தாழம்பூ வாசம் நீ…..
2
யாரையும் கவராமல் வெளியே வந்துவிட்டான் லிங்கா. ஆனால், நிலை புரியாமல் தடுமாறினான்.. பார்க்கிங் எங்கே.. தான் டூ வீலரில் வந்தோமா.. காரில் வந்தோமா புரியவில்லை..
கண்ணெதிரே.. கார்கள் அணிவகுத்து, ஒழுங்குற நின்றாலும்.. இவனுக்கு ஏதும் தெரியவில்லை. அங்கே பார்க்கிங்கில், இங்கும்.. அங்கும்.. நடக்க தொடங்கினான் கால்களை எத்தி.. எத்தி.. ஏதோ ஆற்றாமை.. வெளிவராத கோவம்.. என லிங்கா நடக்க..
வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்த வாட்ச்மேன் வந்து “சார்.. என்னாச்சு..” என்றார்.
ஒழுங்குற வாரிய தலை களைந்து.. ஏதோ பித்து பிடித்தவன் போல அவரை ஏறிட்டு பார்த்தான். அந்த மிடுக்கான மத்திய வயது மனிதருக்கு என்ன புரிந்ததோ.. பொறுமையாக “காரா… டூ வீலரா, சார்… நான் எடுத்து தரவா..” என்றார் வாஞ்சையாய்.
ஏதும் சொல்லாமல் நின்றான்.. மீண்டும் ஒரு முறை அவர் கேட்க.. தலையை அசைத்து மறுத்து.. தனது பேண்டில்.. சாவியை, தேடி எடுத்து வெறித்துப் பார்த்தான்.. டூ வீலர் சாவி.
ஒரு வழியாக அப்படிதான் என யூகித்து, வண்டி எடுக்க செல்ல.. செல்ல.. மனமெல்லாம் அழுந்த தொடங்கியது ‘என்ன ஆச்சு.. ஏன் சொல்லல… அவ. என்னைப் பார்த்தால்.. சும்மா.. வேலை வெட்டி இல்லாதவன் போல இருந்திருக்குமோ.. இவன் ஒரு ஆளா… என நினைத்திருப்பாளோ… இல்ல அப்படி இல்ல.. என் ட்ரீமிக்கு அப்படி நினைக்கத் தெரியாது… அவ நல்லவ.. குழந்தை… அவங்க வீட்டில்தான் ஏதோ சொல்லி இருக்கணும். இல்லையே.. இவள், சொல்லுவதுதானே நடக்கும் அவர்கள் வீட்டில்.. அவ்வளவு செல்லமாச்சே…’ என உள்ளே மனம் முன்னுக்கு பின், முரணாக கதற.. இவன், வெளியே வண்டியை தேடிக் கொண்டிருந்தான்.
எப்படியோ தன் வண்டியை தேடி எடுத்தான், இருபது நிமிடம் சென்று. ஆம், ஒன்றும் புரியவில்லை.. எனவே, தேடி.. எடுத்து வந்தான். எங்கே செல்கிறோம் எனத் தெரியாமல்.. அந்த கிளைச் சாலையில் வண்டியை செலுத்தினான்.
லிங்காவிற்கு.. வண்டியில் செல்ல செல்ல… ஒரே எண்ணம், அவளின் எண்ணம் மட்டுமே.. ‘தெரியாதா என்னை.. புரியாதா.. என்னை. நான், அவள் மேல் கொண்ட காதல்.. இது, எதுவுமே தெரியாதா.. இப்போது வ… வந்து.. ச்சே.. எத்தனை தூரம் ஆசையாக இருந்தேன்.. எ.. எனக்கு, என்ன குறைச்சல்.. ‘ என மனம் போன போக்கில், வண்டியும் சென்றது.
காலேஜ் படிக்கும் போது வாங்கிய யமஹா… கண்கள் எங்கோ வெறிக்க.. இவன் மனம் போல அதுவும் தாறுமாறாக ஓட.. யாரோ ஒருவர் மேல் மோதி.. மோதியது.
‘ஹய்யோ.. அது ஒரு நடுத்தர வயது மனிதர்.. அவர் மேல் மோதி.. அவரின் காலில் அந்த வண்டி உராய்ந்து செல்ல, இவனும் விழுந்து விட.. அவரும் நிலை தடுமாறி விழுந்தார்..’ அந்த நொடி நேரத்தில்.. அந்த இடம் ரணகளமானது.
அங்கு ஓரிரு பாதசாரிகள் மட்டும் நடந்து கொண்டிருக்க.. வண்டியில் வந்த யாரோ இரு இளைஞர்கள் பட்டென இறங்கி.. அந்த யமகாவை தூக்கினர்.
[the_ad id=”6605″]
விழுந்த, அந்த மனிதருக்கு எழ முடியவில்லை.. லிங்கம், பட்டென எழுந்தான்.. அவரை தூக்கினான்.. அடி எங்கே என ஆராய்ந்தான். விழுந்ததில் ரத்தம் வந்தது அவரின் கைகளில்.. கால் பிசகியது போல.. வண்டியின் வேகம் குறைந்து இருந்ததால் இந்த லேசான அடி.. இல்லையேல்.. அவன் வண்டி ccக்கு தூக்கி அடித்திருக்கும்.. ஏதோ சைக்கிள் போல் ஒட்டி வந்தான்.. கிளைச் சாலைதான். அதனால் சற்று பரவாயில்லை.
உடனே தானே, செயல்பட்டு.. அங்கு நின்றிருந்தவர்களிடம் ஆட்டோ கூப்பிட சொன்னான். அங்கு, வண்டியை தூக்கியவரிடம் “இங்கயே அந்த மெடிக்கல் ஷாப்பில் வண்டியை நிறுத்திடுங்க..” என்றான்.
அவரும் அதே போல செய்து சாவியை தர.. எந்த இடம் என பார்த்துக் கொண்டான்.. அடிபட்ட மனிதருடன்.. ஆட்டோவில் ஏறி.. மருத்துவமனைக்கு சென்றான்.
அவரை, சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவிட்டு.. அமர்ந்தான். முதியவர் அல்ல நடுத்தர வயது கொண்டவர்.. எனவே, சமாளித்தார் போல.. திடமாகவே இருந்தார். சிகிச்சைகள் தொடங்கியது.
முதல் உதவி முடிந்து, மருத்துவர் வந்தார் “பெரிதாக ஒன்றுமில்லை.. கையில் நல்ல அடி.. கால் பிசகியிருக்கு.. பேண்டைய்டு போட்டிருக்கு.. இன்னிக்கு ஒரு நாள் இருக்கட்டும், நாளைக்கு கூட்டி போங்க” என்றார்.
‘அப்பா டா’ என அமர்ந்தான் லிங்கம். தன்னை, தானே மன்னிக்க முடியவில்லை அவனால். முட்டாளாக உணர்ந்தான்.. ‘இப்படியா வண்டி ஓட்டுவ… பாவம்..’ என மனம் நினைக்க.. நினைக்க.. எங்கோ சென்றது மனம்.. ‘என்ன இல்லை என்னிடம், எப்படி என்னை தவிர்க்க முடிந்தது அவளால்..’ என மீண்டும் அவள் வந்தாள், காற்றில் பறந்து, நினைவாக.
யாரோ செவிலியர் வந்து “இந்தாங்க.. இத வாங்கி கொடுத்திடுங்க அந்த நர்ஸ்கிட்ட.. நைட் லைட் புட் மட்டும்.. எட்டு மணிக்கு சாப்பிட சொல்லிடுங்க..” என சொல்லிச் சென்றார்.
ஒன்றும் புரியவில்லை லிங்கத்திற்கு ‘எங்கே இருக்கிறேன்..’ நினைவுப்படுத்திக் கொண்டான். ஒரு பெரு மூச்சு விட்டு, எழுந்து சென்று.. மெடிக்கலில் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு.. கேண்டீனில் இட்டிலிகளை கட்டிக் கொண்டு, மேலே வந்தான்.
அந்த மனிதரின் அறைக்கு, உள்ளே வந்தான்.. கண் மூடி சாய்ந்திருந்தார்.. “சாரி சார்…” என்றான் குற்றம் செய்த குரலில்.
கண் திறந்து பார்த்தார்.. ஒன்றும் சொல்லவில்லை.. மீண்டும் கண்களை மூடிக் கொண்டார். லிங்கத்திற்கு இப்படி நின்று பழக்கமில்லை.. யாரிடமும் வேண்டி நின்றதில்லை.. இன்று நின்றான். மனம், அவன் வசம் இல்லாததால்.. அவனும், தன் வசம் இல்லாதவனாக நின்றான்.
‘செய்தது தவறு.. தெரிகிறது.. அடுத்து செய்ய வேண்டுமே.. அவர் பேசுகிறார்.. பேசலை.. நான், அடுத்தது பார்க்க வேண்டுமே..’ என அறிவு எச்சரிக்கை செய்தது. தானே பேசினான் “உங்க வீட்டில் சொல்லனும் போன் நம்பர் சொல்லுங்க சர்..” என்றான்.
அவர் “என் போனை, அந்த நர்ஸ்.. வாங்கி வச்சிருக்காங்க.. வாங்கி வரீங்களா…” என்றார். தலையசைத்து சென்றான்.
அந்த நர்சிடம் சென்று, வாங்கி வந்தான். தானே நம்பர் டயல் செய்து தந்தார்.. பெரியவர். லிங்கம், போனை வாங்கி பேசினான்… யாரோ ஆண் குரல்தான் கேட்டது.. பொறுமையாக அவர்கள் வீட்டில் விஷயம் சொல்லி வைத்தான்.
அடுத்து என்ன செய்வது என லிங்கத்திற்கு தெரியவில்லை. ‘வெளியே சென்று நிற்கவும் சங்கடமாக இருக்கிறது… இவர் பேசவே மாட்டேங்கிறார்.. ம்… யாரும் என்னை மதிப்பதேயில்லை.. என்னை தெரிந்தவர்கள் தொடங்கி.. தெரியாதவர் வரை, யாரும் என்னை மதிப்பதேயில்லை..’ என மனம் கனம் கொள்ளத் தொடங்கியது.
நொடிகள் நகருவதே.. சிரமமாக இருக்க.. அவர் இப்போது “தம்பி.. என்ன உங்க சட்டை முழங்கையில் கிழிஞ்சிருக்கு… ரத்தம் போல..” என சொல்ல.. அப்போதுதான் தன் கையை திருப்பி பார்த்தான்.
சிராய்த்து.. அவரை, போலவே சிவப்புத் தோல்.. வெள்ளைத் தோல்.. எல்லா கலரும் வெளியே தெரிய, ரத்தம் கட்டி நின்றது.. ஈஸ்ட்டுமென் கலரில்.. “எஸ்… கவனிக்கல..” என சொல்லி பொறுமையாக எழுந்து சென்றான்.. அங்கு வெளியே அமர்ந்திருந்த நர்ஸிடம்.
தனக்கு சிகிச்சை முடித்து.. மீண்டும் அறைக்கு வந்தான்.. ஏதோ போல.. உணர்வே இல்லாதவன் போல.. நடந்து வந்தான். பார்த்த பெரியவருக்கு ஏதோ போலானது.. சற்று முகத்தை இயல்பாக்கி பேசினார்.. “என்ன தம்பி வலிக்குதா..” என்றார்.
[the_ad id=”6605″]
இப்போதுதான் உணர்வு வந்தது லிங்கத்திற்கு “ஐயோ, நான் கேட்கனும்ங்க… வலிக்குதா.. சாரி ங்க… ஏதோ.. யோசனையில வந்தேன் போல.. டாக்டர், ஒன்னும் பயமில்லைன்னு சொல்லிட்டார்… நீங்க சாப்பிடுங்க… அப்போவே நர்ஸ் சாப்பிட சொன்னாங்க..” என நீளமாக பேசினான்.
“ம்.. என்ன செய்ய, நேரம் சரியில்லை போல எனக்கு. அதான்.. சரிப்பா.. பார்த்துக்கலாம்.. நீங்க.. உங்க.. பேர் என்னப்பா..” என்றார். அவனிடம் தாண்டவமாடிய மேல் தட்டு தோற்றத்தை பார்த்த படியே..
“லிங்கேஷ்வரன்..” என்றான் தலையை கோதிய படியே..
“நீங்க.. எந்த ஏரியா..” என்றான் அவரிடம் எப்படி பெயர், ஊர் கேட்பது என தயக்கமாக கேட்டான்..
“ம்.. தாமோதரன்.. அமைச்சர் சாரங்கன்னோட மச்சான் நானு. எப்போதும் அந்த வழியா.. வாக்கிங் வருவேன்.. எப்போதும் கவனமாதான் இருப்பேன்.. இன்னிக்கு இப்படி ஆகிடுச்சு…” என்றார் பொறுமையாக..
இப்போதுதான் கவனித்தான் அவரின் உடையை.. ஐயோ! என்றானது லிங்கத்திற்கு.. ‘ஏதோ சாதாரண மனிதர் என நினைத்தால்.. பெரிய இடமா.. இருக்கே.. என்ன பிரச்சனை வருமோ.. ஏற்கனவே, எனக்கு இருக்கிற பிரச்சனை போதாதா…’ என தோன்றியது.
இனி அமைதியாய் இருக்க முடியாதே “சாரி.. நான் லிங்கஷ்வரன்.. இளங்கோவன் தம்பி… ***கார்மெண்ட்ஸ் இளங்கோ.. அவர் தம்பி” என சொல்லி நிறுத்தினான்..
அதன்பின் பேச்சு இயல்பாக சென்றது. தாமோதரனின் ஆட்கள் வந்தனர்.. காரெடுத்து. அப்போதே வீட்டுக்கு கிளம்பினார் தாமோதரன். இங்கே இருக்கும் அவசியம் இல்லை, நாளை வந்தால் போதும் என மருத்துவர் சொல்ல.. கிளம்பினார்.
“தம்பி வாங்க, நான் இறக்கி விடறேன்.. வீட்டில் “ என்றார்.
“இல்லைங்க.. நான் போய்கிறேன்” என்றான். கேட்கவில்லை.. தாமோதரன். “வண்டியில்லை.. எப்படி, போவீங்க… வாங்க… நம்ம பசங்ககிட்டச் சொல்லி வண்டி எடுத்து.. வீட்டுக்கு வர சொல்றேன்.. நீங்க என் கூடத்தான் வரீங்க” என்றார்.
பெரியவர்.. எல்லா விதத்திலும். தட்ட முடியவில்லை காரில் ஏறினான். இரண்டு வெள்ளை வேட்டி கட்டிய இரு உருவம் மட்டுமே.. i2௦ எடுத்து வந்திருந்தனர்.. ஆக, நான்கு நபர்களும்.. லிங்காவின் வீடு நோக்கி சென்றனர்.
இப்போதும் அவனுக்கு, அதே எண்ணம்.. ‘யாரும் என்னை மதிப்பதேயில்லை.. எல்லோருக்கும் ஈசியாக இருக்கேறேன்.. எல்லோராலும் என்னை வளைக்க முடிகிறது…’ என வண்டியில் செல்லச் செல்ல மீண்டும் சிந்தனை.
[the_ad id=”6605″]
வீடு வந்தது, உள்ளே அழைத்தான் தாமோதரனை. அலட்டாமல் வந்தார். மற்றவர்கள் காரிலேயே நின்றனர்.
தாமோதரன், காரில் இருப்பவர்களை பார்த்து “வண்டிய எடுத்து வந்திடுங்க ப்பா.. நம்ம வீட்டு கிட்ட இருக்கிற… மெடிக்கலில் நிக்குது…
தம்பி, சாவிய கொடுங்க அவங்க கிட்ட” என்றார். லிங்கத்தை பார்த்து.
லிங்கமும் சாவி எடுத்து கொடுத்து வண்டி எண் சொல்லி அனுப்பினான்.
இருவரும் உள் நுழைந்தனர். இளங்கோ, இப்போதுதான் கம்பெனியிலிருந்து வந்திருந்ததால், ஹாலில் அமர்ந்திருந்தான்.
இருவரும் உள்ளே வரவும் எழுந்து வந்து வரவேற்றான்.. இளங்கோ. இவர், எதிர் கட்சி.. ஆனாலும், தொழில் முறையில் எல்லோரும் வேண்டியவர்களே.. எனவே, இன்முகமாக வரவேற்றான் இளங்கோ.
இளங்கோ, தம்பியிடம் “அப்பாவ கூப்பிடு..” என்றான்.
லிங்கம், உள்ளே சென்று தந்தையை அழைத்து வந்தான். மீண்டும் உள்ளே சென்று.. அன்னையிடம் சொல்லி, குடிக்க எடுத்து வர சொல்லி.. அமர்ந்தான்.