காதல் 8:
அந்த மொட்டை மாடியின் இருளும், அவன் மனதின் இருளைப் போலத்தான் இருந்தது. அவன் இந்த அளவிற்கு பொறுமையாய் இருப்பவனும் அல்ல. ஆனால் மகாவின் விஷயத்தில் ஏதோ ஒன்று அவனைத் தடுத்துக் கொண்டே இருந்தது. அது அவனுடைய முந்தைய திருமணத்தின் தோல்வியா..? இல்லை பெண்கள் மீதான பயமா? என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
பாண்டியனுக்கும் அவனுக்கும் ஜென்மப் பகை என்பதை போலெல்லாம் இல்லை. ஆனால், பாண்டியன் கொஞ்சம் திமிராகத்தான் இருந்தார். வாழ்க்கையில் விழும் அடி பலமாகத் தாக்கும் போது தான், சிலரின் ஆட்டம், ஆட்டம் காணத் தொடங்கும். பாண்டியனும் இப்போது அப்படித்தான் இருக்கிறார். அன்று அவ்வளவு பேசிய பாண்டியனை இன்று நினைத்துப் பார்த்தான் ஈஸ்வரன்.
வசுந்தராவும், சபரியும் பெண்கேட்கும் விஷயத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போட, அதற்குள் ஈஸ்வரன் விவசாயத்தில் முழுமூச்சாய் இறங்கியிருந்தான். அதுநாள் வரை ஏனோ தானோவென்று விளைந்து கொண்டிருந்த நிலங்களை எல்லாம், கொஞ்சம் செழிப்பானதாக மாற்றினான் ஈஸ்வரன். இது அவனுக்கு ஊருக்குள் நல்ல பேரையும் வாங்கிக் கொடுக்க, அதுவரை பயந்து கொண்டிருந்த வசுந்தராவுக்கும் அப்போது தான் நிம்மதியே வந்தது. எங்கே மகன் இப்படியே இருந்துவிடுவானோ என்று எண்ணியிருந்தவரின் மனதில் பாலை வார்த்திருந்தான் பிரகதீஸ்வரன்.
உள்ளூர் விஷயத்திலிருந்து உலகநாடுகளின் விஷயம் வரை தெரிந்து வைத்திருந்த ஈஸ்வரனுக்கு, பாண்டியனையும், அவர் குடும்பத்தையும் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தது தான் விந்தையிலும் விந்தை.
ஒருவழியாக ஈஸ்வரனுக்கு நிவேதாவை பொண்ணுக் கேட்டு செல்லும் நாளும் வந்தது.
“நான் எதுக்கும்மா இன்னைக்கு..? முதல்ல பெரியவங்க நீங்க பார்த்து பேசுங்க..” என்றான் ஈஸ்வரன்.
“அதுக்கில்லை ஈஸ்வரா. நம்ம வீட்ல அப்பா இல்லை. அதனால நீ கூட வந்து தான் ஆகணும்..” என்றார் வசுந்தரா.
“நீங்களாவது சொல்லுங்க மாமா..!” என்றான் சபரியிடம்.
“அட வா மாப்பிள்ளை..! உனக்கு போய் பொண்ணு இல்லைன்னு சொல்லிடுவாரா..?ஏற்கனவே பேசி வச்சது தான. எல்லாம் நல்ல படியா முடிஞ்ச மாதிரித்தான். பொண்ணுக்கும் சரின்னா, உடனே பாக்கு வெத்தலையை மாத்திட்டு வந்திடலாம் பாரு..” என்றான் சபரியும்.
“அவங்க வீட்ல முன்னமே கலந்து பேசாம, நாம திடுதிப்புன்னு போய் நிற்கிறது எனக்கு என்னவோ சரியா படலை..” என்ற ஈஸ்வரனை, ஒருவழியாக சமாளித்து கூட்டிச் சென்றனர்.
சபரி, மாப்பிள்ளை விஷயம் என்று சொன்னவுடன், பாண்டியனும் பெரிய அளவில் எதிர்பார்த்திருக்க, ஈஸ்வரனை அழைத்து சென்றது அவருக்கு பெரிய ஏமாற்றம் தான்.
சபரி சொன்னான் என்பதற்காக யார் என்னவென்று கேட்காமல் பாண்டியனும் தலையை ஆட்டியிருந்தார். இப்போது என்ன செய்வதென்று பாண்டியனுக்கும் தெரியவில்லை.
“என்னங்க இது? வந்தவங்களை சும்மாவே உட்கார வச்சிருக்கிங்க..?” என்று கமலா கூட கடிந்து கொண்டார்.
“என் தம்பின்றதுக்காக சொல்லலை மாமா. நிஜமாவே இவனை மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நிவேதா குடுத்து வச்சிருக்கணும்..” என்றாள் மஞ்சரி. அவள் அப்படி பேசியது பாண்டியனின் ஈகோவைத் தூண்டி விட,
“அப்போ என்னோட பொண்ணு அந்த அளவுக்கு இல்லையா மஞ்சு..? சொல்லப் போனா, என் பொண்ணைக் கட்டுறவன் தான் குடுத்து வச்சவன்” என்றார் கோபமாக.
அவரின் சத்தத்தில் உள்ளேயிருந்த நிவேதாவும், மகாவும் வேகமாய் வெளியே வர, நிமிர்ந்து பார்த்த ஈஸ்வரனின் கண்களில் குழப்பம். ஏனென்றால் நிவேதா தான் புடவை கட்டி ரெடியாகியிருந்தாள். மகா, ஏனோ தானோவென்று இருக்க, யோசனையுடன் பார்த்தான் ஈஸ்வரன்.
“ஐயோ..! அப்படி சொல்லலை அண்ணா. சொல்லப் போனா, நிவேதா மாதிரி பொண்ணு கிடைக்க நாங்க குடுத்து தான் வச்சிருக்கணும். அப்படி ஒரு பாந்தம்…” என்று வசுந்தரா அவரின் கோபத்தைக் குறைக்கப் பார்த்தார்.
அது என்னவோ? தன்னுடைய பெண்களை யாராவது குறைத்து மதிப்பிட்டால், அதை பாண்டியனால் தாங்கிக் கொள்ள முடியாது.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, ஈஸ்வரனோ அருகில் இருந்த சபரியிடம்,
“மாமா இதுல நிவேதா யாரு..?” என்றான்.
“என்ன ஈஸ்வரா கிண்டலா..? பார்த்தா தெரியலை, புடவை கட்டியிருக்குற பொண்ணு தான் பெரிய பொண்ணு நிவேதா..” என்றான் சபரி.
“அவங்க பக்கத்துல இருக்குற பொண்ணு தான் அவங்களுக்கு அக்கா மாதிரி இருக்காங்க..” என்றான் ஈஸ்வரன்.
“அது மகா பத்ரா. ரெண்டாவது பொண்ணு. பாண்டியன் அண்ணனை மாதிரி கொஞ்சம் வளர்த்தி, அதான்..” என்றான் சபரி.
“ஹோ..” என்றவனின் பார்வை என்னவோ மகாவின் மீது தான் இருந்தது.
“ஈஸ்வரன் விவசாயம் பார்க்குறது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு. என் பொண்ணுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளையைத் தான் பார்க்கனும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஏன்னா, இங்க செல்லமா வளர்த்த பிள்ளை..” என்று பாண்டியன் சுற்றி வளைக்க,
“ஈஸ்வரனும் படிச்சிருக்கான் அண்ணா. அவனுக்கு என்ன குறை..?” என்று சபரி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ருக்குவிற்கு கோபம் வந்துவிட்டது.
“அட விடுங்க சபரி மாப்பிள்ளை. ராஜாவாட்டம் இருக்குற என் பேரனுக்கு பக்கத்துல நின்னா, அப்படி ஒன்னும் ஜோடிப் பொருத்தம் வராது. முடியாதுன்னு சொன்னா விட்டுத் தள்ளுங்க..நமக்கு என்ன பொண்ணா கிடைக்காது..?” என்று ருக்கு பாட்டி பட்டென்று சொல்லிவிட்டார்.
“பாட்டி வேண்டாம், எதுவும் பேச வேண்டாம். நாம கிளம்பலாம்..” என்ற ஈஸ்வரன் எழுந்தே விட்டான்.
“பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது, இப்படி சட்டுன்னு எழுந்து போறது மரியாதை கிடையாது..” என்று பாண்டியன் சொல்ல, பொறுமையை இழுத்துப் பிடித்தான் ஈஸ்வரன்.
“சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா எப்படிண்ணா..? நான் தான் அவங்களைக் கூட்டிட்டு வந்தேன்..” என்றான் சபரி.
“நான் கோபப்படலை சபரி. ஆனா, போனா போகுதுன்னு என் பொண்ணை பார்க்க வந்த மாதிரி பேசுறாங்க. எனக்கு இருக்குற தகுதிக்கு நான் இன்னும் பெரிய இடமாவே பார்க்கலாம். ஏதோ, நீ சொன்னன்னு தான் சரின்னு சொன்னேன்.” என்றார் பாண்டியன்.
“தகுதி அது இதுன்னு பேசாதிங்க. நாங்களும் ஒன்னும் குறைஞ்சவங்க கிடையாது..” என்றாள் மஞ்சரி.
“என் பொண்ணை கட்டிக்கிற அளவுக்கு தகுதியில்லை..அந்த அளவுக்கு தகுதியிருந்திருந்தா, உன் தம்பி எதுக்கு காடு கரைன்னு திரியறான்..” என்றார் பாண்டியன்.
“என்ன நீங்க..? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுறிங்க..?” என்று மஞ்சரி சண்டைக்குக் கிளம்ப,
“அக்கா..!!” என்ற ஈஸ்வரின் குரலில் அப்படி ஒரு கோபம் கலந்த அழுத்தம்.
“நீங்க சொன்ன மாதிரி உங்க பொண்ணை கட்டிக்கிற தகுதி எனக்கில்லை. நல்ல தகுதியான மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக் குடுங்க..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்,
“கிளம்பலாம்..!” என்று சொல்லி விட்டு, பட்டென்று அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டான்.
“எதார்த்தமா பேசுற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சு, நீ பெருசா, நான் பெருசான்னு பேசினா, சந்தோஷமா வாழ முடியாதுண்ணா..” என்ற சபரியும் அதற்கு மேல் அங்கு இருக்கவில்லை. வசுந்தரா எதுவும் சொல்லாமல் கிளம்ப, ருக்கு பாட்டிக்கோ அப்படி ஒரு கோபம்,
“கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தின மாதிரி பண்ணிட்டிங்கல்ல. பொண்ணைப் பெத்த உனக்கே இவ்வளவு திண்ணக்கம் இருக்கும் போது, நாங்க பையனைப் பெத்தவங்க. அப்படியெல்லாம் இறங்கிப் போகணும்ன்னு அவசியம் இல்லை..” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு சென்றார் ருக்கு.
“என்னங்க நீங்க..? எதுக்கு இப்படி ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெருசாக்குனிங்க..?” என்று கமலா கோபத்துடன் கேட்க,
“ஏன்னா..எனக்கு பிடிக்கலை. அதான் அப்படி பேசினேன். முதல்ல கொஞ்சம் யோசனை இருந்தாலும் பிறகு சரின்னு தான் தோணுச்சு. ஆனா, அவங்க பேசுற எதுவும் எனக்குப் பிடிக்கலை. நான் சொன்ன மாதிரி என் பொண்ணை அவனை விட நல்லா படிச்சவனா, நல்ல உத்தியோகத்தில் இருக்குறவனா பார்த்து தான் குடுப்பேன்..” என்றார் பாண்டியன்.
“இருந்தாலும் அவங்களை வரவச்சு இப்படி பேசுனது கொஞ்சம் தப்பா தெரியுதுப்பா..பாவம் அந்த மைனரு..” என்றாள் மகா.
நிவேதா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க,
“நீ என்னடி..? பொம்மை மாதிரி நிக்கிற..? ஏதாவது பேசேன்..?” என்றாள் மகா.
“நான் பேச என்ன இருக்கு..? அப்பாவுக்கு எது சரின்னு படுதோ அது தான் எனக்கும் சரி..” என்ற நிவேதா உள்ளே சென்று விட்டாள்.
அவர்களின் மோதல் அன்றுடன் முடியவில்லை. அதற்கடுத்து பார்க்கும் இடங்களில் எல்லாம் இருவருக்கும் முட்டிக் கொண்டு தான் இருந்தது. அதற்கு பிறகு அவர்களைப் பற்றி நினைக்கக் கூட ஈஸ்வரனுக்கு நேரம் இருக்கவில்லை. மஞ்சரியும் அவர்களுடன் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டாள். சபரி வெளியே பார்த்தால் பேசுவதோடு சரி. ஒட்டி உறவாடிய நிலை மாறிப் போனது.
இதோ, விதி அவனை மீண்டும் அவருக்கே மருமகனாக்கியிருக்கிறது. அன்றைய இரவையும் அவனுக்கு தூங்காத இரவாக மாறியிருந்தது.
முதல்நாள் போல் இல்லாமல், அடுத்தநாள் காலை குளித்துவிட்டு தான் வந்தாள் மகா.
“ஈஸ்வரன் எங்க மகா..? இன்னுமா தூங்கிட்டு இருக்கான். இவ்வளவு நேரம் தூங்க மாட்டானே..?” என்றார் வசுந்தரா.
“தெரியலை அத்தை..! நான் நல்லா தூங்கிட்டேன். ஆளைக் காணோம்..” என்று அவள் அசால்ட்டாக சொல்ல, வசுந்தராவிற்கு தான் தூக்கி வாரிப் போட்டது.
“நான் தான் சொல்லலை..!இவ ஏதோ திட்டத்தோட தான் இருக்கா..” என்றார் ருக்கு.
“ஆமா பாட்டி. திட்டத்தோட தான் இருக்கேன்..” என்றாள் காபியை குடித்துக் கொண்டே.
“என்னடி திட்டம் போட்டு வச்சிருக்க..?” என்றார் ருக்கு.
“தினமும் மூணு வேளை சாப்பிடுறதை இனி ஆறு வேளையா சாப்பிடலாம்ன்னு இருக்கேன்..! சோறு முக்கியம் பாருங்க..” என்றாள் விளையாட்டாய்.
அப்போது ஈஸ்வரன் வெளியே இருந்து வர,
“இவ்வளவு காலையில எங்கப்பா போய்ட்டு வர்ற..?” என்றார் வசுந்தரா.
“சீக்கிரமே எந்திருச்சு தோட்டத்துக்கு போய்ட்டு வந்தேன் ம்மா..” என்றவன், எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டான்.
“ஏன் அத்தை..? உங்க பையன் எப்பவுமே இப்படித்தானா..? கேட்கிற கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்றார். எல்லாமே அளந்து தான் பேசுவாரோ..?” என்றாள்.
“அவனுக்கும் சேர்த்து தான் நீ பேசிட்டே இருக்கியே..?” என்றார் ருக்கு.
“இதென்ன பிரம்மாதம்? இப்பல்லாம் நான் அளவாத்தான் பேசுறேன். முன்னாடி எல்லாம் இன்னும் பேசுவேன்..” என்று குண்டைத் தூக்கிப் போட,
“என்ன இதுக்கு மேல பேசுவியா..?” என்றார் ருக்கு அதிர்ச்சியாய்.
“நான் தான் சொன்னேன்ல இவ ஒரு வாயாடின்னு..” என்றாள் மஞ்சரி.
“நீங்க இன்னைக்கு மறுவீட்டுக்கு கிளம்பனும் மகா. சீக்கிரம் கிளம்பிடுங்க..” என்றார் வசுந்தரா.
“இன்னைக்கு மறுவீடா..? அதான் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரா..? நான் கூட எனக்காகன்னு தப்பா நினைச்சுட்டேனே..?” என்று மனதிற்குள் நினைத்தவள், வேகமாக அறைக்குள் சென்றாள்.
அவள் வருவதை வைத்தே கணித்தவன்,
‘இப்ப மட்டும் இவ ஏதாவது பேசட்டும். இன்னைக்கு இருக்கு இவளுக்கு கச்சேரி..’ என்று நினைத்துக் கொண்டான்.
“என்னமோ எனக்காக எங்கப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போற மாதிரி பேசுனிங்க. கடைசியில மறுவீட்டுக்கு தான் போறோம்ன்னு ஏன் சொல்லலை..?” என்றாள் கோபமாக.
“இதோ பார்..! மறுவீட்டு அழைப்பு உங்கப்பா தான் அழைக்கணும். அவங்க தான் உன்கிட்ட சொல்லணும். நான் இல்லை. நேர்ல வந்து சொல்லாம, அதையும் போன் போட்டு சொல்றார். நல்ல மரியாதை தெரிஞ்ச குடும்பம் தான் போ. நானும் போனாப் போகுதுன்னு பார்க்குறேன். கொஞ்ச நேரம் வாயை மூடிகிட்டு இருந்தா கூட வருவேன். இல்லையா நானும் வரமாட்டேன்..” என்றான் தெளிவாய்.
“நீங்களும் வர மாட்டேன்னா என்ன அர்த்தம்..? அப்ப அத்தை,பாட்டியெல்லாம் வரலையா..?” என்றாள் கோபமாக.
“நீங்க செய்றதை முறைப்படி செஞ்சா தான், நாங்களும் எதையும் முறையா செய்ய முடியும்..” என்றான் ஈஸ்வரன்.
“ஹோ..! எங்கப்பா எதுவுமே செய்யலைன்னு குத்திக் காட்டுறிங்களா..?” என்றாள் கோபமாய்.
“அடியேய்..! நீ என்ன லூசா..? இல்ல தெரியாமத்தான் கேட்குறேன்..? உங்க குடும்பமே என்ன லூசு குடும்பமா..? நாங்க ஒன்னு பேசுனா..நீங்க ஒரு அர்த்தத்துல பேசுறிங்க..?” என்று ஈஸ்வரன் கடுப்புடன் கேட்டான்.
“எங்களைப் பார்த்தா லூசு குடும்பம் மாதிரி தான் இருக்கும். கொலைகாரனுக்கு பொண்ணைக் கட்டிக் குடுக்கனும்ன்னா, அவங்க லூசுக் குடும்பமா இருந்தாத்தான் முடியும்..” என்றாள் அவளும் பதிலுக்கு.
“கொலைகாரன்னு சொல்லாத..” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“அப்படித்தான் சொல்லுவேன்..! ஒருதடவை என்ன, நூறு தடவை சொல்வேன்.. நீங்க ஒரு கொலைகாரன், கொலைகாரன். உங்களுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப்பட்டு வந்தது என்னோட முட்டாள் தனம் தான்..” என்றாள் கோபமாக.
“ஏய்..!!” என்று அவளை அடிக்க கையை ஓங்கியவன், அவள் மிரண்டு விழித்ததில், அங்கிருந்த சுவரில் அவன் கை வீங்கும் அளவிற்கு குத்திக் கொண்டிருந்தான். அவனுடைய கோபத்தை முதல் முறையாக பார்க்கிறாள். மிரண்டு போய் அவள் பார்த்திருக்க,
“மறுவீடும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது.. போடி..” என்றவன் வெளியே சென்று விட்டான்.
அவர்கள் அறையில் சத்தம் கேட்கும் போதே, பதறியடித்துக் கொண்டு சென்ற மஞ்சரி, ஈஸ்வரன் கோபமாக வெளியேறுவதைப் பார்த்து மகாவின் மேல் தான் கோபத்தைக் காட்டினாள்.
“பேசுறது தப்பில்லை.. எப்ப, எதைப் பேசனும்ன்னு யோசிச்சுப் பேசணும். எங்களைத் தப்பு சொல்றதுக்கு முன்னாடி, என் தம்பியை தப்பு சொல்றதுக்கு முன்னாடி, நீங்க நடந்துக்கிறது சரியான்னு யோசிச்சு பாரு..” என்றாள் மஞ்சரி.
“நீங்க ஒன்னும் என்னோட விஷயத்தில் தலையிடத் தேவையில்லை..” என்றாள் மகா.
“நான் உன்னோட விஷயத்தில் தலையிடலை. என் தம்பிக்காகத் தான் பேசிட்டு இருக்கேன். இனி ஒரு தடவை அவனை கொலைகாரன்னு சொன்ன, அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்..” என்றாள் மஞ்சரி.
“மறுவீட்டுக்கு நானும் அவர் மட்டும் போனா நல்லாவா இருக்கும்..? அதைத்தான் கேட்டேன்..” என்றாள்.
“கேட்கிறது தப்பில்லை. கேட்ட விதம் தான் தப்பு. மறுவீடு முடிஞ்சு வரும் போது தான் சீர் வரிசை குடுத்து அனுப்புறது வழக்கம். உங்கப்பாவுக்கு ஏதோ பிரச்சனை. இப்போதைக்கு செய்ய முடியலை. எல்லாரையும் கூப்பிட்டு செஞ்சா, நாலு பேர் உன்னை எதுவும் பேசிடக் கூடாதுன்னு தான், அவன் எதுவும் வேண்டாம், நானும் அவளும் மட்டும் போய்ட்டு வர்றோம்ன்னு சொன்னான். இது தப்பா..?” என்றாள் மஞ்சரி.
“சித்தி..” என்றாள் மகா.
“வாயை மூடு..! படிக்க வச்ச அளவுக்கு, பண்பை சொல்லிக் குடுத்து வளர்க்கலை உங்கப்பா. படிச்ச நீங்க எல்லாம் அறிவாளியும் கிடையாது. அளவா படிச்ச நாங்கல்லாம் முட்டாளும் கிடையாது. முதல்ல உங்கப்பாவுக்கு என்ன பிரச்சனைன்னு கேளு..” என்று அவளை லெப்ட் ரைட் வாங்கிவிட்டுத் தான் போனாள் மஞ்சரி.
“தேவையில்லாம பேசிட்டோமோ..?” என்று முதன் முறையாக மனதிற்குள் வருந்தினாள் மகா. அவனிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் வெளியே செல்ல, வசுந்தரா இவளை கண்டு கொள்ளாமல், அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அத்தை..!” என்றாள் மெதுவாக.
“வேண்டாம் மகா.. எதுவும் பேசாத. நான் தான் மாட்டேன்னு சொன்னவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா, அது தப்போன்னு இப்போ வருத்தப்படுறேன். வாய் துடுக்குதான், மத்தபடி கொஞ்சம் பொறுப்பா இருப்பன்னு பார்த்தேன். ஆனா, அது எதுவுமே இல்லைன்னு சொல்லாம சொல்லிட்ட..” என்ற வசுந்தரா அடுப்படிக்குள் சென்றுவிட்டார்.
எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றவளுக்கு கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது. காரணமேயில்லாமல் எதுவோ ஒன்று அவளுக்குள் உடைந்தது.
கோபத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றவன், இடையிலேயே என்ன நினைத்தானோ தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டான். வந்தவன் நேராக அவளைத் தேடி செல்ல, அவன் வரும் சத்தம் கேட்டவுடன், வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள். வந்து ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“கிளம்பு போகலாம்..!” என்றான்.
“இல்ல வேண்டாம்..!” என்றாள்.
“உன்னை கிளம்புன்னு தான் சொன்னேன்…” என்று அவன் அழுத்தத்துடன் சொன்ன விதத்தில் சட்டென்று எழுந்து நின்று விட்டாள்.
அவள் அழுத தடம் தெரிய, அவள் முகத்தை நோக்கி நீளும் கரங்களை அடக்க வழி தெரியாமல்,
“ஹால்ல இருக்கேன்..! சீக்கிரம் கிளம்பி வா..!” என்று சொன்னவன், படக்கென்று சென்று விட்டான்.
ஒருவழியாக கிளம்பி கீழே வந்தவளை,
“இங்க வா மகா..!” என்று அழைத்த வசுந்தரா,
“இந்த நகைகளை போட்டுக்கோ..” என்றார்.
“இல்ல, வேண்டாம் அத்தை..” என்றாள் மறுப்பாய்.
“பரவாயில்லம்மா..! போட்டுக்க..” என்று அவர் வற்புறுத்தி சொல்ல,
“இது யாரு நகை அத்தை..?” என்றாள்.
“ஏன் கேட்குற..?” என்றார் வசுந்தரா.
“இல்லை..! அது வந்து..” என்று அவள் இழுக்க,
“நீ நினைக்கிற மாதிரி இது வேற யாரோடதும் இல்லை. வரப்போற மருமகளுக்காக நான் எடுத்து வச்சது தான்..போட்டுட்டு வா” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
அவர் கொடுத்த நகைகளை போட்டுக் கொண்டு கிளம்ப நினைத்தவளின் கண்களில் பட்டது அந்த புகைப்படம். அது, ஈஸ்வரனும், அனிதாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம். கல்யாணத்தின் போது, பேனர் வைப்பதற்காக எடுக்கப் பட்ட புகைப்படம் அது. அதில் ஒரு காப்பி, வசுந்தராவின் அறையில் இருந்தது.
அதில் ஈஸ்வரனின் அருகில் இருந்த அனிதாவைப் பார்த்த மகாவின் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றது.