மாயாவி 23 ::
எண்ணி எண்ணி பேசும்…
உன் வார்த்தைகளையும்….
தயங்கி தயங்கி இதழ் பிரியும்…
உந்தன் சிரிப்பையும்…
எண்ணற்றதாக மாற்றி…
உந்தன் தயக்கங்களை எல்லாம்…
என்னை தகர்த்தெறிய வைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ!
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து எல்லோரின் ஆர்பாட்டங்களையும் பார்த்த குழலிக்கு மனதிற்கு இதமாக இருந்தது… இதுவரை ஆபீஸ் வீடு என்று தனிமையில் இருந்தவள் முதல் முறை இது போல வெளியே வருகிறாள்.
இவர்களின் கொண்டாட்டங்களை பார்க்கும் போது அதில் கலந்து கொள்ளவெல்லாம் அவள் மனம் விழையவில்லை… என்னவோ இப்படி உட்கார்ந்து பார்ப்பதற்கே மனம் குதூகலித்தது.
ஆஃபீசிலும் யாரோடும் அதிகம் பேச மாட்டாள்… இதழ் பிரியாத சிரிப்போடே எல்லோரையும் கடப்பவள் இன்று இதழில் உறைந்த புன்னகையோடு இருந்தவளின் மகிழ்ச்சி அவள் கண்களையும் எட்டி இருந்ததை கண்டு கவியும் அமுதனும் நெகிழ்ந்தனர்.
அனைவரின் ஆரவாரங்கள் சிறிது ஓய்ந்ததும் அவர் அவர்கள் இடத்திற்கு நகர, அமுதன் கடைசி இருக்கைக்கு செல்ல அவனை பிடித்து குழலியின் அருகே அமர வைத்த கவி,
“எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு அமுதன்… நான் போய் லாஸ்ட் சீட்ல ரெஸ்ட் எடுக்கறேன்…” என்று சென்றவனை மறுக்க முடியாமல் மனைவியின் அருகே அமர்ந்தான்.
அவன் அமர்ந்ததும் அவளிடம் தென்பட்ட பதட்டத்தை உணர்ந்தவன், தன்னுள்ளும் அதே பதட்டம் எழுவதை அறிந்து ஒரு பெரு மூச்சை வெளியிட்டு முதலில் தன்னை நிலைப்படுத்தினான்.
ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவளை அழைக்க அவனை நோக்கி திரும்பினாள்,
“ஏன் இவ்வளவு பதட்டப்படுற? நான் உன் பக்கத்துல உட்கார்றது பிடிக்கலையா? நான் வேணும்னா வேற சீட் மாறிடவா?” என்று தயக்கமாக அமுதன் கேட்டதும்,
“இல்ல இல்ல அப்படியெல்லாம் இல்லை…” என்று வேகமாக மறுத்தாள்.
“ம்ம்ம் சரி…”
“ஆமா கவி ரொம்ப ஜாலியான ஆளு தானே அப்ப நிறைய வம்பும் கொண்டு வருவான் போல… அப்புறம் எப்படி இந்த அளவுக்கு பிசினஸ் எல்லாம்….” என்று அவன் கவியை பத்தி ஆரம்பித்ததும், இதுவரை இருந்த தயக்கத்தையும் பதட்டத்தையும் துறந்தாள்.
“கவி அப்பா பெரிய பிசினஸ் ஆளு கொஞ்சம் பெரிய இடமும் கூட… இவன் ஒரே பையன்… அதனால செல்லம் அதிகம்… சார் நல்லா ஊரை சுத்திட்டு என்ஜாய் பண்ணுவாரு… ஆனால் தப்பான பழக்கம் எதுவும் இல்லை… வாழ்க்கையை சீரியஸா பார்க்க பிடிக்காது… அவன் இருக்க இடம் எப்பவும் சிரிப்பும் சந்தோசமும் தான்…”
“அவங்க பேரெண்ட்ஸ் போன அப்புறம் மொத்த பொறுப்பும் இவன்கிட்ட வந்ததும் தான் வாழ்க்கையையே உணர ஆரம்பிச்சான்… முதல்ல ஒரு வருஷம் இரண்டு பேரும் வெளிய ஒரு கம்பெனில வேலை செஞ்சோம்…”
“அவனாலே அதுவே தாக்கு பிடிக்க முடியல… அப்புறம் தான் இரண்டு பேரும் சேர்ந்து இந்த கம்பெனி ஆரம்பிச்சோம்.. கொஞ்சம் கொஞ்சமா எல்லோரையும் பார்க்க பேசன்னு ப்ரொஜக்ட் கிடைக்க ஆரம்பிச்சது…”
“அவங்க அப்பா பணத்துல ஆரம்பிச்சிருந்தாலும் எல்லாமே முழுக்க முழுக்க அவனோட உழைப்புல கிடைச்ச வெற்றி தான்…” என்று மடை திறந்த வெள்ளமாய் நண்பனை பற்றி பெருமையோடு சொன்னவளை ஆதுரமாக பார்த்தவன்,
“சரி! இவ்வளவு நாள் அவன் கூப்பிட்டும் கூட நீ எங்கயும் வெளிய போனதில்லையாம்… ஏன் அப்படி?” என்று கேட்டதும் தயங்கியவளைப் பார்த்து,
“சொல்லு குழல்!” என்றான்.
“என்னோட கடந்த கால வாழ்க்கையில இருந்து நானே வெளிய வர நினைச்சாலும் இந்த உலகம் என்னை அதை சுற்றியே சில சமயம் நிற்க வைக்கும்… சில சமயம் நான் சந்தோஷமா சிரிச்சா கூட ஏதோ தப்பு பண்ண மாதிரி பார்க்கும்…”
“ஏன்னா நான் விவாகரத்து ஆனவ அதனால இந்த உலகம் எப்படி சொல்லுதோ அப்படி தான் நான் இருக்கணும்… அதுல கொஞ்சமும் மாற கூடாது…”
“ஏன்னா இந்த மனுஷங்களுக்கு அவங்க வாழ்க்கையை விட என்மேல அவ்வளவு அக்கறை… இங்க நம்ம ஆபீஸிலும் முதல்ல எங்க நட்பை தப்பா தான் பார்த்தாங்க… அப்புறம் போக போக புரிஞ்சிக்கிட்டாங்க… இது போல எவ்வளவு பேர்கிட்ட போய் நாங்க விளக்கம் கொடுக்க முடியும்…”
“அதுவில்லாம வெளிநாடுன்னு நான் போய் பட்ட அனுபவமே இன்னும் மனசுல ஆறாத வடுவா இருக்கு… அதனால எனக்கு என்னவோ வெளிய போறதுக்கு எல்லாம் விருப்பம் இல்லாம போச்சு…”
“ஆனால் இப்ப இவங்க சந்தோஷத்தை பார்க்கும் போது நான் இதெல்லாம் மிஸ் பண்ணிட்டேனோன்னும் இனி இதெல்லாம் மிஸ் பண்ண கூடாதுன்னும் தோணுது…” என்று ஆதங்கமாக சொன்னவளின் கையை ஆதுரமாக பிடித்ததும் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“கவி மட்டுமில்லைன்னா எனக்கு பேச்சும் சிரிப்பும் மறந்திருக்கும் போல… ஒரு நண்பனா அவன்கிட்ட என்னோட கஷ்டங்களையும் சந்தோஷத்தையும் நான் பகிர்ந்துக்க முடியும்… ஆனால் அதுக்கும் ஒரு எல்லை உண்டு தானே…”
“என்னோட உணர்வுகளை உரிமையா நான் யார் கிட்ட சொல்ல முடியும்… எனக்கு இப்ப கத்தி அழணும் கத்தி சிரிக்கணும் போல இருக்கு…” என்றவள் அவன் தோளில் தன் முகத்தை புதைக்க அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.
ஏனோ அவன் தன்னை பேச வைத்து ஆறுதலாக கை பிடித்ததும் இதற்காக காத்திருந்தது போல தன்னுடைய மன குமுறல்களை அவனிடம் கொட்டி கொண்டிருந்தாள்.
“ஷ்! குழல் ! இனி யாருக்காகவும் எதுக்காகவும் யோசிக்காத… உன்னோட சிரிப்பும் சந்தோஷமும் மத்தவங்க கையில இல்லை புரியுதா… உனக்கு என்ன தோணுதோ அதை செய்… என்ன பேசனமோ பேசு… நான் இருக்கேன்… புரியுதா…” என்று அழுத்தமாக சொன்னவனை ஏறிட்டு பார்த்தவள், அப்போதே இருக்கும் நிலை உணர்ந்து விலக முயற்சிக்க அவனின் அணைப்பு இறுகியது.
“இனியும் எதிலிருந்தும் விலகி போகாத என்னையும் சேர்த்து தான் சொல்றேன்… இனி உனக்கு என்கிட்ட எந்த தயக்கமும் இருக்க கூடாது சரியா… அங்க போய் சுத்தி பார்க்க தெம்பு வேணும்ல… இப்ப கொஞ்ச நேரம் தூங்கு…” என்று ஆதரவாக சொன்னவனிடம் மறுக்க தோணாமல் கண் மூடினாள்.
இங்கு இவர்கள் ஓய்வெடுக்க, ஓய்வெடுக்க சென்றவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.
“மிஸ் அபிநய சரஸ்வதி! எனக்கு ஜன்னல் சீட் வேணும்… கொஞ்சம் நகர்ந்துக்கோங்க…” என்று அவளிடம் வம்பளக்க, அவளோ அவனை முறைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போல வெளியே திரும்பி கொண்டாள்.
“எனக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்கு சீக்கிரம் நகருங்க…” என்று ஓக்கரிக்க, அவளும் அதை உண்மை என்று பயந்து நகர வேகமாக ஜன்னலோரம் உட்கார்ந்தவன் தலையை பின்னோக்கி சாய்த்து தூங்க ஆரம்பித்தான்.
கடைசியில் ஆறு பேர் அமரும் இருக்கையில் கவியோடு இவளும் சேர்த்து நான்கு பேர் உட்கார்ந்திருக்க, இவள் அவனருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அவனை முறைத்தவாறே உட்கார்ந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் தூக்கத்தில் அவன் இவள் புறம் சாய தலை தோளில் பட்டதும் இவள் பதறி எழ, அவன் பொத்தென்று சீட்டில் விழுந்த அடுத்த நொடி வண்டியின் குலுக்கலில் கீழே விழுந்து இருந்தான். என்ன நடந்தது என்று கிரகிக்கவே அவனுக்கு நிமிடம் ஆனது…
“சாரி! சாரி ! நான் வேணும்னு பண்ணல…சாரி !…” என்று பதட்டத்தோடு கண்கள் கலங்க சொன்னவளை பார்த்தவனுக்கு என்னவோ போல ஆனது.
அருகே இருந்த மற்ற நபர்கள்,
“என்ன மேடம் சாரை இப்படி தள்ளி விட்டுடீங்க…” என்று கிண்டலில் இறங்க அவர்கள் முகம் காணாமல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு தான் எதுவம் செய்யவில்லை என்பதை போல தலையசைத்தாள்.
மற்றவர்களின் கிண்டலை அடக்கியவன் அவளை ஜன்னலோரம் அமர வைத்து அவளருகே அமர்ந்தான்.
“எப்பவும் திரும்ப திரும்ப பேசுற உன் பேச்சு எங்க போச்சு? எதுக்கு இப்ப உன் கண்ணு கலங்குது? உங்கிட்ட முதல் முறை இந்த மாதிரி ஒரு அபிநயம் பார்க்கிறேன்… என்னாச்சு உனக்கு?” என்றவன் அவளை கேட்டும் அவள் அமைதியை தொடர, கண்ணீரோ இப்பவோ அப்பவோ என்று எட்டி பார்த்தது.
“அபிநய சரஸ்வதி! உன்னை தான் கேட்கிறேன் என்னாச்சு? இப்படி அமைதியா இருந்தா எப்படி?” என்று காட்டமாக கேட்டவனை பார்த்ததும் அவளின் கண்ணீர் கரை கடந்தது.
“ஷ்! எதுக்கு இப்படி ஒரு அழுகை… எதாவது பிரச்சனையா? முதல்ல கண்ணை துடை….” என்று அவன் அதட்ட அவள் கண்ணீர் மட்டுப்பட்டது.
“இப்ப என்னன்னு சொல்ல போறியா இல்லையா?” என்றவனை பார்த்து,
“இப்ப எல்லாம் நீங்க என்னை ரொம்ப திட்டறீங்க? உங்களுக்கு என்னை பிடிக்கல… காரு அக்காவுக்காக தான் என்னை வேலைக்கு எடுத்து இருக்கீங்க? இப்ப கூட திடீர்னு நீங்க தோள் மேல சாயவும் பதட்டத்துல தான் எழுந்தேன்…”
“நீங்க விழுவீங்கன்னு எதிர்பார்க்கல… நான் எதுவும் வேணும்னு பண்ணலை ஆனால் எது நடந்தாலும் நீங்க என்னையை தான் திட்டறீங்க?” என்று தேம்பலோடு அழுது கொண்டே சொன்னவளை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் நின்றான்.
“சரி எப்பவும் இது மாதிரி எதுவும் நடந்தா நீ திரும்ப பேசவ தானே அப்புறம் என்ன? எதுக்கு இதுக்கு போய் அழுதுட்டு இருக்க?” என்று அவன் கேட்டதும்,
“தெரியல… நான் இப்படி கிடையாது… ஆனால் நீங்க திட்டினா மட்டும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்றவளை பார்த்து அதிர்ந்தான்.
“அன்னைக்கு இதனால தான் ட்ரிப்க்கு வரலைன்னு சொன்னேன்… ஆனால் நீங்க என்கிட்ட கையெடுத்து கும்பிடறீங்க… எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? உங்களுக்கு என்மேல என்னவோ வெறுப்புன்னு தோணுது… இந்த ட்ரிப் முடிஞ்சதும் நான் வேலையை ரிசைன் பண்றேன்…” என்றவளை பார்த்து முறைத்தவன்,
“போற எல்லா இடத்திலும் இது போல திட்டினா இப்படி தான் வேலையை விட்டு நிற்பியா?” என்று கேட்டதும்,
“உங்களை போல அவங்க கோபத்தை எல்லாம் என்கிட்ட காட்ட மாட்டாங்க… அதை விட உங்களோட கோபம் போல அவங்க கோபம்லாம் என்னை ஒன்னும் பாதிக்காது… நீங்க திட்றது தான் எனக்கு கஷ்டமா இருக்கு… ஏன்னு தெரியல…” என்றாள்.
அவளே உணராத மனதை அவன் உணர்ந்ததும் யோசனைக்கு சென்றவன் எதையோ முடிவு செய்து,
“சரி ! இதான் இந்த கம்பெனியோட நீ வர கடைசி ட்ரிப்ன்னு நினைச்சு என்ஜாய் பண்ணு… வேற எதுவும் யோசிக்காத… ட்ரிப் முடிஞ்சு வந்ததும் உன்னோட ரிசைன் லெட்டரை அனுப்பி விடு… நான் அப்ரூவ் பண்றேன்…” என்றவனை பார்த்து திகைத்தாள்.
“சாரி! காரு மேல இருக்க அக்கறையில உங்கிட்ட அந்த கோபத்தை காட்டிட்டேன்… சாரி!..” என்று சொல்லி விட்டு அவளின் முகத்தை காண இயலாமல் சீட்டில் சாய்ந்து கண் மூடினான்.
ஆறு மணி நேரம் பயணம் முடிந்து நள்ளிரவு நேரம் எல்லோரும் கூர்கை அடைந்தனர். அவர்கள் புக் செய்திருந்த ஓட்டலில் கவியும் அமுதனும் ஒரு அறைக்கு செல்ல, சரஸ்வதியும் குழலியும் இன்னொரு அறைக்கு சென்றனர்.
அதற்குமுன் கவி குழலியை தனியே அழைத்து சென்று ஏதோ சொல்ல, அவளோ அவனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.
அப்படியும் கவி இறங்கி வராமல் போக அவனை முறைத்தபடி அங்கிருந்து நகர்ந்தவளைப் பார்த்த அமுதன் என்னவென்று கேட்டதும் கவி சொன்ன பதிலில் அவன் தான் அதிர்ந்து நின்றான்.