நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்று மாலை ஜோதி விஷாலுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
விஷால் தொட்டிலில் இருந்தான். ஜோதி கைதட்டி விளையாட்டு காட்ட அவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். சஞ்சனா இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
விஜயா ஒரு நாற்காலியில் சோகமாக யாரிடமும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.
அவளை கவனித்த சாதனா அவளிடம் வந்தாள்.
“என்ன விஜயா சோகமா இருக்கிற மாதிரி தெரியுது. என்ன விஷயம்? என்ன வீட்ல சண்டையா?” என்று கேட்டாள்.
“கொஞ்சம் அப்படித்தான். கார் ஓட்ட கத்துக்கலாம்ன்னு ராஜேஷ் கிட்ட கார் கத்துக்கிட்டு இருக்கேன்.” இன்னிக்கு கார் ஓட்டிட்டு இருக்கும்போது, ஆக்ஸிலரேட்டர் கொஞ்சம் ஜாஸ்தியா கொடுத்துட்டேன். அதுக்கு ராஜேஷ் என்னை திட்டிவிட்டான். நான் அவன் மேல ரொம்ப கோபமா இருக்கேன்.” என்றாள் சிறிது வருத்தத்துடன்.
“ஓ இதுதான் விசயமா? அவர் உங்க மேல இருக்கிற அக்கறையில் தானே திட்டி இருக்காரு. இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க.”
“கொஞ்சம் பொறுமையா சொல்லி இருக்கலாம் இல்ல?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் விஜயா.
“சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த அவசரத்தில் தெரியாமல் திட்டி இருப்பார். என்னை கேட்டா நம்ம மேல அக்கறை, பாசம் இருக்கிறவங்க கிட்ட கார் கற்றுக் கொள்வதைவிட டிரைவிங் புரோபஷனலா சொல்லித் தருபவர்கள் கிட்ட கத்துகிறது நல்லது. ஏன்னா அவங்களுக்கு அது வேலை. அவங்க பயப்படாம அந்த வேலையை ஒழுங்கா செய்வாங்க. ஆனால் உங்க ஹஸ்பண்ட் உங்க மேல இருக்கிற பாசத்தால அதிகமா பயப்படுவாங்க.”
“நீங்க சொல்றது சரிதான் சாதனா. ஆனால் நான் ஏற்கனவே போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். ஆனால், அடுத்த ஒரு வாரத்துக்கு அப்பாயின்மென்ட் இல்லை. அதனாலதான் இவன்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்.” என்றாள் விஜயா.
“சரி நான் நாளைக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் பண்றேன். அதனால கொஞ்சம் ஃப்ரீ தான். ஜோதியை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வாங்க. நான் உங்களுக்கு டிரைவிங் சொல்லித் தரேன்.” என்றாள் சாதனா.
“உங்களுக்கும் தான் என் மேல பாசம், அக்கறை இருக்கு. அப்போ நீங்க பயப்பட மாட்டீங்களா?”
“உங்க ஹஸ்பண்ட் அளவுக்கு உங்க மேல எனக்கு பாசமும் அக்கறையும் இருக்க முடியாது. அதனால பிரச்சனை இல்ல. அதோட நாம இந்த தெருவுல முதலில் ஓட்டி பழகுவோம். உங்களுக்கு பேசிக் தெரியுமா?” என்று கேட்டாள் சாதனா.
“தெரியும். நான் இந்தியால ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கி இருக்கேன்.”
“ஓ சூப்பர். அப்போ ஈஸியா கத்துக்கலாம். விடுங்க டிரைவிங் ரிட்டன் டெஸ்ட் கிளியர் பண்ணிட்டீங்களா?”
“ஆம் பண்ணிட்டேன்.”
“சரி அப்போ உங்களுக்கு ரூல்ஸ் தெரிஞ்சிருக்கும்.”
“தெரியும். ஆனால் இந்தியால காரோட்டி பழக்கம் கிடையாது. டிரைவிங் லைசன்ஸ் வாங்கியதோடு சரி. எங்க போனாலும் டூவீலரில் தான் போவேன். இங்க டூ வீலர் ரொம்ப கம்மி. ஜென் பைக் ஓட்டி பார்த்திருக்கேன். அவ்வளவுதான். எப்படியும் இந்த குளிருக்கு பைக் யூஸ் பண்ண முடியாது. அதனால் இங்க கார் கத்துக்கிட்டா வசதியா இருக்கும்னு பார்க்கிறேன்.”
“ஆமாம் கார் கத்துக்கிட்டா நீங்க வெளிய போயிட்டு வரலாம். உங்களுக்கு தனிமை தெரியாது” என்றாள் சாதனா.
விஜயா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தாள். சாதனா அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்.
விஜயா “பிள்ளையாரப்பா காப்பாத்து” என்று கை கூப்பி கும்பிட்டுவிட்டு காரில் சாவியை போட்டு காரை உயிர்ப்பித்தாள்.
“இந்த கார்ல கிளட்ச் கிடையாது. உங்களுக்கு தெரியும் இல்ல?”
“ஆம் தெரியும். ஆக்சிலேட்டர், பிரேக், கியர் தான் இருக்கும்.”
“இப்போ லேசா ஆக்சிலேட்டர் கொடுங்க.” என்று சாதனா சொல்ல விஜயா கொடுத்தாள்.
கார் நகர்ந்தது.
“நாம எப்பவுமே ரைட் சைடு தான் போகணும்.”
“ஆமாம் இந்தியால லெப்ட் சைட்ல போவோம்.”
“ஆமா அதனால இதுக்கு நீங்க பழகிக் கொள்ளுங்கள். இப்போ ரைட் சைடு ஓரமா ஓட்டுங்க.” என்று சாதனா சொல்ல விஜயா ஓட்டினாள்.
சிறிது தூரம் ஓடிய பிறகு
“நிறுத்துங்க நிறுத்துங்க.” என்றாள் சாதனா.
விஜயா காரை நிறுத்தினாள்.
“இங்கே தான் யாருமே இல்லையே சாதனா. எதுக்காக நிறுத்த சொன்னீங்க?” என்று கேட்டாள்.
“என்ன விஜயா? அங்க பாருங்க. ஸ்டாப் போர்டு இருக்கு. போயிட்டே இருக்கீங்க. ஸ்டாப் போர்டு பார்த்தா வண்டியை கம்ப்ளீட்டா பிரேக் போட்டு நிறுத்தணும். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் யாராவது வர்றாங்களான்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் எடுக்கணும்.” என்று சாதனா கையை காட்டினாள் .
“சாரி நான் கவனிக்கவே இல்லை சாதனா.”
“இங்கே தான் யாருமே இல்லையேன்னு நீங்க நினைக்கக்கூடாது. யாரு இருந்தாலும் இல்லனாலும் நீங்க ஸ்டாப் போர்டு பார்த்ததும் நிறுத்தணும். இல்லைனா அது பெரிய தப்பு. டிராபிக் போலீஸ் பிடிக்கும். இங்க இருக்கிற மரம், செடி, கொடி உள்ள டிராபிக் போலீஸ் காருடன் இருப்பாங்க.
நாம அவங்கள பார்க்க முடியாது. நீங்க நிறுத்தாம போனா திடீர்னு வருவாங்க. வந்து பிடித்து பைன் போடுவாங்க.” என்றாள் சாதனா.
“அப்படியா? ” என்று ஆச்சரியமாக கேட்டாள் விஜயா.
“ஆமாம் விஜயா. அவங்க எங்க இருக்காங்கனு நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது. அதனால நாம எப்பவும் கேர்ஃபுல்லா இருக்கணும்.”
“நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு சாதனா.”
“நீங்கள் பயப்படுவதற்கு சொல்லல. நாம ஒழுங்கா ரூல்ஸ் பாலோ பண்ணாலே போதும். யாருக்கும் பயப்பட வேண்டாம். இதுக்கெல்லாம் பயந்தா நாம கார் ஓட்ட முடியாது. தைரியமா இருங்க.
உங்கள மாதிரி என்னை மாதிரி கார் கத்துக்கிட்டு எவ்வளவு பேர் இங்க சூப்பரா கார் ஓட்டுறாங்க தெரியுமா? அவங்கள மாதிரி நீங்களும் சூப்பரா ஓட்டுவீங்க. நம்பிக்கையோட ஓட்டுங்க” என்றாள் சாதனா அவளை தைரிய படுத்தும் விதமாக.
அப்போது அவர்கள் ஒரு வீட்டின் முன்பு வந்து இருந்தனர்.
‘இந்த வீட்டுக்கு முன்னாடி தானே சுகந்தன்சாண்டா க்ளாஸ் டிரஸ் போட்டுட்டு இருந்தான். ஒருவேளை அவன் இந்த வீட்ல தான் கார்த்திக் கூட இருக்கானா? எப்படி தெரிஞ்சுகிறது?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அந்த வீட்டில் இருந்து ஒரு இளம் ஆண் வெளியே வந்தான்.
அவன் சுகந்தன் உயரத்தில் இருந்தான். அவனை பார்த்ததும் அது அவன் தானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
கார் அவனை கடக்க
“விஜயா காரை கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க.” என்று பரபரத்தாள்.
அவள் காரின் வேகத்தை குறைத்தாள்.
சாதனா அவனது முகத்தை கூர்ந்து பார்த்து அது சுகந்தன்இல்லை என்று தெரிந்த பிறகு விஜயாவிடம் திரும்பினாள்.
விஜயா “எதுக்கு சாதனா ஸ்லோ பண்ண சொன்னீங்க? திரும்பவும் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?”
“அது அது…. வந்து….” என்று யோசித்து அவளுக்கு ஒன்று தோன்றியது. அதனை கூறி சமாளிக்க முடிவு செய்தாள்.
“அங்க பாருங்க. ஸ்கூல் சோன் (School zone)இருக்கு. இதைப் பற்றி உங்களுக்கு சொல்லலாம்னு ஸ்லோ பண்ண சொன்னேன்.”
“ஓ அப்படியா? ஆனால் எனக்கு தெரியும். நான் சொல்றேன் சாதனா.
இந்த ரோட்டின் வேகம் 35 Mile per hour(35 MPH). ஆனால் speed limit 20 (வேகம் 20) போர்டு போட்டு அந்த போர்டுக்கு கீழே டைம் போட்டு இருந்தால் உதாரணத்துக்கு 7:00 am to 8:am, 2:30pm to 3:30 pm அப்படி போட்டிருந்தால் அந்த நேரத்துல நாம நம்ம வண்டியின் வேகத்தை 20க்கு குறைத்து ஓட்டனும். இல்லனா போலீஸ் பிடிப்பாங்க. பிடித்து பயன் போடுவாங்க. இந்த டைம் குழந்தைங்க ஸ்கூலுக்கு போகிற, வருகிற நேரம் அதனாலே இந்த மாதிரி பிளான்”.
“ ஆமாம் விஜயா ஸ்கூல் குழந்தைகள் பாதுகாப்புக்காக இந்த மாதிரி பிளான்.”
“ரொம்ப சூப்பர் இல்ல சாதனா?”
“ஆமாம் விஜயா.”
வால்மார்ட்டின் அந்த மாதத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வணிக கூடையில் போட்டுக்கொண்டிருந்தாள் சாதனா.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பணம் கட்டுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு 5 வயது சிறுவன் வேகமாக ஓடி வந்து அவள் மீது மோதினான்.