திங்கட்கிழமை அலாரம் அடிப்பதற்கு முன்பே விழித்திருந்தான். இரவு முழுதுமே அறை குறை தூக்கம்தான். சிந்துவின் பின்னேயே இவனும் சீக்கிரம் கிளம்பிவிட்டான். அவன் ஏரியா விட்டு, தள்ளிப்போய் வெறொரு அம்மன் கோவிலுக்குச் சென்று,
‘ரெண்டு வாரம் முன்னாடி வரை கல்யாணம், காதல் பற்றி யோசனையே இல்லாதவனை, இங்க வரவெச்சு, ஜாதகம் பொருந்தி வரணும்னு வேண்ட வெச்சிட்டயேமா, நல்ல படியா முடிச்சிகொடு.’ என்று மனதார வேண்டிக்கொண்டான்.
அலுவலகம் சென்று, வேலையில் மூழ்கிப்போனான். அப்படியாவது நேரம் சீக்கிரம் சென்றுவிடாதா என்று நப்பாசைதான். பதினொரு மணி போல, ஆடிட்டர் அழைப்பதாக சொன்னதும், அவர் அறைக்குச் சென்றான்.
“வா விக்ரம், உட்கார்”, என்றார் தணிகாசலம். தாம்பரத்தில் பிரபலமான ஆடிட்டர் என்றால் தயங்காமல் இவர் பெயரை சொல்லுவார்கள். விக்ரம், கல்லூரி படிக்கையில், பகுதி நேர் வேலைக்கு சேர்ந்தது முதல், அவன் சி.ஏ முடித்ததுவரை அவர் பார்வையில்தான். அவன் உழைப்பும் நேர்மையும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவன் மீது ஒரு தனி பாசத்தை உருவாக்கியிருந்தது.
“சொல்லுங்க சார்”, என்று அமர்ந்தான் விக்ரம்.
“ வாழ்த்துக்கள் விக்ரம். சிங்கப்பூர் ஆபீஸ்லர்ந்து இப்போதான் போன் பண்ணாங்க. உன்னை செலெக்ட் பண்ணிருக்காங்க. ஆபர் லெட்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் உன் மெயிலுக்கு. விசா எடுக்க, வேண்டிய ஃபாரம் எல்லாமும் அனுப்புவாங்க. நீ எல்லாம் ஃபில் பண்ணி, அவங்களுக்கு அனுப்பி,சரி பார்த்தப்பறம், கூரியர்ல அனுப்பணும். அப்பறம்தான் அவங்க சைடு வேலை ஆரம்பிக்கும். “
“ரொம்ப நன்றி சார், நாளாகவும் , செலக்ட் ஆகலயோன்னு நெனச்சிக்கிட்டேன். தோராயமா எப்போ சார் போகவேண்டியிருக்கும் ?” என்று சந்தோஷத்துடன் கேட்டான் விக்ரம்.
[the_ad id=”6605″]
“எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போ ஜனவரியா, எப்படியும் மே மாசம் கெளம்பவேண்டியிருக்கும். சரிதானே ? இரெண்டு வருஷ கான்ட்ராக்ட். அப்பறம் இரெண்டு பக்கமும் பிடிச்சிருந்தா திரும்ப போட்டுக்கலாம். அவங்களே, தங்க உனக்கு ஸ்டுடியோ அபர்ட்மென்ட் தந்துடராங்க. நீ சமைச்சிக்க கிட்ச்சன் இருக்கும். வீட்டுக்கான எல்லா பொருளும் இருக்காம், ஃபுல்லி ஃபர்னிஷ்ட். சமையலுக்கு வேண்டிய பாத்திர பண்டம் மட்டும் நீ எடுத்துக்கோ. “
“பொறுப்பான பையன் நீ. உன் அக்காவுக்கு ஒரு வருஷத்திலயே செட்டில் பண்ணிடலாம். அப்பறம், உன்னோட சேமிப்பா நீ சேர்த்துக்கலாம். ஆல் தி பெஸ்ட் விக்ரம்.” என்று வாழ்த்தினார்.
“நீ திரும்ப எப்ப வந்தாலும் உனக்குன்னு எப்பவும் இங்க இடம் இருக்கும். இரண்டு இல்லை, நாலு வருஷமானாலும் கூட. சரியா ? “, என்று கை குலுக்கி அனுப்பிவைத்தார்.
‘அப்போ போன்லதான் வேதாகூட காதல் பயிர வளக்கணும். அட கடவுளே !’ என்று நினைத்த அடுத்த நொடி, ‘டேய், இங்க இருந்தா மட்டும், நீயும் அவளும் பீச், சினிமான்னு ஊர் சுத்த விட்டுடுவாங்களாக்கும், இதுவே பெட்டர். வாட்ஸ்ப், FB liveனு பேசிக்கலாம்.’, என்றது மனம்.
‘ஜாதகம் பொருந்தினாதானே ? சிங்கபூர் வேலையும் கிடைச்சி, பொண்ணும் ஒரெ நாள்ள உனக்கு செட் ஆகற அளவுக்கு உனக்கு யோகம் இருக்கும்னு நெனக்குற ? அனேகமா, சிங்கபூர்ல ரஜினி ஓ ப்ரியான்னு தெருத்தெருவா சுத்துவாறே, அதையே, நீ வேற மாடுலேஷன்ல, ஓ வேதா வேதா, என் வேதா வேதான்னு, சுத்தப் போறே…’ என்று அவனை கவிழ்த்தது அறிவு.
எல்லா எண்ணங்களின் தலை மீதும் தட்டி, ஒரு வழியாக அமைதியாய் வந்து அமர்ந்தான். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான். ஆஃபர் லெட்டர் சரி பார்க்க வேண்டும், என்ன விவரங்கள் தேவை என்று பார்க்க வேண்டும். வீட்டிற்கு தகவல் சொல்லவேண்டும் என்று வேலைகளைப் பட்டியலிட்டான். என் கட்டுப்பாட்டில் உள்ள செயல்களை செய்கிறேன். பொருத்தம் கடவுளிடம். அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து வேலையை ஆரம்பித்தான்.
பர்வதம்மாவிற்கு பயங்கர சந்தோஷம். வேதாவின் ஜாதகம் வீட்டிற்கு வந்ததுமே இப்படி ஒரு நல்ல செய்தி, பிள்ளைக்கு ஒரு ஏற்றம் என்று ஆனந்தம் கொண்டார். பின்னே, மகளுக்கு, மொத்த பணமும் ஒரு வருடத்திற்குள் கொடுத்துவிடமுடியுமே. இன்னும் கூட செய்யலாமே என்று சென்றது அவர் எண்ணம்.
மாலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள மாலினி சற்று சீக்கிரம் வந்துவிட, ராகவனும் வந்து, ஐந்து மணி போல பர்வதம்மாவை அழைத்துக்கொண்டு ஜோசியரின் வீட்டிற்கு சென்றனர். கோமதியம்மாவின் ஜோசியர்தான் இருவருமே பார்ப்பது என்று ஞாயிரன்று கோவிலில் முடிவானது. பிரபலமானவர், இவர்களுக்குத் தெரிந்த ஒரிருவர், அவரிடம்தான் பொருத்தம் பார்த்தனர் என்றதும், பர்வதம்மா அவரே போதும் என்று முன்னதாகவே முடிவு செய்திருந்தார். திங்கள் காலையிலேயே விகரமின் ஜாதகத்தை ஜோசியருக்கு ஈமெயில் செய்திருந்தான் ராகவன்.
ஜோதிடர் சுந்தரமூர்த்தியின் வீட்டை அடைய, அங்கே அப்போதுதான் கோமதியும் அவர் கணவர் சௌந்தர்ராஜனும் உள்ளே நுழைந்திருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அவர் அழைக்கவும், நால்வரும் உள்ளே நுழைந்தனர். பரஸ்பர நல விசாரிப்பிற்குப் பின், இவர்கள் ஜாதகங்களை எடுத்து மேசைமேல் வைத்துவிட்டு, பேச ஆரம்பித்தார் சுந்தரமூர்த்தி.
“ விக்ரம், வேதவல்லி இரண்டு பேர் ஜாதகமும் பார்த்தேன். அருமையா பொருந்தி வருது. எட்டு பொருத்தம் அமோகமா பொருந்தறது. இரெண்டு பேருக்கும் ஒருத்தர் மைனஸ் மற்றவருக்கு பிளஸ்ஸா இருக்கு. இப்படி அமையரது கஷ்டம். புள்ளை, பொண்ணு இரெண்டு பேருக்கும், ஒருத்தரால ஒருத்தர் ஏற்றம் உண்டாகும். “ என்று அவர்கள் முகத்தைப் பார்த்தார். அனைவருக்குமே சந்தோஷம்தான்.
“ஆமாங்க, பொண்ணு ஜாதகம் வீட்டுக்கு வந்த நேரம்தான், பையனுக்கு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்கு.” என்று பெருமையாகக் கூறினார் பர்வதம்.
“ஓ, எப்போ போகணும் ?” என்று கேட்டார் சுந்தரமூர்த்தி உடனே.
“மே மாசம்னு சொன்னான். ஏன் சார் ?”, என்று ராகவன் கேட்டான்.
“ஒரு சின்ன சிக்கல் இருக்கு. மே மாசம்தானே. பரவாயில்லை.” என்றவர்.
“கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்கும்போது குழந்தை பாக்கியம், ஆயுள் ரெண்டும் இருக்க, மஹேந்தர பொருத்தம் பார்ப்போம். அது சிறப்பா இருக்கு. இதில்லாம, பையன் ஜாதகத்தில ஐந்தாம் வீட்டுக்கான அதிபதி எப்படி இருக்கான்னும், எந்த வீட்டில் இருக்கான்னும், அதே மாதிரி பொண்ணுதுல ஐந்து, ஒன்பதாம் வீட்டையும் பார்க்கணும். இதில்தான் பையனோட ஜாதகத்தில் கொஞ்சம் மைனஸ். கண்டிப்பா புத்ர பாக்கியம் இருக்கு, ஆனா, அதுக்கு பெண்ணோட ஜாதகம் இதில் பலமா இருக்கணும். இது வேதாவுக்கு பலமா இருக்கு.
இரண்டு பேர் ஜாதகம் பார்க்கையிலே, வர குரு பெயர்ச்சி தாண்டினா, பொண்ணு, பிள்ளைக்கு புத்ர பாக்கியம் அமையரது அடுத்த சில வருஷம் தப்புது. “, என்று அவர்களைப் பார்த்தார்.
எல்லோருமே ஒரு புரியாத பாவனையில்தான் அமர்ந்திருந்தனர்.
“சுருக்கமா சொன்னா, இவங்களுக்கு உடனே கல்யாணம் பண்ணீங்கன்னா, கண்டிப்பா, அடுத்த மூணு மாசத்துக்குள்ளே குழந்தை உண்டாகும். இல்லை, இந்த மே மாதம் குரு பெயர்ச்சி ஆகிடுச்சின்னா, இன்னும் ஆறு வருஷம் கழிச்சி கண்டிப்பா ஏழாவது வருஷம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த ஒரு சிக்கல் மட்டும்தான். மத்தபடி ரெண்டு பேரும் மனமொத்து அமோகமா வாழுவாங்க. அதுல சந்தேகமே இல்லை.” என்று அசராமல் இவர்கள் திட்டத்தில் பெரிய கல்லைத்தூக்கிப் போட்டார்.
“உடனே கல்யாணம் எப்படிங்க ஐய்யா ? பொண்ணு இன்னும் படிச்சிட்டு இருக்கா, அதுக்குள்ளே குழந்தை வேறன்னா….” என்று இழுத்தார் வேதாவின் தந்தை சௌந்தர்ராஜன்.
“வேதா படிப்பைபத்தி கவலையே படவேண்டாம். கல்யாணம், குழந்தைகள் எல்லாம் தாண்டியும் படிப்பாள். நாந்தான் ஏற்கனவே சொல்லிருக்கேனே.அவளுக்குப் பூரண சரஸ்வதி கடாட்சம் இருக்கு.”
[the_ad id=”6605″]
இப்போ தைமாசம். இருங்க ,” என்றவர் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டினார். “தை கடைசி முகூர்த்தம் இவங்க ராசிக்குப் பொருந்துது. பிப்ரவரி 13, வியாழக்கிழமை. இதில் கல்யாணம் முடிச்சா, மே 20, குரு பெயர்ச்சி. அதுக்குள்ள கண்டிப்பா குழந்தை உண்டாகும்.”
“எனக்கு புரியுது. உங்க ரெண்டு வீட்டையும் சேர்த்துவெச்சே சொல்றேன். நல்ல பொருத்தம் ரெண்டு பேருக்கும். விட வேணாம்னுதான் சொல்லுவேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். நீங்க வேற யார்கிட்டயாவது காமிக்கறதுன்னாக் கூட காமிச்சுக்கோங்க”, என்றார் ஜோசியர் சுந்தரமூர்த்தி.
“நீங்க சொல்றது தாண்டி நாங்க எப்ப யாரக் கேட்டிருக்கோம் ஐய்யா.”,என்று உடனே கோமதியம்மா மறுத்தார்.
“உங்களுக்கு உங்க அப்பா காலத்திலிருந்து பார்க்கறேன் கோமதி. பிள்ளை வீட்டுக்கு நான் புதுசு இல்லையா. அதான் சொன்னேன். நீங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்று கை கூப்பி அனுப்பிவைத்தார்.
கோமதியும் சௌந்தர்ராஜனும், வீடு வந்து சேர்ந்த போது, அவர் மகன் ராஜேந்திரனும் வந்திருந்தான். அவர் முன்னமே, கைபேசியில் விவரம் சொல்லி வர சொல்லியிருந்தார்.
“வேதா எங்கப்பா ?”, என்று கேட்டவாரே, அவன் கொடுத்த தண்ணீரைப் பருகினார். “ உள்ள, படிச்சிட்டு இருக்காப்பா.” என்றான் ராஜேந்திரன்.
“நீ திரும்ப கடைக்குப் போகணுமாடா ?” என்று கேட்டார் கோமதி.
“இல்லைமா, ஆனா ஒரு க்ளையன்ட் வீட்டுக்கு ஒரு எட்டரை மணிக்கா போகணும்.
“சரி, அப்ப இப்பவே வேதாகிட்ட பேசிடுவோம். என்ன சொல்ரீங்க ?”, என்று இருவரையும் பார்த்துக் கேட்டார் கோமதி.
“மா, திடுதிப்புன்னு, படிக்கறவளை கூப்பிட்டு, கல்யாணம் பண்ணிக்கோ, பின்னாடியே புள்ளைய பெத்துக்கோன்னு, எப்படிமா சொல்றது. அவ எப்படி இதுக்கு ஒத்துக்குவா ?” என்று கேட்டான்.
“அப்படி அவசியம் இந்த சம்மந்தம் வேணுமா கோமதி ? , அப்பறமா, வேற பாக்கலாமே ? “, என்று தன் பங்கிற்கு சௌந்தர்ராஜனும் சொன்னார்.
[the_ad id=”6605″]
“என்ன பேசரீங்க, ஜோசியர், நல்லா பொருந்துது, விட்டுட வேண்டாம்னு சொன்னத கேட்டீங்கதானே. நான் போன வருஷமே அவளுக்கு கல்யாண பேச்ச ஆரம்பிச்சேன். அப்பாவும் புள்ளையும்தான், மேல அவ படிக்கட்டும், அப்பதான் நல்ல வரன் வரும்னு சொன்னீங்க. இப்போ, அந்த அம்மனே கைகாட்டி, நம்ம ஜோசியரும் இவ்ளொ சொல்லிருக்கார். இப்ப இப்படி சொல்ரீங்க ?” என்று கோவத்துடன் பேசியவர்,
“ஏண்டா, நீ கூட அந்த பையனைப் பத்தி அஹா, ஓஹோன்னு சொல்லல நேத்து. பத்தாததுக்கு, இப்போ சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்கு. சம்பளம் சொன்னாங்க, கேட்டீங்கல்ல ?”, என்று இருவரிடமும் பாய்ந்தார்.
“ இப்பவும் அதான்மா, நல்ல வரந்தான். அதுக்காக இன்னும் இருவது நாள்ள கல்யாணம்னா ? வேதா ஒத்துக்கிட்டாதான் எதுவும்.” உறுதியாய் சொன்னான் ராஜேந்திரன்.
“நீ அவள கட்டயாப்படுத்தக்கூடாது இந்த விஷயத்தில். நானே அவகிட்ட பேசறேன்.” என்று சொன்னார் சௌந்தர்ராஜன்.
அங்கே ஒருத்தன் வேண்டிக்கொண்டிருப்பதெல்லாம் இவர்களுக்கு கேட்கவில்லை. பாவம் விக்ரம்.