பெண் பங்கேற்பாளர்களுக்கு ஒதுக்கி இருந்த அறையே அவர்கள் தயாராக செய்யும் அலும்புகளால் ஆராவாரமாய் காட்சியளித்தது.
தங்களின் திறமையை வெளிவுலகிற்கு அறிமுகப்படுத்த போகும் முதல் படியிற்கு ஆர்வமும் குதூகலமும் போட்டியிட பரபரப்பாய் தயாராகினர்.
ஒவ்வொரு குழுக்களுக்கும் சிறு சிறு தடுப்புகள் பிரித்து தனி தனி ஒப்பனை மேசைகள் கொடுத்து இருக்க அவர்களே நியமித்து இருந்த ஒப்பனையாளர் சக்திக்கும் ஸ்வேதாவிற்கும் சிகை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் அணிந்திருந்த பீச் நிற நெட் ஃப்ளேர்ட் கவுன் தரையில் உரச இரு பெண்களுக்கும் அத்தனை அம்சமாய் பொருந்தி இருந்தது.
சக்திக்கு முடித்துவிட்டு இப்போது ஸ்வேதாவிற்கு தான் அலங்காரம் செய்துக் கொண்டிருந்தார்.
அந்த ஒப்பனையாளரிடம் ஸ்வேதா வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்க அதனை அரைகுறையாய் காதில் வாங்கி அலைபேசியை எடுத்து பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தாள் சக்தி.
சிறிது நேரத்திலே அவளின் அலைபாய்தலை உணர்ந்த ஸ்வேதா,
“பின்ன ஏன் அந்த ஃபோனை அந்த பாடுபடுத்துற.. நான் அவ்வளவு போரடிக்கிறேனோ..” என்றவள் நிமிர்ந்து,
“அப்படியா க்கா..” என அவரிடமும் கேட்க அவர் மறுக்கும் போதே,
“ச்சே.. ச்சே.. நீ போர் மட்டும் இல்ல.. பேசியே கொல்லுற.. அதில் எந்த சந்தேகமும் இல்ல.. ஆனால் நான் கவலையா இருக்கிறது இன்னும் ஆரியனை காணுமேனு தான்..”
என்று தீவிரமாய் பதில் சொல்ல ஒப்பனையாளர் சிரித்து விட்டார்.
“போ பக்கி..” என அவள் கையை கிள்ளி வைக்க, “ஆ.. வலிக்குது டி..” என கையை தேயித்துக் கொண்டு மீண்டும் அலைபேசியை எடுக்கவும்,
“அடடா.. ப்ரோ தான் அப்பவே கிளம்பிட்டேன்ன்னு சொன்னாங்கல்ல.. அப்போ வந்துட்டு தான் இருப்பாங்க.. அதுக்குள்ள நீ ஏன் மேன் குதிக்கிற..”
என்றாள் ஸ்வேதா..
“நேரம் ஆகுது ஆனால் இன்னும் காணும்.. எங்க இருக்கேன்னு கேட்ட மெசேஜையும் பார்க்கல.. அதான் லைட்டா டென்ஷன் ஆகுது..”
“ட்ராவலிங்ல ஃபோனை கவனிச்சு இருக்க மாட்டாங்க.. வந்துட்டு தான் இருப்பாங்க ஸ்ரீ.. ரிப்ளை வந்தால் மெசேஜ் டோன் கேட்கும்.. ஜஸ்ட் ரிலாக்ஸ்..”
அவளை ஆசுவாசப்படுத்தி வேறு வேறு விஷயங்களில் அவளை இழுக்க பார்க்க அடுத்த ஐந்து நிமிடங்களிலே மீண்டும் அவனை தேட தொடங்கியது மனம்..!! ஆனால் என்ன இந்த முறை ஸ்வேதாவிற்காக அலைபேசியை எடுத்து பார்க்கவில்லை.
நேரம் கரைய தயாராகிய அனைவரையும் மேடைக்கு அழைக்க வெளியே வந்ததும் லெனின், யோகி, கெளதம் உடன் இணைந்துக் கொண்டனர்.
உள்ளே செல்லும்முன் ஒருவழியாய் கணவனிடம் இருந்து அழைப்பு வந்துவிட தான் நிற்கும் இடம் கூறி வர சொல்லவும் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு விரைந்தாள் சக்தி.
அங்கே தூரத்திலே அவனை கண்டுவிட்ட சக்திக்கு ஓடி சென்று அவனிடம் சரண் புக பேராவல் எழுந்தாலும் உள்ளே துடிக்கும் தன் இன்னோர் உயிரை கருத்தில் கொண்டு மெதுவாகவே நடந்து வர அதற்குள் அவனே அவளை பார்த்து விட்டான்.
காலை இடறாதவாறு கவுனை பிடித்துக் கொண்டு முகமெங்கும் மகிழ்ச்சி பொங்க சற்றும் முன் கர்ள் செய்யபட்ட முடி தோள்களில் புரள அன்ன நடையிட்டு வரும் சக்தியின் அழகில் சொக்கி தான் போனான்.
அவள் அருகில் வந்ததும் கை தன் போக்கில் அவளை அணைத்துக் கொள்ள,
“ஏன் ஆர்யா இவ்வளவு லேட்..?? ப்ரோகிரம் முடிஞ்சு தான் வருவீயோன்னு தோண ஆரம்பிச்சுடுச்சு..”
அவன் தோளில் சாய்ந்தபடி விழி மட்டும் உயர்த்தி முறைக்க,
“ம்ம்.. இந்த ஊரு ட்ராஃபிக்ல நான் இவ்வளவு சீக்கிரம் வந்ததே பெருசு..”
என்றவன் அவளை மீண்டும் தலை முதல் கால் வரை பார்வையால் அலசி,
“மெழுகு பொம்மை மாதிரியே இருக்கடி… ஒரு வாரம் கழிச்சு வரும் புருஷனுக்கு நல்லதொர் தரிசனம்.. நான் இன்னைக்கு ‘அபிராமி.. அபிராமி..’ மோட் தான்..”
என ரசித்து அவள் நெற்றி முட்டி சொல்ல அவள் புன்னகை மேலும் விரிந்தது. பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டதின் பரம திருப்தி..!!
“வெட்கம் எல்லாம் வருது.. போடா..”
என கேலியாய் முகத்தை மூடிக் கொள்ள சிரித்த அவனும்,
“போதும்.. போதும்.. அது மட்டும் வேணாம்.. சகிக்காது..”
என அவள் கையை எடுத்துவிட்டு
லேசாய் குனிந்து,
“ஹாய் டார்லிங்.. அப்பாவை மிஸ் பண்ணிங்களா.. எப்படி இருக்கீங்க..”
என தன் பிள்ளையோடு பேச்சு வார்த்தையில் போய்விட,
“இப்போவே எல்லாம் நாம பேசுவதை பிள்ளை உணராதுன்னு படிச்சு படிச்சு சொன்னாலும் நைட் கதை சொல்றேன்னு நீ செய்யுற அலப்பறையை மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மிஸ் பண்ணாங்களாம்..”
என நீட்டி முழக்கி அவள் சொல்ல,
“ஆஹான்..” என அவனும் தலையசைத்து சிரித்தான். அதற்குள் உள்ளே அழைக்கவும்,
“சரிமா.. ஆல் தி பெஸ்ட்.. போ..”
என அவளை அனுப்பி வைத்துவிட்டு பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டான். ஸ்வேதாவின் அப்பா, யோகியின் அண்ணன், லெனின் அன்னை, கெளதம்மின் தம்பி என அவரவர் சாரப்பில் எல்லோரும் வந்து இருக்க ஆரியனும் அவர்களோடு அமர்ந்துக் கொண்டான்.
மேடையில் பொருத்தபட்டிருந்த ஒளிப்படகருவிகளின் குவிமையத்தை சரியாய் அமைக்க கணினி திரைகளின் பின் நின்று சொல்லிக் கொண்டிருந்த யாமினி ஆரியனை கண்டதும் வரவேற்கும் விதமாய் புன்னகைத்து தலையசைக்க அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.
இன்னமும் சக்திஸ்ரீ யாமினியின் மகள் என்பது யாருக்கும் தெரியாது. நிகழ்ச்சி முடியும் வரை யாருக்கும் தெரியாமலே இருக்கட்டும் என யாமினி சொல்லிவிட அதனை அவர்கள் குழுவும் ஒத்துக் கொண்டது.
அனைத்தும் தயாரான நிலையில் முதலில் மேடையில் இருக்கும் திறக்கும் திரையின் வழி தொகுபாளர்கள் வந்து நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி பேசி அடுத்து பங்கேற்பாளர்களை வரவேற்று அடுத்து நடுவர்களை வரவேற்று என ஆர்ப்பாட்டமாய் தொடங்கியது.
ஐந்தாவதாக ஆர். ஓ. எல் அழைக்கப்படுவர் என தெரிவித்து இருக்க முதல் இரண்டு பர்ஃபாமென்ஸை ஜாலியாய் பார்த்து இரசித்து இருந்தவர்கள் மூன்று, நாலு வந்தபின் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாத உருளையும் உருள தங்களை அழைக்க காத்திருந்தனர்.
நான்காம் குழுவும் கருத்துபெற்று சென்றபின் தொகுபாளர்கள் அடுத்ததாக ஆர். ஓ. எல் குழுவை மேடைக்கு அழைப்பதோடு கட் சொல்லப்பட்டது.
அந்த இடைவேளை நேரத்தில் மேடையில் இசைகருவிகளை அவர்கள் வசதிக்கு ஏற்ப வைத்துக் கொள்ள வேண்டும்..!!
லெனினும் ஸ்வேதாவும் நடுவே நிற்க லெனின் அருகில் சக்திஸ்ரீ கீப்போர்ட்டை பொருத்திக் கொடுத்தனர். மறுபக்கம் ஸ்வேதா அருகில் கௌதம் கிட்டாரோடும் அவனை அடுத்து யோகி அவனின் பெர்கஷன் செட் உடனும் என மொத்தமாய் அரைவட்ட வடிவில் நின்றனர். கீப்போர்ட் முன் அமர்ந்ததும் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்ட சக்தி திரும்பி ஆரியனை நோக்க அவன் தம்ஸ்அப் காட்டவும் பதிலாய் புன்னகை சிந்தினாள்.
மேடை இருளில் மூழ்க கேமரா ரோல்லிங் செய்யப்பட்டு மைக்கில் யாமினி,
“3.. 2.. 1.. க்ளாப்..”
என்று உரக்க சொல்லிய அடுத்த நொடி தேனாய் இசை ஒலிக்க தொடங்க விளக்கின் வெளிச்சம் குவியலாய் சக்தி மீது விழுந்து கேமரா மெல்ல அவளை மையமிட்டது.
மஸ்காரா இடப்பெற்ற இமைகள் அவள் கீழே பார்த்து இருப்பதால் குடையாய் மூடியிருக்க சாயம் பூசப்பட்ட இதழ்கள் ஓரம் புன்னகையில் நெளிய இரசிப்போடு வாசிக்கும் அவளோடு வெளிச்சம் மெல்ல விரிவடைந்து லெனினையும் உள்ளே இழுத்தது.
“கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே..
….
……..
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி…”
இசையோடு மென்மையாய் அவனின் குரல் நம்முள் இறங்க தொடர்ந்து,
“ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே..”
என முதல் வரியில் நிறுத்த சக்தி வதிகளை அழுத்தி சின்ன மாற்றத்தோடு வேறு டியுனை வாசிக்க தொடங்க மெல்லியதாய் ஹம் செய்யும் ஸ்வேதாவும் சக்தியை ஒத்திசைத்து ஒலித்த கிட்டார் இசையோடு கெளதமும் யோகியும் என வெளிச்சம் முழுதாக எங்கும் ஒளிர்ந்தது.
மீண்டும் லெனின்,
“பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே…”
என்ற வரிகளில் தொடங்கி ஸ்வேதாவை நோக்கி புன்னகைக்க,
“தா..ர.. த.. ரா..” என அவளும் அவனை பார்த்து அதே முறுவலோடு கோரஸ் பாட அந்த புன்னகையுமே அவர்கள் குரலில் ஒரு இனிமையை சேர்த்தது.
அந்த சரணத்தை முழுதாக பாடி,
“புரியாதோ என் எண்ணமே
அன்பே…”
என அவன் இழுத்து நிறுத்தும்போது யோகி சிம்பளில் அடித்து எழுப்பிய ஒலியை தொடர்ந்து அவன் அந்த டியூனை கையில் எடுக்க,
” என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே.. ” என அப்பாடலை முடிக்க யோகி டியூனில் மெல்லமாய் மாற்றத்தை கொண்டு கடைசி பாடலில் தாவவும்,
“கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே..”
ஸ்வேதா கண் மூடி அதன் சரணத்தை பாட,
“கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்…”
என்ற வரிகளில் லெனினும் இணைந்துக் கொள்ள இரண்டாவது முறை இதே பல்லவியை பாடி,
“காதல் சொன்னான்…” என ஸ்வேதா இழுத்து அழகாய் முடிக்க கடலலையாய் கரகோஷம் அரங்கமெங்கும் ஒலித்தது. முன்னால் வந்து வரிசையாய் கைகோர்த்து நின்றபின் இடைவரை குனிந்து தங்கள் நன்றியை செலுத்தினர்.
“வாவ்.. வாவ்.. சச்ச பியூட்டிபுல் பர்ஃபாமென்ஸ்..”
என்று கை தட்டலுடன் தொகுப்பாளர்கள் மேடையேறி வந்தவர்கள் நடுவர்களின் கருத்துகளை கேட்க அவர்களும் பாராட்டு மழையை பொழிந்தனர்.
அதற்கு பிறகே அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள கூற சக்தி பேசும் போது,
“இருங்க.. இருங்க.. நாம ஏற்கெனவே மீட் பண்ணி இருக்கா மாதிரி தோணுதே.. உங்களுக்கும் அப்படி எதுவும் தோணுதா..”
என்று விளையாட்டாய் அந்த ஆண் தொகுப்பாளன் கேட்க புருவம் சுருக்கி அவள் யோசிக்கும் போதே குறுக்கிட்ட அந்த பெண் தொகுப்பாளினி,
“அதோ.. அந்த பொண்ணோட வீட்டுகாரர் கூட இங்க தான் உட்கார்ந்து இருக்கார்.. நான் வேணா கேட்டு வரட்டா…”
என்று நக்கலாய் கேட்கவும் அவன் திருதிருவென விழிக்க கொல்லென்று சிரிப்பலை எழுந்தது. ஆர்யனும் புருவம் தூக்கி கேலியாய் பார்க்கவும்,
“இட்ஸ் ஓகே.. அது எதுக்கு இப்ப.. நீங்க உங்களை பற்றி சொல்லுங்க..”
என்று சமாளிப்பாய் சொல்ல சிரிப்போடு சக்தியும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவர்கள் முடித்து இறங்கியதும் இடைவேளை கொடுக்கப்பட நேராக ஆரியன் அருகில் வந்து கையை பிடித்துக் கொண்டவள்,
“நல்லா பண்ணோமா..?? உனக்கு பிடிச்சுதா ஆர்யா..”
என ஆர்வமாய் பார்க்க சிரிப்போடு தன் கையில் வைத்திருந்த மில்க் ஷேக் புட்டியை திறந்து அவளுக்கு குடிக்க கொடுத்து,
“அசத்திட்டீங்க.. ஐ ஃபீல் வெரி ப்ரௌட்..”
என உற்சாகமாய் சொல்ல அவள் முகமும் மலர்ந்தது.
மில்க் ஷேக்கை குடித்துவிட்டு அவனுடன் அமர்ந்து பர்ஃபாமென்ஸின் போது அவள் மண்டையில் ஓடிய விஷயங்களை பாவனையாய் சொல்லிக் கொண்டு இருக்க அதனை அவனும் தலையாட்டி கேட்டுக் கொண்டான்.
அடுத்த பத்து குழுக்கள் முடிக்கவே பாதி இரவை கடந்து இருக்க அதற்கும்மேல் சக்தியால் அங்கே உட்கார முடியவில்லை. தூக்கமும் மயக்கமும் சூழ தள்ளாடினாள்.
அவர்கள் குழு பாடி முடித்துவிட்டதால் அவள் நிலை உணர்ந்து கிளம்ப சொல்லிவிட யாமினி பிஸியாக இருந்ததால் ஆரியன் நேரில் சொல்லாமல் அங்கே நின்றே அலைபேசியில் சொல்ல அவர் உடனே கார் வர சொல்கிறேன் என்றதும்,
“வேணாம் அத்தை.. மாமாவோட தான் போக போறோம்..”
என்று சொல்ல இங்கிருந்தே அவர்கள் இருக்கும் இடத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடி,
“சக்தி அப்பா வந்து இருக்காரா ஆரியன்..” என்று கேட்டார்.
“இல்ல.. கிளம்பும் போது சொல்லுங்க.. நான் வந்து பார்த்துட்டு அழைச்சுட்டு போறேன்னு.. காலைலே சொல்லி இருந்தார்.. இப்ப சொல்லிட்டேன்.. வந்திடுவார்..” என ஆரியன் விளக்கம்
சொல்ல,
“ஹோ.. சரிங்க ஆரியன்.. வீட்டுக்கு போயிட்டு அவளை பேச சொல்லுங்க..”
என்று கூறி வைத்துவிட்டார் யாமினி.
சிறிது நேரத்தில் எல்லாம் விஷாகன் வந்து அழைத்து சென்றுவிட்டார்.
“நீங்களும் வந்து எங்க பர்ஃபாமென்ஸை பார்த்து இருக்கலாம்..”
என அவரை பார்த்ததும் சக்தி குறையாய் கூற புன்னகைத்தவர்,
“நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வரேன்..”
என உறுதியளித்தார்.
“சாப்பிட்டீங்களா.. இல்ல வெளியே சாப்பிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாமா..”
“சாப்ட்டோம் மாமா.. மேடம் ஃப்ளாட்.. இனி எங்கேயும் போக எல்லாம் தாங்க மாட்டாள்.. நேரா வீட்டுக்கே போகலாம்..”
“அது சரி.. முதன் முறையா இவ்வளவு நேரம் இருக்கா இல்லையா.. அதனாலயா இருக்கும்..”
காரிலும் பின் இருக்கையில் கால் நீட்டி சக்தி உறக்கத்தை தொடர முன் இருக்கையில் மாமனும் மருமகனும் பேசிக்கொண்டு வந்தனர்.
“நீங்க வீட்டுக்கே வருவது இல்லைனு.. சக்தி ஒரே கவலை.. ஏன் மாமா.. எல்லாத்தையும் எப்படியும் சரி படுத்திடுவேன்னு அப்போ அவ்வளவு நம்பிக்கையா சொன்னீங்க தானே.. இப்ப என்ன ஆச்சு..”
“இல்ல ஆரியன்… பேசும் போது எல்லாம் புதுசா ஒரு பிரச்சனை தான் ஆகுது.. கொஞ்ச நாள் தள்ளி இருக்கிறதும் மனசில் ஒரு மாற்றம் வரும்னு தோணுது அதனால தான் விலகியே இருக்கேன்.. அப்படி அவ மனசு கடைசி வரை மாறவே இல்ல என்றாலும் இனி கட்டாயப்படுத்த போறது இல்ல..”
“என்ன மாமா..”
“நான் யதார்த்தம் எதுவோ அதை தான் சொல்றேன் ஆரியன்.. நான் இல்லாமல் இருக்கிறது தான் அவளுக்கு நிம்மதி என்றால் அவளுக்காவது அந்த நிம்மதி கிடைக்கட்டும்.. எனக்கு எப்படியும் அவளோட ஒரு பாலமா நீங்க இருப்பீங்க அப்படியே என் உறவும் கடைசி வரை அவளை தொடரும்.. அது போதும்..
மத்தபடி எனக்குன்னு எதாவதுன்னா மகளும் மகன் மாதிரி பாசம் வைச்சு இருக்க நீங்களும் இருக்கீங்க.. இப்படியே என் மிச்ச நாட்களையும் ஓட்டி விடுவேன்..”
விரக்தியில் சொல்கிறாரா இல்லை தன்னை தேற்றிக் கொள்ள சொல்கிறாரா அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தன் உள்ளம் உணர்ந்தே சொல்கிறார் என தெரிய,
“எல்லாம் முடிஞ்சா மாதிரி பேசாதீங்க மாமா.. உங்க பேரனோ பேத்தியோ வேற வராங்க.. அவங்களை சமாளிக்கும் பெரும் பொறுப்பு இருக்கு..”
என உற்சாகப்படுத்த வேண்டி கூற அவரும் அந்த நினைவுகளை எண்ணி புன்னகைத்தார்.
வீடு வந்ததும் முதலில் இறங்கிய ஆரியன் தூங்கும் அவளை மெல்ல தட்டி,
“சக்தி.. எழுந்திரு.. உள்ள போய் தூங்குவ.. வா..”
என்று எழுப்பிவிட இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் கண் திறந்தவள் எரிச்சலாய் அவனை முறைத்து இறங்கினாள்.
“வீட்டுக்கு வான்னு தானே டி கூப்பிட்டேன்.. அதுக்கு ஏன் இந்த முறைப்பு..”
என்று அவன் கேட்க,
“தூங்குறேன்னு தெரியுதுல.. அப்படியே தூக்கிட்டு போய் படுக்க வைக்கிறதுக்கு என்ன..?? அடிச்சு எழுப்புற ஆளை பாரு..”
என முழியை உருட்டி அரை தூக்கத்திலே அவள் திட்டிவிட,
“ஏது.. இரண்டாவது மாடி வரையுமா..? நான் என்ன நாகா அர்ஜுனா ‘கையில் மிதக்கும் கனவா நீ..’ணு சுத்தி சுத்தி படியேற.. போடி..”
என்று அவனும் வாரிவிட,
“ம்க்கும்.. இவ்வளவு பெரிய உடம்பு வளர்த்து என்ன புண்ணியம்..”
என முணுமுணுத்தாள்.
“இவளோட..” என பல்லை கடித்து அவன் திரும்பி மாமனாரை பார்க்கவே அவர் அடக்கப்பட்ட சிரிப்போடு,
“சரி.. நான் கிளம்புறேன்..”
என்று சொல்ல,
“என்ன ப்பா.. வாசல் வரை வந்துட்டு இப்ப கூட உள்ள வர மாட்டீங்களா.. அப்படி என்ன உங்களுக்கு பிடிவாதம்..”
முதன்முறையாய் ஆரியன் இல்லாத மற்றொருவரிடம் அவள் சண்டைக்கு நிற்க அவனுக்கு ஆனந்த கண்ணீர் வராத குறை தான்..!!
“இல்லடா மா.. ரொம்ப லேட் ஆகிடுச்சு.. நீங்களும் போய் தூங்குங்க.. நான் அப்புறம் வரேன்..”
என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கையசைத்து விடைபெற்று சென்றார்.
அவர் கார் மறைந்ததும் திரும்பி மீண்டும் அவனை முறைத்தவள் முன்னால் சென்று மின்தூக்கியில் ஏறிவிட அவனும் கூடவே வந்து ஏறிய பின் அது மேலே இழுத்தது.
“உடம்பு வலி போக எப்படியும் வெந்நீர்ல குளிக்கனும்.. இந்த ட்ரஸை மாத்தணும்.. அதுக்காகவே எப்படியும் எழுவ தானே.. அப்புறம் என்ன..”
என்று புத்திசாலி தனமாய் அவன் கேட்பதாய் நினைத்து சொல்லவே , “கேவலமா சமாளிக்காத போ..”
என்று நொடித்துக் கொண்டு அவள் செல்லவும் அதற்கும் மேல் பொறுமையை இழந்தவனாய்,
“அடிங்.. என்ன இப்ப உனக்கு..”
என சட்டென்று அவள் எதிர்பார்க்காத தருணத்தில் தூக்கியே விட்டவன் அப்படியே எட்டி நடை போட்டான்.
அதன்பின் அவள் தான் அங்கே யாரும் வந்து விடுவார்களோ பார்த்து விடுவார்களோ என கூச்சப்பட்டு அவனிடம் கெஞ்சி கொஞ்சி விடுப்பட வேண்டியதாக போய்விட்டது. இவர்கள் வந்த இரண்டு மணிநேரத்தில் யாமினியும் வீட்டிற்கு திரும்பி விட்டார்.
மறுநாள் பகல் பொழுது மட்டுமே இருந்தவன் அப்போதே ஊருக்கு கிளம்ப சக்திக்கு மனதே இல்லை.
“மின்னல் மாதிரி இப்படி வந்துட்டு போறது நியாயமே இல்ல டா..”
“எனக்கும் உன்னை விட்டு போக கஷ்டமா தான் இருக்கு.. ஆனால் என்னை நம்பி பொறுப்பை கொடுத்தவங்களுக்கும் நியாயம் செய்யணுமே சக்தி..”
“போடா.. முன்ன எப்படி வருஷ கணக்கில் நீ இல்லாம வீடியோ காலில் மட்டுமே பார்த்துட்டு இருந்தேன் தெரியல.. இப்ப ஒரு வாரம் கூட என்னால முடியல.. அட்லீஸ்ட் நாளைக்கு மட்டும் ஆச்சும் இருக்கலாம் தானே..”
“இல்லம்மூ.. நானே அடிக்கடி லீவ் எடுத்தால் எனக்கு கீழ வேலை செய்றவங்களை எப்படி கேள்வி கேட்க முடியும்..?? உன்னோட எல்லா ஷுட்டிற்கும் வர முடியாது என்னால.. ஆனா வீக்எண்ட் கண்டிப்பா உன் கூட தான்.. சரியா..”
என்றவன், “போதும்.. கிளம்பும் போது முகத்தை தூக்க கூடாது..” என கண்டிப்போடு சொல்ல அது கொஞ்சம் வேலை செய்தது.
வெளியே வந்து யாமினியிடமும் விடைபெற்ற பின் சக்தியை பார்க்க,
“சரி.. போயிட்டு கால் பண்ணு..”
என்று அரை மனதாய் சொன்னவளின் தலையை பிடித்து சிரிப்போடு லேசாய் ஆட்டியவன் அவள் வயிற்றில் கை வைத்து,