மாடிப்படிகளில் அமர்ந்தவன் தலையை பின்னே படிகளில் சாய்த்து, அதற்கு தன் கரங்களால் முட்டுக்கொடுத்து, விண்மீன்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆங்காங்கு வெண்மைக்கு இடையில் தெரிந்த நீல வானத்தை தேடிப்பிடித்து பார்த்துக் கொண்டிருந்தான். சிந்தை எல்லாம் பின்னோக்கி செல்ல, அவனுக்குமே இதயனின் இடரை நினைத்து உடலில் ஒரு நடுக்கம் ஓடி நின்றது. தந்தை இறைவனடி சேர்ந்திருக்க அவர் இடத்தில் இருந்து எல்லாம் செய்தவன் திடீரென நொடித்து படுத்துவிட, வாழ்க்கை பற்றி பெரிதாக கவலையின்றி சுற்றிக்கொண்டிருந்தவன் தலையில் எல்லாம் விழவும் வாழ்க்கையே கவலையாகிப் போனது இன்பனுக்கு.
பிரச்சனையில் சிக்கி அடிபடாதவரை வண்ணமயமாக தெரியும் வாழ்வு, துயர் வந்து புரட்டிப் போட்ட பின்பு நிறைய நிறைய கற்றுக் கொடுக்கிறது.
இன்பனும் அப்படி நிறையக் கற்றுக் கொண்டான். அலைச்சல் ஒருபுறம், இதயனின் உடல்நிலையில் தடைபட்ட முன்னேற்றம் ஒருபுறம், அன்னையின் ஓய்ந்த நிலை ஒருபுறம், அவ்வளவாக எந்த பொறுப்பையும் ஏற்று செய்யாமல் திடீரென எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் சூழலால் ஏற்பட்ட திணறல் ஒருபுறம் என்று எல்லா புறமும் சிக்கித் தவித்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதற்குள் பக்குவம் வந்திருந்தது அவனுக்கு.
அதன் பின்னுமே குடும்பத்தின் கனம் அவனை அழுத்த அந்த பாரத்தை விட இதயனின் இடர் தான் அவனை நிலைகுலைய வைத்தது. இன்று இனியா வந்து அந்த பழைய நினைவுகளை கீறிவிட, அதை நினையாமல் கடக்க முடியவில்லை. ஆனால் அந்த நினைவுகளை கலைக்கவென ஓசை எழுப்பியது அவனின் அலைபேசி. உணர்ச்சிகளை குறுக்கிட்ட எரிச்சலில் தன் அலைபேசியை எடுத்தவன் அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் சாந்த்தமானான்.
இவன் ஹலோ சொல்லியதற்கு பதில் வராது எதிர்முனையில் இருந்து, “இந்த நம்பரிலிருந்து மிஸ்ட் கால் வந்திருந்தது. உங்களுக்கு யார் வேணும்?”
“நீ வேண்டுமென்றே மிஸ் பண்ணியதால் தான் அது மிஸ்ட் கால் ஆகிட்டு.” என்றான் இவன் இலகுவாய்.
“நான் என்ன கேட்கிறேன், நீங்க என்ன சொல்றீங்க?”
“நீ கேட்டதற்கான பதிலைத் தான் சொன்னேன்.” என்றான் இவனும் விடாமல்.
“நான் ஏற்கனவே செம்ம கோவத்தில் இருக்கேன். இப்படி பேசி வச்சீங்கன்னா நான் போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்.” மிரட்டலாய் வந்தது எதிர்முனையில் இருந்து.
“என் போன்லையும் சுவிட்ச் ஆப் ஆப்ஷன் இருக்கு.” என்று இவன் பேச்சை வளர்க்க,
“அந்த ஆப்ஷனை உபயோகிக்காமலே உங்க போன் அப்படித் தான் இருக்கு,” என்று மறுபக்கம் நொடித்துக்கொள்ள,
“யுக்தா…” என்றான் ஆழ்ந்த குரலில்… அந்த ஒலியில் தெரிந்த பேதத்தில் கட்டுண்டதைப்போல் யுக்தா அமைதியாகிவிட,
“என் மேல கோவமா?” என்று வினவினான் பதிலை தெரிந்துகொண்டே.
“இதில் சந்தேகம் வேற இருக்கா உங்களுக்கு?” என்றாள் விறைப்பான குரலில்.
“என்ன கோபம் இருந்தாலும் நான் கழட்டி விட்டுருவேன்னு நீ சொல்லி இருக்கக்கூடாது யுக்தா. என் மேல நம்பிக்கையில்லாமா நீ சொன்ன மாதிரி இருந்தது.” இன்பன் வருந்திக் கூற,
“அதையே நானும் சொல்லலாம். நீங்க என் மேல நம்பிக்கையில்லாம தானே என்னை உங்களுள் ஒருவளாய் பார்க்கல?”
“உன் நினைப்பு சரிதான். ஆனால் உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை யுக்தா… அது என்னோட… இயலாமையால் வந்த வறட்டு வீம்பு. அவனுக்கு நானே எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும். அதோடு அவன் இருந்தா வீட்டை எப்படி மேனேஜ் செய்வானோ அதேபோல் நானும் எல்லாம் செய்யணும்னு எனக்குள் உருபோட்டுக்கிட்டே இருந்து அப்படியே மனசில் பதிஞ்சிடுச்சு. அதில் நீ உதவி செய்றேன்னு சொல்லவும், இவள் என்ன செய்றது… ஏன் என்னால முடியாதாணு ஒரு வீம்பு.” என்று தயக்கத்துடன் தன் மடத்தனத்தை ஒத்துக்கொள்ள,
“அது வெறும் வீம்பு இல்லை. ஆண் என்ற கர்வம்.” என்று இடையிட்டு சாடவும் தவறவில்லை அவள்.
உடனே எதுவும் கூறாமல் தொண்டையை கணைத்தவன், “அதுதான் இப்போ புரிஞ்சிகிட்டேனே அப்புறம் ஏன் அதை சொல்லிக்காட்டுற?” புரிந்து கொண்டேன் என்றாலும் அதை அழுத்தமாய் பதியவைக்க முடியவில்லை அவனால்.
“புரிஞ்சிக்கிட்டீங்களா? எதை? என்கிட்ட அப்படி ஒன்றும் நீங்க சொல்லலையே…”
“அதுக்குத் தான் உன்னை கூப்பிட்டேன். நீ தான் அழைப்பை துண்டிச்சிகிட்டே இருந்த,”
“எப்போ கூப்பிட்டீங்க? ரெண்டு நாள் கழிச்சு…” எள்ளலாய் வந்தது பதில்.
“எனக்கு அப்போ புரியல… இப்போ தான் புரிஞ்சிது, நான் என்ன செய்ய?” அவளைப் போலவே பதில் கூறிவைத்தான் இன்பன்.
சில நேரங்களில் இந்த விஷயத்தை இந்த நேரத்தில் செய்திட வேண்டும் என்று பட்டென்று தோன்றுவதில்லை. அந்த நேரம் கடந்த நேரம் பின்னேதான் ஐயோ இப்படி செய்யாமல் விட்டுட்டோமே என்று மனம் குட்டிக்கொள்ளும். அதை இப்போது நன்றாக புரிந்து கொண்டுவிட்டான் இன்பன்.
“என்ன புரிஞ்சிது?” என்றாள் அவளும் இடக்காய்.
“ப்ச்… இங்கே பார் யுக்தா, உங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பது போல், ஆண் என்றால் இப்படித்தான் என்று ஒரு ப்ரோடோகால் செட் செய்து வச்சிட்டாங்க. எவ்ளோ தான் படித்தாலும் முற்போக்கு சிந்தனைகள் இருந்தாலும் அதை உடைத்து வெளிவரவோ அதை மீறவோ பலருக்கு தைரியம் இல்லை, பெருந்தன்மையும் இல்லை. அது இங்குள்ள சூழ்நிலையை பார்த்து வளர்வதால் வருதா இல்லை ரத்தத்திலே ஊறிவிட்டதான்னு தெரியலை. பட் அந்த நேரம் என்னையும் மீறி அப்படி வந்துடுச்சு. அதன் பிறகு தான் யோசிச்சேன்.”
“என்னனு?”
“என் மேல் தான் தவறு… என்னவோ ஒரு தாழ்வுணர்ச்சி. எனக்காக, என் மேல உள்ள அக்கறையிலும், பாசத்திலும் தானே நீ என்னோட பொறுப்பை உன்னுடையதா நினைத்து ஒரு யோசனை சொன்ன. இனியா செஞ்சது பெரிய விஷயம்னு சொன்னேன் ஆனால் நீ செஞ்சதும் எதற்கும் குறைஞ்சது இல்லை. எனக்கு நிகராக உன்னையும் எப்போதும் மதிக்கணும்னு தான் என்னைக்குமே நான் விருப்பப்பட்டு இருக்கேன். ஆனால் அதை நானே உடைச்சிட்டேன். அம்மா ஒரு முறை சொன்னாங்க, நம்ம வீடுன்னு நினைத்து யுக்தா வீட்டுக்கு எல்லா பொருளும் வாங்கியிருக்கா நீ பணம் எல்லாம் குடுத்து அந்நியப்படுத்தி விடக்கூடாதுனு சொன்னாங்க… அது எவ்வளவு உசிதனம்னு இப்போ புரியுது. உனக்கு என்ன விருப்பமோ அதையே செய். இந்த வீட்டில் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. வீட்டுக்கு என்ன மாதிரி டிசைன் செய்யணும்னு பார்த்து செஞ்சிடு.” என்று அவன் நீட்டி பேச,
“இனியா விதைக்க சொல்லி கொடுத்த விதையில் போதிமர விதை எதுவும் இருந்திருக்குமோ?” என்று கேலி பேசினாள் யுக்தா.
அவனுக்கு அவள் என்ன கூறுகிறாள் என்று சட்டென்று புரியவில்லை, “என்ன விதை? எப்போ இனியா கொடுத்தாள்?”
“விளங்கிடும்… எங்க இருந்தாலும் முதல்ல எழுந்து நேரா உங்க வீட்டு வாசலுக்கு போய் பாருங்க. இனியா உங்களிடம் கொடுத்து விதைக்க சொன்ன விதையெல்லாம் துளிர் விட்டிருக்கும்.” என்கவும் தான் இனியா தன்னிடம் பைகளை கொடுத்து விதைக்கச் சொன்னது நினைவு வந்தது. எழுந்தவன் யுக்தா சொன்னதை செய்யும் விதமாய் மாடிப் படிகளில் இருந்தே எட்டிப் பார்த்தான். நடைபாதையின் இருபக்கமும் விதையிலிருந்து சிறிது சிறிதாய் தண்டும், விரிந்து பிரியாத இலையும் இளம்பச்சை நிறத்தில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.
உடனேயே, ‘இதை எப்படி கவனிக்காமல் போனோம்?’ என்று தான் தோன்றியது இன்பனுக்கு.
“குட்டி குட்டியா அழகா இருக்கு. அதை பார்த்தால் புதுசா ஒரு உயிர் வந்த மாதிரி தோணுது.” என்றான் பதில் கூறும் விதமாய்.
“நாம் அண்ணாந்து வியப்பா மேல பார்க்குற விஷயங்களை விட, நமக்கு கீழே இருப்பது இன்னுமே அழகாக இருக்கும். நாம் தான் அதை கவனிப்பதில்லை.”
“நம்மோட இலக்கு சிகரத்தில் தானே எப்போதுமே இருக்கும். அதில் கீழ் இருப்பதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை.” என்றான் இவனும்.
“இலக்கு தப்பில்லை, அதற்காக கீழே இருப்பதை மறந்து விடக்கூடாது. ஏனேன்றால் கீழே ஸ்ட்ராங்கா இருந்தால் தான் மென்மேலும் உயர போகப் போக தடையின்றி இலக்கை அடையமுடியும்.”
என்னவோ பேச ஆரம்பித்து எதையோ பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
“நான் மறக்க மாட்டேன் யுக்தா. நம்மோட இந்த சண்டை நல்ல படிப்பினையை கொடுத்திருக்கு. இனி இது போன்றதொரு தவறான புரிதல் நமக்குள் வராது ஏன்னா நம்ம பேஸ்மென்ட் ஸ்ட்ராங் ஆகிடுச்சு யுக்தா.” பேச்சுக்கள் திசை மாறியிருப்பினும் அவற்றை சரியாக முடிச்சிட்டு பிரச்சனைக்கான தீர்வில் வந்து நிறுத்தினான் இன்பன்.
“அல்ட்றா டெக் சிமெண்ட் போட்டு பேஸ்மென்ட் ஸ்ட்ராங் பண்ணிட்டிங்களா என்ன? இவ்வளவு உறுதியா சொல்றீங்க?” அவன் இறங்கிவந்து இவ்வளவு பேசும் போது கோபத்தை எங்கிருந்து அவள் பிடித்துக் கொண்டுவருவது?
“அல்ட்றா டெக் சிமெண்ட் எல்லாம் இல்லை. உன் பிரென்ட் இனியா பெவிக்கால் மாதிரி அண்ணாகிட்ட ஒட்டிட்டு இருக்கும் போது நீ ஒரு சாதாரண கோந்து மாதிரி கூடவா இருக்கமாட்ட? அந்த புரிதல் தான்.” என்று அவன் நகைக்க, கோபம் வருவதற்கு பதிலாக இந்தப் பேச்சுக்கள் பிடித்திருந்தது அவளுக்கு. இதைத் தானே எதிர்பார்த்தாள்.
“நான் க்ளூ கன் (Glue Gun). ரொம்ப வாலாட்டுனா சுட்டுருவேன்.” என்று அவளும் சிரிக்க,
“சுடேன்… சுட்டுத்தான் பாரேன்… நான் பச்சக்குனு வந்து உன் மேல ஒட்டிக்குவேன்.” என்ற அவன் பேச்சில் நாணம் வந்து பச்சக்குனு ஒட்டிக்கொண்டது அவள் தேகத்தில்…
இனி என்ன கவலை அவளுக்கு? ஊடல் விலகி கூடல் வந்துவிட மனம் முழுதும் அவனும், அவனுக்கான காதல் மட்டும்தான்.
இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா அதை தெளிப்படுத்திக் கொள்ளவென, “நாளைக்கு கல்யாண பட்டு எடுக்கப்போறோம்… நீங்க தான் ட்ரெஸ்…” என்று அவள் துவங்கவும் அவனுக்கு புரிந்துவிட்டது, “உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ யுக்தா. விலையை பத்தியெல்லாம் கவலைப்படாத.”
“எனக்கு நீங்க எடுத்துக் கொடுங்க. நான் உங்களுக்கு, அத்தைக்கு, அத்தானுக்கு எல்லாம் எடுத்துறேன்.” அவனின் செலவை கொஞ்சமேனும் குறைக்க எண்ணி அவள் கூறினாள்.
“சரி உன் விருப்பம்… அப்படியே இனியாவுக்கும் எடுத்துடு. அவளும் நம்ம குடும்பம்தான்.” இனியாவையும் குடும்பத்தினுள் சேர்த்துவிட, யுக்தா அமைதியாகிவிட்டாள்.
அதை உணர்ந்தவன், “என்ன பதிலே காணும்?”
“இனியா நம்ம குடும்பம்னு முடிவே செய்துடீங்களா?” மென்குரலில் அவளின் கேள்வி ஒலிக்க, இந்த விஷயத்தில் அவளின் மனதை படிக்கமுடியவில்லை அவனால்.
“இதில் சந்தேகம் வேறு இருக்கா உனக்கு? பார்த்தாலே எல்லாம் தெரிகிறது.” என்றவன் இனியாவின் தற்போதைய பயத்தையும், தவிப்பையும், அவளின் இருப்பையும் விளக்க, அனைத்தையும் அமைதியாய் உள்வாங்கிக் கொண்டாள் யுக்தா.
“சரி நாளைக்கு பார்ப்போம்.” என்றவள் வெளிப்படையாய் அவனிடம் எதுவும் கூறவில்லை. தோழிகளுக்குள் இருக்கும் சண்டையும் அவனுக்கு தெரியவில்லை.
“இவ்வளவு தான் உன்னோட ரியாக்ஷனா?”
“வேறு என்ன செய்யணும் இப்போ? ஏற்கனவே அவளுக்கு மணியாகி இருக்கும். அவளும் வீட்டுக்கு போகணும். அவளுக்குனு அவங்க குடும்பம் ஒன்று அவள் வீட்டில் காத்துக்கிட்டு இருக்காங்க. அது நியாபகம் இருக்கட்டும். நீங்க முதலில் அவளை அங்கிருந்து கிளப்பி பத்திரமா வீட்டில் கொண்டுபோய் விடுங்க. அவள் துணை வேண்டாம்னு தான் சொல்லுவா, ஆனால் நீங்க அவளை பத்திரமா வீடுவரைக்கும் விட்டுட்டு வாங்க.” என்று கட்டளையிட்ட யுக்தாவின் தொனியில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தான் இம்முறை. ஆனால் அதை பற்றி விசாரித்து பேச்சை வளர்க்க நேரம் ஒத்துவரவில்லை. இருட்டிலும் உறங்கா நகரமாக சென்னை இருப்பினும், நேரத்திற்கு இனியா வீடு திரும்புவது அவசியம் என்பது புரிய யுக்தாவிடம் பிறகு பேசுவதாய் சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.
அவளிடம் பேசி ஊடலை உடைத்த பின்னே மனம் தெளிவாய் உணர்ந்தது. சில தம்பதிகளுக்குள் இயற்கையாகவே புரிதல் இருக்கும், ஊடலை பெரிதாக்காமல் மனதில் தோன்றும் வேறுபாடுகளை பேசி கலைந்துவிடுவார்கள் இல்லையா துணை எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்ற அபிரிதமான நம்பிக்கையும், புரிதலும் இருக்கும். சிலருக்கோ சிற்சில ஊடல்கள் வந்துசென்ற பின்னே அப்படிப்பட்ட புரிதல் வரும். சிலருக்கு இறுதி வரை புரிதல் வருவதில்லை. இதில் இரண்டாம் ரகமாகிப் போகினர் இன்பனும், யுக்தாவும்.
யுக்தா சொல்வதை செயல்படுத்துவோம் என்று அவன் வீட்டின் உள்ளே செல்ல திரும்ப, இனியாவை அழைத்துக்கொண்டு வந்தார் சிவகாமி.
“நேரமாகிடுச்சு, அதுதான் கிளம்பச் சொன்னேன்.” என்று சிவகாமி கூற,
தன் செயலின் வீரியத்தை, தன்னுடைய உணர்வுகளின் வெளிப்பாட்டை உணர்ந்தவள் அலைப்புறுதலுடன் வண்டியை நோக்கிச் செல்ல,
“நான் உன் பின்னாடி வரேன் இனியா.” என்று இன்பன் குறுக்கிட்டு சொல்ல, அவள் மென்மையாய் தலையசைத்தாள். அவளின் மெளனம், அவள் மறுப்பாள் என்று எண்ணியவனுக்கு வியப்பாய் இருந்தது. இருந்தும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு அவளை தொடர்ந்தான். அவள் வீடு அடுத்த தெருவிலே இருந்ததால் சீக்கிரமே சென்றுவிட, அவள் வீட்டினுள் வண்டியை விடும்வரை நின்றவன் கிளம்ப எத்தனித்து வண்டியை திருப்பும் போது தான் கவனித்தான் சற்று உள்ளே இருக்கும் அவள் வீட்டு வாயில் நிலைக்கதவில் இருவர் நின்று அவனை நோக்குவதை. ஒருவர் குழப்பமாகவும், இன்னொருவர் கோபமுடனும் பார்த்துவைக்க, அதில் ஒருவர் அவள் அன்னை மற்றொருவர் வயதைக் கொண்டு அவள் தம்பியாக இருக்கும் என்று யூகித்தான். அவள் தம்பியின் அனல் பார்வை அவனை யோசனையில் ஆழ்த்த, தான் உள்ளே சென்று என்னவென்று கேட்கவோ, விளக்கவோ இது சரியான நேரமாக இராது என்றுணர்ந்து அங்கிருந்து தன் வீட்டிற்கு விரைந்துவிட்டான்.
சோர்ந்து களைப்புடன் உள்ளே நுழைந்தவளை கேள்வி கேட்கவும் மனது வராது, கேட்காமலும் இருக்க முடியாது கீதா கையை பிசைந்தது என்னவோ சில நொடிகள் தான்.
“நீ எப்படி அந்த பையன் கூட வந்த? யுக்தாவுடன் எங்கேயும் வெளியில் போனாயா?”
அன்னைக்கு பதில் கூறாது, தன் சிந்தையிலே உழன்று சோபாவில் சரிந்தவள் தலையை பின்னே கவிழ்த்து கண்களை மூடி அமர்ந்துவிட,
“காலையில் ஏதோ சொல்லிட்டு போனாயே…” என்று கடினக் குரலில் பேச்சை ஆரம்பித்தவர், “உன் மனசுல யாரை வச்சிக்கிட்டு காலையில் அப்படி பேசுன இனியா?” என்று தந்தை போல் அல்லாது நேரே கேட்டுவிட்டார்.
“இதயன். கார்டியலாஜிஸ்ட். இப்போ வந்துட்டு போனாரே அவரோட அண்ணன் தான். அவர் கூட கடைசி வரை வாழனும் என்கிற அளவுக்கு எனக்கு அவரை பிடிச்சிருக்கு.”
இடர் வந்த பின்னோ மனதில் இருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் மறைந்து திரை விலகி பளிச்சென்று அவளின் அகத்தை காட்டியது. இருக்கா இல்லையா, ஈர்ப்பா காதலா, இது சரிவருமா என்று ஊசலாடிக் கொண்டிருந்த அவளின் மனம் என்னவோ தெளிவாகிவிட்டது அவள் பெற்றோரின் நிம்மதியை களவாடிவிட்டு…
*^*^*