காதுக்குள் சுட்டுவிரலை விட்டு ஆட்டியவன், “அட, நீங்க எதுக்கு சிரமப்படுறீங்க? நைட்டு தூங்குறப்போ நானே கழட்டி வச்சுட்டு தான் தூங்குவேன்! பாக்கணும்ன்னா நைட்டு என் வீட்டுக்கு வாங்க! ஆனா, போன் பண்ணிட்டு வாங்க! சம்டைம்ஸ் லுங்கி போட மறந்துருப்பேன்!” என்றதும் ஷைலஜாவிற்கே சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.
“யோவ் என்னய்யா இவன்? சுத்த கிறுக்கானா இருக்கான்… இவனையா ஆஹோ ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுன?” என்றார் அமைச்சர் ஐ.ஜியிடம்.
பூபதியோ, “சார்… கொலையை கண்ணால பார்த்த ஒரு பொம்பளையை பிடிச்சு வச்சுருக்கேன்! இவர் இப்படியே மரியாதை இல்லாம பேசிட்டு போனா…” என்று நிறுத்தியவன், அமைச்சரிடம் திரும்பி,
“உங்களுக்கே தெரியுதுல நான் கிறுக்கன்’ன்னு! ஏதாவது கோக்குமாக்கா இழுத்துவிட்டுட்டு போய்டுவேன்! அப்பறம் ஒருபயலும் ஒரு புல்லு பூண்டை கூட கண்டுப்பிடிக்க முடியாது, பார்த்துகோங்க!” என்று பகிரங்கமாகவே மிரட்ட, அவன் தைரியம் கண்டு அசந்து நின்றார் அமைச்சர்.
‘அமைச்சர்’ன்னு கூட பயம் இல்லை!’
அவர் அப்படியே நின்றார். ஐ.ஜிக்கு என்ன சொல்வது என புரியவில்லை.
ஒரு நிமிடம் முழுதாய் கடக்க, “நிக்கட்டு…மா….. போகட்டுமா….!!!” என ராகம் போட்டு பாடினான் பூபதி.
சட்டென சூழ்நிலை இலகுவானது அங்கே.
அமைச்சர், “உட்கார்!!!” என சோபாவை காட்டினார்.
“ஹான்… கேட்கல!”
“உட்கார்….ருங்க…!!!” அவர் இப்படி சொன்னதும் தான் கெத்தாய் வந்து அமர்ந்தான் அவன்.
“சொல்லுங்க… யார் அந்த பொம்பளை? கொலைகாரனை பார்த்தாளா? அவளை எப்படி தெரியும் உங்களுக்கு?”
“உங்களுக்கு தெரியாதது இல்ல… ஹைவேய்ஸ்’ல அதிகமா லாரி போற ரோட்’ல நைட்டான ‘ப்ராஸ்டிட்யூட்’ டார்ச்லைட்டோட நிப்பாங்க! அதே கெஸ்ஸிங்’ல தான் அந்த மாதிரி ஆளுங்களை விசாரிக்க சொன்னேன்!
நான் நினைச்ச மாதிரி ஒரு நாலு பேரு அந்த ரோட்’ல அன்னைக்கு நைட் நின்னுருக்காங்க! அதுல மூணு பேரு கஸ்டமர் வந்ததும் போய்ட்டாங்க! சரியா உங்க மகன் ஜெகன் கார் அங்கே வந்த நேரத்துல ஒரே ஒருத்தி மட்டும் அந்த ரோட்’ல இருந்துருக்கா!” என்றான்.
தன்னிடம் இருந்த ‘டேப்’ மூலம் ஒரு விடியோவை ஓட விட்டாள் அவள்.
அதில் தெரிந்த பெண் பேச ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு மேல இருக்கும் சார்! ஒரு கிராக்கியும் வரல… திரும்பி போவோம்ன்னு நான் கிளம்புனப்போ தான் தூரமா ஒரு கார் மாதிரி வருதுன்னு தெரிஞ்சுது! சரி கையை நீட்டிப்பார்ப்போம்ன்னு நான் பாக்குறப்போவே அந்த காரு அங்கேயே ஓரமா நின்னுட்டுது!
உள்ளே இருந்து ஒரு பொண்ணும் ரெண்டு பையனும் இறங்கினாங்க! சித்த நேரம் மூனும் பேசுச்சு! அடுத்து பைக்ல ஒருத்தன் வந்தான் சார்!
வந்த உடனே அந்த ரெண்டு பசங்களையும் அடிக்க ஆரம்பிச்சுட்டான்! அந்த பொண்ணை கூட அடிச்சான் சார்! கடைசியா ஒரு கல்ல தூக்கி கார் மேல வீசுனான் பாருங்க! இதுக்குமேல அங்கிருக்க கூடாதுன்னு நான் நைசா நழுவிட்டேன்!”
“அந்த ஆள் பாக்க எப்டி இருந்தான்?”
“தெரியல சார்! நான் ரொம்ப தூரமா நின்னுட்டு இருந்தேன்! உருவம் மட்டும் தான் தெரிஞ்சுது… இருட்டு வேற!”
“வேற என்ன பாத்த?”
“நான் அங்கிருந்து திரும்பி நடந்து போய்க்கிட்டு இருக்கும்போது என்னைத்தாண்டி அந்த பைக்’காரன் போனான் சார்! அதுக்குமேல நான் ஒன்னும் பாக்கல!”
வீடியோ இதோடு முடிந்தது!
“குட் வொர்க் பூபதி! நெக்ஸ்ட் என்ன மூவ்?” என்றார் ஐ,ஜி.
“உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருக்கேன்! சீக்கிரமே என் புள்ளையை கொன்னவனை பொணமா பாக்கணும்!” என்றார்.
“அந்த ‘சூட் அட் சைட்’ ஆர்டர் இன்னும் என் கைக்கு வரல!”
பூபதி சொன்னதும், ஐ.ஜியிடம், “நாளைக்கே அந்த ஆர்டரை கொடு!” என்று உத்தரவாய் சொல்லிவிட்டார் அமைச்சர்.
அமைச்சர் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஷைலஜாவின் எண்ணம் முழுக்க பூபதி தான்!
“உங்களுக்கு பயமே இல்லையா? மினிஸ்டர் கிட்ட இப்படி எல்லாம் பேசிட்டீங்க?” என்றாள்.
“எதுக்கு பயம்? இந்த வேலை போனா நான் என்ன தெருவுல பிச்சையா எடுக்க போறேன்!” என்றான் அசால்ட்டாய்.
இத்தனை நாள் அவளை எரிச்சலூட்டிய அவனது திமிர், இந்த க்ஷணத்தில் அவளை ஈர்த்து வைத்தது.
கார் சாவியை அவளை நோக்கி வீசியவன், “கார்’ர எடுங்க அல்லக்கை! இப்படி வயசு பையனை அர்த்த ஜாமத்துல வெறிச்சு பார்த்து வேற மாறி மாத்திடாதீங்க!” என்றுவிட, அவள் மன வானில் உயர பறந்த பலூன் நொடியில் ‘டப்’பென உடைந்தது.
‘ராஸ்கல்…!!!’ முனுமுனுத்தபடி காரை ஸ்டார்ட் செய்தாள். முன் சீட்டில் வந்து அமர்ந்துக்கொண்டான் அவன்.
ஒருக்கட்டதில் சிரித்து ஓய்ந்தவன், இப்போது வானொலியை இயக்கினான்.
இரவு நேர இனிய கானம் ஓடிக்கொண்டிருந்தது.
‘ஒரே முறை தான் உன்னோடு பேசிப்பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி!!!’
பாடல் ஒலிக்க தன்னை மீறி சிரித்தாள் ஷைலஜா.
அவள் சிரிப்பை கண்டு, “என்னவாம்?” என்றிட,
“உங்களுக்கேத்த பாட்டு! உங்களுக்கு டெடிகேட் பண்றேன்” என்று சிரித்தாள் அவள்.
“பார்ரா!!! அவ்ளோ’வா? சாங் டெடிகேட் பண்ற அளவுக்கு போயிடிச்சா?”
“ஹும்? என்னது? ஜஸ்ட் தோனுச்சு! சொன்னேன்!”
“இங்க பாரும்மா! மனசை எல்லாம் அலைப்பாய விடாத! என்னை மாதிரி அம்சமான நாட்டுக்கட்டையை பார்த்தா பொண்ணுங்க தடுமாறுறது சகஜம் தான்! பட் வாட் டு டூ? அழகா பொறந்தது என் தப்பா சொல்லு?” சீரியசாய் அவன் பேச, அவள் கவனம் எல்லாம் அவன் மீது திரும்பியது.
“என்ன உளருறீங்க? ஜஸ்ட் ஒரு பாட்டை டெடிகேட் பண்ணேன்! அவ்ளோதான்!”
“எல்லாமே இந்த ‘ஜஸ்ட்’ல தான் ஆரம்பிக்கும் ஷைலுக்குட்டி! அப்பறம் டீப்’பா போன பின்னாடி உன் மனசை உடைச்சுட்ட பாவம் என்னை சேரக்கூடாது பாரு! என் லெவலே வேற! உன்னை எல்லாம் ‘செட்டப்’பா கூட வச்சுக்க முடியாது!” பேசிக்கொண்டே போனான் அவன்.
“ஹலோ ஹலோ! என்ன விட்டா பேசிட்டே போறீங்க? மனசுல பெரிய ஹ்ரிதிக் ரோஷன்’ன்னு நினைப்பா?” இவள் எகிற, அதற்கு அவன் பேச, இவள் பேச என ஒருகட்டத்தில் இருவரும் காரில் இருக்கிறோம் என்பதையே மறந்து வாய்ப்போரில் ஈடுபட, குறுக்கே ஒரு லாரி வந்தது கூட கண்ணில் படவில்லை.
விலகி போகும் என அசட்டையாய் இருந்த பூபதிக்கு ‘இல்லை! அது தங்களை நோக்கி தான் வருகிறது!’ என்பதே இறுதி நொடியில் தான் விளங்கியது.
அது அவர்களை நெருங்கி வந்த முத்தமிட இருந்த தருணம், ஷைலஜாவிடம் இருந்து ஸ்டியரிங்கை பற்றி அவன் நொடிக்க, கட்டுப்பாடிழந்த கார் சற்று தூரம் சென்று தடுப்பு சுவரில் மோதி குலுங்கி நின்றது.
கார் தன் ஆட்டத்தை நிறுத்தியதும் கண்ணைத்திறந்து பார்த்த ஷைலஜாவிற்கு ஒரு கணம் ஒன்றும் விளங்கவில்லை.
அருகே பூபதியை அவள் பார்க்க, அமர்ந்திருந்த சீட்டில் கீழே சரிந்து கிடந்தான்.
“ரகு?” பதறிக்கொண்டு எழுப்பினாள்.
அவன் கண்கள் திறக்கவே இல்லை.
“ரகு… ரகு… வேக்’கப்!” சொல்லிக்கொண்டே நீரை முகத்தில் தெளிக்க, அசைவு கூட இல்லை. மூர்ச்சையாகி இருந்தான்.
வியர்த்துக்கொட்டியது அவளுக்கு. அவனை நிமிர்த்தி சீட்டில் கிடத்தியவள், அவனுக்கு சீட் பெல்ட்டை அணிவித்துவிட்டு, வண்டியை எடுத்தாள்.
ஐந்தே நிமிடத்தில் இரு இருபத்திநான்கு மணி நேர மருத்துவனை வந்தது.
இரண்டு வார்ட்பாய்’கள் வாசலில் நிற்க, “ஸ்ட்ரச்சர் கொண்டு வாங்க!” என்ற அவளது அதிகார குரலில் வேகமாய் கொண்டு வந்து அதில் ரகுநந்தபூபதியை கிடத்தினர்.
“டாக்டர் எங்கே?” உள்ளே சென்றுக்கொண்டே கேட்டாள்.
“காலைல வருவார் மேடம்!”
என்றான் ரிசெப்ஷனில் இருந்த ஒருவன்.
“வாட்? காலைல’யா? டுவண்டி’ஃபோர் ஆர்ஸ் சர்விஸ்’ன்னு போட்டுருக்கீங்க! டாக்டர் இல்லன்னா எப்டி? உடனே வர சொல்லுங்க” என்று கத்தினாள்.
“நீங்க ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்து டாக்டர் வந்து பாக்கும் முன்ன உயிருக்கு ஏதாவதுன்னா யாரு பொறுப்பு? என்ன இவ்ளோ இர்ரெஸ்பான்சிபில்’லா இருக்கீங்க? எனக்கு இப்போ டாக்டர் வந்தாகணும்… ரகு’க்கு ஏதாவது ஆச்சு? உங்க ஹாஸ்பிடல்’ல உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்!”
அதிஉக்கிரத்துடன் அவள் எதிரே நின்றவனை வறுத்தெடுக்க,
“உங்க ஹாஸ்பிடல்ல லேடி நர்ஸ் எல்லாம் கிடையாதா?” என்ற குரலில் சர்வமும் நின்றுபோக திரும்பிப்பார்த்தாள்.
அங்கே ஸ்ட்ரச்சரில் ஸ்ரீரங்கநாதனை போல கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தவன்,
“டாக்டராவது பொண்ணா, இல்ல அதுவும் எதாவது கிழவன் கிழவியா?” என்று அந்த இரண்டு வார்ட்பாய்களிடம் விசாரித்துக்கொண்டிருக்க,
‘உன்குத்தமா… என்குத்தமா… யாரை நானும் குத்தம் சொல்ல?’ ஷைலஜாவின் தலையை சுற்றி பாடல் ஸ்லோமோஷனில் வட்டமடித்தது.