ஸ்பாட் உள்ளே செல்ல முடியாத இடம் என்றால்.. நேற்று தந்தை இறந்திருக்க.. இன்று கோவிலுக்குள் செல்ல முடியாது என எண்ணியவள் எந்தக் கோவிலுக்குச் செல்வது என குழம்ப.. குத்துமதிப்பாய் ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.
ஆள் அரவமற்ற சாலைகளும்.. விர்ரென்று காதை அடைக்கும் குளிர்காற்றும்.. அடித்து எறிவது போல வேகமாக ஓடிய பேருந்துகளும்.. அடிவயிற்றை சில்லிட வைத்தாலும்.. அவள் சிந்தை முழுதும் கணவனே நிறைந்திருந்தான்.
திடீரென தன்னைக் கடந்த கார் ஒன்று ஸ்லோவாக.. அதை உணர்ந்து உடம்பே ஒரு நிமிடம் சிலிர்க்க.. வேகமாக நடையை எட்டிப் போட்டாள்.. “கண்ணா” என்ற அவசரக் குரலில் அவள் நடை தடைபட.. திரும்பிப் பார்க்க.. அங்கே ரகு நின்றிருந்தான்.
அவளை நெருங்கிய ரகு “இந்த நேரத்துல எங்க போற கண்ணா” என மிரட்ட.. கண்களில் குளம் கட்டிய நீருடன் “மாமாவைப் பாக்கனும்” என்றாள்.
அவள் பதிலைக் கேட்டு அவனுக்கு கோவம் தான் வந்தது.. “உன் மாமனை என்ன பூச்சாண்டியா பிடிச்சிட்டுப் போயிருக்கப் போகுது.. வேலை முடிஞ்சா வீட்டுக்கு வரப் போறான்.. அதுக்கு லூசு மாதிரி நீ ராத்திரில இத்தனை தூரம் நடந்து வந்தியா” என கோவத்தில் இரைந்தான்.
“நீ என்ன வேணாத் திட்டிக்கோ.. நான் மாமாவைப் பாக்கனும்” என ஸ்பாட் மொபைலில் பேசியதைச் சொல்ல.. அவனுக்கும் ஏதோ உறுத்தியது.. அவர்கள் நின்றிருந்த ரோட்டிற்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் தான் அந்த முருகன் கோவில் இருக்க.. அதன் நுழைவு வாயில் மெயினில் இருந்தது.
இவர்கள் பேசும் போதே.. ஒரு அம்பாஸிடர் அந்த நுழைவாயிலில் நுழைய.. மகிழ் அதை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.. அவளைத் தடுத்த ரகு.. “இரு.. நானும் கூட வரேன்” என காரை லாக் செய்தவன் அவளோடு நடந்தான்.
மகிழின் வேகத்திற்கு ரகுவால் ஈடு செய்யவே முடியாமல் அவள் பின்னால் ஓட.. முன் சென்ற கார்களை கண்காணித்தபடி ஒரு மரத்தின் பின் நின்றிருந்த ஸ்பாட்.. மகிழும் ரகுவும் வருவதைக் கண்டு.. ‘இவர்கள் என்ன இங்கு’ என அதிர்ந்தவன்.. மகிழின் கையில் இருந்த நந்தாவின் ஃபோன் அவனுக்கு சகலத்தையும் உணர்த்தியது.
சுற்றும் முற்றும் பார்த்தபடி.. மரத்து நிழலில் இருந்து வெளிவந்தவனைக் கண்டு இருவரும் ஒரு நிமிடம் பயந்தாலும்.. அது ஸ்பாட் தான் என உணர்ந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட.. அவனோ “இங்க என்ற மகிழ் நீ” என அவளைக் கடித்தான்.
அவளை முறைத்து ரகுவிடம் அனைத்தையும் சுருக்கமாகச் சொல்ல.. ரகு “அடப்பாவி.. அப்ப அவன் மருமகனை அவன்தான் கொன்னானா.. என் வீட்ல இருக்க நாய்க்கு என்ன கேடுன்னு இப்படி புத்தி கெட்டு அலையுது.. எங்க அக்காக்கு இப்படி ஒரு புள்ளையா.. அந்தப் பொண்ணு அழுதது இன்னும் எனக்கு நினைப்பு இருக்கு” என ஆற்றாமையாகப் புலம்பினான்.
ஸ்பாட்டோ “அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லைங்க.. நீங்க உங்க பொண்ணைக் கூட்டிட்டு கிளம்புங்க இங்க இருந்து” என்றான்.. ரகு அவளைப் பார்க்க.. அவளோ நான் நந்தாவைப் பார்த்தே ஆவேன் என அழிச்சாட்டியம் செய்தாள்.
மகிழுடன் ஸ்பாட் வழக்காட சரியாக நந்தாவும் முகிலும் வந்து சேர்ந்தனர்.. ஏற்கனவே இருக்கும் டென்சனில் மகிழை இங்கு கண்டதும் அவனுக்கு சத்தியமாக கோவத்தை எப்படி அடக்குவது என்றே தெரியவில்லை.
“ஏன்டி அறிவிருக்கா உனக்கு.. இந்த நேரத்தில இங்க என்ன பண்ற” என அடிக்கவே வந்துவிட்டான்.. ரகுவை முறைத்துப் பார்த்தவன் “யோவ்.. ஏன்யா அப்பனும் மகளும் இப்படிப் படுத்தறிங்க” என சலித்துக் கொண்டான்.
முகில் “கால்ல செருப்பு கூட இல்லாம.. இப்படி வர என்ன அவசியம்.. இருக்கற இம்சையில நீ வேறையா.. வீட்ல தேடுவாங்களே என்ன செய்ய.. ஆமா நீ எப்படி இதை மோப்பம் பிடிச்ச” என அவன் பங்குக்கு காய்ச்ச.. நந்தாவின் மொபைலைக் காட்டினாள்.
ஸ்பாட் தயங்கியபடி தான் ஃபோன் செய்ததைக் கூற.. தலையிலேயே அடித்துக் கொண்டான்.. “எல்லாம் தப்புப் தப்பாவே நடக்குது.. என்னோட பக்கத்து டிவிஷன் இன்ஸ்பெக்டர் ஃப்ரெண்ட் வந்த ஜீப் பஞ்சர்.. அவங்க அதை மாத்தி வர கொஞ்சம் லேட் ஆகும்.. இங்க எதையாவது பண்ணி தடுக்கலாம்னு வந்தா.. வினை முன்னாடியே நிக்குது” என பொறும
எல்லாரும் அவளைத் திட்ட கோவம் கொண்டவள் “எனக்கு உன்னைப் பாக்கனும் போல இருந்துச்சு வந்தேன்” என்றான்.. அவனைப் பார்க்கும் வரை தான் அவள் பயம் எல்லாம்.. அவனை முழுமையாகக் கண்ட பிறகு.. மன நிம்மதியில் நன்றாகவே பேச்சு வந்தது.
“பேசாதடி.. உனக்கு லவ் நல்ல நேரம் பாத்து வந்துச்சு போ.. எந்த நேரத்துல இவன் சுந்தர் சி மூவி க்ளைமேக்ஸ்னு சொன்னானோ.. அதான் இனி நடக்கப் போகுது.. எப்படியும் எங்கப்பத்தா உன்னைக் காணாம உன் பாட்டிக்கு ஃபோன் பண்ணும்.. இனி எல்லாரும் இங்க வருவாங்க.. உன்னை எல்லாம்” என அவள் தலையில் கொட்டினான்.
மகிழைப் பார்த்ததுமே அவன் மனவுளைச்சல் பெருமளவு குறைந்திருந்தது.. அதற்குள் கரட்டின் மீது சத்தம் கேட்க.. ஸ்பாட்டைத் தவிர மற்ற அனைவரும் கோவிலுக்குச் செல்ல.. மகிழும் அடம்பிடித்து அவர்களுடன் சென்றாள்.
‘புள்ளையைப் பெக்கச் சொன்னா.. தொல்லையைப் பெத்து தலையில கட்டிட்டானுங்க’ என புலம்பியபடியே நந்தா சென்றான்.
பௌர்ணமி வெளிச்சத்தில் கோவில் தகதகத்துக் கொண்டிருக்க.. கர்ப்பகிரகம் முன்னே மட்டும் இரண்டு ட்யூப்லைட்கள் வெளிச்சத்தை விசிறிக் கொண்டிருக்க.. அந்த இடமே அத்தனை ஏகாந்தமாக இருந்தது.
ஆட்கள் அங்குமிங்கும் அலைந்தபடி இருக்க.. நால்வரும் பதுங்கிப் பதுங்கிச் சென்றனர்.. இவர்கள் மறைந்து கொள்ளவே கட்டப்பட்டது போல விநாயகர் சன்னிதி ஒன்று முன்னால் இருக்க.. அதன் சுவற்றை ஒற்றி நால்வரும் வரிசையாக நின்று விநாயகர் தம்பி பெயரை வைத்தவன் என்ன அட்டகாசம் செய்கிறான் என எட்டிப் பார்த்தனர்.
நந்தா, அவன் பின் மகிழ், அவளைத் தொடர்ந்து முகில், ரகு நிற்க.. நந்தாவின் தோளைச் சுரண்டிய மகிழ் “மாமா ஏன் இப்படி பீம்பாய் மாதிரி நீள அகலமா வளந்துருக்க.. எனக்கு ஒன்னுமே தெரியலை” என உரைக்க.. அவளைத் திரும்பி நந்தா கொட்டுவதற்குள்.. பின்னிருந்து முகில் கொட்டியிருந்தான்.
“ஷ்.. ஆஆஆ எருமை மாடே” என அவனைத் திட்டித் திரும்ப.. நந்தா அவளை முறைத்தபடி “இங்க என்ன வித்தையாடி காட்றாங்க.. சும்மா இரேன்டி” என கிட்டத்தட்ட கெஞ்சி.. வேறுவழியின்றி அவளை முன்விட்டு பின் நின்றான்.
அங்கே.. அந்த அனு “அப்பா.. என் புருஷன் செத்து இருபது நாள்ல இன்னொரு கல்யாணமா.. என்னை விட்ருங்கப்பா.. நான் எங்கேயாவது போய்டறேன்.. என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியாது” அழுது கெஞ்சிக் கொண்டிருக்க.. அங்கிருந்த மனித மிருகங்கள் யாரும் அதை பொருட்டாகவே எண்ணாமல் இருக்க.. அவள் மீண்டும் ஏதோ கூற.. அந்த அறிவழகன் பளாரென ஓங்கி அறைந்தார் அந்தப் பெண்ணை.
ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க.. முத்துக்குமரன் மாலையுடன் மனையில் அமர்ந்திருந்தான்.. உட்காரவே மாட்டேன் என அடம்பிடித்த அனுவை மீண்டும் இரண்டு அறை கொடுத்து இழுத்து மணவறையில் அமர வைக்க.. அவள் சற்றே விசும்பியபடி அம்மா அவளுக்கு மாலையிட்டு.. தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டார்.
மூவரையும் திரும்பி முறைத்த மகிழ் “என்ன தாலி கட்ற மொமன்ட்க்கு வெய்ட்டிங்கா.. யோவ்.. போங்க” என மெல்லிய குரலில் விரட்ட.. அவளை முறைத்து மூவரும் செல்ல நந்தா அப்போதும் “ஸ்டே ஹியர்” என அடிக்குரலில் எச்சரித்து நகர்ந்தான்.
தாலி கட்டும் சடங்கு நெருங்க.. அவர்கள் ஆட்கள் அனைவரும் மனையைச் சுற்றி நிற்க.. மூவரும் வாகாக வெளிச்சம் குறைந்த ஒரு தூணின் பின் நின்று பொறுமையாக நடப்பதைக் கவனித்தனர்.
ஐயர் தாலி எடுத்து குமரனின் கையில் கொடுக்க.. அனுவோ கண்களை இறுக மூடி “ப்ளீஸ்.. வேண்டாம்.. என்னை விட்ருங்க” என மறுத்து அழ.. அவள் கழுத்தை நோக்கி அவன் கரங்கள் நீளும் வேளை.. முகில் “அட.. மாப்பிள்ளை மூஞ்சியே தெரியலை.. கொஞ்சம் திரும்புப்பா” என மொபைலைக் கையில் வைத்தபடி சத்தமாக உரைத்தான்.
பேச்சுக்குரலில் திரும்பியவர்கள் இவர்களைக் கண்டு அதிர்ந்து போக.. நந்தா குமரனிடம் “என்ன மச்சான்.. சொந்த பந்தம்னு எதுக்கு இருக்கோம்.. கூப்பிடாம கல்யாணம் பண்ற.. என்னை விடு.. உன் தாய் மாமாவைக் கூப்பிடலை போல.. சரிவிடு.. பாத்தியா நீயே கூப்பிடலைனாலும் முறை செய்யத் தான் வந்திருக்கோம்” என நக்கலாக கூறியபடியே அவர்களை நெருங்கினான்.
அவர்களே இன்று மதியம் முடிவு செய்து இரவு திருமணம் செய்கின்றனர்.. அதற்குள் எப்படி விஷயம் கசிந்தது என ஒரு கணம் அனைவருமே யோசிக்க.. அறிவழகன் “நீங்க எல்லாம் இங்க எப்படி டா” என நந்தாவையும ரகுவையும் அடையாளம் கண்டு கூற..
நந்தா எரிச்சலாக “நீ வாய் பேசாதே.. ஜாதி, கௌரவம், புண்ணாக்குன்னு இரண்டு உயிரை பலி வாங்கியிருக்க.. பெத்த பொண்ணுக்கு ஊருக்குத் தெரியாம கல்யாணம்.. இது அப்பன் பண்ற வேலையாடா.. இதுக்குப் பேர் என்ன” என கேவலமாகத் திட்டத் துவங்கினான்.
ரகு எதைப் பற்றியும் யோசிக்காமல் “உனக்கு என்னடா கேடுன்னு இப்படி ஒரு காரியம் பண்ண வந்திருக்க.. உன் அம்மத்தா பேச்சு கேட்டு எங்கிட்ட இருந்து ஒதுங்கினனு நானும் உன்னைக் கண்டுக்காம விட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்” என அவன் கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டி எறிந்தான்.
“ஏன்டா.. யாரோ ஒருத்தங்க பெத்த குழந்தையைக் கூட சொந்த தம்பியா நினைச்ச என் அக்கா ரத்தம் உனக்குள்ள கொஞ்சம் கூட இல்லையா.. ஒரு பொண்ணு புருஷனைக் கொன்னு.. அவளை அடைய நினைக்கிற.. நீ எல்லாம் என்ன ஜென்மம்டா” என பளார் பளாரென அறைந்தான்.
கோவத்தில் அவனைத் தள்ளிய குமரன் “நீ யார்டா என்னைக் கேள்வி கேட்க.. உன் சொந்தமெல்லாம் எங்கம்மாவோட முடிஞ்சுது.. நீ எனக்கு யாரோ தான்” என பலமாகப் பிடித்துக் கீழே தள்ளினான்.
“ஆமான்டா.. நாங்க தான் இவ புருஷனைக் கொன்னோம்.. அந்தப் பழியை உங்க நண்பன் ஸ்பாட் அப்பா மேல போடப் பாத்தோம்.. நான் பண்ணின டார்ச்சர்ல அவன் செத்துட்டான்.. இப்ப பின்னாடியே நீங்களும் போங்க” என்றவன்..
சுற்றி இருந்த இவர்களின் ஆட்களைக் கண்டு “ஏன்டா இவனுங்க அழகுல மெய் மறந்துட்டிங்களா.. மூனு பேரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிங்க.. விருப்பமில்லாம தங்கச்சியைக் கட்டினான்னு மூனு பேரும் சண்டைப் போட்டாங்கன்னு கேஸை முடிப்போம்.. கையை காலை உடைங்க” எனச் சொன்னான்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே அடிதடி என்றாக.. நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு சிலை போல அமர்ந்திருந்த அனுவை நெருங்கிய மகிழ்.. அவள் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி.. அவள் கன்னம் தட்டவும்.. யாரோ அவள் முடியை பலமாக இழுத்தனர்.
வலியில் கத்தியவள் திரும்பிப் பார்க்க.. குமரன் தான்.. அவள் வேதனை முகம் கண்டு இன்னும் இறுக்கிப் பிடிக்க.. மகிழின் வலி சுமந்த குரலில் நந்தா இவர்களை நோக்கி வர.. கோவில் மண்டபத்தில் இருந்து அவளை இழுத்தவாறே இறங்கியவன் “எனக்குத் தெரியும்டா.. நீங்க ஏதோ ப்ளானோட வந்திருக்கிங்க.. எனக்கு இனி நடக்கப் போறதைப் பத்திக் கவலை இல்லை.. ஆனா இவளை விடமாட்டேன்” என கத்தியவன்..
அந்த இடத்தின் ஓரத்திற்குச் சென்றான்.. கோவில் அமைந்திருப்பது சிறு குன்றின்(கரடு) மீது என்பதால்.. ஒரு பக்கம் மட்டுமே பக்தர்கள் வர வழி.. மீதி சுற்றுப்புறம் அனைத்தும் கல்லும், பாறைகளும், சீமைக் கருவேல முள்ளும் தான்.
விழுந்தால் உயிர் போக வாய்ப்பு குறைவு என்றாலும்.. பாறையில் தலை மோதவும்.. கை கால்கள் உடையவும் வாய்ப்பு இருந்தது.. மகிழை இழுத்தபடி முனைக்குச் செல்ல.. மூவருக்குமே உயிரே நின்றுவிட்டது.
நாயகன் வருவான்..