பகுதி – 20
மறுநாள் காலை எழுந்த ரிஷி ஒரு முடிவுக்கு வந்திருந்தான். உதய்யை அழைத்து அவன் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டு வைத்த பின்பே அவன் வேலையைப் பார்க்க சென்றான்.
ரிஷி பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் இருந்து ராஜமோகனுக்கு அவ்வளவு வேலைகள் கிடையாது. அவனே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டதால்… அவரால் அரசியலில் முழு மூச்சாகத் தன் கவனத்தைச் செலுத்த முடிந்தது.
இப்போது ரிஷி வெளிநாடு சென்றிருப்பதால்…. அவனுக்குப் பதில் அலுவலகம் வந்திருந்தார். அப்போது அவரைப் பார்க்க ரிஷியின் உதவியாளன் உதய் வந்தான்.
சாதரணமாக ராஜ்மோகனோ ரிஷியோ நேரில் பேசிக் கொள்ளமாட்டார்கள். எதுவாக இருந்தாலும் அவர்களது உதவியாளர்கள் மூலமாகத் தான் பேசிக்கொள்வது.
ரிஷிக்கு யாரிடமும் ஆலோசனை கேட்பது பிடிக்காது. அவனே தன் சொந்த முயற்சியில் வரவேண்டும் என நினைப்பான். இப்போது கூட ராஜ்மோகனின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டால்… அவனின் புதுக் கம்பெனிக்காக இத்தனை அலைய வேண்டியது இல்லை… ஆனால் ரிஷி அதை விரும்பமாட்டான்.
உதய் தன்னைச் சந்திக்க வந்தால்… எதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என ராஜ்மோகனிற்கு நன்றாகத் தெரியும்.
[the_ad id=”6605″]
“சார் சாதனா மேடம் பாஸ்போர்ட் அப்புறம் அவங்க ஐடி ப்ரூப் வேணும் சார்.”
“எதுக்கு உதய்?”
“சார் அவங்களுக்கு லண்டன் போக டிக்கெட் போட சொன்னார். விசாவும் வாங்கணும்.”
உதய் சொன்னதைக் கேட்ட ராஜ்மோகனின் முகத்தில் மெல்லிய முறுவல்…. வழிக்கு வந்துட்டியா மகனே என நினைத்துக் கொண்டார்.
“அப்புறம் சார் வேற யார்கிட்டயும் இதைப் பத்தி சொல்ல வேண்டாம்னு சொன்னார். சாதனா மேடமுக்கு கூட இப்ப சொல்ல வேண்டாமாம், அவரே சொல்லிப்பாராம்.”
“சரி உதய் நான் உடனே ஏற்பாடு பண்றேன்.”
மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்த ராஜ்மோகன் சாப்பிடும் வேளையில் சாதனா பரீட்சை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.
“பரீட்சை நல்லா எழுதினியா மா…”
“ம்ம்… நல்லா எழுதினேன் மாமா…”
“எப்ப உனக்குப் பரீட்சை முடியுது?”
“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முடிஞ்சிடும்.”
“ஓ சரி மா… சாப்பிட்டதும், உன்கிட்ட இருக்கிற ஐடி ப்ரூப் அப்புறம் உன்னோட பாஸ்போர்ட் கூட வேண்ணும்.”
“இப்பவே கொண்டுட்டு வரட்டுமா மாமா…”
“இல்லை முதல்ல உட்கார்ந்து சாப்பிடு…” அவர் சொல்ல சாதனாவும் தட்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“இப்ப எதுக்கு இதெல்லாம் கேட்கிறீங்க?” ஜோதி கேட்க….
சாதனாவே எதுவும் கேட்கவில்லை… இவ வாய் சும்மா இருக்கா பாரு… இதுக்குத்தான் ரிஷி இவகிட்ட கேட்காம நம்மகிட்ட கேட்டிருக்கான். இந்நேரம் உளறி வச்சிருப்பா என நினைத்தவர், “சாதனாவும் இனி நம்ம வீட்டு ஆளு இல்லையா…. எல்லாத்திலேயும் அவ பேரும் இனி சேர்க்கணுமே அதுக்குத்தான். சரி நீ தொணதொணன்னு பேசாம கொஞ்சம் என்னைச் சாப்பிட விடு.” என அவர் எரிந்து விழ…. ஜோதி வாயை மூடிக் கொண்டார்.
சாதனா கொண்டு வந்து கொடுத்ததை, ராஜ்மோகன் உடனே ஒரு ஆள் விட்டு உதய்யிடம் சேர்த்து விட்டார்.
ரிஷிக்கு அன்றைக்குப் பிறகு அவனாகச் சாதனாவை அழைக்கவே இல்லை… சாதனாவாக அழைத்தாலும் இரண்டு ஒரு வார்த்தை பேசிவிட்டு உடனே வைத்து விடுவான்.
ஹப்பா… அன்னைக்கு ஒருநாள் பேசினதே அதிசயம் தான். இதே அவனே விரும்பி திருமணம் செய்திருந்தால் இப்படியா இருப்பான் என நினைத்து வருந்துபவள், அவனைப் பற்றித் தெரிந்து தானே திருமணம் செய்து கொண்டாய். அதனால் பொறுமையாக இரு… என அவளே தன்னைத் தேற்றியும் கொள்வாள்.
ஒருவழியாகச் சாதனாவின் கடைசிப் பரிட்சையும் வந்துவிட்டது. அன்று காலை கல்லூரிக்கு கிளம்பும் போதே மனதில் ஒரு குறுகுறுப்பு. அவளுக்குப் போன வாரமே மாதவிடாய் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை…
பரீட்சை நேரத்தில் வராமல் இருந்ததே நல்லது என அவள் கண்டுகொள்ளவில்லை… அனால் இப்போது ஒருவேளை குழந்தையாக இருக்குமோ என நினைக்கும் போதே பரபரப்பாக இருந்தது.
[the_ad id=”6605″]
வேண்டாம் ரொம்ப ஆசைப்படாதே… அப்புறம் இல்லைன்னா உனக்குத் தான் கஷ்ட்டமா இருக்கும் என நினைத்தவள், பரீட்சை முடிந்து பார்த்துக்கொள்வோம் எனக் கல்லூரிக்கு கிளம்பினாள்.
ஒருவழியாகப் பரீட்சை முடிந்து கல்லூரி மருத்துவமனையில் அவளுக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்க்க… அவள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சாதனா மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தாள். அதுவும் குழந்தையை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நேரத்தில் குழந்தை உண்டானது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரிஷியை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது.
“கிட்டத்தட்ட நாற்பது நாள் ஆச்சு இல்லையா… வா ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்திடுவோம்.” மருத்துவர் சித்ரா சொல்ல… சாதனாவும் சரி என்றாள்.
ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும், அதைப் பார்த்த சித்ரா “இப்ப ஹார்ட் பீட் தெரியாது. ஆனாலும் குழந்தை சரியான இடத்தில உருவாகி இருக்கான்னு பார்த்துகிறது அவசியம். எல்லாம் சரியாத்தான் இருக்கு.” என்றாள்.
“உங்க வீட்ல தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க இல்லையா சாதனா… அதுவும் முதல் குழந்தை கல்யாணம் ஆனதுமே உண்டாகி இருக்க….முதல் குழந்தை இருப்பத்தஞ்சு வயசுக்கு உள்ள பிறக்கிறது தான் நல்லது. அதனால நீ இப்ப உண்டானது சரிதான்.”
சித்ரா பேசிக்கொண்டே செல்ல சாதனா அமைதியாக இருந்தாள். “என்ன சாதனா அமைதியா இருக்க?”
“இல்லை ரிஷி ஊர்ல இல்லை… அதனால அவங்க வந்ததும் தான் இதை வீட்ல சொல்லணும்.”
சாதனா நினைப்பது சித்ராவுக்குப் புரிந்தது. எல்லாப் பெண்களுமே குழந்தை உண்டானதை முதலில் தன் கணவனிடம் நேரில் சொல்லவே ஆசைப்படுவார்கள்.
“ரிஷி எப்ப வருவாங்க சாதனா?”
“இன்னும் பத்து பதினஞ்சு நாளுக்குள் வந்திடுவாங்க.”
“அப்ப சரி இந்த ரிப்போர்ட் எல்லாம் இங்கயே இருக்கட்டும். நீ டெஸ்ட் பண்ணி பார்த்த மாதிரி வீட்ல காட்டிக்காத…”
“ம்ம்…. சரி.”
“நீயே ஒரு டாக்டர் உனக்கே தெரியும். இந்த மாதிரி நேரத்தில எப்படி நடந்திக்கனும்னு. நல்லா ஹெல்தியா சாப்பிடு… மனசை அமைதியா வச்சிக்கோ…. இப்போதைக்குப் போலிக் ஆசிட் அப்புறம் கொஞ்சம் வைட்டமின் மாத்திரை போதும், அறுபது நாள் கழிச்சு வா.. திரும்ப ஒரு ஸ்கேன் எடுப்போம்.”
மருத்துவமனையில் இருந்து கிளம்பிய சாதனாவிற்கு இப்போது தனிமையில் இருக்க வேண்டும் போல் இருந்ததால்…. தன் அம்மா வீட்டிற்குச் சென்றாள்.
அவள் வீட்டில் யாரும் இல்லை… சந்தானம் வெளியே சென்றிருந்தார். வெற்றியும், ப்ரீதவும் இன்னும் தேன்நிலவில் இருந்து திரும்ப வில்லை. இருவரும் வேறு நாடுகளுக்கும் சென்றிருந்தனர். வீட்டிற்கு வந்ததும் அவள் ஜோதிக்கு அழைத்துச் சொன்னாள்.
“அத்தை அப்பாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அதுதான் இங்க வந்துட்டேன்.”
“சரி சாதனா, இங்கேயும் ரிஷி இல்லையே… நீ வேணா அங்கயே ரெண்டு மூன்னு நாள் தங்கிட்டு வா…” ஜோதி சொன்னது சாதனாவிற்கு உண்மையில் மிகவும் ஆறுதலாக இருந்தது.
அந்த வீட்டில் இருந்து கொண்டே தன் மாமியாரிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பது, என அது வேறு குற்ற உணர்வாக இருந்தது. இப்போது தான் மனம் லேசானது போல் இருந்தது. சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்தவளுக்கு, குழந்தை உண்டானதை நினைத்து முழுமையான மகிழ்ச்சி இல்லை…
முதலில் இதை ரிஷி எப்படி எடுத்துக்கொள்வானோ தெரியவில்லை… தானே அவனுக்குப் பிடிக்காத மனைவி, இதில் குழந்தை வேறு… ரிஷி மட்டும் குழந்தையை வெறுத்தாளோ அல்லது அலட்சியம் காட்டி நடத்தினாலோ சாதனாவால் தாங்கவே முடியாது.
சிறிது நேரம் எதையெல்லாமோ நினைத்து அழுதவள், அப்படியே உறங்கி விட்டாள். மாலை எழுந்த போது மனம் கொஞ்சம் லேசானது. முகம் கழுவி வேறு ஆடை மாற்றி அவள் வந்த போது… கீழே சந்தானம் வந்திருந்தார்.
[the_ad id=”6605″]
“ வா டா சாதனா பரீட்சை முடிஞ்சுதா…”
“முடிஞ்சுது பா…. அதுதான் உங்க கூடக் கொஞ்ச நாள் இருக்கலாம்னு வந்தேன்.”
“இருடா… எத்தனை நாள் வேணாலும் இரு.” சந்தானம் மகிழ்ச்சியாகச் சொல்ல.. சாதனாவிற்கு ம் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.
ரொம்ப நேரம் அவள் தந்தையோடு பேசிக்கொண்டு இருந்தவள், இரவு உணவு முடித்து அறைக்குச் சென்று உறங்க தயாராக அவளை ரிஷி அழைத்தான்.
அவன் அழைத்ததும் சாதனாவிற்கு ப் பரபரப்பாக இருந்தது. அவனிடம் குழந்தையைப் பற்றிச் சொல்லிவிடுவோமா என நினைத்தபடி அவள் அழைப்பை ஏற்க…. ஆனால் அவன் சொன்னதைக் கேட்டு இன்னும் நொந்து போனாள்.
அவனால் இன்னும் பத்து நாட்களில் வர முடியாதாம், மேலும் சில நாட்கள் ஆகுமாம். அவன் சொன்னதைக் கேட்டதும், ஏற்கனவே இருந்த மன உளைச்சலில் அவளுக்கு அழுகை வந்தது.
“ரொம்பச் சந்தோஷம் அங்கேயே இருங்க…” என்றவளின் குரலில் இருந்த அழுகையை உணர்ந்த ரிஷி, மேலும் அவளை வதைக்க விரும்பாமல்… “ஹே… இப்ப எதுக்கு அழுகை? நான் தான் வர முடியாதுன்னு சொன்னேன். ஆனா நீ இங்க வரலாம்.” என்றான் கூலாக.
தான் எப்படித் திடிரென்று போவது? சாதனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை…. “விளையாடாம ஒழுங்கா சொல்லுங்க ரிஷி.” எனச் சாதனா எரிச்சலாகக் கேட்க….
இன்று ஏனோ மூட் சரியில்லாமல் இருக்கிறாள் என ரிஷிக்கு நன்றாகவே புரிந்தது. “என்ன ஆச்சு சாதனா? பரீட்சை நல்லா எழுதலையா….” என்றான் கனிவாக.