் பதில் தான் ஏற்க முடியாததாக இருந்தது.
நந்தினி இப்பொழுது எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளாள் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அப்பொழுது தான், அவனது காதல் மனம் விழித்து, “டேய்… ஆதி ! ஒழுங்கா நந்தினிய காப்பாத்துற வழியப் பாரு” என்று திட்டியது.
அவன், “ஏதாவது வழி இருக்குமா ?” என்று யோசிக்க, அவனுக்கு ஒரே ஒரு மார்க்கம் தான் தென்பட்டது. காதலா? கொள்கையா? என்று நாணயத்தின் இரு பக்கங்களும் அவனைக் கேலி செய்தன.
இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது தான் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து உள்ளது. இப்போது அது பிரிய, தானே அடித்தளம் ஆகிவிட்டோமே என்று வருந்தினான். ஏற்கனவே, ஒரு பிரச்சனையை உருவாக்கியாச்சு. புதுசா ஒண்ண வேற ஆரம்பிக்கணுமா என்று தோன்றியது ஆதித்யனுக்கு.
இனி தனக்கு இருப்பது ஒரே வழி தான் என்று முடிவு எடுத்தவன், தன் பதிலுக்காகக் காத்திருந்தவரிடம், “ஒகே, மிஸ்டர். ஆல்ஃபா, நீங்கள் கூறிய Emergency protocol- க்கு நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டான்.
அவன் ஒத்துக் கொண்டதிலே மகிழ்ச்சி அடைந்த ஆல்ஃபா, “சொல்லுங்கள் மிஸ்டர். ஆதித்யன், நீங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்வதற்கு நமது அமைப்பு காத்திருக்கின்றது” என்றார்.
“நீங்கள் இப்போது ஒரு வேற்று கிரக வாசி பூமியில் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா ? அவரை நீங்கள் எதுவும் செய்யக்கூடாது. அவரை என்னிடம் நீங்கள் முழுவதுமாக விட்டு விட வேண்டும். உங்கள் தலையீடு துளியும் இருக்கக் கூடாது. வேண்டுமானால் சில அடிப்படை பரிசோதனைகளைச் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறேன்” என்றான் ஆதித்யன்.
அதைக் கேட்ட ஆல்ஃபா தான், சிறிது ஸ்தம்பித்து விட்டார்.
“மிஸ்டர். ஆதித்யன், நீங்கள் கேட்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா ? இது நான் மட்டும் எடுக்கக் கூடிய முடிவு அல்ல. நீங்கள் இதை முடிவு செய்ய ஏதாவது காரணங்கள் இருக்கிறதா ?” என்று கேட்டார் ஆல்ஃபா.
“என்னால் அதைப் பற்றி எதுவும் கூற முடியாத நிலையில் இருக்கின்றேன், மிஸ்டர். ஆல்ஃபா. ஆனால், அந்த வேற்று கிரக வாசியால் எந்தப் பிரச்சினையும் வராது என்று நான் உறுதி அளிக்கின்றேன். அது மட்டும் இல்லாமல், நம்முடைய ஒப்பந்தத்தின்படி அந்தக் கதிர்வீச்சில் இருந்து மின்சாரம் எடுப்பது தான் என்னுடைய ஆராய்ச்சி. அதில் இருந்து ஆயுதங்கள் செய்வது வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான், இப்பொழுது முடிவு செய்ய வேண்டும்” என்றான் ஆதித்யன்.
அவனுக்கும் அந்த வேற்று கிரக வாசிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்த ஆல்ஃபா, அதை வைத்து தான் இவனிடம் நமது வேலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குள்ளே ஒரு திட்டம் தீட்டியவர், தனது மற்ற ஆல்ஃபாக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி,
ஆதித்யனிடம், “நீங்கள் கூறும் அனைத்திற்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்கின்றோம். அதற்கு முன்னால் உங்களால் இந்த ஆயுதத்தை மறுபடியும் செய்ய முடியுமா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். நான் நினைப்பது சரியாக இருந்தால், உங்களுக்கு அந்த நபரை முன்னரே தெரியும். அவரை நாளைக்கு இங்கு நீங்கள் அழைத்துவர வேண்டும்” என்று தனது முடிவைக் கூறினார்.
ஆதித்யனும் அதற்கு ஒப்புக் கொண்டு தனது அறைக்கு வந்தான். முன்னர் உருவாக்கிய ஆயுதங்களில் யாருக்கும் தெரியாமல், அழிக்காமல் பாதுகாப்பாக வைத்திருந்த சிறிய பேனா போன்ற கருவியைத் தேடி எடுத்தான். அடுத்த நாள் காலை வரை விடிய விடியத் தனியாக, வேலை செய்து, அந்த ஆயுதத்தின் சக்தியை முடிந்த அளவுக்கு குறைத்தான். அதில், மேலும் பல மாற்றங்களைச் செய்து, அதை உடனடியாக எடுத்துக் கொண்டு ஆல்ஃபாவிடம் சென்று காண்பித்தான்.
அவர் அதனைச் சந்தேகத்துடன் பார்த்து, பக்கத்தில் இருந்த மீன் தொட்டியின் மீது அதைப் பயன்படுத்த, அதில் இருந்து வெளிவந்த மயிரின் அளவே உள்ள ஓர் ஒளிக்கீற்று அந்தத் தொட்டியை ஒரே நொடியில் மாயமாக்கியது. சாம்பல் கூட மிஞ்சவில்லை. அதைப் பார்த்த ஆல்ஃபாவே ஒரு நொடி திகைத்துப் போனார்.
ஆதித்யன், “மிஸ்டர். ஆல்ஃபா, இப்பொழுது கூட தாமதம் இல்லை. நாம் இந்த வேலையை நிறுத்தி விடலாம். நீங்கள் இப்பொழுது பார்த்தது வெறும் நூற்றில் ஒரு பங்கு தான்” என்றான்.
“இனி நம் கையில் எதுவும் இல்லை மிஸ்டர்.ஆதித்யன். அவர்கள் நம் பூமியைத் தாக்கினால், நாமும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா ? எந்தத் தளபதியும் போரில் வீரர்கள் இறப்பதை விரும்ப மாட்டான். ஆனால், நாம் இப்பொழுது நம் மக்களுக்காகப் போராட வேண்டும்” என்றார்.
அவர் கூறியதற்கு ஆதித்யன் தலையசைத்து விட்டுக் கிளம்பும் பொழுது, “நமது பாதுகாப்பு வீரர்கள் நால்வரை உங்கள் கூட அனுப்புகிறேன், மிஸ்டர். ஆதித்யன். இது உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செய்யப்பட வில்லை. நமது அமைப்பின் வழிமுறைகள் உங்களுக்கும் தெரியும்” என்றார். ஆதித்யனுக்குத் தலையசைத்துவிட்டு வெளியேறுவது தவிர வேறு வழி இருக்கவில்லை.
******
இவ்வாறு காரில் வரும் வழியில், என்ன நடந்தது என்று அனைத்தையும் ஆரியனுக்கும் நந்தினிக்கும் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தான் ஆதித்யன். பேசிக் கொண்டு இருக்கும் போதே வாகனம் நிற்க, அப்பொழுது தான் காட்டுப்பகுதிக்கு வந்தது தெரிந்தது. “இனிமேல் சிறிது தூரம் நடந்து தான் போக வேண்டும்” என்றான் ஆதித்யன்.
காவலர்கள் நால்வரும் அவர்கள் மூவருக்கும் சிறிது இடைவெளி விட்டு தொடர, ஆதித்யன், “சாரி நந்தினி, எனக்கு இத தவிர வேற நல்ல வழி தெரியல” என்றான்.
நந்தினி, “இட்ஸ் ஓகே, ஆதி. ஆனா, எனக்கு முழு விஷயமும் டாப் டூ பாட்டம் தெரிஞ்சா, இன்னும் பெட்டரா ஃபீல் பண்ணுவேன். தட்ஸ் ஆல்” என்றாள்.
ஆதி, “பை தி வே, இங்க தான் உனக்கு இன்டர்ன்ஷிப் வாங்கி தரணும்னு நினைச்சேன், நந்தினி” என்றான். அதைக் கேட்டவுடன் நந்தினியும் மகிழ்ச்சியும் ஆர்வமும் போட்டிப் போட காத்திருந்தாள்.
பின்பு வழக்கமான ஃபார்மாலிடிஸ் முடிய, அவர்கள் அந்த ஆராய்ச்சியகத்துக்குள் நுழைந்தனர். நந்தினியும் ஆரியனும் அங்கு நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு வர, ஆதித்யன் முகத்தில் மட்டும் சிறிது இறுக்கம் தென்பட்டது.
அவனுக்குள் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. அதன் பின் நந்தினிக்குப் பல்வேறு சோதனைகள் நடைபெற, ஆதித்யன் அதற்கு மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை. தானே முன்னின்று அனைத்தையும் செய்து முடித்தான்.
ஆனால், நடத்தப்பட்ட அனைத்து சோதனையிலும் அவளுக்கு மனித குணப் பண்புகளே இருந்தது. துளியும் வேறுபாடு இல்லை.
அனைத்தும் முடிந்த பின்பு, “ஆரி, நந்து ரெண்டு பேரும் இங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் இந்த ரிப்போர்ட மட்டும் கொடுத்துட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
ஆல்ஃபாவிடம் அனுமதி பெற்று, அவரது அறைக்குள் நுழைந்தவன், அங்கு அவருடன் இன்னொரு நபர் அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன், சிறிது யோசனையுடன், ஆல்ஃபாவிடம் தனது ரிப்போர்ட்டைக் கொடுத்தான்.
அவை அனைத்தையும் சரி பார்த்து விட்டு, அதை மற்றவரிடம் கொடுத்தவர், “உட்காருங்கள் மிஸ்டர். ஆதித்யன் ! உங்களிடம் முக்கியமான சில விஷயங்களைப் பேச வேண்டும்” என்றார்.
தான் பயந்தது போல, ஏதோ நடக்கப் போவதை உணர்ந்தவன், எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“நீங்கள் இந்த அமைப்பை எதிர்த்து மிகப் பெரிய தவறு செய்து விட்டீர்கள், ஆதித்யன். அதனுடைய பலனையும் சேர்த்தே நீங்கள் அனுபவிக்க வேண்டும். ஓ ! இவரை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேனே. இவர் அமெரிக்க நாட்டின் ஆயுதப் பிரிவின் தலைவர். இன்று நீங்கள் அந்தக் கருவியை உருவாக்கிய காணொளியைப் பார்த்துவிட்டு உங்களது கண்டுபிடிப்பை இவர் அறிந்து கொண்டார்.
அதனால் இனிமேல் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை இல்லை. உங்களுக்கு நன்றி கூற மறந்து விட்டேனே, அந்தப் பெண்ணை எங்களிடம் அழைத்து வந்து எங்களுக்குப் பேருதவி செய்து இருக்கின்றீர்கள். அதற்கு நன்றிக் கடனாக வேண்டுமானால் உங்களுக்கு நல்ல சிறையாக ஏற்பாடு செய்கின்றேன்” என்றார் ஆல்ஃபா.
ஆதித்யன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, “யூ … .. . …..” என்று கத்த, பின்னால் இருந்த ஒரு பாதுகாவலன் ஆதித்யனை ஓங்கி அடித்ததும், இவன் திரும்பி அடிக்க திரைப்பட நாயகன் அல்ல அல்லவா, அதனால் மயக்கமுற்றான்.
“அந்தப் பெண்ணை ஆராய்ச்சி செய்ய ஆரம்பியுங்கள். மற்ற இருவரையும் ஓர் அறையில் அடைத்து வையுங்கள்” என்று கட்டளையிட்டு விட்டு, மற்றவருடன் தனது திட்டத்தைத் தீட்டத் தொடங்கினார் ஆல்ஃபா.

error: Content is protected !!