அவன் பாடியதை மெய் மறந்து கேட்டவள், அந்தப் பாடலின் வரிகளின் பொருளில் மூழ்கிப் போனாள். ஒரு பாடலிலே தன் காதலை எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டான் என்று வியந்தாள்.
அவன் பாடி முடித்த பின்னர், “நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா ஆதி ?” என்று கேட்க,
“நீ ஒரிஜினல் வெர்ஷன் கேட்கலமா, அதான் இப்படி சொல்ற” என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஆதி.
“எனக்கு இதுதான் புடிச்சிருக்கு” என்று புன்னகையுடன் கூறினாள் நந்தினி.
அவன் அவளை மையலுடன் பார்க்க, நந்தினி, “நாம இப்ப கின்னஸ் ரெக்கார்ட்ல போடுற மாதிரி ஒரு சாதனை படைத்திருக்கிறோம் தெரியுமா ?” என்று கேட்க,
ஆதி, “சாதனையா ?” என்று திருப்பி கேட்க,
“ஆமாம், நாம தான விண்வெளியில் காதலைச் சொன்ன முதல் ஜோடி” என்றாள் நந்தினி.
“ஹாஹா… ஆனா, அதுக்கு நாம் முதலில் பூமிக்கு திரும்பனுமே ?” என்று வம்பிழுக்கும் நோக்கத்துடன் ஆதி கேட்க, அவள் முகம் சட்டென்று மாறியது.
“நாம பூமிக்கு திரும்பி போகலைனா, எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இருக்காது, ஆதி. ஆனால், செலினா ஏன் இன்னும் எனக்கு எந்த சக்தியையும் கொடுக்கல ?முன்னாடி மாதிரி இப்போதெல்லாம் கனவுல கூட எந்த நினைவுகளும் வர்றதில்ல” என்று வருத்தத்துடன் கூறியவள்,
“ஒருவேளை அதற்கு நான் தகுதியானவ இல்லனு நினைக்கிறாரோ ? அதுவும் ஒரு வகையில் உண்மைதானே. இதுவரை பேர் செல்லும் அளவுக்கு நான் எந்த சக்தியையும் பயன்படுத்துனது இல்லயே” என்று கழிவிரக்கத்துடன் முடித்தாள்.
ஆதி, “ சனா, இனிமேல் இதைப் பற்றி நாம் பேசுவது இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கணும். நீதான் இதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். அந்த ப்ரொமேத்தியஸால் கூட உன்னை அழிக்க முடியவில்லை, பூமில அத்தனை வருஷம் நீ கஷ்டப்பட்டாலும், நீ அதை கடந்து ஜெயிச்சும் காட்டிட்ட. இப்போ தான் நமக்கு அனைத்து உண்மைகளையும் கூற பொசய்டன் வந்துட்டாரே. அதனால், செலினா உனக்கு எதையும் செல்லாம இருக்கலாம் இல்லையா ? உனக்கு கிடைக்க வேண்டிய அனைத்துச் சக்திகளும் உனக்குச் சரியான நேரத்தில் கிடைக்கும்” என்றான்.
அவன் கூற்றில் இருந்த உண்மை அவளைத் தெளிவுறச் செய்ய, “தாங்க்ஸ், ஆது ! சரி நாளை நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. இப்பொழுது ரெஸ்ட் எடுக்க போகலாமா?” என்று கேட்க, பின் இருவரும் தத்தமது அறைகளுக்குச் சென்றனர்.
சூரியன், சந்திரன் என்று எதுவும் இல்லாத அந்த கருப்பு கண்டத்தில் அவர்களின் பயணம் தொடர, அவர்களுக்கு இரவுக்கும் பகலுக்கும் இடையே வேறுபாடு தெரியவில்லை.
நேரம் என்பதனை அறிவதற்கும் அவர்களுக்கு வழி இல்லாமல் இருக்க, கிடைத்த நேரத்தில் ஓய்வெடுக்கப் பழகிக் கொண்டனர்.
முக்கால்வாசி நேரம் அவர்களது உடலில் இருக்கும் ‘Biological clock’என்று அழைக்கப்படும் Pineal Gland தான், அவர்களது காலை இரவு பேதத்தை அறிவுறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதுவும் கூடிய விரைவில் தனது போக்கை மாற்றிக் கொள்ளும்.
அடுத்த தினம் என்று அவர்களாகவே யூகித்துக் கொண்டு, அந்த விண்வெளி வாகனத்தின் மையப்பகுதிக்கு வர, வழக்கம் போல அங்கு பொசய்டன் முன்னரே அமர்ந்திருந்தார்.
நந்தினியைப் பார்த்தவுடன், ஆராயும் பார்வையுடன், “இப்பொழுது உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை அல்லவா, நந்தினி ?” என்று கேட்டார்.
“இல்லை பொசய்டன், நாம் அடுத்த நினைவுக்குள் போகலாம்” என்று புன்னகையுடன் கூறினாள் நந்தினி.
அவளது முகத்தை ஆராய்ந்த பொசய்டன், அதில் உண்மை இருப்பதை உணர்ந்து, “சரி உங்கள் மூவருக்கும் டைட்டனைப் பற்றி ஓரளவு இப்பொழுது நன்றாகப் புரிந்திருக்கும். ஆனால், இதுவரை கண்டது எல்லாம் அவனது முழு சுயரூபம் இல்லை. இனி வருவது கயா கிரகத்தின் அழிவு” என்று கூறியவர், கைகளை நீட்ட மற்ற மூவரும் அவற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
“இந்த முறை எப்படியாவது அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.
******
மெல்ல மெல்ல நினைவுகள் மறைய, நதிப் பிரவாகம் போல ஓடிக்கொண்டு இருந்த அந்த நினைவு அலையில் நீந்தினர். அந்த நதியில் தொடர்ந்து நீந்திக் கொண்டிருந்த மூவருக்கும் திடீரென்று தூரத்தில் வானம் மட்டுமே தெரிவது போல இருக்க,
நந்தினி, “ஆதி ! ஆர்யா ! இது ஒரு நீர்வீழ்ச்சி மாதிரி இருக்கு” என்று கத்த,
பக்கத்தில் பொசய்டன் இல்லாததை கண்ட ஆரியன், “ ஆஆஆ” என்று அலறினான்.
ஆதி, “இரண்டு பேரும் கொஞ்சம் கிட்ட வாங்க” என்று கூறியவன், ஒருவர் கையை மற்ற இருவரும் பிடித்துக் கொள்ள, அலைகளின் வேகத்தால் வட்டமடித்துக் கொண்டே நகர்ந்தனர்.
நீர்வீழ்ச்சியை நெருங்க நெருங்க, அவர்கள் வேகமாக இழுக்கப்பட்டனர். முடிவில் மூவரும், “ஆஹ்ஹ்ஹ்” என்று கத்திக் கொண்டே குதிக்க குளிர்ந்த நீரில் மூவரும் விழுந்தனர்.
அந்தச் சம்பவத்திலிருந்து அவர்கள் ஒரு நிலைக்கு வரும் முன்னரே, மற்றொரு சுழலில் மாட்டிக்கொண்டனர். எப்படியும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று அறிந்த மூவரும், அதனோடு போராடாமல் அதனுடன் சென்றனர். ஆனால், எவ்வளவு நேரம் நீருக்கு அடியில் பயணித்தும், அவர்களுக்கு மூச்சு திணறவில்லை.
இறுதியில் அவர்கள் அந்த நீர் நிலையின் அடியில் வந்து விடப்பட, எதிரே ஒரு பெரிய கோட்டை தென்பட்டது.
“இவ்வளவு ஆழத்தில் இப்படி ஒரு கம்பீரமான கோட்டையா ?” என்று மூவரும் வியக்க, அதற்குள் அவர்கள் அந்தக் கோட்டைக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். உள்ளே அதனுடைய அலங்காரங்களை ரசிக்க முடியாமல், வேகமாக அந்தக் கோட்டையின் நடுவே இருந்த ஒரு மயானத்திற்கு வந்தனர்.
அங்கே அனைத்துச் அரசர்களும் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். அந்த இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட மூவரும் அங்கு நடந்துக் கொணடிருந்த வேலையைக் கண்டு திகைத்தனர். இதுவரை தங்கள் கிரகத்தில், ஒரு தொன்மமாக அறியப்பட்ட ஒரு விஷயம், இப்போது தங்களது கண்ணுக்கு முன்னால் உருவாகி கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
நிகேடர், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, ஏழு பெரிய டிராகன்களை உருவாக்கிக் கொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து ஆர்கஸ், அவற்றுக்குத் தனது பறக்கும் சக்தியை உபயோகப்படுத்தி அதன் இறக்கைகளை அவை பறக்கும் விதத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருந்தார். க்ரோனன் தனது சக்தியைப் பயன்படுத்தி, அவற்றிற்குத் தேவையான நினைவு அலைகளைக் கொடுத்து, அவர்கள் ஏழு பேரும் ஏதோ ஒரு கட்டளையை மனதில் நினைத்தாலே, அதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல், அவை செயல்படும் விதமாகச் செய்து கொண்டிருந்தார்.
எரேகனும், மெட்லடனும், ஹெஸ்பரஸும் அவர்களுக்கு தங்களது சக்திகளைப் பயன்படுத்தி உதவி செய்ய, அங்கு வல்கன் மட்டும் தனியாக வலிமை மிகுந்த கவசங்களையும் ஆயுதங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் இருந்த இறுக்கம் அந்த ஆயுதங்களை விடக் கடுமையாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து, அவருக்கு உதவ வந்த ஹெஸ்பரஸ், “சிறிது ஓய்வு எடுத்துக்கொள், வல்கன். அந்த டைட்டனை விட நாம் அனைத்து விதத்திலும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றோம். மேலும் நம் கயா கிரக வீரர்கள் பலரும் வெலாரிஸ் கோட்டையை விட்டு வெளியேறி நம்முடன் இணைந்து கொண்டனர். நம் அனைவரையும் அவன் தனி ஒருவனாக என்ன செய்து விட முடியும் ? நீ தான் மிகவும் முன்னெச்சரிக்கையாக, இந்தப் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு கோட்டையைக் கட்டி, அதற்குள் அவன் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு என்னென்னமோ செய்து வைத்திருக்கிறாயே” என்றான்.
வல்கன், “இல்லை ஹெஸ்பரஸ், என் மனம் ஏனோ அமைதி இன்றி தவிக்கின்றது. ஏதோ அவனே நம்மை பின் தொடர்ந்து நம்மை வேவு பார்ப்பது போல் இருக்கிறது. அதனால் தான், இந்தக் கோட்டையை உருவாக்கினேன். இருப்பினும் அவன் ஏதோ பெரிய திட்டத்தோடு தான், இப்பொழுது இருப்பான். அவன் இந்தக் காரியத்தை அவசரப்பட்டு முட்டாள்தனமாக செய்யவில்லை.
பல வருடங்களாக அவன் நம்முடனே இருந்து பொறுமையாக திட்டம் தீட்டி இருக்கிறான். நம் அனைவரையும் ஆராய்ந்ததில் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் எப்படிக் கையாள்வோம் என்று அவனுக்கு அனைத்து விபரங்களும் தெரியும். ஏன் இப்பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று கூட அவன் அறிந்து கொண்டிருக்கலாம். பார்ப்போம், இந்த டிராகன்கள் இந்தப் போரில் நமக்கு வெற்றியைப் பெற்று தரும் என்று நம்புவோம்” என்று கூறினார் .
“கவலைப் படாதே, வல்கன். நிச்சயம் வெற்றி நம் பக்கம் தான்” என்று ஹெஸ்பரஸ் கூறி முடிப்பதற்குள், பெரிய உறுமல் சத்தம் அந்தக் கோட்டையையே அதிர வைக்க, அனைத்து டிராகன்களும் நெருப்பு ஓடையை உமிழ்ந்து கொண்டிருந்தன.
அவற்றின் கண்கள் அனைத்தும் தங்க நிறத்தில் ஜொலிக்க, கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. நிகேடர் மற்றும் ஹெஸ்பரஸின் படைப்பாற்றல், வல்கனுடைய வலிமை, மெட்லடனுடைய ஹீலிங் சக்தி, எரேகனுடைய மாயமாகும் தன்மை. ஆர்கஸுடைய பறக்கும் சக்தி, க்ரோனனுடைய மனதைக் கட்டுப்படுத்தும் சக்தி என அனைத்தும் கலந்த ஒரு உருவமாக, ஏழு டிராகன்கள் அருகருகில் நின்றன.
மற்ற ஐந்து அரசர்களோடு அவர்களும் இணைந்து கொள்ள, டிராகன்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.
அவற்றை நம் மூவர் கூட்டணி வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு அரசர்களாக சென்று தத்தமது டிராகன்களை தேர்வு செய்து கொண்டு, அதில் ஏறி அமர்ந்தனர்.
அவர்கள் அமர்ந்ததை உணர்ந்து, அவை தங்கள் இறக்கைகளை விரிக்க, அதனால் சில சுழல்கள் உருவாகின. பின் அவை ஒவ்வொன்றாக பறக்க தொடங்க அடுத்தடுத்து வந்த டிராகன்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு வட்ட வடிவிலான பாதையில் பயணிக்க தொடங்கின சிறிது சிறிதாக அவை வேகமெடுக்கத் தொடங்க, தண்ணீர் அவற்றோடு சேர்ந்து சுழல ஆரம்பித்தது.
இந்த முறை உருவான சுழல் மிகவும் பெரியதாக இருக்க, அதிலிருந்து தப்பிக்க மூவரும் அந்தக் கோட்டையில் இருந்த தூண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். அப்படியும் அவர்களால் சுழலின் விசையில் இருந்து தப்பிக்க முடியாமல் அதனுள்ளேயே இழுக்கப்பட்டனர்.
“நம் நினைவுகளும் ஒரு சுழலைப் போல்தான். அதிகமாக நாம் யோசிக்கும் பொழுது அதனுள் நாமே மூழ்கி விடுவோம்” என்று எங்கேயோ படித்தது நந்தினிக்கு நினைவு வர, இப்பொழுது உண்மையாகவே அவர்கள் மூவரும் நினைவுகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தனர்.
******
காட்சி மாறியது. இந்த முறை மூவரும் தங்களது எடையை உணரமுடியாமல், இலை போலக் காற்றில் மிதந்து கொண்டிருந்தனர். சிறிது சிறிதாக சுயநினைவு வர, அவர்கள் மெல்ல கண் திறந்து பார்க்க, ஒரு நிமிடம் அவர்கள் மூவரின் உடலும் நடுங்கியது. தரையிலிருந்து அவ்வளவு உயரத்தில் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து மயக்கம் போடாத குறைதான்.
வெலாரிஸ் கோட்டையை நோக்கி ஏழு டிராகன்களும் தங்கள் அரசர்களோடு, நெருப்பைச் சுவாசித்துக் கொண்டு விண்ணில் வேகமாக வர, அதைக் கண்ட கயா கிரக மக்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர்.
கோட்டையை நெருங்க நெருங்க, டிராகன்கள் அனைத்தும் V வடிவத்தில் பறக்கத் தொடங்க, வல்கன் முன்னிலையில் பறந்து கொண்டிருந்தார். அந்த காட்சியைப் பார்க்கும் போது மூவருக்கும் அப்படியே மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.
மக்கள் அங்கிருப்பதைக் கண்டு வல்கனுக்கு, “உண்மையிலேயே நாங்கள் வருவது டைட்டனுக்கு தெரியாதா ? அல்லது இவர்களை இங்கு வைத்திருப்பதும் அவனது திட்டமாக இருக்குமோ” என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் எழுவரையும் பின்பற்றி வந்த வீரர்களிடம், முதலில் மக்களை அப்புறப்படுத்துமாறு வல்கன் கட்டளையிட, அதை முடித்தவுடன், வீரர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
ஒரு பெரிய படையே வெலாரிஸ் கோட்டையை நோக்கிப் படையெடுத்து வர, இவை அனைத்தையும் கோட்டையின் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த டைட்டன், “வா, வல்கன் ! வா, பெருங்கடல் கோட்டை ஒன்று உருவாக்கி என்னை உள்ளே நுழைய விடாமல் செய்து மற்றொரு முறை உன்னுடைய புத்திசாலித்தனத்தை நிரூபிக்க முயற்சி செய்தாய். ஆனால், அதனால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. உங்களுடைய மரணத்தை நோக்கி நீங்கள் வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது, ஒரு கணம் உங்கள் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. அரசர்களே ! இந்த டைட்டனை எதிர்த்த யாரும் தண்டனை பெறாமல் இருக்க மாட்டார்கள்” என்று கேலியாகக் கூறிக் கொண்டான்.
தனது பக்கத்தில் நின்றிருந்த வீரனிடம், “ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டு எனது ஆணைக்காக காத்திருங்கள் ! நான் உத்தரவிட்டவுடன் சரியாக திட்டத்தை நிறைவேற்றிவிடு” என்று உத்தரவிட்டான் டைட்டன்.
அதைக் கேட்டு விட்டு, அந்த வீரன் அங்கிருந்து செல்ல, டைட்டன் தனது கவனிக்கும் வேலையைத் தொடர்ந்தான். இங்கே மூவரும் அடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்று நடுக்கத்துடன் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்க, ஏழு அரசர்களும் கோட்டைக்கு அண்மையில் வந்தவுடன், தங்களது படை வீரர்களுக்கு மேலே வட்டமடித்து விட்டு, இரண்டு அணிகளாகப் பிரிந்தனர்.
ஓர் அணியில் இருந்த மூன்று அரசர்களும் மூன்று திசையில் இருந்து அந்தக் கோட்டையை நெருங்க, மற்ற இருவர் நேராக விண்ணில் உயரமாகப் பறந்து சென்று, கோட்டையின் மேற்பகுதியில் இருந்து தாக்க முயற்சித்தனர்.
இதில் வல்கனும் க்ரோனனும் மட்டும் சிறிது தூரத்தில் பின்தங்கி விட்டனர்.
“டைட்டனுடைய யுத்த வியூகம் பற்றி துளியும் தெரியாமல், அவனை நோக்கிப் போர் புரிகிறோமே !” என்று வல்கனுக்கு மனதில் இருந்து வந்த நெருடல் இப்பொழுது பெரிதாக வளர்ந்து நின்றது.
“இதுவரைக்கும் நம்மை டைட்டன் எதுவும் செய்யாமல் இருக்கின்றானே” என்று மனதிற்குள் நினைக்கும் பொழுதே, வீரர்கள் கோட்டையை முற்றுகையிட, அப்பொழுது தான் வல்கனுக்குத் தோன்றியது, “டைட்டன் நம்மை அவனிடம் நெருங்க அனுமதிக்கின்றான் என்றால், அவனுக்கு நாங்கள் தொலைவில் இருப்பதைவிட அருகில் இருப்பது தான் லாபம். நாங்கள் கோட்டையை நெருங்க வேண்டும் என்பது தான் அவன் திட்டமே.
அவன் நினைத்திருந்தால் இவ்வளவு தூரம் வரும் வரை ஆயுதங்கள் இல்லாமல் ஒரு இடம் கூட இருந்திருக்காது. அப்படி என்றால், நாமாகவே அவனது வலையில் சிக்கி கொண்டோம்” என்று ஒளியினும் வேகமாக மனதில் தோன்ற,
க்ரோனனிடம், “மற்ற அரசர்களின் டிராகன்களை கட்டுப்படுத்தி இந்த இடத்திற்கு வருமாறு செய். நான் சென்று வீரர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன்” என்று கூறிவிட்டு வேகமாக முன்னேறினார் வல்கன்.
கோட்டைக்குள் டைட்டன், “தாக்குதலை ஆரம்பியுங்கள் !” என்று கத்தியவுடன், அனைத்து வீரர்களும் துரிதமாக செயல்பட, திடீரென்று அங்கே கண்ணைக் கூசும் ஒரு பேரொளி ஏற்பட்டது. சில நிமிடங்கள் அந்த இடத்தில் என்ன ஏற்பட்டது என்றே புரியவில்லை.
அந்த கோட்டையைச் சுற்றி ஒரே புழுதி மயமாக இருக்க, அந்த இடத்தில் என்ன நடக்கின்றது என்று கண்களுக்குத் தெரியவில்லை.
அடுத்த கட்டளைக்காக டைட்டன் சைகை செய்ததும், வீரர்கள் கோட்டையின் கதவுகளைத் திறந்துவிட, உள்ளேயிருந்து எண்ணற்ற மிருகங்கள் தலையில் ஏதோ கருவி பொருத்தப்பட்டதோடு ஓடி வந்தன.
வல்கனுக்கு சிறிது சிறிதாகப் புரியத் தொடங்கியது.
“அவர்கள் பக்கத்தில் நெருங்கியவுடன் டைட்டன் ஒரு பெரிய சக்தி மண்டலத்தைக் கோட்டையைச் சுற்றி எரேகனுடைய உதவியுடன் யார் கண்ணுக்கும் தெரியாத வகையில் உருவாக்கி, அதை வெடிக்க வைத்துள்ளான். இந்த விலங்குகளிடம் ஏதோ கருவியைக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கின்றான்” என்று தோன்ற,
மனதுக்குள், “க்ரோனன் ! உடனடியாக அனைத்து அரசர்களையும், பாதுகாப்பாகப் பெருங்கடல் கோட்டைக்கு அழைத்து சென்று விடு. நான் அதுவரை டைட்டனை சமாளித்து மற்ற வீரர்களைக் காப்பாற்றுகிறேன்” என்று நினைத்தவர், வேகமாகத் தனது டிராகனை விண்ணில் செலுத்த தொடங்கினார்.
முதலில் அதனை கவனிக்காத டைட்டன், வல்கன் எதை நோக்கி செல்கிறான் என்று தெரிந்ததும், “இல்லை !” என்று கோபமாகக் கத்திவிட்டு, தனது கவசத்தை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, விண்ணில் பறக்கத் தொடங்கினான்.
இருவரும் கயா கிரகத்தின் நிலவை நோக்கி வேகவேகமாகச் செல்ல இறுதியில், வல்கன் சோல் பாக்ஸை நெருங்கி இருந்தார். அதனைத் தாக்குவதற்காக ஆயுதத்தைத் தயாராக்கவும், டைட்டன், “வல்கன் சோல் பாக்ஸை எதுவும் செய்யாதே ! உன்னைக் கடுமையாக எச்சரிக்கிறேன் !” என்று கூறிக்கொண்டே, வல்கனைத் தாக்க முயற்சி செய்ய, அதற்குள் வல்கன் சோல் பாக்ஸை தாக்கி அதை வெடிக்கச் செய்திருந்தார்.
ஆனால் அது பழைய நிலையிலேயே இருக்க, சில பாகங்கள் மட்டும் சுக்குநூறாக நொறுங்கியது. அதனால், அதில் இருந்து வெளிப்பட்ட சக்தி தடைப்பட்டது.
டைட்டன் அதை வெடிக்க விடாமலிருக்கத் தனது சக்தியைப் பயன்படுத்த தொடங்க, வல்கன் கயா கிரகத்திற்குத் திரும்பத் தொடங்கினார்.
“எப்படியும் இவனை இப்பொழுது அழிக்க முடியாது. அந்த முயற்சியில் தனது சக்தியை வீண் படுத்தாமல் கீழே இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம்” என்று தோன்றியது அவருக்கு.
“இதற்கான பலனை நீ நிச்சயமாக அனுபவிப்பாய், வல்கன்” என்ற டைட்டனின் குரல் அவரைப் பின் தொடர்ந்தது.
தரையைத் தொடுவதற்குள் அங்கு நிலைமை சீராகி விட்டது. சோல் பாக்ஸில் இருந்து சக்தியைப் பெற்று இயங்கக்கூடிய கருவிகளைத் தான் டைட்டன் விலங்குகளுக்கு பொருத்தி இருந்தான் போலும். சோல் பாக்ஸ் சேதம் அடைந்த பிறகு, விலங்குகள் பழைய நிலைக்குத் திரும்பின.
அங்கு இருந்த வீரர்கள் அனைவரையும் தன்னுடன் பெருங்கடல் கோட்டைக்கு அழைத்துச் சென்றார் வல்கன்.
நந்தினி, ஆதித்யன் மற்றும் ஆரியன் அவரைப் பின் தொடர்ந்து பெருங்கடலுக்குள் நுழைந்து கோட்டைக்குள் சென்றனர். அங்கு காயம் ஏற்படாத வீரர்கள், மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள, வல்கன் வேகமாகச் அரசர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றார்.
அந்த மயானத்தில் ஒரே ஒரு டிராகன் மட்டும் சுற்றிக்கொண்டிருக்க, வல்கனுடைய டிராகனும் அதனுடன் சேர்ந்து கொண்டது. அதைப் பார்த்தவுடன் வல்கன் தன் மேலேயே கோபப்பட்டுக் கொண்டார்.
டைட்டனைப் பற்றி தெரிந்தும் அவர்களை முன்னே செல்ல சொல்லித் தான் பெரிய தவறு செய்து விட்டதாக வருந்தினார்.
எண்ணம் எங்கெங்கோ சுற்றினாலும், கால்கள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்ய, மற்ற அரசர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார் வல்கன்.
மெட்லடனும், க்ரோனனும் மற்றவர்களுக்கு வைத்தியம் செய்து உதவிக் கொண்டிருக்க, மற்ற நான்கு அரசர்களும் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் கண்கள் தானாகவே கலங்க, வல்கன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மெட்லடனிடம் சென்றார்.
“மெட்லடன், மற்ற அனைவரும் எப்படி இருக்கிறார்கள் ? காயம் ஆழமாக உள்ளதா ?” என்று கேட்க, அவரைக் கண்டதும், “வல்கன் நீ உயிருடன் தான் இருக்கின்றாயா ? உனக்கு எதுவும் ஆகவில்லையே ? நீ க்ரோனனிடம் டைட்டனை நோக்கிச் செல்வதாகக் கூறியவுடன், நான் பயந்துவிட்டேன். இவர்களுக்குப் பெரிய அடி ஏற்படவில்லை, ஓரிரு நாட்களில் எழுந்து நடமாடத் தொடங்கி விடுவார்கள்” என்றார்.
க்ரோனன், “என்னை மன்னித்துவிடு, வல்கன். என்னால் எவ்வளவு முயன்றும் மெட்லடனை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. மற்ற நண்பர்கள் அனைவரும் கோட்டைக்கு வெகு சமீபத்தில் சென்று விட்டனர். என்னுடையதைத் தவிர அனைத்து டிராகன்களும் இறந்து விட்டன. எல்லாம் ஒரு நொடியில் முடிந்து விட்டது” என்று க்ரோனன் வருத்தத்துடன் கூற,
“இல்லை, தவறு என்மேல் தான் க்ரோனன். உங்கள் அனைவரையும் மரணத்தின் வாயிலுக்கு என்னுடைய முட்டாள்தனத்தால் தான் அழைத்துச் சென்றுள்ளேன். ஒரு தலைவனாக நான் தான் முன்னால் நின்றிருக்க வேண்டும். இனி நிச்சயம் அந்த டைட்டனை விட மாட்டேன் “ என்று ஆவேசத்துடன் சபதம் எடுத்தார் வல்கன்.
“இதில் உன் தவறு மட்டுமில்லை, வல்கன். நாங்களும் தான் அவனை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்” என்று மற்ற அனைவரும் வருத்தத்துடன் கூறினர்.
******
சுற்றியிருந்த காட்சிகள் வெகு வேகமாக உடைந்து விழ, சிறிது நேரம் சுற்றிலும் இருட்டாக இருந்தது. அந்த இருட்டில் ஒரே ஒரு தங்க நிற ஒளியை வீசும் மலர் பூத்துச் சிரிக்கத் தொடங்கியது.
நந்தினியின் இதழ்கள் தன்னை அறியாமலே, “செலினா” என்று உச்சரிக்க, பல நாட்கள் அவளுக்கு இருந்த குழப்பம் நீங்கியது.
அவள் அந்த மலரை நெருங்குவதற்குள், புதிய காட்சி தோன்றத் தொடங்கிவிட்டது. அந்த அறையில் கொடிய நிசப்தம் பரவிக் கிடக்க, ஏழு அரசர்களும் சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
ஹெஸ்பரஸ், “டைட்டன் என்னுடைய சக்திகளைக் கொண்டு நம் அனைவரிடமும் சிறிதளவு சக்தியை எடுத்துக் கொண்டு ஆயுதங்களை தயார் செய்துவிட்டான். அவனை இனி நம்மால் வெல்ல முடியாது. டைட்டன் சோல் பாக்ஸை சரி செய்து முடிக்கும் வரை தான் நமக்கு நேரம் இருக்கின்றது. துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு நாள்தான்” என்றார்.
வல்கன், “என்னால் இப்பொழுது எந்த முடிவையும் துணிந்து எடுக்க முடியவில்லை. ஒருபக்கம் நம் மக்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தினரின் வாழ்வும் இதில் அடங்கி இருக்கின்றது, மறுபக்கம் என்னுடைய அவசர முடிவுகளால் மறுபடியும் உங்களைக் காயப்படுத்தி விடுவேனோ என்று பயமாகவும் உள்ளது” என்றார்.
அவரது வேதனை மற்றவர்களுக்கும் புரிய, அமைதியாக இருந்தனர். அப்பொழுது அந்த அறையில் இருந்த மலர்கள் அனைத்தும் ஒன்றாகக் கூட செலினா உருவெடுத்தார்.
அவரைக் கண்டதும் மற்ற அரசர்கள் அனைவரும் மண்டியிட, “எழுங்கள் அரசர்களே ! இங்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்ததும், உடனே இங்குப் பயணம் செய்து வந்து விட்டேன். என்ன நடந்தது ?” என்று கேட்க, வல்கன் அனைத்தையும் கூறினார்.
அதைக் கேட்ட செலினா அதிர்ச்சி அடைந்து விட்டார். “டைட்டனா தன்னை இப்படி ஏமாற்றியது ? என்னதான் அவனை நம்பி இருந்தாலும் அவனிடம் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கக் கூடாதோ ?” என்று நினைத்து வருந்தினார்.
“இப்போது பிரச்சனை அதுமட்டுமல்ல, டைட்டன் இதுவரை பயன்படுத்தியது எல்லாம் பாதி சக்திதான். முழு சக்தியும் கன்வர்ஜென்ஸின் பொழுது தான் அவனுக்குக் கிடைக்கும்” என்றார் செலினா.
அனைவரும் அவரை, “இதற்கும் கன்வெர்ஜன்ஸுக்கும் என்ன சம்பந்தம் ?” என்பது போல புரியாமல் பார்க்க,
“நான் முன்னரே சொன்னது போல, கன்வெர்ஜன்ஸின் போது, அனைத்து கேலக்ஸிக்கு இடையிலும் ஒரு தொடர்பு உண்டாகும். அவ்வாறு இணையும் போது தான் அவனுக்கு மற்ற கேலக்ஸியில் இருக்கும் கிரகங்களில் இருந்தும் ஆத்மாக்கள் (Soul) கிடைக்கும். அதற்கு இன்னும் ஒரே நாள் தான் இருக்கின்றது. இந்த நிகழ்வு இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறைதான் நடக்கும்.
அவன் மட்டும் நாளை அந்தச் சக்திகளை அடைந்து விட்டால், அவனை யாராலும் அழிக்க முடியாது. என்னுடைய ஆத்மாவும் இந்த அண்ட சராசரம் முழுவதும் பரவிக் கிடப்பதால் என்னாலும் உங்களுக்கு நாளை உதவ முடியாது. எப்படியோ இந்த விஷயத்தை டைட்டன் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்” என்றார் செலினா.
அவர் கூறியதைக் கேட்ட அனைவரும், ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் விட்டனர்.
அவர்களுக்கே இப்படி என்றால், மூவர் கூட்டணிக்கு, சொல்லவே வேண்டாம்.
வல்கன், “அப்படியென்றால், இன்று டைட்டனை அழித்தே ஆகவேண்டும். நான் மட்டும் சென்று அவனை பார்த்துக் கொள்கிறேன். என் உயிரே போனாலும், சரி” என்று கூறி விட்டுக் கிளம்பத் தயாராக,
“மறுபடியும் சென்ற முறை செய்த தவறையே செய்யாதே, வல்கன்” என்று எச்சரித்தார் செலினா.
“மன்னித்துவிடுங்கள், செலினா. எனக்கு இப்போது வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை” என்று அவர் கூற,
“இருக்கின்றது, சென்ற முறை உங்கள் சக்திகள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிந்து இருந்ததனால், உங்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை அதை ஒன்றாகச் சேருங்கள்” என்றார் செலினா.
அதைக் கேட்டு அனைவரும் அவரைப் புரியாமல் பார்க்க, பின்னர் புரிந்ததும், க்ரோனன், “செலினா, ஆனால் எங்கள் அனைவரது சக்தியையும் சேர்த்து ஒரு தனிமனிதனாக மாற்றினால் டைட்டனை விட அவன் பெரிய பிரச்சினை அல்லவா ?” என்று கேட்டார்.
“இப்பொழுது நமக்கு இருக்கும் ஒரே வழி அது தான். உங்களிடம் வேறு யோசனை இருக்கின்றதா ?” என்று செலினா கேட்க, அனைவரும் அமைதி ஆகினர்.
“சரி, உங்கள் அனைவரையும் சேர்த்து ஒன்றாக உருவாக்காவிட்டாலும் தனித்தனியாகப் பார்க்கும் பொழுது உங்களை விட உங்களது சக்தி அவனுக்கு குறைவாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் அவனது சக்தி ஒரு சிறிய கல்லில் தான் இருக்கும். அது தான் ஈரின் கல். அவனது செயல்கள் அத்துமீறுவது போல் இருந்தால், நீங்கள் ஏழு பேரும் சேர்ந்து அவனது உடம்பிலிருந்து அதனைப் பிரித்து எடுக்கலாம். அதற்குப் பிறகு அவனிடம் சாதாரணமான சக்திகளே இருக்கும்” என்றார் செலினா.
அவரது இந்த யோசனை அனைவருக்கும் சரியாகத் தோன்றவே ஒத்துக் கொண்டனர். பின்னர் செலினா தனது வேலையைத் தொடங்க, அனைத்து அரசர்களின் சக்தியில் இருந்தும் ஒரு பாகம் எடுக்கப்பட்டு ஒரு கல்லை உருவாக்கினார் செலினா.
அந்த கல் ஒவ்வொரு நிறமாக மாறிக் கொண்டே இருந்தது. அதனைப் பார்க்கும் யாரையும் தன் வசம் இழுக்கும் சக்தியைப் பெற்றிருந்தது அந்தக் கல்.
செலினா அடுத்த கட்டமாக அதனைச் சுற்றி மனித உடலை உருவாக்க, சிறிது சிறிதாக எலும்புகள் தசைகள், சதைகள், ரத்தம், உறுப்புகள், தோல் என அனைத்தும் தோன்றி, இறுதியில் ஒரு தங்க நிற போர் கவசத்துடன் எழுந்து நின்றான் ஒரு வீரன்.
அந்த வீரன் சுற்றி நின்ற அனைவரையும் பார்க்க, க்ரோனன் அவனது எண்ணத்தைப் படிக்க முயன்றான். ஆனால் அவனுக்குக் கிட்டியது எல்லாம் வெறுமைதான். பின் ஈரின் கல் தனது சக்தியை மெல்ல மெல்லக் குறைத்துக் கொண்டது.
செலினா, “இந்த ஈரின் கல்லை ஓர் உண்மையான, நல்ல எண்ணங்களைக் கொண்ட கயா கிரகத்தினனால் தான் உதவிக்கு அழைக்க முடியும். உங்கள் புதிய பேரரசரை வணங்குங்கள், சிற்றரசர்களே ! இனி இந்த கயா கிரகத்தின் எதிர்காலம் இந்தப் பேரரசன் அகஸ்டஸ் கைகளில் தான் உள்ளது” என்று கூற அனைத்து சிற்றரசர்களும் மண்டியிட்டு வணங்கினர்.