Skip to content
Post Views: 1,389
அத்தியாயம் 11
சாலையின் இருபுறங்களிலும் புளியமரங்கள் அரசனாய் வீற்று இருக்க, அதன் அழகை துளியும் கண்டுகொள்ளாமல் வாகனத்தை இயக்கி கொண்டிருந்தான் வாசுதேவன்.
Advertisement
ஆம், ஈரோட்டிலிருந்து வெள்ளித்திருப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது வாசுவின் நான்கு சக்கர வாகனம். என்னதான் சாலையில் பார்வையை வைத்திருந்தாலும் கவனம் முழுவதும் தன் பக்கவாட்டில் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்த இதயாவின் மீது தான் இருந்தது.
இதயாவைப் பார்த்து விட்டு சென்றுவிடலாம் என நினைத்தவர்களுக்கு அவளும் தங்களுடனே வருகிறேன் எனக் கூறியது எதிர்பாரத ஒன்று தான்.
Advertisement
Advertisement
அதே கணம் அவள் வருகிறேன் என்றதும் சரியென்று விட்டால் சுதன் என்ன நினைப்பான் என்ற எண்ணமே அவர்களை தேங்கி நிற்க வைத்தது. இவர்களின் தயக்கத்தை உணர்ந்த ஈஸ்வரோ இதயாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அதன்படி மூவரும் ஜானகியின் சொந்த ஊரை நோக்கி பயணித்தனர்.
வாசுவின் கவனம் முழுவதும் குண்டும் குழியுமான தார் சாலையில் இருந்த நேரம் மீண்டும் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தற்கான சத்தம் கேட்டது.
Advertisement
ஒருமுறை இருமுறை அல்ல நான்கைந்து முறை விடாமல் சத்தம் வந்தது “ஷ்…” என பல்லைக் கடித்தபடி வாகனத்தின் வேகத்தை குறைத்தவன் குறுஞ்செய்தியை பார்த்தான்.அதற்கு முன்னால் அனுப்பியிருந்த கிறுக்கலை எல்லாம் கண்டுகொள்ளாமல் நேராக தற்பொழுது வந்த குறுஞ்செய்தியை மட்டுமே படித்தான்.
வானத்துல பறக்குதுக்
காத்தாடி.. நான் தான்
உனக்கு ஏத்த ஜோடி…
என்ற வரிகளில் பல்லைக் கடித்தாலும் மனதின் ஓரத்தில் முனுக்கென ஓர் மின்னல் பாயத் தான் செய்தது… இதழ்கள் தன்னாலயே “ராட்சசி…” என்றது.
வாசுவின் ராட்சசியில் இங்கு அவனின் ராட்சசிக்கு புறையேரியது…
மகளின் தலையை தட்டிக் கொண்டே நீரை புகட்டி விட்டவர் “போனை பார்த்துட்டே சாப்பிடாதன்னு சொன்னா கேட்க மாட்டியா நீ…” எனக் கூறிய தாயை நிமிர்ந்து பார்த்தவள்
“பொறை போனதை விட நீ அடிக்கிறது தான் மம்மி வலிக்குது…” என்று அலைபேசியை டேபிலில் வைத்தபடி தலையை தேய்த்தாள்.
“வலிக்கிறதுக்கு தான் அடிக்கிறது…” என பானு நகர்ந்து விட, தாயை முறைத்தபடி அலைபேசியை மீண்டும் பார்த்தாள். அடுத்த கணம் வெறும் வாயிலேயே புரையேறியது.
“என்னடா சிடுமூஞ்சி திட்றயா?…” என அலைபேசியில் இருந்த வாசுவின் புகைப்படத்தை பார்த்தபடி கேட்டாள். நான்கு நாட்களாக சுயவிவர படத்தை மாற்றாமல் இருந்தவன் இன்று காலையில் தான் அதனை மாற்றி வைத்திருந்தான். அதனைப் பார்த்ததிலிருந்தே இப்படி தான் பேசிக் கொண்டிருக்கிறாள்.
அவளின் பேச்சிற்கு துளியும் பதில் கூறாமல் சிரித்து கொண்டிருந்தான் அலைபேசியில் புகைப்படமாக இருந்தவன்.
“சிரிக்கறத பாரேன் டயனோசர்…” என்றவள் தொடுதிரையில் தெரிந்த அவன் கண்களை பார்த்தாள். ஆயிரம் மெளன பாசை பேசியது அவன் நயனங்கள் “இருந்தாலும் நீ இவ்வளவு அழகா பிறந்திருக்க வேண்டாம்…” என்றாள் புகைப்படத்தில் இருந்தவனிடம்.
உன் காதலை என்னிடம் கூற
உனது வார்த்தை மொழி தேவையில்லையடா
உன் நயனமொழி ஒன்றே போதும்
என ரகசியமாக கவிதை வடித்தது மங்கையின் மனம்…
அவளது கவிதையில் மெளன பாசை பேசிய ஆடவனின் கண்கள் தற்போது அவளை முறைப்பது போல் தோன்றியது.
“எனக்கே புரியுது சும்மா சும்மா உன்னை நான் டிஸ்ட்ரப் பண்றேன்னு… ஆனா என்ன செய்யறது ஒரு மனசு உன் மூஞ்சியே பார்க்க கூடாதுன்னு சொல்லுது. இன்னொரு மனசு நீ என்ன பேசி விரட்டி விட்டாலும் உன்னை விடாம பிடிச்சு வைச்சிக்க சொல்லுது. நான் என்ன செய்வேன்…” என்று புகைப்படத்தை பார்த்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.
அக்கணம் “பைத்தியத்தை பெத்து வைச்சிட்டு நான் தான் அல்லோலப் பட்டுட்டு இருக்கேன்…” என்ற பானுவின் வார்த்தைகள் காதில் விழுந்தது.
“ஸ்…” என நாக்கை கடித்தவள் ஓரக் கண்ணால் தாயை பார்த்தாள். அவரோ கை நிறைய துணிகளை அள்ளிக் கொண்டு வாசிங் மிஷினில் போட்டுக் கொண்டிருந்தார்.
“ஆமாம்மா, உண்மையாவே பாட்டிக்கு உடம்பு முடியலையா?…” சந்தேகமாக கேட்டாள்.
“ஏன் கேட்கற…” வாசிங்மிஷினில் லீக்விடை ஊற்றி கொண்டே கேட்டார்.
“இல்லை, உன் அத்தைக்கு சின்னதா உடம்பு முடியலன்னா கூட மொத ஆளா நீ தான் போயி நிப்ப, இப்ப ரொம்ப சீரியஸா இருந்தும் கண்டுக்காத மாதிரியே இருக்கியே அதான் கேட்டேன்…” தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்தபடி கேட்டாள்.
” சீரியஸாயெல்லாம் இல்லையே. கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு தான் மாமா சொன்னாரு…” என்றவரின் கைகள் வாசிங் மிஷினின் டோரை க்ளோஸ் செய்தபடி இருந்தது.
“அப்பறம் எதுக்கு ம்மா என் அத்தைகிட்ட பொய் சொன்ன…” மகளின் கேள்வியில் தான் உளறிக் கொட்டியது புரிந்தது பானுவிற்கு. மிஷினை ஆன் செய்துவிட்டு நிதானமாக மகளை திரும்பி பார்த்தார்.
அவளோ அவரை முறைத்தபடி அமர்ந்திருந்தாள். அவளது முறைப்பை கண்டுகொள்ளாமல் “இப்படியாவது அவ அவங்களோட போயி சேரட்டும்ன்னு அப்படி சொன்னேன்…” என்றார் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு.
அதற்கு அவளிடம் பதில் இல்லாமல் போகவும், பெருமூச்சுடன் “அவ எங்க அத்தைக்கும், மாமாக்கும் ஒரே பொண்ணு. பன்னிரண்டாவது முடிச்சும் முடிக்காம காதலுன்னு வந்தா, காதலிக்கிற பையன் நல்லவனா இருந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறோம் தான் எங்க அத்தையும், மாமாவும் சொன்னாங்க.. ஆனா விசாரிச்ச வரைக்கும் அந்த பையன் நல்ல மாதிரி இல்ல… அதனாலயே வேண்டாம் சொன்னாங்க…ஆனா இவ அதை நம்பவே இல்லை…”
ஒரு நாள் அவனை கூட்டிட்டு போயிட்டா. நம்ம பேச்சை நம்பாம போறவ போகட்டும்ன்னு தலை முழிகிட்டாங்க… அதுக்கு அப்பறம் இவங்களும் அவளை தேடலை,அவளும் இவங்களை தேடி வரலை.
ரொம்ப வருசம் கழிச்சு ஜானகியை கல்யாணத்துல பார்த்துட்டு அத்தை துடியா துடிச்சு போயிருச்சு தெரியுமா. அன்னைக்கு சமாதானம் சொல்லி அனுப்பறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு”
“ஆனா போனதும் காய்ச்சல்ல விழுந்துடுச்சு… மாமா எனக்கு கூப்பிட்டு ‘அவளை பார்த்ததுல இருந்து புள்ளை ஏக்கம் வந்துருச்சு, முடியாம படுத்துட்டா. அவகிட்ட பேசி வர சொல்லு’_ன்னு சொன்னாரு…’ மறுக்க முடியல உடனே ஜானகிக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன். அவளும் மறுக்காம கிளம்பிட்டா…” குரலில் மெல்லிய சந்தோசம் இழையோட கூறினார்.
அவரை விழி அகலாமல் பார்த்தவளுக்கு இதுவும் சரிதான் என்று தோன்றியது.
*****
இங்கு… வெள்ளித்திருப்பூரை நோக்கி பயணித்து கொண்டிருந்த இதயாவின் நினைவுகள் முழுவதும் இன்றைய நிகழ்வுகளை சுற்றியே வளம் வந்தது…
அவனிடம் மறைமுகமாக தன் எண்ணத்தை கூறிவிட்டு வந்தவளுக்கு அத்தனை வெட்கம் வந்தது… சிவந்த முகத்தை மறைத்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்தவள் எடுத்து வைத்திருந்த தக்காளியை பொடியாக நறுக்க ஆரம்பித்து இருந்தாள்.
அதே நேரம் வெளியில்…
தீடிரென கருமேகங்கள் திரண்டு வானில் சூழ்ந்திருக்க, காற்றும் சற்றே வேகமாக வீசிக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப மரக்கிளைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டையிட்டு கொண்டிருந்தது.
சண்டையென்றால் சட்டை கிழிய தானே செய்யும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப மரக் கிளைகளின் முதிர்ந்த இலைக்களோடு, புதியதாக துளிர் விட்ட இலைகளும் மண்ணில் மாய்ந்து விழுந்தன…
திரண்டிருந்த கருமேகத்தினையும், காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஆடும் மரக் கிளைகளையும் ஜன்னல் வழியே பார்த்த காமாட்சியோ “ப்ச்…” என உச்சிக் கொட்டியப்படி “இதயா, மழை வர மாதிரி இருக்கு. டெரஸ்ல மல்லியும், வத்தலயும் காயப்போட்டேன் போயி எடுத்துட்டு வா…” என்றார்.
கையில் வைத்திருந்ததை அப்படியே வைத்துவிட்டு “ம்ம் சரிங்கத்தை…” என்றவள் போர்டிகோவிலிருந்த மாடிப்படியை நோக்கி நடந்தாள்.
அவள் சென்ற அடுத்த சில நிமிடங்களில் மழை தூற ஆரம்பித்திருந்தது . “கடவுளே…” தலையில் தட்டிக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்த மகனிடம் “வாண்டு, மழை ஸ்டார்ட் ஆயிடுச்சு ஒருத்தியா எடுத்து வைச்சுட்டு இருக்கா நீயும் போ…” என்றார்.
“ஹான் ஓகே மீ…” என்றவன் மடிக்கணினியை சோபாவில் வைத்துவிட்டு வெளியில் இருந்த மாடிப்படியை நோக்கி நடந்தான்.
“மழை கனமா வந்தா மேல் வீட்டிலேயே இரண்டு பேரும் இருந்துங்காங்க. மழையில நனைஞ்சுட்டு வர வேண்டாம்…” என்றார் சத்தமாக.
“ஓகே மீ…” என சத்தமாக கூறியவன் மேல் மாடியை நோக்கி நடந்தான்.
இங்கு, மாடியில் அவசரம் அவசரமாக காய வைத்திருந்த மளிகையையும் வத்தலையும் எடுத்துக் கொண்டிருந்தாள் இதயா. அதனை எடுத்து கொண்டு திரும்பும் முன் மழை பிடித்திருந்தது.
அவரசமாக கையில் வைத்திருந்த பொருட்களோடு மேல் வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கிருந்த மேசையில் அனைத்தையும் வைத்துவிட்டு திரும்ப, கனமழை பொழிய ஆரம்பித்திருந்தது.
நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருந்த மழை நீரை தோளில் தேய்த்து கொண்டே சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள் . அப்பொழுது தான்
அந்த ஹாலை ஒட்டிய டெர்ரஸ் கார்டனை கவனித்தாள்.
இதற்கு முன் இங்கு வந்திருந்தாலும் அந்த கதவுகள் மூடப்பட்டிருப்பதால் அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று அது திறந்திருக்கவும் கண்களை அகல விரித்து அந்த கார்டனை நோக்கி நடந்தாள்.
கார்டன் அருகே செல்ல செல்லவே ஈரக் காற்று பெண்ணின் மேனியை தீண்டிட, சிலர்த்து அடங்கியது பெண்ணின் தேகம்… கொட்டித் தீர்க்கும் மழையில் நனையாது நிலைக் கதவியில் சாய்ந்து நின்றாள்.
துமியளவிற்கு பொழியும் மழையில் நனைய பிடிக்கும் அவளுக்கு. ஆனால் இப்படி கொட்டித் தீர்க்கும் மழையில் துளியும் நனைய பிடிப்பது இல்லை.
அந்நேரம் அவளின் மனம் அறிந்து சாரலாய் சில துளிகள் பெண்ணைத் தீண்ட மெல்லிய புன்னகை அவளிடத்தில். கண்களை மூடி அப்படியே நின்று விட்டாள்.
மழைநீரின் குளுமையும், ஈர்க் காற்றின் வருடலும் இதயாவின் முகத்தில் இன்னும் இன்னும் புன்முறுவலை கொண்டு வந்தது.
இங்கு…ஹரி, மாடிப்படியில் ஏற ஏறவே மெல்லிய துளிகள் அனைத்தும் பெருந்துளிகளாக விழ, இரண்டு படிகளாக மாடியில் ஏறியவன் மேல் வீட்டில் நுழைந்தான். ஈரமான தலையை கோதிக் கொண்டே நிமிர்ந்தவனின் பார்வை ஹாலை ஒட்டிய கார்டனில் விழ மெல்லிய புன்னகை அவனிடத்தில். ஹாலின் விளக்கை கூட போடாமல் கதவை சாற்றியவன் மெல்ல அவளின் பின் நின்றான்.
மழையின் மெய் தீண்டலை கண்மூடி அனுபவித்து கொண்டிருந்தவள் கணவன் வந்ததை கவனிக்கவில்லை.
நிமிடம் மாயோளை இமைக்காமல் பார்த்தான் சுதன்… மழையின் இதமும், வெளியில் கேட்கும் சத்தமும், கார்டனில் சொற்ப வெளிச்சத்தில் நின்ற பெண்ணின் நளினமும், மாயவனின் மெல்லிய உணர்வுகளை தடுமாற செய்தன.
அதற்கு மேல் இல்லக்கிழத்தியின் தோள் வளைவில் அரசியாக வீற்றிருந்த சாரல் மழை இவனுக்கு ஒருவித கிளர்ச்சியை தூண்டியது. பட்டென பின்புறமிருந்து அவளை அணைத்துக் கொண்டவன் இதழ்கள் அவளது தோள் வளைவில் ஆழப் புதைந்தது.
முதலில் அதிர்ந்து துள்ளிக் குதித்து திரும்பியவளின் கண்கள் இரண்டும் பூப்போல விரிந்து கொண்டது…
“மிஸ்டர் ஸ்டிரேஞ்சர் சார், என்ன பண்றீங்க…” எனக் கேட்டவளின் குரல் வேகமாக ஆரம்பித்து உள்ளுக்குள் உறைய… அது இவனுக்கும் இன்னும் இன்னும் உணர்ச்சியை தூண்டியது. அவளை வேகமாக இழுத்து அணைத்து கொண்டவன் இல்லக்கிழத்தியின் முகத்திலிருந்த மழை நீரை தன் இதழ்கள் கொண்டு வேகமாக துடைத்தான்.
கணவனின் செய்கையில் கண்கள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொள்ள “சுதன்…” என்றாள் அவஸ்தையாக.
“ம்ம்..” என தன் அணைப்பை இறுக்கிக் கொண்டவன் இதழ்கள் மங்கையின் முகத்திலிருந்து மெல்ல கீழ் இறங்கியிருந்தது.
“ம்ம்…” என்றவளுக்கும் அந்த நிலையில் இருந்து வெளிவர முடியவில்லை…
ஈர்க்காற்றின் தீண்டலும், மழையின் சத்தமும், அவ்விடத்தில் சூழ்ந்திருந்த இருளும், மனைவியின் ம்ம் என்ற சிணுங்கலும் ஆடவனின் உணர்ச்சிகளை வெகுவாக தூண்டிக் கொண்டிருந்தது.
அங்கே…ஆடவனின் இதழ்களும், விரல்களும் மெளனமாக பேச, மங்கையின் இதழ்களும், விரல்களும், பதில் கூற முடியாமல் தவிக்க, நொடிகளும் நிமிடங்களாக மாறி போக, காதலும், தாபமும் கூடிக் கொண்டே போனது.
இருவரின் சூடான மூச்சு காற்று அவர்களின் நிலையை சொல்லாமல் சொல்லியது. அக்கணம் மங்கையின் செவியில் இதழ்கள் உரச “நிலவே, ஐ நீட்யூ டெரிப்ளி..” எனக் காதலை கூறியவன் அந்த நாளின் இரண்டாம் முறையாக மங்கையின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக முத்தமிட்டான்.
மன்னவனின் இதழ் தீண்டலில் தென்றலில் ஆடும் மலரை போல் மங்கையின் பூந்தேகம் முழுவதும் சிலிர்த்து அடங்கிட மன்னவனின் சட்டையை அழுத்தி பிடித்தது அவளது கைகள்.
மங்கையின் கைகள் கொடுத்த அழுத்தத்தில் தன் நினைவிலிருந்து வந்தவன் பட்டென அவளை விட்டு விலகி நின்றான். தவறு செய்து விட்ட பாவனை அவன் முகத்தில்.
கேசத்தை அழுந்தக் கோதிக் கொண்டே “ஸ்ஸாரி… ஸாரி இதயா…” என மன்னிப்பு வேண்டியவனை திகைத்து பார்த்தாள் பெண். சில நொடிகள் தேவைப்பட்டது அவனின் சொற்கள் புரிய அது புரிந்ததும் கண்களை இறுக மூடித் திறந்தவள்
“ஒன்..னு…மில்லை சார்…யாரா இருந்தாலும் யோசிப்பாங்க, நீங்களும் அப்படியே யோசிச்சுட்டீங்க, சரி விடுங்க…” உணர்ச்சி துடைத்த குரலில் கூறினாள்.
அவளது குரலில் இருந்த பேதம் இவனை சட்டென நிமிர செய்தது
“நிலவே, நான் உன்னோட நிலையை மனசுல வைச்சு தான் அப்படி விலகினேன். வேற எதுவும் யோசிக்கல, சொல்லபோனால் என்னோட ஒவ்வொரு தொடுகையும் உனக்கு அந்த நாளை ஞாபக பண்ணும் நினைச்சு தான்…” அவன் பேசிய வார்த்தைகளை முழுவதுமாக கேட்காது காதை அடைத்தவள் மறுப்பாக வேண்டாமென தலையசைத்தாள்.
“போதும்… போதும். எதுவும் பேச வேண்டாம்…” எனக் கத்தினாள். அந்த நிமிடம் உள்ளே ஆழ்ந்த அமைதி நிலவியது. அதே சமயத்தில் வெளியில் மாமழை பொழிய ஆரம்பித்து.
“இதயமே, புரிஞ்சுக்கோடா… உன்னை காயப்படுத்த நினைக்கல டா…” என அவன் மேலும் தன்னிலை விளக்கம் கூற வர, “வேண்டாம் சார்…” என்றவள் சிவந்த நாசியை தோளில் துடைத்து கொண்டே
“உங்களோட தொடுகை எல்லாம் எனக்கு இன்னொருத்தனை ஞாபகம் பண்ணுண்ணு நீங்களே எப்படி நினைக்கலாம் சுதன். அப்ப உங்க மனசுல என்னை அவன் இங்க இங்கண்ணு எல்லா இடத்திலும் தொட்டு இருப்பான்னு நினைச்சு நினைச்சு தான் என் பக்கம் நெருங்கி வந்தீங்களா?” வெளியில் கேட்ட இடியை விட வழுவாய் வந்து விழுந்தன மங்கையின் வார்த்தைகள். மங்கையின் வார்த்தைகளில் ஒரு நொடி விக்கித்து நின்றான் ஹரிஹரசுதன்.
“நிலவே, என்ன பேசற?” நடுங்கிய குரலில் அவசரமாக கேட்டான்.
“வேண்டாம் சுதன், நான் உங்களை வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் இது தான்… இந்த ஒரு விஷயதுக்காக தான் நீங்க வேண்டாம் நினைச்சேன்.
உங்களை நான் கஷ்டப்படுத்த கூடாதுன்னு யோசிச்சேன். ஆனால் நீங்க ஒவ்வொரு முறையும் என்னை நெருங்கிட்டு அப்பறம் விலகி நின்னு கஷ்டப்படுத்திறீங்க. அப்படி இல்லைன்னா பழசை பேசி என்னை களங்கப்படுத்தரீங்க…” என்றவள் அவளை சமாதானப்படுத்த முன் வந்த கைகளை தாண்டி வெளியில் வந்தாள்.
இதழ்கள் இரண்டும் அழுகையில் துடிக்க, வழிந்த கண்ணீரோடு முகத்தை அழுத்தி துடைத்து கொண்டவள் வெளியில் கொட்டிய மாமழையோடவே கீழிறங்கி வந்தாள்.
“பாரேன் இவளை… நான் சொல்லல, உங்களை கண்டதும் இவ கண்ணுக்கு மழையெல்லாம் தெரியாதுன்னு… எப்படி நனைச்சுட்டு வந்து இருக்கா பாருங்க…” என்ற அத்தையின் குரலில் அப்போது தான் ஹாலில் அமர்ந்து இருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“என்ன குட்டிமா, இப்படி தான் நனைச்சுட்டு வருவீயா, நாங்க உன்னை பார்க்காமயா போயிடுவோம்?” எனக் கண்டிப்பு குரலில் கேட்டபடி கைநீட்டி அழைத்தார் ஜானகி.
மொத்த உணர்வுகளையும் தனக்குள் மறைத்து கொண்டவள் முகத்தில் மெல்லிய புன்னகையுடன் ஜானகியிற்கும், வாசுவிற்கும் நடுவில் சென்றமர்ந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் மேலே நடந்த அனைத்தும் மறந்தவளாக இதயா அவர்களோடு ஒன்றிவிட்டாள்.
இங்கு மேல் வீட்டில் இருந்தவன் நிலை தான் மிகவும் மோசமாகியிருந்தது. வெளியில் அடித்துக் கொண்டிருக்கும் பேய் மழையை போல மன்னவன் மனதிலும் அடித்துக் கொண்டிருந்தது.
“தன் உணர்வுகளுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
தான் விலகி நின்றால் இவள் என்ன பேசிவிட்டு செல்கிறாள். என்னோட தனிப்பட்ட உணர்வுகளை இவ புரிஞ்சுக்கவே இல்லையா…” என்ற எண்ணம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமானது. அந்த எண்ணம் முதலில் வருத்தமாக தோன்றி பின் கோபமாக உருமாறி நின்றது அவனையும் அறியாமல்.
இத்தனை நேரம் பேயாட்டம் ஆடிய மாமழை சற்றே குறைந்ததும் கீழ் இறங்கி சென்றான் சுதன்.
“சாரி, சாரி இதயா டா, நான் கால் பண்ண நினைச்சேன் நீ பிஸியா இருப்பேன்னு தான் கால் பண்ணல…” எனக் கெஞ்சிக் கொண்டிருந்த வாசுவின் குரலில் தன் மொத்த உணர்வுகளையும் அழகாய் மறைத்தான் சுதன்.
“ஹேய், வாசு பையா எப்ப வந்த?” எனக் கேட்டவன் ஜானகியிடம் திரும்பி “வாங்க மா, எப்படி இருக்கீங்க?அத்தையும், மாமாவும் வரலயா?” எனக் கேட்டபடி அவர்களுக்கு எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.
“நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க…” என்று வாசுவும்
“நல்லா இருக்கேன் ப்பா, அண்ணாவும், அண்ணியும் பிஸ்னஸ் விஷயமா வெளிநாடு போயிருக்காங்க…” என்று ஜானகியும் கூற, அவர்களுக்கு பதில் கூறியபடி அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்தான் சுதன்.
இங்கு மனைவியின் அருகில் நின்றிருந்த ஈஸ்வரோ “புள்ளைக்கு கல்யாணம் பண்ண கையோடு சம்பந்தி ஹனிமூன் போயிருக்காரு பாரு டி தங்கம். நமக்கு இது தோணல பாரேன். ம்ம் மட்டும் சொல்லு காஷ்மீர் போலாம்…” மெல்லிய குரலில் கூறிய கணவனை பல்லைக் கடித்தபடி பார்த்தார் காமாட்சி.
“ம்ம், உன்கிட்ட ரொமான்ஸ் எதிர் பார்த்தது என் தப்பு தான்…” என முனகிக் கொண்டே சமையலறையில் இருந்து வெளியில் வந்த ஈஸ்வர் ஜானகிக்கும், வாசுவிற்கும் டீயை நீட்டினார்.
அவர்களுக்கு அருகில் முகத்தில் உணர்வில்லா மகனையும், முகம் முழுக்க சிவந்திருந்த மருமகளின் முகத்தையும்
பார்த்தவருக்கு புருவங்கள் சுருங்கி விரிந்தது… மனம் இருவருக்குள்ளும் ஏதோ பிசகு எனக் கூறியது. அவரின் சந்தேகத்தை வாசுவுடனே தானும் செல்கிறேன் எனக் கூறி உறுதி செய்தாள் அவரின் மருமகள்.
error: Content is protected !!