எதிர்பாராமல் திடீரென்று அவன் அவள் மீது மோதியதில் சற்று தடுமாறி ஒரு பக்கமாக சாய்ந்தாள் சாதனா.
அப்போது அவள் கையை பற்றி அவள் கீழே விழாமல் தடுத்தது ஒரு வலிய கரம்.
சாதனா சமாளித்துக் கொண்டு நின்றாள்.
“வந்துட்டானா? அது எப்படிதான் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்னா வந்து விடுவானோ?’ என்று நினைத்தபடி நிமிர்ந்து அவளை கீழே விழாமல் தடுத்து நிறுத்திய கைக்கு சொந்தக்காரனை பார்த்தாள். பார்த்தவள் ஏமாந்து போனாள்.
அது அவன் இல்லை. எனினும் சுதாரித்து அந்த அமெரிக்க பெரியவருக்கு “Thank you” என்று நன்றி தெரிவித்தாள்.
அவர் “no problem. பரவாயில்லை” என்று விட்டு சென்றார்.
கந்தனை முதன்முதலாக வீட்டில் பார்த்த பிறகு அடிக்கடி அவன் அவள் முன்பு ஏதாவது காரணத்தை சொல்லிக் கொண்டு வந்து நிற்பான்.
ஆனால் இந்த மூன்று நாட்களாக அவன் அவள் கண்ணில் படவே இல்லை. அவன் அவளை அப்படி பார்க்கும் பொழுதெல்லாம் அவளுக்கு அது தொந்தரவாக இருந்தது. ஆனால் இப்போது அவள் அவனை தேடுகிறாள். பார்ப்பவர்கள் எல்லாம் அவன் போலவே அவளுக்கு தெரிகிறார்கள். ஆனால் அவன் அவளை தேடி வரவில்லை. அது அவளுக்கு ஏமாற்றம் தந்தது.
‘இவன் ஏன் மூணு நாளா என் கண்ணில் படவே இல்லை? ஒருவேளை அன்னிக்கி ஷூ கடையில் ரொம்ப கோபமா பேசியதால் கோபித்துக் கொண்டானா? இனி என்னை பார்க்க வரமாட்டானா? ஆனால் இவன் அப்படியெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டானே திட்டினா கூட திரும்பி வந்து பேசுவானே. இப்போ என்ன ஆச்சு? அன்னிக்கி மூக்கை உறிஞ்சிக்கொண்டு இருந்தானே, ஒரு வேளை உடம்பு சரி இல்லாம போயிருக்குமோ?’ என்று யோசிக்கும் பொழுது அவள் மனம் வருந்தியது.
‘போன் பண்ணி பார்க்கலாமா? சரி வீட்டுக்கு போனதும் போன் பண்ணி பார்க்கலாம்.’ என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
விஷால் அழுதுகொண்டிருந்தான்.
விக்ரம் “ஏன் குழந்தை அழுதுட்டு இருக்கான்?” என்று கேட்டபடி குழந்தையிடம் வந்தான்.
“பசி தான். பால் கொடுக்க நேரமாயிடுச்சு. அம்மா வீட்ல இருந்த வரைக்கும் எல்லா வேலையும் கரெக்டா நேரா நேரத்துக்கு நடந்துட்டு இருந்தது. இப்போ அம்மா சித்தி வீட்டுக்கு போயிட்டதால எல்லாம் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிடுச்சு. அதனால பால் கொடுக்க டைம் ஆயிடுச்சு.” என்று சொன்னபடி குழந்தைக்கு பால் ஊட்டினாள் சஞ்சனா.
குழந்தை அழுகையை நிறுத்தினான்.
“சஞ்சனா மத்த வேலையெல்லாம் அப்படியே இருக்கட்டும். நீ குழந்தையை முதலில் பாரு. நாம பசியைத் தாங்கலாம். குழந்தை தாங்குவானா? சரி நைட்டுக்கு என்ன பண்றது சொல்லு. நான் பண்றேன்.” என்று கேட்டான் விக்ரம்.
“இல்ல விக்ரம். சாதனா நமக்கு இட்லி சட்னி செய்து கொண்டு இருக்கா. நீங்க வாஷிங் மெஷின் போடுங்க.” என்றாள்.
அவன் அதனை செய்ய ஆரம்பித்தான்.
இரவு சமையலை முடித்துவிட்டு சாதனா வருவதற்கும் விக்ரம், சஞ்சனா இருவரும் அவரவர் வேலைகளை முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
மூவரும் சேர்ந்து இட்லி சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்த பிறகு குழந்தை அழும் சத்தம் கேட்க சஞ்சனா எழுந்து சென்றாள்.
சாதனா சாமான்களை சாமான்கள் துலக்கும் எந்திரத்தில் போட்டுவிட்டு தன் அறைக்கு திரும்பினாள்.
மணியை பார்த்தாள். மணி 10 ஆகியிருந்தது. கைபேசியை எடுத்து கந்தனுக்கு போன் செய்தாள்.
அவன் எடுக்கவில்லை. இரண்டு முறை போன் செய்து பார்த்தாள் அவன் எடுக்கவே இல்லை.
“என்ன பண்ணிட்டு இருப்பா? தூங்கி இருப்பானா? இவ்வளவு சீக்கிரம் தூங்கி இருக்க மாட்டான். அப்போ ஏன் எடுக்க மாட்டேங்கிறான்? என் மேல கோபத்தில் இருக்கானா? இல்லை உடம்பு சரியில்லையா?” என்று யோசித்த அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.
“சரி நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஸ்கூல் போனால் தெரிஞ்சிடும்.” என்று நினைத்து சமாதானமாகி உறங்கினாள்.
தமிழ் பள்ளிக்கு சென்ற அவள் அவசர அவசரமாக காரை விட்டு விட்டு அவளுடைய வகுப்பறைக்கு ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள்.
அப்போது “சாதனா” என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
“சொல்லுங்க சீதா. என்ன விஷயம்?” என்று கேட்டாள் சாதனா.
“எனக்கு அட் மின்ல கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பசங்களை கொஞ்சம் பாத்துக்கோங்க. நான் வந்துடறேன்.” என்றார்.
சாதனாவுக்கு மனம் இல்லை. அவளுடைய வகுப்பறைக்கு சென்று சுகந்தன்வந்துவிட்டானா என்று பார்க்க நினைத்து வேகவேகமாக வந்தாள் இப்போது அதை தள்ளி போட மனம் இல்லாமல் யோசித்தாள்.
“என்ன சாதனா யோசிக்கிறீங்க? உங்க கிளாஸ் ரொம்ப நேரமா அமைதியா தான் இருக்கு. அதனால உங்க அசிஸ்டன்ட் டீச்சர் உங்க கிளாசை பார்த்துட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். நீங்க உங்க கிளாசை பத்தி யோசிச்சு கவலைப்படாம ஒரு பத்து நிமிஷம் இந்த கிளாஸில் இருங்க. நான் வந்துடறேன்.” என்று சீதா சொல்ல
சாதனா “சரி” என்று அந்த வகுப்பிற்கு சென்றாள்.
அது மழலை வகுப்பு. எனவே குழந்தைகள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்து “குழந்தைகளா சத்தம் போடக்கூடாது. உங்களுக்கு டீச்சர் வேலை கொடுத்திருக்காங்க இல்லையா? அதை செய்யணும். எல்லாரும் அவங்கவங்க புக்கை எடுத்து ‘அ,ஆ’ எழுதுங்க.” என்றாள்.
குழந்தைகள் எழுத ஆரம்பித்தனர். சத்தம் ஓரளவு குறைந்தது. நாற்காலிக்கு வந்து அமர்ந்தாள்.
‘அப்போ இவன் நல்லாதான் இருக்கான். ஆனால் என்னை தேடி வரல. நான் போன் பண்ணியும் பேசல. கோபத்தில் இருக்கிறானா? இவனுக்கே இவ்வளவு கோபம் இருக்கும் போது எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? பார்ப்போம். இவனோடு கோபம் எத்தனை நாளைக்குன்னு.’ என்று நினைத்துக்கொண்டாள்.
பத்து நிமிஷம் கழித்து சீதா வந்தாள்.
அவரிடம் சொல்லிவிட்டு தன் வகுப்பிற்கு திரும்பினாள் சாதனா.
கந்தனின் நாற்காலியில் முதுகு காட்டி அமர்ந்திருந்த அவனை முறைத்தாள்.
‘இருக்கட்டும் இவன் வந்து என்கிட்ட பேசணும். அப்படி இல்லன்னா இவன் கிட்ட பேசவே கூடாது.’ என்று நினைத்தபடி உள்ளே வரலாமா என்று கேட்க கூட பிடிக்காமல் நேராக நடந்து சென்று குழந்தைகளின் முன்பு நின்று கொண்டாள்.
அவனை பார்க்காமல் “குழந்தைகளா போன வாரம் நான் சொன்ன பாடத்தை படிச்சிட்டீங்களா? வீட்டுப்பாடம் முடிச்சாச்சா? எல்லோரும் வீட்டுப்பாட நோட் வச்சாச்சா?” என்று கேட்டுக்கொண்டே போனவள்.
“சாதனா” என்று குரல் கேட்டு திரும்பினாள்.
அங்கு நின்று கொண்டிருந்தவன் சுகந்தன்அல்ல கபிலன்!
சாதனா அவனை மலங்க மலங்க விழித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சாதனா, கிளாஸ் ரொம்ப சத்தமா இருந்தது. அதனால நான் பக்கத்து கிளாஸ்ல இருந்து வந்து குழந்தைகளை பார்த்து கொண்டேன். சரி நான் போகட்டுமா?” என்று கேட்டான்.
கபிலன் அங்கு சாதனாவை போலவே ஒரு ஆசிரியர்.
‘அப்போ இவ்வளவு நேரம் இங்க உட்கார்ந்துட்டு இருந்தது சுகந்தன்இல்லையா இவன் தானா? ஐயையோ இவனை சுத்தமா கவனிக்காம அவன்ன்னு நினைச்சுக்கிட்டு உள்ள வரலாமான்னு கூட கேட்காம நான் உள்ள வந்து நேரா பசங்க கிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன். இவன் என்னை என்ன நினைத்திருப்பான்? ஐயையோ!’ என்று உள்ளுக்குள் பதறியபடி
“சாரி சாரி கபிலன். நான் ஏதோ ஞாபகத்தில் உங்களை கவனிக்கவே இல்லை. நேரா பசங்க கிட்ட பேச வந்துட்டேன். சாரி சாரி. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.” என்று கூறி மன்னிப்பு கேட்டாள்.
“அது பரவாயில்லை விடுங்க சாதனா.” என்றான் கபிலன் சாதாரணமாக.
“இவ்வளவு நேரம் என்னோட கிளாசை பார்த்து கொண்டதற்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்றாள்.
“பரவாயில்லை சாதனா. நான் வருகிறேன்.” என்று விட்டு சென்றான் அவன்.
.
அவளுடைய முட்டாள்தனத்தை எண்ணி அவளுக்கு வெட்கமாக இருந்தது.
“இந்தாங்க டீச்சர்.” என்று ஒருவன் கையில் நோட்டுடன் வர அவளது கவனம் குழந்தைகள் மீது சென்றது.