“அவதான் புரியாம பேசுனான்னா நீயும் அவளுக்கு சேர்த்து ஒத்து ஊதுற? உனக்கு தெரியாதது இல்லையேமா… அவளுக்கு சொல்லி புரிய வைக்கலாம்ல. என்னை வில்லன் மாதிரி பாக்குறா அவ… முகம் கொடுத்து ஒழுங்கா பேசக்கூட மாட்டேங்குறா.” என்று மைனாவிடம் குறைப்படித்தான் யாழன். அன்று நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி வேலை முடித்து வந்ததும் தனிமை கிடைத்த வேளையில் யாழன் மீண்டும் துவங்கினான்.
“என்ன புரியாம பேசுறா? வீடு வாங்கணும்னு ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லையே? நீ வாங்கணும்னு ஆசைப்பட்டா இப்படியான கேள்விகள் வருமா?” என்று மைனா வார்த்தைகளால் கொட்டு வைக்க, யாழனுக்கு பேச்சு செல்லும் திசை மெல்ல விளங்கியது.
“இது நான் சம்மந்தப்பட்டது மட்டும் இல்லையேம்மா… இன்னும் ரெண்டு குடும்பம் சம்மந்தப்பட்டது. நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட கோச்சுக்குறதுனால எதுவும் மாறப்போறது இல்லை.” என்று கைவிரித்தான் யாழன்.
அவன் கைவிரித்ததை விட தன் வளர்ப்பு செழிப்பாய் தலைதூக்கியிருக்கிறதா என்ற சந்தேகம் மேலும் கேள்விகளை எழுப்பத் தூண்டியது.
“நீ என்ன நினைக்குற அதை சொல்லு?”
“என்னையும் யாழியையும் விடு. நாளைக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போற பொண்ணு இதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க வீட்டு லோன் அடிச்சா நீ என்ன சொல்லுவ? அப்பா என்ன நினைப்பாரு? இதுக்கான பதிலை சொல்லிட்டு நீ யாழிக்கு சப்போர்ட் பண்ணு.” பதில் சொல்லாது இலாவகமாய் கேள்விக்கணைகளை அன்னை மீது திருப்பிவிட்டான் மகன்.
மகனின் அதிரடியில் கப்சிப்பென்று ஆன மைனா சுயஅலசலில் ஈடுபட,
“பூமர் மாதிரி பேசாத யாழன்.” என்று வந்து நின்றாள் தங்கை.
இடவலமாய் தலைசிலுப்பிய யாழன் அம்மா மகளை பார்த்து நெற்றியைத் தேய்க்க, யாழினி அவர்களின் உரையாடலில் தன்னையும் இணைத்துக்கொண்டாள்.
“குடும்ப பொறுப்பை சுமக்குற ஒரு பொண்ணோட எல்லைக்கோடு குடும்பத்துல இருக்குறவங்க தேவைகளை பார்த்து பூர்த்தி செய்யுறதோட முடிஞ்சுடுதுன்னு இன்னும் எத்தனை வருஷத்துக்கு சொல்லிட்டு இருப்பீங்க? ஏன் நாங்க எல்லாம் சுயமா வீடு வாங்கணும் கார் வாங்கணும்னு ஆசைப்படக்கூடாதா? குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கிறது மட்டும்தான் எங்களோட வேலையா? இதைத்தான் நீயும் நம்புறீயா?”
தங்கை தேவையின்றி தன் மீது பாய்வதை உணர்ந்த யாழன் இதற்கு மேல் பட்டு திருந்தட்டும் என்ற முடிவிற்கே வந்துவிட்டிருந்தான், “நீ வீடு வாங்கு கார் வாங்கு இன்னும் என்னலாம் வேணுமோ எல்லாம் வாங்குமா. நான் எதுவும் கேக்க மாட்டேன். என்ன சொன்னாலும் உனக்கு எதுவும் புரியாது.” என்று கோபித்து அங்கிருந்து கிளம்பினான்.
செல்லும் அவனையே முறைத்தவள் மைனா புறம் திரும்பி, “உன்னையே கன்பியூஸ் பண்ணிவிடுறான் அம்மா. நீ அவன் பேச்சையெல்லாம் கேக்காத.” என்று கலைக்க,
“அவன் சரியாத்தான் கேக்குறான் யாழிமா. பல வருஷமா ஊறி போயிருக்கிற ஒரு விஷயத்தை மாத்தணும்னா முதல்ல நாம மாறனும். நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரப்போற பொண்ணையும் உன்னை போலவே நினைக்கனும் யாழிமா. நான் அப்படி இருப்பேனா?” என்ற சந்தேகமும் மைனாவிடம்.
“வீடு வாங்குறதுல ஆரம்பிச்சு எங்க வந்து நிக்குது பாரு. உன் பையனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லு…” என்று தலையைத் தேய்த்தாள் யாழினி.
“ம்ச்… அதெல்லாம் அவன் சரியா இருப்பான். அன்னைக்கு சொன்னியே நீ லோன் எடுக்குறது ஈஸினு? அது எப்படி?” மகன் சொல்ல வருவதும் சரி என்பது விளங்க, அதை மகள் உணரும் தருவாயில் இல்லை என்பது புரிந்தே அடுத்த பேச்சை துவங்கினார் மைனா. அவளும் யாழனை வறுத்தெடுக்காமல்,
“வேலைக்கு போற பொண்ணுங்களுக்கு வட்டி கம்மி அம்மா. ரொம்ப கம்மினு சொல்ல முடியாது. ஒரு சதவிகிதம் இல்லைனா ஒரு கால் குறைய வாய்ப்பு இருக்கு. போய் விசாரிச்சா விவரம் தெரியும்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
மைனா எழுந்து சென்று கதவை திறக்க அலுவலகம் முடித்து வந்திருந்தார் முத்து.
“ரெண்டு பேரும் வந்துட்டாங்களா?” என்ற கேள்வியுடன் அவர் உள்ளே நுழைய,
“வந்துட்டாங்க. காபி எடுத்துட்டு வரவா?” என்று கேட்டவண்ணமே மைனாவும் முத்துவை பின்தொடர்ந்தார்.
“வேண்டாம்.” என்று மனைவியிடம் சொன்னவர் பையை டேபிளில் வைத்துவிட்டு யாழினி அருகில் சென்று அமர்ந்தார்.
“யாழிமா அப்பாவுக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாடா… லேசா தலைவலிக்குற மாதிரி இருக்கு.” என்று வேண்ட, மைனாவுக்கு குழப்பம் மூண்டது. அவர் காபி கலக்கி எடுத்து வருகிறேன் என்ற போது வேண்டாம் என்றவர் இப்போது மகளிடம் வேண்டும் காரணம் என்னவோ? என்று பார்க்க, யாழினியும் தந்தையை விந்தையாய் பார்த்தாள், “நானா?”
வேலை வாங்கியதே இல்லை என்றெல்லாம் சொல்லிட முடியாது ஆனால் அதெல்லாம் சிறு சிறு வேலைகளே. பேனா எடுத்துக்கொடுப்பது, கதவை திறந்துவிடுவது, அம்மா கட்டிவைத்திருக்கும் உணவு டப்பாக்களை பையில் அடுக்கி அதை எடுத்துக்கொடுப்பது போன்ற வேலைகள்தான் அவள் இதுவரை செய்தது.
“நீதான்டா போட்டு எடுத்துட்டு வா…” என்று முத்து மகளை வற்புறுத்த என்ன புதுசா என்ற முணுமுணுப்புடன் அடுப்பறை சென்றாள்.
முத்து குரலை தாழ்த்தி, “கொஞ்ச கொஞ்சமா யாழிமாவுக்கு எல்லாம் கத்துக்கொடு. நேரம் வந்துடுச்சு. நான் சொல்லிடுறேன்.” என்று குறிப்பு வைத்து பேச, மைனாவுக்கு எல்லாம் புரிந்தது.
“என்ன திடீர்னு? யாழியை கேக்காம எந்த முடிவும் எடுக்காதீங்க.” என்று பதறினார் அன்னை.
“அவளை எதுக்கு கேக்கணும்? யாழிமாவுக்கு எப்போ எது நல்லதுன்னு நாமதான் பாத்து செய்யணும்.” என்ற பிற்பாதியை மட்டும் காதில் வாங்கிய யாழினி காபியுடன் கேள்வியையும் தந்தையிடம் முன்வைத்தாள், “என்ன நல்லது அப்பா?”
“நடக்கும் போது புரியும்டா.” என்ற தந்தையின் பதிலில் திருப்தி ஏற்படுவதற்கு பதில் சுணக்கமே வந்தது.
“என்ன பிளான் அப்பா?” என்று மீண்டும் கேட்டுப் பார்த்தாள். பதில் வரவில்லை. பார்வை தன்னால் கேள்வியாய் தன் அன்னா புறம் திரும்ப, அவர் இவளை பார்க்கவே இல்லை ஏதோ யோசனையில் இருந்தார்.
இருவர் மீதும் விழியை மாற்றி மாற்றி பதித்து மீட்டவள் போனை எடுத்துக்கொண்டு அண்ணனைத் தேடினாள். அவனோ எப்போதோ வெளியே கிளம்பிச் சென்றிருந்தான்.
‘வீட்டுல எனக்கு தெரியாம பிளான் ஏதாவது பண்றீங்களாடா?’ என்று யாழனுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அறைக்குச் சென்றதும் சுலோவின் குரல் நாராசமாய் விழுந்தது.
“உன் அப்பனை உரிச்சு வச்ச மாதிரி வந்திருக்கான் இந்த மணி பைய. மசக்கையா இருக்குற தங்கச்சி சீராட வீட்டுக்கு வந்திருக்காளேன்னு பொறுப்பும் பாசமும் இருக்கா? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்கதான் துப்பில்லைனு பார்த்தா காசு கொடுத்து வாங்கிட்டு வரச்சொன்னதை கூட ஒழுங்கா வாங்கிட்டு வரமாட்டேங்குறான். இவனால எங்க போனாலும் தலை குனிஞ்சு தான் நிக்குற மாதிரி இருக்கு.”
“சின்ன அண்ணன் வேணும்னு பண்ணிருக்காதுமா. ஏதோ தவறுதலா நடந்திருக்கும். அவரு அதெல்லாம் ஒன்னும் நினைச்சிக்க மாட்டாரு.” என்ற மெல்லிய குரலும் புதிதாய் கேட்டது யாழினிக்கு.
“நம்ம வீட்டு மாப்பிள்ளை நல்லவரா இருக்கப்போயி இவன் வாங்கிட்டு வந்த வீணாப்போன வடை சமோசாவை சாப்பிட்டுட்டு ஒன்னும் சொல்லாம பெருந்தன்மையா போயிட்டாரு.”
“பெருசுபடுத்தாத விடு.” என்ற அந்த மெல்லிய குரல் அதோடு அமைதியாகிட அதன்பின் சுலோ குரலும் சற்று தணிந்து விழுந்தது. மெல்ல மெல்ல அதுவும் மறைந்தது.
‘வீணா போன வடை சமோசாவுக்கு எல்லாம் இந்த அம்மா இந்த பேச்சு பேசுது? அவ்வளவு அக்கறை இருந்தா வீட்டுல செஞ்சு கொடுக்க வேண்டியதுதானே அவங்க மாப்பிள்ளைக்கு? எதுக்கு இந்த MKவை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லனும், அப்புறம் அவனை திட்டனும்? கடையில சாப்பிட்டு பார்த்து வாங்கிட்டு வந்திருந்தாலும் இந்த அம்மா அதுக்கும் கணக்கு பார்த்தாலும் பார்க்கும். பாவம் MK!’ என்று அவன் நிலைமையை எண்ணி வாடியது மனம். ஆனால் அக்கணம் முதல் அவள் நிலைமையும் வாடப்போவதை உணர்த்தும் வகையில் மைனாவின் அழைப்பு கேட்டது.
“யாழி! யாழி!”
“என்னமா?” என்று மெத்தையில் இருந்து எழாமல் குரல் கொடுத்தாள்.
“அம்மாவுக்கு ஹெல்ப் வேணுமாம் போய் என்னனு பாரு.” என்று விவரம் சொல்லாமல் அறைக்குள் வந்த முத்து மகளை அனுப்பி வைத்தார்.
சிந்தனையுடன் அன்னையை தேடி அடுப்பறைக்குச் செல்ல, கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி சப்பாத்திக் கட்டையை கையில் திணித்தார் மைனா.
“என்னமா?” என்று சலித்த யாழி கையில் இருப்பதையும் மைனாவையும் மாறி மாறி பார்க்க,
“இன்னைக்கு நீ போடுற சப்பாத்தியை தான் உன் அப்பா சாப்பிடுவாராம்.” என்றுவிட யாழிக்கு சலிப்பும் நெருடலும் ஒருசேர வந்தது.
“இன்னைக்கு என்ன ஆச்சு அவருக்கு? என் கையால காபி குடிக்கணும்னு சொல்றாரு இப்போ சப்பாத்தி போட சொல்றாரு? என்னதான்மா நடக்குது இங்க? திடீர்னு என்ன புதுசா எல்லாம்?”
“இனி எல்லாம் இப்படித்தான் இருக்கும். உனக்கு எது முக்கியமோ எது உனக்கு வேணுமோ அதுல பிடிவாதமா இருக்க கத்துக்கோ.” என்று மட்டுமே மைனாவால் அப்போது சொல்ல முடிந்தது.
“ம்ப்ச்! என்னமா சொல்ற நீ?” என்று யாழியோ கடுப்பானாள்.
மைனா பதில் பேசாமல் வெளியே எட்டிப்பார்த்து மகள் வாயை அடைத்தார்.
“சொன்னதை செய் அப்புறம் சொல்றேன் எல்லாத்தையும்.” என்று அடக்கிவிட, என்றுமே செய்திராத வேலைகளுக்கு பிள்ளையார் சுழியிட்டு துவங்கும் நாளாகியது அந்நாள்.
வட்டத்தை தவிர மற்ற அனைத்து வடிவத்திலும், ஓரிடத்தில் மெலிதாய் மற்றொரு இடத்தில் மொத்தமாய் என்று சீரற்று இருந்த சப்பாத்தியை முத்து பார்த்துவிட்டு, “முதல் தடவை இப்படித்தான் வரும். போகப் போக நல்லா வந்துரும் யாழிமா.” என்று மகளை ஊக்குவிக்கும் நோக்கில் சொல்ல, அவள் புரியாத பார்வை பார்த்து வைத்தாள்.
யாழன் அனைத்தையும் கவனித்து அமைதியாய் இருந்தான். யாழியின் குறுஞ்செய்திக்கு கூட பதிலேதும் அனுப்பவில்லை. அவள் இவனை முறைத்துச் சென்றது மாறி இப்போது இவன் அவளை கண்டுகொள்ளாமல் சென்றான்.
இப்படியே தோசை, பொங்கல், உப்புமா என இரண்டொரு வாரம் அடுப்படியில் சென்றது யாழிக்கு. வேலை முடித்து வந்ததும் முன்பு அனுபவித்த ஓய்வும் புத்துணர்வும் தற்போது முற்றிலும் மாறியது. முத்து தினம் ஏதாவது காரணம் சொல்லி இவளை வேலை வாங்க ஆரம்பித்தார். காரணத்தை பிறகு சொல்கிறேன் என்ற மைனாவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இவள் அழுத்திக்கேட்டாலும் சொல்கிறேன் சொல்கிறேன் என்றே காலம் தள்ள, இப்போது அவள் அன்னா மீதும் கடுப்பே மிஞ்சியது.
திடுமென புரட்டிபோடப்பட்ட தன் வழக்கங்களை எண்ணி மனச்சோர்வு ஏற்பட வீட்டிற்கு வரும் நேரத்தை தள்ளிப்போட்டாள். அலுவலகம் முடிந்தால் வீடு என்று இருந்தவள் தற்போதெல்லாம் நண்பர்களுடன் பொறுமையாய் பேசிவிட்டு அருகில் இருக்கும் கஃபேக்களில் ஏதாவது நொறுவலை உள்ளே தள்ளிவிட்டு வந்தாள். வீட்டிற்கு வந்தால் முத்து இவளிடம் ஏதாவது வேலை சொல்ல தயாராக இருப்பார். பாவமாய் இவள் அன்னை முகத்தை பார்த்தாலும் மைனா அடுப்பறை உள்ளே மட்டும் மகளின் சுமைகளை குறைக்க முனைந்தார்.
“என்ன நடக்குதுன்னு உன்னால சொல்ல முடியுமா முடியாதா? நீ சொல்லலைனா நேரா அப்பாகிட்டேயே போய் கேட்டுருவேன்.” என்று தோசை ஊற்றிக்கொண்டே மைனாவை மிரட்டினாள் யாழி.
“உனக்கா புரியும்னு பாத்தேன். இன்னுமா உனக்கு புரியல…” என்று மைனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே முத்துவின் குரல் கேட்டது, “யாழிமா தோசை.”
மைனா வேகமாய் யாழி ஊத்தி வைத்திருந்த தோசையை தட்டில் போட்டு மகள் கையில் திணித்தார், “போய் கொடு.”
அன்னை சொன்னதை மனதில் உருப்போட்டு யோசித்தபடியே தோசையை தந்தைக்கு பரிமாறினாள். நிகழ்ந்தேறும் மாற்றங்களை யோசித்து யோசித்து நொந்திருந்தவள் தாளமுடியாமல், “ஆபீஸ் முடிச்சிட்டு வந்து டிபன் பண்றது அலுப்பா இருக்குபா… நீ முன்னாடியெல்லாம் இப்படி இல்லையே.” என்று தந்தையிடமே கேட்டுவிட, முத்துவின் முகம் மாறியது.
“மைனா இதெல்லாம் எடுத்து சொல்லமாட்டியா? எப்படி புரியாம முழிக்குறா பாரு.” என்று மனைவியை கடிந்தார்.
“நீங்க சொல்வீங்கன்னு நினைச்சேன்.” என்ற மைனாவின் குரல் உள்செல்ல,
“எல்லாமே நான் தான் சொல்லனுமா? ஏன் நீ சொல்ல மாட்டியா? இதெல்லாம் நீதான் சொல்லணும்.” என்று மனைவியை முறைத்தவர் மகள் புறம் திரும்பி, “அம்மாவும் நானும் ஒரு முடிவு எடுத்திருக்கோம்டா. அம்மாவே அதைப்பத்தி சொல்லுவா. நீ மனசுல எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காத.” என்றுவிட்டு தோசையை பிய்க்க அது ஆறி இருந்தது. அதை ஒதுக்கி வைத்தவர்,
“சூடா தோசை எடுத்துட்டுவா யாழிமா.” என்க, அயற்சியாய் எழுந்து, “அம்மா ஊத்தி தருவாங்க. நான் ரூமுக்கு போறேன், எனக்கு வேர்க்குது.” என்று நகர்ந்துவிட்டாள் முத்து அழைப்பதையும் காதில் வாங்காமல்.
அனைத்தையும் கண்டும் காணாதது போல் கவனித்துக்கொண்டிருந்த மகனை மைனா பாவமாய் பார்க்க, மறுப்பாய் தலையசைத்தவன் தங்கையை பின்தொடர்ந்து அறைக்குள் சென்றான்.
“சாப்பிட்டு தூங்கு.” மெத்தையில் படுத்திருந்த யாழியை யாழன் உசுப்ப, அவன் விழி நோக்கி அனல்களை வீசினாள்.
“இப்போ எதுக்கு என்னை முறைக்குற? எனக்கும் இங்க நடக்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே அப்பா முடிவுதான்.” என்றவன் ஒரு நொடி நிறுத்தி, “எப்போதும் போல! இப்போவாவது கண்ணை துறந்து பாரு… அடுத்த வாரம் உன்னை பார்க்க வரப்போற வரனை உனக்கு பிடிச்சே ஆகணும்னு அப்பா பிடிவாதமா இருக்காங்க. இனி என்னனு நீதான் பேசணும். நான் பேசிட்டேன் அவரு கேக்கல.” என்று தான் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டு நகர்ந்துவிட, தன் செவியில் விழுந்த செய்தியை கிரகிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.
இதுவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போனாலும் தன்னை மீறி தன்னைக் கேட்காமல் என்ன நடந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில் இருந்தாள். அந்த அசட்டு நம்பிக்கையும் அவள் வீட்டினர் கொடுத்ததுதானே! திருமணம் என்ற ஒரு பேச்சு இதுவரை வீட்டில் எழுந்ததில்லை. தோழிகள் பலருக்கு வரிசையாய் மணம் முடிந்த போது கூட ஒருவரும் அவள் திருமணம் பற்றி வாய் திறந்தது இல்லை. தன் விருப்பமும் தனக்கான துணை எப்போது தேவைப்படுகிறதோ அப்போது தான் அனைத்தும் நடக்கும். அதற்கான சுதந்திரம் தனக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவே நினைத்தாள். ஆனால் இப்போது நடப்பதை பார்த்தால் சகலமும் மாறியதாய் தோன்றியது.
அதுவும், ‘பிடிச்சே ஆகணுமாமே?’ அதுக்கு என்ன அர்த்தம்? என்று யோசித்து யோசித்து உறங்காமல் இரவைக் கழித்தாள். மைனா பேச வந்தபோதும் பொருட்படுத்தாமல் அவரை விலக்கி, விளக்குகள் அணைத்த பின்னும் விழித்து விட்டத்தை வெறித்தாள்.
அவளின் வெறித்த பார்வை மறுநாளே விட்டத்தை விடுத்து வீட்டில் இருப்பவர்கள் மீதும் படிய, அவளை நெருங்கும் அன்னையையும், அனைத்தையும் விலக்கி வைத்தாள்.
தனிமையில் உண்ண விரும்பாதவள் காலை உணவையே தவிர்த்து வீட்டிலிருந்து கிளம்பினாள்.
“சாப்புட்டு போ யாழிமா… நான் சொல்றதை கொஞ்சம் கேளு.” என்று மைனா அவள் பின்னே ஓடி வந்ததையும் அலட்சியப்படுத்தி வண்டியை கிளம்பிக்கொண்டு கிளம்பினாள்.
இதுவரை வளர்ந்த சூழல் மலர் படுக்கை இல்லையென்றாலும் அது முள்ளாய் குத்தியதும் இல்லை. ஆனால் அனைத்தும் ஒரே இரவில் மாறியது போன்ற பிம்பம் தோன்ற, அதை ஏற்க முரண்டியது மனம்.
அன்று வேலை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்ப மனமின்றி தன் கேபினில் அமர்ந்து இருக்க, அவள் குழுவில் இருந்தவர்கள் அவளை கேள்வியாய் பார்த்ததோடு இல்லாமல் கேள்வியும் கேட்க அங்கிருக்க பிடிக்காமல் கிளம்பினாள். வீட்டிற்கும் செல்ல விருப்பமின்றி வீட்டை விட்டு சற்று தள்ளி இருந்த கஃபேவுக்கு சென்றாள்.
“மேடம் ஆர்டர்?” என்று அவள் முன் வந்து நின்றது சாட்சாத் மணியே!
“அட சூப்பர்! வேலை கிடைச்சிடுச்சா MK!” என்ற குதூகலிப்பு முன்வந்து அவளது இறுக்கங்கள் பின்சென்றது.
விழி மொழி ஆனந்தத்தில் மின்ன இதழ்களும் பரந்து விரிய, சிக்கென கண்சிமிட்டினான் மணிகண்டன்.
“ட்ரீட்டு எங்க?”
“சம்பளம் வாங்குனதும் கொடுத்துடலாம்! இப்போ ஆர்டர் சொன்னீங்கன்னா சீக்கிரம் எடுத்துட்டு வந்துருவேன்.” என்று போனை வைத்துக்கொண்டு அவன் அவசரப்படுத்த,
“சீக்கிரம் வந்திரக்கூடாதுன்னு தான் இங்க வந்தேன்.” என்று பின்னந்தலையை சொறிந்தாள் யாழினி.
“என்ன?” கேள்வியாய் மணி சற்று குனிய,
“இங்க எல்லாமே லேட்டா தான் வரும். சர்விங்க்கு ஒருத்தர் தான் இருப்பாரு கூட்டமாவும் இருக்கும். ஆனா இப்ப உன்னை வேலைக்கு எடுத்து அதுக்கும் ஆப்பு அடிச்சுட்டாங்க.” என்று யாழி இதழுக்குள் முணுமுணுத்தது அவன் செவியையும் தீண்ட,
துடுக்காய், “நான் வேணும்னா வேலையை விட்டுறவா?” என்றுவிட,
பதிலுக்கு அவள் முறைத்த முறைப்பில் விளையாட்டை விடுத்து வினையாற்றினான், “எனக்கு வேலையை விடுறது ஒன்னும் புதுசில்லை யாழினி.”