சந்தியா, கதிர் திருமணத்திற்கு தன் கணவர் சம்மதம் சொன்னவுடன், வேதவல்லி ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் தன் அண்ணன் வீடு நோக்கி சென்றார். அவருக்கு எங்கே வேதாளம்திரும்ப முருங்கை மரம் ஏறி விடுமோ என்று பயம்.
“அண்ணா நான் உங்களை நம்பித்தான் வந்திருக்கேன். நீங்க உடனே கதிருக்கும், சந்தியாவுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. குணம் கெட்ட புருஷனை வச்சிக்கிட்டு நான் எப்ப என்ன ஆகுமோன்னு பயந்திட்டே இருக்க முடியாது…” என்று வேதவல்லி கண்ணீர் விட, பெரியசாமி குழப்பத்தில் இருந்தார்.
சந்தியா இன்னும் படிப்பை முடிக்கவில்லை. கதிர் இப்போது பெங்களூரில் வேலை பார்க்கிறான். இவர்களுக்கு இப்போது திருமணம் செய்தாலும் அவர்கள் தனித்தனியே தான் இருக்க வேண்டும். திருமணம் முடிந்த பின்பு பிரிந்து இருப்பது இருவருக்குமே கஷ்டமாக இருக்கும் என்று யோசித்தார். ஆனால் வேதவல்லி கதிர், சந்தியா திருமணத்தை உடனே நடத்தி விடுவதில் பிடிவாதமாக இருந்தார்.
பெரியசாமிக்கு துரை சந்தியாவிற்கு வெளியில் மாப்பிள்ளை பார்த்த விவரம் தெரியும். அதனால் எதற்கும் ஒரு முறை துரையிடம் கேட்டுவிடுவோம் என்று நினைத்து தன் தம்பி பாண்டியனை அவரிடம் அனுப்பி வைத்தார்.
பாண்டியன் “மாப்பிள்ளை பரிசத்தை இப்ப போட்டுட்டு, கல்யாணத்தை வேணா கொஞ்ச நாள் தள்ளி வச்சிப்போமா….” என்று கேட்டதற்கு,
“அவ காலேஜ் போய் படிக்கிறாளா, இல்லை உன் அண்ணன் மகனோட ஊர் சுத்துறாளான்னு, நான் பார்த்துட்டே இருக்க முடியுமா…” என்றார் துரை.
பாண்டியனுக்குக் கதிரை பற்றி நன்றாகவே தெரியும். அதனால் அவருக்குத் துரையின் பேச்சுக் கோபத்தை வரவழைத்தது. இந்தாளோட பேசுறது சுத்த வேஸ்ட் என்று நினைத்த பாண்டியன் தன் அண்ணனிடம் வந்து நடந்தை சொல்ல, நன்றாக யோசித்த பெரியசாமி கதிரை செல்லில் அழைத்தார்.
“கதிர் ஆபீஸ் நேரத்தில தொந்தரவு பண்ணிட்டேனாப்பா…”
“இல்லைங்கப்பா. சாப்பிட தான் கிளம்பிட்டு இருந்தேன். சொல்லுங்க எதுக்குக் கூப்பிட்டீங்க…?” என்று கதிர் கேட்டதும், பெரியசாமி நடந்த அனைத்தையும் சொல்ல, அதைக் கேட்ட கதிரின் கண்கள் கோபத்தில் சிவந்தது.
“ஏன்பா மாமா இவ்வளவு கோபப்படுறாரு…? நாங்களாவா தேடிப்போய் விரும்பினோம். நீங்க எங்களுக்குக் கல்யாணம் பண்ணப் போறீங்கன்னு சொன்னதை நம்பித்தான எங்க மனசுல ஆசைய வளர்த்திக்கிட்டோம். ஆனா, இப்ப அவர் என்னை எதோ விரோதிய பார்க்கிற மாதிரி பார்க்கிறார்பா. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று கதிர் வருந்த,
பெரியசாமி அவனைச் சமாதானம் செய்தார். “உங்க மாமா நல்லவன் தான். ஆனா முன்கோபி. அதனால தான் புடிக்கிற முயலுக்கு மூணு காலுன்னு பிடிவாதம் பிடிப்பான். நாம காவேரிய வெளியிடத்தில செஞ்சது அவனுக்குப் பிடிக்கலை. அதனால சந்தியாவுக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்தான். ஆனா ஒன்னும் சரியா வரலை. இப்ப கல்யாணத்தை உடனே வைக்கச் சொல்லி பிடிவாதம் பிடிக்கிறான். சரி விடு அவன் குணம் தெரிஞ்சது தான….” என்றார்.
“அவர் சொல்றபடி எல்லாம் ஆட முடியுமாப்பா. சந்தியாவுக்கு இன்னும் ரெண்டரை வருஷம் படிப்பு இருக்கு. அவளால படிப்பை விட முடியுமா. இல்லைனா என்னால தான் வேலைய விட்டுட்டு அங்க வர முடியுமா…..” கதிர் ஆத்திரப்பட, அவன் கோபத்திலும் நியாயம் இருப்பதை உணர்ந்த பெரியசாமி அமைதியாக இருந்தார்.
தன் கோபத்தைத் தந்தையிடம் காட்டுகிறோம் என்று உணர்ந்த கதிர் தன்னைக் கட்டுப்படுத்தியவன் “எனக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா. நீங்களே முடிவு பண்ணுங்க. உங்க முடிவுக்கு நான் கட்டுப்படுறேன்.” என்றான் முடிவாக.
அவனுக்குச் சலிப்பாக இருந்தது. எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்காம இருந்தா என்ன செய்றது…? தன் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது.
“வர்ற வெள்ளிக்கிழமை பரிசமும், ஆணியில வர்ற முதல் முகூர்த்தத்தில கல்யாணத்தையும் வச்சிடலாம்னு பார்க்கிறேன்.” என்று பெரியசாமி சொன்னதும்,
“சரிப்பா நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படி. என்னால பரிசத்துக்கு வர முடியாது. வேலைக்கு சேர்ந்த நாலு நாள்ல லீவு கொடுக்க மாட்டாங்க. அதனால நீங்க நடத்துங்க. நான் கல்யாணத்துக்கு வரேன்.” என்று வேறு யாரோ ஒருவர் திருமணத்திற்கு வருவதைப் போல் பேசி கதிர் போனை வைத்துவிட்டான்.
அவன் நிலை உணர்ந்த பெரியசாமியும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. தன் தங்கையின் வீட்டுக்குப் பரிசம் போட வருகிறோம் என்று ஆள் அனுப்பித் தகவல் தெரிவித்தார். அதுவரை கதிர் என்ன சொல்வானோ என்று பயந்து கொண்டிருந்த சந்தியா நிம்மதியாக உணர்ந்தாள்.
திருமணம் என்பது சாதாரண நிகழ்வு அல்ல. வாழ்க்கையின் முக்கியமான திருப்பம். அதன் பிறகு தான் வாழ்க்கையில் நிறையப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியது வரும் என்று சந்தியாவுக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் கதிர் அதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்.
லக்ஷ்மி தன் மகள் காவேரிக்கு போன் செய்து கதிரின் நிச்சயத்தைப் பற்றிச் சொன்னார். “அது எப்படி எனக்கு ரெண்டு நாளைக்கு முன்ன தான் சொல்லனும்னு தோணுச்சா….” என்று காவேரி சண்டைக்கு வரிந்து கட்டி நிற்க, லக்ஷ்மிக்கு கோபம் வந்து விட்டது.
“இது எல்லாம் உன்னால தான்…” என்று அவர் காவேரியை பிடி பிடியென்று பிடித்தார். காவேரி கண்ணீருடன் போன்னை வைக்க. சுபாஷ் அவளிடம் நடந்தை கேட்டு தெரிந்து கொண்டான்.
சுபாஷ் காவேரியை மட்டும் நிச்சயத்திற்குப் போகச் சொன்னவன், திருமணத்திற்கும் இன்னும் சில நாட்களே இருப்பதால், திருமணம் வரை அவளை அங்கேயே தங்கியிருந்து அவள் பெற்றோருக்கு உதவச் சொன்னான்.
“நான் போறேன் சரி, ஆனா நீங்க….” என்று காவேரி சந்தேகமாக இழுக்க,
“நான் கல்யாணத்துக்கு வரேன்.” என்று சுபாஷ் சொன்னதும், அவனைப் பார்த்து முறைத்த காவேரி “நீங்க ஏன் மத்தவங்களுக்காக எங்க அண்ணன் நிச்சயத்துக்கு வராம இருக்கணும். நாம எந்த விதத்துல குறைஞ்சு போய்ட்டோம். எனக்கும் அந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு.” என்றாள் கோபமாக.
“காவேரி சுயநலமா இருக்காத, இன்னைக்குக் கதிருக்கும், சந்தியாவுக்கும் இப்படி ஒரு நிலை வர நாம தான் காரணம். அன்னைக்கு நீ உன் குடும்பத்தைப் பத்தி நினைச்சியா. உங்க அண்ணன் வந்து உன்னைக் கூப்பிட்ட போது. உடனே நீ அவர் கூடப் போனியா. இல்லைல. உனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியமா இருந்துச்சு. இப்ப மட்டும் என்ன ரொம்ப உரிமை கொண்டாடுற..?”
“எல்லோரும் கலப்புத் திருமணங்களை ஆதரிப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. ஆனா, நாம நிஜமாவே கொடுத்து வச்சவங்க. நம்ம கல்யாணம் எந்தப் பிரச்சனையும் இல்லாம நடந்தது. ஜாதிக்காகக் காதலர்களைக் கௌரவக் கொலைகள் செய்றது பத்தி நீ கேள்விபட்டது இல்லை. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா காதல் திருமணமும் நடக்க ஆரம்பிச்சிருக்கு. மாற்றம் என்பது ஒரே நாளில் வராது. உங்க மாமாவும் ஒரு நாள் புரிஞ்சிப்பார்.”
சுபாஷ் சொன்னதைக் கேட்ட அவனின் பெற்றோர், “நீ சொல்றது உண்மை சுபாஷ். ஏற்க்கனவே உங்களால அந்தக் குடும்பத்துல நடந்த பிரச்சனை போதும். கதிர், சந்தியா கல்யாணம் நல்லபடியா முடியுற வரை. நாம கொஞ்சம் விலகியே இருப்போம். நாங்க வந்தா அதுவேற இன்னும் பிரச்சனை.. அதனால நாங்க டெல்லி டூர் போயட்டோம்னு சொல்லிடு.” என்றனர்.
சுபாஷுக்கு உண்மையிலேயே தன் பெற்றோரை நினைத்துப் பெருமையாக இருந்தது. நாங்கள் சம்பந்தி வீட்டினர் என்று வீணாக வெட்டி பந்தா செய்து அலட்டிக்கொள்ள நினைக்காமல். விட்டு கொடுக்கும் தன் பெற்றோரை உயர்வாகப் பார்த்தான்.
“அங்கே போய் எந்தப் பிரச்சனையும் பண்ணாம ஒழுங்கா இருந்துட்டு வரணும்.” என்று எச்சரித்தே சுபாஷ் காவேரியையும், தன் மகனையும் விமானம் ஏற்றி அனுப்பி வைத்தான்.
திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிச்சயம் என்றாலும் பெரியசாமி சிறப்பாகவே செய்தார். தன் நெருங்கிய உறவினர்களை எல்லாம் அழைத்துச் சீர் வரிசையாக இருப்பதியொரு தட்டுக்கள் ஊர்வலமாக எடுத்துக்கொண்டு சென்று. அந்த ஊரே வியந்து பார்க்கும் அளவிற்குப் பெரிய அளவில் செய்தார்.
அதோடு சந்தியாவிற்கு விலை உயர்ந்த பட்டுப்புடவை. நகைகள் எல்லாம் சீராகக் கொடுத்து தன் மகனுக்குப் பேசி முடித்தார். துரையே இந்த அளவிற்கு எதிர்ப்பார்க்கவில்லை.நிச்சயத்தில் தாய் மாமன் தான் முக்கியம். சந்தியாவிற்குத் தாய் மாமாவே மாப்பிள்ளையின் அப்பாவாக இருப்பதால், அடுத்திருந்த சின்ன மாமன் பாண்டியனும், கதிரின் தாய் மாமா வாசுவும் தட்டு மாற்றிக்கொண்டனர். அதனால் துரைக்கு வந்தவர்களை வாங்க, சாப்பிடுங்க என்று சொல்வதைத் தவிரப் பெரியதாக வேறு வேலைகள் இல்லை.
சந்தியா நிச்சய புடவையைக் கட்டிக்கொண்டு சபைக்கு வந்து பெரியவர்கள் எல்லோருக்கும் சேர்த்து பொதுவாக விழுந்து கும்பிட்டாள். காவேரி அவளை அழைத்துச் சென்று அவளுக்கென்று போடப்பட்டிருந்த இருக்கையில் அமர வைத்தாள்.
சந்தன நிறத்தில் அரக்கு வண்ண கரை வைத்த பட்டுப்புடவையும், கற்கள் பதித்த நகைகளும் அணிந்து சந்தியா வானத்து நட்ச்சத்திரமாக ஜொலித்தாள். லக்ஷ்மி தன் மருமகளுக்குத் தாங்கள் சீர் வரிசையாகக் கொண்டு வந்த நகைகளை அணிவித்து, நெற்றியில் குங்குமமும், தலையில் பூவும் வைத்து அழகு பார்த்தார்.
பெண்கள் எல்லோரும் நலங்கு வைத்து முடித்ததும், பெரியசாமி தன் மருமகளை ஆசிர்வாதம் செய்யச் சென்றார். தன் மருமகளுக்குத் திருநீறும், குங்குமமும் வைத்துவிட்ட பெரியசாமி தன் மருமகளின் முகத்தைக் கூர்ந்து நோக்க, சந்தியாவின் முகத்தில் பொலிவை விடக் களைப்பே தெரிந்தது.
அதைப்பார்த்து வருந்தியவர் “என்ன சந்தியா இப்படி இருக்க…? சந்தோஷமா இருக்க வேண்டாமா….” என்று கேட்க,
கண் கலங்கிய சந்தியா “கதிர் மாமாவை நினைச்சா பயமா இருக்கு மாமா. அவங்க நிச்சயத்துக்குக் கூட வரலையே. அவங்களுக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்டம் இல்லையா….” என்றாள் மெதுவான குரலில்.
“அதெல்லாம் எதுவும் இல்லை. அவனுக்கு இப்ப லீவ் கிடைக்கலை அது தான் வர முடியலை….” என்றவர், உடனே தன் செல்லில் கதிரை அழைத்தார்.
அங்கே கதிரும் நிச்சயத்துக்குப் போகவில்லை என்ற வருத்தத்தில் தான் இருந்தான். தன் அப்பா அழைப்பதை பார்த்ததும் உடனே செல்லை எடுத்தவன் “சொல்லுங்கப்பா…” என்றதும்,
“நிச்சயம் நல்லபடியா முடிஞ்சுது கதிரு. நீ வரலைங்கிறதை தவிர வேற எந்தக் குறையும் இல்ல. சந்தியா தான் நீ வரலைன்னு ரொம்பக் கவலைப்பட்டுச்சு. இந்தா அது கிட்ட ஒரு வார்த்தை பேசு, அப்பத் தான் அது நிம்மதியா இருக்கும்.” என்று செல்லை சந்தியாவிடம் கொடுத்தார்.