செழியன் அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அங்கு ஒரு உற்சாக வெள்ளம் வந்ததைப் போல இருந்தது.
முனைவர் இராஜகோபால் அவர்களைப் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்க முனைய, செழியன் அவரைத் தடுத்துவிட்டுத் தானே அறிமுகம் செய்துகொண்டார்.
“நான்தான் செழியன், ஐயா சொல்லிருப்பாரு… புராண தொல்லியல் நிபுநன்! மித்திக்கல் ஆர்க்கியாலஜி… எங்க டிபார்ட்மெண்ட் கணக்குப்படி கிறுக்கன்!”
செழியன் உற்சாகமாக நகைத்தார். அவருக்குச் சுமார் நாற்பது வயதுதான் இருக்கும், ஆனால் இருபத்தைந்து வயது இளைஞனைப் போலத்தான் இருந்தார், முன் தலையில் இருந்த நரைகூட அழகாக இருந்தது.
செழியன் அவர்களை மெல்ல நோட்டம்விட்டார். அவரது பார்வை விக்ரம் மீது நின்றது.
”விக்ரம்? மீண்டும் விக்ரமாதித்யன்? ஹா ஹா!” மீண்டும் சிரிப்பு.
விக்ரம் இலேசாய் நெளிந்தான்.
”உங்க ரெண்டு பேருல ஒருத்தர் விஷாலி, ஒருத்தர் தேவி… சரியா?”
செழியன் விஷாலியையும் தேவியையும் கேட்டதும் இருவரும் புன்னகைத்தனர்.
அருணுக்கு அவர்மீது ஒரு இலேசான வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
“அருண்?”
அருண் கடமைக்காகச் சிரித்தான்.
[the_ad id=”6605″]“இவர்தான் பட்டியா?”
விக்ரம் “ஆம்” எனத் தலையாட்டினான்.
”சரி, நாம விஷயத்துக்கு வருவோம்… என்ன?”
விக்ரம் தலையாட்டினான்.
”சரி சொல்லுங்க, நீங்கதான் விக்ரமாதித்யர். அடுத்து என்ன?”
விக்ரம் பட்டியைப் பார்க்க, பட்டி பேச விருப்பமின்றி அமைதியாக விக்ரமை உற்றுப் பார்த்தான்.
”சரி நானே சொல்றேன்… நான்தான் விக்ரமாதித்யர்னு இவன் சொல்றான்… எனக்கும்… எனக்கும் அதுல கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டிருக்கு…”
விக்ரம் தயக்கத்தோடுதான் சொன்னான்.
”ஆங்- அந்தக் கணையாழி?”
செழியன் சட்டெனக் கேட்டார்.
எப்படி இராஜகோபால் ஐயா இவ்வளவு விவரங்களையும் இவருக்கு அதற்குள் சொன்னார் என்று அனைவருக்குமே வியப்பாக இருந்தது.
”ஆமா…” விக்ரம் பட்டியைப் பார்க்க, பட்டி வேண்டா வெறுப்பாய் அந்த மோதிரத்தை எடுத்துச் செழியன் கையில் கொடுத்தான்.
செழியன் ஆவலுடன் அந்த மோதிரத்தை வாங்கிப் பார்த்தார்.
”இந்தக் கற்கள் சூரிய வடிவத்துல அமைக்கப்பட்டிருக்கு, இது விக்ரமாதித்யரோட சின்னம்னு நம்பலாம், ஆனால் சூரியன் பல அரசர்களின் சின்னங்களில் இருந்திருக்கு…”
செழியன் தனக்குத்தானே சொல்லிக்கொள்பவரைப் போலச் சொன்னார்; சிந்தனையுடன் அம்மோதிரத்தை உற்றுப் பார்த்தார்.
”உள்பக்கம் ஏதோ எழுத்து இருக்கு… நாகிரி மாதிரி இருக்கு ஆனா ரொம்ப தேய்ஞ்சு போயிருக்குச் சரியா படிக்க முடியல…”
அனைவரும் ஆர்வமானார்கள். செழியன் எழுத்து இருக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டியவாறே மோதிரத்தை இராஜகோபால் ஐயாவிடம் காட்டினார்.
”ஆமா, பழைய நந்திநாகிரி எழுத்து மாதிரிதான் இருக்கு, கிட்டத்தட்ட பிராமி போலவும் இருக்கு…”
இராஜகோபால் மோதிரத்தை செழியனிடமே திருப்பிக்கொடுத்தார்,
”எனக்கு இதை வாங்கிப் பார்க்கனும்னே தோனல!” என்றார் புன்னகையுடன்.
”நீங்க இவங்கள முழுசா நம்பிருக்கவே மாட்டீங்க… நல்ல வேள என்னை அறிமுகப்படுத்தி வெச்சீங்க!”
செழியன் விக்ரமையும் பட்டியையும் மாறி மாறிப் பார்த்தார்,
”இந்த மோதிரத்தை நான் கொஞ்ச நாள் வெச்சுக்கவா? இதக் கொஞ்சம் ஸ்டடி பண்ணிப் பார்ப்போம்…?”
விக்ரம் ’அதனாலென்ன!’ என்பதைப் போலத் தோளைக் குலுக்க, பட்டி ‘முடியாது’ என்று தலையசைத்தான்.
”அது அண்ணாகிட்டதான் இருக்கனும், இன்னும் அவரால அத முழுசா உள்வாங்கிக்க முடியல, அவர் அதைக் கொஞ்சம் கொஞ்சமா கைல போடப் பழகிக்கனும்…”
பட்டி கறாராய்ச் சொன்னான்.
செழியன் ஏதோ சொல்வதற்குள் விக்ரமே குறுக்கிட்டான்,
”பரவால்ல, கொஞ்ச நாள் அது உங்ககிட்டயே இருக்கட்டும்! நான் மெல்லப் பழகிக்குறேன் அதை…”
”அண்ணா… உங்க மூலமாத்தான் நம்மால உங்க வாளைக் கண்டுபிடிக்க முடியும்… அதுக்கு நீங்க-”
பட்டி முடிக்கும் முன் செழியன் குறுக்கிட்டார்,
”ஆமா, வாள்… விக்ரமாதித்யரின் வாள்… அத முதல்ல கண்டுபிடிக்கனும்ல? அதுக்கு ஏதோ பேர் கூட சொன்னாரே ஐயா… ம்ம்ம்-”
”மன்யாக்னி” பட்டி இடையிட்டான்.
”ஆங்… மன்யாக்னி… “மன்யு”னா கோவம், “அக்னி” – நெருப்பு… கோவம் என்ற நெருப்பு அல்லது நெருப்பைப் போன்ற கோவம்… சினத்தீ… சினத்தீ!”
சட்டென செழியனின் முகத்தில் ஒரு பிரகாசம் பரவியது. அவர் இராஜகோபால் ஐயாவை நோக்கினார்.
”என்ன செழியன் ஏதாச்சு புலப்பட்டுச்சா?”
[the_ad id=”6605″]”இந்தச் சினத்தீ-ங்குற சொல்லை எங்கேயோ படிச்சிருக்கோமே சார்… உங்களுக்கு நினைவுக்கு வருதா?”
இருவரும் சற்று நேரம் மௌனமானார்கள். அனைவரும் அவர்களை ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
”இந்தா செழியன், உனக்குப் பிடிச்ச மாதிரி காப்பி…”
இராஜகோபால் ஐயாவின் மனைவி செழியனுக்கு அருகில் காப்பிக் கோப்பையை வைத்தார்.
”ரொம்ப நன்றிம்மா… நீங்க ஒருத்தர்தான் என் டேஸ்டுக்கு ஏத்தா மாதிரி காப்பி தரீங்க! காப்பி சரியா இல்லேனா எனக்கு அன்னிக்குப் பூரா கெட்டுப்போய்டும்…”
செழியன் சொல்லிக்கொண்டே காப்பியை எடுத்து ஒருவாய்ப் பருகினார்.
”தெரியுமே… போன தடவ எக்மோர் மியூசியம்ல அந்தக் காப்பியக் குடிச்சுட்டு நீ புலம்பிட்டே இருந்தத நான் மறக்கவேமாட்டேன்… ஆமா, ஏன் மனைவியக் கூட்டிட்டு வரல?”
இராஜகோபால் ஐயாவின் மனைவி “மியூசியம்” என்றதும் செழியனின் முகத்தில் மின்னலடித்தது, அதன் பின் அவர் மனைவி பற்றிக் கேட்டதைச் செழியன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
”அதேதான்… சார், ஞாபகம் வந்துடுச்சு… எக்மோர் மியூசியம்…”
செழியன் சட்டெனப் பரப்பரப்பானார்,
”விக்ரம் கிளம்புங்க நாம உடனே எக்மோர் மியூசியம் போவோம்…”
சொல்லிக்கொண்டே எழுந்தார்,
”கிளம்புங்க, போற வழில எல்லாம் விளக்குறேன்… கமான்…”
”சாப்ட்டு போங்களேன்…” என்று இராஜகோபால் ஐயாவின் மனைவி சொன்னதை யாரும் கவனிக்கவில்லை!
* * *
அவர்களின் மகிழுந்து (கார்!) எழும்பூர் அருங்காட்சியகத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது.
”என்ன செழியன் இப்படி அரக்கபறக்கக் கிளப்பிக் கூட்டிட்டு வந்துட்டீங்க? இராஜகோபால் ஐயாகிட்டயும் அவர் மனைவிகிட்டயும் போய்ட்டு வரோம்னு சரியா சொல்லிக்கக் கூட முடியல!”
விக்ரம் அலுப்பாய்க் கேட்டான்.
”அதான… அடுத்தமுறை போனா அவங்க கோச்சுப்பாங்க!”
விஷாலி பரிதாபமாய்ச் சொன்னாள்.
”பழிய என்மேல போடுங்க… என்னப் பத்தி அவங்களுக்கு நல்லாவே தெரியும்! ஒரு விஷயம் தோனிச்சுன்னா உடனே அதச் செஞ்சுடனும் எனக்கு… இல்லேனா இருப்புக்கொள்ளாது!”
”அவங்ககிட்ட தீபாளி ஷாப்பிங் பிளான் பத்திக் கேக்கனும்னு இருந்தேன்…”
விஷாலியின் குரலில் இலேசான ஏமாற்றம் இருந்தது.
”பேசாம இவள அங்கேயே விட்டுட்டு வந்திருக்கலாம், நொய்நொய்னுட்டு…”
அருண் வண்டியை ஓட்டிக்கொண்டே போலியான எரிச்சலோடு சொன்னான்.
”ரோட்டப் பார்த்து வண்டி ஓட்டுடா… எங்கயாச்சு போய் முட்டிடாத!”
விஷாலியின் குரலில் இருந்த கோவம் உண்மை என்றே தோன்றியது.
”ஐயைய… என்ன இது சின்னப் பசங்க மாதிரி அடிச்சிக்கிட்டு!”
தேவி அலுத்துக்கொண்டாள்.
”எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருந்தீங்கனா நாம எங்க போறோம், எதுக்குப் போறோம்னு விளக்க எனக்கு வசதியா இருக்கும்!”
செழியன் அவர்களை அமைதியாக்கினார்.
”நான் புராணக் கதைகளை ஆராய்ச்சி பண்ணத் தொடங்கின காலத்துல கொஞ்ச நாள் விக்ரமாதித்யரைப் பத்தியும் ஆராய்ச்சி பண்ணேன். உண்மையான விக்ரமாதித்யர் யாருன்ற கேள்விதான் முதன்மையானது… இரண்டாம் சந்திரகுப்தர்தான் விக்ரமாதித்யர்னு பரவலா நம்பப்படுது…”
அவர் சந்திரகுப்தர் பேரைச் சொன்னதும் அனைவரும் வேகமாய்த் தலையை ஆட்டினர்.
”ஓ… இராஜகோபால் ஐயா சொல்லிட்டாரா?”
”ஆமா… ஆனா, வேறெதுவும் பெருசா சொல்லல!”
”ம்ம்ம்… அவங்களைலாம் பொறுத்தவரை கதைல வர விக்ரமாதித்யர் கற்பனை… ஆனா நான் அப்படி நம்பல…”
”ஏன்?” விஷாலி ஆவலாய்க் கேட்டாள்.
விக்ரம் ஆர்வம் காட்டாமல் ஆனால் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.
”நிறைய காரணம் இருக்கு, முதன்மையான காரணம் விக்ரமாதித்யரின் எதிரினு சொல்லப்படுற சகர்களும் மிலேச்சர்களும் நிஜம்…”
”சகர்… இந்தப் பேரை நான் எங்கேயோ கேள்விப்பட்டேனே…”
அருண் சாலையைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.
”நான்தான் டா உன்கிட்டச் சொன்னேன்… என்கிட்டச் சொன்னது இந்தப் பட்டி!” விக்ரம் பதிலளித்தான்.
”ஓ ஆமா… உன் மேலயும் என் மேலயும் வீசப்பட்ட கத்தி சகர்களோடதுனு இவன் சொன்னான்ல?” விஷாலியும் நினைவு வந்தவளாய்ச் சொன்னாள்.
அனைவரது பார்வையும் பட்டியின் மீது சென்றது.
”என்னது? கத்தியா?” செழியன் வியப்பாய்க் கேட்டார்.
”ஆமா, முந்தாநாள் இந்தப் பிரச்சனை ஆரம்பிச்சப்ப விக்ரம் மேலயும் விஷாலி மேலயும் கொலை முயற்சி நடந்துச்சு… உடனே இவங்களுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணிட்டோம்!”
தேவி காவல்துறை தொனியில் கூறினாள்.
”வாட்?! என் தப்புதான், என்னோட ஆர்வத்துல உங்க கதையை முழுசாக் கேட்டுக்க மறந்துட்டேன்… சரி, ஆரம்பத்துலேர்ந்து சொல்லுங்க…”
”முதல்ல உங்க விக்ரமாதித்யர் ஆராய்ச்சியப் பத்திச் சொல்லுங்களேன்…”
விஷாலிக்குச் செழியனின் கதையைக் கேட்பதில்தான் ஆர்வமிருந்தது.
[the_ad id=”6605″]ஆனால், அவர்களது பயணத்தின் மீதி நேரம் முந்தைய இரண்டு நாள்களில் நடந்த நிகழ்வுகளைச் செழியனுக்குச் சொல்வதில் கழிந்தது.
”அந்தக் குறுங்கத்திகள் இப்ப எங்க?”
”அத ஃபாரன்சிக் லேப்புக்கு அனுப்பிருக்கேன்…”
தேவி பதிலளித்தாள்.
செழியனின் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் தெரிந்தது.
அவர் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்குள் வண்டி அருங்காட்சியக வளாகத்தில் நுழைந்தது.
அனைவரையும் வாசலருகில் இறக்கிவிட்டு அருண் வண்டியை நிறுத்திவிட்டு வரச் சென்றான்.
விக்ரம் அவர்களுக்கு நுழைவுச் சீட்டு வாங்க எண்ணி நகர்ந்தான், செழியன் முதலில் அவனைத் தடுத்தார். பின் ஏதோ எண்ணியவராக “சரி வாங்கிட்டு வாங்க” என்றார்!
விக்ரம் தோளைக் குலுக்கிவிட்டு நடந்தான்.
அருணும் விக்ரமும் மீண்டும் அவர்களோடு இணைந்துகொள்ள வந்தபோது விஷாலி ஆர்வம் பொங்க கைகளால் அபிநயம் பிடித்தபடி செழியனோடு பேசிக்கொண்டிருந்தாள்.
விக்ரம் அருணின் தோளில் கைவைத்து மெல்ல அழுத்தினான்.
”அவ இன்னும் சின்னப் பொண்ணு மாதிரி அருண்… புராணம், கதை, மந்திரம்னதும் உற்சாகமாயிட்டா… நீ தப்பா எடுத்துக்காத!”
அருண் அசடு வழியச் சிரித்தான்.
”ச்சேச்சே… நான் ஏன் தப்பா எடுத்துக்கப் போறேன்… விஷாலி பத்தி எனக்குத் தெரியாதா?”
அவன் சகஜமாகச் சொல்ல முனைந்தாலும் அவனது குரலில் இலேசான பொறாமை தொனித்தது.
”போலாமா? நாம நேரா ஆர்க்கியாலஜி செக்ஷன் போறோம்… அங்க ஒரு கல்வெட்டை உங்களுக்குக் காட்டப் போறேன்…”
செழியன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தார். விஷாலி அவரைக் கேள்விகள் கேட்டபடியே உடன் நடந்தாள். மற்ற மூவரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
அருணின் பார்வை விஷாலி மீதே இருந்தது.
தேவி விக்ரமின் தோளை உரசியபடி வந்தாள்.
”என் கூட ஒரு நாள் அவுட்டிங் வாடான்னா எவ்ளோ சீன் போடுவ? இப்ப கெழட்டு ஆர்க்கியாலஜிஸ்டுங்க பின்னால நாள் பூரா சுத்துற!”
தேவியின் கண்களில் இருந்த கிண்டலும் குறும்பும் விக்ரமைக் கிறங்கடித்தன.
விக்ரம் பதில் பேசாமல் அவளை நோக்கி ஒரு வசீகரப் புன்னகையை மட்டும் வீசினான்.
”இப்படிலாம் இளிச்சு என்னைச் சரிக்கட்ட முடியாது மிஸ்டர் சார்மிங்!”
தேவி இன்னும் அருகில் நடந்தாள்.
”இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலமா… ம்ம்ம்… நடத்துங்க!”
அருண் மெல்ல சொல்ல, விக்ரம் அவனது தோளில் குத்தினான். தேவி “க்ளுக்” என்று சிரித்தாள்.
செழியனும் விஷாலியும் திரும்பிப் பார்த்தனர்.
”சீக்கிரம் வாங்கப்பா…”
செழியன் அவர்களை அருங்காட்சியகத்தின் முதன்மைக் கட்டிடத்தின் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு இருந்த கல்வெட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு வந்தவர் சட்டென ஒரு கல்வெட்டின் அருகில் நின்றார்.
அது பாண்டியர் காலத்து கல்வெட்டு என்று அருகில் இருந்த பெயர்ப்பலகை அறிவித்தது.
”இது என்ன மொழி?” விஷாலி ஆர்வத்தோடு அருகில் சென்று பார்த்தாள்.
”தமிழ்தான்! வட்டெழுத்து… கி.பி. ஏழாம் நூற்றாண்டு!”
செழியன் சொல்லவும் அவளது ஆர்வம் வியப்பாக மாறியது.
”தமிழா? கன்னடம், மலையாளம், மராட்டி, ஹிந்தி எல்லாம் கலந்து எழுதினா மாதிரி இருக்கு!!”
”அதான, விவேக் ஒரு ஜோக்ல சொல்றா மாதிரி ஜிலேபிய பிச்சுப் போட்டா மாதிரி இருக்கு!”
அருண் கிண்டலாகச் சொல்ல விஷாலி அவனை முறைத்தாள்.
”விஷயம் தெரியலேனா நல்லா கிண்டல் பண்ண மட்டும் தெரிஞ்சிருக்கு!”
”ஹலோ, கொஞ்ச நேரம் முன்னாடி இது என்ன மொழின்னு கேட்டவ நீதான?”
அருண் மல்லுக்கு நின்றான்.
”இனிமே இந்தப் பசங்கள கிரஷ்லயே விட்டுட்டு வா விக்ரம்!”
தேவி போலியான எரிச்சலோடு சொன்னாள்.
பட்டி உண்மையான எரிச்சலோடு வேறுபுறம் பார்த்துக்கொண்டிருந்தான். செழியன் இதையெல்லாம் மிக இரசித்தார்.
”சரி சரி, இது தமிழ்தான்… இருங்க இதை நான் படிச்சுக் காட்டுறேன்…”
செழியன் கல்வெட்டின் அருகில் சென்று சொற்களை விரலால் சுட்டிக்காட்டியபடியே படித்தார்:
”ம்ம்ம்… ஆங்… இதோ…
…கொடுவியல் மிலேச்சர் குதிரை ஊஉர்ந்து
வடபுலம் பொருத ஞான்று மடங்காது
பகைமுடித் திடவென வஞ்சின முரைத்து
சினத்தீ உயர்த்திச் சீவிக் கிரமர்
களம்புக நட்பின் களம்புக எழுந்த
பெரும்பேர்ச் செழியன் மருக, இரும்பூர்
எயிற்பல செற்ற அயிற்கை வேந்தன்…”
”உண்மைலயே தமிழ்தானா?” அருண் இடைவெட்டினான்.
செழியன் நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
”தமிழேதான்… ஸ்ரீ மாறன் வல்லபன்ற இடைக்கால பாண்டிய மன்னனோட மெய்கீர்த்தி இது, இதுல அவனது முன்னோரான ஒரு பாண்டியன் குறிக்கப்படுறான், “பெரும்பேர்ச் செழியன்”னு, அந்தப் பெரும்பேர்ச் செழியன் ஸ்ரீவிக்ரமர்ன்ற பேரரசர் வடக்கு திசைல மிலேச்சர் படையெடுத்து வந்த போது அவங்களை எதிர்த்துப் போருக்குப் போனாராம், அப்போ நட்பு காரணமா இந்தப் பெரும்பேர்ச் செழியனும் அவர்கூட போருக்குப் போனான்னு இந்த மெய்கீர்த்தி குறிக்குது…”
விஷாலி மட்டும் பள்ளி சுற்றுலாவில் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்கும் மாணவியைப் போல மரியாதை கலந்த ஆர்வத்தோடு கேட்டாள். மற்றவர்கள் சற்று அசுவாரசியமாகவே கவனித்தனர். பட்டி மெல்லக் கொட்டாவி விட்டான்.
செழியன் அவர்களைக் கவனிக்காதவராய்த் தொடர்ந்தார்,
”இதுல அந்த வடபுல மன்னர், ஸ்ரீ விக்கிரமர் போருக்குப் போனபோது “சினத்தீ உயர்த்தி”னு குறிப்பிடப் பட்டிருக்குப் பாருங்க…”
[the_ad id=”6605″]செழியனின் விரல் அந்தச் சொற்களைத் தடவியது…
”இதை முன்னாடி படிச்ச போது “சினத்தீ” ஏதோ ஒரு கவிதைக்காகச் சேர்த்த சொல்னு நினைச்சேன், ஆனா, இப்ப இதுக்கு வேறொரு பொருள் கிடைக்குது…”
செழியன் சொல்லி முடித்து அவர்கள் ஒவ்வொருவரையாக நிதானமாக நோட்டம்விட்டார்.
அவரது பார்வை இறுதியாக விக்ரம் மீது வந்து நின்றது, விக்ரம் தலையை மெள்ள ஆட்டினான்.
”மன்யாக்னியத்தான் தமிழ்ல சினத்தீனு சொல்லிருக்காங்க?”
”அதேதான்!”
செழியனின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை தோன்றியது.
அடுத்த நொடியே அவர் முகம் கறுத்தது. சட்டென நகர்ந்து விஷாலியை அவர் தள்ளிவிட்டார்.
என்ன நடக்கிறது என்று அனைவரும் புரிந்துகொள்ளும் முன் செழியன் தள்ளாடிக் கல்வெட்டின் மீது சாய்ந்தார்,
அவரது வலது தோளுக்கருகில் ஒரு சிறிய கத்தி இறங்கியிருந்தது!
தொடரும்…