Skip to content
Post Views: 4,141
5
நாற்பது வருடங்களுக்கு முன்
Advertisement
கனகு நெல்லை நிரப்பி நெருப்பு கங்குகளை தயார் செய்துக் கொண்டிருந்தார். ஒரு சிறு குப்பி போன்ற ஒன்றில் வெள்ளியை போட்டு ஊதுகுழல் கொண்டு ஊதினார்.
Advertisement
பின் உருகிய வெள்ளியை எடுத்து அடித்து தகடாக்கி கொஞ்சம் கொஞ்சமாய் அதை வேண்டும் வடிவம் கொண்டு வடித்துக் கொண்டிருந்தார் அவர்.
Advertisement
அடுத்த அறையில் கதிர் இதே போன்று தங்கத்தை உருக்கி நீள நீள செயின்களாக மாற்றிக் கொண்டிருந்தார்.
Advertisement
நான்கு கட்டுகளாக இருந்த அந்த நகைப்பட்டறையில் முதல் அறை வெள்ளி செய்யவும் அடுத்த அறை தங்கம் செய்யவும் இடையில் இருந்த கட்டில் அந்த நகையை பிரித்து கல் வைத்த அட்டிகைகள் வளையல்கள் என்று செய்வர்.
இன்னமும் சில நகைகள் கடைசியாய் இருந்த வைரப்பட்டறைக்கு அனுப்பி வைப்பர். அங்கு வைரம் பதித்து பின் அது விற்பனைக்கு செல்லும்.
குமரனுக்கு வைரப்பட்டறையில் தான் வேலை. தரமான வைரக்கற்களை பிரிப்பது பின் அதை வெகு நுண்ணியமாய் நகைகளில் பதிப்பதும் அதை அழகாய் உருவாக்கி விற்பனைக்கு அனுப்புவதும் அவன் வேலை.
ஒவ்வொரு பட்டறையிலும் நான்கில் இருந்து ஐந்து பேர் வேலைக்கு இருந்தனர். அதில் வெள்ளிப்பட்டறையில் கனகு அங்கிருந்தோருக்கு முதன்மை வகித்தார்.
அதே போல் குமரன் வைரப்பட்டறையில் முதன்மை வகித்தார். தங்கப்பட்டறையில் கதிரை விட இளையவர் ஒருவர் முதன்மை வகிக்க அதில் அவருக்கு கொஞ்சம் பொருமல் தான்.
நான் தானே இங்கே இத்தனை வருஷமாக இருக்கிறேன் வேறு ஒருவரை அதுவும் என்னை விட வயதில் சிறியவன் அவன் போய் என்னை மேற்பார்வை பார்ப்பதா என்று கனன்றுக் கொண்டே தானிருந்தான் கதிர்.
கனகு, கதிர், குமரன் மூவருக்கும் வயது வித்தியாசம் முன்னே பின்னே இருந்தாலும் ஒன்றாகவே பழகினர். கனகுவும் கதிரும் இதில் அண்ணன் தம்பி என்றாலும் குமரனையும் அவர்கள் தங்கள் நெருங்கிய உறவாகவே பாவித்தனர்.
“குமரா நாம எவ்வளவு நாள் தான் இந்த கடையிலவே வேலை பார்க்கறது. நாமும் இது போல ஒரு கடையை வைக்கணும்டா” என்றது கதிர்.
“வைக்கலாம் கதிர் நாம இன்னும் எதையும் முழுசா கத்துக்கவே இல்லையே…” என்றார் குமரன்.
குமரனுக்கு எல்லாம் தெரிந்தாலும் இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிக அதிகம். அதனாலேயே அந்த கடையைவிட்டு அவர் நகரவில்லை.
தவிர அந்த கடை முதலாளி வேறு யாருமல்ல அவரின் மைத்துனர் தான்.
“உனக்கென்னப்பா நீ முதலாளிக்கு சொந்தக்காரன் இங்கவே இருக்கலாம்ன்னு தான் பிரியப்படுவ, நாங்க இங்கவே இருந்தா காலம் முழுக்க இப்படியே இருக்க வேண்டியது தான்” என்று அங்கலாய்த்தார் கதிர்.
“கதிர் சொல்றதும் சரி தானே குமரா. என்ன தான் உனக்கு மச்சான் கடைன்னாலும் உனக்குன்னு ஒண்ணு இருந்தா தானே மதிப்பு… நாளைபின்ன நம்ம புள்ளைங்களுக்கும் அது தானே கௌரவம்…” என்றார் கனகு.
இப்போது குமரனும் யோசிக்க ஆரம்பித்தார். நாமளும் எவ்வளவு நாளைக்கு தான் இன்னொருத்தர்கிட்ட சம்பளம் வாங்கிட்டு இருக்கறது. நாமும் முதலாளி ஆனால் என்ன என்ற ஆசை அவருக்குள்ளும் விதைக்கப்பட்டது.
“சரி பார்ப்போம்…” என்றான் குமரன் அரைமனதாய்.
“நீ என்னப்பா என்னவோ போனாப் போகுதுன்னு அப்படிங்கற மாதிரி சொல்றே. உறுதியா சொல்லுப்பா, உனக்கும் இந்த கடையில ஒரு பங்கு இருக்கு தானே. உன் மச்சான் இல்லைன்னா சொல்லிட போறாரு… அவருக்கென்ன பிள்ளையா குட்டியா…” என்றார் கதிர்.
“அதுக்காக அவர்கிட்ட போய் என்னை நிற்க சொல்றியா கதிரு. அதெல்லாம் என்னால முடியாது…” என்று உறுதியாய் மறுத்தார் குமரன்.
“சரி விடு… நம்ம மூணு பேரும் சேர்ந்து ஆரம்பிக்க பணம் சேர்ப்போம், சரி தானே”
“இது வேணா சரி தான்…” என்றார் குமரன்.
கதிர் தன் தமையனை அர்த்தமாய் பார்த்தார். பதிலுக்கு அவரும் கண் மூடி திறந்தார்.
இவர்களின் பேச்சு நடந்த ஒரு மாதத்தில் குமரனின் மைத்துனர் நகை பட்டறை உரிமையாளர் நெஞ்சு வலி வந்து இறந்து போக அவருக்கு வேறு வாரிசுகள் இல்லாததால் குமரனின் மகனே அனைத்தும் செய்ய நகைக்கடை முழுதும் இப்போது அவர்களுக்கே வந்து சேர்ந்தது.
அது எதேச்சையாக நடந்ததோ அன்றி வேறு காரணமோ குமரனின் மகன் அதற்கு உரிமைப்பட்டவனாக ஆனான். அவன் வயதின் காரணத்தை முன்னிட்டு இப்போது அது குமரனின் மேற்பார்வையில்.
நாட்கள் மெதுவாய் விரைந்தேறியிருக்க அவர்களின் பிள்ளைகளும் பருவ வயதை அடைந்தனர். கனகுவும், கதிரும் குமரனை பிரிந்து தனித்தனியே வெள்ளி நகைக்கடையும், தங்க நகைக்கடையும் ஆரம்பித்தனர் அருகருகே.
கனகுவின் இரு மக்களும், இப்போது அதே நகைக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். கதிருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே. இவர்களோடு ஒட்டாத அவன் குமரனின் கடையில் சென்று வேலைப் பார்த்தான்.
ஆரம்பத்தில் கனகுவும், கதிரும் அவனைக் கண்டித்தாலும் அவன் கேட்கவில்லை. அதன் காரணம் அவர்களுக்கு சில நாட்கள் சென்ற பின்னே தெரிந்த போது அவர்களும் அதை மறுக்கவில்லை.
“குமரா என் பொண்ணுக்கும் பையனுக்கும் ஒரே நாள்ல கல்யாணம் வைச்சிருக்கேன், நீ அவசியம் வந்திடணும்…” என்று நண்பனுக்கு அழைப்பிதழ் வைக்க சென்றிருந்தார் கனகு.
“என்னப்பா ஒரே நாள்லயா…”
“ஆமாப்பா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறோம்… பொண்ணை வைச்சுட்டு பெரியவனுக்கு முடிச்சப்பவே என் பொண்டாட்டி திட்டிட்டே இருந்தா”
“பொண்ணு ஆசைப்பட்டாளேன்னு படிக்கவிட்டேன். அதான் படிப்பு முடிஞ்சு போச்சுல, நம்ம வேலையை நாம சிறப்பா செஞ்சிடணும்ல”
“அதுவும் சரி தான்… ஆனா பாரேன் இப்போ தான் அவங்க பிறந்த மாதிரி இருக்கு, இதோ கல்யாணத்துக்கு நிக்கறாங்க. ஆமா எப்போ கல்யாணம்”
“ஆவணில தான் பத்தாம் தேதி தான் வைச்சிருக்கேன்…”
“நல்லது கனகு. நீ பரவாயில்லைப்பா, எல்லா வேலையும் முடிச்சிட்ட, நான் தான் இன்னும் ஒரு கல்யாணம் கூட வைக்கலை”
“கால நேரம் வந்தா எல்லாம் தன்னால முடியும் குமரா. உன் பொண்ணுக்கு வரன் ஒண்ணும் வரலையா…”
“மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன், வரன் எல்லாம் வரத்தான் செய்யுது. நமக்கு பிடிச்ச மாதிரி எதுவும் அமையலையே. பொண்ணுக்கு முடிச்சுட்டு அடுத்து பெரியவனுக்கும் கல்யாணம் முடியணும்…” என்றார் அவர்.
“அதுக்கென்ன எல்லாம் பிரமாதமா பண்ணிடலாம் குமரா…” என்றவர் கொஞ்சம் அமைதியாகி பின் “குமரா எனக்கொரு யோசனை…”
“சொல்லு கனகு…”
“நம்ம கதிரோட பையன் வேலுவுக்கு உன் பொண்ணை கொடுக்கலாமே… அவனைப்பத்தி நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை, உன் கடையில உனக்கு கீழ தான் வேலை பாக்கான்…”
“சின்ன வயசுல இருந்தே உன்கிட்ட தானேப்பா வேலை பழகுனான் அவன். யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுப்பா எனக்கு தலைக்கு மேல கல்யாண வேலை கிடக்கு நான் கிளம்பறேன்…” என்று கனகு வந்த வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்றுவிட்டார்.
குமரனுக்கும் வேலுவை பிடித்தே தானிருந்தது. அவன் எப்போதும் இவனையே சுற்றி சுற்றி தான் வருவான். குமரனுக்கு தெரியாது வேலு சுற்றுவது அவனை மட்டுமல்ல அவரின் மகளின் பின்னேயும் தான் என்று.
தேவி அழகு பதுமையாகவே இருந்தாள். சிறு வயதில் இருந்தே வேலுவுக்கு அவளின் மீது பிரியமிருந்தது. அவர்கள் வீட்டிற்கு சென்றால் கூட அவன் அவளிடம் மட்டுமே விளையாடுவான்.
தேவியின் அண்ணன் சங்கரன் தன்னுடன் விளையாட அழைத்தாலும் அவன் அவளைவிட்டு இம்மியளவு நகரமாட்டான்.
குமரனென்றாலும் அவனுக்கு பிரியமே. குமரனுக்கு யாரிடமும் கோபத்தை காட்டத் தெரியாது. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் குணம் அவரது.
தன் தந்தையும் பெரிய தந்தையும் பேசுவதும் செய்வதும் அறவே பிடிக்காதவன் அவன். அதுவும் ஒரு காரணம் அவன் குமரனை சுற்றி வருவதற்கு.
கனகு இப்படி சொல்லி சென்றிருக்க குமரன் அதையே நினைத்துக் கொண்டிருக்கும் வேளை வேலு உள்ளே வந்தான்.
“என்ன மாமா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?? உடம்பு எதுவும் சரியில்லையா??” என்று அருகே நெருங்கி வந்து அவன் நெற்றி கழுத்து என்று தொட்டுப் பார்த்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை வேலு. ஏதோ யோசனை??” என்றவர் “ஆமா நீ என்ன இந்நேரம் இந்தப்பக்கம்”
“அது… அது வந்து நம்ம தேவி புதுசா வந்த பாட்டு புஸ்தகம் கேட்டுச்சு அதான் வாங்கிட்டு வந்தேன் கொடுத்திட்டு போகலாம்ன்னு. ப்ளீஸ் மாமா தேவியை திட்டாதீங்க… உங்களுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவீங்கன்னு என்கிட்ட கேட்டா” என்று அவளுக்காய் பரிந்தான் அவன்.
‘நம்ம தேவியா…’ என்று எண்ணிக்கொண்டே அவனைப் பார்த்தார் அவர்.
பின் தன் மகளை அழைத்தார் “அம்முக்குட்டி இங்க வாம்மா” என்று.
“என்னப்பா??” என்றவாறே வந்தவள் அங்கிருந்த வேலுவை கண்டு நாணி நிற்க மகளின் மனம் புரிந்தவர் இப்போது வேலுவை பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பாட்டு புஸ்தகம் கேட்டியா??”
“அப்பா அது வந்துப்பா…”
“கேட்டியா??”
“ஆமாப்பா…”
“இனிமே கேட்கக்கூடாது…”
“ஹ்ம்ம் சரிப்பா… உள்ளே போ…” என்றுவிட அவள் முகம் வாடி உள்ளே சென்றுவிட்டாள்.
“வேலு இனிமே நீ இது போல எல்லாம் வந்து போகாதேப்பா. எனக்கு சரியாப்படலை” என்று அவர் சொல்லிவிட அவன் முகமும் விழுந்து போனது.
“சரி மாமா நான் கிளம்பறேன்…” என்று சொல்லி சென்றுவிட்டான்.
——————-
காஞ்சனாவிற்கு பதிலடி கொடுத்ததாய் எண்ணி அவன் சந்தோசப்பட்டிருக்க அவளோ அவன் நிம்மதியை குலைப்பது ஒன்றே குறிக்கோளாய் ஏதேதோ சொல்லி பிதற்றுகிறாளே என்று கோபம் கனன்றது அவனுக்கு.
‘என் அப்பாவை பற்றி என்னவெல்லாம் சொல்லிவிட்டாள்’ என்று உள்ளுக்குள் தீயாய் எரிந்தது அவனுக்கு.
அவள் சொல்லியது அவனுக்கு வலித்தாலும் அவள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமா என்று ஏனோ அவன் உள்மனம் ஆராய்ச்சியில் இறங்கியது.
‘ச்சே அவ சொன்னா நான் சந்தேகப்படுவேனா… அவ எல்லாம் ஒரு ஆளா…’ என்று அவளை மனதார சபித்துக் கொண்டான்.
அவளின் செயினை நான் திருப்பிக் கொடுப்பேன் என்று அவள் எண்ணியிருக்க மாட்டாள். அந்த ஆத்திரத்தில் தான் அப்படி பேசியிருப்பாள் என்று தான் நினைத்துக் கொண்டான்.
அவனுக்கு அந்த செயினை பற்றிய சந்தேகம் எப்படி வந்தது என்று அன்றைய நாளை மனதில் கொண்டு வந்தான்.
——————-
“விஸ்வா”
“என்னம்மா”
“நாளைக்கு உன்னோட பிறந்தநாள்டா…”
“அதான் வருஷா வருஷம் வருதேம்மா”
“உனக்கு இந்த வருஷம் கல்யாணம் முடிச்சிடணும்ன்னு நினைக்கிறேன் விச்சு…”
“ம்மா எல்லார் மாதிரியும் நீ விச்சுன்னு கூப்பிடாதே, எப்பவும் போல விஸ்வான்னே கூப்பிடும்மா”
“இப்போ அதுவா விஸ்வா பிரச்சனை, நான் உன் கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருக்கேன்”
“நான் இப்போ என்ன பண்ணணும்…”
“கல்யாணம்…”
“சரி பண்ணிக்கறேன்…”
“பொண்ணு…”
“உங்க இஷ்டம் தான் என்னிஷ்டமும்”
“தேங்க்ஸ்பா…”
“அம்மா…”
“சரி சரி வாபஸ்…” என்று சொன்னவர் அவன் அருகே அமர்ந்துக்கொண்டு மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் விஸ்வா தான் அதை கவனிக்காமல் வேறெங்கோ கவனம் பதித்திருந்தான்.
“என்ன விஸ்வா, நீ என்ன சொல்றே??” என்று அவர் கேட்க அவனிடம் பதிலில்லை. அவன் பார்வை வெறுமையாய் எங்கோ வெறித்திருந்தது.
“விஸ்வா… என்னாச்சுப்பா… எதிர்ல என்ன இருக்குன்னு அங்கே பார்த்திட்டே இருக்கே…”
“ஹ்ம்ம்… ஒண்ணுமில்லைம்மா…”
“என்னாச்சு விஸ்வா… எதுவும் பிரச்சனையா??”
“இல்லைம்மா அதெல்லாம் இல்லை…”
“அப்புறம் அங்க என்ன பார்த்திட்டு இருந்தே. உனக்கு முன்னாடி அப்படி என்ன தெரிஞ்சுது…” என்று சொல்ல அவன் ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாள் அவனறையில் படம் வரைய ஆரம்பித்தவன் சீறி எழும் கடலலை வரைந்து கொண்டிருக்கும் போது சம்மந்தமேயில்லாமல் முதல் நாள் அவன் அன்னையிடம் பேசிய பேச்சு ஞாபகம் வந்தது அவனுக்கு.
அப்படியே அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டான். “எதிர்ல என்ன தெரியுது என்று அவர் மீண்டும் மீண்டும் ஏதோ கேட்டார்… எதிர்ல எதிர்ல…” என்று கண்ணை மூடி யோசித்தான்.
‘ஏன் எனக்கு இது திரும்ப திரும்ப இதே தோணுது…’ என்று எண்ணியவன் ‘ச்சே இப்போ அதா முக்கியம், அதைவிட இப்போ இந்த டிசைன், இது மட்டும் அவளுக்கு போகாதுன்னு என்ன நிச்சயம்… அதைப்பத்தி தான் யோசிக்கணும்’ என்று அறிவு எடுத்து கொடுத்தது.
‘இப்போ நாம வரையறது பெரிசில்லை அது அவளுக்கு போகக்கூடாது. அப்படியே போனாலும் அது நான் நினைச்சதா இருக்கக்கூடாது’ என்று பலவாறாக யோசித்தான்.
சட்டென்று ஏதோவொரு எண்ணம் தோன்ற போனில் அவன் வைத்திருந்த ஹிட்டன் கேமரா கண்டுப்பிடிக்கும் ஆப்பை திறந்தான்.
அறையில் அவனுக்கு தெரியாமல் ஏதேனும் கேமரா இருக்கிறதா என்று அவனறை முழுதும் தேட பலன் என்னவோ பூஜ்யம் தான்.
அங்கிருப்பவர்கள் எல்லாமே அவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களே. அவர்களை சந்தேகம் கொள்வது தன் மீது தானே சந்தேகிப்பதற்கு சமம் என்பதறிவான்.
அவன் விரல்கள் அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினை நிமிண்டியது. வலது கையில் போனை வைத்துக் கொண்டிருந்தவன், இடது கை கட்டை விரலால் கழுத்தில் ஏதோவென்று அதை தடவப் போனவன் செயினை இப்புறமும் அப்புறமும் நகர்த்தினான்.
அந்த ஆப் இன்னமும் ஆனிலே இருந்திருக்க ஒரு சிவப்பு புள்ளி தோன்றியது போல் இருந்தது அவனுக்கு. உடனே உஷாரானான். கழுத்தில் இருந்த செயினை கழற்றினான்.
அதை செக் செய்து பார்க்க டாலரில் இருந்த கேமராவை கண்டுப்பிடித்திருந்தான். அவன் அன்னையின் பேச்சும் ஏன் அவனுக்கு ஞாபகம் வந்தது என்று இப்போது புரிந்தது.
எதிரில் இருக்கும் ஒன்றை தெளிவாக காண வேண்டும் என்று திட்டமிட்டே இந்த செயின் தன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது என்று புரிந்தது அவனுக்கு இப்போது.
அவன் கழுத்தில் இருந்த அந்த செயினை கொடுத்தது காஞ்சனமாலாவே தான் ஆனால் டாலர் பின்னாளில் தான் தானே சேர்த்தோம் என்று கணக்கு போட்டான்.
அது அம்மா வாங்கிப்போட்டது தானே என்று தோன்ற, ‘அவள் தான் ஏதோ சதி செய்து அதை அம்மாவின் கையாலேயே எனக்கு கொடுத்திருக்கிறாள்’ என்று திட்டவட்டமாக புரிந்தது அவனுக்கு.
——————
காஞ்சனமாலாவும் அதையே தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் எப்படி இதை கண்டுப்பிடித்திருப்பான் என்று.
‘எப்படியோ கண்டுப்பிடித்தானே, இந்த மட்டும் புத்திசாலியாயிருக்கிறான். அவன் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது…’ என்றெண்ணியவளின் சிந்தனையில் அவனைப் பற்றிய எண்ணவோட்டங்களே.
தான் அவனை முதன் முதலில் சந்தித்த அந்நாள் அவளுக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அன்று அவனின் பிறந்தநாள்.
எங்கிருந்தாய்
இதுவரை என்னை
தவிக்க விட்டு எதற்கு
வந்தாய் தவித்திடும்
துயர் துடைக்க வந்தாயோ
நடப்பதெல்லாம்
எழுதிய படி நடக்கிறதோ
இருவருக்கும் பொருந்தியபடி
எழுதியதாரோ
error: Content is protected !!