விக்ரம் அவனைப் பார்த்து “பட்டா” என்றதும் அவன் ‘ஆம்’ என்பதைப் போல மெள்ளத் தன் வலது கையை நெஞ்சில் வைத்துக் கண்களை மூடித் தலையைத் தாழ்த்தி விக்ரமை வணங்கினான்.
அருகில் இருந்த தேவியும் அருணும் பரபரப்பாக, அவர்களை நோக்கி ‘அமைதி’ என்பதைப் போலப் புன்னகையுடன் கண்களை மெள்ளச் சிமிட்டிவிட்டுக் கையில் இருந்த பிரசாதத் தட்டை விக்ரமிடம் கொடுத்தான்.
“இங்க ஷத்தம் போட்டா மாமா கோச்சுப்பார், திருச்சுற்று மாளிகைல பழைய நந்தியாண்ட வெயிட் பண்ணுங்கோ, நான் ஷெத்த ஞாழில வந்துடுறேன்…”
என்று ஜீன்ஸ் ஐசுவரியாவைப் போலப் பேசிவிட்டு அவன் மீண்டும் கருவறைக்குள் சென்றான்.
அவனையே சில நொடிகள் பார்த்தபடி நின்றவர்கள் பின் மீண்டும் ஒருமுறை பெருவுடையாரை வணங்கிவிட்டு வெளியில் வந்தனர்.
‘பட்டா’ என்று விக்ரம் அழைத்த வேதாளப் பட்டனைப் பார்த்ததில் விஷாலி மட்டும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வெளியில் வந்ததும் மிச்சமிருக்கும் வெளிச்சத்தில் இன்னொரு சுற்று தன் மூன்றாவது கண்ணால் பெரிய கோயிலின் அழகைப் பதித்துக்கொள்ளக் கிளம்பிவிட்டாள்.
அவர்கள் வெளியில் வந்து (சுமார் நானூறு ஆண்டுகள் பழைமையான) புது நந்தியை வணங்கி இரசித்துவிட்டுப் பின் கோயிலின் வலதுபுறத் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய நந்தியை நோக்கிச் சென்றனர்.
இராசராசர் காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த நந்தி ஒரு ஆளுயரத்திற்குப் பெரியது என்றாலும், பெரிய கோயிலுக்கும் பெருவுடையாருக்கும் ஏற்ற அளவில் அது பெரியதாக இல்லை என்று கருதிய நாயக்க மன்னர் ஒருவர் பிற்காலத்தில் அதைவிட பெரியதாய் இப்போது இருக்கும் ‘புது நந்தி’யைச் செய்தமைத்திருந்தார்.
‘இந்த நந்திக்கு என்ன கொறைச்சல்’ என்ற வகையில் அதைச் சற்று நேரம் இரசித்துப் பார்த்துவிட்டு அதன் அருகிலேயே திருச்சுற்று மாளிகையில் திண்ணைப் போன்ற அமைப்பில் உட்காருவதற்கு வாகாய் அங்கிருந்த தூசியை ஊதித் தள்ளினான் அருண்.
விக்ரமும் தேவியும் அவ்வாறே தூசியை ஊதிவிட்டு அங்கே அமர்ந்தனர்.
“அவன்தான் வேதாளம்னு எப்படி கண்டுபிடிச்சே, விக்ரம்?”
அமர்ந்ததும் அமராததுமாய் தேவி ஆர்வம் பொங்கக் கேட்டாள்.
“சரியா சொல்லத்தெரியல… தேவி! நான் மனசுக்குள்ள இந்தக் கோயிலைப் பத்தியும் ராஜராஜரைப் பத்தியும் நெனச்சுட்டே நின்னுக்கிட்டிருந்தேன், அப்ப என் மனசுல இருந்ததுக்குப் பதில் சொல்றா மாதிரி சொல்லிட்டே அவன் எதிர வந்து நின்னான்… டக்குனு எனக்கு இவனை எங்கயோ பார்த்திருக்கோமேனு தோனுச்சு… தானாவே அவன் பேர் என வாய்ல வந்துச்சு…”
விக்ரம் கருவறையைப் பார்த்தவாறே பதில் சொன்னான். கோயிலின் கருங்கல் சுவரை ஊடுருவி உள்ளே கருவறையில் இருக்கும் அவனைப் பார்ப்பதைப் போல இருந்தது விக்ரமின் பார்வை.
”ம்ம்ம்… ஆனா நம்மள மாதிரி இல்லாம அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குப் போலத் தெரியுது, அவன் வந்துட்டா அடுத்து என்ன பண்றதுனு நமக்கு க்ளியர் ஐடியா கிடைச்சுடும்…”
என்று தேவி தலையை மெள்ள ஆட்டியபடியே சொன்னாள். அவள் பார்வை அருண் பக்கம் சென்றது.
“ஹே, என்ன டா, ரொம்ப அமைதியா இருக்க?”
[the_ad id=”6605″]
அருண் அந்த நந்தியையே உற்றுப் பார்த்தபடி ஆழந்த சிந்தனையில் இருந்தவன், தேவியின் கேள்வியால் கனவிலிருந்து மீண்டும் நனவிற்கு வந்தவனைப் போல ஒரு நொடி விழித்துவிட்டுப் பதில் சொன்னான்,
“எ- என்ன? ஒன்னுமில்லயே!”
“என்ன ஒன்னுமில்ல? நானும் விக்ரமும் என்ன பேசிட்டு இருந்தோம்னு சொல்லு பார்க்கலாம்?”
தேவியின் குரலில் சற்றே கிண்டல் இருந்தது.
“நீங்க என்ன பேசுனீங்கனு நான் கவனிக்கல… உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும், எனக்கு எதுக்கு அதெல்லாம்!”
அருண் தோள்களைக் குலுக்கியபடி சொன்னான்.
“ஓ… தோ டா… டேய் நல்லவனே, நீ அவ்ளோ டீசெண்ட்டான ஆளுனா ஒரு பத்தடி கேப்விட்டு உக்கார்ந்திருக்கனும், இப்படி ஒட்டி உரசிக்கிட்டுப் பக்கத்துலயே இருக்கக் கூடாது!”
தேவி விடாமல் அவனைச் சீண்டினாள். வேதாளப் பட்டன் வரும்வரை அருண்தான் தனக்குப் பொழுதுபோக்கு என்று எண்ணினாள் போல!
”யெம்மா தாயே, கொஞ்ச நேரம் என்னைச் சும்மா விடுறியா? நான் வேற ஒரு யோசனைல இருக்கேன்…”
அருண் சற்றே எரிச்சலைக் காட்டினான்.
“உன் யோசனைலாம் என்னனு எனக்குத் தெரியும்… விஷாலிக்கு என்ன ஆச்சுனுதான கவலைப்படுற?”
தேவி கரிசனத்துடன் கேட்டாள்.
அருண் ‘ஆம்’ என்பதைப் போல மெள்ளத் தலையாட்டினான்.
“விஷாலிக்கு ஒன்னும் ஆகிடல அருண், கவலைப்படாத… எதா இருந்தாலும் சீக்கிரம் சரி பண்ணிடலாம்…”
என்று ஆறுதலாய்ச் சொன்னாள் தேவி.
விக்ரம் இவர்கள் பேச்சில் கலந்துகொள்ளமால் கருவறையின் திசையிலேயே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஹே, விக்ரம்… உன் தங்கச்சியப் பத்திதான் பேசுறோம், கவனிக்குறியா இல்லையா?”
தேவி கேட்டபடியே விக்ரமின் தோளை இலேசாய் உலுக்கினாள்.
“ம்ம்ம்…”
என்று விக்ரம் தன் பார்வையை விலக்காமலேயே சொன்னான்.
“விஷா-”
என்று தேவி ஏதோ சொல்லத் தொடங்கியவள் எதிரில் விஷாலி அவர்களை நோக்கி வருவதைக் கண்டு அமைதியானாள்.
“என்ன, கிளம்பலாமா?”
என்று கேட்டபடியே இவர்களை நோக்கி வந்தாள் விஷாலி. தன் புகைப்படக் கருவியை அணைத்து வில்லை (lens) பகுதியைத் தனியாகக் கழட்டி அதனதற்கு உரிய பைகளில் அவற்றை அக்கறையுடன் எடுத்து வைத்தாள்.
”கிளம்புறதா? இன்னும் அந்தப் பட்டன் வரவே இல்லம்மா…”
என்று அலுப்பாக அவளுக்குப் பதில் சொன்னாள் தேவி.
“எந்தப் பட்டன்?”
என்று விஷாலி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவன் அங்கு வந்து சேர்ந்தான்,
“ஸாக்ஷாத் நானேதான்… நவகிரக தோஷ பரிகார நிபுந வேதாந்த பட்டன்!”
கைகளைக் குவித்து ‘வணக்கம்’ செய்தபடி சொன்னவன் இலேசாய்த் தலையையும் முதுகையும் வளைத்துக் குனிந்து வணங்கினான்.
“உங்களைப் பார்த்தோன்னே தெரிஞ்சுடுத்து, சுக்ரனும் சனியும் உங்களைப் போட்டுப் படுத்திண்டு இருக்கான்னு… கவலையே படாதீங்கோ, ஒரே ஒரு ஹோமம் பண்ணா போதும் எல்லாம் ஷாந்தியாய்டும்… ஜஸ்ட்டு ஃபிஃப்டி தௌசண்டு, அவ்ளோதான்!”
என்று படபடவென்று ரேடியோ விளம்பரம் போலச் சொன்னான்.
”வாட்? ஹோமமா? யோவ், நீ வேதாளப் பட்டன் இல்லயா?”
தேவி குரலில் எரிச்சல் தெறிக்கக் கேட்டாள்.
“வேதாந்தம், மேடம்! எங்காத்துல ‘வேது’னு கூப்டுவா, அக்ரஹார மனுஷாலாம் ‘வேதா’ம்பா… உள்ள இருக்காரே, தில்லைநாயக சிவாச்சாரியார், அவர்தான் என்னை ‘பட்டா’னு கூப்டுவார்…”
என்று அவன் பணிவாகத் தேவியை நோக்கிப் பதில் சொன்னான்.
”விக்ரம்… என்னதிது? இவன் வேதாளம் இல்ல போலயே, எல்லாம் வேஸ்ட், எங்க டைம வேஸ்ட் பண்ணிட்ட, போயா யோவ்…”
என்று தேவி முதலி விக்ரமையும் பின் அவனையும் பார்த்துக் கடுப்புடன் சொன்னாள்.
”நீங்க யாரையோ தேட்றேள் போலருக்கே… டோண்ட் வொர்ரி, கொஞ்ச நாள் முன்னாடிதான் நான் கேரளா போயிருந்தேன், அங்க ஒரு நம்பூதிரியாண்ட சில பைசாசப் ப்ரயோகம்லாம் கத்துண்டேன், ஆல் ஃப்ரம் அதர்வண வேதா, யு நோ? நன்னா ப்ராக்டிஸ் பண்ணிண்டிருக்கேன், ஒரு டெவ்ண்டிஃபவ் தௌசன் தாங்கோ, நீங்க தேடுற மனுஷாளை உங்க ஆத்துக்கே வந்து உங்க கால்ல விழ வெக்குறேன்…”
அவன் விடாமல் பேசுவதைக் கண்டு தேவி கண்களை ஆயாசமாகச் சுழற்றினாள்.
அருண் விருட்டென்று எழ, விக்ரம் அவனைக் கைகாட்டித் தடுத்தான். பின் அந்த அந்தண இளைஞனை நோக்கியவன், சில நொடிகள் அவனையே உற்றுப் பார்த்தான்,
“பட்டா… உன் விளையாட்டுலாம் போதும், இப்ப நாங்க அதை இரசிக்குற மனநிலைல இல்ல…”
என்று கண்டிப்பான குரலில் சொன்னான் விக்ரம்.
“தங்கள் சித்தம், மகாராஜா!”
என்று பெரிய புன்னகையோடு விக்ரமை நோக்கி வணங்கினான்,
“பிராமண பாஷை பேசுறது கொஞ்சம் ஜாலியா இருந்துச்சு, அதான்… ஓவரா போயிட்டேனோ?”
என்று தேவியைப் பார்த்துக் கண்ணடித்தான். அவல் இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
[the_ad id=”6605″]
“உனக்கு ஜாலியா இருந்தா நீ தனியா இருக்கும்போது உளறிக்கோ…”
அருண் கோவமாகச் சொன்னான்.
“சேனாதிபதியார் ஏன் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்? அந்தப்புறம் இல்லாததாலோ?”
என்றவன் மீண்டும் தேவியின் பக்கம் திரும்பி
“இந்தத் தூய தமிழ்ல பேசுறது கூட ஜாலியா இருக்குல?”
என்று மீண்டும் கண்ணடித்தான்.
”எப்பா, சாமி, எனக்குத் தலைசுத்துது… நான் வேற அவசரப்பட்டு இந்த வேதாளம் வந்துட்டா நம்ம பிரச்சனைலாம் க்ளியர் ஆயிடும்னு சொல்லிட்டேன்… பிரச்சனையே இவன்தான் போலயே…”
என்று தேவி போலியாக அழுவதைப் போலச் சொன்னாள்.
”ஹலோ, ஹலோ… என்ன நக்கலா? வாங்க, உங்க பிரச்சனைலாம் என்னனு சொல்லுங்க, நான் எல்லாத்தையும் டக்கு டக்குனு சால்வ் பண்றேன்…”
என்று தலையைச் சிலுப்பியபடி சொன்னான் அவன்.
“வேணா சாமி-”
என்று தேவி கைகளைத் தலைக்குமேல் குவித்தபடி ஏதோ சொல்லத் தொடங்க, விக்ரம் இடைமறித்தான்,
“போதும், கிளம்புங்க, ரூம்க்குப் போயிட்டு விவரமா பேசிக்கலாம்…”
என்று விக்ரம் இடத்தைவிட்டு எழுந்தான்.
பொழுது இருட்டத் தொடங்கியிருந்ததால் அதுதான் சரி என்று அனைவரும் எழுந்து கோயிலின் கேரளாந்தகன் வாயிலை நோக்கி நடந்தனர்.
*****
”இங்க பாரு தம்பி, நான் கேக்குறதுக்கு நீ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பதில் சொல்லனும், சரியா? வளவளனு பேசக் கூடாது!”
மகிழுந்து அவர்கள் தங்கியிருந்த விடுதியை நோக்கிச் சீரான கதியில் சென்று கொண்டிருக்க, தேவி பட்டனைப் பார்த்துக் கேட்டாள்.
“கேளுங்கோக்க்க்கா… டான், டான்னு பதில் ஷொல்றேன்…”
என்றான் அவன், அக்கா என்பதைச் சற்றே கிண்டலாக!
தேவி கண்களை உருட்டிவிட்டுக் கேட்டாள்,
“நீ யாரு? உனக்கு எங்களைப் பத்தி என்னலாம் தெரியும்?”
”சந்தேகமே வேண்டாம், நானே வேதாளம் அலைஸ் வேதாளப் பட்டன்! உஜ்ஜைனி பேரரசர், மகாராஜா விக்ரமாதித்யரின் அடிமை!”
என்று தலைகுனிந்து வணங்கியபடி சொல்லி, விக்ரமைக் கைக்காட்டினான் இறுதியில்.
“குட்! உனக்கு எவ்ளோ நாளா நீதான் வேதாளம்னு தெரியும்? எப்படித் தெரியும்?”
தேவி அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
வண்டியில் இருந்த அனைவரின் கவனமும் இவர்களின் உரையாடல் மீது இருந்தது. யாரும் குறுக்கே எதுவும் பேசவில்லை.
“அது ஒரு பெரிய கதை… சொன்னா நம்பமாட்டீங்க- ஓ, பட் நீங்க நம்புவீங்க… என் கதையைவிட பெரிய பெரிய நம்பமுடியாத விஷயங்களைலாம் நீங்க இன்னேரம் பார்த்திருப்பீங்க… ஆயிரத்தி எண்ணூத்தி முப்பத்தி-”
“டேய் தம்பி, வளவளனு பேசக்கூடாதுனு சொன்னேன்ல?”
தேவி இடைவெட்டினாள்.
“வளவளனு ஒன்னும் பேசல அக்க்க்கா! சொல்றத கேளு, நான் சொல்றது கொஞ்சம் நம்ப முடியாம இருக்கும்னுதான் நான் முன்னாடியே சொன்னேன்ல?”
என்று அவன் அலுத்துக்கொண்டான்.
“சரி சரி, சொல்லித்தொலை…”
என்று தேவியும் அலுப்புடன் ஒத்துக்கொண்டாள்.
“ஆயிரத்தி எண்ணூத்தி முப்பத்தஞ்சுலதான் எனக்கு நான் வேதாளப் பட்டன்னு தெரிஞ்சுது, அப்ப நான் இங்க-”
“டேய் டேய்…”
என்று தேவி மீண்டும் அவனை இடைமறித்தாள். விக்ரமைத் தவிர மற்றவர்களின் கவனமும் பார்வையும் அவன் மீதே இருந்தன.
“அதான் உண்மை, அக்க்க்கா!” என்று அவன் மீண்டும் அழுத்திச் சொன்னான்.
அவன் ‘அக்கா’ என்பதை ஏன் கிண்டலாக அழுத்திச் சொல்கிறான் என்பது தேவிக்கு இலேசாகப் புரிந்தது.
அவர்களைக் கண்டுகொள்ளாமல் அவன் தொடர்ந்தான்,
“ஆயிரத்தி எண்ணூத்தி முப்பத்தஞ்சு… அப்ப தஞ்சாவூர்ல கடைசி போன்ஸ்லே மன்னர் ஆட்சி பண்ணிட்டு இருந்தார், ராஜா சிவாஜி ராஜாராம்… அப்பத்தான் ப்ரிடிஷ்காரங்க மெள்ள ஆட்சி அதிகாரத்துக்குள்ள நொழஞ்சிட்டு இருந்தாங்க, சிவாஜி ராஜாக்கு உதவி பண்றோம்ன்ற பேர்ல…”
அவன் சற்று நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான், யாரும் எதுவும் பேசவில்லை,
[the_ad id=”6605″]
“நான் அப்ப இதே அக்ரஹாரத்துல இருந்த ஒரு குருக்கள் வீட்ல அவங்க பையனா இருந்தேன், அப்ப திடீர்னு எனக்கு எல்லாம் தெரிஞ்சுது… விக்ரமாதித்யர் பத்தி, நான் யாரு… எல்லாம்… இப்ப எப்படி இருக்கேனோ அப்படியேதான் அப்பவும் இருந்தேன், அதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன், எங்க இருந்தேன் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்ல…”
அவன் மீண்டும் ஒரு இடைவெளிவிட்டான். யாரும் அவனை இடைமறிக்க விரும்பவில்லை.
“ஸோ… எனக்கு நான் வேதாளப் பட்டன்னு தெரிஞ்சுதா? விக்ரமாதித்யர் வரும்போது அவருக்கு உதவி பண்ணனும்னும் தெரிஞ்சுது, எதோ ஒரு பொருளை நான் பாதுகாக்கனும்னு தெரிஞ்சுது… அது என்னனு தெரியாமலே இருந்துச்சு… அப்பதான் ஒரு நாள் நான் ஒரு சாமியாரை எதேச்சையா சந்திச்சேன்…”
”சாமியாரா?” தேவி ஆர்வத்தோடு கேட்டாள், கேட்கும்போதே அவளுக்கு அது யாராக இருக்கும் என்று ஒரு எண்ணம் தோன்றியது.
“கரெக்ட் அக்க்க்கா… அவரேதான்! வராகமிகிரரைத்தான் நான் அன்னிக்குச் சந்திச்சேன்… நூத்தி எண்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் அவரைச் சந்திச்சப்பதான் எனக்கு ஒரு க்ளாரிட்டி கெடச்சுது!”
அவன் முகத்தில் ஒரு புன்னகையோடு சொன்னான்.
இருபது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று ஒரு நிகழ்வைச் சொல்கிறான், அதையும் இன்றைய பேச்சுத் தமிழில் சொல்கிறான் என்பதை உள்வாங்கிக் கொள்ள அவர்கள் சற்றே திணறினர். ஆனாலும் அவன் சொல்வது அனைத்தையும் அவர்கள் உள்மனம் கேள்வியின்றி நம்பியது.
‘செழியனை இது மாதிரி கேக்காம விட்டுட்டோமே!’ என்று தேவியின் மனத்தின் ஓரத்தில் தோன்றியது.
“ஆமா, இதே மாதிரி இருநூறு வருஷமா இருந்திங்களா? சுத்தி இருக்குறவங்களுக்குலாம் என்ன சொல்லிச் சமாளிச்சீங்க?”
தேவி ஆர்வத்தோடு கேட்டாள். ஏனோ இப்போது அவனை தம்பி என்றோ, நீ வா என்று ஒருமையில் அழைக்கவோ அவளுக்கு வித்தியாசமாகப்பட்டது.
”நீ- நீங்க என்னை ஒருமைலயே கூப்டலாம், அக்க்கா… என்ன இருந்தாலும் நான் உங்களைவிட ரெண்டு மூனு வருஷம் சின்னவந்தான்…”
என்று அவன் கிண்டலாகக் கூறிச் சிரித்தான்.
தேவி அவனை அடிப்பவளைப் போலப் போலியாக கையை ஓங்கிவிட்டு
“அடிங்… கேட்டதுக்கு பதில் சொல்லு டா”
என்றாள், ‘டா’வை அழுத்திச் சொன்னபடி.
“அதையேன் கேக்குறீங்க, அவங்களைலாம் சமாளிக்குறது கொஞ்சம் கஷ்டந்தான்… நான் இருந்த குடும்பத்துல ஜெனரேஷனுக்கு ஒருத்தருக்கு என்னைப் பத்தின உண்மையை ஓரளவு சொல்வோம், அதாவது ஒரு வரம் காரணமா எனக்கு வயசாகாது, சாவு வராதுனு ஒரு கதையைச் சொல்லி வைப்போம், அவங்க உதவியோட நான் அப்பப்ப பக்கத்து ஊருக்குப் போயிடுவேன், வேதம் கத்துக்குறேன்னு, அப்புறம் சில ஆண்டுகள் கழிச்சுத் திரும்பி வருவேன்… இவங்களோட பையன், அவங்களோட தம்பி, அப்படினு மாத்தி மாத்தி ஏதாச்சு ஒரு உறவுமுறை சொல்லிப்போம்… ப்ரிடிஷ் ஆட்சி வந்தப்ப நான் இங்க்லீஷ் பாடம் படிக்க ஆரம்பிச்சேன்… படிக்குற சாக்குல சில வருஷங்கள் வீட்டைவிட்டுப் போயிடலாம்ல! கடைசியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் படிச்சு முடிச்ச இஞ்ஜினியரிங் டிகிரியையும் சேர்த்து இதுவரைக்கும் முப்பத்தோரு டிகிரி படிச்சிருக்கேன்… எல்லாம் ஃபுல் டைம்! ஆனா ஒன்னு, என்னால இந்தத் தஞ்சாவூர் சுத்துவட்டாரத்தத் தாண்டி வெளில போக முடியாது! இதுக்குள்ளயேதான் சுத்திச் சுத்தி வந்தேன்…”
என்று அவன் நீண்டதாகச் சொல்லி முடிக்கவும், மகிழுந்து விடுதியை அடையவும் சரியாக இருந்தது.
அவர்கள் இறங்க எத்தனிக்க, சட்டென்று நினைவு வந்தவளாகத் தேவி அவனை வினவினாள்,
“ஆமா, ஏதோ ஒன்னைப் பாதுகாக்கக்கனும்னு தெரிஞ்சுதுனு சொன்னியே… என்ன அது? வராகமிகிரர் உன்கிட்ட என்ன சொன்னார்?”
”அதுவா, அது நம்ம மகாராஜவோட சிம்மாசனந்தான்!”
என்றபடியே மகிழுந்தைவிட்டு இறங்கினான்.
தொடரும்…