Skip to content
Post Views: 4,591
“அது பிரைவசிக்காக போனான்”
“ஏன் ம்மா, இங்க அவனுக்குன்னு தனியா ரூம் குடுத்துருக்கோமே” தந்தையை ஏற்றிவிடும் பொறுப்பு இப்பொழுது வருண் கையில்.
“எல்லாரும் ரொம்ப தான் பண்ணாதீங்க. என்ன வருண் பாயிண்ட் எடுத்து குடுக்குறியா?” மருமகனுக்காக பரிமளா ஒரு பக்கம் பானுவுக்கு துணை வர, பேச்சுகள் மெல்ல அழகாய் விரிந்தது. உறக்கம் அனைவரையும் இழுக்க அர்ஜுனின் அறையை இலக்கியாவிற்கு கை காட்டினர் வீட்டினர்.
அவன் அறைக்குள் செல்லவுமே அவனே வந்து தன்னை அணைத்தது போல் அவன் நெடி அவள் நாசி மூலம் மொத்த உடலையும் அணைத்தது. சில நொடிகள் கண் மூடி நிதானித்தவள் களைப்பில் அவனுடைய மெத்தையில் படுத்து உறங்கிவிட்டாள்.
Advertisement
மறுநாள் மருத்துவமனை சென்றவன் மதிய வேளையில் தன் அன்னையோடு உணவருந்தும் இலக்கியாவை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இருவரது பார்வையும் சில நொடிகள் மோதிக்கொண்டதோடு சரி, அவள் அவன் பக்கமே திரும்பவில்லை. இவன் அருகே அஞ்சு ஸ்ரீ வந்து அமர்ந்துகொள்ள… சுத்தம்.
பெரியவர்கள் இருவருக்கும் இடையே ஊடல் என நினைத்து விலகியே நின்றனர். அவர்கள் பேச்சில் இலக்கியா, அவன் அன்னை பானுவின் பிரசவ பிரிவில் பணி புரிவதாக தெரிந்துகொண்டான்.
Advertisement
அனைவரும் கிளம்ப, “இலக்கியா நில்லு” அவன் நிறுத்த வழியில்லாது காத்திருந்தாள்.
Advertisement
அர்ஜுனுக்கு அஞ்சுவை அனுப்புவதில் தான் சிரமம் இருந்தது. ஒருவழியாக அவள் செல்ல, “உனக்கு யார் அங்க ஒர்க் பண்ண பெர்மிஷன் கொடுத்தது?”
“இல்ல சார் அத்தை தான்…”
“ஓ அத்தை ஆகிட்டாங்க. ரைட். அம்மா சொன்னாங்களா நீயா கேட்டியா?”
Advertisement
“அவங்க தான் சார் வர சொன்னாங்க” என்றாள் தயங்கியே.
“யார் என்ன சொன்னாலும் செய்வ. நியாபகம் வச்சுக்கோ இலக்கியா உன்ன இங்க வேலைக்கு எடுத்தது நான். யார் கூப்பிட்டாலும் போக இது உன்னோட ஹாஸ்பிடல் இல்ல. யார் பேச்சை கேட்டாலும் கடைசில சாளரி நான் தான் முடிவு பண்ணுவேன்”
சுற்றி சுற்றி அவள் அடி வயிற்றிலே கை வைத்தான் அர்ஜுன். அதில் திரண்ட வேதனையை துடைத்தெறிந்து தலை அசைத்தாள் அவன் பேச்சை கேட்பதாக.
“என்ன முகம் ஒரு மாதிரி போகுது. நீ தானே இங்க ஒர்க் பண்ற சாதாரண நர்ஸ் மாதிரினு அடிக்கடி சொல்லுவ. அதை தான் நான் செய்றேன். யார் என்ன சொன்னாலும் நீ தலை அசைக்க கூடாது காட் இட்?”
மீண்டும் தலை அசைத்தவள் உதடு ஏதோ முணுமுணுத்தது போலிருக்க, “என்ன சொல்ற சத்தமா சொல்லு” என்றான் அதிகாரமாகவே.
‘ரொம்ப தான் அதிகாரம் தூள் பறக்குது’ மனதிலே கருவியவள் பல மணி நேரங்களாக மனதை அரிக்கும் கேள்வியை அவனிடம் வாய் விட்டே கேட்டுவிட்டாள், தெளிவாக கூற வேண்டும் என்றால் கேள்வியோடு ஒரு பதிலை தான் பெண்ணவள் கொடுத்தது.
“உங்களுக்கு நான் அங்க இருக்குறது புடிக்காம தான உங்க தாத்தா வீட்டுக்கு அனுப்பி வச்சிங்க, அதை புரிஞ்சு தான் நான் அத்தை கேட்டதுக்கு உடனே ஓகே சொன்னேன்”
அவளை சில நொடிகள் பருகுவது போல் பார்த்தவன், “இவ்ளோ அக்யூரோட்டா கெஸ் பண்ணுவியா நீ?”
இலக்கியா புரியாமல் பார்க்க, “இல்ல நான் என்ன பீல் பன்றேன்னு கரெக்ட்டா செய்ரியே அதை கேட்டேன். பட் எனக்கு பெர்சனல் வேற ஒர்க் வேற. இங்க… ஹாஸ்பிடல்ல உன்னளவுக்கு யாரும் எனக்கு செட் ஆக முடியாது. ஐ மீன் அஸ் எ நர்ஸ்”
“சொல்லிருக்கீங்க சார்” என்றாள் சிறுத்த குரலில்.
“சொல்லிட்டுவா அம்மாகிட்ட. அதுக்கு நீ வழக்கம் போல என்ன பொய் வேணாலும் சொல்லிக்கோ”
அவனது குற்றச்சாட்டில் இயலாமையோடு அவனை கலக்கமாக பார்த்த இலக்கியா, “இன்னும் நீங்க நம்பல. நான் இதுக்கு மேல வேற என்ன தான் சார் செய்யணும்”
“அந்த விஷயம் ஓகே ஏதோ பண்ணி என்ன வாயடைச்சிட்ட. பட் இந்த காதல் கத்திரிக்காய்னு ஏதோ சொன்னியே. அது உண்மையா?” இளக்காரமாக வளைந்த அவன் உதடுகளோடு புருவமும் நாட்டியமாடியது.
இம்முறை அவமானத்தில் இவள் தான் சிரத்தை குனிய வேண்டி இருந்தது.
மனைவியின் குற்ற உணர்ச்சியை புறக்கணித்தவன் கைக்கடிகாரத்தை பார்த்து, “பத்து நிமிஷம் டைம். ஷார்ப்பா மூணு மணிக்கு என் ஓ.பி ரூம்ல எனக்கு முன்னாடி நீ இருக்கனும். இல்லனா அடுத்த ரெண்டு நாள் மார்னிங் பிளஸ் நைட் ஷிபிட் உனக்கு வரும்”
மடித்து விட்டிருந்த சட்டையை இறக்கிவிட்டு பட்டனை மாட்டியவாறே அவன் வெளியே சென்றுவிட பத்து நிமிடத்தில் எப்படி முடியுமென தவிப்போடு இலக்கியா ஓட வேண்டி இருந்தது.
வேகமாக வந்து பானுவிடம் சென்று அங்கு தான் இருப்பதாக கூறினால் அவரோ கேள்வியில் அவளை நனைத்துவிட்டார். இதற்கே பத்து நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
அவரை சமாளித்து பிரசவ பிரிவிலிருந்து அர்ஜுன் இருக்கும் பிரிவிற்கு வர அடுத்த ஐந்து நிமிடங்கள் பிடித்துவிட்டது. ஓ.பி அறைக்கு வர ஒரு நோயாளியை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுன் இவளை ஒரு நொடி பார்த்து, “இவங்க ஓல்ட் பைல் எடுத்துட்டு வா”
தான் பேசியதே நினைவில் இல்லை என்பதாய் அவன் சாதாரணமாகவே நடந்துகொள்ள மன்னித்துவிட்டான் என்றே நினைத்துவிட்டாள்.
மாலை ஐந்து மணிக்கு வெளி நோயாளிகளை கவனித்து அனுப்பி வைத்த பிறகு தன்னுடைய அறைக்கு வந்தவன் இலக்கியாவிற்கு தொடர்ந்து வேலைகளை கொடுத்து சென்றுவிட்டான்.
அவற்றை எல்லாம் முடித்து வீட்டிற்கு செல்ல தயாராகும் பொழுது வருண், ப்ரியதர்ஷன் இருவரும் இவளை தேடி வந்துவிட்டனர். அந்நேரம் பார்த்து வீட்டிற்கு சென்ற அர்ஜுன் அங்கே வர, “டேய் இலக்கியாவை நாங்க கூட்டிட்டு போறோம்” என்றான் வருண்.
“எங்க கூட்டிட்டு போற?”
எதுவும் தெரியாதது போல் அர்ஜுன் கேட்க, “எங்கனா நம்ம வீட்டுக்கு தான்” தர்ஷன் எதார்த்தமாக கூறி இலக்கியாவின் பையை எடுத்து முன்னே நடக்க, அதை பிடித்து நிறுத்தினான் அர்ஜுன்.
அதற்குள் இலக்கியாவும் அதிர்ந்து, “சார்… என் பேக்” தர்ஷனை நெருங்க, அர்ஜுனின் கோவப் பார்வை இவளிடம் வந்து நின்றது.
“இல்ல நான்…”
“உனக்கு செகண்ட் ப்ளோர்ல டியூட்டி” மனைவியிடம் தகவல் கொடுத்தவன் ஆண்களிடம், “நீங்க கிளம்புங்க” என்றான் நிதானமாக தன்னுடைய இருக்கைக்கு சென்று.
“டேய் உங்க டியூட்டி என்னனு எனக்கு தெரியாதா?”
வருண் எடுத்து கொடுக்க பிடித்துக்கொண்டான் தர்ஷன், “அதான, என்ன இலக்கியா சென்னைல எங்க இருந்து ஆரமிக்க போறீங்க?”
அர்ஜுன், “லூசு மாதிரி பேசாம தெளிவா பேசுங்கடா”
வருண், “இல்ல சென்னைல இருக்குற எல்லா கோவிலையும் நீ கவர் பண்ண போறதா நியூஸ் வந்துச்சு, அதான் எங்க இருந்து ஆரமிக்க போறனு கேட்டேன்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
எங்கிருந்து துவங்கியிருக்குமென அறிந்தவன் இலக்கியாவை பார்க்க, இவனிடம் சிக்கிக்கொண்டதை உணர்ந்து வெளியேற முயன்றவளை தடுத்து சகோதரர்களை வம்படியாக வெளியே அனுப்பி வைத்தான்.
வருண் தர்ஷன் இருந்தவரை தோன்றிய படபடப்பு அவர்கள் செல்லவும் பயமாக உருவெடுத்தது.
“இப்போ என்ன பொய் சொன்ன?” நேரடியாக குற்றம் சாட்டியது அவன் கோவ வார்த்தைகள்.
“நீங்க காஞ்சிபுரம் போனோம்னு சொன்னிங்கள்ல வீட்டுல. அவங்க நாம எங்க போனோம்னு கேட்டாங்க”
“ஹோட்டல், டின்னர்னு நான் தான் ஏற்கனவே சொன்னேனே”
இலக்கியா, “நானும் அதான் சொன்னேன்… கூடவே கோவிலுக்கும் போனோம்னு…”
அவள் பேசி கூட முடிக்கவில்லை, “முட்டாள்” என கத்தினான்.
“ஏன்டி நான் என்ன செஞ்சாலும் அதுக்கு ஆப்போசிட்டா தான் செய்யணும்னு கங்கணம் கட்டிட்டு இருப்பியா நீ? அங்க தான் தெளிவா சொல்லிட்டு வந்தேனே எங்க போனோம்னு அதை கூட மெயின்டைன் பண்ண முடியாத அளவு அறிவில்லாம இருக்க நீ”
கோவம் சுர்ரென ஏறியது இலக்கியாவிற்கு. இதற்கும் அறிவிற்கும் என்ன சம்மந்தம்? மருத்துவம் படித்திருந்தால் இந்நேரம் அறிவுள்ளதென ஏற்றுக்கொண்டிருப்பானோ?
“நான் கோவிலுக்கே போக மாட்டேன். இப்போ தெரியிதா எதுக்கு எனக்கு உன் கூட செட் ஆகாதுன்னு சொல்றேன்னு. ச்சை எரிச்சலா வருது”
குடும்பத்தினரிடம் கூறியதற்கு எதற்கு இவன் இவ்வளவு பேசுகிறான் என தான் கோவம் இலக்கியாவிற்கு, அவளது எண்ணத்தை புரிந்துகொண்டவனாய், “பேமிலியாவே இருந்தாலும் எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. எவளோ ஒருத்தி என் கூட வரவும் நான் என்னையே மாத்திப்பேனா?”
எவ்ளோ ஒருத்தி என்னும் வார்த்தை இலக்கியாவை தாக்கிவிட, அவன் பேச்சை இனியும் கேட்க புடிக்காமல் அவன் கொடுத்த வேலையை செய்ய சென்றுவிட்டாள்.
என்று அர்ஜுனோடு திருமணம் நடந்ததோ அன்றிலிருந்து அவளது வேலையில் கவனம் சிதற துவங்கியது. அதுவே பென்னவளுக்கு பெரும் மன சங்கடத்தை ஏற்படுத்த, அர்ஜுனின் உத்தரவையும் மீறி அடுத்த நாள் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
விஷயம் தெரிந்து என்ன செய்துவிடுவான் கோவத்தை காட்டுவான் அவ்வளவு தானே, கட்டிக்கொள்ளட்டும் என்கிற எண்ணம் போகிற போக்கில் உதித்துவிட்டது.
காலை உணவை ராதாவின் உத்தரவில் உண்டு முடித்துவிட்டு மதியம் வரை உறங்கி எழுந்தாள். நல்ல உறக்கம் இல்லை, அசதியில் உறங்கியது தான். எழுந்த பின்னும் மனதை அழுத்தும் பாரத்தில் அறையை விட்டு அகலாமல் இருந்தவள் அறை கதவை தட்டி உள்ளே ப்ரியா வந்தாள்.
அவளை பார்த்ததும் தன்னை சரி செய்துகொண்டவள், “வாங்க க்கா” சற்று தள்ளி அமர்ந்து இடமளித்தாள் படுக்கையில்.
“எப்ப வந்திங்க? சாப்பிட்டீங்களா? நான் எதுவும் எடுத்து வைக்கவா?”
“இரு ம்மா. ஏன் இப்டி அவசரம். நான் காலைலயே வந்துட்டேன். வீட்டுல ஸ்னாக்ஸ் எல்லாம் முடிச்சிட்டு தான் வந்தேன் பசியே இல்ல. போதுமா. நீ தூங்கிட்டு இருப்பனு பாட்டி சொன்னாங்க அதான் இவ்ளோ நேரம் வரல. வா சாப்பிட போகலாம்”
“இல்ல க்கா எனக்கு பசியில்லை. நீங்க சாப்பிடுங்க நான் அப்பறம் சாப்ட்டுக்குறேன்”
இலக்கியாவை உன்னிப்பாக கவனித்த ப்ரியங்கா கதவை அடைத்து வந்து இலக்கியாவின் கையை பிடித்துகொண்டாள். அவளின் உன்னிப்பான கவனிப்பே விசாரணை உள்ளதென குறிப்போடு கூற எதற்கும் தயாரானது இலக்கியாவின் இதயம்.
“நானும் உன்ன கவனிச்சிட்டு தான் வர்றேன் இலக்கியா, நீ ரொம்ப டல்லா இருக்க. கல்யாணம் முடிஞ்சப்போ பாத்ததுக்கும் இப்பைக்கும் நிறைய வித்யாசம். சொல்லு என்ன பிரச்சனை உனக்கும் அர்ஜுன்க்கும்?”
“இல்ல அப்டி எல்லாம் எதுவும் இல்ல க்கா”
“நான் சைக்காலஜி படிச்சிட்டு இருக்கேன்ம்மா. ரொம்ப பொய் சொன்னா ஈஸியா கண்டு புடிச்சிடுவேன். அர்ஜுன் பத்தியும் எனக்கு தெரியும். ஒரு விஷயம் வேணாம்னு முடிவு பண்ணா அவ்ளோ சீக்கிரம் அவன் மைண்ட் மாறாது. ரொம்ப அட்மென்ட்”
“இல்லக்கா…”
இலக்கியாவின் கைகளில் அழுத்தம் கொடுத்த ப்ரியா, “தைரியமா சொல்லு இலக்கியா. உன் அக்கா மாதிரி நினைச்சுக்கோ. என்ன மீறி விஷயம் வெளிய போகாது”
மனம் திறந்து பேச ஆள் இல்லாமல் தவித்த பேதைக்கு இறுக்கமாக பற்றியிருக்கும் ப்ரியங்காவின் கரமே போதுமானதாக இருந்தது.
“தப்பு பண்ணிட்டேன்க்கா. என்னால அவங்களுக்கும் நிம்மதி இல்ல, எனக்கும் நிம்மதி இல்ல. நெருப்புல நிக்கிற மாதிரி உடம்பெல்லாம் சுடுது” அழுகையோடு கூறினாள்.
“அர்ஜுன் உன்கிட்ட ஹார்ஷா நடந்துக்குறானா?”
“அவ்ளோ மோசமானவர் இல்ல க்கா. இருந்தாலும் அவர் பண்றது தப்பில்லையே. எவ்ளோ நாள் ஆசைப்பற்றுப்பார் அவரோட லைப் பார்ட்னர் பத்தி. அதுக்கு மொத்தமா ஆப்போசிட்டா இருக்குற நான் வந்து நின்னா அவர் காட்டுற கோவத்துல கூட நியாயம் தானே இருக்கும்”
“சில நேரம் நம்மளோட எதிர்பார்ப்புக்கு மாறா அமையிறது தான் நமக்கு நல்லதா இருக்கும். அதை அர்ஜுனும் ஒரு நாள் புரிஞ்சுக்குவான்” இலக்கியா,
“இல்ல க்கா. அவர் என்னைக்கும் மாற மாட்டார். அவருக்கு என்ன எப்பவும் புடிக்காது”
“அப்போ… உனக்கு அர்ஜுனை புடிக்கும்?” கேலியாக ப்ரியா கேட்க, மறைக்கும் எண்ணம் அவளிடம் இல்லை.
“ரொம்பபப… புடிக்கும். அவரை புடிக்க ஆரமிச்சதுக்கு தான் இந்த தண்டனையும் அனுபவிக்கிறேன்”
தேம்பி அழுதவள், “என்னால என்னோட வேலைய கூட முழு மனசோட செய்ய முடியலக்கா. ரொம்ப ஆசைப்பட்டு சேர்ந்த வேலையவே வெறுக்க ஆரமிச்சிடுவேனோனு பயமா இருக்கு”
அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகி விசும்பலாய் மாறத்துவங்க ப்ரியங்காவால் அவளை சமாதானம் செய்ய இயலவில்லை.
அர்ஜுனை பற்றி முற்றும் முதலாய் அறிந்தமையால் நம்பிக்கை வார்த்தையை கூட கொடுக்க முடியாமல் வேதனை நெஞ்சை கவ்வியது.
“இங்க பாரு இலக்கியா, அவன் முரடன் தான், சில நேரம் ஹர்ட் பண்ற மாதிரி பேசுவான் தான், பட் ஒரேடியா வெறுக்க மாட்டான். கண்டிப்பா நீ பண்ணதை மன்னிச்சிடுவான்ம்மா”
“மன்னிப்பு மட்டும் எங்க உறவுல போதாதேக்கா. அதையும் தாண்டி அன்பு, புரிதல், விட்டுகுடுக்குறதுனு நிறையா இருக்கே”
அழுது கரையும் பெண்ணை மென்மையாக தோள் அணைத்தவள், “சொல்றேன்னு தப்பா நினைக்காத இலக்கியா. முழு உண்மை என்னனு எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்ச வரை, உன் மேல தான் இலக்கியா தப்பு”
“க்கா…”
“சாரி இலக்கியா. அதானே உண்மை?” கசந்தாலும் அது தான் பாதி உண்மை என தலை ஆட்டினாள்.
“நம்மளோட அன்பை அடையிரத்துக்கு எத்தனையோ வழி இருக்கும், நீ சூஸ் பண்ணது அர்ஜூன்க்கு கொஞ்சமும் பிடிக்காத வழில. உன்னோட ப்ரோபஷன், ஸ்டேட்டஸ் மட்டும் தான் பிரச்சனைனா அர்ஜுன் இவ்ளோ ரூடா இருக்க மாட்டான். அவனுக்கு பெருசா உறுத்துறதே நீ சொன்ன பொய் தான்”
இலக்கியாவும் ஆசைகொண்டா செய்தது? அவன் வாழ்க்கையாவது அவன் ஆசைப்பட்ட பெண்ணோடு இருக்கட்டுமென்று தானே அவன் திருமண செய்தி அறிந்ததிலிருந்து விலகி ஓடியது.
அஞ்சு ஸ்ரீ தவறான பெண் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்த வலி வேதனை இல்லையே.
உரியவனுக்கு இதன் விடையும் தெரியும். அதன் பிறகும் அவன் அவளை வெறுக்கும் பொருளாக தானே பார்ப்பது. அவன் ஆசை எல்லாம் மருத்துவம் படித்த பெரிய இடத்து பெண்.
இதை ப்ரியாவிடம் மனம்விட்டு சொல்ல முடியவில்லை.
அவளோ, “நீ தான் அந்த பொய் கூட உங்க வாழ்க்கைக்கு சந்தோசத்தை குடுக்க போகுதுனு புரிய வைக்கணும். எல்லாமே நேரம் எடுக்கும். புதுசா கல்யாணம் ஆனவங்கனு நினைச்சுக்காத.
இப்போ தான் லவ் பண்ண போறான்னு கற்பனை பண்ணிக்கோ. உன்னோட ஒன் சைட் லவ்வ இனிமேல் தான் அர்ஜுன்க்கு புரிய வைக்க போறதா நினைச்சா எதிர்பார்ப்பு கம்மியாகி ஒரு நம்பிக்கை வரும். அது போதுமே…
அப்றம் இன்னொன்னு, ஆயிரம் இருந்தாலும் இந்த இடத்துக்கு வர நீ எவ்ளோ கஷ்டபற்றுப்ப? உன் அப்பாவோட உழைப்பை யாரோ ஏதோ சொன்னாங்கனு வெறுக்க போறியா?”
அவளிடம் அமைதி நிலவியது, “பேஷண்ட்ஸ்க்கு நாங்க கடவுள் மாதிரினா நீங்க அம்மா மாதிரி. எதுக்கும் எதுவும் குறைஞ்சது இல்ல. தேவையில்லாதது யோசிக்காம வா நாம இன்னைக்கு ஷாப்பிங் போறோம், உன் மூட் எப்படி மாறுதுன்னு பாரு”
“இல்லக்கா எனக்கு வெளிய வர புடிக்கல”
“இந்த சாக்கே வேணாம். வா வா” இவளை இழுத்து அன்று இரவு வரை ப்ரியங்கா விடவில்லை. இலக்கியா சுற்றாத இடமெல்லாம் சுற்றி வந்தனர். வண்ண வண்ண உடைகள் இலக்கியாவசம் வந்தது பல மறுப்புகள் தாண்டி.
error: Content is protected !!