“கிருஷ்ணா நீ பேக்கனே…பரோ…..” என்று வியாசராயரின் கீர்த்தனையை முனுமுனுத்துக் கொண்டே அமைதியாக அன்றைய தினத்தின் சமையல் வேலையை செய்துகொண்டிருந்தாள் லக்ஷ்மி. கைகள் புடலங்காய் கூட்டிற்கு, காய் நறுக்கிக் கொண்டிருக்க, யமுனகல்யாணி ராகத்தில் அமைந்த பாடலை மெல்லமாக அசைப்பேட்டது உதடுகள். வெளியே பால்காரன் வந்துவிட்டதற்கு அறிகுறியாக, பைக்கின் ஹார்ன் ஒலி எழுப்ப, அடுக்களையில் இருந்து, சின்ன ரேழியைக் கடந்து கூடத்தின் நடுவில் போடப்பட்டிருந்த மரசோபாவினை சுற்றிக் கொண்டு வராண்டாவிற்கு பால் பாத்திரத்துடன் வரவும், பைக்கின் ஒலி மீண்டும் கேட்க, “வந்துட்டேன்…வந்துட்டேன்….”என்று அவசரமாக கூறியபடிக்கே நிலைக்கதவினைத் திறந்தார். வெளி இருள் நன்றாக பிரிந்திருக்கவில்லை.
“சுருக்க வாங்க மாமி…..ஒரு வூட்டில பத்து நிமிஷம் நின்னாக்கா என் சோலி என்னாகறது”என்று மொழிந்தபடிக்கே, பால்குக்கரை நிரப்பினான் பால்காரன். லக்ஷ்மி எதுவும் சொல்லாமல், வெற்றுப்புன்னகையை மட்டும் சிந்தினாள். “எத்தன தபா சொன்னாலும் நல்லா சிரிச்சே சமாளிச்சுடுங்க….நாளைக்காவது சீக்கரம் கதவை திறங்க மாமி…”என்று மொழிந்த பால்காரன் பைக்கை உதைத்துக் கிளப்பிச்சென்றான்.
லஷ்மியின் அந்தப் புன்னகையும் அப்படி ஒன்றும் கண்களை எட்டிவிடவில்லை. பலவருட காலமாக லக்ஷ்மியின் கண்கள் புன்னகை பூக்கள் சிந்தியதேயில்லை. அவளது ஆருயிர் கணவன் ராகவன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாரே அன்றே, லக்ஷ்மி தலை பூவுடன் சேர்ந்து, புன்னகை பூக்களையும் தொலைத்துவிட்டிருந்தார். பால்குக்கருடன் வீட்டினுள் நுழைந்த போது, சுவர் கடிகாரம், ஆறு முறை அடித்து நின்றது.
சமையல் அறையின் ரேழியை ஒட்டி, வலப்பக்கம் இருந்த சிறிய அறையினுள் எட்டிப்பார்த்தார் லக்ஷ்மி. பத்திற்கு பத்து அளவிலான சிறிய அறை. ஒரு பக்கம் படிக்கும் மேஜை, அதில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கல்லூரி புத்தகங்கள், எஸ்.ஏ.டி பரிட்சைக்கான புத்தகங்கள், உடன் ஒரு மடிக்கணிணி என அந்த அறை, கல்லூரியில் படிக்கும் ஒருவரின் சகல சொத்துக்களையும் உள்ளடக்கியிருந்தது. அறையில் ஜன்னல் அருகில் போட்டிருந்த இரும்பு கட்டிலின் மேல், ஒருகளித்து படுத்திருந்த மகள் சுஜினியின் மீது, லக்ஷ்மியின் கண்கள் நிலைத்தன.
தந்தையைப் போலவே பால் நிலா வண்ணமுடன் கூடிய வட்டவடிவ முகம், அடர்ந்த கேசம். கூர்மூக்கு, முகவாய் மட்டும் அம்மாவைக் கொண்டிருந்த, தன் அழகு மகளின் முகத்தை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை லக்ஷ்மியால்.
“எப்பாடுபட்டாவது உனக்கு ஒரு நல்லவழி பண்ணாம நான் போகமாட்டேன் சுஜிம்மா…. என் தலையை வித்தாவது அம்மா நினைச்சதை சாதிப்பேன்” என்று லக்ஷ்மியின் மனதிற்குள் அந்த சிந்தனை மீண்டும் எட்டிப் பார்த்தது. அதற்கேற்றவாறே அலமாரியின் மேல்தட்டில் அந்த பெரிய கரும்பச்சைவண்ண கவர் காற்றில் செய்தி சொல்வது போல் படபடத்தது. கவரையும், அமைதியாக உறங்கும் மகளையும் மாறி மாறி பார்த்தவர், “இன்னும் எவ்வளவு நாள் தான் இழுத்தடிப்பாங்க?” என்ற கேள்வி எழவும், அதனூடேயே, “இன்னைக்கு கண்டிப்பா இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்..” என்று மனதிற்குள் உறுதி பூண்டார்.
மடமடவென அன்றைய சமையல் வேலையை கைகள் செய்து கொண்டே இருப்பினும், “எப்படி பேசுவது? என்ன பேசுவது? இந்த கேள்விக்கு இன்ன பதிலை சொல்லவேண்டும். கடைசி ஆயுதமாகவே வேலையை பயன்படுத்த வேண்டும், என்றெல்லாம் மனம் ஒத்திகை பார்த்தவண்ணம் இருந்தது லஷ்மிக்கு.
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. அண்ணன் ராமனாதன் வீட்டில் இருக்கும் தினம். இன்றைக்கு பேசினால் தான் ஆயிற்று. வார நாட்களில் பேசுவது சாத்தியமாகாது என்ற தீர்மானத்துடன் லக்ஷ்மி அடுக்களை வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள்.
வெளிச்சக் கீற்றுகள் மெல்லிய திரைசீலையைக் கடந்து சுஜினியின் முகத்தில் படர, மெல்லமாக கண்விழித்தாள் சுஜினி. எழும் போதே, அலமாரியின் மேல் இருந்த கரும்பச்சைகவர் பத்திரமாக இருக்கிறதா என்ற சிறிய பதட்டத்துடன் கண்விழித்தாள். மெத்தையின் மீது போர்வையை மடித்துவைத்த கையிடன் அந்தக் கவரினை கையில் எடுத்தாள். கடினமான அடர் கரும்பச்சை வண்ண காகிதத்தில், பளீர் மஞ்சள் நிறத்தில் “யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்கன்” என்ற எழுத்துக்கள் மின்னின. ஒருபக்கம் சாய்க்கும் போது, பளபளவென்றும், ஒரு பக்கம் வழுவழுப்பாகவும் மாறி மாறி காட்சியளித்தது. கவரினுள் கைவிட்டு, பழுப்பு நிறத்தில் கல்லூரியின் லோகோ பொரிக்கப்பட்ட அந்த அனுமதிக் கடித்தத்தினை நூறாவது முறையாகப் படித்தாள்.
[the_ad id=”6605″]
டு
சுஜினி ராகவன், D/O. Mrs.லக்ஷ்மி ராகவன், நம்பர்-53, கண்ணப்பர் வீதி, மைலாப்பூர், சென்னை-4, தமிழ் நாடு, இந்தியா
என சுஜினியின் பெயருக்கு யுனிவர்சிட்டியில் இருந்து வந்திருந்த அட்மிஷன் கன்பர்மேஷன் மற்றும் சேர்க்கை விண்ணப்பம் கொண்ட கவர். கண்விழித்த உடனேயே தன் கனவுகளும் எதிர்காலமும் அடங்கிய கவரினை கையில் எடுக்கவே சுஜினியின் மனம் கனத்தது. எத்தனை நாள் கனவு, எத்தனை வருட உழைப்பு, பள்ளியில் தோழிகளுடன் சுற்றாமல், சினிமா, பீச் என எதற்கும் ஆசைபடாமல் எப்படி விழுந்து விழுந்து படித்திருப்பாள். எல்லாம் இந்த மேற்படிப்பிற்காக. “அமெரிக்கன் யூனிவர்சிட்டியில ஸ்காலர்ஷிப்போட படிக்க சீட் கிடைக்கறதுன்னா சும்மாவா?” என மனதிற்குள் பீற்றிக் கொண்டாலும், அது நடக்குமா என்ற இமாலயக் கேள்விக் குறியும் உடன் எழவே செய்தது.
“இன்னைக்காவது அம்மா, மாமாகிட்ட பேசனுமே….ஆண்டவா எப்படியாவது மாமா சம்மதத்தை வாங்கி குடுத்திடு..என் கனவை கலைச்சிடாத” என மனமுறுக வேண்டிக் கொண்டவள், முகம் கை,கால், கழுவிக் கொண்டு அடுக்களையில் நுழைந்தாள்.
“காபி போட்டுத்தரவா?”என சுஜினியின் தலையைக் கண்ட லக்ஷ்மி மொழிய, தலையை மட்டும் அசைத்தாள் சுஜினி. நேற்றை தினம் போட்ட சண்டையின் மிச்சம் இன்னமும் மகளில் முகத்தில் ஒட்டியிருந்ததைக் காண லக்ஷ்மிக்கு சிரிப்பாக வந்தது. எதுவும் பேசாமல், கண்களில் ஒருவித வெற்றுத்தன்மையுடன் காபி கோப்பையை எடுத்துக் கொண்டு வெளி வராண்டாவிற்குச் சென்று அன்றைய நாளிதழை பிரித்துவைத்து தரையில் அமர்ந்த மகளைக் காணவும், லக்ஷ்மியின் தீர்மானம் இன்னமும் உறுதியானது.
விடிந்து எட்டு மணி போலத்தான், மாமாவின் அறையின் கதவுகள் திறந்தன. காபி, டிஃபன் என ஒருவழியாக முடித்துக் கொண்டு, கூடத்தில் தொலைக்காட்சியைப் போட்டபடிக்கு அமர்ந்த மாமாவிடம், “அண்ணா, உங்கிட்ட ஒரு விஷயம்…”என்று லக்ஷ்மி திக்கித் திணறி ஆரம்பிக்கும் போதே, லலிதா அத்தையும், அவர்களது சீமந்த புத்திரன் ஸ்ரீராமும் சம்மன் இல்லாமலேயே கூடத்தில் ஆஜராயினர். சுஜினி எப்போதும் போல் சமையற்ட்டை ஒட்டியிருந்த தங்களது அறையின் வாசலில் நின்றுகொண்டாள்.
“என்ன விஷயம் லக்ஷ்மி?”என்று மாமா கேட்டார். லலிதா அத்தை, அம்மாவின் வாய்வார்த்தைகளில் இருந்து என்ன தப்பு கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணதுடன் கூர்ந்து நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். ஸ்ரீராமின் கண்கள் கைப்பேசியில் லயித்திருந்த போதும், காதுகள் விடைக்க கவனித்துக் கொண்டிருந்தான்.
“சுஜி விஷயமா அன்னைக்கு சொல்லியிருந்தேனே”என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அதுவா…”என்று கைகளை அசட்டையாக விசிறிய ராமனாதன், “அதான் அன்னைக்கே நான் பதில் சொல்லிட்டேனே”என்று அம்மாவிடம் கூறியவர், “டே, ஸ்ரீ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போடேன்….மேட்ச் போட்டிருப்பான்….” என்று அம்மாவை சட்டை செய்யாமல் கூற, அம்மாவின் முகம் ஒருகணம் சுருங்கிப் போனது. அவ்விடம் நிற்பதா வேண்டாமா எனத் தெரியாமல் அம்மா தடுமாறுவதைப் பார்க்க சுஜினிக்கு பாவமாக இருந்தது. “என்னால தானே இதெல்லாம்….”என்ற எண்ணமும் எட்டிப்பார்க்க, மனம் பாரமானது. “வேண்டாம்மா விட்டுங்க…..என்னால மேலும் அசிக்கப்படாதீங்க”என்று சொல்லத் தோன்றியபோதும், தனது எதிர்காலத்தையும், அம்மாவின் ஆசைகளையும் மனதில் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“அண்ணா… ஒரு நிமிஷம் நான் சொல்லறதை கேட்கறேளா?” என அம்மாவின் குரல் மீண்டும் கூடத்தை நிரப்பியது. சில நிமிடங்களுக்கு முன்னர் கேட்ட கெஞ்சும் குரலுக்கும் இப்போது கேட்ட கொஞ்சமே கொஞ்சம் கோபம் தழுவிய குரலுக்கும் வேறுபாடு இருந்ததாக சுஜினி நினைத்தாள்.
“கேட்டுட்டு தானே இருக்கேன்…சொல்லேன்…” என மீண்டும் அசைட்டையாக மாமாவின் பதில். “அந்த டி.வியை அணைச்சுட்டு கொஞ்சம் கேட்டா தேவலாம்” என இம்முறை எழுந்த குரலில் அழுத்தம் நிஜமாகவே அதிகமாக இருக்க, “சவுண்டை கம்மி பண்ணு”என்று ஸ்ரீராமிடம் மொழிந்த ராமனாதன், “இப்போ சொல்லு…”என்பது போல் அம்மாவின்புறம் கண்களைத் திருப்பி தீர்க்கமாகப் பார்த்தார்.
“சுஜிக்கு அந்த யுனிவர்சிட்டில இருந்து லெட்டர் வந்திருக்கு…. அன்னைக்குப் சொன்னப்போ சீட் கிடைச்சா பார்க்கலாம்னு சொன்னீங்க…இதோ இப்போ மெரிட்ல கிடைச்சிருக்கு…. மேற்கொண்டு என்ன செய்யன்னு…” என்று அமைதியாக, ஆனால் கொஞ்சம் கூட பிசிறாத குரலில் லக்ஷ்மி பேசினார்.
“அதான் அன்னைக்கே முடிவா சொல்லியாச்சே…. இன்னமும் என்ன அதையே பேசிட்டு. மேற்கொண்டு படிக்கவைக்கல்லாம் இங்க யாரால முடியும்?” என கணவர் எங்கே சம்மதித்து விடுவாரோ என்ற கவலையில் ராமனாதனை முந்திக் கொண்டு லலிதா பேசினார். லக்ஷ்மி தனது அண்ணியின்பக்கம் முகத்தை திருப்பவும் இல்லை, அவர் பேசியதை காதில் போட்டுக் கொண்டதாக காட்டிக் கொள்ளவும் இல்லை. அண்ணாவின் பதிலுக்குக்காக காத்திருப்பது போல் ராமனாதனையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
“லல்லி சொல்லறாப்ல அன்னைக்கே பேசினது தானே லக்ஷ்மி.. புதுசா என்ன? மேற்கொண்டு படிக்கறதுன்னா, இங்கேயே படிக்க சொல்லு…சுஜி ஆசைப்படறாங்கறதுக்காக அமெரிக்காலாம் அனுப்ப முடியாது…”
“மெரிட்ல சீட் கிடைச்சிருக்கு…அவ எதிர்காலம் நல்லா இருக்கும்….”
“படிச்ச படிப்புக்கே இங்கே வேலையில்லையாம்….”என லலிதா ஏதோ சொல்ல வாயெடுக்க, “சுஜிக்கு இன்ஃபோசிஸ்ல மாசம் முப்பதாயிரம் சம்மளத்தில வேலை கிடைச்சுதான் இருக்கு. படிச்ச படிப்புக்கு வேலையில்லைங்கறது என் பொண்ணுக்குப் பொருந்தாது மன்னி…”என லக்ஷ்மி கூறியது கேட்டு, லலிதாவிற்கு ஒருகணம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுஜினியை விடவும் இரண்டு வயது மூத்தவனான தன் மகனுக்கு வேலை சரியாக அமையவில்லை என லக்ஷ்மி மட்டம் தட்டுவதாக லலிதா கோபம் கொண்டார்.
[the_ad id=”6605″]
“அப்போ ஸ்ரீராம் வேலையில்லாம உட்கார்ந்திருக்கானா? எப்படி நம்ம குழந்தையை குத்திப் பேசறா பாருங்க உங்க தங்கை….”என கணவரை மேலும் தூண்டிவிட எத்தனிக்க,”ரெண்டு பேரும் கொஞ்ச சும்மா இருங்க….” என்று ராமனாதன் இரைந்தார்.
“இதோ பாரு லக்ஷ்மி, மேற்படிப்பு படிக்கவைக்க என்னால முடியாது. அதான் நல்ல சம்பளத்தில வேலை கிடைச்சிருக்கே, கொஞ்ச நாள் வேலைக்குப் போகட்டும்…”
“இல்லண்ணா அவ படிக்கணும்னு ஆசைப்படறா…..இப்போ வேலைக்குப் போயிட்டா, அப்பறமா படிக்க முடியாது. நாளைக்கு கல்யாணம் குடும்பம்னு ஆச்சுன்னா படிக்கறது சாத்தியமில்லாம போயிடும்…”என்று லக்ஷ்மி மொழிய இந்த முறை ராமனாதனுக்குமே ஆத்திரம் வந்தது.
“படிக்கணும் படிக்கணும்ன்னா….நான் என்ன கொட்டியா வச்சிருக்கேன்….இல்லை, நீ தான் லட்ச லட்சமா எங்கிட்ட குடுத்து வச்சிருக்கியா? அப்படி படிக்கணும்னு ஆசை இருந்தா வெளிய போய் பிச்சை எடுத்து படிக்கச் சொல்லு உன் பொண்ணை”என கோபத்தில் இன்னது பேசுகிறோம் என்றே அறியாதவராக கத்தினார். கூடம் திடுமென அமைதியானது. லக்ஷ்மியின் முகம் கோபத்தில் அனலாக சிவந்து கன்றிப் போயிருந்தது. ஸ்ரீராம் தானாகவே தொலைக்காட்சியை அணைத்திருந்தான். லலிதா கணவரையும் கணவரின் தங்கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா”என அருகில் வரத்துணிந்த சுஜினியை சைகையால் தடுத்தார் லக்ஷ்மி. கண்கள் கலங்கிப் போயிருந்த போதும், முகத்தில் ஒருவித கோபதேஜஸ் சூழ்ந்திருந்தது லஷ்மியிடம். தீர்க்கமாக ராமனாதனை ஏறிட்டவர், “பிச்சை எடுக்கணுங்கற அவசியம் இன்னும் எங்களுக்கு வந்திடலை. அப்படி ஒரு நிலைமையில என்னை அந்த ஆண்டவன் வச்சிருக்கலை… இந்த வீடு என் பேர்ல இருக்கு….அதை மறந்துட்டு வார்த்தைகளை விடாதீங்கோ”என அதே கோபத்துடன் மொழிய, “பார்த்தேளா…..சொத்து வேணும்கறதுக்காகத் தான் இவ்வளவு மாய்மாலமும் நடக்குது…..” என குத்தலாக மொழிய, “உங்ககிட்ட நான் பேசவே இல்லை மன்னி. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில தலையிடாதீங்கோ” என அடுத்த நொடியே பதிலடி கொடுத்தார் லக்ஷ்மி.
அடுப்பங்கரையே கதி என, முகம் மாறாமல் சொன்ன வேலைகளை செய்யும் தன் நாத்தனார் இப்படி எடுத்தெரிந்து பேசுவாள் என லலிதா கனவிலும் எதிர்பார்க்கவில்லை. லஷ்மிக்கு கொஞ்சம் கர்வம் இருக்கிறது, ஒரு சொல் சொன்னாலும், மனதை குத்திக் கிழிக்கும் கூர் நாக்கு என்ற மட்டிலும் லலிதா அறிவார். அதனாலேயே தன் கணவர் இல்லாத சமயங்களில் அவ்வளவாக பேச்சு வைத்துக் கொள்ளமாட்டார் லலிதா. கணவர் முன்னிலையிலேயே தன்னை துச்சமாக பேசும் நாத்தனாரை கொஞ்சம் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
“அண்ணா, நேக்கு இந்த சொத்து அவசியம் இல்லை. ஆனா என் பொண்ணோட படிப்புக்கு இந்த வீடு தேவை. இன்னைக்கு இந்த வீட்டை வித்தா குறைஞ்சது எழுபது லட்சமாவது பெரும்” என்று தன் அண்ணாவின் முகத்தில் இருந்து கண்களை அகற்றாமல் பேசிய லக்ஷ்மியிடம் இந்த முறை ராமனாதன் அசட்டை காட்டவில்லை.