“சொல்லு சக்தி.. உன் விருப்பம் தான்.. உனக்கு எங்க போகணும் சொல்லு.. அழைச்சுட்டு போறேன்..”
என விஷாகன் ஆர்வமாய் கேட்க,
“வீட்டுக்கு போங்க ப்பா..” என்றாள் அவள்.
“வீட்டுக்கா..?? ஏன் ம்மா.. உடம்பு எதுவும் பண்ணுதா..??”
“அதெல்லாம் இல்ல.. வீடுன்னு சொன்னது நம்ம பழைய வீட்டை ப்பா.. நீங்க இப்ப இருக்கிற வீடு..”
என்று சொல்லவே அவரோ ஆச்சரியமாய் பார்த்தார்.
“எனக்கு வெளியே எங்கேயும் போக வேண்டாம்.. அந்த வீட்டை பார்க்கணும் போல இருக்கு ப்பா..”
என்று அவளே சொன்ன பிறகு அவரும் ஏன் மறுக்க போகிறார். நேராக வீட்டிற்கு வண்டியை திருப்பினார்.
பங்களா போல் இல்லை என்றாலும் அனைத்து வசதிகளும் கொண்ட அழகான மாடி வீடு..!!
சக்திக்கு விபரம் தெரிந்தபின் இரண்டு ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து இருப்பர். அதன் பின் தான் அந்த அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு மாறியது. ஏன் எதற்கு என்ற காரணம் எல்லாம் அவளுக்கு வழக்கம் போல் சொல்லப்படவில்லை.
வளர்ந்த பிறகு அது விஷாகன் பெயரில் உள்ள வீடு.. இது யாமினி வாங்கிய வீடு என்ற அளவில் புரிந்தது.
வந்ததில் இருந்து வீட்டை தான் ஆர்வமாய் சுற்றி சுற்றி வந்தாள். சிறு வயது நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்தது.
“ஏன் ப்பா.. இந்த வீட்டை விட்டு புது வீடு போனோம்.. இந்த வீட்டுக்கு என்ன குறை..”
விஷாகனிடம் உடனே பதில் வரவில்லை. அவர் அமைதியாக இருக்கவும் அவர் கை பற்றி அருகில் அமர்ந்தவள்,
“என்ன ப்பா..” கனிவாய் கேட்கவே பெருமூச்சோடு கூறினார்.
“உங்க அம்மாக்கும் எனக்கும்
நிறைய சண்டை வரும்.. அவளோட நுண் உணர்வுகள் எதுவும் அப்போ புரியவே இல்லை எனக்கு.. அவ பேசுறது எல்லாமே வறட்டு பிடிவாதமா மட்டும் தான் தெரியும்.. அந்த கோபத்தில் நான் வரம்பில்லாமல் நிறைய பேசி இருக்கேன்.. அப்படி கோபத்தில் இரண்டு மூணு தடவை ‘இது என் வீடு.. என் இஷ்டப்படி தான் இருப்பேன்னு..’ சொல்லி இருக்கேன்..
அதை ரொம்ப சீரியஸா எடுத்துக் கிட்டான்னு அவ வீடு வாங்க இறங்கும் போது தான் புரிஞ்சுது.. எனக்கு ரொம்ப கில்டியாகிடுச்சு.. நான் சமாதானப் படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. ஆனா அவ கோபமே காட்டல..
‘நான் அவசரத்தில் எதுவும் செய்யல.. நல்லா யோசிச்சு தான் இந்த முடிவிற்கு வந்தேன்..!! கணவன் – மனைவிக்குள்ள உன்னிது என்னிது என்ற பேச்சே வர கூடாது.. ஆனால் கோபம் வந்தால் நீங்க என்ன பேசுறோம் என்றே தெரியாமல் வார்த்தையை விடுறீங்க.. அத்தோட அதை மறந்தும் போயிடுறீங்க.. என்னால் அதை எல்லாம் ஜஸ்ட் லைக் தட்டா கடக்க முடியல..
இதுவும் நம்ம வீடு தானே.. நாம இங்க மூவ் ஆகிடலாம் ப்ளீஸ்.. கண்டிப்பா நான் உன்னோடது என்னோடதுன்னு பிரிச்சு பேசவே மாட்டேன்..”
இது தான் அவ சொன்னது.. அதுக்கு அப்புறமும் நான் ஊரில் இல்லாத போது எல்லாம் இந்த வீட்டை அவ தான்
பராமறிச்சா.. ஆனால் அங்க தான் இருக்கணும் என்றதில் ரொம்ப உறுதியா இருந்தாள்..”
சக்திக்கு திகைப்பாக இருந்தது. கேணியில் நீர் போல் தோண்ற தோண்ற புதிதாய் ஏதேதோ சொல்கிறார்கள்.. இன்னும் என்ன எல்லாம் இவர்கள் நடுவே நடந்து இருக்குமோ..’
என்ற சிந்தனையோடு மனதை அரிக்க,
“அப்படி என்ன உங்களுக்கு சண்டை வரும்.. என்ன தான் உங்களுக்கு பிரச்சனை.. சொல்லுங்களேன் ப்பா..”
என்று தெரிந்தே ஆகவேண்டும் என்பது போல் அழுத்தமாய் கேட்டாள்.
அதே சமயம் ஆரியன் யாமினி கொடுத்த டீயை சாவகாசமாய் அருந்திக் கொண்டே,
“உங்களுக்கு சக்தி போனதைவிட மாமா வீட்டிற்கு வராமல் சென்றது தான் உறுத்தலா இருக்கு இல்லையா..?”
அவர் மனதை படித்தது போல் திடீரென நேரடியாய் கேட்டுவிட யாமினி மௌனம் காக்கவும்,
“அப்போ நேரடியா அவருக்கே அழைத்து கூப்பிடுவதில் என்ன கெட்டுச்சு அத்தை… வர மாட்டேன்னு சொல்லி விடுவாரா என்ன..”
என்றான் இலகுவாக..
மகளாக இருந்திருந்தால் ஒரு அரட்டலில் இந்த பேச்சை முடித்து விடுவார். ஆனால் மருமகனிடம் அப்படி மிரட்ட முடியாதே..!!
“நான் ஏன் கூப்பிடனும்.. அவர் வந்தாலும் வரலை என்றாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல..”
“இது தான் அத்தை.. இந்த அட்டிடியூட் தான் உங்க மனசில் உள்ளதை கூட செயல் படுத்த விட மாட்டேங்கிறது.. எனக்கு எந்த பாதிப்பும் இல்லைன்னு நீங்க காட்டிக்கிறதால உங்களுக்கு என்ன கிடைச்சுது.. அப்படி என்ன கிடைக்க போகுது..”
அவன் சற்று காட்டமாகவே கேட்டுவிட அவர் தான் திகைத்தார். ஆரியன் யாமினியிடம் அதிகம் பேசியதே கிடையாது. அல்லது பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது இல்லை என்றும் கூறலாம்..!!
“என்ன அத்தை.. நான் எதுக்கு இதெல்லாம் பேசுறேன்னு நினைக்கிறீங்களா..?? உங்களையும் மாமாவையும் எனக்கு ரொம்ப வருஷமாவே தெரியும்… சக்தியிடம் பேசி பேசி நானும் இந்த குடும்பத்தில் ஒருத்தன் என்ற எண்ணம் என் மனசுல எப்போவோ பதிந்திடுச்சு.. அந்த உரிமையில் தான் நான் பேசுறேன்..
குழப்பத்தில் இருந்த மாமா இப்ப ஒரு நிலையில் வந்துட்டார்.. உங்க நிம்மதிக்காக உங்களையும் விட்டு தர மாமா தயாரா இருக்கிறார்.. ஆனால் நீங்க தான் இப்ப தடுமாற்றத்தில் இருக்கீங்க..!!
சில நேரம் நம்ம மன போராட்டத்திற்கு விடை வெளியே இருந்தும் கிடைக்கலாம் இல்லையா..”
யாமினி அவ்வளவு எளிதில் தன் உள்ளுணர்வுகளை வெளி படுத்துக்கின்றவர் இல்லையே..!!
ஆரியன் முன்பு இருந்தே சக்தியை தான் பேச சொல்லி ஊந்தினான். ஆனால் அவளோ கொஞ்சம் அவர் அதட்டினாலே பயந்து கேட்க வந்ததை முழுங்கி விடுகிறாள்.
இப்போது அவரின் முக வாடலை கண்டு பாவமாக அவரை பேச வைக்க முயன்றான்.
“நீங்க சொல்ற என்னோட அந்த அட்டிடியூட் மட்டும் இல்லைனா நான் எப்பவோ உடைந்து ஒன்னும் இல்லாம ஆகி இருப்பேன்.. என்ன கிடைச்சதுன்னு ரொம்ப சாதாரணமா கேட்டுடீங்க.. அது தான் எனக்கு அரண் மாதிரி இத்தனை வருஷம் என்னை காத்து இருக்குன்னு சொன்னால் மிகையாகாது..!!
ஏன்னா யாமினியோட சின்ன வயசு அவ்வளவு ஈஸியா இல்ல..
நான் ஸ்கூல் தான் உருப்படியா படிச்சேன்.. காலேஜ் சேர்ந்தேன்.. ஆனால் முடிக்க முடியல.. மந்தமா படிக்கிற ஆள் தான் நான்.. அரியர் எழுதி முடிக்கிற வரை எனக்கு நேரம் இல்ல.. என்னை நான் தான் பார்த்துக்கனும்.. படிப்பை விட்டுட்டு வேலை தேடி அலைஞ்சேன்.. வயிற்று பாட்டிற்கு கிடைச்ச வேலை எல்லாம் செஞ்சேன்.. ஏதாவது பெருசா செய்யணும் என்ற எண்ணம் மட்டும் என்னை தள்ளிட்டே இருந்துச்சு.. ஆனா என்ன செய்றதுன்னு லட்சியம் எல்லாம் இல்ல..
அப்போ நான் இருந்த ஏரியாவில் தான் சோல் டிவியோட ஆபிஸ் இருக்கும்.. எனக்கு சினிமா, டிவி எல்லாம் ரொம்ப பிடிக்கும்.. அதனால அந்த ஆபிஸ் மேல எப்பவும் எனக்கு கண்ணு..
அவ்வளவு பெரிய நிறுவனம் அது..! ஒரு டிகிரி கூட முடிக்காத எனக்கு என்ன வேலை கொடுக்க முடியும்னு காரி துப்பாத குறையா வெளியே அனுப்பிட்டாங்க..
ஆசை விடல என்னை.. அங்க வேலை செய்கிற.. போற வர நிறைய பேர் கூட நட்பு வைச்சுகிட்டேன்.. அதில் சில நல்ல நட்புகளால் நாம திறந்த புத்தகமா இருந்தால் எல்லோரும் இஷ்டம் போல நம்ம ஆட்டி வைப்பாங்க என்ற பாடம் படிச்சேன்.. எதுக்கும் அசையாத கல்லாகவும் அழுத்தகாரியாகவும் அப்போ இருந்து மாறினேன்.. இப்படி நிறைய செதுக்கினேன்னு தான் சொல்லணும்.. அதை பத்தியே யோசிச்சு யோசிச்சு அது எனக்கு அப்சஷஷனாகவே மாறிடுச்சு..
அடிச்சு பிடிச்சு சோல் டிவி உள்ளே போயிட்டேன்.. ரொம்ப சின்ன வேலை தான்.. ஆனால் எனக்கு அவ்வளவு பெருமை அதில்.. அங்க இருந்து தொடங்கினது தான் ஆரியன் என் வாழ்க்கை..
அங்கே வேலை செய்யும் போது தான் எனக்கு என்ன திறமை இருக்கு.. நான் என்ன ஆகலாம்னு நானே உணர்ந்து அதை நோக்கி ஓடினேன்.. படிபடியா உயரும்போது என் தன்னம்பிக்கையும் அதிகம் உயர்ந்துச்சு.. நான் சந்தோஷமா தான் இருந்தேன்..
என் வாழ்க்கையில் விஷாகன் வந்தார்.. விரும்பியே தான் அவரோட திருமண பந்ததில் இணைந்தேன்.. இனி எனக்கு அவரும் அவருக்கு நானும் துணையா இருக்க போகிறது எங்க வாழ்க்கையின் நினைச்சேன்.. ஆனால் இங்க மேரீட் லைப் என்றது அவருக்கு துணை நான் என்பதிலே முடிந்திடும் என்ற பாடம் அப்புறம் தான் தெரிஞ்சுது..
ஒரு வருஷம் ஏதோ மாயாஜலம் போல அழகாவே போயிட்டாலும் சக்தி பிறந்த பின்னால் தான் பிரச்சனை வெடிக்க ஆரம்பிச்சது..
விஷாகன் ஒரு ஊரில் ஒரு இடத்தில் தன்னோட வேலையை குறுக்கி கொள்கிறவர் கிடையாது.. அவருக்கு இந்த பரந்து விரிச்ச உலகத்தை எக்ஸ்ப்லோர் செய்யணும்.. புது இடம்.. புது மக்கள்னு அவர் மருத்துவம் செய்ய இடம் மாற்றிட்டே இருப்பார்.. பாதி நாள் பணம் சேர்க்க வேலை செய்வார்.. பாதி நாள் ஏதோ அடையாளம் தெரியாத ஊரிலும் பாஷை புரியாத மக்களிடமும் போய் சேவை செய்வார்..
அ வெரி இன்ட்ரெஸ்ட்டிங் பெர்சோனாலிட்டி.. ஆனால் அவர் பண்ணிய ஒரே தப்பு அவர் சிந்தனை ஒத்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்யாமல் என்னை கல்யாணம் பண்ணது தான்..
என்னோட கெரியர்ல ரொம்ப முக்கியமான காலம் அது.. அப்போ என்னை நான் ப்ரூஃப் பண்ணல என்றால் மறுபடியும் அந்த வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. சக்தி பிறந்து ஆறு மாசத்து குழந்தை..
நான் விஷாகனை தான் நம்பி இருந்தேன்.. அவரும் நானும் சேர்ந்து குழந்தையையும் பார்த்துக் கிட்டு என் வேலையிலும் ஸ்டேப்பில் ஆகிடுவேன்னு.. ரொம்பவே நம்பிக்கையா இருந்தேன்..
ஆனால் அவர் வந்து,
“வேலையை விட்டுவிடு யாமினி..”னு ரொம்ப சாதாரணாமா சொன்னார்.. என்னால அந்த நிமிஷம் கோபம் கூட கொள்ள முடியலை..
நான் இதுக்காக அடிப்பட்டு இருக்கேன்னு.. எத்தனை சகிச்சு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்.. எப்படி அவர் அப்படி சொல்வார்னு திகைச்சு போய் நின்னுட்டேன்..”
என்று சொன்ன யாமினிக்கு மேலே பேச முடியவில்லை. அதனை வார்த்தையில் எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொல்லாமலே அவனால் உணர முடிந்தது. பிரச்சனையின் வேர் என்னவென்று நொடியில் அவனுக்கு விளங்கிவிட்டது. ஆனாலும் அவன் வாயே திறக்கவில்லை. அவரே பேசட்டும் என்று அமைதிக் காத்தான்.