பிறந்தது முதல் அமைதியான தாயை பார்த்து வளர்ந்த வெண்மதி முதன்முதலாக அப்படி பேசியது அவளுக்கே வியப்பாக இருந்தது. அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தண்ணீரை எடுத்து அருந்தினாள். நெடுநாட்களாக அவள் மனதில் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் அவளை மீறி வெளியே வந்ததை அவள் உணர்ந்தாள். எனினும் தாய் தந்தை இன்னும் அவளுடன் இந்த வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சம்மதிக்கவில்லை என்பது அவளுக்கு நினைவில் வந்தது. எப்படியாவது இருவரது மனதையும் இந்த ஆறு மாத காலத்தில் மாற்றி அந்த வேலையை வாங்கி தன்னுடன் அழைத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே சென்று சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டபடியே உறங்கினாள்.
காலை எழுந்து அவசர அவசரமாக குளித்து முடித்து பெரியப்பாவை பார்க்க சென்றாள். சிறுவயது முதல் பெரியப்பா அவளை பெரிதாக தூக்கி கொஞ்சி விளையாடியது கிடையாது என்றாலும் அவருக்கு வெண்மதி மீது தனி அக்கறை எப்பொழுதுமே உண்டு. அவர் பரம்பரையில் பிறந்த முதல் பெண்குழந்தை ஆயிற்றே அவள்.
பெரியப்பா அறைக்கு சென்று கதவை தட்டினாள்.
“கதவு திறந்துதான் இருக்கு. உள்ள வாங்க.” என்று பெரியப்பாவின் குரல் கேட்க உள்ளே நுழைந்தாள் வெண்மதி.
“என்னம்மா விஷயம் ? என்னை தேடி வந்து இருக்க.”
“ஒரு நல்ல விஷயம் உங்ககிட்ட ஷேர் பண்ணலாம்னு வந்தேன் பெரியப்பா.”
“சொல்லுமா. என்ன நல்ல விஷயம் ? நேத்து எங்க காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. அந்த இன்டர்வியூவில் நான் செலக்ட் ஆகிட்டேன்.”
“ஓ தட்ஸ் கிரேட். கங்கிராட்ஸ். என்று உண்மையாகவே சந்தோஷப்பட்டார் பெரியப்பா.
“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு மா.”
“சரி பெரியப்பா. எதாச்சும் வேணும்னா கண்டிப்பா நான் உங்ககிட்ட கேட்கிறேன். பெரியம்மா எங்கே போயிருக்காங்க?”
“அவ அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கா. இன்னிக்கு சாயந்திரம் வந்துடுவா.”
“சரி பெரியப்பா. நான் பெரியம்மாவை பார்த்து இந்த விஷயத்தை சொல்லிடறேன். “என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கார்த்திகேயன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
விஷயத்தை அறிந்து
“சூப்பர் அக்கா! எந்த கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு?”
“ சிஸ் டெக் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு. “
“ஓ அந்த கம்பெனி பெரிய கம்பெனி தான். கங்கிராஜுலேசன், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா.” என்று பூரித்துப் போனான் கார்த்திகேயன். அந்த வீட்டில் அவள் மீது அவள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக அவளிடம் எப்பொழுதுமே பாசத்தை காட்டுவது கார்த்திகேயன் மட்டுமே.
“தேங்க்ஸ் கார்த்திக். நீ இன்னும் காலேஜுக்கு கிளம்பலையா ?” “கிளம்பிட்டு தான் இருக்கேன் அக்கா.” கார்த்திகேயன் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தான்.
“அண்ணன் எங்கே?” என்று கேட்டாள் வெண்மதி
“அவனா, அவனோட ரூம்ல இருப்பான் என நினைக்கிறேன்.”
“சரி நான் போய் அண்ணனை பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு அண்ணன் கதிர்வேலன் அறைக்கு சென்றாள் வெண்மதி. குளித்து முடித்து தயாராகி வெளியே வந்துகொண்டிருந்த கதிர்வேலன், வெண்மதியே பார்த்ததும்
“என்ன வேணும் உனக்கு ? எதுவா இருந்தாலும் ரெண்டு நிமிஷத்துல சொல்லி முடி. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. வெளியே போகணும்.” என்று அவசர படுத்தினான்.
அவள் விபரத்தைக் கூறவும் “ஆமா பெரிய சாதனை தான் போ. சரி. எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு சென்றான் கதிர்வேலன்.
இந்த விஷயத்தைக் கேட்டதும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வெண்மதிக்கு சிறிது ஏமாற்றமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
கதிர்வேலன் லலிதாவின் குணத்தில் பிறந்திருந்தான். சிறுவயது முதல் லலிதா, தன் மூத்த மகன் கதிர்வேலனுக்கு வெண்மதி சித்தப்பா சித்தியை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக கூறி வளர்த்து இருந்தாள். குழந்தையாக இருக்கும் பொழுது சாதாரணமாக சித்தப்பா சித்தியிடம் பாசமாக பழக ஆரம்பித்திருந்தான் கதிர்.
இதனைக்கண்ட லலிதா பொறுக்க முடியாமல் அவனை தனியே அழைத்து
“கதிர், சித்தப்பா, சித்தி, நம்ம சொத்துக்காக தான் நம்ம கூட பாசமா இருக்கிற மாதிரி நடிக்கிறாங்க. நீ அவங்க நடிக்கிறதை பார்த்து ஏமாறாதே. சித்தப்பா அவருடைய சொத்து எல்லாத்தையும் செலவு பண்ணிட்டாரு. இப்போ நம்ம சொத்தை நம்ம கிட்ட இருந்து எப்படியாவது ஏமாற்றி வாங்கிக்க காத்துகிட்டு இருக்காங்க. நீ தான் வளர்ந்து பெரியவனாகி இவங்கள எல்லாம் சமாளிச்சு இந்த சொத்தை காப்பாத்தணும்.
இந்த வீடு நமக்கு சேர வேண்டியது. இந்த வீட்டில் இருந்து ஒரு பங்கு கூட அந்த வெண்மதிக்கு போகாமல் நீ தான்பா காப்பாத்தணும் . செய்வியா கதிர் ?” என்று கண்ணீருடன் கேட்பார்.
அந்தக் கண்ணீரில் இருந்த கள்ளத்தனம் புரியாமல்,
“நம்மளோட சொத்தை நான் காப்பாற்றுகிறேன் அம்மா . இந்த வீட்டை நான் வெண்மதிக்கு விட்டுத்தர மாட்டேன். இது எனக்கும் என்னோட தம்பிக்கும் மட்டும்தான்” என்று உறுதியாக கூறினான் .
வெண்மதிக்கு இந்த வீட்டின் பங்கை விட்டு தரக்கூடாது என லலிதா கூறியது பசுமரத்து ஆணி போல அவன் மனதில் நன்கு பதிந்து .
இதையே தன் இளைய மகன் கார்த்திகேயனிடம் கூறியபொழுது அவனுக்கு அது புரியும் வயது இல்லை. அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வெண்மதி மீது மிகவும் பாசம் வைத்திருந்தான். ‘அக்கா அக்கா’ என்று வாய்நிறைய கூப்பிட்டு அவளுடன் விளையாடுவான்.
இதனை பார்த்த கதிர்வேலன் ஒருமுறை அவனை அழைத்து
“டேய் கார்த்திக் ஏண்டா இப்படி பண்ற? அம்மா என்ன சொன்னாங்க? அவங்க கூட எல்லாம் பேசாதன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றாங்க. ஏன்டா எப்ப பாத்தாலும் அவ கூட விளையாடிக்கிட்டு இருக்க?” என்று கோபமாக சண்டை போட்டான்.
“ஏன்னா எனக்கு அக்காவ தான் ரொம்ப பிடிக்குது. அவங்க என்கிட்ட நல்லபடியா விளையாடுறாங்க. உன்ன மாதிரி எப்ப பார்த்தாலும் கத்திக்கிட்டே இல்ல.”
“என்னடா சொன்ன?” என்று அவன முதுகில் இரண்டு அடி போட்டான்.
அதை பார்த்த வெண்மதி அங்கு வந்து அவனை மேலும் அடிக்காமல் தடுத்தாள்.
“எதுக்கு அண்ணா தம்பியை அடிக்கிற? தம்பி வலி தாங்காம எப்படி அழறான் பாரு.” என்று கதிர்வேலனின் கையை பிடித்து நிறுத்தினாள் வெண்மதி.
இதனால் கோபமடைந்த கதிர்வேலன் அவளை ஒரு அடி அடித்தான். அவள் “ஆ” என்று அலற அந்த வழியாக வந்து கொண்டிருந்த கிருஷ்ணனின் காதில் அது விழுந்தது.
சத்தம் கேட்ட திசையை நோக்கி வந்து பார்த்த கிருஷ்ணன் கதிர்வேலன், வெண்மதி, கார்த்திகேயன் மூவரையும் பார்த்தார்.
“ என்னடா என்ன நடக்குது இங்க?” என்று விசாரித்தார்.
“அது ஒன்னும் இல்லப்பா. தெரியாம இவ மேல கை பட்டுடுச்சு . அதுக்கு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றா.” என்று பொய் சொன்னான் கதிர்வேலன்.
இதனைக்கேட்ட கார்த்திகேயன் “அப்பா கதிர் பொய் சொல்றா. இவன் என்ன அடிச்சான். அதைப்பார்த்த வெண்மதி அக்கா அவன் கைய புடிச்சு தடுத்தார்கள். அதுல கோபமான இவன் அக்காவை அடிச்சிட்டான். அக்காவோட கன்னத்தை பாருங்க.” என்று அவளது கன்னத்தை திருப்பி காட்டினான் கார்த்திகேயன்.
அவளது கன்னம் சிவந்திருந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
“என்னடா இது பொம்பள புள்ளைய அடிக்கிற பழக்கம்?” என்று கதிர்வேலனின் கன்னத்தில் அறை வைத்ததோடு மேலும் நான்கு அடி முதுகில் வைத்தார். வலி தாங்க முடியாமல் அவன் கத்தினான். “இன்னொரு தடவை நீ அவள அடிச்சன்னு எனக்கு தெரிஞ்சது! கையில் சூடு வெச்சுடுவேன். ஜாக்கிரதை.” என்று அவனை மிரட்டினார்.
‘தந்தைக்கு வெண்மதி மீது இவ்வளவு பாசமா’ என்று முதன்முறையாக ஆச்சரியப்பட்டான் கதிர்வேலன்.
அன்றுமுதல் அவளை நேரடியாக அவன் எந்த விதத்திலும் துன்புறுத்தியது கிடையாது. வெண்மதிக்குமே பெரியப்பா மீது மரியாதை உண்டானது.
வெண்மதி அலறி அதை கேட்டு அங்கு வந்த கோவிந்தனும் லட்சுமியும் இதனை எல்லாம் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்கு கிருஷ்ணனின் செயல் ஆறுதலாகவே இருந்தது. கதிர்வேலன் வெண்மதியை வெறுப்பது கோவிந்தனுக்கும் மகாலட்சுமிக்கும் பெரிய கவலையாக இருந்தது. இந்த வயதில் இவனது வெறுப்பு அவர்களது மகளை பெரிதாக பாதிக்காது. இருவரும் ஓரளவுக்கு சம பலத்துடன் இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டாலும் வெண்மதிக்கு பெரிதாக எதுவும் நேர்ந்து விடாது. ஆனால் வளர வளர கதிர்வேலன் வெண்மதியை விட பலசாலி ஆகிவிடுவான். அப்படி இருக்க எப்படி இவனிடம் இருந்து நம் மகளை பாதுகாப்பது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் கிருஷ்ணன் இப்படி கதிர்வேலனை ஐ மிரட்டுவதை பார்த்த இருவரும் நிம்மதி அடைந்தனர். அந்த வீட்டில் உள்ள அனைவரும் கிருஷ்ணனின் பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்