மறு நாள்…. இதோ, இப்போது தான் துர்கா வீடு வந்தாள், அங்கு மகி இல்லவே இல்லை… கிளம்பி இருந்தான்… ராஜேஷ் தன் அண்ணியின் நிலை கேட்டு, உடனே…. ஹைத்ராபாத்திலுருந்துக் கிளம்பி வந்திருந்தான் நேற்று இரவு.
அவனிற்கு தான் மனது கேட்காமல், தன் அன்னையிடமும் தன் இரு அண்ணிகளிடமும் கேட்டுக் கொண்டிருந்தான்.
“என்னவாமா…. உன் புள்ளைக்கு, யாரையும் நிம்மதியாவே இருக்க விடமாட்டானாமா…..” என எரிச்சலாக தன் அன்னையிடம் கேட்க.
அவரும் “என்னவோ அவன் நேரம்…. அவன் என்ன செய்வான். நாம தான் அமைதியா இருக்கணும்.” என தன் பையனுக்கே பரிந்து பேசினார்.
சேலத்தில் அவர்கள் (மகி) இருக்கும் வீட்டிற்கு தான் வந்திருந்தனர், இப்போது மகியை தவிர அனைவரும் அங்கு தான் இருந்தனர். ஆம், மகியின் வீடு மொத்தமும் இருந்தது. துர்காவின் வீடு… இன்னும் அவளின் தம்பி அடுத்த மாதம் திருமணம் செய்ய இருக்கும். சந்தோஷியின் தாய், சந்தோஷி வரை அனைவரும் இருந்தனர்.
வைதேகியின் இந்த வார்த்தை எல்லோர் முகத்திலும் ஒரு அதிருப்தியை தந்தாலும், யாரும் எதுவும் பேசவில்லை.
எல்லோரும் பல முறை, பலவாறாக பேசியாகி விட்டது. இப்போது ராஜேஷ் கேட்கவும், திரும்பவுமா, என தான் தோன்றியது.
ராஜேஷ் அனைவரின் அமைதி பார்த்து. ‘என்னவோ விஷயம் பெரிது, அது தான் அமைதியாக இருக்கிறார்கள்’ என யோசனை ஓடியது அவனுள், மேலும் அனைவரும் இருக்கும் போது எதுவும் பேச வேண்டாம் என அமைதியானான்.
பாவம் ராஜேஷ்க்கு தெரியவில்லை…. ‘யார்க்கும் தெரியாது அவன், என்ன காரணத்திற்காக விவாகரத்து கேட்கிரானான்’ என…. அதனால் வந்த அமைதி தான் இது என.
தன் வாழ்க்கை நடு கூடத்தில் அலசபடுவதுப் பிடிக்கவில்லை தான் துர்காவிற்கு. அதுவும், தன் கணவன் குறித்து எழும் கேள்விகளை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. அது, மகியின் தம்பியே ஆனாலும்.
ஆனால் என்ன செய்வது அமைதியாக அமர்ந்து அனைத்தையும் கண்ணில் வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.
பெரியம்மாதான் வந்து, அனைவரையும் உண்ண அழைத்து சென்றார். யார்க்கும் மனமே இல்லை, பெயருக்கு உண்டு, கிளம்பினர் துர்காவின் வீட்டினர்.
துர்காவின் அம்மா விஜயலட்சுமி தான் வந்து, அவளை ரூமில் விட்டு, ‘இனி இது போல் செய்ய கூடாது…..’ என கண்ணில் நீருடன் கொஞ்சினார்.
இன்னும் இரண்டு நாள் கழித்து, தான் வருவதாக சொல்லி சென்றார். தன் வீட்டிற்கு கூட்டி செல்ல தான் நினைத்தார்.
துர்கா தான் “ஏன் ம்மா, நிரந்தரமா பிரிக்க நினைக்கிறியா….” என வெடுக்கென கேட்டு விட்டால் தன் அம்மாவிடம். அதனால் யாரும் எதுவும் சொல்லாமல், அவளை இங்கே கூட்டி வந்தனர்.
வைதேகிக்கு இப்போது தான் நிம்மதி. எங்கே தன் மகன் வாழ்வு கருகி விடுமோ என நினைத்தவர். அதற்கு தன் மருமகள்…. விட மாட்டாள் என அவர் உணர்ந்தார்.
அவர்க்கு, தன் மருமகளை நினைத்து சற்று பாவமாக கூட இருந்தது தான்….. என்ன செய்வது, கடக்கதான் வேண்டும். யாருக்காக இல்லை என்றாலும், மனதில் அவனை வைத்து, கண்ணில் மட்டும் உயிர் வைத்திருக்கும் தன் மருமகளுக்காக என நினைத்துக் கொண்டார்.
அனைவரும் கிளம்பினர், துர்கா உணவு உண்டு, படுத்திருந்தாள். எதை நினைப்பது, எதை விடுவது தெரியவில்லை அவளிற்கு. எங்கு சுற்றினாலும் தன் எண்ணம். தன்னவனை தவிர வேறு நாடுவதே இல்லை, எனும் போது அவளிற்கு ஒரு பயம் வந்தது எங்கே தான் ‘மகி பையித்தியம்’ ஆகிவிடுவேனோ என.
கடந்த ஒரு வருடமாக ‘எப்போதாவாது’ தன்னை திரும்பி பார்ப்பான் என்ற நம்பிக்கையில் இருந்தாள். ஆனால் இப்போது அதுவும் இல்லை…. தனியே நிற்பது போல் ஓர் எண்ணம்…. எல்லாவற்றையும் தொலைத்து போல் ஒரு உணர்வு.
முன்னமும் அவன் ஒன்றும் பெரிதாக…. இவளிடம் பேசியதில்லை தான், உருகியதில்லை தான், ஆனால் ‘நினைப்பிருந்தது, தன்னவன்’ என…. அதையும் இப்போது பிடுங்குகிறான்… என தன்போல் எண்ணம் சுழன்று அவளை இழுத்தது.
திடுமென, கமலேஷ் அழு குரல் கேட்கவும், எழுந்து வந்தாள்…. விழுந்திருந்தான் மாடி படியில் விளையாடும் போது… மற்ற மூவரும் சேர்ந்து அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர்…
சரியாக அந்த நேரம் வந்தான் மகி. தன் மகன் அழுவதை பார்த்து போன் பேசிக் கொண்டே வந்தவன். கமலேஷின் சத்தம் கேட்டு… பிறகு பேசுவதாக சொல்லி வைத்தவன்.
அமைதியாக அருகில் வந்து, பதாராமல் பார்த்து, அவனை அப்படியே தூக்கி, இருக்கையில் அமர்த்தியவன், லேசாக சிவந்திருந்த முட்டி பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.
இவள் பதுங்கிக் கொண்டாள்.
கொஞ்சம் மகனின் அழுகை குறையவும் தான், அவன் எழுந்து சென்றான். எதுவும் பேசாவோ, தன் மகனை கடியவோ, ‘பார்த்து விளையாடனும்’ என சொல்லவோ இல்லை. ஏதோ, போகிறப் போக்கில் ஒரு வேலை செய்தேன் என இருந்தது அவனின் செயல்.
இதை எல்லாம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா, எதுவும் கேட்கவில்லை. அவன் மேலேறி செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எத்தனை திடம் அவனிடம், யாரிடமும் ஒன்றாமல் எப்படி இருக்க முடிகிறது அவனால். தன் மகனின் அழுகை கூட அவனை பாதிக்கவில்லையே என்ற எண்ணம் தான் அவளிடம்.
உடை மாற்றிக் கொண்டு கீழே வந்தான். அங்கு டைனிங் டேபிள்லில் அமர்ந்து, இருந்த உணவுகளை தானே ஒரு தட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்தான், உண்ண தொடங்கினான்.
துர்கா சென்று, தண்ணீர் எடுத்து வைத்துப் பொரியல் சிறிது பரிமாறினாள். எதுவும் சொல்லவில்லை அவன். ஏதோ யோசனையில் இருந்தான் போல.
அமைதியாக இவள் உணவு பரிமாற உண்டு விட்டு மேலே சென்றுவிட்டான். நிமிர்ந்து கூட பார்க்கவில்லை துர்காவை,
ஏதோ, பாத்திரம் எடுக்கும் சத்தம் கேட்டு, அப்போது அங்கு வந்த பெரியம்மாவும் இதனை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் கண்கள் கலங்கியது, எதுவும் பேசாமல் “துர்காம்மா… கொஞ்ச நேரம் தூங்கு டா…” என்றார்.
“ம்….” என கண்ணில் வந்த நீரை அவர்க்கு காட்டாது மறைத்தபடி விலகி தன் அறைக்கு சென்றாள்.
உறக்கம் என்பது தான் வரவில்லை துர்காவிற்கு, ஏதோ எண்ணம், பின் அங்கு தனியே இருக்க முடியாதவளாக, வெளியே ஹாலில் அமர்ந்தாள். குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று பெரிய வீடு தான். எனவே ஆளுக்கொரு அறையில், மதியம் ஆதலால், சிறிது நேரம் ஓய்வெடுக்க சென்றிருந்தனர்.
பிள்ளைகள் மட்டும் TV பார்ப்பது, விளையாடுவது என ஹாலில் என்னமோ செய்து கொண்டிருந்தது. இப்போது இவளும் அவர்களுடன் இருந்தாள்.
மாலை நான்கு மணி போல், ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். துர்காவை பார்த்து, அவளது மாமியார் “தூங்கலையா துர்கா….” என்றார்.
“இல்ல த்த… தூக்கம் வரல. அதான் TV பார்க்க வந்தேன்…” என சொன்னவள்.
“வேலாத்தா…. “ என அழைத்து “டீ போடு எல்லோருக்கும்..” என பணித்தால்.
அப்போது மகியும் மாடியிலிருந்து இறங்கி வந்தான், போன் பேசிக் கொண்டே “என்னடா….. அந்த அல்லக்கை கிட்டப் பேசிட்டியா…. என்ன வேண்டுமாம்….” என்றான் மிக நிதான குரலில்.
எப்போதும் அவன் வேட்டி தான் அணிவது. எனவே வேட்டியின் ஒரு நுனியை கையில் பிடித்துக் கொண்டே, ஒரு கையில் போன் பேசிக் கொண்டே இறங்கி வந்து சோபாவில் அமர்ந்தான் மகி.
இன்னும் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் போனில், இவன் வருவதை பார்த்து, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்த துர்கா, டைனிங் டேபிளில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டாள்.
என்னமோ, மனது விட்டது போலானது, ‘அவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இப்போது இங்கு வேறு அமர்ந்து, அவன் தன்னை கவனிக்க கூட மாட்டன். அதனை பார்த்து, அனைவரும் என்னை பரிதாபமாக பார்க்க வேண்டுமா’ என்ற எண்ணம் எழ, தன் போல் கால்கள் உள்ளே சென்றது.
அப்போது அகிலும் நித்யாவுடன் வந்து அமர…யாரும் எதுவும் பேசவில்லை. போன் பேசி முடித்தும், அந்த கோவம் போகவில்லை மகியிடம். அப்படி வினோ என்ன சொன்னானோ, இவன் இங்கு, தன் போனை, தான் அமர்ந்திருந்த ஷோபாவின் கை வளைவில் வைத்து குத்திக் கொண்டிருந்தான் மகி, மகியின் தோரணையே யாரையும் பேச விடவில்லை.
ஒரு சின்ன புள்ளியில் சிக்கிக் கொண்டான் மகி. கடந்த ஆறு மாதமாக இதையே தான் பேசுகின்றனர் வினோவும், இவனும். ஆனால் இன்னும் தீரவில்லை. அதை பற்றி தான் இப்போது வினோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது தான், ராஜேஷ் வந்து நின்றான். அமரவெல்லாம் இல்லை, மகி போன் பேசி முடிக்கவும் அதற்காகவே காத்திருந்தவன் போல், ராஜேஷ் “என்ன தான் பிரச்சனை உனக்கு. ஏன், இப்படி எல்லாம் பண்ணற. யாரும் நிம்மதியா இருக்க கூடாதுன்னு செய்றியா.” என சீறினான்.
கூடவே “என்ன, வேறு ஏதாவது…. இருக்கா, இல் லீகலா….” என அவன் தயக்கங்கள் ஏதும் இல்லாமல் கேட்டே விட்டான்.
அனைவரும் மகியை விடுத்து ராஜேஷை முறைக்க ‘நான் என்ன பண்ணினேன்’ என தான் பார்த்திருந்தான் ராஜேஷ்.
துர்கா தான் உள்ளிருந்து வந்து “தம்பி…. கொஞ்சம் பேசாம இருங்க. நாங்… நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறோம். ப்ளீஸ் தம்பி…” என திடமாகவே சொன்னாள். இந்த குரலில் என்ன இருந்ததோ அமைதியானான் ராஜேஷ்.
அவளிற்கு தெரியாதா, அந்த மாதிரி சின்ன, சின்ன…. சலனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான், தனது ஈஷ்வர் என, அதனால் வந்த திடம் அது.
இது எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமேப் பார்த்துக் கொண்டிருந்தான் மகி. ஏதோ வேடிக்கை பார்ப்பவன் போல், இலகுவாக அமர்ந்திருந்தான் அவன். திரும்பவும் போன் வர, எடுத்து பேசிக் கொண்டே நகர்ந்து போக. ராஜேஷ், தன் அண்ணியிடம் திரும்பி “என்ன அண்ணி…. எப்படி அண்ணி இவன் கூட இத்தனை வருஷம், எப்படி அண்ணி…” என்க.
துர்காவின் கண்கள் சிரித்தது. சில சமயம், எல்லோரும் கேட்பது தான் ‘எப்படி இப்படி’ என. அவளுக்கு தானே தெரியும் அவளின் ஈஷ்வர் பற்றி. துர்காவின் அந்த நிலை, அவளின் சிரித்த கண்களின் வழி மகியையே பார்த்தவாறு நின்ற கோலம் அப்படியே எல்லோர் மனதையும் தைத்தது.
‘வாழ தெரியாதவன்…’ என அவர்களின் மனதில் மகியை பற்றி துற்றவும் செய்தது.
மகி, போன் பேசி முடித்து திரும்பி வந்தான். முகமே சரியில்லை.. ஏதோ சரியில்லை என பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது அனைவர்க்கும்.
அவன் முகம் வாட யார்க்கும் பொறுக்கவில்லை, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள. இப்போது, எல்லோரும் அகிலை பார்த்தனர். ‘என்ன வென கேளு’ எனும் விதமாக. அகிலும் திரு திருவென முழிக்க, மகி இப்போது அமர்ந்து கொண்டான்.
மகி…. கேள்வி கேட்க முடியாதவன், இப்படி தான், ராஜேஷின் கேள்விக்கு, அவனை திரும்பி கூட பார்க்காமல் சென்றது போல், ‘எனக்கு நீயெல்லாம் ஈடா’ என பதில் கூட சொல்ல மாட்டான்.
சிறு வயதிலிருந்தே அப்படி தான், அவன் தந்தையிடம் மட்டுமே மதித்து பேசுவான். மற்றபடி அனைவரையும் ஒரு கீழ் பார்வை பார்த்தே, கடந்து விடுவான்.
கந்தசாமி, மகியை எப்போதும் உயர்த்திதான் பிடிப்பார். மற்ற தன் இரு மகன்களிடமும் சொல்லி தான் தந்தார், மகி, சொன்னால் கேட்க வேண்டும் என. அகில், எது என்றாலும் மகியை தான் நாடுவான்…. ராஜேஷ் தான் சற்று வீம்பு.
கந்தசாமி இருந்த வரை வைதேகியின் சொல்லும் எடுபடும் வீட்டில், இப்போது அவர் இல்லை என்ற நிலையில் எல்லாம் மகியின் ஆட்சி தான். வைதேகியும் அனைத்தையும் அமைதியாக பார்க்க மட்டுமே செய்தார்.
அந்த பெரிய கார் ஷோ ரூம் ஆரம்பிக்கும் போதே சொன்னார், வைதேகி. “கொஞ்சம் பொறுப்பா…. இதோ இன்னும் 6 மாதம் கடந்த பிறகு தான் உனக்கு நேரம் சரியாக இருக்கிறதாம். அதுவரை பொறுப்பா…” என்றார் தணிவாகவே
மகி அப்போதே “இது என்னுடைய கனவு ப்ராஜெக்ட். ஏதோ அசால்ட்ட சொல்றீங்க, இப்போ வேணாம்ன்னு. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். பார்க்கலாம் உங்க நேரமா, இல்ல நானான்னு….” என சொல்லி சென்றே விட்டான்.
அவன் கூறியது போலே அவனின் கனவு அது. நிறைவேற்றிக் கொண்டான். அமர்களப்படுத்தி இருந்தான் அதன் தொடக்க விழாவை. கோவையில் மற்றும் சென்னையில் மட்டுமே உள்ளது.. இது போன்ற ஷோ ரூம்.
இப்போது சேலத்திலும் என ஆர்பாட்டமாக அறிவித்தான். கந்தசாமியின் தலைமுறை வரை பெயர், புகழ் என இருந்தாலும் வெளியில் தெரிந்ததில்லை.
ஆனால் மகி, அத்தனையையும் வெளிக் கொணர்ந்தான். தான் யார், தனது திறமை என்ன, தன் குடும்ப பெருமை என்ன, என அனைத்தையும் வெளிக் காட்டினான்.
mla, mp என அரசியல் செல்வாக்கையும் இங்கு கொண்டு வந்தான். மேலும், இது போன்ற இடங்களில் அது தானாகத் தேடியும் வந்தது. பயன்படுத்திக் கொண்டான். ஆம், அதுவே சரி.
அவர்களின் உறவில் இருந்த mla மூலமாக திறப்பு விழாவிற்கு மத்திய மந்திரி ஒருவரை அழைத்தான். அப்போது அந்த மந்திரி இவனின் பின்புலம் பற்றி ஆராய்ந்து சரி என்றார்.
எனவே இவர்களுக்குள் நல்ல உறவு வளர்ந்தது, தொழிலும் இவனின் எதிர்பார்ப்பை விட சில பல படிகள் தாண்டி தான் நின்றது. மிகவும் நன்றாகவே சென்றது. எங்கும் எந்த தடையும் இல்லை..
ஆனால், மகி ஒரு இடத்தில் பயம் கொள்ளும் நிலையும் கூடவே வந்தது. அதன் விளைவு தான் இப்போது நடப்பது.