ஷைலஜா தலையை கைகளால் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஒரே விஷயத்தை மாற்றி மாற்றி சிந்தித்ததில் கபாலமே கனலாய் கொதித்தது.
‘எப்படி? அவனால மட்டும் எப்படி?’ இதை மட்டுமே தனக்குள் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
இந்த கேஸ் அவள் கைக்கு வந்ததில் இருந்து அவளும் பல வித கோணங்களில் விசாரணை நடத்தியிருந்தாள். போகும் இடமெல்லாம் முட்டு சந்தாய் தான் அமைந்தது. ஆனால், இவனுக்கு மட்டும் எப்படி தட்டும் இடத்தில் எல்லாம் தேங்காய் விழுகிறது? என்ற பெரிய ஆச்சர்யம் நிறைந்த ஐயம் அவளுள்.
அவன் அதி புத்திசாலியா? இல்ல நான் அடி முட்டாளா?
சிந்தனை குதிரை கட்டவிழ்த்துக்கொண்டு ஓடியது.
இதில் கடந்த வாரம், ‘விலைமாது’ குழுவிடம் விசாரித்து அந்த என்.எச்’யில் கொலை நடந்த அன்று யாரேனும் நின்றார்களா என அவன் விசாரிக்க சொன்னபோது ஏகப்பட்ட எரிச்சல் அவளுக்கு.
அந்த ‘ரெட் லைட் ஏரியா’ ஆட்கள் அத்தனை பேரையும் ஒன்று விடாமல் விசாரித்ததில் ஒரே ஒருத்தி மட்டும் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு அந்த இடத்தில் நின்றிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவனது நுண்ணறிவை கண்டு திகைத்தவள்,
தான் அத்தனை தூரம் கேட்டும், ‘நான் எதையும் பாக்கல, எனக்கு எதுவுமே தெரியாது! கஸ்டமர்’க்காக நின்னுட்டு இருந்தேன்!’ என்று திரும்ப திரும்ப சொன்னவளிடம் இருந்து வெறும் பத்தே நிமிடத்தில்,
“ஆமா சார், நான் பாத்தேன்! உயரமான ஒரு ஆளு அந்த மூணு பேரையும் அடிச்சுட்டு இருந்தான்!’ என்று விஷயத்தை அவன் வாங்கியபோது ஷைலஜாவின் புருவங்கள் உச்சி மேட்டை தொட்டது.
‘எப்படி?’ என அவள் சமைந்து நின்றபோது, ‘அடி உதவுற மாதிரி ஆலியா பட்’கூட உதவ மாட்டாங்க!’ என்று கண்ணடித்து சென்றவனை கண்டபோது, அவள் ஆச்சர்யங்கள் எல்லை கோடுகளை கடந்து இருந்தது.
ஆனாலும், ‘என்னால ஏன் முடியல? அவனால மட்டும் எப்படி முடியுது?’ இப்படியே தான் அவள் உள்ளகம் யோசித்து இம்சித்துக்கொண்டிருந்தது அவளை.
ஒருக்கட்டதிற்கு மேல் முடியாமல், ‘விண், விண்’னென்று தெறித்த நெற்றியை அவள் நீவிவிட, கதவை திறந்துக்கொண்டு விறைப்பாய் சல்யூட் அடித்துக்கொண்டு வந்தான் விக்கி.
நிமிர்ந்துப்பார்த்தவள், “என்ன?” என்றாள்.
“சார், உங்களை வர சொன்னாரு மேம்!”
மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்க்க அது ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.
“வீட்டுக்கு போற எண்ணமே இல்லையா உங்க சார்’க்கு?” கேட்டவள், தன் பொருட்களை மேசையில் இருந்து சேகரிக்க,
“ஹும்! அது இப்போதைக்கு என்னை விட்டு போவாது! கழுத்த கவ்வுன வேதாளம்!” முன்னதை சத்தமாகவும் பின்னதை முனுமுனுப்பாகவும் சொன்னவள் அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.
ரகுநந்தபூபதியின் அறை நோக்கி சென்றவளை, “மேம், சார் கார்’ல வெயிட் பண்றாரு!” என்றான் விக்கி.
அவள் கேள்வியாய் பார்க்கவே, “மினிஸ்டர் கூட மீட்டிங்! ஐ.ஜி வர சொல்லிருக்காரு!” என்றான்.
சலிப்பாய் திரும்பி வாசலுக்கு போனவள், ‘மீட்டிங் வைக்குற நேரத்தை பாரு! ச்சை!’ என அலுத்துக்கொள்ள, விக்கி அவள் பின்னே ஓடி வந்தான்.
நடேசன் டிரைவர் சீட்டில் இருந்தார். பின் சீட்டில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த ரகுனந்தபூபதி, கண்ணை மூடிக்கொண்டு,
‘சிக்கினி சம்மேலே…
ச்சுப்பு கே அக்கேலி…
போவா சாதா கே ஆயி!’ என பாடிக்கொண்டிருக்க, முன்பக்க கதவை வெடுக்கென திறந்துக்கொண்டு அமர்ந்தாள் ஷைலஜா.
அந்த சத்தத்தில் கண்ணை திறந்தவன், “ஷைலு’மா! உனக்காக தான் இத்தனை நேரம் காத்திருந்தேன்! வந்துவிட்டாயா என் செல்வமே!” என்று ப்ளாக்’அண்ட் ஒயிட் வசனம் பேச, அவனை திரும்பி முறைத்தாள் அவள்.
“வர வர யாருக்குமே நான் ஒரு கமிஷ்னர்’ன்னு பயம் இல்லாம போச்சு!” என்றவன்,
“வண்டியை எடுங்க நடேசன்” என்றான்.
விக்கி அவன் பக்க கதவை திறக்க, “வாட்?” என அவனை நிறுத்தினான் பூபதி.
“சார், நானு!”
“இங்க என்ன ஸ்கூல் டூரா போறோம்!? எல்லாரையும் ஏத்திக்கிட்டு போக?”
இப்படி கேட்டு அசிங்கப்படுத்தியவனை பாவமாய் பார்த்த விக்கி, “மேம் அசிஸ்டன்ட் நானு!” என்றான்.
“போற இடத்துக்கு ஒரு அல்லக்கையே அதிகப்படி! இதுல அல்லக்கைக்கு அல்லக்கை வேறயா?” என்றவன், “வண்டியை எடுங்க நடேசன்!” என்றான்.
அவன் சொன்னதுமே வண்டி அங்கிருந்து கிளம்பியது.
ஓடும் பாடல் முழுக்க ‘ஐட்டம் நம்பர்’ராக தான் இருந்தது. மொழி பேதமின்றி அத்தனை ராகமும் கலந்து கட்டி ஒலிக்க, ஷைலஜாவிற்கு மண்டை வலி மண்டை ஓட்டையே பிளந்தது.
“ஏலே ஏலே எங்கிருக்க?
இன்னுமாலே குந்திருக்க?
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்கு தானே வந்திருக்க…
ராதா… ராதா… ஓரங்க..” அவன் பாடிக்கொண்டிருக்கும்போதே மியூசிக் சிஸ்டத்தை ‘பட்டென’ நிறுத்தினாள் ஷைலஜா.
“ஒய்… ஒய் ஷைலு’மா? இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்…
நண்டூருது நண்டூருது… நரியூருது…நரியூருது… என்னானது… ஏதானது…” பேசியவன், அப்படியே பாட்டையும் பாட,
“ஸ்ஸ்ஸ்… சார்? எனக்கு காது வலிக்குது!” என்றாள்.
“ஓ! சரி விடு!” என்றவன் அடுத்து சில நிமிடங்கள் பேசவே இல்லை.
கார் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கியது.
“ஷைலு?”
“சார்?”
“எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்!”
“கேளுங்க சார்!”
வழக்கு தொடர்பாய் ஐ.ஜி’யையும் அமைச்சரையும் பார்க்க செல்பவனுக்கு சந்தேகம் என்றதும் தன்னால் முடிந்ததை சொல்லி உதவ அவள் முன்வர,
“அது ஏன் காலாகாலமா ஐட்டம் சாங்’க்கு பொண்ணுங்களையே ஆட விடுறாங்க!? ஒரு சேஞ்’க்கு பசங்க ஆடினா என்ன? பொண்ணுங்க உங்களுக்கும் அப்படி பசங்களை கில்மா’வா பாக்கணும்ன்னு ஆசை இருக்கும் தானே?” என்று கேட்டதும், ஷைலஜாவின் உள்ளத்தில் எழுந்த உன்னத வார்த்தைகளை உதிர்க்க ஒரு அகராதியே வேண்டும்!
“சொல்லு ஷைலு? நீதான் ஆம்பளை, பொம்பளைன்னு பிரிச்சு பேசுனா சவுண்டு சரோஜாவா மாறிடுவியே! உன் கண்ணு முன்ன இவ்ளோ பெரிய அநியாயம் நடந்துட்டு இருக்கு… இது சம்பந்தமா எப்போ நம்ம கேஸ் போடலாம் சொல்லு!” என்று வேறு அவன் கேட்க,
அவன் தனது மேலதிகாரி! அவனை ஒன்றும் சொல்லிவிடக்கூடாது என்று தனக்குத்தானே ஜபம் போல சொல்லிக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
“நடேசன், இதைப்பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?” என்று ஷைலஜாவிடம் இருந்து ஓட்டுனர் புறம் தன் கேள்விக்கனைகளை அவன் திருப்பியிருக்க,
‘மன்னா…. நான் பிள்ளைக்குட்டிக்காரன் மன்னா!’ என்று காலில் விழுந்து கதறலாம் போல ஆனது அவருக்கு.
அவர் திருதிருவென முழிக்க, “அட போங்கைய்யா! தமிழ்நாடு போலிஸ் ரொம்ப மொக்க!” என்றான் அலுத்து.
அதற்குள் மினிஸ்டரின் வீடு வந்திருந்தது. வாட்ச்மேன் இவர்களுக்காகவே காத்திருந்ததை போல கதவை திறந்துவிட்டான்.
உள்ளே சென்று இறங்கியதும், ஒரு ஆள் வந்து, “உங்களை முதல் மாடிக்கு வர சொன்னாங்க” என்றான்.
நடேசனை அங்கிருந்து ஆட்டோ பிடித்து போக சொல்லி அனுப்பிவிட்டு ஷைலஜாவுடன் உள்ளே சென்றான் பூபதி.
ஐ.ஜி மாடி வளைவில் இவர்களை எதிர்ப்பார்த்து நின்றிருந்தார். இருவரும் ‘வணக்கம்’ வைக்க, மினிஸ்டரின் பார்வை எரிச்சலுடன் ஷைலஜாவின் மீது விழுந்தது.
பூபதி யார் அனுமதியும் வேண்டாமல் சோபாவில் அமர்ந்துவிட்டு, ஷைலஜாவையும் வம்படியாய் அருகே அமர செய்தான். மீதமிருந்த இருவரும் அமர வேண்டிய சூழ்நிலையானது.
குரலை செருமிய ஐ.ஜி, “கேஸ் என்னாச்சு?” என்றார்.
“ரிபோர்ட் ரெகுலரா குடுத்துட்டு தானே சார் இருக்கேன்!?”
ஐ.ஜி அமைச்சரை பார்க்க, அவர், “ரிப்போர்ட் எவனுக்கு வேணும்? என் மகனை கொன்னவனை பார்த்தது என் மருமக ஒருத்தி தான்! இப்ப அவளையும் காவு குடுத்தாச்சு! அடுத்து என்னையும் கொன்ன பிறகு தான் எவன் கொன்னான்னு கண்டுப்பிடிப்பீங்களோ?” என்றார் உச்சபட்ச கோபத்தில்.
ஷைலஜாவிற்கு பதில் சொல்ல நா பரபரத்தது. தான் எது பேசினாலும் அவருக்கு உரைக்காது என்பது அறிந்ததால் அவள் பூபதியை பேச சொல்லி பார்க்க, அவன் அப்போது தான் தன் பேக்கெட்டில் இருந்து தேடி, ஒரு பொட்டலத்தை பிரித்து வாயில் கொட்டி நறநறவென மெல்ல ஆரம்பித்தான்.
‘இவன் என்ன பேசுற ஐடியால இல்லையா?’ ஷைலஜா அவஸ்தையாய் அமர்ந்திருந்தாள்.
பூபதி பதில் சொல்வான் என அமைச்சர் அவனையே பார்க்க, அவனோ வாயில் இருப்பதை மென்று தின்பதே தன் தலையாய கடமை என்றிருந்தான்.
அமைச்சர் ஐ.ஜியை முறைத்தார்.
ஐ.ஜி, “பூபதி! என்ன பண்றீங்க? சார் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க!” என்றார்.