சரண் – 19
அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும்
மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய்
நின்னருகில் வந்து நான்
சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ
“ஆச்சி எல்லாத்தையும் இவக்கிட்ட சொன்னாலும் சொன்னீங்க என்னை ஒரு வழி பன்றா.. இவளைப் போய் சின்னப் பொண்ணுன்னு சொல்றீங்க பாருங்க.. அவ செய்றதெல்லாம் உங்களுக்குத் தெரியல, தெரிஞ்சா தாங்கமாட்டீங்க..” என மனைவியை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது தான் இருவரும் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தனர். புகழை எப்போதடா பார்ப்போம் என்பது போல் ஓடியவள், அவனிடம் “ஃபைனல்லி மாம்ஸ் ஃபால் இன் லவ்.. கங்க்ராட்ஸ்…” என அவன் கையைப் பிடித்துக் குலுக்கியவள், “ஆனாலும் மாம்ஸ் இந்த ஊமையா இருக்குறவங்களையும் நம்பக் கூடாது, சாமியாரா இருக்குறவங்களையும் நம்பக்கூடாதுன்னு சொல்றதை நீங்க ரெண்டு பேரும் நிரூபிச்சிட்டீங்க. எப்படி மாம்ஸ் இப்படி.. இன்னும் என்னால நம்பவே முடியல தெரியுமா..? ஒரு நிமிசம்..” என்றவள் பக்கத்தில் இருந்த கணவனின் கையைப் பிடித்து அழுந்திக் கிள்ள, அதில் அவன் “ஸ்ஸ்ஸ் கிறுக்கி என்னடி பன்ற” எனத் தன் கையை உதற, “இதெல்லாம் நிஜமான்னு செக் பண்ணேன் மாமா, நிஜம் தான். புகழ் மாம்ஸ் நீங்க வேறா லெவல், எப்படி உங்களுக்கு லவ் வந்துச்சு சொல்லுங்க மாம்ஸ்.. ப்ளீஸ்” என சீனிப் பட்டாசாக வெடித்தவளின் வாயை மூடிய வெற்றி,
“இப்ப நீ வாயை மூடல, நான் உன் வாயை மூடுவேன். யார் இருக்காங்க என்னன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். பேசமாட்டேன்னு சொல்லு அப்போதான் கையை எடுப்பேன்..” என மிரட்ட,
“ஹ்ஹ்ம்ம்ம்…” எனத் தலையை அங்குமிங்கும் ஆட்டியவள், அவன் அசையாமல் இருக்கவும், வேறு வழியில்லாமல் சரியென்று தலையாட்ட, அப்போதும் சந்தேகத்துடன் பாதிக் கையை மட்டும் எடுக்க, “அறிவிருக்கா உங்களூக்கு இப்படியா பண்ணுவாங்க, எனக்கு மூச்சி முட்டிடுச்சுத் தெரியுமா..?” எனக் கோபமாகப் பேசி, பாவமாக முடிக்க,
“இங்க இருந்து போற வரைக்கும் வாயைத் திறக்கக்கூடாது அதுக்குத்தான் இது.” என்றவன் தம்பியிடம் திரும்பி அவன் தர்மபுரி கிளம்புவது பற்றி பேச, தன் வலியையும் மறந்து அவர்களை ரசித்துப் பார்த்திருந்தான் புகழ். மங்கையை இப்படியெல்லாம் அவன் பார்த்ததே இல்லை. அவளின் பெற்றோர் இறந்த பிறகு அவள் அதிகம் தனிமையைத் தான் நாடுவாள். புகழ் வீட்டில் இருந்தால் அவள் கூடவே தான் இருப்பான். என்ன செய்கிறாய், அடுத்து செய்யப் போகிறாய்? என்ன செய்யாலாம். என்று எல்லாம் புகழ் தான் அவளுக்குச் சொல்லுவான்.
அவளது +2 மார்க்கை வைத்து மெடிசின் படிக்கலாம் என்று அவன்தான் சொன்னான். அப்படியொரு அமைதி அவள். அமைதியாக இருந்தே தன் காரியத்தை சாதித்துக் கொள்வாள். அதற்கு அவளின் திருமணமே எடுத்துக்காட்டு. அவளுக்கு சத்தமாக பேசத் தெரியும் என்றே அவனுக்கு இப்போதுதான் தெரிகிறது. பலமுறை யோசித்திருக்கிறான் கல்லூரியில், விடுதியில் எல்லாம் எப்படி இவள் இருக்கிறாள் என்று. இப்படியே இருந்து விடுவாளோ என்று பயந்தும் இருக்கிறான்.
மங்கையை திருமணம் செய்ய சம்மதித்ததற்கு அதுவும் ஒரு காரணம். மேலும் வனிதாவின் முக்கால்வாசி கவலை மங்கையைப் பற்றித்தான். வெளியே செய்து கொடுத்தால் எப்படி இருப்பாளோ என்ற பயம். அதனால் தான் அவரும் புகழுக்கே செய்யலாம் என்று இருந்தார். ஆனால் அந்த பயம், வருத்தமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல அவர்கள் இருவரின் செயல்களும் இருந்தது இப்போது. அது அவன் முகத்தில் நிம்மதியான மலர்ந்த புன்னகையை கொடுத்தது.
வெற்றி பேசியும் பதிலுக்கு புகழ் ஒன்றும் பேசாமல் இருப்பதைப் பார்த்த மங்கை, அவன் தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து, ‘என்ன பார்க்குறீங்க, உங்க அண்ணன் என்னைத் திட்டினார், நீங்க பார்த்திட்டு சும்மா இருக்கீங்க, இன்னேரம் சண்டை போட்டுருக்கனும், அது செய்யாம, எதுக்கு இந்த கேவலமான லுக்கு..’ என வாயைத் திறக்காமல், கண்ணை மட்டும் உருட்டி உருட்டி பேச, பார்த்த இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. வெற்றி வாயைத் திறக்கக் கூடாது என்று சொன்னதால் தான் அவள் கண்ணாலேப் பேசுகிறாள் என்று இருவருக்கும் புரிந்தது. இருவரும் கிண்டல் செய்வதைப் பார்த்து எரிச்சலாகி ‘போங்கடா..’ என்ற கேவலமானப் பார்வையைக் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.
அவள் சென்றதும் “என்னடா அவளை அப்படி பார்க்குற..” என்றான் வெற்றி அதே சிரிப்புடன். ஒன்னுமில்லை எனபது போல் தலையாட்ட, “அவளைப் பத்தி யோசிக்காத, உன்னைப் பத்தி யோசி. நீ அடுத்து என்ன செய்யலாம்ன்னு ப்ளான் வச்சிருந்தியோ அதை நான் செய்றேன். நானும் வனியும் கிளம்புறோம் மார்னிங். நீ நடக்கலாம்ன்னு டாக்டர் சொன்னதும் அப்பாவைக் கூப்பிட்டு அங்க வா. நீ அங்க வர்ர நாள் உங்க ரெண்டு பேரோட மேரேஜ் கண்டிப்பா நடக்கும். நான் நடத்தி வைப்பேன்.” என உறுதியாக கூறி,
“எதைப்பத்தியும் யோசிக்காத, நான் போயிட்டு அங்க என்ன செய்றேன்னு உனக்கு ஒவ்வொரு நாளும் மெஸேஜ் பன்றேன். நீ டென்சன் ஆகாம இரு. நீ இங்க இருக்குற இந்த டைம்ல தான் அம்மா மனசை மாத்த முயற்சி செய்யனும். மங்கை மாதிரியோ, மணி மாதிரியோ இல்லை அரூபி. அவளுக்கு எல்லாம் புதுசு. ஏன் நீயுமே புதுசுதான். அவளை எந்த நேரத்திலையும் யாரும் ஹர்ட் பண்ணிடாம பார்த்துக்கனும்.”
“அதுக்கெல்லாம் என்ன செய்யாலாம்ன்னு யோசிச்சு முடிவு எடுத்து தயாரா வச்சிக்கோ. கல்யாணம் முடிஞ்ச பிறகு யோசிக்க ஒன்னுமே இல்ல. கோவை ஆஃபிஸ் அப்பாவும், திருவும் பார்த்துப்பாங்க, இங்க இருக்குறதும் மேக்ஷிமம் நான் பார்த்துப்பேன். நெட்வொர்க் கிடைக்கலன்னா நீ தான் செய்யனும். ரொம்பவும் ஸ்ட்ரைன் பண்ணிக்காம செஞ்சிடு. இப்போ நான் கிளம்புறேன். உடம்பை பார்த்துக்கோ..” என தம்பியின் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுக்க,
“நோ ப்ராப்ளம் வெற்றி.. ஐ கேன் மேனேஜ்… நீ கிளம்பு. அங்க போயிட்டி எனக்கு அப்பப்போ கால் பண்ணு.. ரூபி.. ரூபியை எனக்கு காட்டு ப்ளீஸ். ஒரு கோபத்துல கிளம்பி வந்துட்டேன் தான். ஆனா அவளைப் பார்க்காம சொல்லாம வந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னை தப்பா நினைச்சிருப்பாளோ.. வெறுத்துருப்பாளோ.. இல்லை அவங்க தாத்தா காட்டின மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துருப்பாளோன்னு எல்லாம் ஏதேதோ எண்ணம். அவளைப் பத்தி தெரியாம என்னால இங்க நிம்மதியா இருக்க முடியும்ன்னு தோனல வெற்றி. எனக்கு அவளைப் பார்க்கனும் போல இருக்கு. நாளைக்கு போனதும் எனக்கு வீடியோ கால் பண்ணு…” என்றவனின் குரல் தேய்ந்து ஒலிக்க,
“டேய்… இதெல்லாம் நீ சொல்லனும்னு அவசியமே இல்ல, நீ சொல்லலன்னாலும் உன் மங்கை கண்டிப்பா செய்வா.. சரி நேரம் ஆகிடுச்சு. இன்னும் பேக் பண்ணவே இல்ல. இவளை மேய்க்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு. எங்க போய் பேக் பண்ண, சரிடா வெளிய போய் யார் கூட வம்பிழுக்குறாளோ.. நான் அப்படியே அவளை அழைச்சிட்டு போறேன். மார்னிங்க் டைம் இருந்தா வந்துட்டு போறேன். இல்லை அப்படியே கிளம்பிடுறேன். ஓகேவா..” என விடை பெற நினைக்க,
கதவைப் படாரென்று திறந்து கொண்டு மணி மொழி உள்ளே வந்தாள். வந்தவள் வெற்றியிடம் “அண்ணா அந்த உம்மனாம் மூஞ்சி என்னைத் தகரடப்பா சொல்றா… வா நீ வந்து அவளை என்னனு கேளூ..” என இழுக்க, இப்போது இருவருக்கும் புரிந்தது அவள் யாரிடம் வம்பிழுத்திருக்கிறாள் என்று. புகழிடம் விடைபெற்றவன் தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டே வெளியேறினான் மனைவியைத் தேடி.
கோபத்தொடு வெளியே வந்த மங்கையின் பார்வையில், அங்கிருந்த மரத்திற்கடியில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த மணியும் வனிதாவும் பட்டனர். மணி ஏதோப் பேசிக்கொண்டே இருக்க, வனிதா அவளை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்கும் தன் அத்தையிடம் பேச வேண்டிய வேலையை வேறு கொடுத்திருந்தான் வெற்றி. அதனால் மணியை அங்கிருந்து அனுப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே அவர்களை நோக்கி வந்தாள்.
“மம்மி ப்ளீஸ்… நான் அங்க தனியா இருக்க மாட்டேன். நீயும் வரமாட்ட, அப்பா ஆஃபிஸ் முடிஞ்சி வர வரைக்கும் நான் தனியா இருக்கனும். நான் போக மாட்டேன். போ..” என அவரை விரட்டிக் கொண்டிருந்தாள்.
“மணிமா சொல்றதைப் புரிஞ்சிக்கடா. செமஸ்டர் வரைக்கும் மட்டும் இரு, அப்புறம் நீ இங்கே வந்துடு.. அதுவரை அட்ஜஸ்ட் பண்ணுடா.. திரு அங்கதான இருக்கான். டென் டேய்ஸ் தானடா..” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தார். படிப்பென்றால் அவளை உட்காரவே வைக்க முடியாது. மங்கையும் அப்படித்தான், மணியும் அப்படித்தான். படிக்க வேண்டும் என்றால் கசப்பான மருந்தை சாப்பிட சொன்னது போல் முகத்தைச் சுழிப்பார்கள்.
“புகழ் இருந்த வரைக்கும் அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இப்போதென்றால் அவரை தலையால் தண்ணிக் குடிக்க வைத்தாள். திரு வந்த பிறகே அடங்கி உட்காருகிறாள். இப்போது திருவும் கோவையில் இருப்பதால் தான் தைரியமாக அங்கே அனுப்ப முடிவெடுத்தார். அதைச் சொன்னதில் இருந்து ஒரே டைலாகை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறாள். கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி, மிரட்டி இப்படி..
“ஒய் தகர டப்பா… என்ன இங்க சவுன்ட்.. ஸ்பீக்கர் முழுங்கின மாதிரி கத்துற, என் அத்தையை வேற மிரட்டுற, என்ன நினைச்சிட்டு இருக்க, கேட்க யாரும் இல்லைன்னு நினைப்பா.. நான் இருக்கேன் என் அத்தைக்கு..” எனச் சின்னவளை சீண்டிவிட, அது சரியாகத் தன் வேலையைக் காட்டியது.
“ஏய் உம்மணாம் மூஞ்சி என்னையவே தகரடப்பான்னு சொல்றியா.. இரு என் அண்ணாக்கிட்ட சொல்லி, உன்னை என்ன பன்றேன் பாரு.” என முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே ஓடினாள். அவள் போவதையே பார்த்திருந்த மங்கை, வனிதாவிடம் திரும்பி “என்ன அத்தை முடிவு எடுத்துருக்கீங்க.. உங்களுக்கு வருத்தமா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். ஆனா அத்தை புகழ் மாமா எந்த பொருள் மேலையும் ஆசைப்பட்டது இல்லையே. முதன் முதலா நம்மக்கிட்ட ஒன்னு கேட்கும் போது செஞ்சிக் கொடுக்குறது தானே நம்ம மரியாதை.” என பொறுமையாக பேச,
“ம்ம்ம்… கல்யாணம் ஆகிட்டா, கழுத்துல மஞ்சள் கயிறு ஏறிட்டா நீங்க எல்லாம் பெரிய ஆளுங்க இல்லையா.. உங்க வயசைத் தாண்டி தான் நாங்க வந்திருக்கிறோம்ன்னு அடிக்கடி மறந்துடுறீங்க. என் பையனுக்கு என்ன செய்யனும்னு உங்க எல்லாருக்கும் தெரியும் போது, எனக்குத் தெரியாதா..? எனக்கு வருத்தமெல்லாம் இல்ல, உன் புருஷன்கிட்ட சொல்லு எனக்கு முழுசம்மதம்னு.. பத்திரமா போயிட்டு வாங்க. என்ன நடந்தாலும் கடைசியா சொல்லாம கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க..” என ஆதங்கமாகப் பேச,
“அய்யோ என்ன அத்தை நீங்க.. உங்களுக்கு நான் அட்வைஸ் ல்லாம் பண்ணல அத்த. எனக்குத் தோணினதை சொன்னேன். சார் அத்தை. மன்னிச்சிக்கோங்க. இனி இப்படி ஒரு நாளூம் நடக்காது. வருத்தப்படாதீங்க அத்தை ப்ளீஸ்..” என அவரின் கன்னத்தைத் தாங்கிப் பிடிக்க, அவள் கையைத் தட்டி விட்டவர், முந்தானையை எடுத்து முகத்தை மூடி அப்படியொரு அழுகை. “அத்தை, என்னத்தை, அழாதே அத்தை, ப்ளீஸ் அத்தை.. என்ன மன்னிச்சிடு அத்தை..” எனப் பலவாறு கெஞ்சிக் கொண்டிருக்க, தூரத்தில் வெற்றியும் மணியும் வருவது தெரியவும், முகத்தை அழுந்த துடைத்து சாதரணம் போல் ஆகியிருந்தார்.
தங்கையுடன் வந்தவன் இருவரின் முகமும் சரியில்லாததைப் பார்த்து, மங்கையிடம் “வனி ரெண்டு பேரும் கார்ல இருங்க. நான் வர்ரேன்..” எனவும் பதில் பேசாமல், அத்தையை ஒருமுறை பின்னிருந்துக் கட்டியணைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள். மணிக்கும் என்ன புரிந்ததோ அமைதியாகவே மங்கையிடம் கிளம்பினாள்.
அவர்கள் நகர்ந்ததும் தாயின் அருகில் அமர்ந்தவன் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. அவனின் சில நொடி அமைதியே வனிதாவிற்குள் பெரும் பிரளயத்தை உண்டு செய்தது. என்ன பேசப் போகிறானோ.. பதட்டத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
“நம்ம பிரச்சினையை இப்போ பேச வேணாம். எனக்கு உங்க மேல எந்தக் கோபமோ வருத்தமோ இல்லை. நீங்க என்னோட அம்மா அதுல எந்த மாற்றமும் இல்லை. நீங்க எனக்காக செய்ய வேண்டிய காலம் போச்சு. இனி அதைப்பத்தி பேச வேண்டாம். இப்போ நாங்க உங்களுக்கு செய்ய வேண்டிய காலம். நாங்க செய்றோம் விடுங்க. வீணா மனசைக் குழப்பி, உடம்பைக் கெடுத்துக்காதீங்க. நாங்க போயிட்டு அப்பப்போ சொல்றேன். நீங்க எதுக்கும் ஜோஷியர்கிட்ட கேட்டு நல்ல நாள் எல்லாம் பார்த்து வைங்க. நான் சொல்லும் போது நீங்க வர மாதிரி இருக்கும். பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன்.” என அவன் எழப் போக,
அதுவரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தக் கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது. நின்றிருந்தவனின் கையைப் பிடித்தவர் “வெற்றி என்னை மன்னிச்சிடு கண்ணா. அம்மாவை மன்னிச்சிடு கண்ணா… நான் செய்த பாவத்துக்கு இன்னும் எவ்வளவு பார்க்கனுமோ..” என்னை மன்னிச்சிடுடா..” என்றவரின் அருகில் நெருங்கி அமர, அதுவே போதும் போல மகனின் தோலில் சாய்ந்து தன் ஏக்கம் தீரும் மட்டும் அழுது கரைந்தார்.
ஒருக் கட்டத்தில் அவரின் அழுகை முடிவுக்கு வர,
போதும் இனி அழக்கூடாது. நாங்க போற காரியம் நல்லபடியா முடியனும்னு நினைச்சிக்கோங்க. அவனைத் தனியா விடாதீங்க. ரொமப் லோன்லியா ஃபீல் பன்றான். நான் கிளம்புறேன். அப்பா வீட்டுக்கு வருவார்தான அங்க பேசிடுறேன்.” என்றவன் அவரை ஒருவழியாக சமாதானம் செய்து, புகழிடம் விட்டுவிட்டுக் கிளம்பினான்.
இவன் காருக்குள் வந்து பார்க்க, இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருக்க, ‘இங்கையும் ஒரு பஞ்சாயத்தா.. முடியலடா எப்பா..’ எனத் தலையில் கைவைத்தவன், இருவரிடமும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
வீட்டுக்கு வரும்வரை இருவரிடமும் பேச்சே இல்லை. உள்ளெ நுழைந்ததும் ஆரம்பித்தாள் மணிமொழி. “என்னையும் கூப்பிட்டு போ.. எனக்கு புது அண்ணியைப் பார்க்கனும். இவங்களை மட்டும் அழைச்சிட்டு போற, நானும் வருவேன்..” என ஆரம்பித்தது இப்போது வரை முடியவில்லை.
இவள் அலும்பலைப் பார்த்த ஆச்சிதான், “வெற்றி கிளம்புற வேலையைப் பாரு. முதல்ல உன் பொறந்தவளை சமாதானம் செய்…” என அதட்ட,
“அம்மு இங்க வா..” எனத் தங்கையை அழைக்க, “நான் வரமாட்டேன், கோவமா இருக்கேன்.” என பதில் கொடுக்க,
“அதனால என்ன கோபம் தான இருக்கட்டும். அது இல்லன்ன லைஃப் போர் ஆகிடும். அதை ஒரு ஓரமா வச்சிட்டு நீ இங்க வா..” என “தேவையில்லை நான் யார் கூடவும் பேசல..” என முறுக்கியவளின், அருகில் அமர்ந்து சில பல சமாதனங்கள் பேசி அவளை வழிக்கு கொண்டு வர வெற்றிக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
ஒருவழியாக அனைவரையும் சரிக்கட்டி, அனைத்தையும் ரெடி செய்து அடுத்த விடியலில் தர்மபுரியை நோக்கி பறந்திருந்தனர் வெற்றியும் மங்கையும் புகழின் காட்டு ராணியைப் பார்க்க.