“இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம். ஆனால் உங்களுக்கு கல்யாண வேலை நிறைய இருக்கும். நீங்க பாருங்க.” என்றார் தணிகாசலம்.
மூவரையும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார் தணிகாச்சலம்.
அண்ணாமலை ஸ்டோர் முன்பு காரை நிறுத்திய மாதவன் இறங்கி உள்ளே வந்தான்.
“நடராஜ்” என்று அங்கு வேலை செய்து கொண்டு இருந்த நடராஜனை அழைத்தான்.
“என்ன சொல்லுங்க தம்பி.” என்று கேட்டபடி அங்கு வந்தார் அவர்.
“நானும் அப்பாவும் சென்னையில் ஒரு கல்யாணத்திற்கு போயிட்டு நாளைக்கு நைட்டு தான் வருவோம். அதனால நீங்க கடையை சாத்தி சாவியை எடுத்து வந்து அண்ணிகிட்ட கொடுத்துட்டு திரும்ப காலையில் சாவியை வாங்கிட்டு வந்து கடையை திறந்து பார்த்துக்கோங்க. சரிங்களா ?”.என்று கேட்டான் மாதவன்
“சரிங்க தம்பி. நாங்க பாத்துக்குறோம்.”
என்றார் நடராஜ்.
“சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கூறிய மாதவன் தன் அறைக்கு சென்று வரவேண்டிய சரக்கு வந்துவிட்டதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கைபேசி ஒலித்தது.
அதனை எடுத்து மாதவன் “சொல்லுங்கம்மா.” என்றான்.
“என்னடா மாதவா? காலையில பத்திரிக்கை வைப்பதற்காக காரில் சுத்திகிட்டு இருந்த. இப்போ கடைக்கு போய் இருக்க. அப்புறம் திரும்ப சென்னைக்கு காரை ஓட்டிட்டு போகணும். கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் இல்லையா? எதுக்குடா இப்படி ரெஸ்ட் எடுக்காம அலைந்துகொண்டு இருக்க?
உடம்பு என்னத்துக்கு ஆகும்? கார் ஓட்டும்போது தூங்கிட போற. கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் .” என்று அக்கறையாக கூறினார் பார்வதி.
“எங்கம்மா இன்னும் நான் டிரஸ் எடுத்து வைக்கவே இல்லை.”
“ஏண்டா நேத்தே உன்னை எடுத்து வைக்க சொன்னேன் இல்லையா?” என்று சிறிது கோபத்துடன் கேட்டார் பார்வதி.
“ஆமாம்மா நினைச்சுக்கிட்டே இருந்தேன். அப்பறம் அப்படியே தூங்கிட்டேன். “
“சரி சரி. நான் எடுத்து வைக்கிறேன்.”
“நல்லதா அயன் பண்ணியிருக்கிற டிரஸ் எடுத்து வைங்க. “
“சரிடா நான் அதெல்லாம் பார்த்துகிறேன். நீ வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் தூங்கு.”. என்றார் பார்வதி
“இல்லமா நான் இங்கேயே கொஞ்ச நேரம் தூங்குகிறேன்.”. என்றான் மாதவன்
“இல்லை இல்லை. நீ வீட்டுக்கு வா. நடராஜ் பாத்துக்குவார். அங்கே யாராவது உன்னை தொந்தரவு பண்ணுவாங்க. இங்க வந்தா நிம்மதியா தூங்கலாம். நீ வாடா முதல்ல.” என்று அதட்டிய படி போனை வைத்தார் பார்வதி.
வேறு வழி இன்றி வீட்டுக்கு சென்றான்.
“என்னமா என்ன டிரஸ் எடுத்து வைத்து இருக்கீங்க ?”என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மாதவன்.
“எல்லாம் நல்ல டிரஸ் தான் எடுத்து வைத்திருக்கிறேன். நீ போய் தூங்கு.” என்று துணி எல்லாம் எடுத்து வைத்து மூடி இருந்த பெரிய பையை காண்பித்தார்.
“என்னம்மா பேக் சைஸ் பெருசா இருக்கு?”. என்று கேட்டான்
“கொஞ்சம் பழம் வைத்திருக்கிறேன். போகும்போது ரெண்டு பேரும் சாப்பிடுங்க.”
“சரிமா” என்று கூறியவன் தன் அறைக்கு சென்று படுத்தான்.
படுத்து அடுத்த நிமிடம் அசதியில் உறங்கினான்.
வீட்டு தொலைபேசி அடித்தது. அந்த சத்தத்தை கேட்டு எழுந்து தன் அறையில் இருந்து ஹாலுக்கு வந்தான் மாதவன்.
“ஓ அப்படியா?” என்று பார்வதி ஆர்வமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.
“ போட்டோ கொடுத்து அனுப்புறிங்களா சரிங்க ரொம்ப சந்தோஷம் .” இன்று ஆனந்தமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.
“மாதவா சாப்பிட வா.’ என்று கூப்பிட அவன் எழுந்து சென்றான்.
மலர் அவனுக்கு பரிமாற அவன் சாப்பிட ஆரம்பித்தான்.
அப்போது பார்வதி வாயெல்லாம் பல்லாக அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
“டேய் ஜோசியக்காரர் சொன்னது உண்மை தாண்டா. உன்னை தேடி பொண்ணு வந்துருச்சு.”. என்று ஆனந்தமாக கூறினார்.
“என்னம்மா சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டான் மாதவன்.
“இன்னிக்கி காலைல தணிகாச்சலம் வீட்டுக்கு போன இல்ல?”
“ஆமாம் அதுக்கு என்ன இப்போ?”. என்று கேட்டான்
“அவரோட பொண்ணு ரூபவதி பாத்தியாடா?”
“பார்த்தேன்.” என்று ஆர்வம் இல்லாமல் கேட்டதற்கு பதில் கூறினான் மாதவன்.
“அந்த பொண்ணு எப்படி இருந்தா?” என்று அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டார் பார்வதி.
“அழகா இருந்தா.” என்றான் மாதவன் சாதாரணமாக.
“நான் அந்த பொண்ணை கோயிலில்அவங்க அம்மா கூட பார்த்திருக்கிறேன். ரொம்ப அழகா இருப்பா. பெரிய கண்ணு. அவங்க அம்மா மாதிரியே நல்ல நிறம். மூக்கும் முழியுமா பார்க்கிறதுக்கு அவ்வளவு அழகா இருப்பா.” என்று அவளை வர்ணித்தார் பார்வதி.
“சரிமா அதுக்கு என்ன?” என்று கேட்ட மாதவனுக்கு புரிந்து போயிற்று.
அவ்வளவு நேரம் பார்வதியிடம் கவனம் செலுத்தாமல் சாப்பாட்டில் கவனத்தை செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்த மாதவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு
“அம்மா” என்று கூப்பிட்ட படி அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“என்னமா பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று அதிர்ச்சியாக கேட்டான்.
“ஆமாண்டா ஜோசியர் தான் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லி இருக்கிறார் இல்ல? அதான். நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைத்திருந்தேன். அவங்க மூலமா தனி eகாய்ச்சலுக்கு தெரிஞ்சு போய் இருக்கு. இன்னிக்கு காலையில உன்னை பார்த்த தனி eகாய்ச்சலுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு போல இருக்கு.” என்று கூறவும் மாதவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. ‘ஏண்டா அங்க போன’. என்று தன்னைத்தானே மனதிற்குள் கேட்டுக்கொண்டான்
‘எப்படி வேணாம்னு சொல்றது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் பார்வதி
“நீ என்னடா சொல்ற? குடும்பம் நல்ல குடும்பம். நமக்கு தூரத்து சொந்தம் வேற. நமக்கு பெண் கொடுக்க ஆர்வமாகவும் இருக்காங்க. இதைவிட நல்ல இடம் நமக்கு அமையாது டா. “ என்று அவனை சம்மதிக்க வைப்பதில் குறியாக இருந்தார் பார்வதி.
அவரது முகத்தைப் பார்த்து வேண்டாம் என்று எப்படி சொல்வது என்று தடுமாறினான் மாதவன்.
அவர் மேலே ஆர்வமாக பேசிக்கொண்டே இருக்க பொறுக்கமுடியாமல்
“அம்மா அவசரப்படாதீங்க மா. முதலில் உங்க அறுபதாம் கல்யாணத்தை பண்ணலாம். அதுக்கப்புறம் என் கல்யாணத்தை பத்தி பேசலாம். பொறுமையா இருங்க. அதுவும் இல்லாம கல்யாணம் பண்றதுக்கு எனக்கு அந்த பொண்ணை பிடிக்கணும். அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கனும் இல்லையா?”. என்று கேட்டான்
“அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்காமல் தான் அவங்க நம்ம கிட்ட நம்ம கிட்ட பேச சொல்லி இருக்காங்களா?” என்று கேட்டார் பார்வதி.
“சரி அப்போ எனக்கு அந்த பொண்ணை பிடிக்கணும் இல்லையா?”
“ஏண்டா அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்?” என்று அந்த பெண்ணிற்காக பரிந்து பேசினார் பார்வதி.
“அந்த பொண்ணுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் எனக்கு இந்த பொண்ணு மேல ஆர்வம் இல்லை.” என்று கூறவும்
“இந்த பொண்ணு மேல ஆர்வம் இல்லைன்னா? வேற ஏதாவது பொண்ணு மேல உனக்கு ஆர்வம் இருக்கா மாதவா?” என்று அவன் மனதை படிப்பது போல கேட்டாள் மலர்.
அண்ணியின் இந்த கேள்வியை எதிர்பார்த்திராத மாதவன்
“அண்ணி, அம்மா ப்ளீஸ். எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுங்க. இந்த அறுபதாம் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இதைப் பத்தி பேசலாம்.”
“அவங்க பதில் கேட்டா நான் என்னடா சொல்றது?” என்று சிறிது கோபமாக கேட்டார் பார்வதி.
“நான் வேணா அந்த பொண்ணு கிட்ட பேசுறேன். எனக்கு போன் நம்பர் வாங்கி கொடுங்க. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை. ஜோசியர் சொன்னாருனு அவசரப்படாதீங்க. நான் சென்னைக்கு கிளம்பனும் இப்போ கிளம்பினால் தான் சீக்கிரம் சென்னைக்கு போக முடியும். அப்பா ரெடியா இருக்காங்களா? அப்பாவை ரெடியா இருக்க சொல்லுங்க.” என்று கூறி அவர்களிடம் இருந்து நழுவி சென்றான்.
சென்றவன் பத்து நிமிடத்தில் கிளம்பி தந்தையுடன் காரில் ஏறி அவர்களிடமிருந்து தப்பித்து சென்னை நோக்கி காரை செலுத்தினான்.
அண்ணா நகரில் ஒரு ஹோட்டல் முன்பு காரை நிறுத்தினான் மாதவன்.
ரிசப்ஷன் சென்று சாவியை வாங்கியவன்
“வாங்க போகலாம்” என்று தந்தையையும் அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றான்.
“வாங்கப்பா சரவணபவன் போய் சாப்பிட்டுட்டு வரலாம்.” என்று கூப்பிட்டான்.
“சரி மாதவா” என்றவர் முகத்தை கழுவிக் கொண்டு அவனுடன் சென்றார்.
இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அவரை ஹோட்டல் வாசலில் விட்ட மாதவன் அறைச் சாவியை அவரிடம் கொடுத்தான்.
“அப்பா நீங்க இந்த ரூமுக்கு போங்க. நான் பக்கத்துல கடைக்கு போய் வாழைப்பழம் வாங்கிட்டு வரேன். “
“சரி மாதவா.” என்று கூறியவர்அந்த அறைக்கு சென்றார்.
மாதவன் ஒரு மணி நேரத்தில் திரும்பினான்.
6:30 மணிக்கு எழுந்த மாதவன்
“அப்பா நான் பக்கத்துல இருக்க பார்க்கிற்கு போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு சென்றான்.