Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மயங்க தெரிந்த மனமே 9

அத்தியாயம் 9

“அண்ணே” என குரல் கொடுத்தபடி மீனா சமரசு வீட்டிற்குள் நுழைய

”அய்யோ அத்தை” என வேகமாய் லாவாவை ஒரு பார்வை பார்த்து இவன் சோபாவை விட்டு விலகி,

“வாங்கத்தை” என வரவேற்க, “வா மீனா என் அங்கனயே நின்னுட்ட?” சமரசுவும் வரவேற்பில் கலந்து கொள்ள,

“இதென்ன பாரிஜாதமும் வந்திருக்கா!” பாரிஜாதம் லாவாவின் அத்தை, மீனாவிற்கு நாத்தனார்.

“இவ நம்ப வீட்டுக்கு சும்மாலாம் வரமாட்டாளே” என நாச்சி காபி கலக்க சமையலறைக்குள் நுழைந்து கொள்ள, லாவாவோ அப்படியே பின்னால் நகர்ந்து அறைக்குள் மறைந்தாள்.

‘வழக்கம் போல் மீனாவிடம் எதையோ பொய் உரைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறாள்’ என புரிந்து போனது விக்ராவிற்கு.

“என்னடி வா வான்னு வெத்தலபாக்கு வச்சாலும் வரமாட்ட” என கோதை இழுக்க

“ஆமாத்தா.. காரணமில்லாமல் நானெதுக்கு வரப்போறேன். மீனாமகளை எம்மவனுக்கு கேட்டேன். உம்பேரனுக்கு தான் கொடுப்பேன்னு சொல்லிபுட்டா. உம்மருமவளுக்கும் மீனாவுக்கும் ஆகாதுன்னு தெரியுமே”



Advertisement

“சரி அதுக்கெதுக்குடி நீ இங்க வந்திருக்க? மீனா அவ மவளை எங்கையும் கொடுத்துட்டு போறா? உனக்கென்ன?”


“இவ என்னை ஏமாத்துறாளா இல்லையான்னு நெரிஞ்சுக்க வேணாமா?” தோள்பட்டையில் நாடி இடித்து பேசியவர் “எனக்கு மீனா மேல நம்பிக்கையில்லை நீ சொல்லிட்டன்னா நான் வேற பொண்ண பார்ப்பேன்” இப்போதும் லாவாவை விடும் எண்ணம் பாரிஜாதத்திற்கில்லை என்பது தெள்ளதெளிவாய் புரிந்தது.

‘இதென்னடி புது பெரளி’ என நாச்சி என்ன பதில் சொல்வது என தெரியாமல் மீனாவை பார்க்க

Advertisement

“ஆமாம் பாரிஜாதம், என் தங்கச்சி மவ தான் இந்த வீட்டு மருமவ.. நீ உம்மவனுக்கு வேற புள்ளய பாரு” என சமரசு சொன்ன நொடி..

Advertisement

“நான் நாச்சியை கேட்டா நீங்க என்னதுக்கு மாமா பதில் சொல்லுதீக.. மீனா தவிக்கிறதையும், நாச்சி முழிக்கிறதையும் பார்த்தா எனக்கென்னவே சரியா படலை” பாரிஜாதம் விடாது பேசியவர்


“நாச்சி பதிலே சொல்ல மாட்றா? என்னடி மீனா என்னைய ஏமாத்துறியா. அதான் ஏமாத்துதன்னு நல்லா தெரியுதே? புள்ளைக்கு அப்பன்னு ஒருத்தன் இருக்கான்ல.. எங்கண்ணன்.. வரட்டும் அந்த மிலிட்டரி. உம்புள்ளைய எம்மவனுக்கு எப்படி கட்டனும்னு எனக்கு தெரியும்” சிலுப்பி கொண்டு எழுந்தவர்

“மீனா என் புள்ளைக்கு தான் முதல் உரிமை.. அதுக்கு பிறகு தான் மத்தவகளுக்கு உரிமை, அப்பப்போ அதை மறந்து போயிர்றடி நீ. நீ மறந்திடுவ.. ஆனால் எங்கண்ணன் மறக்காது. வரட்டும் அவரு” மினி சுனாமியை கிளப்பி சென்றுவிட்டார் பாரிஜாதம்.

Advertisement

அவர் சென்றுவிட்டதை உறுதி செய்து “என்ன மீனா இதெல்லாம்” என நாச்சி முகம் சுருக்க

நிமிர்ந்து நாச்சியை பார்த்த மீனாவோ “ஆமாம் மயினி எனக்கே ரொம்ப சங்கட்டமாதேன் இருக்கு.

நேத்தைக்கு கல்யாண வீட்டுல லாவன்யாவை பொடவையில பார்த்திலிருந்து எம்மவனுக்கு கொடு கொடுன்னு உயிரை வாங்குறாக மயினி.. எனக்கு அங்கலாம் குடுக்க இஷ்டமில்ல மயினி..” மீனா தயங்க
பெண்ணின் தாயாய் கவலை புரிந்ததோ? “ஆமாம் மீனா,

பாரிஜாதம் சரியில்லை தான். பத்தாததுக்கு அவ மவன் சரியான முரடன் வேற. நம்ப புள்ளைக்கு அவன் சரிபடமாட்டான்.

அவனோட ஈடுபாடுக்கு தகுந்த மாதிரி வெளிய பார்க்க சொல்லு. நம்ப புள்ளைக்கு நம்மூர்லையே வேற பார்க்கலாம்” எனவும், அடக்கி வைத்திருந்த மூச்சு லகுவாய் வெளிப்பட, மனமும் லேசானது.


“ஆமாம் மதினி நம்மூர்ல தான் பார்க்கனும், லாவன்யாக்கும் வயசு ஏறுது நமக்கு தான் லாவன்யா சின்ன புள்ளயா தெரியுறா, சேலை நகை, நட்டுன்னு வந்து நிக்கவும் கேட்காத ஆளில்லை மயினி, புள்ளை வளர்ந்துட்டா, வயசாகுது சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடினு சொல்லாத ஆளில்லை” மீனாவும் வெளிப்படையாய் பேசிட

“அதுக்கென்ன நல்ல பையனா பார்த்து முடிடி யாரு வேணாம்னு சொன்னா? உன்னால முடியலையா உங்கண்ணன் கிட்ட சொல்லுடி, சுயவரமே நடத்திபுடமாட்டாக” என நாச்சி சொல்ல, அவர் மீது கொஞ்ச நஞ்சமிருந்த கலக்கமும் பறந்தோடியது மீனாவிற்கு.


“ஏண்டி மீனா ஒன்னுமட்டும் எனக்கு புரியலை, மகா கல்யாணத்துக்கு வந்த உன் நாத்தனாவ, ஊருக்கு பத்திவிடாம, இப்படி என் வீட்டுக்கு கூட்டியாந்து, எம்மவனுக்கு குடுக்க போறன்னு வேற பொய் சொல்லிட்டு திரியிற? எனக்கே நம்புற மாதிரியில்லை. உன் நாத்தனா நம்பிட்டு தான் மறுவேலை பார்ப்பாளாக்கும்” எனவும்

“பொய்யெல்லாம் இல்லை மயினி. உண்மை தான் சொன்னேன்” உறுதியாய் இவர் பேச

“ஆ..” என வாய் பிளந்தவர் “நம்மூர் பயலா பார்க்க போறேன்னு தானடி சொன்ன?”
“உன் மவனுக நம்மூர் தானே? இல்லை வெளியூரா?” என மீனா பூடகமாய் பேச


“என்னைய கண்டாலே உனக்கு ஆவாது, அதியசமா என்கிட்ட இம்புட்டு அமைதியா சம்பந்தம் பேசுத? என்ன விசயம்” என பார்வை விட, சமரசு கூட சுவாரஸ்யமானார் இவர்களது பேச்சில்

“எல்லாம் பயம் தான் மயினி, புள்ளைய வெளியிடத்துல கட்டி கொடுத்து, கண்ணொறங்காம கிடக்குறதுக்கு உன் வீட்டுல கொடுக்கலாம்ல. கையில வச்சு தாங்குற எங்கண்ணன் வீடு இருக்கும் போது நான் ஏன் வெளியில மாப்பிள்ளைய பார்க்க போறேன்.
இவ்வளவு ஏன்.. உனக்கும் எனக்கும் வராத சண்டையா, சச்சரவா? அதெல்லாம் எம்புள்ளை மேல என்னைக்காச்சும் காட்டிருப்பியா? எங்கிட்ட சண்டை போட்டு லாவண்யா எத்தனையோ முறை கோவிச்சுகிட்டு இங்கே வந்திருக்கா. ஒரு நாளாவது உன் வீட்டுக்கு போன்னு சொல்லி இருப்பியா? கல்யாணம் முடிஞ்சபிறகும் கூட எந்த சச்சரவும் வந்தாலும் ஏசிகிட்டேனாலும் நீ என் புள்ளைய பார்த்துக்க மாட்டியா என்ன?” மனதில் உதித்ததை பட்டென போட்டு உடைக்க


அதிர்ந்தார் நாச்சி “ஏய், என்ன மீனா சொல்லுற, நெசமாத்தான் சொல்லுதியா? இந்த பூசிமொழுகுறதெல்லாம் வேணாம், பளிச்சின்னு வெளிப்படையாய் சொல்லுடி” என பதற

“இன்னும் வெளிப்படையா பேச என்ன இருக்கு மயினி, ரொம்ப நாளா மனுசுக்குள்ளார ஓடுன கதை தான். நம்ப லாவண்யாவை வேத்தாளுக்கு கட்டி கொடுத்து வெளியே போறதுக்கு, நீ தான் ஒன்னுக்கு நாலா பெத்து வச்சிருக்கேயே, யாருக்கு பேசலாம்னு நீயே சொல்லு மயினி.. என் புருஷன் அடுத்த வாரம் லீவுக்கு வாராரு, ஒன்னா வச்சு உன் வீட்டுலையே பேசிடலாம்” என நாச்சியிடமும் “நீ என்னண்ணே சொல்ற” என சமரசுவையும் மீனா கேட்டுவைக்க

நாச்சிக்கு என்ன பதில் சொல்ல என தெரியவில்லை, சட்டென அதை கையில் எடுத்துக்கொண்ட சமரசு “மீனா, அப்போ சொன்னதை தான் இப்போவும் சொல்லுதேன். உனக்கு தான் மொத உரிமை.. நீ கேட்டு இல்லைன்னு சொல்வனா?” என முடிக்கும் முன்னே


“மீனா அவளுக்கு மாப்பிள்ளை கேட்கலை.. அவ மகளுக்கு கேட்குறா.. நைட் அடிச்சது இன்னும் இறங்கலையா யா.. உமக்கு” நாச்சி, சமரசுவின் காதை கடிக்க

“அடச்சீ..” அஷ்டகேணலாய் முகத்தை வைத்து “எம்புட்டு வெவஸ்த கெட்டவடி நீ? கர்மம்” என தலையில் அடித்து கொள்ளா குறையாய் முறைத்தவர், மீண்டும் மீனாவின் பக்கம் திரும்பி

“எங்களோட சம்மதம் வாங்க முன்னாடி நீ உம்மவ கிட்ட பேசி சம்மதம் வாங்கு” சமரசு முடித்து வைக்க

“ஆனால் மயினி ஒன்னும் சொல்லலையே?” என மீனா நாச்சியை பார்க்க
அவரோ மீனாவையே வைத்த கண் மாறாது பார்த்திருந்தார்.

“மயினி” என மீனா இழுக்க

“ம்.. எனக்கு பொம்பளபுள்ள இருந்தாலும் நானும் உன்ன மாதிரி தான் யோசிச்சிருப்பேன் மீனா. எனக்கும் உனக்கும் தான்டி ஆவாது. ஆனா உம்மவ ஒரு மகளா தான் இந்த வீட்டுக்குள்ளாற வளைய வர்றா. மவளா இருந்தவ மருமவளா ஆகிட்டு போறா. எம்மவனுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதந்தேன்” இறுகிய குரலில் வந்தாலும் அதில் தொக்கி நின்றது பாசம்.
அங்கிருந்த அத்தனை பேருக்கும் நாச்சியின் இந்த பதிலை கேட்டு தலை சுற்றாத குறை தான். எப்படி இத்தனை எளிதில் சம்மதம் கூறினார் என? அடித்தாலும் பிடித்தாலும் சொந்தம் என வரும் போது ஒன்று கூட தானே செய்வார்கள். அது தான் நடந்ததும் அங்கும்.

“மயினி..” தழுதழுத்த குரலில் வேகமாய் நெருங்கி நாச்சியின் கைகளை பிடித்து கொண்டு “நெசமாத்தானே மயினி சொல்லுதீக” என கண்கலங்க

“அட கூறுகெட்டவளே நெசமாத்தான் சொல்லுதேன். சங்கரும் செல்லமும் சின்ன பயலுவ, வீரா விக்ரா இவனுக எவனையாவது ஒருத்தனை முடிச்சுபுடலாம்” நாச்சி மீனாவின் பிரச்சனைக்கு எண்ட் கார்ட் போட

“இந்த விக்ரவாண்டி வெளங்காத பய, சரியான போக்கிரி பய.. வீராவையே முடிப்போம் மீனா. வீராவுக்கு படிப்பில்லைன்னு நினைக்காத, பொறுப்புள்ள பையன் அவன். சின்ன வயசுலையே ஜவுளிகடையை நடத்தி சொந்த கால்ல நிக்குறவன். கண்ணுகுள்ள வச்சு பார்த்துப்பான். நீ உன் புருஷனை வர சொல்லு நல்ல நாள் பார்த்து பரிசம் போட்ரலாம்” என விக்ராவிற்கே எண்ட் கார்ட் போட்டார் சமரசு.

ஒரு ஓரமாய் நின்றபடி, போனில் கவனமாய் இருப்பவன் போல் இத்தனை நேரம் நடித்த விக்ரா, சடாரென விழிகளை மட்டும் உயர்த்தி சமரசுவை கடுப்புடன் பார்க்க, அதே நேரம் இவரும் அவனை தான் பார்த்திருந்தார். இருவரின் பார்வையும் பரம எதிரிகளாய் முட்டி கொண்டது.
வீரபாண்டியோ இது என்ன புது கலவரம் என பார்த்திருக்க.

சங்கரும், செல்வமும் ‘ஆஹா.. நாம கிரேட் எஸ்கேப்புடா அந்த குடிகாரபஜாரிகிட்ட இருந்து’ என ஹைபை கொடுத்து நிம்மதியடைந்தனர்.

“குறை சொல்லனுமேன்னு விக்ராவை சொல்லாதீங்கண்ணே, அவனை நீங்க மட்டும் தான் குறை சொல்லிட்டு கிடக்கீக. வீராவோ விக்ராவோ, எம் மவ இந்த வீட்டு மருமவளானாலே போதும் எனக்கு” சமரசுவிடம் கூறிவிட்டு, நாச்சியின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து “எங்க எம்மேல இருக்குற கோபத்தில் சம்பந்தம் வேணாமுனு சொல்லுவீங்களோனு வெசனப்பட்டுடேன் மயினி” பிடித்த கையை விடுத்து, கலங்கும் கண்களை மறைத்து, “அவுகளோட அடுத்த வாரம் வரேன் மயினி” எனவும்

“உன் புருஷன் வரவும் ஒத்த போனை போடுடுடி, மாப்ளை வீட்டுகாரக நாங்க வரோம், பரிசம் போட” உரிமையாய் சொன்ன நாச்சியை பார்த்தபடி, “சந்தோஷம் மயினி.. நான் வரேன் மயினி” என சொல்ல

“உக்காருடி, காபி தண்ணி கொண்டாரேன்.. குடிச்சிட்டு போ” என சூழ்நிலையை இன்னுமே இலகுவாக்கினார் நாச்சி. அவர் சமையலறைக்குள் சென்றுவிட, மீனாவோ சந்தோஷமாய் சமரசுவிடம் பேச துவங்கிவிட்டார்.


ஆனால் இந்த சில நிமிடங்களுக்குள்ளாகவோ நிம்மதியை மொத்தமாய் தொலைத்த விக்ராவோ ‘ம்ஹூம், தாடியை இனி நம்பி பயனில்லை, நம்ப காதல்ல ஒரு டேங்கர் லாரி பெட்ரோல் ஊத்தி இருந்த இடமே தெரியாம அழிச்சிடுவாரு.. சாட்சிகாரனை விட சண்டை காரன் தான் பெஸ்ட்.. ம்ஹூம், இல்லையில்லை நமக்கு நம்ப சண்டை கோழி தான் பெஸ்ட்டு’ என நைசாய் அவ்விடம் விட்டு விலகி, லாவா இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அங்கே மீனாவிற்கு பயந்து அறைக்குள் ஒதுங்கி இருந்தவளின் காதுகளிலும் அத்தனை பேச்சுகளும் வந்து விழுந்ததில் “என்ன? கல்யாணமா? வீராவிற்கும் தனக்குமா?” என குழப்பத்தின் உச்சியில் நின்றிருந்தாள் லாவா.
இவன் உள்ளே வந்து கதவை தாழிட்டதில் திகைத்து திடுக்கிட்டு விழித்து,

“ஏன்.. ஏன்.. கதவை பூட்ற” என திறப்பதற்காக கதவின் அருகே வர, அவளது கை பிடித்து இழுத்து தன் முன்னே நிறுத்தி

“வெளியில் பேசின எல்லாமே உன் காதில் விழுந்திருக்கும் தானே. உன் முடிவென்ன? தெரிஞ்சுக்கலாமா?” அழுத்தமான பார்வை கொண்டு நேரடியாகவே கேட்டான்.

அவனின் அவசரமும், பதட்டமும் இவளுக்கு அத்தனை குதூகலத்தை வாரியிறைத்தது. இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையோடு

“உங்கப்பாவோட முடிவு தான் என் முடிவும்” நக்கலாய் கூற

ஒரு நொடி பேச்சே நின்றது அவனிடம் பின், “ஏண்டி, நீ நியாயமாவே பேச மாட்டியா? உங்கப்பனை சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு.. ஆனா நீ எங்கப்பனை சொல்றடி” எரிச்சலானான் இவன்.

“மிலிட்டரியவிட, என் தாய் மாமான் தானே எனக்கு சாதகமா முடிவெடுக்குறாரு அதனால தான்” இவள் கடுப்பாக்க

‘ஸப்பா… சாவடிக்கிறாளே’ நறநறவென பற்களை கடித்தவன் “எது எப்படி இருந்தாலும் உன் முடிவுக்கு தான் இங்கே முன்னுரிமை. அத்தையோ மாமாவோ, யார் உங்கிட்ட கேட்டாலும்..” என இவன் முடிக்க முன்

“வீரா அத்தானையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிடுவேன்” விட்டதை இவள் முடிக்க..

சுர்ரென என நாடி நரம்பெங்கும் கோபம் ஊற்றெடுக்க, “அவனை அத்தான் சொல்லாத” பல்லை கடித்தான் இவன்.

“நம்ப கட்டுல கட்டிக்க போறவனை அத்தான்னு தானே சொல்லி கூப்பிடனும், அப்போ வீரா எனக்கு இனிமேல் அத்தான் தானே”

“அவனை அத்தான் சொன்ன கொன்னுடுவேன்டி” கழுத்தை பெயருக்கு பிடித்து “எனக்கு பொறுமை ரொம்ப கம்மி.. சீண்டாத” எனவும்

“ஆமாமாம் பொறுக்கிக்கு பொறுமை கம்மியா தான் இருக்கும்” அவன் விரல்கள் கழுத்தை நெறிக்காததில் சிறிதும் பயமில்லை அவள் முகத்தில்

“கட்டுன பொண்டாட்டிகிட்ட தானே பொறுக்கி வேலையெல்லாம் பார்க்க முடியும். ஆமான்டி நான் பொறுக்கி தான்” கழுத்தை விட்டவன் கை சரசரவென அழுத்தமாய் ஊர்ந்து சில இடங்களில் நின்று நிதானமாய் கீழிறங்கியதில், பதறிப்போய் இவள் அவனை பிடித்து தடுக்க, அதை எளிதாய் முறியடித்தவனோ, அவன் விழி காட்டிய பயத்தில், அவளது உடுக்கை இடுப்போடு உடும்பு பிடியோடு நிறுத்தி கொண்டான் பயணத்தை.

அதுவரை இருந்த விளையாட்டு தனம் விடைபெற, “வி..க்ரா.. என்ன பண்ற நீ” தந்தியடித்தது இவள் இதழ்கள்.

இறுக்கமான கைகள், தீயென கனன்ற அவனது விழிகள் இவளுக்கு முற்றும் புதிது. திமிறி விலகியவளை இன்னும் இறுக்கி வளைத்து பிடித்து

“உனக்கு இன்னைக்கு சொல்றது தான், ஓயாம சொல்லிட்டே திரிய முடியாது, என்னை தவிர எவனுக்காவது கழுத்தை நீட்டுன, நீட்டுறதுக்கு கழுத்து இருக்காது நியாபகம் வச்சுக்கோ” என உறுமினான்.
அவனது இந்த புதிய கோப முகம், அவளை படபடக்கச் செய்தது.

இதுவரை அவளது பயந்த விழிகளை கண்டு விலகி விலகி போனவனுக்கு, முதல் முறையாய், எத்தனை பயந்தாலும் விலகி போக கூடாது, இவளை விட்டு விலகவே கூடாது என மனம் உறுதியாய் நின்றது.

எண்ணங்களின் ஓட்டத்தில் அவன் கைகளின் இறுக்கம் தளர, அதை சரியாய் உபயோகபடுத்தி அவன் கைகளில் இருந்து விலகி ஓட, ஒரே எட்டில் தடுத்து பிடித்து

“உங்கம்மா இன்னும் கிளம்பல.. ஹாலில் தான் இன்னும் இருக்காங்க, வீணா நீயா போய் சிக்கிக்காத” என அவளையும் இழுத்து கொண்டு கட்டிலில் அமர, பூட்டிய அறையும், அறைக்குள் இவனது செய்கையும் சேர்ந்து நன்றாகவே கிலியை மூட்டியது இவளுள்.

எள்ளும் கொள்ளும் வெடித்த அவளது அந்த கடுகடு முகத்தை பார்த்தவனுக்கோ, சிறு கீற்றாய் புன்னகை இவனுள் ஓடி மறைந்தது.

இதுவரை அடித்து, கிள்ளி, ஏறி மிதித்து கோபத்தை வெளிப்படுத்தியவளை தான் தெரியும். சில நேரங்களில் பற்தடம் பதிய கூட கடித்து இருக்கிறாள்.

ஆனால் தனக்கு பயந்து இப்படி கோபத்தை விழுங்கி நிற்கும் இவள் இவனுக்கு மிக மிக புதிதாய் தான் தெரிந்தாள்.
அதுவும் இந்த சில மணிநேரங்களுக்குள்ளாக, அனுமதியின்றி இதழை சுவைத்து, தேகம் அணைத்து, கழுத்தை நிறித்து, நெருக்கமாய் அதன் கீழும் கைகள் பயணித்து… ‘உப்..’ பெரிதாய் இதழ் குவித்து ஊதி “அடேய் விக்ரா இத்தனை வேலை பார்த்தும், அடி கடி மிதி வாங்காமல் இருக்கிற.. எங்கையோ மச்சம் இருக்குடா உனக்கு” வெளியே கோபம் குறையாத போதும் உள்ளுக்குள் அவளுடனான் நெருக்கம் இனித்தது.

“இவ கிட்ட இருந்தா என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியலையே.. சண்டைக்கோழி மயக்கிட்டா” முனுமுனுவென பேசியவனுக்கு, அவனையே அடக்கும் வழியறியாது, அவள் விரல் பிடித்து விருட்டென இழுத்து கொண்டு கட்டிலில் சாய, அவன் மேல் மொத்தமாய் விழுந்து சாய்ந்தாள் லாவண்யா.

“விட்ரா.. விட்டு தொலைடா, ரூமுக்குள்ள போட்டு அடைச்சுவச்சிட்டு இப்படி அராஜகம் பண்ற?” துள்ளி திமிறி “அடிச்சா அடக்குற, கத்துனா முத்தம் கொடுக்குற.. என்னை என்ன தான் பண்ண சொல்ற..?” விடுபட முயன்றவளை பிரட்டி தள்ளி

“அமைதியா இருந்திடு அது தான் உனக்கும் உன் உடம்புக்கும் நல்லது” சீண்டியவனை ‘சப்பென’ அறைந்திருந்தாள் லாவா.

அதற்கும் சளைக்காதவன், பிடியை இன்னும் இறுக்கி, அவளை ஆழ்ந்து பார்த்தான்
“அடிக்கனுமா? அடி, இல்லை நான் பண்ற வேலையெல்லாம் பிடிக்கலேயா, கொன்னுடு! கையில என்ன கிடைக்குதோ அதை வச்சு வெட்டி கொன்னு போட்டுடு” அடிகுரலில் பேசியவனை அதிர்வோடு தான் பார்த்தான். அவனது அந்த நிஜமான வார்த்தைகள் கொடுத்த அர்த்தம் அவளை ஏதோ செய்தது. இடையில் இருந்த ஒரு கையை எடுத்து அவளது விரல்கள் பிடித்து தன் கன்னத்தில் வைத்து

“ஆனால் இந்த கையால தான் அடிக்கனும், ஆள் வச்செல்லாம் வேணாம்டி வலி தாங்க மாட்டேன். கொலை கூட பண்ணு வேணாம்னு நான் தடுக்கலையே, உனக்கு என்ன இஷ்டமோ செஞ்சுக்கோ” சொல்லி முடிக்கையில், ஆழ்ந்த மௌனம் அவளிடம்.
அவள் அமைதி அவனை இன்னுமே மயக்க

“ஓய், சண்டை கோழி.. இத்தனை வருஷமா இல்லாமல் இந்த கொஞ்ச நாளா என்னை என்னமோ பண்ணிட்டடி நீ” முதல் வார்த்தைகள் வெளி வந்தாலும், கடைசி வார்த்தைகள் இறங்கியது என்னவோ லாவாவின் இதழ்களுக்குள் தான்.

திகட்டாத முத்தம் அவனுக்கு தித்திக்க, அவளையோ திணறடித்தது. சில பல நிமிடங்களின் பின் “ஆ..” வென அலறிக்கொண்டு விலகி அமர்ந்த விக்ரா, இரத்தம் துளிர்த்த இதழை இழுத்து கீழ்கண்ணால் நோக்கி “ஏண்டி கடிச்சு வச்ச” என இழுக்க

“அடுத்த முறை கிட்ட வந்த.. செருப்பால..” இம்முறை இவளது வார்த்தைகள் முடிக்கும் முன் “தாரளமா அடிச்சுக்கோ, ஆனால் அதுக்கு முன்னாடி” என விழிகளை விட்டு இதழ் நோக்கியவன் மீண்டும் புதைந்து கொண்டான் அவள் இதழ்களுக்குள்.

‘இவனுக்கு கடி பத்தாது என இன்னும் இன்னும் கடித்து வைக்க, அவளுக்காக வாகாய் முகத்தை கொடுத்து நின்றிருந்தான் விக்ரா.

ஒரு கட்டத்தில் தான் தான் அவனை கடித்து கொண்டிருக்கிறோம், அவன் அவளை ஒன்றுமே செய்யாதது தாமதமாய் உறைக்க, சட்டென அவனை பிரிந்து நின்றாள்.
இன்னும் அதிகமாய் இரத்தம் கசிந்த இதழலோடு, கண் மூடி அனுபவித்து நின்றிருந்தவனிடம் படிந்தது பார்வை.

“இரத்தம் வர கடிச்சிருக்கேன், இவனென்ன இப்படி அனுபவிச்சிட்டிருக்கான்” அதிர்ந்து நின்றது ஓர் நொடி தான், ‘லாவா ஓடிடு” என மனம் விழித்து கொள்ள, விக்ரா சுதாரிக்கும் முன் கதவை திறந்து அங்கே கூடத்தில் தன் அன்னை இல்லை என உணர்ந்து அங்கிருந்து ஓட்டமெடுத்திருந்தாள்.

கதவு திறக்கும் சத்தத்தில் தன்நிலை மீண்டவன் இதழில் வலிக்கு மாறாய் மகிழ்ச்சி ஊற்று.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!