ஷைலஜாவிற்கு அன்றிரவு முழுக்க தூக்கம் ஒரு பொட்டுக்கூட வரவில்லை.
இவள் இந்த வழக்கை விசாரித்தபோது ஒரு இம்மி கூட ஆதாரமென இவளுக்கு கிடைக்காமல், இவன் பொறுப்பில் வந்ததுமே அத்தனையும் வந்து குவிவதே இவளுக்கு பெரும் மண்டை குடைச்சலாகி இருந்தது.
இதில் இருமுறை கொலை முயற்சி வேறு நடக்க… அதை அவன் கண்டுக்கொள்ளாமல் கூலாக இருந்ததில் வேறு இவளுக்கு ஏதோ உறுத்தலாகி போனது.
அவனை பற்றி பெரிதாய் எதுவும் தெரியாததால், அவன் யாரென தெளிவாய் தெரிந்துக்கொள்ள அவன் வீட்டிற்கு ஒருமுறை சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.
நடேசன் வேறு ஒருமுறை, ‘வாசல்ல செக்யூரிட்டி வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு… வீட்ல வேலைக்காரங்க கூட கிடையாது. இவ்வளவு ஏன், தினம் போறேன் வரேன்… இதுவரைக்கும் அவர் வீட்டு வாசல கூட நான் மிதிச்சது இல்லை’ என்று சொல்லியிருக்க, போய் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது அவளுக்கு.
போகும்போது சும்மா போக முடியுமா? எத்தனையை தான் கண்ணில் பதிவு செய்ய முடியும்? அதற்கு தான் அந்த கேமரா.
இரவு அவன் வீட்டில் இருந்து வந்தவள், தன் வீட்டிற்குள் நுழையும்போதே கழுத்தில் கிடந்த சங்கிலியை, ‘ச்ச!’ என்ற வெறுப்புடன் தூக்கி வீசினாள்.
அவள் வேகம் கண்டு, “க்கா… என்னாச்சு?” என்று துர்கா வர, “ஜஸ்ட் கெட் அவுட்… கெட் அவுட்” என்று இவள் கத்தியதில் ஓடியே போனாள் துர்கா.
மாட்டிக்கொண்ட கடுப்பில் இருந்தவள், வேகமாய் மொபைலை எடுத்து டையல் செய்து காதில் வைக்க, மறுமுனையில் அழைப்பை உடனே ஏற்ற ஆள், எடுத்ததுமே,
“ஏதாவது கிடைச்சுதா மேடம்?” என்றான்.
இவள், “நோ விக்கி! அவன் என்னை கண்டுப்பிடிச்சுட்டான்! நான் ஸ்பை கேம் வச்சுருக்கேன்னு கண்டுப்பிடிச்சுட்டான்” என்று சொல்ல மறுப்பக்கம் மயான அமைதி.
‘இல்லையே’ என்றவளுக்கு, நொடிபொழுதில் ஞாபகம் வந்தது அது.
‘ஹை அக்கா… இது ரொம்ப அழகா இருக்கு… எப்போ வாங்குனீங்க?’ அவன் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்கையில் துர்கா அந்த சங்கிலியை கையில் எடுத்துக்கொண்டு கேட்க,
‘ஏய் கீழ வை அதை! கேமரா பிக்ஸ் பண்ணிருக்கு… உடைச்சுடாத’ என்று ஷைலஜா சொன்னதும், அதிர்ந்த முகத்தோடு அதை வைத்துவிட்டு துர்கா சென்றது இப்போது நிழற்படம் போல தோன்றியது.
ஷைலஜாவின் கண்கள் சந்தேகத்துடன் துர்காவின் அறை கதவை நோக்கியது.
“மேம்… லைன்ல இருக்கீங்களா?”
“ஹான்… யெஸ்!” என்றவள், “அவன்கிட்ட என்னவோ இருக்கு… என்னன்னு தான் தெரியல” என்றாள்.
“ஆமா மேம்! வந்ததுல இருந்து ரொம்ப பண்றாரு!” பலநாள் காண்டில் சொன்னான்.
“நம்ம இப்டி தலையை சுத்தி மூக்கை தொடுறது எல்லாம் அவன்கிட்ட செல்லுபடியாகாது! அதனால…” என்று நிறுத்த,
“அதனால?” என்றான் விக்கி ஆர்வமாய்.
“அதனால… அவன் வழில போய் தான் அவனை மடக்கனும்!”
“அவன் வழின்னா? என்ன செய்யப்போறீங்க மேம்?”
விக்கி இப்படி கேட்க, ஆழ மூச்செடுத்து, தன்னை திடமாக்கியவள், “லவ் பண்ணப்போறேன்!” என்றாள்ஷைலஜா.
@@@@@@@@
“மேடம்… என்ன மேடம் சொல்றீங்க… சார்’க்கு தெரியாம எப்படிங்க மேடம்?” கண்காணிப்பு அறை அதிகாரி கோபி வெகுவாய் தயங்கினார்.
“என்ன கோபி சார் நீங்க? என்னை உங்களுக்கு பத்து வருஷமா தெரியும்… இதுவரைக்கும் எதாவது தப்பான விஷயத்துக்கு துணை போயிருக்கேனா? இல்ல… நான் தேவையில்லாத விஷயத்துல தலையை கொடுத்துருக்கேனா.. சொல்லுங்க?” ஷைலஜா கேட்க, கோபியால் அதை மறுக்க முடியவில்லை.
நியாயமான காக்கிகளில் இவளும் ஒருத்தி என்பது டிபார்ட்மென்ட் அறிந்த சேதி. இதில் இவருக்கு மாற்றுக்கருத்து கிடையாது எனினும், அவர் சற்று பயங்கொள்ள…
“நான் கேட்டதை யாருக்கும் தெரியாம எனக்கு கொடுங்க… அதோட உங்க வேலை முடிஞ்சுது… இதுல உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது… அதுக்கு நான் கேரன்ட்டி!” இன்னும் பலவாறாய் பேசி அவள் வேண்டியதற்கு அவரை இசைய வைத்திருந்தாள் ஷைலஜா.
ரகுனந்தபூபதி அன்று முழுக்க அவளை பெரிதாய் தொந்தரவு செய்யவில்லை. ஏதோ சிந்தனையில் அகப்பட்டவன் போலவே இருந்தான்.
வேறொரு கேஸ் விஷயமாக ஐ.ஜி அழைக்க மதியமே அவரை பார்க்க சென்றுவிட்டான்.
சென்னை மாகாண கமிஷ்னருக்கு இந்த ஒரு கேஸ் தான் இருக்குமா என்ன? மற்றதையும் கிடைத்த கேப்பில் கவனிக்க வேண்டுமே!!!
அதனால், ஷைலஜாவிற்கு அன்று முழுவதும் எந்தவித இடையூறும் இல்லை. நிம்மதியாக தன் சிந்தனைக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தாள்.
மாலை ஆறு மணி கடந்தபோது கையில் ஒரு ஹார்ட் டிஸ்க்கை மறைத்து எடுத்துக்கொண்டு இவள் அறைக்கு வந்தார் கோபி.
“மேடம்… ஒன்னும் பிரச்சனை?” அவர் இன்னமும் தயங்க,
“சார்… இதை என் கைல கொடுத்துட்டு திரும்பிப்பார்க்காம போங்க… இனி உங்களுக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று அவள் அழுத்தமாய் சொல்ல, வேகமாய் வெளியேறிவிட்டார் கோபி.
அவர் சென்றதும் தனது பர்சனல் லேப்டாப்பை எடுத்து ஹார்டிஸ்க்கை கனெக்ட் செய்தவள், அதில் பதிந்திருக்கும் வீடியோவை பார்க்க ஆரம்பித்தாள்.
ரிவர்ஸ் ஹேக்கிங் மூலம் மாற்றப்பட்ட சர்வைலன்ஸ் கேமரா பதிவுகளை வெளிக்கொணர முயன்றவர்கள் ‘முடியவில்லை’ என கையை விரித்திருந்தனர்.
சரி, அது போனால் என்ன… கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவன் அந்த காரை பின்தொடர்ந்து தானே வந்திருக்க வேண்டும் என்று ஞானம் உதிக்க, அன்றிரவு ‘பப்’பில் இருந்து அந்த ஹைவேஸ் வரைக்கும் கார் பயணித்த சாலைகளின் சர்வைலன்ஸ் கேமரா பதிவுகளை தான் கோபியிடம் கேட்டிருந்தாள் ஷைலஜா.
ஆனால் ஏனோ அது ரகுவிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
எப்போது சாட்சிகளும் ஆதாரங்களும் அவன் கைப்பட்டால் தான் வெளிவருகின்றன. இம்முறை அது அவள் மூலமாய் வர வேண்டும் என்று எண்ணினாள் போலும்.
இரவு பதினொரு மணிக்கு மேலிருந்த அந்த பதிவுகளை நன்றாக உற்று நோக்க துவங்கினாள்.
இடையில் கார் இரு இடங்களில் நின்றது.
பெரிதாய் எல்லாம் இல்லை… ஒருமுறை ஜெகன் வெளியேறி ஃபோன் பேசினான். மற்றொரு இடத்தில் அந்த பெண் தலையை பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்தாள்.
‘நல்லா குடிச்சுட்டு போதைல இருக்குங்க!’
பார்க்கும்போதே ஷைலஜாவிற்கு தெரிந்தது.
அவர்களை பின்தொடர்ந்து எந்த வாகனமும் வருவது போல தெரியவில்லை.
அவளின் இந்த முயற்சியும் தோல்வியில் தான் முடியுமோ என அவள் சோர்ந்துப்போகும்போதே… அந்த நெடுஞ்சாலைக்கு சற்றே பக்கமாய் ஒரு வேகத்தடையில் கார் ஏறி இறங்க, அங்கே ஓரம்கட்டி நின்றிருந்தது அந்த பைக்!!!
சட்டென அவள் கண்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கார் அங்கிருந்து சென்றதுமே, பைக்கின் மீது ஏறி அமர்ந்த உருவம் யூடர்ன் அடித்து அவர்களை பின்தொடர்ந்து போக, அதற்கு மீறிய தடத்தின் கேமரா பதிவுகள் களவாடப்பட்டதில் அதீத எரிச்சலானது அவளுக்கு.
பலமுறை ஜூம் செய்து, ரீவைண்ட் செய்து பார்த்துவிட்டாள்.
முதுகு காட்டி இருக்கும் அந்த வளர்ந்த உருவம் தன் உடலை இருமடங்காய் காட்டும் குளிர்கால உடையில் இருந்தது. முகத்தில் மாஸ்க் அணிந்து அதன் மீது ஹெல்மெட் வேறு!
கைகள் கூட தெரியா வண்ணம் க்ளவுஸ் அணிந்திருக்க, அவன் யாராக இருக்கும் என சின்ன க்ளூ கூட இல்லை.
சரி வண்டி எண்ணாவது பார்க்கலாம் என்றால், ‘ஃபோர் ரெஜிஸ்டர்ட்’ என்று இருந்தது.
“ச்சை!!!” என சலித்துப்போய் தலைப்பிடித்து அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் இருந்தவள், திடுமென யோசனை வந்ததை போல பரபரப்பை லேப்டாப்பை கையில் எடுத்தாள்.
அந்த பைக்காரன் இருக்கும் கேமரா பதிவில் கார் வந்து போகும் முன்னே இருக்கும் சில நிமிடங்களை அவள் ‘ப்ளே’ செய்ய…
பைக்கை நிறுத்திவிட்டு நின்றிருந்தது அந்த உருவம்.
கண்கொத்தி பாம்பாய் பார்க்கலானாள்.
பைக்கை ஒட்டி முன்னும் பின்னும் நடைபயின்ற உருவம், சட்டென நின்றது.
எதாவது க்ளூ கிடைக்குமா என காத்திருந்தாள்.
நின்ற உருவத்தின் கைகள் மெல்ல உயர்ந்து அவனது கால்சட்டையின் பாக்கெட்டுக்குள் நுழைந்தது.
இவள் கண்கள் விரிந்தது.
நுழைந்த கைகள் வெளியே வந்தபோது அதில் ஏதோ இருக்க, மறுகை கொண்டு அதை கிழித்தவன், அந்த பொட்டலத்தை மொத்தமாய் தன் வாய்க்குள் சரித்துக்கொட்ட…
எந்த இடத்திலும் அவனை சந்தேகிக்கவே முடியவில்லை அவளால்.
அவனா இப்படி?
அப்போது அவன் தானா?
ஆனால் ஏன்?
பித்துப்பிடித்தவள் போல அமர்ந்திருந்தவள், பரபரவென அந்த ஹார்ட்டிஸ்க்கை எடுத்துக்கொண்டு விக்கியிடம் சென்றாள்.
அவள் கண்கள் தான் பொய்த்துப்போனதோ? குழம்பிய மனம் கண்டதையும் தவறாய் காண்கிறதோ? என்ற பெரும் ஐயம்!
வேகவேகமாய் நடந்தாள்.
இரண்டாம் தளத்தில் அவன் இருப்பதாக வழியில் கண்டவர்கள் சொல்ல, கிட்டத்தட்ட ஓடினாள்.
விக்கி இதை பார்த்துவிட்டு வேறு கோணத்தில் ஏதேனும் சொல்லிவிட வேண்டும் என்று உள்ளம் வேண்டியது.
சற்று தூரத்தில் வானத்தை பார்த்துக்கொண்டு யாரிடமோ போனில் உரையாடிக்கொண்டிருந்தான் விக்கி.
விறுவிறுவென சென்றவள் நடை, மின்சாரத்தை மிதத்தவள் போன்று அப்படியே நின்றது அங்கே கண்ட காட்சியில்.
போனில் பேசிக்கொண்டே தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்த விக்கி, அதை வெளியே எடுக்கும்போது ஒரு பொட்டலம் இருக்க, போனை கழுத்தில் கவ்விக்கொண்டு, மறுகை மூலம் அதை பிரித்தவன், அப்படியே வாயில் கொட்டினான்.
ஷைலஜாவின் கண்கள் சற்று நேரம் பார்த்த காணொளியை இவனோடு ஒப்பிட, தலை சுற்றிப்போனது.
‘இவனா? இந்த பயந்தாங்கொள்ளியா?’
இப்படிதான் அவனை நினைத்தாள் ஷைலஜா.
‘இருக்குமோ?’ இப்படியும் தோன்றியது.
வந்த தடத்தில் திரும்பி நடக்க அவள் கால்கள் பின்னே சென்ற போது, “ஷைலுமா?” என்ற குரலில் தூக்கிவாரிப்போட திரும்பினாள்.
அங்கே வசீகரமாய் சிரித்துக்கொண்டு நின்ற பூபதி, இவள் கண்முன்னே கையில் இருந்த பொட்டலத்தை பிரித்து வாயில் கொட்டிக்கொள்ள… இவள் கண்கள் தெறித்து விழுந்தது.
முன்னே நிற்கும் பூபதியை பார்த்தாள்.
பின்னே நிற்கும் விக்கியையும் பார்த்தாள்.
அந்த நேரம் இருவருமே அவள் கண்களுக்கு பேயாக தான் தெரிந்தனர்.