Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 8

எழுத்து பிழைகள் என்னையும் மீறி வந்திருக்கலாம் சிரமத்திற்கு மன்னிக்கவும்

##



Advertisement

அத்தியாயம் 8

Advertisement

கலையிடம்  சொல்லாமல் கொள்ளாமல் வந்தது காசிக்கு ஏதோ போலிருந்தது. மேகலைக்கு வலி வந்து விட்டதென்று தியாகு போன் செய்யவும் அந்த நிமிடம் மனைவியும், குழந்தையும் மட்டுமே கண் முன் நின்றனர். எதை பற்றியும் யோசிக்காமல் மருத்துவமனை வந்துவிட்டான்.

Advertisement

சொல்லப்போனால் மேகலையின் டெலிவரிக்கு இன்னும் எட்டு  நாட்களுக்கு மேலாக இருந்தது.

டெலிவரிக்கு நான்கு நாட்களுக்கு  முன்பே விடுமுறை எடுத்துவிட்டு ஊருக்கு வந்துவிடலாம்  என்று நினைத்தான். ஆனால் இன்றே வலி வந்து விட்டது என்று கூறவும்  என்னவோ ஏதோவென்று அடித்துப் பிடித்து  கோவையிலிருந்து கோபி வந்துவிட்டான். இங்கு வந்ததும் கலை வரவில்லையா? என்று  தியாகு கேட்கவும் தான்  அவனின் ஞாபகமே  வந்தது .

Advertisement

“நீங்க கால் பண்ணதும் அவனை மறந்துட்டேன் மாமா சாரி…” என்றான் சின்ன தயக்கத்தோடு.

“இதுல என்ன இருக்கு ப்பா…” என அவன் தோளில் தட்டிக் கொடுக்க சின்ன சிரிப்பை உதிர்த்தான் காசி.

அடுத்து அவரிடம் என்னப் பேசுவது என்றே தெரியவில்லை  அமைதியாக குனிந்துக் கொண்டான்.  தியாகுவும் அதற்கு மேல் பேசவில்லை அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார்.

இதுநாள் வரை தியாகுவிடம் காசி பேசியதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஏனோ அவரிடம் அதிகம் பேச வரவில்லை காசிக்கு. அதற்கு அவரின் மேல் இவன் வைத்திருந்த அபிப்பிராயம் மட்டுமே காரணம். அப்போது தான் நினைவு வந்தவனாய் சௌந்தர்யா எங்கே என்று தேடினான்.

நாற்காலியில் அமர்ந்திருந்த தியாகுவைப் பார்த்தவன் “மாமா அத்தை எங்க?…” என மருத்துவமனை காரிடரைக் கண்களால் அலசியப்படியே கேட்டான் காசி.

“இன்னைக்கு இம்போர்டன்ட் மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டிருந்தா ப்பா. மேகலையை நான் பாத்துக்கிறேன் நீ போன்னு சொல்லி அனுப்பி வைச்சேன். அதுக்குள்ள லேபர் பெயின் வந்துருச்சு. கால் பண்ணி சொல்லிட்டேன் டென் மினிட்ஸ்ல, வந்துடுவா…” என்றார் மெல்லிய சிரிப்போடு  அவரை விழி தெறிக்கப் பார்த்தவன் சரியெனத் தலைகாட்டியப்படி தியாகுவின் அருகில் அமர்ந்தான்.

மேகலைக்கு இன்னும் குழந்தைப் பிறக்கவில்லை அவளுக்கு லேசாக வலி எடுத்ததுமே மருத்துவமனை அழைத்து வந்து விட்டார் தியாகு.

லேபர் பெயின் என்று உறுதியானதும் காசிக்கு அழைத்து கூறிவிட்டார்.

நார்மல் டெலிவரியாக சில மணி நேரமாகும் அதுவரை இங்கேயே இருக்குமாறு   மருத்துவர் கூறிவிடவும் மகளை மருத்துவமனை வளாகத்தில் நடக்க வைப்பது  அவளுடன் சேர்ந்து சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வது என்று எல்லாமே தியாகு தான் செய்தார். காசி வந்த பின் தான்  மேகலைக்கு நன்றாகவே வலி  எடுக்க ஆரம்பித்தது. அவசரமாக மேகலையை அனுமதித்து விட்டு வெளியில் இருவரும் காத்திருந்தனர்.

மனைவியின் அழுகை காதில் கேட்டுக் கொண்டே இருந்தது காசிக்கு. கண்களை மூடித் திறந்துக் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவனிடம் “தொண்டை அடைக்கற ஃபீலா இருக்கும்ல. எழுந்து அவகிட்டேயே போன்னு ஒரு மனசுக் கத்திட்டே இருக்கும். ஆனா இன்னொரு மனசு அவளை நீ பார்க்கும் போது உடைஞ்சுப் போயிடுவ அங்க போகாதன்னும் கத்தும். எந்த மனசு சொல்றதைக் கேட்கறதுன்னு தெரியாம முழிப்போம். அவ கத்தற ஒவ்வொரு நிமிசமும் நமக்கு இங்க என்னவோ பண்ணும்…” நெஞ்சைத் தடவிக் கொண்டே கூறியவர் மேலும் தன்னையேப் பார்த்தபடி அமர்ந்திருந்தக் காசியிடம்

“இந்த பதட்டம், தடுமாற்றம் எல்லாமே அந்த பிஞ்சு விரலைப் பாக்குற வரைக்கும் தான் மாப்பிள்ளை. அதை பார்த்துட்டா போதும் இப்பவரைக்கும் அனுபவிச்ச உணர்வு எல்லாமே வெளிச்சத்தில தொலைஞ்சு போன இருட்டாகிடும்…” என்றார் ஆழ்ந்த குரலில்…

தியாகு பேசப் பேச அவரை விழி எடுக்காமல்  பார்த்தான் காசி.இவர் இப்படிக் கூடப் பேசுவாரா? என்று தான்  தோன்றியது அவனுக்கு. ‘அடேய்  நீ அவர் கிட்டப் பேசி இருந்தா தானே தெரியும்…’ எனக் காசியின் மனம் அவனை சாடியது அதற்கு பதில் சொல்லாமல் தியாகுவையே இமைக்காமல் பார்த்தான் காசி.

காசியின் பார்வையில் மெல்ல சிரித்தவர் “கலை பிறக்கும் போதும் சரி, மணி பிறக்கும் போதும் சரி  இப்படியான ஃபீலிங்கை அனுபவிச்சு இருக்கேன். இப்ப என் பேத்தி வரும் போதும் அதே  ஃபீலிங் தான் இதயம் படப்படன்னு அடிச்சுட்டே இருக்கு. நான் கையிலை எடுத்து வளர்ந்த அந்த பிஞ்சு முகம் இன்னைக்கு ஒரு குழந்தையைப் பெத்து எடுக்கப் போகுதுன்னு நினைக்கும் போது ஜிவ்வுன்னு இருக்கு. இதெல்லாம் ஒரு தனி சுகம் ப்பா இப்ப இந்த சமயம் புரியாது போகப் போக உங்களுக்குப் புரியும்…” என்றார் ஆழ்ந்து அனுபவித்து.

அவரின் மேல் அவன் வைத்திருந்த பிம்பம் வேறாக இருக்க இப்போது இவர் பேச்சு வேறாக இருந்தது.  அதற்குள் அடித்துப் பிடித்து சௌந்தர்யாவும் வந்திருந்தார்.

வியர்க்க விறுவிறுக்க வரும் மனைவியைக் கண்டவர் தற்போது வரை இருந்த முகம் மாறி மனைவியைக் கோபமாக ஏறிட்டார்.

“எதுக்கு இப்படி வர நீ… இந்த வயசுல இதெல்லாம் தேவையான்னு கேட்டா பெண்ணிமும், பெரியாரிசமும் பேச வேண்டியது.  நீ பதட்டப்பட்டு வருவன்னு தான் பொறுமையா வா நான் பாத்துக்கிறேன் சொன்னேன். அப்படி சொல்லியும் வேகமா வர இப்ப பாரு எப்படி மூச்சு வாங்குதுன்னு…” என பல்லைக் கடித்தபடி கூறியவர் மனைவியின் சோர்ந்த முகத்தைப் பார்த்து

“முதல்ல வந்து உட்காரு…” என எழுந்து மனைவியை நாற்காலியில் அமர வைத்தார்.

“முட்டியைப் பிடிச்சு நடக்கற வயசுல மூச்சு வாங்கற அளவுக்கு யார் வர சொன்னது. நான் தான் முன்னாடியே சொல்லிட்டன்ல இன்னும் நேரம் இருக்கு பொறுமையா வான்னு…” என்றார் மீண்டும்.

“ஹலோ மிஸ்டர் ராஜன் எனக்கு ஜஸ்ட் பிப்டி பிளஸ் தான். உங்களுக்கு பிப்டி ஃபைவ் பிளஸ் கொஞ்சம் யோசிச்சு பேசுங்க…” என சௌந்தர்யா முறைப்பாகக் கூறினார்

மனைவியின் பேச்சை ரசித்தபடியே வாட்டர் பாட்டிலை  நீட்டினார்.

“உனக்கு இதெல்லாம் தேவையா? இந்த வயசுல நீ வேலைக்கு போகணும்னு தலையெழுத்தா சொல்லு? நமக்கு பேத்தியே வந்துட்டா ஆனாலும் வேலைக்கு போவேன்னு சுத்திட்டு இருக்க…” என தன்மையாக சொல்லவும்

 “ஷ்.. இருபத்தி ஒன்பது வருசமா இதே டயலாக் கேட்டு கேட்டு என் காது போயிடுச்சு… பையன் பொறந்துட்டான் வேலைக்கு போகாத, பொண்ணு பொறந்துட்டா வேலைக்கு போகாத. பொண்ணு வயசுக்கு வந்துட்டா வேலைக்கு போகாத. பையன் வேலைக்கு வந்துட்டான் வேலைக்கு போகாத.  பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு வேலைக்கு போகாத. இப்ப பேத்தி வந்துட்டா வேலைக்கு போகாத… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதையே சொல்லுவீங்க. அதான்  நீயே பாத்துக்கோன்னு தனியா விட்டுட்டு போயிட்டீங்க தானே இன்னும் என்ன அக்கறை என் மேல…” என பல்லைக் கடித்துக்கொண்டு கூறினார்.

“தனியா போயிட்டேன் தான் அதுக்காக உங்களை விட்டுட்டு போனேன் அர்த்தமில்லை…என் பசங்களையும், உன்னையும் இப்ப வரைக்கும் நான் விடலை. அதே மாதிரி நான் தனியா போனால் தான் நீ வேலைக்கு போகலை சொல்லுவேன்னு நினைச்சேன். ஆனா மேடம் இப்ப வரைக்கும் என்னை தனியா தான் விட்டு வைச்சு இருக்கீங்க…”என மெல்லிய குரலில் ஆதங்கமாகக் கூறியவர் மீண்டும்

“அப்பறம் காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் உங்க டேபிளில பக்கத்து டேபிளிலில் தான் குப்பைக் கொட்டிட்டு இருக்கறன்னு ஞாபகம் வைச்சுக்கோங்க  பிரின்சிபால் மேடம். அண்ட் த்ரீ மந்த் தான் நான் அங்க இல்லை அதையும் மறந்திட வேண்டாம்…” என்றார் மூக்கு விடைக்க.

“ஹ்ம்ம் பொண்டாட்டிக்கு கிழே வேலை பாக்குறோம் தானே என்னை வேலைக்கு போக வேண்டான்னு அப்ப இருந்து இப்ப வரைக்கும் சொல்லிட்டு இருக்கீங்க…” விடாமல் பேசினார் சௌந்தர்யா.

“உன் மூஞ்சி…” என ஏதோ சொல்ல வந்தவர் காசி அங்கிருப்பதை உணர்ந்து “உன்கிட்ட பேசறதுக்கு பேசாமலயே இருக்கலாம்…” என்றபடி மனைவியின் அருகிலிருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்து அவரின் கால் முட்டியைப் பிடித்து விட்டார்.

அந்த  நிமிடம் என்ன உணர்ந்தான் என்றே தெரியவில்லை காசி. இத்தனை நாட்கள் தியாகராஜன் மீது வைத்திருந்த பிம்பம் முழுவதும் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதுநாள் வரையிலும் தியாகராஜன் என்பவர் ஓர் ஆணாதிக்கம் கொண்டவர் என்று நினைத்தான். சின்னஞ்சிறு பிள்ளைகளை விட்டுவிட்டு சென்று விட்டார் என்பதில் ஆரம்பித்து கலையின் திருமணம் வரையிலும் தியாகு என்பவர் மட்டுமே காரணம் என்று இதுநாள் வரையிலும் நினைத்தான். அது மட்டுமல்ல கலை இப்படி இருப்பதற்கு  காரணமும் அவனின் தந்தை  தான் என்று நினைத்தான்.

காசி இப்படி நினைக்க மற்றொரு காரணமும் உண்டு அது சௌந்தர்யாவின் பேச்சு தான். அவர் பேசியது மட்டுமல்ல ஒரு சில முறை தியாகராஜனின் கர்வ பேச்சையும் கேட்டிருக்கிறான். அதை வைத்து தான் தியாகராஜன் என்பவர் ஓர் ஆணாதிக்கவாதி என்று நினைத்தான்.

ஆனால் இப்போது நடந்துக் கொண்டிருப்பவைகளைப் பார்த்தால் எதையுமே நம்பவே முடியவில்லை காசியால். கல்லூரிக் காலங்களிலும் சரி திருமணமான இந்த ஒன்றரை வருடமும் சரி கலையோ இல்லை மேகலையோ தங்களின் அப்பா, அம்மா இப்படி தான் என்று கூறியதில்லை  அதேபோல் காசியும் கேட்டுக் கொள்ளவில்லை  அதற்கு அவன் மனம் ஒப்புக் கொள்ளவும் இல்லை. உண்மையை சொல்லபோனால் இருவரும் தனித்தனியே இருக்கிறார்கள் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பது வரை மட்டுமே அறிந்து வைத்திருந்தான். அவர்கள் பிரிந்து இருப்பதற்கான காரணத்தையும்  சௌந்தர்யா சில முறை கூறியிருந்ததால் மட்டுமே அறிவான். அப்போதும் கூட மனைவியிடம் மாமனார் பற்றி கேட்டுக் கொண்டதில்லை…

இத்தனை நாட்கள் ஒருவரின் பேச்சை வைத்தே அவர்கள் எப்படியானவர்கள்  என்று கணித்து விட முடியும் என்று நினைத்திருந்தவனுக்கு அந்த எண்ணமே தவறு என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் தியாகராஜன். சௌந்தர்யா மேகலையை பார்க்க அறைக்குள் சென்று விட அப்போதுதான் நினைவு வந்தவராய் கலைக்கு அழைத்தார் தியாகராஜன். அவனின் அலைபேசி அணைக்கபபட்டிருந்தது

“அவன் போன் ஸ்விட்ச் ஆப்- ன்னு வருது ப்பா…” என்ற தியாகுவின் குரலில் தன்னிலைக்கு வந்தவன்

“அவன் இப்ப மீட்டிங்ல இருப்பான் நினைக்கிறேன் மாமா. ஒரு அரைமணி நேரம் போனதும் மறுபடியும் கால் பண்ணுங்க…” என்றான். அதே போல் அரைமணி நேரம் கழித்து கால் செய்யவும் அப்போதும் கலையின் அலைபேசி அணைக்கப்பட்டு தான் இருந்தது. இதேபோல் இரண்டு, மூன்று முறை அவனுக்கு அழைத்து விட்டார். கிட்டதட்ட காசியின் மகள் பிறந்து ஒரு மணி நேரமான பின் தான் கலை தியாகுவிற்கு அழைத்தான். உடனே அவனிடம் விசயத்தைப் பகிர கலையும் இரண்டு மணி நேரத்தில் கோபி வந்திருந்தான்.

*********

கலை மருத்துவமனை வந்த பிறகு நேரம் இறக்கை இல்லாமல் பறந்தது. சொல்லப்போனால் அந்த பிஞ்சு முகத்தைப் பார்த்ததிலிருந்து ஆரி கூறியிருந்த மீட்டிங் உட்பட அனைத்துமே மறந்து தான் போனான்.

தியாகுவையும், சௌந்தர்யாவையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இரவு மருத்துவமனையிலயே தங்கி விட்டனர் காசியும், கலையும்.

விடியற் காலையில் குழந்தையின் அழுகையில் கண் விழித்தவன் மணியைப் பார்க்க அது ஆறு மணியைக் காட்டியது.

அப்போது தான் ஆரியின் குறுஞ்செய்தியை கவனித்தான். வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டவனுக்கு தூக்கம் தூரப் போயிருந்தது. ‘அடக்கடவுளே இதை எப்படி மறந்தேன் நான். நேத்து லீவுன்னு கூட சொல்லாம வந்துட்டேனே. ரெங்க நாயகி பேயாட்டம் ஆடுவாளே. இப்ப வரலன்னு சொன்னாக் கண்ட மேனிக்கு திட்டு விழுமே…” என நினைத்தபடியே அமர்ந்திருந்தவனை பார்த்த காசியோ “என்னாச்சு டா…” எனக் கேட்டான். அவனிடம் பதில் கூறாமல் அலைபேசியை காட்டினான்.

“மேடம் கிட்ட இன்ஃபார்ம் பண்ணலையா?…” என்று கேட்க ஆமென தலையாட்டினான்.

“ஒரு பிராப்ளமுமில்லை ரிசன் சொல்லி லீவ் சொல்லு. எதுவும் சொல்ல மாட்டாங்க…” என்றான் காசி.

“ஹ்ம்ம் சரி…” என்று தலையாட்டியவன் காசி கூறியது போல அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப டைப் செய்தான்.

டைப் செய்ய செய்யவே அணங்கியவளின் சிரிப்பில்லா முகம் கண்முன்னே மின்னி மறைந்தது… முதல் நாள் அவளின் முகத்திலிருந்த புன்னகைக் கூட நேற்று இல்லை என நினைத்தவன் டைப் செய்த குறுஞ்செய்தியை அப்படியே அழித்தான். முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் எழுந்து நிற்க காசி கேள்வியாய் நோக்கினான்.

“இல்லை நான் போனால் தான் சரியா இருக்கும்…நான் போயிட்டு அப்பாவையும் அம்மாவையும் அனுப்பி விடறேன்…” என்றவன் குழந்தையை ஒருமுறை பார்த்துவிட்டு இருவரிடமும் தலையாட்டியப்படி அங்கிருந்து நகர்ந்தான். அதற்கு பின் வேகம் வேகம் மட்டுமே அப்படி கிளம்பியும் கூட சரியான நேரத்திற்கு முன்னாலேயே செல்ல முடியவில்லை..

இங்கு ஆரியோ கலைக்கு பலமுறை அழைப்பெடுத்தும் அவன் ஏற்காது போனதில் கடுப்போடு அமர்ந்திருந்தாள். சரியாக ஒன்பது மணிக்கு மூன்று நிமிடமிருக்க வந்து சேர்ந்தான் ஏகலைவன்.

விரிந்த கூந்தலை ஒதுக்கி கொண்டே ஆபிஸ் ரூமில் தான் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள் ஆரி. கண்ணாடி தடுப்பு வழியே அவளை பார்த்தவன் உள்ளே செல்லாமல் நிமிடம் ஆழ்ந்து மூச்சை வெளியிட்டப்படி அந்த கண்ணாடி கதவை திறந்து கொண்டு அவளின் முன் நின்றான். கனல் பொழியும் மேகமாய் ஏறிட்டு பார்த்தாள் ஆரியா ரெங்கநாயகி…

‘ஆத்தி செத்தோம்…’என்று நினைத்தவன் அவளின் முறைப்பை கண்டும் காணாமல் மணியை பார்த்தப்படி “மேடம் ஒன்பது மணி ஆயிருச்சு… மீட்டிங்க்கு டைம் ஆச்சு..” என்று அழைத்தான்.

அவனை ஏறயிறங்க பார்த்தவள்

“இப்படியே வர போறீங்களா…” என்று கோபமாக கேட்டாள்.

“ஹ்ம்ம் ஆமாம் மேம் ஏன் இதுக்கு என்ன…” என குனிந்து தன்னையே பார்த்தபடிக் கேட்டவனை அழுத்தமாக பார்த்தாள் ஆரியா. மங்கையின் பார்வையில் “மேடம் நீங்க எதை சொல்றீங்கன்னு எனக்குப் புரியல…” புரியாமல் கேட்டான்.

அவளோ கலைக்கு பதில் கூறாமல் அவனின் கால்களை பார்த்தாள். அவளின் விழிகள் பயணித்த இடத்தை தான் கலையும் பார்த்தான்.

ஃப்பார்மல் ஷுஸ் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் ஷுஷ் தான் போட்டிருந்தான் என்ன இரண்டும் வேறு வேறு… “அடக் கடவுளே…” என்று தலையில் அடித்துக் கொண்டவன் ஆரியை நிமிர்ந்து பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!