“இல்ல… அது.. நான் அங்க அம்மா வீட்டுக்கு போனேன்ல.. நீங்க ஏன் மாமா என்னை ஒருத்தடவ கூட கூப்பிடல…” என்றாள் முகத்தை சோகமாய் வைத்து..
அது அவனுக்கும் தெரியும் தானே.. அவன் இப்போது வரைக்கும் அவளை கூப்பிடவில்லை. ஆனால் இந்த விசயத்தில் ஈசனது எண்ணமோ, அவளாகவே போனாள், அப்போ அவளாகவே திரும்பட்டும் என்று இருந்தான். அதையே தான் இப்போதும் சொன்னான்.
“நீ போறப்போ என்கிட்ட கேட்டு போனியா லஷ்மி…” என, அவள் தலை இல்லையென்று ஆட,
“இல்ல.. நான் போக சொன்னேனா…” என, அதற்கும் இல்லையென்றாள்.
“இது உன் வீடு லஷ்மி.. இங்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. நான் உன்னைப் போக சொல்லிருந்தா, கண்டிப்பா நானே வந்து கூப்பிட்டு இருப்பேன்.. அதுவுமில்லாம எனக்கு இப்போக்கூட நீ போனது தப்புன்னு தான் படுத்து… அதான் கூப்பிடல.. நீயா வரும் போது வரட்டும்னு இருந்தேன்…” என்றதும்,
“ம்ம் சரி மாமா…” என்றவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.
ஆனாலும் மனதிலோ ‘ஏன் நான் போனா உங்களுக்கு கஷ்டமாவே இல்லையா…’ என்று கேட்க தோன்ற, எட்டிப்பார்த்த சிறு ஏக்கத்தையும் அப்படியே விழுங்கிட்டு உறக்கத்திற்குச் செல்ல, ஈசன் உறங்காமல் அவளைத் தான் பார்த்திருந்தான்.
லட்சுமி பேசியவையே அவன் மனத்தில் ஓட, இனிமேலாவது அவளை கொஞ்சம் நல்லபடியாய் வைத்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
சொன்னதுபோலவே மறுநாள் லட்சுமி அவளது வகுப்புகள் முடிந்து காத்திருக்க, ஈசனும் வந்து அழைத்துக்கொண்டு சென்றான். இதற்கிடையில் ஸ்நேகா தான் லட்சுமியை ஒருவழி படுத்திவிட்டாள்.
“எப்படி எப்படி.. போன வாரம் எல்லாம் முகத்தை தூக்கிட்டு இருந்த.. இப்போ எப்படி டி…” என்று கேட்க,
“அடடா.. என் ஈஸ் மாமாக் கூட நான் போறேன்..” என்று சிரிப்பை அடக்கி லட்சுமி சொல்ல,
“ம்ம் இப்போதான் உன் முகம் பார்க்கவே நல்லாருக்கு.. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இரு லஷ்மி..” என, இப்போது லட்சுமி முறைத்தாள்.
“இங்க பாரு லஷ்மின்னு சொல்லாத அப்படின்னு நீ சொன்னா நான் கேட்கமாட்டேன்…” என்று ஸ்நேகா வம்பிழுக்கும் போது தான் ஈசன் வந்தான்.
லட்சுமி அவனுக்கு ஸ்நேகாவை அறிமுகம் செய்துவைக்க, மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கணவன் மனைவி இருவரும் கிளம்பிச் சென்றனர்.
கடைகளுக்கு அழைத்து சென்ற ஈசனோ, கையை கட்டிக்கொண்டு அமர்ந்து விட, லட்சுமி தான் ‘இது நல்லா இருக்கா மாமா.. அது நல்லா இருக்கா மாமா…’ என்று அவனை ஒரு வழிப் படுத்திவிட்டாள்.
மரகதம் ஈசன் கிளம்பும் போதே “ஈசா லட்சுமி ஆசைப்படுறத எல்லாம் வாங்கி குடு.. கொஞ்சம் பொறுமையா இருக்கணும்…” என்று சொல்ல,
“எனக்கு பிடிச்சத எடுக்க நான் மட்டும் வந்திருக்கலாம்.. உங்களை ஏன் கூட்டிட்டு வரணும்…” என்று சொல்லவும் தான் ஈசனுக்கு ‘ஓ இப்படி வர்றாளா..’ என்று புரிந்தது.
லட்சுமி விஷயத்தில் அவன் கொஞ்சம் லேட் பிக்கப் என்று அவனுக்கே அப்போது தான் விளங்கியது. ஆனாலும் ‘நீங்க செலெக்ட் பண்ணுங்க மாமான்னு சொன்னா பண்ணிட்டு போறேன்…’ என்று கெத்து காட்டியபடி பார்த்தவன், ஓரளவு இருவருக்குமே பிடித்ததாய் எடுத்துக்கொண்டு வந்தனர். அவனோ நிறைய நிறைய வாங்கினான்,,
“இவ்வளோ எதுக்கு மாமா..” என்று வீட்டிற்கு வரும்போதும் அதையே சொல்ல, “ஷ்… இப்போ என்னாங்கிற.. இதல்லாம் திரும்ப கடைல கொண்டு போய் கொடுத்துடலாமா??” என்று ஈசன் கேட்ட பிறகே தான் வாய் மூடினாள்.
“வீடு போற வரைக்கும் இப்படிதான் வர்ற…” என்று மிரட்ட,
“ரொம்ப பண்ணாதீங்க.. ஏதாவது சொன்னா, நான் இறங்கி நடந்தே போய்டுவேன்…” என்றாள் அவளும்.
“அடேங்கப்பா.. எங்க இறங்கிப் போ பாப்போம்…”
“நான் ஏன் அப்படி போகணும்.. எனக்கும் கார் ஓட்டத் தெரியும்.. உங்கள இறக்கிவிட்டு நானே கார் ஓட்டிட்டு போவேன்…”
“ஓ…” என்றவன் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, இறங்கியவன் பின் பக்கம் வந்து அமர்ந்துகொண்டான் “ம்ம் ஓட்டு…” என்று சொல்லியபடி..
இதனை எதிர்பார்க்காத லட்சுமியோ, “ஈஸ் மாமா.. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்…” என,
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ டிரைவிங் கிளாஸ் போற தான.. ஓட்டு…” என்று சொல்ல, “கொஞ்ச நாளா தான போறேன்…” என்றாள் பாவமாய்..
“நானெல்லாம் அஞ்சு நாள்ல கார் ஓட்டினேன்…” என்று பெருமை பேச,
‘இவங்க பெருமைக்கு ஒரு அளவில்ல…’ என்று நினைத்தவள், “அதுக்கு நானும் அப்படியா ஓட்டனும்..” என்றாள்.
“போ போ ஓட்டு… நான் சொல்லித் தர்றேன்…” என்றதும், அவளுக்கும் ஆசையாய் தான் இருந்தது.
எதுவும் சொல்லாமல் டிரைவர் சீட்டிற்கு போனவள், காரை கிளப்ப, ஈசனுக்கு அத்தனை ஒன்றும் சொல்லும்படி இல்லை. ஓரளவு அவளே நன்றாகவே காரை செலுத்த, ஒருசில விஷயங்கள் மட்டும் சொல்லியபடி வந்தான். லட்சுமிக்கு என்னவோ வானில் பறப்பது போலதான் இருந்தது..
அவன் புல்லட்டில் அழைத்து செல்ல மாட்டானா என்று ஏங்கிய நாட்கள் போய் இன்று அவளே அவனை வைத்து வண்டியோட்டிக்கொண்டு வர,
‘ஐ… நான்.. நான் ஈஸ் மாமாவ வச்சு கார் ஓட்டுறேன்…’ என்று அவள் மனம் கும்மாளம் போட, அவள் எடுத்திருந்த நகையும் பட்டும் கூட அத்தனை பூரிப்பை அவளுக்கு கொடுக்கவில்லை..
வீட்டிற்கு வந்தும் அனைவரிடமும் தான் ஈசனை வைத்து கார் ஓட்டியதை பேச,
“புருசனும் பொண்டாட்டியும் கார் பழகத்தான் போனீங்களா.. வாங்கிட்டு வந்தத காட்டுறத விட்டுட்டு கார் ஓட்டுனேன் கார் ஓட்டுனேன்னு சொல்லிட்டு இருக்கா…” என்று முத்தழகு சொல்ல,
“அதெல்லாம் மறந்தே போச்சு…” என்றபடி லட்சுமி வாங்கியவைகளை வீட்டில் இருந்தவர்களுக்கு காட்ட,
ஒவ்வொன்றையும் காட்டும் போதும் “இது ஈஸ் மாமா செலேக்சன்..” என்று சொல்லி சொல்லிக் காட்ட, வந்ததில் இருந்து அவளது ஆர்ப்பரிப்பை பார்த்துகொண்டு இருந்த ஈசனுக்கு ஒன்று மட்டும் நன்றாய் புரிந்தது.. அனைத்தையும் விட லட்சுமிக்கு ஈசனும், அவனது கவனிப்பும், அவனது அருகாமையும் அவனது காதலும் தான் முக்கியமென்று.
“அத்தை இது நல்லாருக்கா.. ஈஸ் மாமாதான் இது எனக்கு நல்லாருக்கும்னு சொன்னாங்க…” என்று ஒரு சேலையை அவள் மீது போட்டுக் காட்ட, ஈசனுக்கு என்னவோ மனம் உருகி, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.