சிறிது நேரத்தில் காபி குடித்து முடித்து விட்டு “ரூம்க்கு போகலாம்”, என்று நினைத்து எழுந்தவன் முன்னே வந்து நின்றாள் மித்ரா.
“ஹாய் பார்த்திபன்”, என்றாள் மித்ரா.
அவளை முறைத்து விட்டு நடக்க பார்த்தான்.
“என்ன ஆச்சு? முகத்தை திருப்பிட்டு போறீங்க? நில்லுங்க “
அதுக்கும் பேசாமல் நடந்தான்.
“டேய் நில்லுடா”, என்று சொன்னாள் மித்ரா.
“என்னது டேயா?”, என்று அதிர்ச்சியாக திரும்பினான் பார்த்திபன்.
“பின்ன நான் எவ்வளவு மரியாதையா பேசிட்டு இருக்கேன்? பெரிய இவனாட்டம் போய்கிட்டே இருக்க?”, என்று கோபமாக கேட்டாள் மித்ரா.
பல்லை கடித்து கொண்டு, “ஓவரா பேசுன, கொன்னுருவேன் பாத்துக்கோ”, என்றான் பார்த்திபன்.
“அப்படி தான் டா பேசுவேன். என்ன டா செய்வ?”
“இன்னோரு தடவை டா சொன்ன, அப்புறம் நான் வாடி போடின்னு பேசுவேன்”
அதற்கு எதிர்த்து அவள் சண்டை போடுவாள் என்று அவன் எதிர் பார்க்க, அவள் மெதுவாக நடந்து அவன் அருகே வந்தாள்.
“இப்ப எதுக்கு பக்கத்துல வாரா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
அவனுடைய மூச்சு காற்று படும் தூரத்தில் வந்து நின்றாள் மித்ரா.
“இவ என்ன இப்படி வந்து நிக்குறா?”, என்று நடுங்கியே விட்டான் பார்த்திபன்.
“பெரிய இவன் மாதிரி சீன் போட்ட? இப்ப பக்கத்துல வந்து நின்னதுக்கே இந்த நடுங்கு நடுங்குற?”, என்று சிரித்து கொண்டே அவனை விட்டு விலகினாள் மித்ரா.
“ஏய் தூர போடி. திமிர் பிடிச்சவளே. சரியான ராங்கி. எதுக்கு டி என்னோட வீட்ல வந்து டேரா போட்டுருக்க?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“உன்னோட வீடா? சரிதான். ஆனா இனி எனக்கும் இது தான் வீடு”
“உனக்கு வீடா? நீ என்ன இந்த வீட்லயா பிறந்த? ஒழுங்கு மரியாதையா ஓடிரு. இல்லைன்னா நான் ஓட வைப்பேன்”
“ஹா ஹா சரி காமெடி. நீ என்னை ஓட வைப்பியா? அதையும் பாக்கலாம். அப்புறம் என்ன சொன்ன? இந்த வீட்ல பிறந்தியான்னு கேட்டில? ஒரு வீட்ல பிறந்தா அது பையனுக்கு தான் வீடு. அதே அந்த பையனை கல்யாணம் செஞ்சு வர பொண்ணுக்கும் அது தான வீடு. இது உன்னோட வீடுன்னா, இந்த வீட்ல உள்ள பையனை கல்யாணம் செஞ்சா, அப்ப எனக்கு தான அந்த வீடு?”, என்று அவன் தலையில் கல்லை தூக்கி போட்டாள் மித்ரா.
அப்படியே ஸ்தம்பித்து நின்றான் பார்த்திபன்.
“ஏய் இப்ப நீ என்ன சொன்ன?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் பார்த்திபன்.
“ஹ்ம்ம் உன்னை கல்யாணம் செஞ்சிகிட்டா, இந்த வீடு எனக்கு தான? அப்ப இது என்னோட வீடு தான? அதை தான் சொன்னேன்?”
“உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு நான் எப்ப சொன்னேன்? நான் எல்லாம் பொண்ணை தான் கல்யாணம் செஞ்சிப்பேன். எங்க பாட்டி சொன்ன மாதிரி குழாய் போட்ட பையனை இல்ல”
“ஓஹோ அப்ப என்னை பாத்தா பொண்ணு மாதிரி இல்லையா? எங்க நல்லா பாத்து சொல்லு”, என்று சொல்லி அவன் முன்னால், இடுப்பை வளைத்து நின்று போஸ் கொடுத்தாள் மித்ரா.
கண் முன்னால் அழகு சிலை என நிற்பதே பார்த்திபனுக்கு இம்சை கொடுத்தது. இப்போது என்னை பார், என் அழகை பார் என்று ஒயிலாக அவள் நின்றது, அவன் சித்தத்தையே குலைத்தது.
தலை முதல், கால் வரை அவன் பார்வை அவள் மேல் பயணித்தது. அவன் பார்வையை உணர்ந்த மித்ரா “அப்பாடி மயங்கிட்டான். வேலை சுலபமா முடிஞ்சிரும்”, என்று நினைத்து கொண்டு மயக்கும் புன்னகையுடன் அவனை மீண்டும் நெருங்கினாள்.
“குழாய் போட்ட பையன்னு சொல்லி, இந்த பார்வை பாக்குற. சரி சரி பொழைச்சு போ. உன்னை கல்யாணம் எல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். அந்த அளவுக்கு எல்லாம் நீ ஒர்த் இல்லை தம்பி”, என்றாள் மித்ரா.
அவளுடைய சீண்டலில் அவன் மயக்கம் தெளிந்து, அவளை முறைத்தவன் “ஏய் என்ன டி ஓவரா பேசுற? என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னமோ இகழ்ச்சியா பேசுற? இங்க இருக்குற அத்தனை பொண்ணுங்களும், ஐயாவோட அழகுக்கு அடிமை தெரியுமா?”, என்றான்.
“இந்த பட்டி காட்டு பொண்ணுங்க வேணும்னா இந்த தேசிங்கு ராசாவுக்கு அடிமையாகலாம். இந்த மித்ரா மயங்க மாட்டா. என்னோட லெவலே வேற ராசா”
“நீ அதிகமா பேசுற மித்ரா. உன்னையும் என்கிட்ட மயங்க வைக்கல? நான் பார்த்திபன் இல்லை”
“நானாவது உங்கிட்ட மயங்குறதாவது, போடா டேய்”
“மரியாதையா பேசு டி”
“சரி பார்த்திபன் மரியாதையா பேசுறேன். என்னை ஊரை சுத்தி பாக்க கூட்டிட்டு போறீங்களா?”, என்று கேட்டாள் மித்ரா.
“உன்னையா? முடியாது போடி”
“அதை நீங்க சொல்ல கூடாது பார்த்திபன். உங்களை என்னை கூட்டிட்டு போக வைப்பேன்”
“அதையும் பாக்கலாம்”
“ஹ்ம்ம் பாருங்க”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.
“உடம்பு எல்லாம் திமிர்”, என்று நினைத்து கொண்டே அதே இடத்தில் பல்லை கடித்து கொண்டு நின்றான்.
இரண்டு அடி எடுத்து வைத்த மித்ரா எதிரே வந்த வள்ளி பாட்டியை பார்த்து “ஏய் கிழவி வந்துட்டியா? உன்னை வெறுப்பேத்தாம போனா எப்படி?”, என்று நினைத்து கொண்டு, அடுத்த நிமிடம் ஓடியே வந்து பார்த்திபன் மீது விழுந்தாள். இப்போதும் திகைத்து போய் அவளை தாங்கி பிடித்தான் பார்த்திபன்.
“இப்ப எதுக்கு டி மேல வந்து விழுற?”, என்று கேட்டான்.
“என்ன மச்சான் நீங்க? இப்படி சொல்லிட்டீங்க? நான் என்ற மச்சான் மேல விழாம யார் மேல விழுவேனாம்?”, என்று சிரித்தாள் மித்ரா.
“ஆமா நீ என்ன மாத்தி மாத்தி பேசுற? கொஞ்சம் நேரம் முன்னாடி வாடா போடான்னு பேசுன? இப்ப இங்க இருக்குற பொண்ணுங்க மாதிரி பேசுற?”, என்று குழப்பத்துடன் கேட்டான் பார்த்திபன்.
“எனக்கு தோணும் போது தான மச்சான், ஆசையா பேச முடியும்”, என்று சொல்லி அவன் கன்னத்தில் இடித்தாள் மித்ரா.
உடம்பெல்லாம் ஒரு குளிர் பரவியது பார்த்திபனுக்கு. அவளை பிடிப்பதற்காக அவன் கைகள் அவள் இடுப்பில் இருந்தது. அவளுடைய பேச்சிலும், நெருக்கத்தில் அவன் கைகள் இடுப்பில் இன்னும் கொஞ்சம் அழுத்தியது.
மெய்மறந்து நின்ற பார்த்திபன் “அடி செருப்பால? எடு பட்ட நாயே. நடு வீட்டுக்குள்ள என்ன காரியம் பண்ணிட்டு இருக்க?”, என்ற பார்வதியின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்தான்.
அடுத்த நொடி மித்ராவை தள்ளி விட்டான். பார்வதி அருகில் முறைத்து கொண்டு நின்றாள் வள்ளி பாட்டி.
“நான் சொன்னேன்ல பார்வதி. நீ நம்பலை. அதான் உன்னை கூட்டிட்டு வந்து காமிச்சேன். என்னனு கேளு பார்வதி”, என்று ஏத்தி விட்டாள் வள்ளி பாட்டி.
சமாளித்து நின்ற மித்ரா அவனை பார்த்து மயக்கும் புன்னகை புரிந்தாள். பதிலுக்கு அதே பார்வையை கொடுக்க போனவனை பார்த்து காளியாக முறைத்து கொண்டு நின்றாள் பார்வதி.
“என்ன மா?”, என்று கேட்டான் பார்த்திபன்.
“என்ன நொன்னமா? இந்த டவுன் காரியை பக்கத்துல வச்சிக்கிட்டு என்ன டா செஞ்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள் பார்வதி.
“எம்மா, நான் என்ன மா செஞ்சேன்? ஒண்ணுமே செய்யலையே”
“பொய் சொல்லாத. ஊருல இருக்க எல்லா சிறுக்கிகளும், வந்து மாமனை கட்டி வைங்க அத்தைன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தப்ப கூட, என் பையன் தங்கம்னு நினைச்சேனே”
“இப்பவும் உன் பிள்ளை தங்கம் தான் மா”
“தங்கமா? தகரம் டா”
“எம்மா நிஜமாவே ஒண்ணுமே செய்யலை மா. நீ வேணா மித்ரா கிட்ட கேளேன்”, என்று பார்வதியிடம் சொன்ன பார்த்திபன் மித்ரா புறம் திரும்பி “சொல்லு மித்ரா. நீ கீழ விழ போன. அதுக்கு தான உன்னை பிடிச்சேன். அம்மா கிட்ட சொல்லு”, என்றான்.
“என்ன பார்த்திபன் நீங்க இப்படி சொல்றீங்க? நீங்க தான ரொம்ப அழகா இருக்க. கொஞ்சம் கிட்ட வான்னு சொன்னீங்க”, என்று போட்டு கொடுத்தாள் மித்ரா.
“ஆ”, என்று வாயை பிளந்தான் பார்த்திபன்.
“எடு அந்த தொடைப்ப கட்டையை. பாவி பாவி எப்ப டா நீ திருந்துவ?”, என்று சொல்லி அவன் தலை முடியை பிடித்து இழுத்து முதுகில் நாலு அடியை வைத்தாள் பார்வதி.
பக்கத்தில் இருந்து சிரித்து கொண்டிருந்தாள் மித்ரா.
“அப்படி தான் பார்வதி. இன்னும் நாலு போடு”, என்று பக்கத்தில் இருந்து சொன்னாள் வள்ளி பாட்டி.
அப்போது “இங்க என்ன சத்தம்?”, என்று கேட்டு கொண்டே வந்தாள் நந்தினி.
“இல்லை மா ஊரை சுத்தி காட்டுங்கன்னு பார்த்திபன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். ஆனா அத்தை இவ கூட நீ போக கூடாதுன்னு பார்த்திபனை அடிக்கிறாங்க”, என்று சொன்னாள் மித்ரா.
“என்ன மதினி நீங்க? சரி சரி விடுங்க. அப்புறம் பார்த்திபன், நாளைக்கு நீ மித்ராவை கூட்டிட்டு போய் ஊரை, நம்ம வயலை எல்லாம் சுத்தி காட்டு என்ன?”, என்று சொன்னாள் நந்தினி.
“என்ன சொல்ல?”, என்று தெரியாமல் அமைதியாய் நின்றான் பார்த்திபன்.
“அதெல்லாம் வேண்டாம். பார்த்திபனுக்கு வேற வேலை இருக்கு நந்தினி. என் மகன் இவளை எல்லாம் கூட்டிட்டு போக மாட்டான்”, என்று சொன்னாள் பார்வதி.
“பாத்தீங்களாம்மா? நீங்க இருக்கும் போதே எப்படி சொல்றாங்க? நான் உங்க கூட இருக்கணும்ன்னு ஆசையா வந்தேன். ஆனா நான் வந்தது அத்தைக்கு பாட்டிக்கு பிடிக்கவே இல்லை”, என்று வராத கண்ணீரை துடைத்தாள் மித்ரா.
“சரியான பிராடு”, என்று பல்லை கடித்து கொண்டு நின்றான் பார்த்திபன்.
“அவன் உங்க பையனா மதினி? பார்த்திபன் எனக்கும் பிள்ளை மாதிரி தான? ஆனா இன்னைக்கு என் பொண்ணுக்கு வீட்டை சுத்தி காட்ட கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அம்மா இதுக்கு நீயும் கூட்டு அப்படி
தான?”, என்று உணர்ச்சிவச பட்டு பேசினாள் நந்தினி.
“என்ன நந்து இப்படி பேசுற? பார்த்தி உன் பையன் தான் போதுமா? நீ சொன்னா செய்வான். நான் தெரியாம சொல்லிட்டேன். பார்த்தி உன் அத்தை சொல்றதை செஞ்சிரு டா. வாங்க அத்தை”, என்று சொல்லி விட்டு போனாள் பார்வதி. அவள் பின்னாடியே வள்ளி பாட்டி சென்று விட்டாள்.
“இப்ப சந்தோசமா?”, என்று சொல்லி மித்ராவின் கன்னத்தை தட்டி கொடுத்து விட்டு சென்றாள் நந்தினி.
மித்ராவை முறைத்து கொண்டு நின்றான் பார்த்திபன்.
“என்ன சார் முறைக்கிறீங்க? ஒழுங்கா அப்பவே கூட்டிட்டு போவேன்னு சொல்லிருக்கலாம்ல? என்னமோ முடியாதுன்னு சீன் போட்டீங்க. இப்ப எப்படி ஆப்பு வச்சேன் பாத்தீங்களா?”
என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே முறைத்து கொண்டு நின்றான். அப்போது அங்கே மகேந்திரன் வந்தார்.
மனதுக்குள் அலறினான் பார்த்திபன். “இவர் முன்னாடியும் இப்படி இவ எதாவது செஞ்சான்னா என்னை டின்னு கட்டிருவாரே”, என்று பயந்து போய் அவரை பார்த்தான்.
“டேய் பார்த்தி”, என்று அழைத்தார் மகேந்திரன்.
“அப்பா, சொல்லுங்க பா”, என்று மரியாதையாக கேட்டான் பார்த்திபன்.
“நாளைக்கு மூணு மணிக்கு நம்ம டவுண்ல இருக்க பேங்க்கு போ”
“ஹ்ம்ம் சரி பா”, என்று சொல்லி விட்டு மேலே போக திரும்பினான்.
“ஏலே என்ன சொல்றதுக்கு முன்னாடி போற? எதுக்கு போக சொன்னேன்னு கேக்காமலே போற? இதுக்கு தான் படிச்சிருக்கணும்னு சொன்னது”
“இந்த அப்பா இவ முன்னாடி தான் மானத்தை வாங்கணுமா?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான். அங்கே சிரித்து கொண்டிருந்தாள் மித்ரா.
காதல் தொடரும்….