Skip to content
Post Views: 726
அத்தியாயம் – 25
அந்த இடத்தில் கனத்த அமைதி நிலவியது. நந்தினி, ஆரியன், ஆதி மூவரும் சிறிதளவு கூட அசையாமல் நின்றிருந்தனர். அந்த ஆயிரக்கணக்கான வீரர்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது என்று நினைத்த நந்தினி, ஓரடி முன்னால் எடுத்து வைக்க, வீரர்களும் தங்களது ஆயுதங்களைத் தூக்கினர். அதைக் கண்ட நந்தினி பின்வாங்கினாள்.
Advertisement

ஆரியன், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது ?” என்று கேட்டு சலிக்க,
ஆதி, “ஏன் நீ ஏதாச்சும் பிளான் வச்சிருக்கியா ?” என்று கேட்டு நக்கல் செய்தான்.
Advertisement
நந்தினி, “இந்த இடத்துல இருந்து தப்பிக்கிறது மட்டும் முக்கியமில்ல, அந்த பார்ச்மெண்ட்ட எடுக்கணும்” என்றாள்.
Advertisement
அவர்கள் பேசியதைக் கேட்டது போல, அந்த வீரர்கள் அவர்களை நெருங்க ஆரம்பித்தனர்.
அவர்களுள் ஒருவன் வேகமாக வந்து நந்தினியை நோக்கி தன் ஆயுதத்தை எறிந்தான். நந்தினியைத் தள்ளிவிட்டு அந்த ஆயுதத்தை ஆதி எதிர்கொண்டான்.
அவன் அதைத் தடுப்பது போல், கண்களை மூடிக் கொண்டு தன் கைகளை நீட்ட, அவன் கையிலிருந்து வந்த சக்திக் கதிர்கள் அந்த ஆயுதத்தைக் காற்றோடு காற்றாக கலக்கச் செய்தன.
Advertisement
இன்னும் தான் உயிரோடு தான் இருக்கிறோமா என்று ஆதி சந்தேகத்துடன் கண்ணைத் திறக்க, அவனுக்கு அருகில் வந்த நந்தினி, “உங்ககிட்ட இருக்குற கயா கிரக சக்திகள் வெளிப்படுது போல ஆதி, சீக்கிரம் ஆரி, நீயும் இதே மாதிரி பண்ணு” என்றாள்.
ஆரியனும் தனது கையை நீட்டி மனதை ஒருநிலைப்படுத்த, அவன் கைகளில் இருந்தும் சக்தி கதிர்கள் வந்தன. அதற்குள் அந்த வீரர்கள் தங்கள் ஆயுதங்களைத் தூக்கி எறிய, அவற்றைக் குறிபார்த்து அழிக்கத் தொடங்கினர் மற்ற இருவரும்.
நந்தினி, “நாம இப்ப க்ரிசான்டாவாக மாறினா, அது எல்லோருக்கும் ஆபத்து” என்று நினைத்தவள், பிறகு ஆதியும், ஆரியனும் அந்த வீரர்களிடம் தடுமாறுவதைக் கண்டு, தனது முடிவை மாற்றிக் கொண்டாள்.
அந்த வீரர்களுள் ஒருவர் விழ மற்றொருவர் அவரது இடத்தை எடுத்துக் கொண்டனர். இன்னும் எவ்வளவு நேரம் தாங்கள் போராடினாலும் அவர்களை வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட நந்தினி, சற்று தள்ளி கீழே கிடந்த ஒரு ஆயுதத்தை எடுத்து கொண்டு ஓடத் தொடங்கினாள்.
முதலில் அதைக் கவனிக்காத ஆதி, அவளைப் பார்த்தவுடன் அவளது திட்டம் விளங்கிட, “சனா !” என்று கத்தினான். ஆனால், நந்தினி அதைக் கண்டு கொள்ளாமல் அந்த வீரர்கள் இருந்த இடத்தின் மையத்திற்கு, அந்த ஆயுதத்தை வைத்து தன்னை நோக்கி வந்த வீரர்களைத் தள்ளிவிட்டு, வந்தாள்.
பின்னர், மெல்ல தன் எண்ணங்களை ஒருங்கிணைக்க, அதே நேரம் மற்ற வீரர்கள் அனைவரும் நந்தினியைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். சில நொடிகளில் அவளைச் சுற்றி சக்தி வளையங்கள் உருவாக ஆரம்பித்தன. சிறிது சிறிதாக அது வளர்ந்து சுற்றியிருந்த வீரர்களை அழிக்கத் தொடங்கியது. நந்தினியின் விழிகள் தங்க நிறத்திற்கு மாற, அவள் மெல்லப் பறக்கத் தொடங்கினாள்.
அந்த நீண்ட பாதை முழுவதும் அவளது சக்தி கதிர்களால் நிரம்பத் தொடங்கியது. மற்ற வீரர்களுடன் சேர்ந்து ஆரியனும், ஆதியும் துன்பப்பட , அவர்களும் அலறத் தொடங்கினர்.
இது எதையும் அறியாத நந்தினியின் உடலைச் சுற்றியிருந்த சக்தி வளையங்களில் இருந்து கதிர்கள் அதிகமாக வெளியேறத் தொடங்கின. சரியாக அந்த நேரம் ஓர் உருவம் அந்த இடத்திற்குள் நுழைந்தது. அந்த உருவம் விரைவாக ஆதியும் ஆரியனும் இருந்த இடத்திற்கு ஒரு பறக்கும் வாகனத்தில் வந்தது.
அந்த உருவத்தைப் பார்த்து இருவரும் வியந்து நிற்க, அந்த உருவம் கட்டளையிடும் குரலில், “சீக்கிரமாக இந்த வாகனத்தில் ஏறுங்கள். பேரரசி கொஞ்ச நேரத்தில் இந்த இடத்தை அழித்து விடுவார்கள். அதற்குள் நாம் இந்தக் கோட்டையிலிருந்து வெளியேற வேண்டும்” என்று கத்தியது.
அந்த உருவம் யாரென்று தெரியாவிட்டாலும் தங்களுக்கு உதவ முயல்வதை உணர்ந்து, ஆதியும், ஆரியனும் அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இவை எதையும் அறியாத நந்தினி விஸ்வரூபம் எடுத்து, அந்த இடத்திலிருந்த அனைத்து வீரர்களையும் அழித்துக் கொண்டிருந்தாள். அனைத்து வீரர்களும் அழிக்கப்பட்ட நிலையில், நந்தினி சிறிது சிறிதாகப் பழைய நிலைக்குத் திரும்பினாள்.
பின்னர், தன்னை சுற்றி மற்ற இருவரையும் தேடிப் பார்க்க, அங்கு அவர்கள் இல்லாததால் குழப்பம் அடைந்தாள். “அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள் இல்லை அவர்களை இந்த வீரர்கள் ஏதாவது செய்து விட்டார்களா” என்று யோசித்தாள்.
அப்போது திடீரென்று ஒரு பறக்கும் வாகனம் வந்து தரையிறங்கியது. அதிலிருந்த இருவரையும் கண்டு அவள் புன்னகைக்க இருவரும் ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டனர்.
அவள் எதையும் கேட்பதற்கு முன்னரே இருவரும் அந்த உருவத்தைக் கைகாட்டினர். நந்தினி அந்த உருவத்தை ஆராயும் பார்வையுடன் பார்க்க, அந்த உருவம் வந்து மண்டியிட்டு, “கயா கிரக பேரரசியே வாழ்க !” என்றது.
நந்தினி, “நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?” என்று அவளது முகத்திரையைப் பார்த்தவாறு கேட்க, அந்த உருவம் தனது முகத்திரையை விலக்கியது. அந்த உருவத்தைக் கண்ட மூவரும் அதிர்ந்தனர்.
இதுவரை அந்த உருவத்தின் குரலை வைத்து ஆண் என்று கருதியவர்கள் அங்கு ஒரு பெண்ணைப் பார்த்ததும் முழித்தனர்.

“நான் அப்போது என் குரலை மாற்றிப் பேசி இருக்கா விட்டால், வாகனத்தில் ஏறாமல் யோசித்துக் கொண்டு நேரத்தை வீணடித்திருப்பீர்கள்” என்று கூறிய அந்த உருவம் தொடர்ந்து,
“என் பெயர் லூனா. சிற்றரசர் க்ரோனனின் மகள். உங்களுக்கு உதவுவதற்காக இங்கே வந்திருக்கிறேன், பேரரசி” என்றது.
நந்தினி சங்கடத்துடன், “நான் பேரரசி எல்லாம் இல்லை. இன்னும் நான் யார் என்று எனக்கே முழுசா தெரியாது. நீங்க இவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தி எனக்குப் பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. அதுக்கு நான் தான் நன்றி சொல்லணும்” என்றாள்.
லூனா, “நான் ஒன்றும் தங்களைப் பார்த்தவுடன் எங்கள் கிரகத்தின் பேரரசியாக ஏற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்கே தெரியாமல் கடந்த சில நாட்களாக உங்களைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது எரேகனுடைய கட்டத்திற்குள் நுழைந்தீர்களோ, அப்போது முதல் உங்கள் மூவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உங்களைப் பார்ப்பதற்கு முன்பே எனக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.”
“ஆனால், இங்கு உங்களுடைய அறிவு திறமையை நான் பார்த்த பொழுது, முடிவு செய்துவிட்டேன். அதுவும் என் தந்தையுடைய கட்டத்தை வெல்வது அவ்வளவு சுலபம் இல்லை. உங்களுக்குள் பேராற்றல் இருக்கிறது. அதை வெளிப்படுத்த வைத்தால் போதும். இனி உங்களது படையில் என்னையும் ஒருத்தியாக ஏற்றுக் கொள்வீர்களா ?” என்று கேட்கவும், நந்தினியின் கண்ணில் சிறிதளவு கண்ணீர் சுரந்தது.
தன்னைப் பற்றிய முழுமையான கருத்தை, உண்மையாகக் கூறிய லூனாவைப் பார்த்து, “எழுங்கள் லூனா ! உங்களது உதவியை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்காக தங்களை என் படையில் சேர்த்து கொள்ள முடியாது” என்றாள் நந்தினி.
அதைக் கேட்ட லூனா மட்டுமல்லாது ஆதியும், ஆரியனும் கூட திகைக்க, நந்தினி தொடர்ந்து, “ஏனென்றால் நீங்கள் தான் எனக்கு அனைத்து விஷயங்களையும் கற்றுத்தர வேண்டும். அப்போது நீங்க எனக்கு குருவாக மாறிடுவீங்க. அது மட்டுமல்லாமல், நீங்கள் எனக்குத் தோழியாக இருக்கத் தான் ஆசைப் படுகிறேன், காவலாளியாக அல்ல” என்றாள்.
அதைக் கேட்ட லூனா மகிழ்ச்சி அடைய, நந்தினி, “ஆஹ்ன்… சொல்ல மறந்துட்டேன், லூனா. இனிமே என்னைய எப்பவுமே பேரரசினு கூப்பிடக்கூடாது. நந்தினின்னோ க்ரிசான்டான்னோ தான் கூப்பிடனும்” என்றாள்.
லூனா சம்மதமாகத் தலையசைத்து விட்டு, நந்தினிக்கு அருகில் நின்றிருந்த ஆரியனைப் பார்த்து முறைத்தாள். பின்னே அவள் முகத்திரையை விலக்கியது முதல் அவளையே கண்களில் சிரிப்போடு நோக்கினால்?? அது மட்டுமல்லாமல் க்ரோனனின் மகளுக்கு எண்ணங்களைப் படிக்கத் தெரியாதா என்ன ?
லூனாவின் பார்வையைத் தொடர்ந்து நந்தினியும் பார்க்க, ஆரியன் அப்படியே தான் நின்றான்.
நந்தினி, “டேய் ஆரி ! கொஞ்சம் வாய மூடுடா. அப்புறம் எல்லாரும் தண்ணியில மிதக்க வேண்டியதா இருக்கும்” என்று அவனுடைய இடுப்பில் இடித்து விட்டு கூற, அப்போது தான் அவன் கனவுலகத்தில் இருந்து நிஜ உலகிற்கு திரும்பினான்.
தன்னை மற்ற மூவரும் முறைப்பதை கண்டு, ‘ஈ’ என்று இழித்தவன், வேறுபக்கம் பார்ப்பது போல தலையைத் திருப்பிக் கொண்டான்.
நந்தினி, “இவங்க ரெண்டு பேரும்…” என்று அறிமுகப்படுத்தத் தொடங்க, “எனக்கு இவர்களைப் பற்றித் தெரியும். என்னால் உங்க மனதை படிக்க முடியும்” என்றாள் லூனா.
ஆரியன் அவளை அதிர்ச்சியுடன் நோக்க, லூனா முறைப்பு கலந்த புன்னகையைக் கொடுத்தாள்.
ஆதித்யன், “லூனா, நான் அப்படி கூப்பிடலாம்ல ? நீங்க எங்கள சில நாட்களா ஃபாலோவ் பண்றேன்னு சொன்னீங்க . அப்படின்னா எங்களோட ஸ்பேஸ் ஷிப் எங்க இருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே ?” என்று கேட்டான்.
லூனா, “அந்த ஸ்பேஸ் ஷிப் என்னோட தந்தையோட கட்டத்திலேயே அழிஞ்சிருச்சு” என்று கூறி முடிப்பதற்குள்,
“பொசய்டன் ! மூமூ !” என்று நந்தினி கூற, “ஒண்ணும் ஆகல, அதுக்கு முன்னாடியே அங்க இருந்த எல்லாரையும், எல்லா பொருட்களையும் நான் என்னோட ஸ்பேஸ் ஷிப்க்கு மாத்திட்டேன். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றாள் லூனா.
நந்தினி சற்றே ஆசுவாசம் அடைய, லூனா, “சரி வாங்க, நமக்கு இன்னும் அதிக நேரம் இல்ல. கன்வர்ஜென்ஸ் நெருங்குகிட்டே இருக்கு. நாம இன்னும் மூணு பேரோட கட்டங்களைத் தாண்ட வேண்டும்” என்றாள் .
அனைவரும் வேகமாக வாசலுக்கு வர, அங்கே ஒரு பெட்டி இருந்தது. அதிலிருந்த பார்ச்மென்ட்டை எடுத்தாள் நந்தினி .

(1) .- .-.. .-.. ……. …. .- .. .-.. ……. – …. . ……. … . .- .-. -.-. …. . … –..– ……. .– . ……. … .- -.—
(2) – …. — ..- –. …. ……. .– . ……. ..-. .-. .. . -. -.. … ……. .- .-. . ……. – .– —
(3) – …. . ……. .- -. … .– . .-. ……. .– . ……. . -..- .–. . -.-. – ……. .. … ……. -. — –
(4) – . .-.. .-.. ……. ..- … ……. – …. . ……. ..- -. .. –.- ..- . ……. – …. .. -. –. ……. .– . ……. .– .- -. –
(5) – …. . ……. .–. — .– . .-. … ……. — ..-. ……. .. – ……. …. .- … ……. …. ..- –. . ……. …- .- .-.. ..- .
(6) – .. .-.. .-.. ……. .. – ……. — . . – ……. .– .. – …. ……. … –.- ..- .- .-. . ……. — ..-. ……. … .. -.. . ……. . .-.. . …- . -.
(7) .– .. – …. .. -. ……. – …. .- – ……. – …. . -.– ……. .- .-. . ……. — — -. .. .–. .-. . … . -. –
(8) –. .. …- . ……. ..- … ……. – …. . ……. – …. .. -. –. ……. .– . ……. .- -. – .. -.-. .. .–. .- – .
(9) – .– — ……. -.. .- -. –. . .-. — ..- … ……. –. .- – . … ……. .- .-. . ……. .– .- .. – .. -. –. ……. .- …. . .- -..
(10) -.- -. — .– .-.. . -.. –. . ……. .- -. -.. ……. .–. — .– . .-. ……. .– .. .-.. .-.. ……. …. . .-.. .–. ……. -.– — ..-
ஆரியன் அதை வேகமாக மொழி மாற்றம் செய்ய, இந்த முறையும் அவர்களுக்காக ஒரு புதிர் காத்திருந்தது.
All hail the searches, we say
Though we friends are two
The answer we expect is not
Tell us the unique thing we want
The powers of it has huge value
Till it meet with square of side eleven
Within that they are omnipresent
Give us the thing we anticipate
Two dangerous gates are waiting ahead
Knowledge and power will help you
அதைப் பார்த்த ஆரியன் பல்லைக் கடித்தான். பின், லூனா தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, “இதெல்லாம் ஜுஜுபி. இதெல்லாம் என் லெவலுக்கு கம்மி. அதனால நீயே இதைப் பாரு, நந்து” என்று அந்த பார்ச்மென்டை பெருந்தன்மையுடன் நந்தினியிடமே கொடுத்தான்.
ஆதி, “லூனா, உன்னால இத சால்வ் பண்ண முடியுமா ?” என்று கேட்க,
லூனா, “நான் குழந்தையா இருக்கும் போது தான் போன கன்வெர்ஜன்ஸ் வந்தது. அப்ப நடந்த பிரச்சினையில் நாங்க உயிரோட தப்பிப்பதற்கே கஷ்டப்பட வேண்டி இருந்தது. அதில் என்னைக் காப்பாற்றி ஒரு சகோதரனாக இருந்து என்னை வளர்த்தது வச்சது எல்லாம் அக்கிலஸ் தான். எனக்கு பொதுவாகவே சண்டை போட்டு கொலை செய்வதில் தான் ஆர்வம் அதிகம். இது மாதிரி புதிர் எல்லாம் நான் படித்தது கிடையாது” என்று வருத்தத்துடன் கூறினாள்.
நந்தினி அவளை ஆதரவாக அணைத்து, “பரவாயில்லை… இப்ப இந்த விடுகதைல கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணுவோம். ஆரம்பத்துல எப்பவும் சொல்றது தான். அப்புறம் ‘Though we friends are two
The answer we expect is not’ அப்படின்னா, நாங்க நண்பர்கள் ரெண்டு பேரா இருந்தாலும், நாங்க எதிர்பார்க்கிற பதில் அப்படி இல்ல என்று அர்த்தம், ரைட்?” என்று கேட்டாள்.
ஆரியன், “அப்படின்னா இந்த தடவையும் நாம ரெண்டு சிற்றரசர்களோட லெவல சந்திக்கப் போறோம். ஆனா, அவங்க எதிர்பார்க்கிற பதில்…” என்று இழுத்தான்.
ஆதி, “Tell us the unique thing we want, The powers of it has huge value. இது ஏதோ தனித்துவமான பொருள் போல, இதோட சக்திகளுக்கு பெரிய மதிப்பு இருக்குன்னு போட்ருக்கு. என்ன சனா இந்த தடவையும் குழப்புறாங்க? முதல் அஞ்சு லைன்ஸ்ல ஏதோ ஒரு பொருள் மாதிரி இருக்கு. ஆனால், ஆறாவது லைன் Till it meet with square of side eleven–ன்னு இருக்கு. அதாவது பதினோரு அளவுடைய ஒரு சதுரத்தைச் சந்திக்கிற வரைக்கும் தான், அது வேலை செய்யும்னு இருக்கு. இதுல லெவன்னு ஒரு நம்பர் வந்து இருக்கு” என்றான்.
லூனா, “Within that they are omnipresent, Give us the thing we anticipate. அதுக்குள்ள இருக்கிற வரைக்கும் அவங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்கன்னு போட்டுருக்கு. அதற்கு பிறகு முன்னாடி சொன்னத தான் மறுபடியும் சொல்லியிருக்காங்க” என்றாள்.
அவளை மூன்று பேரும் வித்தியாசமாகப் பார்க்க, “நீங்க ஏதோ ஒரு ரெண்டு மொழிய கலந்து பேசுறீங்கன்னு புரியுது. அதைக் கேட்கக் கேட்க எனக்கும் பழகிடுச்சு” என்று புன்னகையுடன் கூறினாள் .
“சில நிமிடங்களிலேயே பழகிடுச்சா ?” என்று மூவரும் மனதில் நினைத்தாலும், வெளியில் சொல்லவில்லை.
ஆதி, “Two dangerous gates are waiting ahead, Knowledge and power will help you. இதுக்குதான் சந்தேகமே இல்லாமல் அர்த்தம் புரியுது. இந்த லெவல்லையும் கண்டிப்பா ரெண்டு சிற்றரசர்களோட சோதனைகள நாம சந்திக்கணும். கடைசியா அறிவும் சக்தியும் உதவி செய்யும்னு போட்ருக்கு. இந்த தடவை இரண்டுமே நம்ம கிட்ட இருக்கு” என்றான்.
நந்தினி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து, “இதுவரைக்கும் நாம மூணு பார்ச்மென்ட் பார்த்திருக்கோம். மூணுத்துக்குமே நம்பர் தான் ஆன்சரா இருந்துச்சு. ஏனா அது எல்லா மொழிக்கும் நடுவில் இருக்குற ஒரு பொதுவான விஷயம். இதையும் நாம நம்பர்ன்னு வச்சே பதில் தேடுவோம்” என்றாள்.
மற்ற மூவரும் ‘சரி’ என்பது போலத் தலையசைக்க, நந்தினி தொடர்ந்து, “இந்த இடத்துல square of side eleven–னு போட்டு இருக்கு. அத நாம ஒரு சதுரமா பார்க்காம, ஒரு நம்பரோட square–ஆ ஏன் பார்க்கக் கூடாது ? இப்ப பதினொன்னோட square–னா 121 (11×11)” என்றாள்.
ஆதி, “அப்படின்னா நாம தேடுற விஷயம் ஒண்ணுலேந்து, 121 வரைக்கும் இருக்கணும். இது எப்படி சாத்தியம் ?” என்று கேட்டான்.
நந்தினி, “அதுக்கு முன்னாடி பாருங்க, நாங்க நண்பர்கள் ரெண்டு பேரா இருந்தாலும் நாங்க எதிர்பார்க்கிற விஷயம் அப்படியில்லனு போட்ருக்கு. சோ, அது கண்டிப்பா ஒரு சிங்கிள் டிஜிட் நம்பரா தான் இருக்கணும். அதுலயும் தனித்துவமான நம்பர். இப்ப நம்மளோட பதில் கண்டிப்பா ஜீரோ–லேந்து ஒன்பதுக்குள்ள தான் இருக்கும்” என்றாள்.
ஆரியன், “இது ஒரு நம்பர்னு கண்டிப்பா தெரியும்னா, அஞ்சாவது லைன்ல The powers of it has huge value. இந்த இடத்தில, இருக்கிற பவர் –ன்ற வார்த்தை சக்தியை குறிக்காம ஏன் கணக்குல வர பவரா இருக்கக்கூடாது ? அதாவது நைன் க்யூப் அப்படின்றத, நைன் டூ த பவர் ஆஃப் த்ரீன்னு தானே சொல்லுவோம்” என்று கேட்க,
நந்தினி, “கரெக்ட். அப்படின்னா, ஏதோ ஒரு நம்பரோட பவர்ஸ் வச்சு ஒண்ணுல இருந்து 121 வரைக்கும் இருக்கிற எல்லா நம்பர்ஸூம் வரணும்” என்றாள்.
லூனா, “அப்படிப் பார்த்தால் நிறைய காம்பினேஷன்ஸ் இருக்குமே. அதுல எது சரியாக இருக்கும் ?” என்று கேட்டாள்.
நந்தினி, சிறிது யோசித்து, “நாம தேடுற நம்பர் மூன்று” என்றாள்.
மற்ற மூவரின் முகத்திலும், ‘எப்படி’ என்ற கேள்வி அப்பியிருக்க, “ஆமாம் இந்த ஸ்பெஷாலிட்டி அந்த நம்பருக்கு மட்டும் தான் இருக்கு. அதாவது த்ரீயோட பவர்ஸ் 3^0, 3^1, 3^2, 3^3, 3^4 இந்த அஞ்சு நம்பர் தான், நாம தேடுற கேள்விக்கான பதில். சரியா சொல்லனும்னா, 1, 3, 9, 27, 81.
இந்த அஞ்சு நம்பரை வச்சுக்கிட்டு நம்மளால ஒண்ணுல இருந்து 121 வரைக்கும் இருக்குற எல்லா நம்பரையும் எழுத முடியும். உதாரணத்துக்கு 65 இந்த நம்பர (81+9+3) – (27+1) அப்படின்னு எழுதலாம். இந்த மாதிரி முறையை ஒரு பழங்கால நாகரீகத்தில் பின்பற்றி இருக்காங்கன்னு படிச்சிருக்கேன். எப்படின்னா இந்த வெய்ட்ல அஞ்சு கல்லு செஞ்சுக்கிட்டாங்க. அத தராசுல வச்சு அளவுகோலா பயன்படுத்திக்கிட்டாங்க” என்றாள்.
ஆரியன், “ஸோ நாம தேடுற பதில் மூன்று” என்று கூறிவிட்டு, அந்த பார்ச்மென்டில் அதைப் பதித்தான். சிறிது நேரத்தில் அந்த பார்ச்மென்டில் வேறு எண்கள் தோன்ற, அதைப் பார்த்த லூனா, “இது ஆர்ட்டர் கிரகம்” என்றாள்.
ஆதி, “இது சரியானு கண்டிப்பா தெரியுமா, லூனா ?” என்று கேட்க,
“உங்களைத் தேடி வரும் வழியில், எங்கள் கயா கிரகத்து டேட்டாபேஸ் முழுவதையும் படிச்சுட்டேன். அதனால இது அந்த கிரகமா தான் இருக்கணும்” என்றாள் லூனா.

அவள் என்னதான் இதுவரை படித்ததில்லை என்று கூறினாலும், அவளுக்குள் இருந்த கற்றுக் கொள்ளும் வேகத்தைக் கண்டு மலைத்துப் போனாள் நந்தினி.
லூனா தன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிரிஸ்டலை தட்ட, உடனே அவர்களுக்கு அருகில் ஒரு வாகனம் தோன்றியது. அதுவரை அவர்கள் பார்த்தது எல்லாம் வெறும் கால் தூசிக்குச் சமம் என்பது போல இருந்தது அந்த வாகனம்.

லூனா, “சீக்கிரம் வாங்க, நமக்கு இன்னும் பல வேலைகள் இருக்கு” என்றாள். அவர்கள் மூவரும் அந்த வாகனத்தில் ஏறிக் கொள்ள, லூனா ஆர்ட்டர் கிரகத்திற்கு அந்த விண்வெளி வாகனத்தைச் செலுத்தினாள்.
பிறகு மற்ற மூவரிடமும் வந்தாள் லூனா.
“இப்ப உங்களுக்குக் கொஞ்சம் உங்களோட சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்ல போறேன். ஆனா, அதுக்கு முன்னாடி நந்தினி உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்” என்றாள்.
நந்தினி, “என்ன லூனா ?” என்று கேட்க,
லூனா, “மூமூவை பத்தி நீ என்ன நினைக்கிற ? அதாவது நான் என்ன கேட்க வர்றேன்னா, உனக்கு நீ வந்த அதே வாகனத்தில் தான் மூமூ வந்துச்சுன்னு தெரியும்ல ? ஆனா அதுல எப்படி ஒரு கிளி வந்திருக்க முடியும் ? உன்னைய உங்க அம்மா தொட்டதால் நீ அவங்களை மாதிரியே மாறிட்ட. ஆனால், அந்த விமானத்திலிருந்த எந்த பொருள் அந்த கிளியாய் மாறியது ?” என்று கேட்டாள் .
நந்தினி ஒரு நிமிடம் சிந்தனையே செய்ய முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தாள்.
அவள் ஏதோ சொல்ல வருவதற்குள், லூனா, “ஆமாம் நந்தினி, மூமூ உங்களோட உடன் பிறந்த சகோதரன் தான். உங்களோட அப்பாவும் அம்மாவும் ப்ரொமேத்தியஸோட தாக்குதலிலிருந்து உன்னைய காப்பாத்துனப்ப, அந்த இடத்துல ஏற்பட்ட ஏதோ ஒரு அதிர்ச்சியால அந்தக் கருமுட்டை இரண்டா உடைஞ்சுருக்கணும். இன்னும் சரியா சொல்லனும்னா, அது ஒரு பெரிய பகுதியாகவும் ஒரு சின்ன பகுதியாகவும் உடைந்திருக்கணும். அப்படின்னா தான் அந்தப் பெரிய பகுதி நீங்களும் சின்ன பகுதி மூமூவாகவும் இருக்க வாய்ப்பிருக்கு” என்றாள்.

நந்தினி உடனே ஓடிச்சென்று மூமூவைப் பார்த்தாள். நந்தினிக்கு அப்போதுதான் அனைத்தும் புரிந்தது. “இதுவரை என்னோடு மகிழ்ச்சி, துக்கம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு, எனக்கு எப்போதெல்லாம் மனதில் சஞ்சலம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை உருவாக்கியவன், என் சகோதரன் தானா?” என்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.
இப்போதும் கூட மூமூ கண்களைப் பார்த்து மனதிற்குள் ஏதோ கூறிய போது, அதற்கு அவன் பதில் அளித்தது போல் இருந்தது.
அவளைப் பின்தொடர்ந்து வந்த மூவரும், அந்தக் காட்சியைக் கண்டு புன்னகைத்தனர்.
நந்தினி லூனாவிடம், “இவனையும் எங்களைப் போல மாற்ற முடியாதா ?” என்று கேட்க,
லூனா, “வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை கயா கிரகத்திற்குச் சென்று தனது முழு சக்தியையும் உணர்ந்தால் மாறலாம்” என்றாள்.
நந்தினி தனது யோசனையில் மூழ்கி விட, லூனா, “நந்தினி…” என்று கூற வர,
“நாம அடுத்த வேலையைப் பார்க்கலாம்” என்று நந்தினியின் வாய் கூறினாலும், கண்கள் மூலம் தன் சகோதரனுக்கு விடை கொடுத்து விட்டே அங்கிருந்து வெளியேறினாள்.

லூனா அடுத்து அவர்களை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். அந்த அறையின் கதவே மிகச் சிறியதாக இருக்க, ஆரியன், “இதில் எப்படி நாம பயிற்சி செய்றது ? இதுல நீங்க ஒருத்தர் நுழையறதே ரொம்ப கஷ்டமாச்சே“ என்று கேட்டான்.
லூனா, “உள்ளப் போய் பாரு, உனக்கே புரியும்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள்.
அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் கதவிற்குள் நுழைய, அங்கே ஒரு பெரிய அரங்கம் இருந்தது. மூவரும் வியந்து பார்க்க,
ஆதி, “இந்த ஸ்பேஸ் ஷிப் இந்த சைஸுக்கு சத்தியமா வராது. அப்புறம் எப்படி இந்த வாகனத்துக்குள்ள இவ்வளவு பெரிய இடம் ?” என்று கேட்டான்.
நந்தினி அதற்கு, “நிகேடரின் கைவண்ணம்” என்றாள்.
பிறகு லூனா, ஆதியையும், ஆரியனையும் நோக்கி, “உங்க ரெண்டு பேருக்கும் அதிக அளவில் சக்திகள் இல்ல. ஆனாலும், உங்களால சண்டை போடுறதுக்கு, அதைப் பயன்படுத்த முடியும். அதனால உங்க மனசு முழுதும் உங்களோட விரல் நுனியில் தான் இருக்கனும். அப்பதான் உங்களால அத நெனச்ச மாதிரி பயன்படுத்த முடியும்” என்று கூறியவள்,
அருகில் கிடந்த சின்ன சின்ன குச்சிகளைக் காட்டி, “இதுல இருக்கிற ஒரு குச்சியை உங்களோட ஒரு விரலால எரிய வைக்கணும். அது வரைக்கும் இதை செய்யுங்க” என்றாள்.
ஆரியன், “இதெல்லாம் எனக்கு ஜுஜுபி மேட்டர்” என்று கூற, லூனா அவனைக் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க, ஆரியன் ஒரு குச்சியை எடுத்து தனது சக்தியைப் பயன்படுத்தினான்.
அந்த மொத்தக் குச்சியும் சாம்பலாக மாறி காற்றோடு கலந்தது. ஆரியன் ‘ஈ’ என சிரிக்க, லூனா, “பயிற்சியைத் தொடங்குங்கள்” என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.
இங்கு நந்தினியிடம் வந்தவள், “நந்தினி, அவர்களுக்குச் சொன்ன அதே விஷயம்தான் உங்களுக்கும். நீங்க ஒரு முழு கயா கிரக வாசியாக மாறுறப்ப, அதாவது க்ரிசான்டாவா மாறுறப்ப, உங்களை நீங்களே மறந்துடுறீங்க. அது கொஞ்சம் தவறானாலும் சுத்தியிருக்குறவங்களுக்கு நல்லதில்ல. அதனால் நீங்க க்ரிசான்டாவா உங்கள நெனச்சுக்கிற அதே நேரம், நீங்க நந்தினிக்கு புடிச்ச விஷயத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டீங்கனா, நீங்கள் சுயநினைவை இழக்க மாட்டீங்க” என்று கூறிவிட்டு ஆதியைப் பார்த்தாள்.
நந்தினி, ‘புரிந்தது’ என்பது போல சிரிப்புடன் தலையசைத்தாள்.
இப்படியே அவர்கள் பயிற்சி செய்து கொண்டிருக்க, இறுதியில் நந்தினி தன்னை கட்டுப் படுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றிருந்தாள்.
ஆதித்யனும் அவனது பயிற்சியில் முக்கால்வாசி தேறி இருக்க, ஆரியன் மட்டும் ஆரம்ப நிலையிலேயே இருந்தான். அவனை முறைத்துப் பார்த்த லூனா, ஏதோ முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.
அவள் சென்ற பிறகு ஆரியன், அந்தக் குச்சியை, தன் ஒற்றை விரலால் பற்ற வைத்தான். அவன் மனம் உள்ளூர, “நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா, லூனா ?” என்று சொல்லிக்கொண்டது.
அவர்கள் அனைவரும் மறுபடியும் அந்த விண்கலத்தின் நடுவில் இருந்த இருக்கைக்கு வந்தனர். நந்தினி இடையில் தனியாகச் சென்று பொசய்டனை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். அவரைப் பற்றி லூனாவிடம் கேட்ட போது, “மெட்லடனுக்கு தெரிந்திருக்கலாம். அதற்கு நாம் கயா கிரகம் செல்ல வேண்டும்” என்றாள்.
அதற்குள் அவர்கள் ஆர்ட்டர் கிரகத்தை நெருங்கி இருந்தனர். அந்த கிரகத்தைப் பார்த்து நால்வரின் கண்களும் தெறித்து விழுந்து விடுவது போல் விரிந்தது.


error: Content is protected !!