Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 10(2)

இங்கு இவளின் மனநிலைக்கு முற்றிலும் மாறாக மிகவும் சந்தோஷமாக தன்னுடைய ஒவ்வொரு நாட்களையும் கழித்துக் கொண்டிருந்தான் வினய்.

 

முன்பே கலகலப்பானவன் தான் என்றாலும், இப்போது காதல் தந்த களிப்பில் இன்னும் புன்னகையுடனே அவன் தன் பணிகளை இன்னும் உற்சாகமாய் செய்ய, ஸ்டல்லாவிற்கு கூட இந்த வினய் புதிதாகத் தெரிந்தான்.

 



Advertisement

இருந்தும், விருது வாங்கிய மகிழ்ச்சியோடு புதிதாய் இரு பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் மகிழ்ச்சியும் சேர்ந்து தான் அவன் இப்படி இருக்கிறான் என அவர்களாகவே நினைத்துக்கொண்டனர்.

 

திருச்சியிலிருந்து திரும்பிய பிறகு, பிரபலமான இயக்குனர் விஸ்வஜித் அவர்களின் படத்திற்கான மேக்கப் டெஸ்ட் எனப்படும் ஒத்திகையில் அவன் நாட்கள் பரபரப்பாகி விட, அடுத்து வந்த லேக்மீ ஃபேஷன் வீக் அவனை மொத்தமாய் விழுங்கிக் கொண்டது.

Advertisement

 

Advertisement

ஓய்வாய் அமர்வதற்கு கூட நேரமில்லாமல் அவன் உழைத்த போதிலும், அவனையும் அவனின் நாட்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது வந்தனாவின் நினைவுகள்.

 

அடுத்த வாரம் நடக்கவிருக்கும் சங்கீதாவின் திருமணத்தில் தன்னுடைய தேவதையின் தரிசனம் கிடைக்கப் போகிறது எனும் எண்ணமே அவனின் நாட்களை வண்ணமயமாக்க, எப்போதடா அவளைப் பார்ப்போம் என அவனின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக துடித்துக் கொண்டிருந்தது.

Advertisement

 

இன்னும் இரண்டு நாட்களில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என அவன் வேலைகளை அதற்கேற்றார் போல் ஒதுக்கி வைத்து அவன் தயாராகி இருக்க, அனைத்தையும் மாற்றி, அவனை இப்போதே கிளம்ப வைத்திருந்தார் அகிலா.

 

மிகுந்த படபடப்புடன் அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த வினய், அங்கே வரவேற்பறையில் அகிலாவின் பெயரைச் சொல்லி விசாரித்து விட்டு அவர் இருந்த அறைக்கு விரைந்தான்.

 

இரண்டாம் தளத்தில் அமைந்திருந்த அந்த அறைக்குள் வேகமாய் நுழைந்த வினய், அங்கே கட்டிலில் சோர்வாய் படுத்திருந்த அவனின் அன்னையை பாதாதி கேசம் வரை பார்வையால் ஆராய்ந்து அவரின் நலத்தை உறுதி செய்து சற்று ஆசுவாசம் அடைந்தான்.

 

“என்ன மாம்?? கேர்ஃபுல்லா இருக்க மாட்டீங்களா???” என அவன் பரிதவிப்புடன் கேட்டுக்கொண்டே அவரை நெருங்கி அவரின் கரங்களைப் பிடித்துக் கொள்ள, 

 

அவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்த அகிலாவும், “வினய்!!! வந்துட்டியா???” என மகனைக் கண்ட சந்தோஷத்தில் எழுந்து கொள்ள முயல, 

 

“மாம்!! ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க!! படுங்க.. நான் இங்க தான் இருப்பேன்” என அவரை மீண்டும் படுக்க வைத்தவன், 

 

“பிரஷர் ஷூட்டப் ஆகுற அளவுக்கு உங்களுக்கு என்ன கவலை மாம்.. இப்படி ஹெல்த்தை கவனிக்காம மயக்கம் போட்டு விழுந்து வச்சிருக்கீங்க.. நல்லவேளை ஒன்னும் ஆகலை.. ஏதாவது அடி ஏதும் பட்டிருந்தா என்னாகும்??” என தாய்க்கு இப்படி ஆகிவிட்டதே எனும் ஆற்றாமையில் அவன் படபடவென பொரிய, 

 

மகனின் அக்கறையில் அகிலாவின் அதரங்களில் மிதமாய் ஒரு புன்னகை வந்து குடியமர்ந்தது.

 

“எனக்கு என்ன ஆனாலும் பார்த்துக்க தான் நீயும் உங்க அப்பாவும் இருக்கீங்களே!! அப்பறம் எனக்கென்ன கவலை” மகனைக் கண்டதும் அவரின் மனநிலையும் இலகுவாகியிருக்க, புன்னகையுடன் பதிலளித்தார்.

 

அப்போது தான் வெளியே சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த கணேசன், அகிலாவின் கூற்றைக் கேட்டுவிட்டு நன்றாய் முறைத்தபடி அவரை நெருங்கினார்.

 

“ஹாய் டாட்!!” என எழுந்து அவரை கட்டி விடுவித்த வினய்,

 

“எதுக்கு டாட் இப்படி ஒரு ரொமாண்டிக் லுக் மாமைப் பார்த்து??” என்றான் மென் சிரிப்புடன்.

 

“பின்ன என்ன வினய்? பண்றதெல்லாம் பண்ணிட்டு இங்க பெட்ல வந்து படுத்துகிட்டு பார்த்துக்க நாம இருக்கோம்ன்னு டையலாக் விட்டுட்டு இருக்கா.. காலேஜ்ல இருந்து இவ மயக்கம் போட்டுட்டான்னு சொல்லவும் எனக்கு உயிரே இல்லை தெரியுமா?? டாக்டர் வந்து இவளை செக் பண்ணி ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்ற வரைக்கும் என் மனசு எவ்வளவு பதறுச்சுன்னு எனக்கு தான் தெரியும்.. ” என்றவரின் ஆதங்கத்தின் பின் அழகாய் மறைந்திருந்த காதலை கண்டுகொண்ட அகிலாவின் முகம் கனிந்தது. 

 

இப்போது வினய்யும் காதல் எனும் உணர்வை முழுதாய் உணர்ந்த பின் தந்தையின் மனநிலை நன்றாகவே விளங்க, ஆதரவாய் அவர் தோள்களை தட்டிக் கொடுத்தான்.

 

“ரிலாக்ஸ் டாட்!!” என்றான்.

 

“இப்படி பிரஷர் ஷூட்டப் ஆகுற அளவுக்கு உங்களுக்கு என்ன கவலை மாம்??” என வினய் அகிலாவிடம் கேட்க, பதிலென்னவோ கணேசனிடமிருந்து தான் வந்தது.

 

“நல்லா கேளு உங்க அம்மாவை!! சும்மா கண்டதையும் யோசிச்சு அவ உடம்பையும் கெடுத்து என்னையும் நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறா..” என்றார் அவர் கடுப்புடன்.

 

“அப்படி என்ன டாட் யோசிக்குறாங்க??” என்றான் தந்தையின் புறம் திரும்பி.

 

அகிலாவை நன்றாய் முறைத்த கணேசன் மகனிடம் திரும்பி, “வேறென்ன எல்லாம் உன் கல்யாண விஷயம் தான்.. அவ பார்த்த பொண்ணை நீ வேண்டாம்னு சொல்லிட்டியாம்.. அது கூட பரவாயில்லை, அடுத்து பொண்ணே பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டியாம்.. ஏன் என்னாச்சு அவனுக்கு அப்படின்னு ரா பகலா இப்படியே யோசிச்சிட்டு பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கா உங்க அம்மா.. நான் எவ்ளோ எடுத்து சொன்னாலும் கேக்குறது இல்லை.. ” என புகார் வாசித்தவரின் குரலில் மனைவியின் செயல்கள் மீதான ஆதங்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.

 

அதைக்கேட்ட வினய்க்கு தன்னால்தானோ என சிறிதாய் குற்ற உணர்வு தோன்ற, 

 

“என்ன மாம் இது??” என்பது போல் அகிலாவை பார்த்தான்.

 

அகிலாவிற்கே தன் செயல் இன்று அவரின் உயிரானவர்களை இவ்வளவு பாதிக்கிறதே என வருத்தமாக இருக்க, “இல்லை வினய்!! ஃபர்ஸ்ட் பொண்ணு பார்க்க ஓகேன்னு சொன்ன.. தென் அந்த பொண்ணை பார்த்திட்டு வந்ததும் இனி பார்க்கவே வேணாம்னு சொல்லிட்ட.. அதான் அங்க என்ன நடந்துச்சு.. உனக்கு என்ன பிராப்ளம் அப்படின்னு அம்மாக்கு ஒரே யோசனை.. என்ன படிச்சு, வேலை பார்த்தாலும் நானும் சராசரி அம்மா தானே?? எனக்கும் கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசை இருக்காதா? அப்பா மாதிரி என்னால நடக்கும் போது நடக்கட்டும்னு ஈசியா விட முடியலை.. கொஞ்சம் இதை மனசுல போட்டு அலட்டிகிட்டேன்.. இனி இப்படி பண்ணலை.. அம்மா என் ஹெல்த்தை பார்த்துக்கிறேன்.. நீங்க இனி என்னை நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க” என்றார் மகனின் கன்னம் பற்றி சோபையான புன்னகையுடன்.

 

வினய்க்கு தாயின் வருத்தத்தைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ செய்ய, ‘தன் திருமணத்தை எண்ணி தானே இந்தக்கவலை, தன் காதலைப் பற்றி தெரிந்தால் அவரின் மனம் அமைதியடையுமே’ என அவனின் எண்ணம் செல்ல, அடுத்து அவன் தயங்கவே இல்லை.

 

என்றோ ஒருநாள் தெரியப்போகிறது அது இன்றாய் இருந்தால் என்ன?? எனும் மனநிலைக்கு வந்துவிட்டவன், 

 

“மாம்!! டாட்!! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என இருவரையும் பார்த்து அவன் கூற, 

 

“என்ன வினய்??” எனக் கேட்டிருந்தார் அகிலா.

 

“சொல்றேன் மாம்.. நான் சொல்றதை கேட்ட பின்னாடியாச்சும் நீங்க என்னை, என் மேரேஜ் பத்தி யோசிச்சு கவலைப்படாம இருங்க.. ” என்று அவன் தொடங்கவுமே, 

 

கணேசன் ஓரளவு யூகித்துவிட்டார். இருந்தும் மகனின் வாய்மொழியாக கேட்டு உறுதி படுத்திக்கொள்ள அவனை பார்த்திருக்க, 

 

அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், 

 

“ஐ அம் இன் லவ் மாம்!!!!” என தன் மனதை பெற்றவர்களிடம் வெளிப்படுத்தியிருந்தான் வினய் சக்கரவர்த்தி.

 

அதை அவன் சொல்லும் போது, அவன் கண்களில் வழிந்த காதலும், முகத்தில் வந்து போன மென்மையும், ஒரு ஆணாய் அவனின் காதலின் அளவை கணேசனுக்கு நன்றாகவே உணர முடிய, உண்மையில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

 

“ஹாஹா!!! கங்கிராட்ஸ் மை பாய்!! வெல்கம் டூ தி கிளப்” என ஆரவாரமாய் புன்னகையுடன் மகனைக் கட்டித்தழுவி தன் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்த, 

 

அதற்கு நேர்மாறாக, அதிர்ச்சியில் சிலையாய் சமைந்திருந்தார் அகிலா.

 

நிச்சயம் தன் வீட்டில் தன் காதலுக்கு எதிர்ப்பு இருக்காது என நம்பிய வினய்க்கு, அகிலாவின் இந்த அதிர்ந்த முகம் மனதின் ஓரம் ஏதோ எச்சரிக்கை கொடுக்க, 

 

“மாம்!!! என்னாச்சு???” என அவரின் தோளைத் தொட்டான்.

 

அதன்பின்னரே கணேசனுக்கும் அகிலாவின் மனநிலை நினைவில் வர, “அகி!!! நம்ம பையன் எவ்வளவு பெரிய குட் நியூஸ் சொல்லிருக்கான் நீ என்ன அப்படியே ஸ்டன் ஆகி உட்கார்ந்துட்ட” என அவரை உழுக்க, 

 

அவர் ஏதோ கனவில் இருந்து விழிப்பது போல் இருவரையும் பார்த்து முழித்தார்.

 

“என்ன மாம்?? உங்களுக்கு பிடிக்கலையா நான் லவ் பண்ணது??” என வினய் சந்தேகமாக வினவ,

 

“ச்ச!! ச்ச!! அவளுக்கு எப்படி பிடிக்காம போகும்?? அவதான உன் கல்யாணத்துக்கு அவ்ளோ ஆசையா இருந்தா??? உனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு பார்க்கணும்னு அவ்ளோ அலைஞ்சா.. அப்படி இருக்கப்போ நீயே உனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணைப் பார்த்துட்டன்னு தெரிஞ்சதும் அவ சந்தோஷத்தில அப்படியே பிரீஸ் ஆய்ட்டா.. உன் சந்தோஷம் தானே எங்களுக்கு முக்கியம்.. அப்படித்தானே அகி??” என்று கேட்டவரின் குரலில் மறைந்திருந்த மறைமுக செய்தியை உணர்ந்து கொண்ட அகிலாவும் முகத்தை முயன்று சாதரணமாக வைத்துக் கொண்டு,

 

“ஆமா.. ஆமா வினய்.. அம்மாக்கு நீ சந்தோஷமா இருந்தா போதும்” என்றார் அகிலா.

 

அதற்குள் வினய்க்கு ஒரு முக்கியமான அழைப்பு வர,

 

“ஒன் மினிட் மாம்” என சொல்லிவிட்டு அவன் வெளியே செல்ல, 

 

இங்கே கணேசன், “அகி!!! நான் முன்னாடியே சொன்னேன் வினய்யோட வாழ்க்கை அவன் விரும்புன மாதிரி தான் இருக்கணும்னு.. இருந்தும் அவன் இன்னைக்கு ஆசையா அவனோட மனசை நம்மகிட்ட ஷேர் பண்ணப்போ உன் முகத்துல அதிர்ச்சியையும் மீறிய ஏமாற்றம் தெரிஞ்சது.. அது வினய்க்கு புரியலைனாலும் எனக்குத் தெரியும் உன்னை.. உன் சிந்தனை போகுற பாதை தப்பா இருக்கு அகி!! இது சரியில்லை.. பிள்ளைங்க சந்தோஷம் தான் பெத்தவங்களுக்கும் சந்தோஷம்.. அதை மனசுல பதிய வச்சுக்கோ.. வினய்க்கு பிடிச்ச பொண்ணு தான் நம்ம வீட்டு மருமகள்.. அதை மாத்தணும்னு நினைக்காத” என கண்டிப்புடன் அவர் எச்சரிக்க, 

 

அகிலாவிற்கும் கணவனின் கூற்று புரியத்தான் செய்தது.

 

வினய் முகத்தில் தெரிந்த காதலில், அவன் இதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறான் என்பது அவருக்கும் விளங்க, எப்படியோ அவன் நன்றாக இருந்தால் போதும் எனும் மனநிலைக்கு முயன்று மனதை மாற்றியிருந்தார் அகிலா. 

 

“என்னங்க நான் ஏதோ சீரியல் வில்லி ரேஞ்சுக்கு பேசுறீங்க நீங்க?? அவன் லவ் பண்ணுவான்னு நான் யோசிக்கவே இல்லை.. அதான் அவன் திடீர்னு சொல்லவும் ஷாக் ஆகிட்டேன்.. அது ஒரு தப்பா?? பிளான் பண்ணி அவன் லவ்வை கெடுத்து விடுற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லைங்க.. நான் அவன் அம்மா.. எனக்கு அவன் சந்தோஷமா இருந்தா போதும்.. ஏதோ உங்களுக்கு மட்டும் தான் அவன் மேல பாசம் இருக்க மாதிரி பேசாதீங்க..” என அகிலா சிலிர்த்துக் கொள்ள,

 

அவரை இன்னும் முழுதாய் நம்பமுடியாமல் பார்த்த கணேசனோ, “இந்த மைன்ட் செட்டோட கடைசி வரைக்கும் இருந்தா சந்தோஷம் தான்” என்றார்.

 

அதற்குள் வினய்யும் வந்துவிட, 

 

“என்ன மாம் என்ன டிஷ்கசன் ஓடுது??” என கேட்டுக்கொண்டே அவர் அருகில் அமர, 

 

“அது சும்மா எப்பயும் போல எங்களுக்குள்ள.. அதை விடு நீ.. உன் லவ் ஸ்டோரி சொல்லு.. எப்போ அந்தப்பொண்ணை பார்த்த?? எங்க பார்த்த?? அவ என்ன பண்றா?? என்ன வேலை பாக்குறா?? உன் பிரோஃபஷன் தானா??” என அகிலா ‘அப்படி யாரிடம் வினய் காதலில் விழுந்தான்?? அப்படி ஒரு பேரழகியா அவள்??’ என தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என வரிசையாய் கேட்க, 

 

“அட கொஞ்சம் மூச்சு விட்டு கேளுங்க மாம்!!!” என கேலி செய்த வினய், 

 

“நீங்க கொஞ்சம் உடம்பு சரியாகி தெம்பா வாங்க.. உங்களை நேரிலயே கூட்டிட்டு போய் அவளைக் காட்டுறேன்.. அவளைப் பார்த்தா உங்களுக்கே லவ் வந்துடும் தெரியுமா?? சோ கியூட் அவ!!” என வந்தனாவை எண்ணியவனின் முகம் மென்மையாய் கனிய, உதட்டில் உரைந்த புன்னகையுடன் அகிலாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

அவனின் கூற்றைக் கேட்ட அகிலாவிற்கு, மெலிதாய் மிக மெலிதாய் ஒரு பொறாமை உணர்வு எழுவதை தடுக்க முடியவில்லை.

 

இருந்தும் அதை அடக்கியவர், “ஓகே வினய்!! ஐ அம் வெய்ட்டிங்!! இப்படி உன்னை மாத்தி வச்ச பொண்ணு யாருன்னு நானும் பார்க்கணும்” என அகிலாவும் முன்வர, 

 

“டாட் நீங்களும் அவளைத் தெரிஞ்சுக்கணுமா??” என்றான் கணேசனிடம்.

 

“ஹாஹா!! நான் உங்க அம்மா இல்லை வினய்!!! உனக்கு பிடிச்ச பொண்ணு.. அதுவே போதும் எனக்கு.. அவங்க யாரா இருந்தாலும், எப்படி இருந்தாலும் எனக்கு அது கவலை இல்லை” என்றார் கணேசன் தெளிவாக.

 

“லவ் யூ டாட்!!” என அவரைக் கட்டிக் கொண்டவன்,

 

அகிலா முறைப்பதைக் கண்டு, “ஹாஹா லவ் யூ மோர் மாம்” என அவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

சங்கீதாவின் திருமணத்தில் தன் காதலியை, கருவில் சுமந்தவளுக்கு காண்பிக்க அவன் காத்திருக்க, விதியோ அன்று மிகப்பெரிய திருவிளையாடல் ஒன்றை நடத்த நேரம் குறித்திருந்தது.

 

 

வலியுடன் அவள் அங்கே?? விதியின் விளையாட்டை அறியாமல் அவளைக் காணப்போகும் நாளுக்காக தவிப்புடன் இவன் இங்கே?? இருவருக்கும் காலம் என்ன வைத்திருக்கிறது?? பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!