“வர்ஷூ… நீ சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சி தான் … நீ சொன்னது போல பரிதாபம் கூடத்தான் … எனக்கு உன்னை ஷர்மி ஆன்ட்டி பொண்ணுனு மட்டும் தான் தெரியும் .. அம்மாவும் கல்யாணப் பேச்சு வரவும் உன்னையப் பத்தி ரொம்ப வருத்தப்பட்டுப் பேசவும் தான் நான் ஓகே சொன்னேன் … நீ சைகையாலப் பேசுறது சரியா புரியல தான் … ஆனா நீ பேசும் போது உன் கண்ணுல காதல் அப்பட்டமா தெரியுது … ஆனா அது எனக்கானது இல்லனு நல்லாவேத் தெரியுது…. எனிவே…. நாம நல்ல ஃபிரண்ட்ஸா இருந்துக்கலாம் … நான் அம்மா அப்பா கிட்ட பேசிக்கிறேன்… வா” எனத் திரும்பியவனை வேகமாக கை தட்டி அழைக்க , திரும்பியவன் அவளைப் பார்க்க… தயங்கி நின்றவளிடம் ,
“நான் என் கருத்தை மட்டும் தான் சொல்வேன் … உன்னைப் பத்திப் பேச எனக்கு உரிமையில்ல… சோ நோ டென்ஷன்….”
உள்ளேச் சென்றவன் என்ன சொன்னானோ … மண்டபத்தில் அவர்களுக்கு முதல் தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு விஸ்வனாதனும் அரவிந்தும் சென்றனர்.
உள்ளே என்னப் பேச்சுக்கள் நடந்ததோ , சிவாவும் ராணியும் விஸ்வனாதனைத் தேட , அவர்களை மற்றவர்கள் தேட என இப்போது வரு வீட்டினர் அனைவரும் சத்தம் அதிகம் வந்த அந்த அறையின் வெளியே நின்றனர்.
மணப்பெண் வித்யாவும் பதற்றத்தில் நிற்க , ஆதியும் வந்தவன் அங்கு இந்தியில் நடைபெற்ற பேச்சுக்களில் புரிந்துக் கொண்டது … விஸ்வனாதன் மகள் திருமணத்தில் ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புலப்பட்டது.
வெளியில் ரிதேஷிடம் பேசிய நிம்மதியில் ….தன் ‘கணபதி பப்பா ‘விடம் நன்றியையும் ..தன் கோரிக்கைகளையும் வைத்து விட்டு மகிழ்ச்சியோடு வந்தவள் , முதல் தள படியருகே இருந்த அறை முன் குழுமியிருந்த தன் உறவினர்களைக் கண்டு அங்கு செல்ல , அவள் கண்டது ,
பதற்றமாக வெளியே வந்த விஸ்வனாதன்… சிவனாதன் அங்கு நிற்கவும் அவரிடம் ஏதோ கேட்டு உள்ளே அழைத்துச் செல்ல , பின்னால் வந்த வரு கேட்டது பார்த்தது ,
ரிதேஷின் அப்பா அம்மா முன் அரவிந்த் நிற்க , சிவனாதனை முன் கொண்டு நிறுத்திய விஸ்வனாதன் ,
” கிஷோர் … என் அண்ணன் முன்னாடி சொல்றேன்….ஷர்மிக்கு அவங்கப்பா கொடுத்தது … எனக்கு எங்கப்பா தந்தது … இப்ப என் சம்பாத்தியத்துல வாங்கின ஹாஸ்பிட்டல்ல முக்கால் பங்கு .. எல்லாம் என் பொண்ணுக்குத் தான்னு எழுதியிருக்கேன்… இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லு கிஷோர் … என் தலைய வச்சுனாலும் வாங்கித் தாறேன்…எப்படியாவது இந்தக் கல்யாணம் நடக்கணும் … என் பொண்ணுதான் என் உலகம் …. தக்ஷ் … அதோட அவள் மெடிக்கல் ரிபோர்ட் …. ” என மகனைப் பார்க்க , தன் மொபைலை எடுத்து கை நடுங்க ஒரு ஃபைலை ஓபன் செய்யப் போக , தடுத்த
ரிதேஷ் …
“வேண்டாம் அரவிந்த் ….அங்கிள் சாரி….. நீங்க என்னை மட்டுமில்ல வர்ஷூவையும் காயப்படுத்திட்டீங்க … அம்மா .. அப்பா..வாங்க..” என்றவன் வெளியே செல்ல , கிஷோரும் கோமலும் பின்னேயே சென்றனர்.
அவர்கள் வருவுக்கு மறுபுறம் செல்ல , கேட்டுக் கொண்டிருந்த வரு .. மாடியில் இருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே பின்னே செல்ல , அப்போதுதான் தங்கையை கவனித்த அரவிந்த் … “பாப்பா … ” என்றவாறு பாய்ந்தவன் அவள் பின்னால் விழாமல் பிடித்து இழுக்க , அவள் பாரம் அழுந்த கீழே இருவருமே அமர்ந்த நிலையில் விழுந்தனர்.
அனைவரும் பதற்றத்தோடு அருகில் வர ,இப்போது அண்ணனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்த வரு , சைகை மூலமாக கண்ணீரோடு ,
” ண்ணா … எனக்கு அந்தப் பணம் ஈடாண்ணா … அதாவது இந்த உடம்புக்கு … என் மனசு… என் படிப்பு …என் திறமை… இது எதுவுமே பெரிசில்லயா…..” கண்ணீரோடு மூச்சு வாங்க அவள் இதயம் தொட்டும் , படிப்பது போல் காண்பித்தும் சைகையால் சொல்ல சொல்ல … பார்த்த புரிந்தவர்கள், புரியாதவர்கள் அனைவருக்கும் மனம் கனக்க வைக்க , பெண்களுக்கு கண்ணீரே வர , விஸ்வனாதன் அருகில் வந்தவர் ,
அவள் தலையை நெஞ்சோடு அழுத்தி ,
“இல்லடா … இல்ல .. தப்புதான் …. அப்பா சொன்னது , செய்தது எல்லாம் தப்பு தான் … மன்னிச்சிருடா எம்பொண்ணுக்கு , உன் மனசுக்கு எதுவுமே ஈடாகுது….” என கண்ணீர் வடிக்க , அரவிந்த் கையிலிருந்த மொபைலைக் காட்டி ….
” இதை காட்டி … என்னைப் ப்ரூப் பண்ணி தான் … எனக்கு கல்யாணம்னா … அந்தக் கல்யாணமே எனக்கு வேண்டாம் பா … நான் கடைசி வரை உங்கக் கூட உங்கப் பொண்ணாவே இருக்கிறேன்….எனக்கு என் படிப்பு … என் விக்கி … ” எனச் சொல்ல வந்தவள் அப்போதுதான் அங்கிருந்த அனைவரையும் உணர்ந்தவள் ,
“விக்கியோட நினைவு போதும் …” என மனதுள்ளும்…” போதும்” என்பதை வெளியேயும் சைகையால் சொல்லிவிட்டு , எழுந்தாள்.அதுவரை மெளனமாக அழுத வித்யா… தன் தோழியின் இந்த நிலைப் பார்த்து கேவல் வெளிப்பட அருகில் வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.
அரவிந்த் … இப்போது வித்யாவின் பெற்றோர் இருந்தப்பக்கம் பார்த்து … கை கூப்பியவன்… ஏதோ சொல்ல வாயெடுக்க , அவன் குணம் அறிந்தவள் வித்யாவின் முகம் பார்த்து விட்டு…. அண்ணன் அருகில் சென்று அவன் கையை கீழே இறக்கியவள் , சைகையால்…
“வேண்டுமண்ணா … “எனக் கெஞ்ச …
” உன் சந்தோஷம் தானம்மா … என் சந்தோஷம்…. என் பாப்பா….” என்றவனது குரல் கரகரக்க தங்கையின் தோளைப் பிடித்து அணைத்துக் கொண்டு ….
“என் பாப்பாவ இப்படி பார்க்க முடியலமா… அப்பா நீ பொறந்ததும் , பாப்பாவ நீதான் பார்த்துக்கணும் சொன்னாங்க … அப்ப இருந்து இப்ப வரை நான் அதை செய்துட்டு தானே மா … இருக்கிறேன் ….இனியும் உனக்காக செய்வேன் மா…. ”
தேகம் வேறு ஆகலாம்
ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும்
அண்ணன் என்னை பாரம்மா….
இத்தனை நேரம் கவனித்துக் கொண்டிருந்த அனைவருக்குமே புரிந்தது … அரவிந்த் என்ன சொல்ல வருகிறான் … வரு எதை சொல்லவிடாமல் தடுக்கிறாள் என்று .இந்தப் பாசப்போராட்டங்கள் அனைவரையும் பார்த்தது பார்த்தப் படி வைக்க … ஒரு பள்ளித் தாளாளர் … ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த மகள்… சூழ்நிலை உணர்ந்து , நேரம் உணர்ந்து , தன் கணவரை ஒருப் பார்வைப் பார்த்து ‘ செய்ய வா’ என்றுக் கேட்கவில்லை …..’ நான் செய்கிறேன்’ என்பதை மட்டும் அவர்களுக்கு உணர்த்த , விக்கிரமராஜாவுக்கும் சங்கர வள்ளிக்கும் அப்படியொரு பெருமை மருமகளை நினைத்து , கண்களாலேயே வெள்ளை மீசையைத் தடவிக் கொண்டு ,
” செய் மருமகளே….” என ஆதரவுத் தெரிவிக்க , விஸ்வனாதன் முன் தன் மகன் விக்ரமாதித்யனின் கைப்பிடித்து அழைத்துச் சென்று ,
“அமிர்தவர்ஷினியை என் மருமகளாக்க விரும்புகிறேன்…. என் மகனுக்குத் தருவீர்களா…” எனக் கேட்டார். அதன் பின்னான விக்ரம் ..அமிர்தா , வித்யா .. அரவிந்த் அனைவர் மனநிலையும் நாம் அறிந்ததே …
எதற்கும் வருவை விக்ரமிடம் தனியாக பேச சொல்ல , “என் அம்மாவிற்குத் தெரியும் எனக்கு எந்தப் பெண் துணையாக வரவேண்டும் … “என்று விட்டான். அரவிந்த் தனியாகப் பேச முயலும் போதும் அதுவே …
“அவளுடனான என் எதிர்காலம் மட்டுமே போதும் … “என்று விட்டான்.
லதாவிடம் , ” ம்மா தன் தங்கச்சிக்காக தன்னோட கல்யாணமே வேண்டாம்னு சொல்ல வந்த தக்ஷனுக்காகவே அவன் தங்கச்சிக்கு என்ன பிரச்சினைனு தெரிஞ்சுக்க விரும்பலைமா… அவள அவளுக்காக மட்டும் ஏத்துக்க விரும்புறேன்.” என்று விட்டான்.
சங்கரி நாள் பார்த்தவர் என் பேரனுக்கு இந்தக் கார்த்திகைய விட்டா … இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் கல்யாண யோகம் … அதனால கார்த்திகை கடைசி முகூர்தத்திலயே கல்யாணம் வச்சுருவோம்” என்றதும் .. லதா அன்றிலிருந்து மூன்றாம் நாளே அந்த முகூர்த்தம் என்பதைக் கூற… அனைவரும் விழித்தாலும் அதுவும் நம் அரவிந்த் விழித்ததற்கான காரணம் நாம் அறிந்தாலும்….. திருமணம் இனிதே வட பழனி முருகன் முன் நடைபெற்றது……
மாமழை உருமின் || பல்லியம் கறங்க ||
பூமழை பொழிய || வெண்நறை பொங்க ||
தூமொழி மாந்தர் || ஓராங்கு வாழ்த்த ||
தூர்பெழு துகளது || விண்ணுற எய்த ||
ஆர்ப்புடன் பாயும் || பொதுவர் அன்னதோர் ||
வீரமே தலையா || கொண்டுஎந் நாளும் ||
இன்னல் உற்றுழி || முன்னின் றகற்றி ||
கன்னல் அன்னதோர் || கனிமொழி பயிற்றி ||
அண்ணாந் தேந்திடும் || ஒண்ணுதல் தளரினும் ||
நன்னெடுங் கூந்தல் || நரையொடு முடிப்பினும் ||
என்னகம் பிரியா || உயிர்ப்பிணிக் காதலின் ||
பெண்ணியம் போற்றிட || வேண்டுவென் யானே. ||
பொருள் விளக்கம்:
கார்மேகங்கள் எழுப்பும் இடியோசை போல பல இசைக்கருவிகள் டும்டும் டுடும்டும் என்று பேரொலியுடன் முழங்க, பூவிதழ்கள் மழைபோலச் சொரிய, வெண்ணிற நறுமணப் புகைப் பொங்கி எழ, தூய உள்ளம் கொண்ட மனிதர்கள் பலரும் ஒன்றுகூடி வாழ்த்த, நிறைந்து எழுகின்ற புழுதியானது விண்ணைச் சென்று முட்ட, பேரொலியுடன் பாய்கின்ற மாடுபிடி வீரர்களைப் போல வீரத்தையே எந்நாளும் தலைமேற்கொண்டு, எனக்குத் துன்பம் வந்தபோது முன்னின்று அதனை நீக்கியும், கரும்பினைப் போல இனிமையான மொழிகளை என்னிடத்தில் பேசியும், தலைநிமிர்த்திப் பார்த்து நீர் புகழும் எனது கண்கள் சோர்வடைய, நீண்ட எனது கூந்தல் நரைத்துப் போகின்ற முதுமையிலும் என்னைவிட்டுப் பிரியாமல், என் உயிருடன் கலந்த காதலைக் கொண்டவனாக, எனது பெண்மையைப் போற்றவேண்டும் என்று நான் உம்மை வேண்டுகிறேன்.
மணமகன் பூட்கை:
மண்ணகம் பிறழினும் || மாதிரம் பொய்ப்பினும் ||
கண்ணிமை போலநம் || காதலைக் காக்குவென் ||
பொம்மல் விசும்பின் || பெயல்கலந் தேற்ற ||
செம்புலப் பெயல்நீர் || போலஎந் நாளும் ||
அன்புடை நெஞ்சினில் || வீரமும் கொண்டே ||
உன்னகம் விழைந்ததை || உறுத்துவென் யானே. ||
(இந்தப் பூமியின் சுழற்சியே தறிகெட்டுப் போனாலும் திசைகள் அனைத்தும் தடம்மாறிப் போனாலும் கண்ணிமையைப் போல நான் நமது காதலை நெறிகெடாமல் காப்பாற்றுவேன். திரண்ட மேகங்கள் பொழிந்த மழைநீர் கலந்ததால் குழைந்த செம்மண் நிலம்போல எந்நாளும் உன்மேல் கொண்ட அன்பினால் குழைந்த என் நெஞ்சில் வீரமும் மிக்கவனாக உன் உள்ளம் விரும்பும் அனைத்தையும் நான் ஈடேற்றுவேன்.)
(நன்றி … செம்மொழித் திருமண மந்திரம்)
விக்ரம ஆதித்யனும் ..அமிர்தவர்ஷினியும் இப்பாடலுக்கு ஏற்றார் போல் தான் வாழ்கிறார்கள் என்பதை நாம் அறிந்தோம் தானே …
தேன் துளி ஒவ்வொன்றும் நிறைந்து தேன் மழையாக தூவியது என்று நம்புகிறேன்.
மழை ….தேன்மழை…