மாயாவி 6 ::-
ஆணும் பெண்ணும் சமம்!
கணவனும் மனைவியும் சரிபாதி!
என்று இந்த உலகம் சொன்னாலும்
தான் என்ற ஆணின் ஆதிக்கம்…
என்னுள் எழும் போது அதை…
உன் அன்பால் அடியோடு வீழ்த்துகிறாயே!
என்னடி மாயாவி நீ !
இருவரும் மற்றவர் பற்றிய எண்ணத்தில் அப்படியே நிற்க, மாறன் வந்து அழைத்ததும் தான் கலைந்தனர்.
“அமுதா! கரெக்ட்டா வழி கண்டுபிடிச்சு வந்துட்டியா… வா சாப்பிடலாம்…“ என்று அழைக்க,
“இல்லப்பா… நான் சாப்பிட்டு தான் வந்தேன்… கொஞ்சம் நேரம் படுக்கறேன்…” என்று தந்தையுடன் பேசும் போதே வீட்டை ஆராய்ந்தவனின் கண்ணில் இரண்டு படுக்கையறை அகப்பட்டதில் நிம்மதியுற்று அவர் வெளியே வந்த அறைக்குள் நுழைந்தான்.
அதன்பின் மாறனும் குழலியும் பேசியவாறே சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். மாலை அமுதன் எழுந்ததும் மாறன் தான் இரவு வண்டிக்கே ஊருக்கு செல்வதாக சொன்னதும் இருவருமே அதிர்ந்தனர்.
“மாமா ! இன்னும் கொஞ்சம் நாள் இருந்துட்டு போங்களேன்…” என்று கெஞ்சலாக கேட்டவளை ஆதுரமாக பார்த்தவர்,
“நான் இங்க எவ்வளவு நாள் இருக்க முடியும்மா… அங்க செல்வி கண்ணனை வேற தனியா விட்டுட்டு வந்திருக்கேன்…” என்றவர்,
“நான் எடுத்து சொல்ற அளவுக்கு நீங்க விவரம் இல்லாதவங்க இல்ல… இரண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க… இதுக்கு அப்புறமாவது நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க…” என்று அவர் சொன்னதும், அங்கே நிலவிய அமைதியைக் கலைத்த அமுதன்,
“அப்பா ! வேலை முடிவாகும்னு தெரியாம வெறும் இரண்டு செட் டிரஸ் தான் எடுத்துட்டு வந்தேன்… நானும் உங்க கூட ஊருக்கு வந்து எனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக்கிட்டு அப்புறம் வந்து வேலையில ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்று சொன்னவனை முறைத்துக் கொண்டே,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. எனக்கு நைட் தான வண்டி… இப்ப சும்மா தான இருக்கோம்… நம்ப ஊரை விட இங்க பெங்களூர்ல துணி மணி கொஞ்சம் விலை குறைவா இருக்கும்னு சொல்லுவாங்க… வா போய் புதுசே எடுப்போம்…” என்றவர்,
“கருத்தம்மா! நீயும் வாயேன்.. உனக்கு இங்க கடை விவரம் எல்லாம் தெரியும்ல…” என்று அவளையும் அழைக்க,
“இல்ல மாமா ! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் உங்களுக்கு வண்டி சொல்றேன்… நீங்களே போயிட்டு வந்துடுங்க.. அதுக்குள்ள நான் உங்களுக்கு நைட் சாப்பிடறதுக்கு சமைச்சு வைக்கிறேன்…” என்றவளைப் பார்த்து சம்மதமாக தலையசைத்தவர் ரெடியாக அறைக்குள் நுழைய அவளும் பின்னோடு சென்றவள் தயங்கி நின்றாள்.
“என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?என்னன்னு சொல்லு கருத்தம்மா?”
“அது வந்து மாமா ! இங்க வரும் போது செலவுக்கு பணம் கொண்டு வந்திருப்பீங்க… இருந்தாலும் இப்ப வெளியே போறீங்க எதுக்கும் இதை செலவுக்கு வைச்சிக்கோங்க… உங்களுக்கும் வீட்ல எல்லோருக்கும் எடுத்துக்கோங்க….” என்று அவளின் கார்டை நீட்டியவளை அழுத்தமாக பார்த்தவர்,
“இதை என் மச்சான் பொண்ணா தர்றியா ? இல்ல என்னோட மருமகளா தர்றியா?’ என்று கேட்டதும்,
“இந்த ஆராய்ச்சி எல்லாம் ஏன் மாமா ! நான் உங்களுக்கு வாங்கி தர கூடாதா?” என்று சிறிது கோபத்தோடே கேட்டாள்.
“என் மச்சான் பொண்ணா தர்றின்னா தாராளமா நீ எனக்கும் என் பொண்டாட்டிக்கும் வாங்கி தரலாம்… ஆனால் என் பசங்களுக்கு நீ வாங்கி தரணும்னு அவசியம் இல்லை…”
“என் மருமகளா நீ தரணும்னு நினைச்சின்னா எங்க எல்லாருக்கும் எடுத்து தரலாம்.. எனக்கு வேண்டியதையும் நான் உரிமையா உன்கிட்ட கேட்டே வாங்கிப்பேன்…” என்றவர் அவள் முகத்தை ஆராய்ந்தார்.
அவர் கையில் தன் கார்டை திணித்து,
“எந்த உரிமையில என் பையனை கல்யாணம் பண்ணிக்கோன்னு நீங்க கேட்டிங்களோ, எந்த உரிமையில நீங்க கேட்டதுக்கு நான் ஒத்துக்கிட்டனோ, இதெல்லாம் விட எந்த உரிமையில உங்க முன்னாடி நின்னு இதைக் கொடுக்கிறனோ அந்த உரிமையில வாங்கிக்கோங்க…”
“ஏன்னா நீங்க எல்லோரும் சொல்ற போல நடந்ததை இனி மாத்தி எழுத முடியாது அதனால எழுதியதை இனி தினமும் படிச்சு மண்டையில ஏத்திக்கிறேன்…” என்று கோபமாக சொல்லி விட்டு சென்றவளையே மாறன் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருக்க,
அவர் மகனோ குழப்பமாக பார்த்தான்.. “இப்ப இவ என்ன தான் செல்ல வரா…” என்று ஒரு நிமிடம் யோசித்தவன், “என்ன இது நம்மளையே இப்படி குழப்பி விட்றா? அதே மாதிரி அவ கிட்ட பணம் இருக்குன்னு சொல்லி காட்றாளா… ஏன் இவ தான் இவ்வளவு நாள் எனக்கு செலவு பண்ணாளா… இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டறேன்…” என்று மனதோடு பேசியவன்,
தந்தையோடு கடைக்கு சென்று, “அப்பா ! எனக்கு எல்லாம் உங்க காசுல எடுத்துக் கொடுங்க…” என்று சொல்லிவிட்டு அவன் அந்த கடையை புரட்ட, அதை பார்த்த மாறன், “நம்ம காசுல தான் எடுக்கணும்னா கண்டிப்பா நான் ஊரு போய் சேர முடியாது…” என்று மனதோடு நினைத்தவர்,
மருமகள் பணத்திலே மகனுக்கு வாங்கி கொடுத்து வீட்டிற்கு கூட்டி வந்தார்.
வீட்டிற்கு வந்து இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பியவர் மருமகளிடம்,
“நீ எடுத்து வைச்சிருக்கற உன்னோட இந்த முதல் அடி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… இதே மாதிரி ஒரு நாள் என்னோட பையன் சம்பாத்தியத்தில் இருந்து உரிமையா எடுத்து நீ எங்களுக்கு செய்வன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்று சொல்லியவருக்கு எந்த பதிலும் அளிக்காமல்,
“ஊருக்கு பத்திரமா போயிட்டு எனக்கு போன் பண்ணுங்க… உடம்பை பார்த்துக்கோங்க…” என்று அவரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க, அமுதன் அவரை வண்டி ஏற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தான்.
முதல் முதலாக இருவரும் தனித்து விடப்பட, அந்த தனிமையின் கணம் தாளாமல் இருவரும் தவித்தனர். அமுதன் பொறுப்பில்லாதவன் தானே தவிர ஒழுக்கமானவன்.
கல்லூரி படிக்கும் சமயத்தில் இருந்தே காதல், பெண்களிடம் கலாட்டா என்று எந்த பழக்கமும் இல்லை அதில் நாட்டமும் இருந்ததில்லை… பெண்களை ஆர்வமாக நல்ல விதத்தில் பார்த்திருக்கிறானே ஒழிய பார்வை அத்து மீறியதில்லை…
இன்று ஒரு பெண்ணுடன் தனியே தங்குவது அவனுக்கு பெரும் தயக்கமாக இருந்தது… ஆம் ! பெண் தான்… உறவின பெண்ணாக கூட எண்ண முடியாமல் யாரோ ஒரு பெண்ணாக தான் அவளை யோசிக்கிறான்… இன்னும் அவளை மனைவியாக மனம் நினைக்கவில்லையே…
தனித்தனி அறையில் தான் இருக்கின்றனர் இருந்தும் என்னவோ ஒட்டாத தன்மை… உறக்கம் வராமல் புரண்டவன் எழுந்து வெளியே வர, அவனுக்கு முன்னே அவன் மனையாள் அங்கிருக்க திடுக்கிட்டான்…
கால்களை மேலேற்றி கட்டியபடி முகத்தை அதில் புதைத்துக் கொண்டு பார்வை எங்கோ நிலைக் குத்தியவாறு சோக சித்திரமாக ஏதோ ஒரு நினைவில் இருந்தவளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காமல் அதிர்ந்தவன் முதல் முறையாக அவளை அழைத்தான்…
“ஏய் !” என்றவனின் அதட்டலில் எழுந்து நின்றவள் உடல் தன்னாலே நடுங்கியது.
அவளின் அந்த நடுக்கம் விடிவெள்ளி விளக்கு வெளிச்சத்தில் அவனுக்கு தெளிவாக தெரிய, “நம்ம தான் பயப்படணும் இவ ஏன் இப்படி நடுங்குறா…” என்று யோசித்தவன்,
“இந்நேரத்திற்கு இங்க என்ன பண்ற? இப்படியா மனுஷனை பயமுறுத்துவ…” என்று அவளிடம் கோபமாக கேட்க,
“சாரி ! நைட்ல தூக்கம் வரலைன்னா எப்பவும் இங்க வந்து உட்காருவேன்… இன்னைக்கும் அப்படி வந்தேன் ஆனால் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கலை…” என்றாள்.
“ம்ம்ம் ! என்னவோ சொல்ற….” என்று அவளிடம் சலித்தபடி சமயலறை சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தவன் அறைக்குள் செல்ல திரும்பியவளை அழைத்து,
“ஒரு நிமிஷம்!” என்று நிறுத்தினான்.
“சொல்லுங்க…” என்றாள்.
“இங்கிருந்து ஆபீஸ் கொஞ்சம் தூரமாச்சே… எப்படி போறது? கண்டிப்பா நாளைக்கே ஜாயின் பண்ணனுமா ?” என்று அவன் கேட்க,
“அப்பாயிண்ட்மெண்ட்ல நாளைக்கு சேர சொல்லி தானே தேதி போட்டிருக்காங்க அதனால நாளைக்கே ஜாயின் பண்ணனும்… கவி தான் என்னை தினமும் கூட்டிட்டு போவான்… நம்ம அவன் கூடவே போகலாம்… இல்ல உங்களுக்கு பிடிக்கலைன்னா நம்ம தனியா போறதுனா கேப்ல போயிக்கலாம்…” என்று அவள் சொன்னதும்,
“அதெல்லாம் எதுக்கு தனி செலவு… அதான் கூட்டிட்டு போக ஆளு இருக்கே… பேரு தான் பெரிய ஆஃபீசர் ஆனால் இந்த ஒரு சின்ன விஷயம் கூட செய்ய முடியாதா… இப்ப தான் வந்திருக்கேன் இன்னும் இந்த ஊரை கூட சுத்தி பார்க்கல… உடனே வேலைக்கு போகணுமாம்…” என்று சலித்துக் கொண்டவனுக்கு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் குழம்பி நின்றாள்.
“இங்க பாரு நான் கம்பெனியில எல்லாம் இதுக்கு முன்னாடி பெருசா வேலை செஞ்சது இல்லை… ஏதோ நீங்க கேட்டதால தான் இங்க வேலை செய்ய ஒத்துக்கிட்டேன்.. அதுக்காக என்னை நிறைய வேலை வாங்க கூடாது… உனக்கும் சொல்றேன்.. நீயே உன் பிரெண்ட்கிட்டேயும் சொல்லி வை…” என்று அதிகாரமாக சொன்னவனுக்கு தலையசைப்பில் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
“பேசிட்டே இருக்கேன் அவ பாட்டுக்குன்னு கிளம்பி போறா பாரு… ஆபீஸ் போறதுக்கு முன்னாடி இவளை கொஞ்சம் அதட்டி வைக்கணும்… இல்லைன்னா ஆபீஸ்ல நம்மை இவ வேலை வாங்குவா…” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டவனுக்கு தெரியவில்லை அவளின் மனைவி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரியா மாறிடுவான்னு…
மறுநாள் காலை இருவரிடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் அவள் தயாரித்த உணவை சாப்பிட்டு இருவரும் தயாராகி வெளியே வரவும் கவி வரவும் சரியாக இருந்தது.
“ஹே! குட் மோர்னிங் காரு! குட் மோர்னிங் அமுதன்… ஆல் தி பெஸ்ட்… வெல்கம் டு அவர் வேர்ல்ட்….” என்று அவன் வாழ்த்தியதற்கு தலையசைப்பில் பதில் சொன்னவனை இருவருமே அதிருப்தியாக பார்க்க அதை எல்லாம் அசட்டை செய்தவன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
எங்கோ சென்று வேலை செய்வதற்கு இங்கு எங்களுடனே செய்தால் கொஞ்சம் தட்டிக் கொடுத்து அவனை மெருகேற்றலாம் அதனோடு இருவரும் கொஞ்சம் பழகுவர் என்று கவி எடுத்த முதல் முயற்சிக்கு கிடைத்த பதிலே அவனை திண்டாட வைத்தது.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை இது வெறும் ட்ரைலர் தான்… மாறன் வாய் வார்த்தையாக அமுதனை பற்றி சொன்னதை எல்லாம் இனி தான் காணப் போகிறான் என்று… அப்போதும் அவன் முயற்சியை தொடர்வானா அல்லது அதற்கு முன்னே அமுதன் அவன் முயற்சியை முறியடிப்பானா… என்று பார்க்கலாம்…