“போர் அடிச்சதா…??” என்று கேட்டபடி ஈசனருகே அமர, ம்ம்ஹும் என்று தலையை ஆட்டியவன் அமைதியாய் இருந்தான்..
“முழிச்சிட்டாளா..” என்று வசுமதியோடு பேசியவள், பாப்பாவை நோக்கி வா என்பதுபோல் கை நீட்ட, அதுவோ வசுமதியின் முகம் பார்க்க, அவளும் ‘போ..’ என்று சொல்ல, அடுத்தநொடி லட்சுமியின் மடியில் வந்தமர்ந்தாள் நட்சத்திரா.
“மாமா இங்க பாருங்களேன்…” என்று ஈசனை அழைத்தவள், அவன் திரும்பவும், “நான் கூப்பிடவும் வந்துட்டா…” என்று சொல்லி பாப்பாவின் கன்னத்தில் முத்தமிட, அவளும் பதிலுக்கும் லட்சுமியின் கன்னத்தில் இதழ் பதிக்க, ஈசனுக்கு அந்தக் காட்சி மனதில் ரம்யமாய் பதிந்தது.
மௌனமாய் அனைத்தையும் ரசித்திருக்க, சரியாய் அங்கே ஸ்நேகா வந்தாள் “சாரி டி லேட் ஆகிடுச்சு..” என்றபடி.
“ஹ்ம்ம் இப்போவாது வந்தியே..” என்றவள் அவளுக்கு இடம் விட்டு அமர, அப்படியே வசுமதிக்கும் ‘என் பிரண்ட்’ என்று அறிமுகம் செய்து வைக்க, அடுத்து அவர்களின் பேச்சு தொடங்கியது. ஈசனுக்கோ எப்போதடா தனிமை கிடைக்கும் என்றிருந்தது.
பாலா அங்கே வந்தவன், “நீ வரவும் தான் அண்ணன் போட்டோக்கு போஸ் குடுப்பேன் சொன்னான்…” என்றபடி கேமராவை எடுக்க,
‘அப்படியா..’ என்பது போல் ஈசனை ஆச்சர்யமாய் பார்த்தவள், மடியில் நட்சத்திராவை வைத்தபடியே ஈசன் தோள் மீது லேசாய் சாய்ந்து அமர்ந்தபடி போஸ் கொடுக்க, ஈசனின் பார்வையோ லட்சுமி மீதிருக்க, அழகாய் படமானது அவர்களின் காட்சி.
அடுத்தடுத்து நேரம் செல்ல, மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, பரிசுகளை கொடுத்துவிட்டு, குடும்பத்தோடும் சரி, தனித் தனியாகவும் சரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, உணவும் முடிந்து நேரம் பார்க்க மதியம் தொட்டிருந்தது.
கதிரவனும் வசுமதியும் முக்கால்வாசி நேரம் இவர்களுடனே இருக்க, ஈசனுக்கு மனத்தில் பல கேள்விகள் எழுந்தாலும், மற்ற அனைத்தையும் விடுத்து லட்சுமியை மட்டும் சிந்தனை செய்துகொண்டு இருந்தான்.
மதிய உணவு முடிந்ததும் “சரி நாங்க கிளம்புறோம்.. இதுக்கு மேல பாப்பாவ சமாளிக்க முடியாது…” என்று கதிரவன் சொல்ல, வசுமதியும் கிளம்புகிறோம் என்பதுபோல் தலையசைக்க, அவர்களுக்கு விடைகொடுத்து விட்டு, ஈசனும் “கிளம்பலாம லஷ்மி…” என,
“கிளம்பலாம்.. ஆனா எதுல போறது…??” என்று உதடு பிதுக்கினாள் லட்சுமி..
“கார் இருக்கே…”
“ஹ்ம்ம் கொஞ்ச நேரம் முன்னாடி அத்தை மாமா பாட்டி எல்லாம் ஒரு கார்ல போனாங்க.. அதுக்கும் முன்னாடி அம்மாக்கு இந்த சாப்பாடு சேரல எப்படியோ இருக்குன்னு கிளம்பினாங்க.. ஸ்நேகாவும் தலைவலின்னு அம்மாக்கூட ஒரு கார்ல கிளம்பிட்டா…”
“அப்போ நம்ம எதுல போறதாம்…??”
“நடராஜா சர்வீஸ்.. மெதுவா அப்படியே நடந்து போவோம்…” என்றாள் கிண்டலாய்.
“அடேங்கப்பா.. எனக்கென்ன நான் நடந்தே போவேன்.. ஆனா நீதான் ரெண்டு எட்டு வச்சதும் கால் வலிக்குது மாமான்னு முகத்தை தூக்குவ..” என்றான் அவனும் கேலியாய்.
“முகத்தை தூக்கினா என்ன… நீங்க தூக்கிட்டு போறது..” என்ற, லட்சுமிக்கு சரிக்கு சரியாய் அவனோடு பேசுவதில் ஒரு அலாதி இன்பம் இருப்பதாகவே இருந்தது. இப்போது அவனுக்கும் அப்படித்தான்.
“தூக்கிட்டு போறது என்ன தள்ளிட்டே போறேன் இரு…” என்று கடத்தல் பார்வை தான் பார்த்தான்.
“ஷப்பா.. முடியல…” என்று சிரிக்க, “போடி..” என்றவன் “யார் கார் எடுத்தா???” என்றான்..
“ஒண்ணு பாலா எடுத்தான், அப்புறம் பிரபு…”
“ஹ்ம்ம் சரி யாரையாவது வர சொல்வோம்…” என்றுவிட்டு பாலாவிற்கு அழைக்க, அவனோ அவன் நண்பர்களோடு கும்பக்கரை செல்வதாக சொல்லிட, அடுத்து பிரபுவோ அவன் எடுத்த கார் ரிப்பேர் என்றிட, “போச்சுடா…” என்றபடி அலைபேசியை வைத்தான்.
“என்ன மாமா???” என்றவளிடம் விவரம் சொன்னவன், “பஸ்ல தான் போகணும்..” என்றான்..
“பஸ்லயா… கூட்டமா இருக்கும்.. முஹூர்த்தம் வேற..”
“கூட்டம் தான் செமயா இருக்கும்.. இடிச்சிக்கலாம்.. உரசிக்கலாம்…” என்று ஈசன் அவனது இயல்பையும் மீறி கண் சிமிட்ட, அவளோ நீதானா இது என்று ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“என்ன என்ன பாக்குற.. இப்போ உனக்கு வீட்டுக்கு போகவேணாமா??” என்றான்.
“போகணும் மாமா.. ஸ்நேகா வேற அம்மா வீட்ல இருப்பா.. நாளைக்குத் தான் ஹாஸ்ட்டல் போவா.. அடுத்த நாள் எக்ஸாம்…” என்றாள் வேகமாய்.
‘அடிப்பாவி நான் எதுக்காக வீட்டுக்கு போகலாம்னு சொல்றேன்.. இவ இப்படி சொல்றா…’ என்று ஈசன் நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.
முஹூர்த்தம் என்பதால் பேருந்தில் சரியான கூட்டம்., நின்றுகொண்டு தான் வந்தனர். ஒவ்வொரு முறை ப்ரேக் போடும்போதெல்லாம் லட்சுமி ஈசன் மீது சாய “இதைத் தான் அப்போ சொன்னேன்…” என்று ஈசன் மெல்ல சொல்ல,
அவளுக்கோ ‘இதெல்லாம் ஈஸ் மாமா ரசிக்கிறாங்களா??’ என்று தோன்றவும், ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“ஓய்.. பஸ்ல வச்சு சைட் அடிக்காத…” என்று சிரிப்பாய் ஈசன் சொல்லிட, என்னவோ லட்சுமிக்கு காரில் அவனோடு சென்றதை விட, இந்த பேருந்து பயணம் மிகவும் பிடித்திருந்தது..
அமைதியாய் அவனது அருகாமையை ரசித்தபடி வந்தவள், ஈசனும் அவ்வாறே உணர்கிறான் என்று தோன்ற, “உங்களுக்கு இப்படி வர்றது பிடிச்சிருக்கா மாமா…” என்றாள்.
“பின்ன.. என் லஷ்மியோட வர்றேனே. ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று சொல்ல,
திருமணமாகி இத்தனை நாட்களில் முதல் முறையாய் அவன் சொல்லும் ‘என் லஷ்மி…’ என்ற வார்த்தை அவளுக்கு மனதை நிறைக்க, அமைதியாய் வந்தாள்.
ஈசன் இப்போது எதையுமே யோசித்து பேசவில்லை. மனதில் இருப்பதை அப்படியே பேசுகிறான். இந்த மாற்றம் அவனுக்குப் பிடித்திருக்க, லட்சுமியை முன்னைவிட பிடித்திருக்க, என்னவோ வாழ்வே இனிதான் ஆரம்பிக்கப் போகிறது என்பது போல் ஒரு படபடப்பு அவனுள்.
வீட்டிற்கு சென்றாலோ, அனைவரும் உறக்கத்தில் இருக்கு, இவர்களும் வந்து உடைமாற்றி கொஞ்சம் உறங்க, இரவில் வந்து நிதானமாக லட்சுமியோடு பேசலாம் என்றிருந்தவன் இப்போது பண்ணைக்கு கிளம்ப, அவளோ இரவில் பட்டை நாமம் சாத்தினாள்.
“ஸ்நேகா அங்கயிருக்கா மாமா.. எனக்காகத் தான் வந்தா.. அவளை விட்டு நான் இங்கயிருந்தா நல்லாருக்குமா.. நீங்க தானே சொல்வீங்க நமக்குன்னு தனிப்பட்ட பொறுப்புகள் நிறைய இருக்கு அதெல்லாம் பார்த்து செய்யணும்னு…” என்று அவன் சொன்னதையே அவனுக்கே சொல்ல,
‘டேய் ஈசா… எல்லாம் தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்திருக்க…’ என்று அவன் மனசாட்சி அவனுக்கே ஆப்பு அடித்தது..
“ஹ்ம்ம் சரி போ…” என்று ஈசன் சொல்ல, “இப்படி சொன்னா எப்படி.. சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க மாமா…” என்று லட்சுமி அடம் பிடிக்க, “போடி…” என்றான் சலிப்பாய்.
“மாமா… வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். நீங்க வரவும் சொல்லிட்டு போக சொன்னாங்க.. ஸ்நேகாக் கிட்ட கூட வர்றேன் சொல்லிட்டேன்…”
“அதான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டல்ல.. போ.. போய் உன் ஃபிரண்ட கொஞ்சிட்டு படு.. போ..” என்று வேண்டுமென்றே அவள் தோளைப் பிடித்துத் தள்ள,
“அடேங்கப்பா.. வேணும்னா உங்களையும் கொஞ்சவா???” என்று வந்து முன்னாள் நின்றவளை என்ன செய்தால் தகும் என்று பார்த்தான்.
“ப்ளீஸ் மாமா…” என்று லட்சுமி கொஞ்சியபடி கெஞ்ச,
அவனும் “சரி போ..” என்று சிரித்த முகமாகவே சொல்ல, “தேங்க்ஸ் மாமா…” என்றவள் போகிற போக்கில் அவன் கன்னத்தில் இதழ் பத்தித்து ஓடிவிட்டாள்..
‘சரியான வாலு…’ என்று நினைக்கையிலே இப்போது தான் லட்சுமி பழையபடி மாறியிருக்கிறாள் என்று தோன்றியது.. இதே சந்தோசம்.. இதே உற்சாகம்.. இதே மகிழ்வு.. இதை விட காதலாய் அவளை இன்னும் காதலிக்க ஈசன் மனம் ஆசைகொண்டது.