பாலாவும் அவன் நண்பர்களும் வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. முதல் இரண்டு நாட்கள் வீட்டில் தங்கியவர்கள் அடுத்து தங்கள் குறும்பட வேலையாய் அலைந்து கொண்டிருக்க, நாங்கள் பண்ணை வீட்டிலேயே தங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டனர்.. உண்பதற்கு மட்டும் இங்கே வந்து போக இருந்தனர்..
லட்சுமி இரண்டு நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை போட்டிருந்தாள்.. என்னதான் வேலைக்கு ஆட்கள் எல்லாம் இருந்தாலும், மரகதம் மட்டும் இத்தனை பேரையும் கவனிக்க முடியுமா என்ன?? ஆக அவளும் வீட்டிலிருக்க,
மரகதமோ “நீ போயிட்டு வா லட்சுமி.. லீவ் எல்லாம் போடாத.. அப்புறம் ரேவதி கல்யாணத்துக்கு வேற போடணுமே…” என,
“ரேவதி கல்யாணம் அப்போ எனக்கு காலேஜ் லீவ் தான் அத்தை..” என்றவள் இரண்டு நாட்களும் அவருக்கு ஒத்தாசையாய் இருந்தாள்.
“சும்மா சொல்லக்கூடாது ஈசா… லட்சுமி அவ்வளோ பொறுப்பு…” என்று மரகதம், ஈசனிடம் பெருமை பேச, அவனும் “ம்ம்…” என்று மட்டும் தலையை ஆட்டி வைத்தான்..
அவனுக்கு மனதில் இப்போது வேறொரு கடுப்பு.. பாலா வந்து இறங்கியதுமே, அண்ணனை தேடாமல் அண்ணியை தேடிக்கொண்டு வந்தது தான்..
பாலாவும் அவன் நண்பர்களும் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிட, ஈசன்தான் அழைக்கச் சென்றிருந்தான்.. பாலா கேட்ட முதல் கேள்வியே “லச்சு எப்படி இருக்குண்ணா..” என்றுதான்..
“ஏன்டா நான் வந்திருக்கேன்.. என்னை கேட்கிறியா..” என்றவனுக்கு ஒரு சிரிப்பைக் கொடுத்தவன், தன் நண்பர்களை அறிமுகம் செய்துவைக்க, ஈசனோடும் அவர்களோடு இரண்டொரு வார்த்தை பேசியவன், பின் காரை எடுக்க, மற்றவர்கள் பின்னே அமர்ந்து பேசிக்கொண்டு வர, பாலாவும் ஈசனும் முன்னே இருந்தனர்.
“லட்சுமி அதுவே பேசிச்சுண்ணா… அன்னிக்கு நீயே சொன்னியா சொல்லிடுன்னு.. ஆனாலும் நான் மறுநாள் சொல்லவேயில்ல… என்னவோ இத்தனை நாள் விட்டு இப்போ திடீர்னு பேச தயக்கமா இருந்துச்சு.. ஆனா லட்சுமியே போன் பண்ணிடுச்சு… என்ன கொஞ்சம் காதுல ரத்தம் வர்ற அளவு திட்டு வாங்கினேன் அவ்வளோதான்…” என்று ஆரம்பித்தவன் வீடு போய் இறங்கும் வரைக்கும் அவளை பற்றியே பேசிக்கொண்டு வர,
“ம்ம்… ம்ம்…” என்றுமட்டும் கேட்டுகொண்டே வந்த ஈசனுக்கோ,
‘டேய் லஷ்மி என் பொண்டாட்டி டா.. எனக்கும் தெரியும் அவளை பத்தி..’ என்று சொல்ல வேண்டும் போலிருக்க, ஆனால் அது தான் முடியவில்லை..
ஈசன் இப்படி எண்ணிய நொடியே அவன் மனமே கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டதே..
‘என்ன தெரியும்?? இல்ல லஷ்மி பத்தி உனக்கு என்ன தெரியும்?? அப்படி தெரிஞ்சிருந்தா நீ ஏன் இப்படி இருக்க போற.. அவ ஏன் இப்படி இருக்க போறா…’ என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதில் யோசிக்குமுன்னே வீடு வந்திட்டது..
வீட்டிலிருப்பவரை அனைவரையும் பாலா தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க, லட்சுமியிடம் வந்தவன்,
“இவங்கதான்… என் மதினி… என் பிரண்ட்.. என் அக்கா தங்கச்சி எல்லாமே..” என்று பெருமையாய் அவளை அறிமுகம் செய்ய, லட்சுமிக்கே கூட மனம் அதிர்ந்து தான் போனது..
திகைத்து போய் பாலாவை பார்த்தவள் பின் அனைவரையும் பார்த்து சிரிக்க, பாலாவின் நண்பர்களும் அவளை ‘மதினி…’ என்றே சொல்ல, “அய்யோ…” என்பது போல் பார்த்தாள் லட்சுமி..
‘டேய் உனக்கு மதினின்னா உன் பிரண்ட்ஸுக்குமாடா…’ என்பது போல் பாலாவை பார்க்க, அவனோ பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரித்தான்.
லட்சுமி இன்முகமாய் தான் நின்றிருந்தாள். அதுவும் ஈசனருகில்.. பாலா அறிமும் செய்துவைக்கும் போதும் சரி, அடுத்து அடுத்து அனைவரும் பேசும் போதும் சரி, லட்சுமி ஈசன் அருகிலேயே தான் இருந்தாள்..
என்னதான் வந்திருப்பவர்கள் பாலாவின் நண்பர்கள் என்றாலும், அவளை மதினி என்றழைத்தாலும், அனைவரும் சக வயதினர் அல்லவா.. ஆக சிரித்த முகமாய் இருந்தாளே தவிர, வேறெதுவும் பேசவில்லை. பாலா கேட்பதற்கு சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்வாள்.. மற்றவர்களின் பேச்சில் கலந்துகொள்ளாமலும் இல்லை.. ஆனாலும் ஒரு அளவில் இருக்க, ஈசனும் இதெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தான்.
‘பரவாயில்ல தெளிவா தான் இருக்கா…’ என்று நினைக்கையில்,
‘அவ தெளிவா தான் இருக்கா.. நீ தான் குழம்பித் தவிக்கிற..’ என்று அவன் மனம் சம்மனே இல்லாமல் ஆஜாரானது.
‘நான் என்ன குழம்பினேன்.. நான் நல்லாத்தான் இருக்கேன்..’ என்று கெத்து குறையாமல் சொல்லிகொண்டாலும், லட்சுமி பிறரிடம் நல்லபடியாய் சிரித்து பேசும் போது, தன்னிடமும் அப்படியே இருக்கமாட்டாளா என்ற ஏக்கம் எழுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை..
ஈசன் மட்டும் அமைதியாய் இருக்க, வீடே கலகலவென்று இருந்தது. அப்படியே பாலாவும் அவன் நண்பர்களும் தங்கள் வேலையை பற்றி பேசிக்கொண்டிருக்க, மரகதமும், லட்சுமியும் அடுத்த வேலைகளை கவனிக்கச் சென்றனர்..
முதல் இரண்டு நாட்கள் வீட்டில் தங்கியவர்கள், அடுத்து தோப்பு விட்டில் தங்கிக்கொள்ள சென்றிட, அப்போது தான் லட்சுமிக்கு சற்றே ஓய்வு கிடைத்தது..
மறுநாள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.. இன்னும் சில வாரங்களில் முதல் ஆரம்பித்துவிடும்.. முன்பு படிப்பென்றாலே எட்டிக்காயாய் கசந்தவளுக்கு இப்போது என்னவோ நன்றாய் படித்து நல்ல மதிப்பெண் வாங்கிட வேண்டும் என்று மனதில் பிடிவாதமாய் எண்ணம் வேர் விட்டிருந்தது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக்கொண்டு தான் இருந்தாள்.. அன்றும் அப்படியே வேலைகளை முடித்து அறைக்கு வந்தவள், ஒரு குளியலையும் போட்டு விட்டு வந்து படிக்க அமர, அப்போது தான் பார்த்தாள், ஈசனும் தன் வேலைகளை முடித்துவிட்டு வந்து படுத்திருந்தான்..
வெறுமெனே கண்களை மூடி ஈசன் படுத்திருப்பது நன்றாகவே தெரிந்தது அவளுக்கு.. இந்த இரண்டு நாட்களாய் லட்சுமியை கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவனுக்குத் தெரியும் வீட்டில் எத்தனை வேலைகள் என்று..
‘சீக்கிரமே கடையை மூடிட்டு வந்துட்டாங்களா…’ என்று யோசித்தவள், மேஜையில் தன் நோட்டை வைத்து அமர, அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தான் ஈசன்..
அப்போது தான் குளித்து வந்தேன் என்று காட்டும் விதமாய் லட்சுமியின் முகம் பளிச்சென்று இருக்க, அவளது கண்களோ சோர்வாய் இருந்தது.. முடியை கொஞ்ச நேரம் விரித்து விட்டிருந்தவள், என்ன நினைத்தாளோ அப்படியே தூக்கி முனிவர்கள் கொண்டை போல் மேலே தூக்கி போட, அது அவளுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாய் தோன்ற,
‘புதுசு புதுசா கெட்டப் போடுறா…’ என்று எண்ணியவன் முதல் முறையாய் லட்சுமியை ரசித்துக்கொண்டு இருந்தான்..
வேமாய் போய் அவள் போட்டிருக்கும் கொண்டையை அவிழ்த்து விடவேண்டும் போல் மனம் பரபரத்தது.. அந்த தோற்றத்தில் லட்சுமி புதுவிதமாய் தெரிந்தாள். அவளே இப்போது புதிதாய் தான் இருக்கிறாள், ஆனால் இப்போது இன்னும் புதிதாய்..
ஈசன் பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.. திருமணமாகி இத்தனை நாட்களில் இப்படியெல்லாம் லட்சுமியை ரசிக்கும் எண்ணம் வந்ததில்லை. அதை நினைத்து அவனுக்குமே ஆச்சர்யமாய் இருந்தது..
‘இத்தனை நாள் என்ன பண்ணோம்…’ என்று தோன்ற, அப்படியே ‘என்ன பண்ணோம்…’ என்று யோசிக்க, ஈசனது நினைவுகளும் வேகமாய் பின்னோக்கி செல்ல, பிடிவாதமாய் தன் எண்ணங்களை முன்னே கொண்டுவந்து நிறுத்தினான்..
‘வேணாம் ஈசா… எதையும் நினைக்காத…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவனின் பார்வை மட்டும் லட்சுமியில் இருந்து அகலவேயில்லை.
லட்சுமிக்கு, படிப்பில் கவனம் போக, அங்கே ஒரு ஜீவன் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்கிறது என்று அறிய முடியவில்லை..
தூக்கம் வேறு சொருக, கண்களை கசக்கிவிட்ட படியும், வந்த கொட்டாவிகளை எல்லாம் ஓட விரட்டியபடியும் கணக்குகளை போட்டு பார்த்துக்கொண்டு இருந்தாள்.. ஒருநேரத்தில் சமாளிக்க முடியாமல் போக, தன்னையும் அறியாது தூங்கிவிட, ஈசனுக்கு புன்னகை விரிந்தது.
‘டயர்ட்டா இருந்தா தூங்க வேண்டியது தான…’ என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன், அவளை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் போடத் தான் நினைத்தான்.. ஆனால் என்னவோ அவளருகே சென்றதும் ஒரு தயக்கம்.. தொட்டுத் தூக்கினால் விழித்துக்கொண்டு எதுவும் சொல்வாளோ என்று..
‘சொன்னா சொல்லிட்டு போ டி.. நான் தொட்டதே இல்லையா…’ என்று கேட்பான் தான்.. ஆனால் அதற்கும் லட்சுமி இடக்காய் பேசுவாளே..
‘இந்த நேரத்துல சண்டை போட முடியாது…’ என்று தோன்ற, மெல்ல, “லஷ்மி…” என்று எழுப்பினான்..
நன்றாய் உறங்கிவிட்டாள் போல.. அசையவே இல்லை… மேஜை மீது தலை கவிழ்ந்திருக்க, அவளை பார்க்கவும் பாவமாய் தான் இருந்தது..
‘ரொம்ப ஸ்ட்ரைன் பண்றா சொன்னா கேட்கிறதில்லை…’ கடிந்தபடியே அவள் தலையை லேசாய் தூக்கி, அடியில் இருந்த நோட்டை மூடிவைத்துவிட்டு, மீண்டும் அவளை எழுப்பினான்.
“லஷ்மி… எந்திரி…” என்று அவள் தோள்களை தொட, அவனது தொடுகையில் லேசாய் விழித்தவள், பாதி கண்களை தான் திறந்து பார்த்தாள்..
மேஜை மீது கவிழ்ந்ததில் அவள் போட்ட முனிவர் கொண்டை அவிழ்ந்து, கேசம் கலைந்திருக்க, லட்சுமியை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ஈசனுக்கு.. பாதி கண்களை மட்டும் திறந்தவள் மீண்டும் தலை கவிழ, அத்தனை நேரம் நோட்டின் மீது தலை வைத்திருந்தாள், இப்போது கவிழ்ந்தால் லட்சுமியின் தலை மேஜையில் தான் இடிக்கும்.
ஆகையால் வேகமாய் அவளை பிடித்துக்கொள்ள, நின்றிருந்த ஈசன் மீதே அமர்ந்த வாக்கில் சாய்ந்துகொண்டாள்.
“லஷ்மி.. எந்திரி.. எந்திரிச்சு வந்து பெட்ல தூங்கு…” என்று மீண்டும் எழுப்ப, “ம்ம்ஹும்…” என்று சிணுங்கியவள், இன்னும் அழுத்தமாய் அவன் வயிற்றில் முகம் புதைக்க, அவனுக்கு அவஸ்தையாய் போனது..
‘என்னடா இப்படி பண்றா…???’ என்றெண்ணியபடி அவளை பார்க்க, அவளோ அவன் பனியனை இறுக பற்றிக்கொண்டு நன்றாய் சாய்ந்திருந்தாள்.
இது வேலைக்காக்காது என்று நினைத்தவன், அவளை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டு வர, நன்றாய் உறங்கிக்கொண்டு இருந்த லட்சுமிக்கு விழிப்பு வந்ததோ என்னவோ,
‘ஐயோ…’ என்று சொல்லியபடி கண்களைத் திறக்க, அவள் திடீரென்று சப்தமிட்டதில், இன்னும் அவளை இறுக்கிப் பிடிக்க, லட்சுமி இன்னும் கண்களை அகலத் திறந்து பார்த்தாள்..
லட்சுமிக்கு எதுவும் புரியவில்லை.. என்னவோ அந்தரத்தில் இருப்பது போல் இருக்க, மீண்டும் உறக்கம் வேறு அவளை தன் வசப்படுத்த முயல, ஈசனது பிடியும் இறுகியிருக்க, சுத்தம் அவளுக்கு எதுவும் விளங்கவில்லை. திகைத்தவள் அப்படியே ஈசனை பார்த்தபடி இருக்க,
“படிச்சிட்டே தூங்கிட்ட.. எழுப்பினேன் எந்திரிக்கல நீ…” என்று காரணம் சொல்லிக்கொண்டே தூக்கிக்கொண்டு வந்தான்..
மேஜையருகே இருந்து கட்டிலுக்கு வர நொடிகள் கூட ஆகாது ஆனால் அவளைத் தூக்கிக்கொண்டு வர பல மணி நேரம் ஆனது போல் இருந்தது ஈசனுக்கு. ஆனால் லட்சுமிக்கோ எதுவும் நினைவில் இல்லை..