Skip to content
Post Views: 5,811
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 3
அன்பரசுவுக்கு நந்தா மீது அவ்வளவு அத்திரம். எங்கிருந்து வந்தான் இவன். நம் திட்டத்தை எல்லாம் மாற்றுகிறான். இவனை எப்படி அடக்குவது என்று யோசித்தார்.
கள்ளச்சாராயம் காயச்சுபவர்களுக்குப் பண உதவி செய்து வந்ததே அன்பரசு தான். அன்பரசு அரசியல்வாதி இல்லை. அவர்கள் சமுதாய மக்களில் செல்வாக்கானவர். அவர் என்ன சொன்னாலும் அவர் சமுதாய மக்கள் மறுக்காமல கேட்பர்.
Advertisement
அவர் சொன்னால் சொல்பவர்களுக்கு ஓட்டும் போடுவார்கள். அதனால் அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆனார்.
இவர் பண உதவி செய்து வந்ததால்… கள்ளச்சாராயம் காயச்சுபவர்களுக்கு தெய்வம் போல் தெரிந்தார். இவர் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்பார்கள். அவர்களை வைத்து நிறையக் காரியங்கள் சாதித்துக் கொள்வார்.
ஊரில் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பது இல்லை. அய்யா என்றுதான் மரியாதையாக அழைப்பார்கள். அரசியல்வாதிகள் ஆதரவு இருந்ததால்… நிறைய வழிகளில் பணம் சேர்த்தார்.
Advertisement
இவர் கஷ்ட்டப்பட்டு ஆள் சேர்த்து வைக்க…. இப்போது வந்த நந்தா அவர்களை வேறு தொழில் பார்க்க அனுப்பிவிட….அவர்பாடு திண்டாட்டம் ஆனது.
Advertisement
கள்ளச்சாராயம் காயச்சுவதையே குடும்பத் தொழிலாகச் செய்து வந்தனர். அதனால் காலாகாலத்துக்கும் கவலை இல்லை என்று நினைத்து இருந்தார். ஆனால் இப்போது அவர்கள் தொழிலையும் மாற்றி… அவர்களின் சந்ததிகளை வேறு படிக்க அனுப்பினால்… அடுத்தத் தலைமுறை வேறு வேலைக்கு அல்லவா சென்று விடுவார்கள்.
நந்தாவிடம் இதைப்பற்றிப் பேச வேண்டும் என்றுதான் அவனைத் தான் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். ஆனால் அவன் அவரைத் தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டான். அதை அவரால நம்ப முடியவில்லை… கண்டிப்பாக அவனுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்து இருக்கும், வேண்டுமென்றே தான் தன்னை அவமானப்படுத்துகிறான் எனப் புரிந்து கொண்டார்.
‘உனக்கு நான் யாருன்னு காட்றேன்.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
Advertisement
எப்படி ஒரு சமுகத்தைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து தங்கள் தலைவர் ஒருவரின் பிறந்த தினத்தை முக்கிய நாளாகக் கொண்டாடுகிறார்களோ… அதேபோல ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்காகக் குரல் கொடுத்து உயிரையும் விட்ட தலைவரின் நினைவு தினத்தை இன்றும் அனுஷ்ட்டிகிறார்கள்.
அந்தத் தலைவரின் நினைவு நாள் அன்று மக்கள் ஊர்வலமாகச் சென்று, அந்தத் தலைவரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த மாதிரி ஜாதி ஊர்வலங்களில் கலவரங்கள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு.
மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் இருந்தது. இருந்தும் என்ன செய்ய… கலவரம் வெடிக்கத்தான் செய்தது.
இது மாதிரி பொது விழாக்களைத்தான் தங்கள் பழி தீர்க்க இரண்டு தரப்புமே பயன்படுத்துவார்கள்.
அன்றும் முதலில் கல்வீச்சு ஆரம்பிக்க.. மக்கள் அங்கேயும் இங்கேயும் சிதறி ஓட…. அப்போது அங்கே வந்த மர்மம கும்பல் ஒன்று நான்கு பேரை வெட்டி சாய்த்துவிட்டுச் சென்றது.
இரண்டு தரப்புக்கும் இடையே பெரிய ஜாதி கலவரம் ஊருவாக இருந்தது. துப்பாக்கி சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசி எனக் காவல்துறை நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நந்தா தன் வாகனத்தில் நகரை வலம் வந்தான்.
மறுநாள் எந்த இடங்களில் கலவரம் நடந்ததோ அந்த இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் தடையுத்தரவு நீக்கப்பட்டது.
காவல்துறை உயர்அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். மேலிடத்தில் இருந்து அவர்களுக்குக் கேள்வி மேல் கேள்வி வந்தது.
ஆலோசனை முடிந்ததும் கலவரம் நடந்த இடத்திற்கு நந்தா பார்வையிட சென்றான். அங்குக் காவலுக்கு இருந்த போலீசாரிடம் அவன் சராமாரியாகக் கேள்வி எழுப்பினான்.
“ஏற்கனவே கலவரம் நடக்க வாய்ப்பு உண்டுன்னு தெரியும். அவ்வளவு அலெர்ட் பண்ணியும், கலவரம் நடந்திருக்கு… நாலு பேரு வேற செத்திருக்காங்க. நீங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க. வேடிக்கை பார்த்திட்டு இருந்தீங்களா?”
அவன் கேட்டது உண்மைதான். போலீஸ் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தது. காவல்துறையில் இருந்த சிலருமே இதற்கெல்லாம் உடந்தைதான். அவர்களுக்கு வேண்டியதை செய்தத்தான் அன்பரசு இருந்தாரே…..
காவல் அதிகாரி ஒருவர், “சார் நீங்க அய்யாவை போய்ப் பாருங்க சார். அவர் நினைச்சா எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண முடியும்.” என்றார்.
அவரை ஒரு மாதிரி பார்த்த நந்தா, “போலீசா இருந்திட்டு இதைச் சொல்ல வெட்கமா இல்லையா…..” எனக் கேட்டவன், “ஆனா நான் கண்டிப்பா அவரைப் பார்ப்பேன். பணிந்து போக இல்லை…. அவரையும் எச்சரிக்கை பண்ண.” என்றான் நிமிர்வாக.
அன்பராசு எப்போது வீட்டில் இருப்பார் என்று தெரிந்து கொண்டு, மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அவர் வீட்டில் நந்தா இருந்தான்.
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அன்பரசு, அவர் வீட்டின் முன்பு போலீஸ் வாகனம் வந்து நிற்கவும், நிமிர்ந்து பார்த்தவர், நந்தாவை பார்த்ததும் வாசலுக்கு வந்து வரவேற்றார்.
அவர் பார்க்க சினிமா வில்லன் போல எல்லாம் இல்லை… பக்தி பழமாகத் தெரிந்தார்.
“வாங்க ASP. நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு எனக்குத் தெரியும்.” என்றவர், வீட்டின் உள்ளே நந்தாவை அழைத்துச் சென்றார்.
வீடு இப்போது சமீபத்தில் தான் கட்டி இருக்க வேண்டும். நவீன வசதிகளோடு பார்க்க நன்றாகவே இருந்தது.
அவனைச் சோபாவில் அமர வைத்தவர், அங்கே வந்த அவரின் மகன்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“இவன் மூத்தவன் நவநீத கிருஷ்ணன் என்னோட சேர்ந்து தொழிலை பார்த்துக்கிறான். இவன் இளையவன் வாசு வக்கீலா இருக்கான். நம்ம கேசை பார்க்கவே ஒரு வக்கீலு வேண்டியது இருந்தது. அதனால என் மகனையே வக்கீலுக்குப் படிக்க வச்சிட்டேன்.”
அன்பரசு பெருமையாகச் சொல்ல… கேட்ட நந்தாவுக்கு எரிச்சலாக வந்தது. இவரின் பெருமையைக் கேட்கவா அவன் இங்கு வந்தான். அவரின் இரு மகன்களும் பார்க்க அடியாட்கள் போலத் தடித் தடியாக இருந்தனர்.
சரியான காட்டானாக இருப்பார்கள் போல என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
மகன்களை அங்கிருந்து கண் ஜாடையில் அகற்றியவர், “அப்புறம் என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?” எனக் கேட்க….
“நான் வருவேன்னு தெரிஞ்ச உங்களுக்கு, எதுக்கு வருவேன்னு தெரியாதா?” என அவரை விட அலட்சியமாகக் கேட்ட நந்தா… சோபாவில் வசதியாகச் சாய்ந்து, கால்மேல் கால் போட்டுக் கொண்டான்.
அன்பரசுவின் முகம் மாற…. “தம்பி நான் இவ்வளவு பொறுமையா பேசுறதுக்குக் காரணமே நீங்களும் எங்க ஆளுங்கன்னு தான்.” என்றார்.
“அதுக்குள்ள எல்லாம் விசாரிச்சிடீங்க போல…..”
“நான் ஒருத்தர் கூடப் பேசுறதுக்கு முன்னாடி அவரோட ஜாதகத்தையே கைல வச்சிருப்பேன்.”
“அப்ப என்னைப் பத்தி எல்லாம் தெரியும்.”
அன்பரசு எதோ சொல்ல வரும்முன் வெளியே இருந்து யாரோ அவரை அழைத்தார்கள்.
“பத்மா…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்த அன்பரசு, “ஒரு நிமிஷம் வந்திடுறேன்.” என்றவர், அங்கு வந்த தன் மனைவியிடம் பார்த்துக்க எனச் சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
பத்மா, பார்க்க அமைதியாகத் தெரிந்தார். “என்ன சாப்பிடுறீங்க?” அவர் கேட்க….
“இல்லை எதுவும் வேண்டாம்.” என நந்தா மறுக்க…
“கயல்…காபி எடுத்திட்டு வா…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.
சிறிது நேரத்திற்க்கெல்லாம் ஒரு பெண் கையில் தம்ளரோடு வந்தாள். பாவாடை தாவணியில் குனிந்த தலை நிமிராமல், அவள் அடி மீது அடி வைத்து நடந்து வர….
“எங்க கடைசிப் பொண்ணு கயல்விழி.” என்றார் பத்மா.
நடப்பதை எல்லாம் பார்த்த நந்தாவிற்கு, ‘நான் என்ன இவளை பெண் பார்க்கவா வந்திருக்கேன். கொடுக்கிற பில்டப் பார்த்தா அப்படித்தான் இருக்கு.” என நினைத்தவனுக்குச் சிரிப்பு வந்தது.
அவன் அருகில் வந்தவள், ஒரு வெண்கல டம்ளர் நிறையக் காபியை நீட்ட…. அதைப் பார்த்த நந்தா, “நான் இவ்வளவு காபி குடிக்க மாட்டேன்.” என்றதும், அந்தப் பெண் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
நிலா முகம் என்று அவன் இதுவரை கேள்விதான் பட்டிருக்கிறான். இன்றுதான் நேரில் பார்க்கிறான். அழகான வட்ட முகத்தில், கயல்விழி என்ற பெயருக்கு ஏற்றார் போல், மீன் போன்ற பெரிய கண்கள், வில் போன்ற புருவம், அழகான சிவந்த உதடுகள்.”
“சும்மா எடுத்துக்கோங்க தம்பி, கருப்பட்டி காபிதான் உடம்புக்கு நல்லது.” எனப் பத்மா சொல்ல…. அவளைப் பார்த்தபடி காபியை கையில் வாங்கினான்.
உடனே அவள் திரும்பி செல்ல… இடையைத் தாண்டிய அவளின் கூந்தள், நல்ல அடர்த்தியாகவும் இருந்தது. இந்தப் பொண்ணு சாப்பிடுறது எல்லாம் முடிக்கே போயிடும் போல… அதுதான் ஒல்லியா இருக்கா… என வேறு நினைத்தான்.
“நாம ஏன் இன்னைக்கு இப்படிக் கண்டதையும் யோசிக்கிறோம்.” எனத் தறிகெட்டு ஓடிய மனதை அடக்கியவன், காபி குடிப்பதில் கவனம் செலுத்தினான்.
“காபி ரொம்ப நல்லா இருக்கு. சம்ப்ரதாயத்துக்கு இல்லாமல், உண்மையில் அதன் சுவையை ரசித்தே சொன்னான்.”
அதை கேட்டு பத்மா புன்னகைக்க… அப்போது அன்பரசு உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் பத்மா உள்ளே சென்று விட்டார்.
அவன் காபி குடித்து முடிக்கும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை.
“நீங்க இதுக்கு முன்னாடி எப்படி வேணா இருந்திருக்கலாம் அன்பரசு.”
அவன் அய்யா என்று சொல்லாமல் அவரின் பெயரை சொல்ல… அவரின் முகம் கடுத்தது. அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் நந்தா தொடர்ந்தான்.
“உங்களால சட்டம் ஒழுங்குக்கு இனி ஒரு பிரச்சனை வந்தா… உங்களை உள்ளே வைக்கவும் தயங்க மாட்டேன். இதைச் சொல்லத்தான் வந்தேன். வரட்டா…” என அவன் திமிராகச் சொல்லி செல்ல…. செல்லும் அவனையே அன்பரசு கோபமாக முறைத்தார்.
அவர் வேறு மாதிரி எதிர்பார்த்திருக்க… இவன் மற்றவர்களைப் போல் அல்ல… வேறு மாதிரி என அவருக்குப் புரிந்தது. அவன் சென்றதும் உள்ளே வந்த அவரின் மகன்கள், அவரைக் கேள்வியாகப் பார்க்க….
“இவன் அடங்க மாட்டான் டா… இவனை அடக்கணும்.” என்றார் ஆத்திரமாக…
உள்ளே இருந்த கயல்விழிக்கு அவர் சொன்னது நன்றாகவே கேட்டது. அவள் மெல்லிய உடல் அதைக் கேட்டு நடுங்கியது.
வெளிய வந்த நந்தா ஜீப்பில் ஏறப்போகும் போது… அன்று அவன் கிராமத்தில் பார்த்த பெண் சைக்கிளில் வந்தாள்.
இவள் எங்கே இங்கே? என்பது போல் அவன் பார்க்க… அவளும் நந்தாவை ஆச்சர்யமாகப் பார்த்தபடி சென்றாள்.
முன் வாசல் வழியாக இல்லாமல்… பின் வாசல் வழியாக அவள் செல்ல…. அந்த வீட்டில் அவள் வேலை செய்கிறாள் என நந்தா புரிந்து கொண்டான்.
பின்கட்டு வாசல் படி அருகே நின்று, “அம்மா…” என அந்தப் பெண் அழைக்க…. பத்மா வெளியே எட்டி பார்த்தார்.
“என்ன பேச்சி?”
“அம்மா இப்ப வந்திட்டு போறாரே அந்த அய்யாதான் மா… எங்க ஊருக்கு ரெய்டு வந்தவரு. இவராலதான் இப்ப எங்க ஊர் நல்லா இருக்கு.”
“எங்க அப்பாவும் அண்ணனும் கூடவேற வேலைக்குப் போறாங்க.” என்றாள் குரலில் சந்தோஷத்துடன்.
“சரி சரி அய்யா கேட்டா அவ்வளவுதான். நீ போய்ப் பின்கட்டுல வேலையைப் பாரு. அப்புறமா வந்து சாப்பிடுவியாம்.” என்று பத்மா அவளை அனுப்ப… உள்ளே தள்ளி நின்ற கயல்விழியைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்துவிட்டுப் பேச்சி சென்றாள்.
“அம்மா, நான் போய்ப் படுத்துக்கட்டுமா?”
“சும்மா படுத்திருக்கக் கூடாது. உன் அண்ணி ஒரு வேலையும் செய்ய மாட்டா… நீயாவது அம்மாவுக்கு உதவி பண்ணக்கூடாதா…” பத்மா சொல்ல..
“இல்லைமா ஜுரம் வர்ற மாதிரி இருக்கு.” என்றவள் நிற்க முடியாமல், சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
அவளைத் தொட்டு பார்த்த பத்மாவும் அவளின் உடல் சூட்டை உணர்ந்தார்.
“இந்தப் பொண்ணுக்கு நல்லாவே ஆகாதா…” என அவருக்குக் கவலையாக இருந்தது.
“சரி நீ போய்ப் படு. நான் வரேன்.” என அவளை அனுப்பி வைத்தார்.
நந்தாவுக்கு ஆபத்து என்று உணர்ந்த கயல்விழி, அதையே நினைத்துக் கொண்டு படுத்திருக்க… அவளால் உறங்கவே முடியவில்லை… ஏதேதோ எண்ணங்கள் அவளை அலைகழித்தது.
அங்கே அவன் தங்கி இருந்த இடம் வந்து சேர்ந்த நந்தா வருணை தொலைபேசியில் அழைத்தான்.
“என்ன டா திடிர்ன்னு காலையிலேயே போன் பண்ணி இருக்க?”
“ஏன் நான் பண்ணக் கூடாதா?”
“பண்ண மாட்டியே அதுதான விஷயம்… இப்ப எதுக்குப் போன் பண்ண சொல்லு.”
“ஒரு பொண்ணைப் பார்த்தேன் டா….”
நந்தா சொன்னதைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த வருண், “டேய், நீ யுத்த பூமிக்குப் போனதா சொன்னாங்க….ஆனா நீ எதோ பொண்ணைப் பத்தி பேசுற.”
“சொல்றதை கேளு டா… அவ பேரு கயல்விழி… ஒருத்தருக்கு பேர் இவ்வளவு பொருத்தமா இருக்கிறதை நான் இப்பத்தான் டா பார்க்கிறேன்.”
“யார் அந்தப் பொண்ணு அதையும் சொல்லு.” வருண் கேட்க... நந்தா எல்லாவற்றையும் சொல்ல…
“டேய் பாவி. அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட பேசுற பேச்சையா டா பேசிட்டு வந்திருக்க… இனி அவன் பொண்ணு கொடுக்க மாட்டானே என்ன செய்வ?”
“யாரு அவன்கிட்ட பொண்ணு கேட்க போறா? பொண்ணு பார்க்க நல்லா இருந்தா… உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன்.”
“அவ்வளவுதானா…” வருண் சந்தேகமாகக் கேட்க….
“வேற எதாவது முன்னேற்றம் இருந்தா உனக்குக் கண்டிப்பா சொல்றேன்.”
“முன்னேற்றம் எல்லாம் தானா வராது டா… நாமதான் வர வைக்கனும்.”
நண்பன் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி நந்தா போன்னை வைக்க… வருண் இந்தப் பக்கம் சிரித்துக் கொண்டான்.
“என்னங்க யாரு போன்ல? எங்க அண்ணனா? என்ன பேசினீங்க?” தாரணி கேட்க…
“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் நீ கேட்க கூடாது. நாங்க பிரண்ட்ஸ் என்ன வேணா பேசிப்போம்.” என்றபடி வருண் செல்ல….
“மனசுல தளபதி படத்துல வர்ற ரஜினி மம்மூட்டின்னு நினைப்பு.” எனத் தாரணி நொடித்தாள்.
error: Content is protected !!