அத்தியாயம் 1
“சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு இல்ல??? எதையும் சொதப்பிடாதிங்க டா.. இங்க யாராச்சும் ஒருத்தருக்கு நம்ம மேல சந்தேகம் வந்துட்டா கூட அவ்ளோ தான் மொத்த ப்ளானும் க்ளோஸ்…” என மிகத் தீவிரமான குரலில் தன் அலைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தது அந்த உருவம்.
“ம்ம்ம்” என இந்த உருவத்தின் தீவிரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் மறுபக்கம் மிகவும் அசுவாரசியமாக பதில் வந்து விழ, அதை கண்டுகொள்ளும் நிலையும் நேரமும் தற்போது தனக்கில்லை என்பதைப்போல் அடுத்த சில நிமிடங்களும் எதிர்புறத்தில் இருந்தவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு முடித்த அந்த உருவம் இறுதியாக மிகவும் உறுதியான குரலில், “நான் சொன்னதை முடிக்க முடியலைனாலும் பரவாயில்லை அவனை க்ளோஸா வாட்ச் பண்ணிகிட்டே மட்டும் இரு.. யாருக்கும் உங்க மேல சந்தேகம் வராம மட்டும் பார்த்துக்கோ மத்ததை நானும் சர்வாவும் பார்த்துக்குறோம் நாங்க அவன் ரூம்ல தான் ஒளிஞ்சிருக்கோம்.. இன்னைக்கு அவன் என் கையில சிக்கட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு கச்சேரி” என்று கூறியவனின் இறுதி வரிகளில் இருந்த கடினம் அவன் அருகில் அமர்ந்திருந்த சர்வாவின் மனதில் ஓர் பயப்பந்தை உற்பத்தி செய்தது.
சரியாக அதே நேரம் அவர்கள் இருந்த அறைக்கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்து சர்வாவின் கண்கள் சாசர் போல் விரிய, அவன் திகைப்புடனே தன்னருகில் இருந்தவனின் தோளை சுரண்டினான்.
‘எப்படி தங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தி அந்த ‘அவனை’ பிடிப்பது’ என தீவிர சிந்தனையில் இருந்த அந்த உருவமோ சர்வாவின் சுரண்டலில் எரிச்சலுற்று, “ப்ச் என்னடா!!!” என கடுப்புடன் கேட்க, சர்வாவோ அவனுக்கு பதிலளிக்காமல் வேறேங்கோ கண்களை பதித்திருக்க, அவனைத் தொடர்ந்து அவன் பார்வை சென்ற திசையை நோக்கிய அந்த உருவமும் அந்த அறைக்குள் நுழைந்தவர்களை கண்டு அதிர்ந்து விழித்தது!!!
சர்வாவும் அந்த உருவமும் யாரு??? யாரை கடத்தப் போறாங்க?? இப்போ யாரைப் பார்த்து பேய் முழி முழிக்கிறாங்க?? இவங்க போலிஸா இல்லை திருடனா?? இப்படி நிறைய கேள்விகள் உங்க மைன்ட்ல ஓடும்.. ரொம்ப இல்லாத மூளையை போட்டு கசக்கி பிழிஞ்சு யோசிக்க வேண்டாம் அவங்க யாரா வேணா இருந்துட்டு போகட்டும் நம்ம கதைக்குள்ள போகலாம் வாங்க… அப்போ இது கதை இல்லையான்னு கட்டையை தூக்காதீங்க.. இவங்க யாருன்னு கதைக்குள்ள போய் படிக்க படிக்க தான் தெரியும்னு சொல்ல வந்தேன்.. சரி வாங்க போவோம்…
ஒரு வாரத்திற்கு முன்….
“வீ வான்ட் சிக்சர்!!!” “வீ வான்ட் சிக்சர்!!!!” “வீ வான்ட் சிக்சர்!!!” என அந்த அரங்கமே ரசிகர்களின் ஆராவார கரவொலியால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
“வீட்ல இருக்கும் மொட்டை மாடி!!
இப்போ நம்மை எல்லாரையும் நகத்தைக் கடிக்க வைக்கிறார் நம்ம ரைஸிங் ஸ்டார் மேடி!!!
ஒரு பால் ஆறு ரன் … பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு ரிசல்டுக்கு பத்து நிமிஷம் முன்னாடி கம்ப்யூட்டர் சென்டர்ல பக்கு பக்குனு உக்காந்துட்டு இருக்குற பசங்க மாதிரி ஸ்டேடியம் மட்டும் இல்லாம மேட்ச் பார்த்துட்டு இருக்குற எல்லாரையும் சீட்டு எட்ஜுக்கு கொண்டு வந்து உட்கார வச்சுருக்காரு நம்ம மேடி.. பாலை போட நம்ம பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாகின் அஃப்ரிடி அதிவேகத்துல ஓடி வராரு.. அவர் வர வேகத்துக்கு நம்ம மேடி மேல போய் தான் மோதி நிப்பாரு போல…வாவ் பாலை போட்டுட்டாரு அதை நம்ம மேடி மொட்டை மாடிக்கே தூக்கிட்டாரு!!! ஆனா அது சிக்ஸா கேட்சா!!! ஓ மை காட்!!! ” என ஜிப் போடாத வாயை வைத்துக் கொண்டு RJ பாலாஜி ஒருபுறம் கமெண்ட்ரி வழங்கிக் கொண்டு மக்களை கடுப்பேற்றும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்.
“மேடி” “மேடி” மேடி” என அரங்கம் முழுதிலும் மேடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் ரைஸிங் ஸ்டார் மாதேஷின் பெயர் அதிரவைக்க, அந்த உற்சாகவொலி எதுவுமே அவன் கருத்தில் பதியவில்லை, அவன் கவனமெல்லாம் தன் குறியான பந்தில் மட்டுமே நிலைத்திருக்க, தன்னை நோக்கி வந்த அந்த அதிவேக பந்தை லாவகமாக வலது பக்கம் தூக்கி அடித்தான்.
பருந்தைப் போல் அவன் அடித்த பந்தும் உயர உயர சென்று கொண்டே இருந்து பின் மெல்ல மெல்ல கீழ வர, அந்த பந்தைப் பிடிக்க மாலிக் பவுண்டரி லைனை நோக்கி ஓடினார்.
மேடி அடித்த பந்திற்கும் மாலிக்கின் கைகளுக்கும் ஒரு செண்டிமீட்டர் இடைவெளியே இருக்க, மாலிக் அந்த பந்தை பிடிப்பாரா மாட்டாரா?? இது சிக்ஸா அவுட்டா?? என அங்கிருந்த அனைவருக்கும் நெஞ்சுவலியே வந்துவிடும் அளவிற்கு திக் திக் என நொடிகள் கழிந்து கொண்டிருந்த சமயம்,
“டேய் தடிமாடு இன்னும் எழுந்துக்காம என்னடா பண்ணிகிட்டு இருக்க?? துரைக்கு ஞாயிற்றுக்கிழமையானா நல்லா கறிசோறு திங்கணும்னு மட்டும் நாக்கு கேட்குதுல அப்போ போய் எழுந்து கறி வாங்கிட்டு வர மாட்டாராமா?? இன்னும் ரெண்டு நிமிஷத்துல எழுந்திரிக்கலை சுடுதண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்திருவேன் பார்த்துக்கோ.. இவ்ளோ கத்துறேன் எழுந்துக்கிறானா பாரு தடிமாடு தடிமாடு!!” என ரங்கநாதன் அங்கு கட்டிலில் பள்ளி கொண்டிருக்கும் தன் சீமந்த புத்திரன் மாதேஷிற்கு காலையிலே அவர் ஸ்டைலில் சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார்.
“எதுக்குங்க காலங்காத்தால இப்படி கத்திகிட்டு இருக்கீங்க??” என்றவாறே கையில் காபிக் கோப்பையுடன் அந்த அறைக்குள் நுழைந்தார் ரங்கநாதனின் தர்மபத்தினி ஜானகி.
தந்தையின் காட்டுக்கத்தலுக்கு சிறிதும் அசைந்து கொடுக்காத மாதேஷின் புலன்களோ தாயின் கையில் வைத்திருந்த காபியின் நறுமணத்தில் சட்டென விழிப்பு தட்ட, வேகமாக எழுந்து அமர்ந்தவன், “அம்மா காபிஈஈஈஈஈ” என முப்பத்திரெண்டு பற்களையும் காட்டினான்.
“இப்படி பிள்ளையை பெத்து வச்சா கத்தாம பின்ன என்ன கொஞ்சுவாங்களா??” என மனைவிக்கு பதிலளித்தவர், மகனைப் பார்த்து, “திருந்தாத ஜென்மம்.. ஒழுங்கா பத்து நிமிஷத்துல கடைக்கு போகலை காலை ஒடைச்சிருவேன்” என எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.
மகனின் தலையை வாஞ்சையாக கோதிய ஜானகி, “ஏண்டா மாது கொஞ்சம் சீக்கிரம் தான் எழுந்தா என்ன?? எதுக்கு டெய்லி அப்பாகிட்ட திட்டு வாங்கிகிட்டே இருக்க?” என கேள்வியெழுப்ப,
“அட போ மா அவர் என்னை திட்றது என்ன புதுசா?? அவர் கெடக்குறாரு நீ காபியைக் கொடு வாசம் மூக்கு வழியா நுழைஞ்சு மூளையை ஆக்கிரமிச்சு ரொம்ப நேரமாச்சு.. சீக்கிரம் வாய் வழியா அதை வயித்துக்குள்ள அனுப்பச் சொல்லி மூளை சொல்லிட்டே இருக்கு கொடு மம்மி” என அவர் கைகளில் இருந்த காபியைப் எடுக்க அவன் முனைய,
அவன் கையைத் தட்டி விட்ட ஜானகி, “படவா!!! இன்னும் பல்லு கூட விளக்காத உனக்கு பில்டர் காபி கேட்குதா?? இது உங்க அண்ணன் ரகுக்கு டா.. பாவம் குழந்தை நைட்டெல்லாம் சைட்ல ஏதோ பிரச்சனைன்னு லேட்டா தான் வந்து படுத்தான்.. தலை வலிக்கிதுன்னு சொன்னான் நான் போய் குழந்தைக்கு இதை கொடுத்து தைலம் தேய்ச்சி விட்டுட்டு வரேன்.. நீ போய் அதுக்குள்ள ஃப்ரெஷ் ஆய்ட்டு வா” எனக் கூறியவர் தன் பெரிய மகனின் அறையை நோக்கிச் சென்று விட்டார்.
அதுவரையில் தான் கண்ட கனவோடு சேர்த்து காபியின் மணத்திலும் மலர்ந்திருந்த மாதேஷின் முகம் தன் அன்னையின் கூற்றைக் கேட்டு எண்ணெயில் போட்ட கடுகைப் போல் வெடிக்க, “அண்ணனாம் அண்ணன் பெரிய நொண்ணன்” என மாதேஷ் பற்களை நற நறவென்று கடிக்கும் சப்தம் ஹாலில் இருந்த ரங்கநாதனிற்கு கேட்டதோ என்னவோ , ” இன்னும் நீ கிளம்பலயா டா கடைக்கு??” என குரல் கொடுத்தார்.
“போறேன் போய்த் தொலைக்கிறேன்” என முணுமுணுத்துக்கொண்டே எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்தான் அவன்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவன் கடைக்குக் கிளம்ப மேஜையில் வைக்கப்பட்டிருந்த பையையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு, “எல்லாம் என் விதி இந்தியாவோட வருங்கால ரைஸிங் ஸ்டாரை கேவலம் ஆட்டுக்கறி வாங்க அனுப்புறீங்களே இதுக்கெல்லாம் ஒருநாள் அனுபவிப்பீங்க” என புலம்பிக் கொண்டே வெளியேற,
அதைக்கேட்ட ரங்கநாதன், “இதெல்லாம் எங்க உறுப்படப்போகுது” என தலையில் அடித்துக் கொண்டு தினசரியில் கவனத்தைத் திருப்பினார்.
வெளியே வந்த மாதேஷ் தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்ட சமயம் அவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டிலிருந்து கேட்ட குரல் அவனை அங்கேயே தேக்கியது.
ஆறடிக்கும் அதிகமான உயரமும் அதற்கு ஏற்ற உடற்கட்டுடன் பால் வண்ண நிறத்தில் அந்த மாயக்கண்ணனின் கன்னக்குழி சிரிப்போடு பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் முதல் பார்வையிலே மயக்கும் வசீகரமான தோற்றத்தில் வெளியே வந்தான் அவன்- சர்வா.
முகம் முழுக்க புன்னகையுடன் மாதேஷின் அருகில் வந்த சர்வா அவன் தோளில் கையைப் போட, பட்டென அதைத் தட்டி விட்டவன் ‘என்ன’ என்பதைப் போல் அவனை நோக்கினான்.
அவன் செய்கையில் கோபம் ஏறினாலும் தனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதால் முகத்தை கஷ்டப்பட்டு சாதரணமாக வைத்துக்கொண்ட சர்வா, “மாதேஷ் கடைக்கு தான போற.. அப்படியே நம்ம வீட்டுக்கும் 1 கிலோ சிக்கனும் 1/2 கிலோ இறாலும் வாங்கிட்டு வந்துடு சரியா” எனக்கூறியவன் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவன் சைக்கிளின் ஹேன்ட் பாரில் பையைத் தொங்க விட்டுவிட்டு உள்ளே செல்லத் திரும்ப,
அவனைப் போக விடாமல் அங்கு வந்து சேர்ந்தாள் அவனின் செல்லத் தங்கை தான்வி.
“டேய் மாது என்னடா நம்ம எனிமி (enemy) கிட்டலாம் எப்போ பேச்சுவார்த்தை நடத்த ஸ்டார்ட் பண்ண??நம்ம கேங்க்கு உண்டான மரியாதையை கெடுத்துட்டியேடா இப்படி கண்ட கண்டவங்க கூடலாம் பேசி” என ஓரக்கண்ணால் தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டே கூற,
அவள் நினைத்ததைப் போல் அது சர்வாவின் கோபத்தைக் கிளறி விட பற்களைக் கடித்தவன் , “ஹேய் அரைலூசு யாரடி கண்டவனு சொல்ற?? பல்லைத் தட்டி கையில குடுத்துடுவேன் ஜாக்கிரதை.. ரெண்டு அரை மெண்டல் ஒரு முழு மெண்டல் ஒரு முக்கால் மெண்டல்லாம் சேர்ந்து ஒரு கேங்க் வேற” என அவன் எகிற,
பொறுமை என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் தான்விக்கோ அவனின் பேச்சு கோபத்தின் உச்சிக்கு அவளை இழுத்துச் செல்ல, “யூ யூ யூ.. நீ தான் டா மெண்டல்.. பைத்தியம் .. கிறுக்கு… குரங்கு..லூசு” என திட்டிக்கொண்டே அவனை அடிக்க கையில் ஏதாவது சிக்குகிறதா எனத் தேட,
மாதேஷோ தன்னால் முடிந்த அளவிற்கு கொளுத்திப் போடும் பணியை செவ்வனே செய்தான்.
“தானு அது மட்டும் இல்லை தானு உங்க நொண்ணனுக்கு நான் போய் சிக்கனும் ப்ரானும் வாங்கிட்டு வரணுமாம்.. நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா சமையல்காரனா?? ஏதோ நீ என்னோட ப்ரெண்டா போய்ட்ட ஒரே காரணத்துக்காகத் தான் உங்க நொண்ணனை ஒன்னும் பண்ணாம விட்டு வச்சிருக்கேன் பார்த்துக்கோ” என ஒன்றும் அறியாப் பிள்ளை போல் கூற,
“டேய் மரியாதையாப் பேசிப் பழகு.. இல்லை இந்த பிசாசோட சேர்த்து உன்னையும் வெளுத்துருவேன் பார்த்துக்கோ.. ரகுவோட தம்பியாச்சே பாவம்னு பார்த்தா ஓவரா பண்ற..” என சர்வா மாதேஷை மிரட்ட,
அவர்களுக்குள் வந்த தான்வி, ” எவ்ளோ தைரியம் இருந்தா என் உயிர் நண்பனை வேலை செய்ய சொன்னதும் இல்லாம இப்போ என் கண்ணு முன்னாலயே அவனை மிரட்டுவ இன்னைக்கு செத்தடா மவனே நீ!!” என அவள் சர்வாவின் முடியைப் பிடிக்கப் போக,
அப்போது இங்கு நடக்கும் கலவரம் எதைப்பற்றியும் அறியாமல் அவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டிலிருந்து ஓர் ஓவியம் தான் பெண்ணுருவில் உயிர்பெற்று வந்துவிட்டதோ என்பதைப் போல் அடக்கமான அழகுடன் இவர்களை நோக்கி வந்தாள் அவள் – ஓவியா.
வந்தவள் நேராக மாதேஷையும் தான்வியையும் பார்த்து, “ரெண்டுபேரும் வெட்டியா தான விளையாடிட்டு இருக்கீங்க போய் வீட்டுக்கு மீன் வாங்கிட்டு அப்படியே கொஞ்சம் காய்கறியும் தீர்ந்து போச்சு அதை எழுதி வச்சிருக்கேன் பார்த்து வாங்கிட்டு வந்திருங்க என்ன ஓகே வா” எனக் கூற,
மாதேஷும் தான்வியும் கடுப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்து கோபத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டே, ” இலக்கியாஆஆஆஆஆ!!!!!” என மாதேஷும், “நவ்யாஆஆஆஆஆ!!!” என தான்வியும் ஒருசேரக் கத்தி தங்கள் குழுவின் மற்ற இரு மெண்டல் சாரி மெம்பர்களை அழைத்தனர்.
இவர்கள் போட்ட சப்தத்தில் ஓவியாவும் சர்வாவும் காதை மூடிக் கொள்ள, இவர்கள் அழைத்த நவ்யாவும் இலக்கியாவும் , “இதோ வந்துட்டோம்ம்ம்ம்!!!!” எனக் கத்திக் கொண்டே குரங்கு போல் வீட்டின் சுவரை ஏறிக் குதித்துக் கொண்டு வர,
அவர்களின் செயலைக் கண்ட ஓவியா கோபத்தோடு, “ஹேய் எருமைங்களா!!! கேட் திறந்து தான இருக்கு எதுக்கு இப்படி குரங்கு மாதிரி சுவத்தை தாண்டி குதிச்சு வரீங்க?” என தன் உடன்பிறந்த இரட்டைச் சகோதரிகளைக் கடிய,
அதை டீலில் விட்டவர்கள், தங்கள் நண்பர்களிடம் என்ன நடந்தது என விசாரிக்க, அவர்களோ சர்வாவும் , ஓவியாவும் சேர்ந்து தங்களை வேலை வாங்கி கொடுமைப் படுத்த நினைத்ததைக் கூற, அடுத்த சில நிமிடங்களில் பேச்சுவார்த்தையில் தொடங்கிய அவர்கள் அறுவரின் சண்டை கைக்கலப்பில் முடிந்தது.
இவர்கள் போட்ட கூச்சலில் இவர்களைப் பெற்றவர்கள் மட்டுமல்லாது அந்த காலனியில் இருக்கும் அனைவரும் அங்கு கூடி விட, இவர்களைப் பெற்ற அந்த நல்ல உள்ளங்களோ தலையில் அடித்துக் கொண்டு அவர்களைப் பிரிக்கப் போராட, அதன் பயன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
பத்து நிமிடத்திற்கு மேலாகியும் இவர்கள் சண்டை நில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க, காலணியில் இருக்கும் அனைவருக்கும் இவர்கள் வேடிக்கைப்பொருள் ஆகிக் கொண்டிருந்த வேளையில் , “இங்க என்ன சப்தம்!!!!!” என்று ஆளுமையாக வந்து விழுந்த குரலில் சண்டை போட்டுக் கொண்டிருந்த அனைவரும் சட்டென தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு அப்பாவி போல் நிற்க,
அந்த குரலுக்கு சொந்தக்காரனான ரகு என்கிற ரகுராமோ அவர்கள் அனைவரையும் முறைத்தவன் பின் தனது நண்பர்களான சர்வா மற்றும் ஓவியாவைப் பார்த்து, “அவங்க தான் அறிவில்லாம எப்பயும் ஏதாச்சும் பண்ணிகிட்டு இருப்பாங்கன்னு பார்த்தா இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் அறிவு எங்க போச்சு.. சின்ன பசங்க மாதிரி ரோட்டுல அடிச்சு பிடிச்சு சண்டை போட்டுகிட்டு.. ஸ்டுப்பிட்ஸ்” என அவன் திட்ட,
“அதில்லை ரகு” என சர்வா ஏதோ சொல்ல வர, கைநீட்டி அவனைத் தடுத்தவன் ,”இனிமேல் இப்படிப் பண்ணாம வயசுக்கு ஏத்த மாதிரி ஒழுங்கா நடந்துக்கிற வழியை பாருங்க” என எல்லாருக்கும் பொதுவாய் சொன்னவன் அங்கு தலையைக் குனிந்து கொண்டு மனதிற்குள் தன்னைத் திட்டிக்கொண்டிருக்கும் அந்த நால்வரையும் ஒரு கூர்பார்வை பார்த்துவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்து மறைந்தான்.
சர்வாவும் ஓவியாவும் தங்கள் நண்பனிட்ம் இந்தக் குட்டிச் சாத்தான்கள் திட்டு வாங்க வைத்துவிட்டதே என மனதில் குமைந்து கொண்டே அவர்களை முறைத்துக் கொண்டு அவரவர் வீட்டிற்குள் சென்றுவிட,
மிச்சமிருந்த நான்கு வானரங்களும் மெதுவாக தலையை நிமிர்த்த அவர்களைப் பெற்றவர்களோ வஞ்சனையே இல்லாமல் திட்டுகளை நால்வருக்கும் வாரி வழங்கத் தொடங்கினர்.
அதுவும் ரங்கநாதன் ஒரு படி மேலே போய் “எல்லாம் இந்த எருமையால வந்தது தண்டம் தண்டம் உன் கிட்ட ஒரு வேலை சொன்னா உருப்படியா செய்றியா எருமை” என மாதேஷின் முதுகிலே நாலு அடி போட்டவர், “ஒழுங்கா போய் மூனு வீட்டுக்கும் வேண்டும்கிறதை வாங்கிட்டு வந்தா தான் இன்னைக்கு உனக்கு சாப்பாடு ” என அவனைத் துரத்தி விட்டு கடுப்புடன் வீட்டிற்குள் நுழைந்தார்.
தங்கள் பெற்றோரிடம் காலையிலே வண்ணம் வண்ணமாக அர்ச்சனை வாங்கியதற்கு தங்கள் உடன்பிறந்தவர்கள் தான் காரணம் என அவர்கள் மேல் ஏற்கனவே இருக்கும் கடுப்பில் இதுவும் சேர, அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என அந்த நால்வரும் முடிவு செய்துவிட்டே அங்கிருந்து கலைந்து தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றனர்.