உடனே சுதாரித்து இன்னொருவரிடம் பாத்திரத்தை கொடுத்து வைஷ்ணவி அருகில் வர, அவனை பார்த்து வைஷ்ணவி வந்த வழியே மீண்டும் நடந்தாள்.
“வைஷ்ணவி…” அவன் குரலை நன்கு அறிந்தவளுக்கு அதே குரலில் தன் பெயர் வந்தது ஆசிரியத்திலும் ஆச்சிரியம். ஒரு நிமிடம் மனம் ‘பக்’ என்று துடித்தது, அதை சட்டை செய்யாமல் சென்றவள் கையை பிடித்து நிறுத்தினான்,
“வைஷ்ணவி நில்லு” சட்டென அவன் கையை உதற முயன்றவளுக்கு அந்த பலம் வாய்ந்த கைகளில் இருந்து விடுபட முடியவில்லை.
“கை எடுங்க…”
“உன்ன பாக்க தான் வைஷ்ணவி வந்தேன்…” இது புதிய செய்தியே அவளுக்கு.
“யாராவது பாத்தா தப்பாகிடும் கை எடுங்க…”
சங்கடத்தோடு நெளிந்தவளை பார்த்து, “சரி நீ போகாத நான் கை எடுக்குறேன்” அவனிடமிருந்து கை விடுபட்டதும் சில அடிகள் பின்னால் சென்றாள் பயத்தில்.
முன்பை விட இப்பொழுது இன்னும் உடலை இரும்பாய் வைத்திருந்தான், “உன் மேல ஏதோ ஒரு அட்ராக்ஷன்…” இதை தானே வேண்டாம் என்று பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டாள்.
“வேணாம்…” அவனை முழுதாய் முடிக்க விடவில்லை, “நான் போறேன்” கூட்டம் அலைமோதியது.
இதில் எவரேனும் பார்த்து பெற்றோரிடம் கூறிவிடுவார்களோ என்ற பயத்தை தாண்டி கல்லூரி படிக்கும் பொழுது இருந்த ஒரு ஈர்ப்பு இப்பொழுது சுத்தமாய் அவனிடம் இல்லை. கூட்டத்திற்குள் சென்று மறையவிருந்தவளை மீணடும் கை பிடித்து அவன் இழுத்து,
“ப்ளீஸ் வைஷ்ணவி, உனக்காக தான் இவ்ளோ தூரம் நான் வந்ததே…” மன்றாண்டி நின்றவனிடம் பாவம் வந்தாலும் ஆசை தோன்றவில்லை.
“எனக்கு இண்டெர்ஸ்ட் இல்ல ப்ளீஸ்… கைய விடுங்க”
“அப்றம் ஏன் பஸ்ல அப்டி பாத்த?” ஏகமாய் பார்த்தது அவன் விழிகள்…
“பாத்தேன் தான் ஆனா அதுல எந்த பீலிங்ஸ்ஸும் இல்ல… கைய எடுங்க ப்ளீஸ்” விழிகளால் கெஞ்சினாள், ஆனாலும் விடாமல் வைஷ்ணவி கையை பற்றியபடியே இருந்தான்.
“வைஷ்ணவி…” அவன் கையை பிடித்து ஒரு கரம் விலக்கிவிட நன்றியுடன் அந்த முகத்தை பார்த்த வைஷ்ணவிக்கு நிம்மதியில் கண்ணாலே நன்றி தெரிவித்தாள்.
நின்றது கார்த்திக் தான், “ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவளை தொட்டு பேசுறது ரொம்ப தப்பு” பொறுமையாக பேசினான் கார்த்திக்.
“ப்ச்… அவளுக்கு என்ன புடிக்கும்… நீங்க யாருங்க…?” வைஷ்ணவி இருந்த காரணத்தால் அமைதியாக பேச முயன்றான் அவன்.
அவனுக்கு பதில் கூறாமல் வைஷ்ணவி பக்கம் திரும்பிய கார்த்திக், “புடிக்குமா இவன?” வேக வேகமாக இல்லை இல்லை என்று தலையை உருட்டினாள்.
“போதுமா?”
அவனுக்கு ஆச்சிரியம் தாங்கவில்லை, எப்படி பேருந்தில் பார்ப்பாள் ஆனால் இப்பொழுது இப்படி தலைகீழாக மாறிவிட்டாலே என்ற ஆதங்கம் வேறு.
“அப்ப என்ன நீ அப்டி பாத்தது எல்லாமே பொய். அப்டி தான?” சினம் தலை தூக்கியது.
“ஆமா… அது அது சும்மா பாத்தேன்… அந்த ஏஜ்ல ஏதோ தோணுச்சு ஆனா அதுக்கும் மீறி நீங்க சொல்ற அட்ராக்ஷன் அப்பவும் எதுவும் இல்ல இப்பவும் எதுவுமே இல்ல” தீர்க்கமாய் வைஷ்ணவி கூறிய வார்த்தைகளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மீணடும் அவள் கை பிடித்து, “பொய் சொல்ற வைஷ்ணவி நீ…” என்றான்.
அவன் பிடி வலியை கொடுக்க கெஞ்சலாக கார்த்திக்கை தான் பார்த்தாள். அவனது கையை பற்றி கார்த்திக் அழுத்தியதில் வலி பெறுக வைஷ்ணவியின் கையை விட்டவன் கார்த்திக்கை பார்க்க அவன் கண்கள் சிவந்திருந்தது, “படிச்சிருக்கல? அறிவில்ல… இப்படியா ஒரு பொண்ணோட கைய பப்ளிக் ப்லேஸ்ல வம்படியா புடிப்ப? இதுல லா படிச்சு கிழிச்சிருக்க” பிடித்திருந்த கையை அப்படியே முறுக்கி அவன் முகுதுபுரம் கொண்டு செல்ல இன்னும் வலி அதிகமானது அவனுக்கு.
“என்ன இன்னும் பேசணுமா? இல்ல போறியா?” வலிக்காமல் கார்த்திக்கின் கையில் அடிகள் கொடுத்து, “போறேன் போறேன்…” சரணடைந்தான் குரல் கமர.
“இன்னொரு தடவ இந்த பக்கம் உன்ன பாத்தேன்… தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன்” கார்த்திக் கையை விட்டதும் இருந்த தடயம் தெரியாமல் ஓடிவிட்டான்.
அவன் ஓடியதும் தான் வைஷ்ணவிக்கு மூச்சே வந்தது. நன்றியுடன் திரும்பி கார்த்திக்கைப் பார்க்க அவன் அவ்விடத்தை விட்டு சில தூரம் சென்றிருந்தான்.
‘இவன் ஒருத்தன் அய்யனார் மாதிரி முறுக்கிக்கிட்டு’ அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க தானும் அவன் சென்ற திசையில் ஓடத் தான் வேண்டி இருந்தது.
“ஏங்க நில்லுங்க…” கூட்டத்தில் ஓடுவது சிரமமாய் இருந்தது, அதிலும் அவன் வேகத்திற்கு மிகவும் கடினம். கூட்டத்தை விட்டு வைஷ்ணவி வெளியில் வரும் பொழுது தான் தெரிந்தது அவன் இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதை.
“யோவ் கடலைமிட்டாய்…” பெண்ணவள் அழைக்க நின்றான் அவன் தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி.
நடக்க முடியாமல் மூச்சு வாங்க பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே வந்தவள் அவன் நின்றதும் மூச்சு வாங்க நின்றவள், “என்ன கூப்டுட்டே இருக்கேன் கண்டுக்காம இருந்தா என்ன அர்த்தம்? ம்ம்ம்?”
“உங்ககிட்ட பேச புடிக்கலைனு அர்த்தம்” மேலும் நடக்கத் துவங்கினான்.
“ஏன் புடிக்கலையாம்?” பின்தொடர்ந்தாள் பெண்.
“உச்…” பதில் வரவில்லை.
கார்த்திக் தன்னுடைய வேகத்தைக் குறைந்திருக்க, இப்பொழுது சிறிது ஓட்டம் எடுத்தவள் அவனுக்கு அருகில் நடந்து வந்தாள்.
“சரி பதில் சொல்ல வேணாம். நானும் உங்ககிட்ட பதிலை எதிர் பார்த்து வந்து நிக்கல…” கையில் வைத்திருந்த களிம்பை அவன் முன் நீட்டினாள்.
என்ன என்று கார்த்திக் பார்க்க, “மருந்து போட்டீங்களா காயத்துக்கு?” பதில் வரவில்லை வேகத்தைக் கூட்டினான். நல்ல வேளை மொத்த மக்கள் தொகையும் கோவிலில் இருக்க, இங்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே கண்ணில் பட்டது. அதுவும் இவர்கள் வசிக்கும் பகுதி ஊருக்குச் சற்று வெளியில் இருக்க, வீடுகளும் பெரிதாக இல்லை.
“அப்ப போடல?”
விடமாட்டாள் என்று தெரிந்து, “போடணும்” என்றான்.
“தீ காயத்துக்கு மருந்து இருக்கா?”
“வாங்கிக்கிறேன்” ஒரு வார்த்தை பதில் தான்.
இன்முகமாய் மீண்டும் அந்த களிம்பை அவன் முன் நீட்டி, “நான் வாங்கிட்டேன் உங்களுக்காக தான்” அவன் வாங்கவில்லை மேலும் நடக்க அவன் முன்னாள் சென்றவள் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே பின் நோக்கி நடக்கத் துவங்கினாள்.
“வாங்கிக்கோங்க கார்த்திக்” மன்றாடினாள் பாவை.
“வேணாம் நான் வாங்கிக்கிறேன்” தார் சாலை அல்ல அது கரடு முரடான மண் பாதை தான், “நேரா திரும்பி நடங்க” ஊசி ஊசியாய் நின்றது கற்கள்.
“கோவம் தான உங்களுக்கு… சாரி” ஷெர்லின் அருகில் இருந்தால் நெஞ்சில் கை வைத்து கீழே விழுந்திருப்பாள். எளிதில் மன்னிப்பும், நன்றியும் கூறாதவள் தானே முன் வந்து கூறியிருக்கிறாள் அவனிடம்.
“வேணாம் நீங்க கிளம்புங்க” அவன் மேல் பட்டாசு பட்டது கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை ஆனால் மற்றவர்களிடம் ஏதேதோ தன்னை பற்றிப் பேசியது, அதுவும் திருடன் பட்டம். ஆத்திரம் தாங்கவில்லை அவனுக்கு.
“சாரி கார்த்திக்… பட்டாசு பட்டது கம்ப்ளீட்டா அன்எக்ஸ்பக்டட் மம்மி ப்ராமிஸ் தாவணி தட்டி தான் உங்க வீட்டுக்கு வந்துச்சு…” கண்களைச் சுருக்கி தலையில் கை வைத்துக் கெஞ்சினாள்.
“திருடன் பட்டம்?” அமைதியாக இருந்தாலும் அந்த குரலில் ஒரு இறுக்கம். அவள் கால்கள் அப்படியே நிற்க, அவளைப் பார்வையால் சுட்டு அவளைக் கடந்து முன்னேறினான்.
“அது தெரியாம ஏதோ லூசு மாதிரி உளறிட்டேன்…”
“தெரியாம பேசுற வார்த்தை இல்ல ஒருத்தன் மேல திருடன் பட்டம் கட்டுறது… வீட்டுல பொண்ணு பாக்குறாங்க… நாளைக்கே பொண்ணு வீட்டுக்காரங்க விசாரிக்கிறப்ப இது தான அவங்க காதுல விழும்”
“அட அப்ப பொண்ணு வீட்டுக்காரங்க தான் பிரச்சனையா… சிம்பிள் நான் பாத்துகு…”
கார்த்திக் முறைக்க பேசியதை தொடரவில்லை, “சாரி…”
மௌனம்.
“சரி சாரி எல்லாம் நீங்க அக்சப்ட் பண்ணிக்க வேணாம். ப்ளீஸ் இந்த மருந்தை மட்டும் வாங்கிக்கோங்க… நேரம் ஆக ஆக எரிச்சல் அதிகமாகிட்டே இருக்கும்… காயமும் போகாது”
காயமும் அடிக்கடி எரிய இதை வாங்க இன்னொரு முறை இந்த கூட்ட நெரிசலை வேறு தாண்டியாக வேண்டுமே என்று வாங்கிக்கொண்டான். அவன் வாங்கிக்கொண்டதும் வைஷ்ணவிக்குக் கால்கள் தரையில் நிற்கவில்லை.
“ஐ வாங்கிட்டீங்க… சந்தோசம்… அப்டியே என் கண் முன்னாடியே ஆயின்மென்ட் போட்டுக்கோங்க பாப்போம்”
‘லூசா நீ’ அவன் பார்வையில் விசித்திர பிராணியாய் தெரிந்தாள்.
“என்ன பாக்குறீங்க போடுங்க… நீங்க வீட்டுக்கு போய் மறந்துட்டீங்கனா என்ன பண்றது?”
“மண்டைல மூளை இருக்கா இல்ல களிமண் இருக்கா?” பொறுமை காற்றில் பறந்து குரல் உணர்ந்தது, “நடு ரோடுல நின்னு எப்படி அப்ளை பண்ண முடியும்? நான் வீட்டுக்கு போய் பண்ணிக்குறேன்”
மல்ங்க மல்ங்க விழித்தவள் கையை உயர்த்தி சரணடைய அடுத்த வார்த்தை, “தேங்க்ஸ்” வந்தது.
“சரி அக்ஸப்டட்” இதற்கும் ஒரு கதையைக் கொண்டு வருவாள் என்று ஒத்துக்கொண்டான்.
“எதுக்குன்னு நீங்க கேக்கவே இல்ல” அவள் பின்தொடர்ந்துகொண்டே வர எவரேனும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் உருவாக துவங்கியது, அதில் கோவமும் வர அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“தெரிஞ்சு நான் என்னங்க பண்ண போறேன்? நீங்க டெய்லி ஒருத்தன சைட் அடிங்க அடுத்த நாள் அவன் வந்து கைய புடிச்சு இழுக்கட்டும், புடிச்சா பழகுங்க இல்லனா என்ன மாதிரி இன்னொருத்தன் வந்து சண்டை போடுவான். அதுக்குன்னு ஒவ்வொருத்தருக்கும் நன்றி-னு இப்டி ஆயின்மென்ட் வாங்கி தந்துட்டே கூட இருங்க. ஆனா என்ன விட்டுடுங்க”
இவ்வளவு கோவமாய் கார்த்திக் பேசியதே இல்லை. சட்டெனக் கலங்கிய வைஷ்ணவியின் கண்ணீர் கூட அவனைப் பாதிக்கவில்லை, “ட்ராமா” எரிச்சலோடு முணுமுணுத்து வீட்டை நோக்கிச் சென்றவனை அதற்குமேல் தொடராமல் சமைந்து நின்றுவிட்டாள் வைஷ்ணவி.
Hello makkale epdi iruku update?