“ஸ்…ஆஆஆஆஆ…”
நெற்றி மீதிருந்த சற்றே ஆழமான காயத்திற்கு டிஞ்சர் இட்டு துடைத்துக்கொண்டிருந்தான் சுவாதியின் கணவன், டாக்டர் பிரபு.
‘செஞ்சுட்டாளே….
என்னை செஞ்சுட்டா…செஞ்சுட்டா…
வச்சு செஞ்சுட்டா… செஞ்சுட்டா…
என்னை செஞ்சுட்டாளே…’
குருவின் அலைபேசி இதமாய் பாட, அது அஜய்க்கு இர்ரிட்டேட்டிங்’காய் இருந்தது.
“அதை ஆஃப் பண்ணுடா மொதோ!” டிஞ்சர் எரிச்சலுடன், இந்த பாடலும் அவனை எரிச்சலூட்டியது.
“டேய், செம்ம சாங் டா!”
“இப்போ ஆஃப் பண்ணல உனக்கு சங்கு தான்!!!” அஜய் மிரட்ட, அதற்கு பயந்தவன் போல பாட்டை நிறுத்தியவன்,
“சுமார் எத்தனை பேர் உன்னை போட்டு பொளந்தாங்க மச்சி?” என்று கேட்க,
பஞ்சு வைத்து பிளாஸ்டர் போட்டுக்கொண்டிருந்த பிரபுவுக்கு கூட சிரிப்பாய் வந்தது.
“யூ டூ டாக்டர்?” பாவமாய் கேட்ட அஜய்யிடம்,
“என்ன அஜய் நீங்க? இருபத்தி அஞ்சு வயசுல அடி வாங்குனதே அசிங்கம்ன்னு இத்தனை நாளும் உங்களை கிண்டல் பண்ணிட்டு இருந்தவங்களுக்கு, முப்பத்தி அஞ்சு வயசுல போய் அடி வாங்கிட்டு வந்து அடுத்த பத்து வருஷத்துக்கு ‘கன்டென்ட்’ குடுத்துருக்கீன்களே!?” தன் பங்கிற்கு அவனும் வாற, தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவனின் கை முட்டியில் இருந்த காயத்தை பழுது பார்க்க ஆரம்பித்தான் பிரபு.
“ஏதாவது நல்ல சொரணை வர ஊசியா பார்த்து போடுங்க பிரபு!” குரு விடாமல் கலாய்க்க,
“ரெண்டு பேதி ஊசி இருந்தா இந்த நாயிக்கு போட்டுவிடுங்க பிரபு! எல்லாம் இந்த பரதேசியால தான்!!!”
தன்னை குற்றம் சொன்னவனை போலி அதிர்ச்சியுடன் பார்த்த குரு, “உங்கொப்பன் மவனே… நான் இன்னாடா செஞ்சேன்!?” என்றான்.
“எதுக்குடா அவளை நியாபகப்படுத்தின? நீ அனுப்புன மெசேஜ் பார்த்த பிறகு தான் அவ என் கண்ணுல பட்டா!”
“இதப்பார்ரா! எங்கூருல ஒரு பழமொழி சொல்லுவாங்க! ‘எங்கையோ போற மாரியாத்தா! என்மேல வந்து ஏறடியாத்தா’ன்னு… அந்த கதையாள இருக்கு?
சரி, நான் நியாபகப்படுத்தினதால தான் அவ உன் கண்ணுல பட்டான்னே இருக்கட்டும்… பார்த்தவன், பார்த்ததோட வர வேண்டியது தானே? எதுக்கு ‘மூன்றாம் பிறை’ கமல் மாறி என்னை நியாபகம் இருக்கா’ன்னு கேட்டு குறளிவித்தை காட்டுன?” என்றான் குரு.
“அது…. அவளை பார்த்த எக்சைட்மென்ட்! ஒரு ஆர்வத்துல….”
“ஆர்வத்துல… பக்கத்துல அவ புருஷன் இருந்தா கூட போய் ‘ஹலோ பாப்பா! உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணவந்து அடிவாங்குன அங்கிள் நாந்தான்’ன்னு பேசிருப்பியா?”
“அவளுக்கு கல்யாணம் ஆகிருக்குமா?”
‘இதுதான் இப்போது முக்கியம்’ என்பதை போல அஜய் கேட்டதும்,
“பின்ன, எல்லாரும் உன்னமாறியே இருப்பாங்களா? அவளுக்கு புள்ளையே இருந்தாலும் இருக்கும்… யாரு கண்டா?”
குரு இப்படி சொன்னவுடன், ‘ச்ச…ச்ச’ என்று மறுத்த அஜய்,
“அவ பார்க்க எவ்ளோ யங்’கா இருந்தா தெரியுமா? கழுத்துல ஒரு குட்டி செயின் தான் போட்டுருந்தா! தாலி இல்ல… நெத்தில குங்குமம் இல்ல… கால்ல மெட்டி இல்ல… ஐ டோன்ட் தின்க், ஷி இஸ் மேரீட்…” திடமாய் மறுத்தான்.
பிரபுவும் குருவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“கல்யாணம் ஆகிருக்காதுல?” மீண்டும் அஜய் வினவ,
“இந்த ரணகலத்துளையும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குது பார்த்தியா?” என்று குரு நக்கலடித்தபோது, அஜய்யின் புஜத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ‘சுருக்’கென டி.டி ஊசியை இறக்கினான் பிரபு.
“ஸ்…அம்மா…ஆஆ”
குரு, “ஓகே பிரபு! உங்க ஓ.பி டைம்ல வந்து ‘ஓபி’ அடிச்சுட்டு இருக்கோம்!!!”
பிரபு, “அதனால என்ன? இது என் ப்ரீ அவர்ஸ் தான்”
குரு, “நான் சொல்லல, நம்மாளு வெட்டியா தான் இருப்பாருன்னு! நீதான் நம்பல”
பிரபு முறைக்க, “டேய், சும்மா இருடா!” என்று அவனை அடக்கிய அஜய்,
“அவன் சும்மா சொல்றான் பிரபு… பேஷன்ட் யாரும் இல்லாம ஈ’யோட்டிட்டு இருப்பீங்களே! உங்களுக்கு ஒரு கஸ்டமர் குடுப்போம்ன்னு தான் பெரிய மனசு வச்சு வந்தோம்!” என்று சொல்ல, இருவரையும் ஒருசேர முறைத்த பிரபு,
“போங்கடா இங்கிருந்து!” என நோட்பேடை கொண்டு அடிக்கவர, போலீசை கண்ட திருடன் போல தெறித்து ஓடினர் இருவரும்.
***
அந்த ரயில்நிலையத்தின் பிளாட்பார்மில் நடந்து வந்துக்கொண்டிருந்தாள் மாதங்கவதனா.
இரண்டு நாட்களுக்கு முன்பிருந்த குழப்பமும், சோர்வும் சற்றே விலகியிருந்தது. எப்போதும் போல தெளிவுடன் இருந்தாள்.
விறுவிறுவென நடந்தவள், ரயில் வர இன்னும் சில நிமிடங்கள் இருப்பது தெரிந்ததும், அங்கிருந்த நடைபாதை கடையில் சென்று, “மேகசின் குடுங்க!” என்றாள்.
அவள் கேட்டதை அவர் நீட்ட, பெற்றுக்கொண்டவள், இருநூறு ரூபாய் தாளைக்கொடுத்ததும், அதை கையில் கூட வாங்காமல்,
“சில்லறையா குடும்மா!” என்றார்.
“என்கிட்ட இல்லையே!”
“மாத்தி குடுங்க!” என்றவர் அடுத்த வியாபாரத்தை பார்க்க, சுற்றிலும் பார்த்தாள். ஆட்கள் அநேகம் இருந்தனர்.
‘சரி, சில்லரை கேட்டுப்பார்ப்போம்!’ என்று நினைத்தவள், சற்று தள்ளி அவளுக்கு முதுகுக்காட்டி நின்று போன் பேசிக்கொண்டிருந்தவனிடம் சென்று,
“ஹலோ… எக்ஸ்க்யூஸ் மீ!” என்றழைக்க, பேசிக்கொண்டே திரும்பியவன், இவளை கண்ட மாத்திரத்தில் காதில் இருந்த போனை நழுவவிட்டு பின் தடுமாறி பிடித்தான்.
“டூ ஹன்ட்ரெட்’க்கு சேன்ஜ் கிடைக்குமா?” அவள் இயல்பாய் கேட்க, இவன்தான் பேயை கண்டவன் போல ‘இல்லை’ என தலையை உதறிக்கொண்டு அவசரமாய் அங்கிருந்து சென்றான்.
மாதங்கவதனாவிற்கு அவனை, அந்த ‘அஜய்யை’ அடையாளம் தெரியவில்லை. ஊன்றி கவனித்திருந்தால் தானே தெரிவதற்கு!? தன்னால் ஒருவன் அடிவாங்கியதை கூட கிட்டத்தட்ட அவள் மறந்தே விட்டிருந்தாள்.
அவன் அவசரமாய் சென்றதை பார்த்தவள், சிறு தோள் குலுக்கலோடு, தள்ளி நின்ற வேறொருவரிடம் கேட்கப்போக, அவளை பார்த்துக்கொண்டே தள்ளி நின்றிருந்த அஜய், போனில் இருந்த விவேக்கிடம்,
“மச்சி, அவளே வந்து ஒன்னும் தெரியாதமாறி பேசுறாடா?” என்றான்.
“மச்..சீஈஈ… அவ உன்னை டார்கெட் பண்ணிட்டா! குப்புற போட்டு குமுற விட்டு ஜி.எச்’ல அட்மிஷன் போட வைக்கப்போறா! உசாரா இரு… உசுரு முக்கியம் அங்கிளே…!” என்று சீரியஸாய் கலாய்க்க, அவன் சொன்னதை சீரியஸாகவே உள்வாங்கிக்கொண்டான் அஜய்.
“சரிடா…சரிடா!” என பேசிவிட்டு வைத்தவன், இருகரங்களை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு, தான் ‘சூப்பர் கூல்’ என காட்டிக்கொள்ள வேண்டி, ஏதோ ஒரு பாடலை கன்றாவியாய் ‘ஹம்’ செய்துக்கொண்டே ஓரக்கண்ணில் அவளை ரூட்டு விட,
‘பார்க்காதடா மானங்கெட்டப்பயலே!’ என அவன் மனமே அவனை கழுவி ஊற்றியது.
அதுவரை நான்கைந்து பேரிடம் கேட்டு, யாரிடமும் சில்லரை இல்லை என்று கூறியதால், வாடிய முகத்துடன் கையில் இருந்த புத்தகத்தை ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கையில் இருந்ததை திருப்பி கொடுத்துவிடலாம் என அந்த கடைகாரரிடம் சென்றபோது, “சில்லறை இருக்கும்மா இப்போ! காசை குடு” என்றார் அவர்.
முகம் நொடியில் பளிச்சென ஆனது அவளுக்கு. சந்தோஷமாய் இருநூறு ருபாய் நோட்டை கொடுத்து மிச்சம் பெற்றுக்கொண்டவள்,
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா!” என்றாள்.
“எனக்கெதுக்கும்மா தேங்க்ஸ்’ஸு? ஒரு தம்பி வந்து ஐநூறுவாய்க்கு சில்லறையா இருக்கு, ஒரே நோட்டா தரீங்களான்னு கேட்டு வாங்கிட்டு போச்சு! அதனால தான் இப்போ உனக்கு குடுத்தேன்!!”
‘சரி’ என போகாமல், “யார் அது?” என்று அவள் கேட்க, எட்டிப்பார்த்தவர், “இதோ, அங்கே நிக்குதே, அந்த தம்பி தான்!” என்று அஜய்யை காட்டிக்கொடுத்துவிட்டார்.
பார்த்தும் பார்க்காமல் இதை கவனித்துக்கொண்டிருந்த அஜய், ‘போட்டுக்குடுத்துட்டியே பரட்ட!!!’ என உள்ளுக்குள் ‘ஜர்க்’காகி, கேசுவலாய் வேறு பக்கம் திரும்பியவன், மெதுவாய் நான்கெட்டு எடுத்துவைக்க,
“சார்…!” என்ற அவள் குரல் கேட்ட நொடி, ‘ஐயோ அது நான் இல்ல!’ என்று தலைதெறிக்க ஓடியிருந்தான்.
இம்முறை அஜய்யின் முகம், நன்றாக அவள் மனதில் பதிந்திருந்தது.
‘எதுக்கு இப்படி ஓடுறாரு?’ என்ற குழப்பத்துடன் ரயிலில் ஏறினாள்.