Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 12

அத்தியாயம் – 12

 

 

“மதினி பாப்பாவை பார்த்தீங்களா?? ஆளையே காணோம்??” என வைஜெயந்தியிடம் வந்து நின்றார் நாட்டரசன்.



Advertisement

 

கேள்வி அவரிடமிருந்தாலும், பார்வை மொத்தமும் என்னவோ அவரின் அருகில் இருந்த இளவரசியின் மீது தான்.

 

Advertisement

அதை உணர்ந்தாலும், இளவரசி இவரை ஒரு மனிதராகக் கூட பொருட்படுத்தாமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, 

Advertisement

 

“அகம் புடிச்ச கழுதை!!” என மெதுவாய் மனைவியை திட்டிக்கொண்டார்.

 

Advertisement

“தனுக்கு லைட்டா தலைவலியா இருக்குன்னு படுத்திருந்தா பா.. நான் தான் ரூமுக்குள்ளயே இருந்தா ஒரு மாதிரி இருக்கும்.. காத்தாட பீச் பக்கம் நடந்திட்டு வான்னு மலர் கூட அனுப்பி வச்சேன்” என எங்கே அவரிடம் சொல்லாமல் வெளியே சென்றதற்கு பிள்ளைகளை திட்டி விடுவாரோ என்று அஞ்சி வைஜெயந்தி தன் மேல் பலியை போட்டுக் கொள்ளவும், 

 

“பெருசா ஆளும் பேரும் இல்லாத இடத்துல கல்யாணத்தை வச்சிகிட்டு, இப்போ அதுகளை வேற தனியா அனுப்பி வச்சிருக்கீங்க.. என்ன மதினி?? காலம் கெட்டு போய் கெடக்கு.. எப்போடா நேரம் கிடைக்கும்னு வெளியே நிறையா பொறுக்கிங்க சுத்திக்கிட்டு கிடக்கு.. இருங்க நான் போய் அவளை கூட்டிட்டு வரேன்” என்று அவரிடம் கோபத்தை காட்ட முடியாமல் பொருமிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்ப, 

 

“இருங்க தம்பி!! இது ரொம்ப பாதுகாப்பான இடம் தான்.. நீங்க பயப்பட வேண்டாம்.. அவ கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாண வேலை தொடங்கிடும்.. அப்பறம் அவளே வந்திடுவா!!” என அவரை நிறுத்தப் பார்த்தார் வைஜெயந்தி.

மற்றவர் பேச்சிற்கு செவிமடுத்தால் அது தான் நாட்டரசன் இல்லையே!!

 

அவர் யார் சொல்லியும் கேட்காமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்ப, 

 

“இந்தாளை கட்டிக்கிட்டு நானும் என் புள்ளையும் இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கணுமோ” என தலையில் அடித்துக்கொண்டு இளவரசியும் அவரை பின் தொடர்ந்து சென்றார்.

 

வைஜெயந்தியும் ஒரு பெருமூச்சுடன் தன் வேலைகளை கவனிக்கச் சென்று விட்டார்.

 

இங்கே சுற்றத்தையே மறந்து ஒரு மாயச்சுழலுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் பாஷை மறந்து வந்தனா அவன் ஒருவனையே பார்த்துக் கொண்டிருக்க, 

 

அவளின் ஒற்றைப் பார்வை அவனுள் ஆயிரமாயிரம் மின்னல்களை தோற்றுவிக்கச் செய்வதாய்!!!

 

‘முடியலை வதனா!! இப்படி பார்க்காத!! அப்பறம் இப்போவே உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுவேன்’ என இங்கு ஒருவன் தனக்குள் போராடிக் கொண்டிருப்பதை அறியாமல் அவள் அவன் காதலில் லயித்திருக்க, வினய்க்கு தான் பெரும் அவஸ்தையாகிப் போனது.

 

‘நிச்சயம் இப்படியே இவள் பார்த்தால், யார் தடுத்தாலும் இவளை தூக்கிக்கொண்டு போய்விடுவேன்’ என அவனின் மனம் அவன் கட்டுக்குள் வராமல் துள்ளிக் கொண்டு நிற்க, 

 

‘இதற்கு மேல் முடியாதடா சாமி’ என்று நினைத்த வினய்,

 

“கல்யாணம் பண்ணிக்கலாம் வதனா!!!! நான் உங்க வீட்டுல வந்து பேசுறேன்.. உங்க அப்பா கொஞ்சம் கோபப்படுவாருன்னு மலர் சொன்னா.. பட் ஐ கேன் மேனேஜ்.. நான் பார்த்துக்கிறேன்.. என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிக்கிறேன்.. நீ சரின்னு ஒரு வார்த்தை கூட சொல்ல வேண்டாம், லேசா தலையசைச்சா கூட போதும்.. ஓகே தான வதனா??” என காதலும் ஏக்கமும் போட்டிபோட எதிர்பார்ப்புடன் அவன் கேட்டே விட, 

 

இங்கு அவனின் பேச்சைக் கேட்ட வந்தனாவின் முகத்தில் யாரோ வெந்நீரைக் கொட்டியதைப் போல் சட்டென தன் மோனநிலையில் இருந்து வெளிவந்தவள், 

 

‘என்ன காரியம் செய்துவிட்டேன்??’ என தனக்குள் கேட்டுக் கொண்டவள், 

 

‘கூடாது!! இனி ஒரு நொடி இங்கு இருந்தாலும், இவனையும் இவன் கண்களையும் கண்டு வசியத்திற்கு கட்டுப்பட்டது போல் இவன் பின்னால் சென்றாலும் சென்றுவிடுவேன்.. அது கூடாது.. அவன் வேண்டாம்.. இது என்றும் நடக்காது.. இந்த உறவு ஒரு அழகான கவிதை!! ஆனால் முழுமையடையாத ஒன்று!!’ என நெஞ்சைப் பிழியும் வலியுடன் மனதில் கூறிக் கொண்டவள், அவனை நிமிர்ந்தும் பாராது முன்னால் எட்டு வைத்துச் செல்ல,

 

இங்கே வந்தனாவிடம் வந்து சென்ற மாற்றங்களைக் கண்டுகொண்ட வினய்க்கு இப்போது அவளின் பிரச்சனை நன்றாகவே தெரிந்து விட்டிருந்தது.

 

ஆம், இங்கு வந்ததும் வந்தனாவைத் தேடி அவன் கண்கள் அலைபாய, அவன் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள் மலர்.

 

அவளும் இவனைக் கண்டுவிட்டு, வேகமாக இவனை நோக்கி வர, இவனும் அகிலாவிடம் சொல்லிக்கொண்டு மலரிடம் சென்று புன்னகையுடன் பேசினான்.

 

அவனைக் கண்டதும், “ஏண்ணே இதான் நீங்க காதலிக்குற லட்சணமா?? ஒரு புள்ளைய பார்த்து பல்லை பல்லைக் காட்டுனா மட்டும் போதுமா?? அந்தப்புள்ளை சோகமா இருக்கே என்ன பிரச்சனை என்னன்னு விசாரிக்க மாட்டீங்களா நீங்க?? உங்கபாட்டுக்கு வந்து பார்த்து பேசி சிரிச்சுப்போட்டு கெளம்பி உங்க சோலியை(வேலையை) பார்க்கப் போயிட்டீக.. அதுக்கடுத்து அந்தப்புள்ளைக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு எதுனா தெரியுமா???” என அவனுக்கு பேசவே அவகாசம் அளிக்காமல் மலர் பொரிந்து தள்ள, 

 

தன்னவளுக்கு ஒன்றென்றதும் வினய்யின் உடல் சட்டென பரபரப்பாக, “வதனாக்கு என்னாச்சு சிஸ்டர்??? அவ நல்லாதனா இருக்க?? என்ன பிரச்சனை?? எனக்கு கொஞ்சம் வேலை பிரஷர் ஜாஸ்தி ஆய்டுச்சு.. இல்லைனா கண்டிப்பா இடையில வந்து அவளைப் பார்த்திருப்பேன்.. என் தப்பு தான்.. பார்த்திருக்கணும்!!!” என அவன் பதறவும், 

 

மலருக்கு மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருந்த சிறு சந்தேகங்களும் விடைபெற, அவனின் அன்பை கண்கூடாகவே கண்டபின், தான் எடுத்த முடிவில் இன்னும் உறுதியாக இருந்தாள்.

 

“பதறாதீக அண்ணே!! அவ உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்லை.. ஆனா அவ மனசு ரொம்பவே ஒடைஞ்சி போய் கெடக்கு.. இப்படியே விட்டா கூடிய சீக்கிரம் பைத்தியம் ஆய்டுவா அவ” என தோழியை எண்ணி அவள் குரல் வருத்தமாய் வெளிவர, 

 

இங்கே இவனின் உள்ளம் அவனின் வதனாவிற்கு என்னாயிற்றோ என துடிதுடிக்க, ‘ஒன்னும் இல்லை ஏஞ்சல்!! நான் வந்துட்டேன்.. இனி நான் பார்த்துக்கிறேன்’ என என்ன பிரச்சனை என்று அறியாமலே, மனதிற்குள் அவளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.

 

அவனை அதிகம் சோதிக்காமல், மலர் வந்தனாவின் வீட்டில் நடந்த பிரச்சனைகளை ஆதி முதல் அந்தம் வரை தெரிவித்திருக்க, 

 

வினய்க்கு, ‘இந்தக்காலத்தில் கூடவா இப்படியெல்லாம் இருக்கிறார்கள்??’ என நாட்டரசனை எண்ணி வியப்பாக இருந்தது.

 

அவன் வளர்ந்த சூழலுக்கு, இவனுக்கு இதெல்லாம் புதிதாக இருக்க, “ரிடிகுலஸ்!!! மத்தவங்களுக்காக யாராவது பெத்த பொண்ணோட லைஃப்ல விளையாடுவாங்களா??” என மலரிடம் கேட்க, 

 

“அவ அப்பாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது.. அவர், இதோ இப்போ நடக்குதே சங்கீ அக்கா கல்யாணம்.. அதுக்கே எவ்ளோ தாம் தூம்ன்னு குதிச்சாரு தெரியுமா?? அவர் சரியான வெட்டி கவுரவம் புடிச்ச மனுசன்.. பாசமெல்லாம் இருந்தாலும் அதைவிட மத்தவங்க இவரைப் போல உண்டான்னு பெருமையா பேசணும்னு ஒரு வெறி புடிச்சு கிடக்கும் அந்த மாமாக்கு.. அதுனால நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது.. இன்னும் மூணு மாசத்துல படிப்பு முடியுது.. அது முடிஞ்சதும் எங்க தனுவை நீங்க தூக்கிட்டு போயாச்சும் கல்யாணம் பண்ணி பத்திரமா பார்த்துக்கோங்க.. இங்க இருந்தா அவங்க அப்பா அவளை கொஞ்சம் கொஞ்சமா கொன்றுவாரு!!” என மலர் உறுதியாகக் கூறிவிட, 

 

வினய்க்கு நாட்டரசன் மீது கோபம் வந்தாலும், தன் வதனாவைப் பெற்றவர் ஆதலால் கோபத்தை அடக்கியவன், இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது, விரைவாக வீட்டில் பேசி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான்.

 

“வந்தனா ரொம்ப லக்கி!! இப்படி ஒரு உண்மையான ஃப்ரெண்ட் கிடைச்சதுக்கு” என வினய் உணர்ந்து சொல்ல,

 

“இதே மாதிரி நானும் சொல்லோணும்.. அதுனால எங்க தனுவை நல்லா பார்த்துக்கோங்க சொல்லிட்டேன்” என மலர் மிரட்டல் போலவே சொல்ல, அதில் வினய்க்கு புன்னகை தான் வந்தது.

 

“சரி அவ ரூமுக்குள்ளயே அடைஞ்சு கெடக்கா.. எப்படியாவது பேசி அந்த பீச்சுப் பக்கம் கூட்டிட்டு வரேன்.. நீங்களும் வெரசா அவ கூட பேசி ஏதாவது முடிவெடுங்க சரியா??” என வினய்யின் மனம் புரிந்து அவள் பேசவும்,

 

‘ரொம்ப புத்திசாலி தான்’ என நினைத்துக் கொண்ட வினய், சரியென்பதாய் தலையசைக்க, அதன் பின் தான் மலர் வந்து வந்தனாவிடம் போராடி வெளியே அழைத்து வந்திருக்க, இருவரும் பேசட்டும் என தனிமை அளித்து விலகி நின்று கொண்டாள் மலர்.

 

அவர்கள் பேசும் வரை, யாரும் வருகிறார்களா என அவளின் கண்கள் நாலாபக்கமும் ஆராய, தூரத்தில் நாட்டரசன் கோபமாக வருவது தெரிந்தது. 

 

நிச்சயம் இவ்வளவு தொலைவில் அதுவும் பெரிதாய் வெளிச்சம் இல்லாத இந்த புலரா காலை வேளையில் அவருக்கு தெளிவாக பார்வைகள் தெரியாது என மலருக்குத் தெரிந்தாலும், இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் நிச்சயம் வந்தனாவிற்கு இங்கேயே சமாதி கட்டிவிவிடுவார் என்பது உறுதி.

 

எனவே, அவர் இங்கே வருவதற்குள்ளே அவரைத் தடுத்தாக வேண்டி மலர் முன்னே ஓட, 

 

வந்தனாவும் அப்போது தான் வினய்யை விட்டு விலகி நடக்கத் தொடங்கியிருக்க, அவள் கண்களிலும் இந்தக்காட்சி விழுந்து மூளையை மரத்துப் போக வைத்தது பயத்தில்.

 

வினய்க்கு வந்தனா விலகி நடந்தது பெரிதாய் பாதிக்கவில்லை. எதிர்பார்த்த ஒன்று தானே?? அதுவும் அவள் குடும்பத்தைப் பற்றி அறிந்த பின், அவளின் மேல் இன்னுமின்னும் பிடித்தம் கூடியது. 

 

கூடிய விரைவில், அவளைத் தன் வாழ்க்கைக்குள் நுழைத்து, அவளின் கவலைகளைக் களைந்து, என்றும் நீங்காத சிரிப்பை அவள் அதரங்களில் நிலைநாட்ட வேண்டுமெனும் உறுதி பிறக்க, அவளை மேலும் வருத்தாமல் அவள் போக்கிற்கு இப்போதைக்கு விட்டு விட நினைத்தவன், செல்லும் அவளையே பார்த்திருக்க, அவனின் கண்களில் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் நாட்டரசன் விழுகவில்லை. 

 

அதற்குள், சங்கீதா வந்துவிட்டதாக ஸ்டெல்லா இரண்டு முறை அழைப்பு விட்டிருக்க, இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என அவன் வந்தனாவை ஒரு முறை ஆழமாய் பார்த்துவிட்டு திரும்பி நடந்துவிட்டிருந்தான்.

 

இங்கே நாட்டரசனை நெருங்கியிருந்த மலர், தூரத்தில் வினய் போய்விட்டதை கண்டுவிட்டு ஆசுவாசமாக பெருமூச்சு விட, 

 

“இந்தா மலரு!! எங்க வந்தனாவைக் காணோம்??? உங்கூட இருக்கதா சொன்னாங்க?? தூரத்துல நிக்குறது யாரு வந்தனாவா?? எதுக்கு அவ தனியா நின்னுகிட்டு இருக்கா??” என அவர் சந்தேகத்துடன் கேள்விக்கணைகளைத் தொடுக்க, 

 

“அவளுக்கு கொஞ்சம் தலைவலியோட சேர்த்து உடம்பெல்லாம் அசதியா இருக்காம் மாமா.. அதான் திரும்ப ரூமுக்கே போய்டலாம்னு இருந்தோம்.. தூரத்துல நீங்க வரதைப் பார்க்கவும் என்னவோ ஏதோன்னு தான் நான் ஓடி வந்தேன்” என அவள் மிகவும் இலகுவாகப் பேசி சமாளிக்க, 

 

“இந்தா அறிவிருக்கா உனக்கு?? அவளுக்கே முடியலைன்னு சொல்ற.. இப்படி தனியா விட்டுபுட்டு வந்திருக்க.. ஏன் நான் வரமாட்டேனா?? சீக்கிரம் வா!!” என அவர் கோபத்தில் கத்திக் கொண்டே முன்னே நடக்க, 

 

தூரத்தில் இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவிற்கு, அவளின் தந்தை வினய்யுடன் பேசுவதைக் கண்டுவிட்டுத் தான் இவ்வளவு கோபத்துடன் மலரிடம் ஏதோ சண்டையிட்டுக் கொண்டு வருகிறார் என்று தோன்ற, 

 

பயத்தில் அந்தக் காலை வேளையிலும் அவள் உடல் வியர்வையால் நனைந்திருந்தது.

 

அவர் அருகே நெருங்க நெருங்க, இவளுக்கு இதயம் படபடவென அடித்துக் கொள்ள, கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமல் தள்ளாடியது.

 

தோழியின் மாற்றத்தை உணர்ந்த மலர், சட்டென வேகமெடுத்து வந்தனாவை நெருங்கியிருக்க, “நான் ஒன்னும் பண்ணலைப்பா!!” என பயத்தில் முணுமுணுத்துக்கொண்டே மலரின் கைகளில் மூர்ச்சையாகியிருந்தாள் வந்தனா.

 

“விளங்குச்சு!! உன்னையை வச்சு ஊறுகாய் கூட போட முடியாது டி!! இதுல எங்க கல்யாணம் பண்ண?? பாவம் அந்த அண்ணேன்” என வினயை எண்ணி பரிதாபம் கொண்ட மலர்,

 

“எழுந்துக்கோ புள்ளை!!” என அங்கு வந்த அலைகளின் நீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, வந்தனாவின் புருவங்கள் லேசாய் சுருங்க மெதுவாய் கண் விழித்தாள்.

 

அதற்குள் நாட்டரசனும் அவர்களை பதட்டத்துடன் நெருங்கியிருந்தார்.

 

“என்னாச்சு??? என்னம்மா பண்ணுது?? வா எழுந்திரு ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என அவர் பதற, 

 

‘ரொம்பத்தேன் அக்கறை!!’ என முணுமுணுத்த மலர்,

 

“மாமா ரொம்ப பதறாதீங்க!! அவ நீங்க கோவமா வரவும், எங்க உங்ககிட்ட சொல்லாம இங்க வந்ததுக்கு திட்ட போறீங்கன்னு உங்களைக் கண்டு தான் பயத்துல மயங்கி விழுந்துட்டா.. மொதல்ல பெத்த புள்ளைகிட்ட அன்பா நாலு வார்த்தை பேசுங்க.. இப்படியா பெத்த புள்ளையை பயங்காட்டி வச்சிருப்பீங்க?? ” என இதுதான் சமயம் என அவரை சாடிய மலர், 

 

“இந்தாடி!! மொதல்ல எந்திரி.. இந்த உலகத்திலேயே பெத்த அப்பாவைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்தது நீயாத் தான் இருப்ப… அவர் என்ன கரடியா?? சிங்கமா?? உன்னை கடிச்சுக் கொதற… உங்கப்பா தான?? எதுக்கு நீ இப்படி இருக்க?? இப்படி இருந்தா வாழ்க்கையில எல்லாத்துலயும் தோத்துப் போய் மூலையில உட்கார்ந்து அழுகத்தான் முடியும்.. ” என அந்த எல்லாமில் அழுத்தம் கொடுத்து மலர் கூற, 

 

நாட்டரசனின் கவனமோ, மகளின் உடல்நிலையில் தான் இருந்தது. மலர் சொல்லியது அனைத்தும் கேட்டாலும் பெரிதாய் அதற்கு எதிர்வினை காட்டாதவர், 

 

“என்னம்மா பண்ணுது?? நம்ம வேணும்னா கெளம்பலாமா?? வீட்டுக்கு போய் கூட நீ கொஞ்சம் படுத்து எந்திரி.. முடியலைனா ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என மீண்டும் அவர் அதையே கேட்க, 

 

“ஆஹான்!! நல்லாயிருக்கே.. சொந்த அண்ணன் மவ கல்யாணத்தை விட்டுபுட்டு கெளம்புவீங்களா நீங்க ரெண்டுபெரும்??” என மோவாயில் கைவைத்து அதிசயித்த மலர், 

 

“அட கொஞ்சம் வாயை மூடு நீ!!” என மலரை அடக்கிய நாட்டரசன், மகளின் பதிலுக்காக அவளின் முகத்தையே பார்க்க, 

 

“நான்.. எனக்கு ஒன்னும் இல்லை ப்பா” என அவர் முகம் பார்க்காமல் அவள் பதிலளிக்கவும் தான் நாட்டரசனுக்கு நிம்மதியாக இருந்தது.

 

“அதான் உங்க மவளே ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா தான மாமோய்!! இன்னும் என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீக?? உங்க பெரிய மவ கல்யாணத்துல உங்களுக்கு எந்த வேலையும் இல்லையா என்ன?? போய் அதைப் பாருங்க.. இவளை நான் பார்த்துக்குறேன்” என மலர் சொல்லவும், 

 

இன்னும் கிளம்பாமல் தயக்கத்துடன் மகளின் முகம் பார்த்த நாட்டரசன், “நடக்க முடியுமா இல்லை நான் உங்கம்மாவை வரச்சொல்லவா??” என்று வேறு கேட்க, 

 

வேண்டாம் என்பதாய் மறுத்து விட்டு மலருடன் அவள் முன்னே நடந்து செல்ல, அவரும் அவர்களின் அறை வரையிலும் வந்து விட்டுவிட்டு, மகளுக்கு சூடாக காஃபி வாங்கிக்கொடுத்து விட்டே வெளியேறினார்.

 

“பார்ரா!! கல்லுக்குள் ஈரமா?? இந்த மனுசனுக்குள்ளையும் எங்கேயோ பாசமெள்ளாம் இருந்திருக்கு பாரேன்” என மலர் கிண்டலாய் வியந்து சொல்ல, 

 

வந்தனா அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலே இல்லை. 

 

அவளின் சிந்தை யாவும் வினய் கடைசியாய் கூறிய வார்த்தையிலே சுற்றிக் கொண்டிருக்க, “எங்கே அவன் சொன்னது போல் தன் வீட்டில் வந்து பேசிவிடுவானோ??” என மனதில் எண்ணி கலங்கியவள், திருமணத்திற்கு கிளம்ப வேண்டும் என்ற யோசனை கூட இல்லாமல் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.

 

 

இங்கு சங்கீதாவின் அறைக்கு வந்த வினய்யோ, அங்கே வைஜெயந்தி மற்றும் இளவரசியுடன் இன்முகமாக பேசிக் கொண்டிருந்த அகிலாவைக் கண்டு, “என்ன மாம் அதுக்குள்ள ஃப்ரெண்ட் ஆய்ட்டிங்களா???” என்று கேட்டு புன்னகையுடன் உள்ளே நுழைய, 

 

மகனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்டு அகிலாவின் மனதும் மற்றதை மறந்து மகனின் சந்தோஷத்தையே முதன்மையாகக் கொண்டது.

 

“இன்னைக்கு ஒரு ஃபங்ஷன் இதை முடிச்சிட்டு நானும் அம்மாவும் போகணும்.. அதான் இங்க முடிச்சிட்டு அகைன் வீட்டுக்கு போய் அம்மாவைப் பிக்கப் பண்ணிட்டு போக லேட் ஆய்டும்ன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க” என முன்பே அகிலா அவர்களிடம் சொல்லியிருந்த காரணத்தை வினய்யும் தன் பங்கிற்கு சொல்லியவன்,

 

“சாரி மேம்.. லேட் ஆய்டுச்சா??” என சங்கீதாவிடம் கேட்டுக்கொண்டே அவன் ஸ்டல்லாவிடம் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்தாகிற்றா என விசாரிக்க,

 

அவனின் இந்த துறுதுறுப்பும், முகம் கொள்ளா புன்னகையும் இளவரசிக்கு புதிதாய் இருக்க, அவனை சுவாரசியமாக பார்த்திருந்தார்.

 

வினய்க்கு இளவரசி தான் அவனின் வருங்கால மாமியார் என்று தெரியாததால் அவரின் பார்வைக்கு மிதமான ஒரு புன்னகையை பரிசளித்தவன், தன் வேலையில் கவனமாகி விட, இளவரசிக்கு அவனைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.

 

சற்றுமுன் அகிலாவின் மூலம் அவனைப்பற்றி அறிந்து கொண்டவருக்கு, பெண்கள் கோலோச்சும் இந்தத்துறையில் ஒரு ஆணாய் அவனின் சாதனைகள் அளப்பரியதாகவே தெரிய, அதுவும் நேரில் அவனையும் அவன் வேலை செய்யும் பாங்கையும் கண்ட பின், அவர் மனதில் அவன் உயர்ந்து நின்றான்.

 

இந்த வேலைகள் எல்லாம் ஆண்கள் தான் செய்ய வேண்டும், இதெல்லாம் பெண்கள் செய்ய வேண்டும் என இத்தனை காலமும் இந்த சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறி அவன் இயல்பாய் இதை தனக்கான துறையாய் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பது அவன் மேல் மதிப்பை அதிகரித்தது.

 

இவ்வாறாக அவனின் மாமியார் அவனை வியந்து பார்த்திருக்க, அதற்கு நேர்மாறாக கடுங்கோபத்துடன் அவனை உறுத்து விழித்தபடி கடுங்கோபத்துடன் உள்ளே வந்தார் நாட்டரசன்.

 

வந்தனாவை பார்க்கச் சொல்லி இளவரசியிடம் சொல்லலாம் என அவரைத் தேடி இங்கு வந்தவருக்கு, உள்ளே சங்கீதாவின் இதழ்களுக்கு சாயம் பூசிக் கொண்டிருந்த வினய்யைக் கண்டு வந்ததே ஆத்திரம்.

 

என்ன, ஏது என மற்றவர் உணரும் முன்பே, “டேய்!! யாருடா நீ எங்க வீட்டு புள்ளை மேல கைவச்சிட்டு இருக்க??” என ஆவேசத்துடன் அவன் சட்டையை கொத்தாய் பற்றி இழுத்திருக்க, 

 

இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால் வினய் அவரின் இழுப்பிற்கு செல்ல, அவன் கைகளில் இருந்த லிப் கிளாஸ் தூரச் சென்று உடைந்து நொறுங்கியது.

 

நொடிநேரத்தில் நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தில், அனைவரும் உட்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க, 

 

தன்னுடைய இத்தனை வருட காலங்களில் இப்படி ஒரு அவமானத்தை எதிர்கொண்டிராத வினய்யின் கண்கள் கோபத்தில் ரத்தமென சிவந்து விட்டிருந்தது.

 

“சித்தப்பா!!! என்ன பண்றீங்க?? முதல்ல விடுங்க அவரை!!” என முதலில் அதிர்ச்சியில் இருந்து தெளிந்த சங்கீதா எழுந்து வர, 

 

“நீ சும்மா இரு!! கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?? இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் ஆகப்போவுது.. இப்போ போய் இன்னொருத்தன் கிட்ட மூஞ்சியை காமிச்சிட்டு உட்கார்ந்திருக்க” என வார்த்தைகளில் வரைமுறை இல்லாமல் அவர் கோபத்தில் பேச, 

 

அகிலாவிற்கு மகனின் இந்தத் தோற்றமும், நாட்டரசனின் பேச்சும் கோபத்தை அதிகரிக்க, “ஹலோ மிஸ்டர்!!! ஃபர்ஸ்ட் உங்க கையை எடுங்க.. இல்லை உங்களுக்கு மரியாதை இருக்காது.. உங்க ஃபேமிலில இருந்து தான என் பையனை மேக்கப்க்கு புக் பண்ணிருந்தாங்க.. பிடிக்கலைனா அவங்க கிட்ட சொல்லி வேற யாரையும் வச்சு பண்ணிருக்கணும்.. இப்படி இன்டீசண்டா பிஹேவ் பண்ணக்கூடாது” என அகிலா முன்னே வர, 

 

இளவரசிக்கு கணவனை எண்ணி கோபம் கட்டுக்கடங்காமல் வர, 

 

“முதல்ல கையை எடுங்க!!! இல்லை நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.. ஊரு விட்டு ஊரு வந்து என்னைய அசிங்கப்படுத்தாதீங்க” என அவர் வெடிக்க, 

 

இத்தனை வாக்குவாதத்திலும், வினய் பதிலேதும் பேசாமல் அவர் பிடித்திருந்த தன் சட்டையிலே பார்வையைப் பதித்து கோபத்தை உள்ளடக்கி நின்றிருக்க,  

 

அவன் முகத்தைக் காண்கையில் இளவரசிக்கு ஆதங்கமாக வந்தது.

 

‘எப்படி இப்படி சிரிச்ச முகமாக இருக்காருன்னு இப்போதான் நினைச்சேன்.. அதுக்குள்ள இப்படி ஆக்கிப்புட்டாரே இந்த பாழாய் போன மனுசன்’ என நாட்டரசனை எண்ணி மனதில் குமைந்தவர், நாட்டரசன் கத்துவதையும் பொருட்படுத்தாது அவரின் பிடியில் இருந்து வினய்யை விலக்கி விட்டவர், 

 

“இவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் பா.. மன்னிச்சிடு எங்களை” என கையெடுத்துக் கும்பிட, 

 

“நான் என்ன தப்பு பண்ணேன்னு நீ இந்த பொறுக்கி கிட்ட மன்னிப்பு கேக்குற??” என மீண்டும் அவர் வார்த்தைகளை சிதறவிட, 

 

இத்தனை நேரமும் அவன் கட்டிக் காத்த பொறுமை, அவரின் ‘பொறுக்கி’ எனும் ஒரு வார்த்தையில் கரையைக் கடக்க, “இனஃப்!!!! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன்” குரலை உயர்த்தாமல், அழுத்தமாய் அவன் கர்ஜிக்க, 

 

அவன் கண்களில் தெரிந்த கோபத்திற்கும் குரலிற்கும் சிறிதும் சம்பந்தமில்லை.

 

இந்தத் துறைக்குள் வந்தபின் எத்தனையோ, கேலிகள், விமர்சனங்கள், சிறிதாய் அவமானங்களைக் கூடச் சந்தித்திருந்த வினய்க்கு, நாட்டரசனின் செயல்களும் பேச்சும் இதுவரை கனவிலும் சந்தித்திராத ஒன்று.

 

‘ ஆம்பளை மேக்கப் மேன் எதுக்கு?? வேற யாரும் இல்லையா?? இவங்க எப்படி ஒரு பொண்ணுக்கு பண்ண முடியும்??’ என பலவகையான பேச்சுக்களை அவனின் ஆரம்பகாலத்தில் கேட்டு தான் மேலே வந்திருந்தான். 

 

ஆனால், இப்போது தன் தொழிலில் கோலோச்சி, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பின்பு, இது போன்ற முக்கியமான புள்ளிகளின் விஷேசத்திற்கு மட்டுமே இவன் ஒப்புக்கொள்வதால், இது போன்ற பேச்சுக்களை எல்லாம் அவன் கேட்டதே இல்லை. 

 

இன்று, அவரின் இந்த மூர்க்கமான செயலும், கீழ்த்தரமான பேச்சும், பொறுமையின் சிகரமான அவனையே கோபம் கொள்ள வைத்திருந்தது.

 

அதற்குள் இவர்களின் சப்தம் கேட்டு மேலும் சிலர் உள்ளே வர, அனைவரின் முன்பும் காட்சிப் பொருளாக நின்று கொண்டிருந்த தன் நிலமையை அறவே வெறுத்த வினய், 

 

“சாரி மிஸ். சங்கீதா!!! ஸ்டெல்லா வில் கண்டினியூ” என சங்கீதாவிடம் சொல்லிக்கொண்டு, ஸ்டெல்லாவை பார்த்துக்கொள்ளுமாறு கண்களால் பணித்து விட்டு அவன் முன்னேற, 

 

அவர்களும் அவனிடம் நடந்த சம்பவத்தை எண்ணி மிகவும் வருந்தி மன்னிப்பு வேறு கேட்டனர்.

 

செல்லும் முன் அவன் ஒரு நிமிடம் நின்று நாட்டரசனை அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க, அவரும் சளைக்காமல் அவனை அற்பமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

 

அவரின் பார்வையில் பொதிந்திருந்த செய்தியை உள்வாங்கிக் கொண்ட வினய்யின் முகம் கோபத்தில் சிவந்து போக, தன் அன்னையை அழைத்துக் கொண்டு அவன் வெளியேற, அகிலாவும் அவனைத் தொடர்ந்து நாட்டரசனை முறைத்துக் கொண்டே செல்ல, சரியாய் அப்போது, விஷயம் அறிந்து பதட்டத்துடன் வேகமாய் உள்ளே ஓடி வந்த வந்தனா, வெளியே வந்த வினய் மீது மோதிக்கொள்ள,

 

“ஹேய் பார்த்து!!!” என அவன் அவளை கீழே விழாமல் பிடிக்க,

 

“என் பொண்ணு மேல இருந்து கையை எடுடா பொறுக்கி!!!!” என வேகமாய் வந்து நின்றார் நாட்டரசன்.

 

“என்னது இவர் பொண்ணா???” என அவன் வந்தனாவையும் நாட்டரசனையும் அதிர்ந்து போய் மாறி மாறிப் பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!