என் காதல் கனா 10
தோழிகளுடன் அரட்டையை முடித்துக் கொண்டு விடுதி அறைக்குத் திரும்பிய சுஜினி, வேகமாக தயாராகி “சிம்பிளி ஏஸ்யா” நோக்கி நடந்தாள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உணவகத்தில் கணிசமான கூட்டம் எதிர்பார்க்கப்படும். உணவகத்தை நடத்தும் வில்கின்சன் தம்பதியினருக்கு சுறுசுறுப்பாக தன் வேலையை செய்யும், அடுத்தவர் விஷயங்களில் குறுக்கிடாத பாங்கு கொண்ட “சூ”வை மிகவும் பிடித்திருந்தது. சுஜினி என்ற பெயர் அவர்களுக்கு அழைக்க கடினமாக இருந்ததால் சுஜினியை சுருக்கி “சூ”ஆக்கியிருந்தனர் மார்க் வில்கின்சன்னும், அவரது மனைவி கெல்லி வில்கின்சன்னும்.
சுஜினி அந்த உணவகத்தின் பின்வாயில் வழியாக சமையலறைக்குள் நுழைந்தாள். செஃப் ஸ்டீவ் பார்பிக்கியூவிற்காக சிக்கனை வாட்டிக் கொண்டிருக்க, சுஜினி வெயிட்ரெஸ் அறையினுள் சென்று தன் தினப்படி உடைகளைக் களைந்து, “சிம்பிளி ஏஸ்யாவின்”சிப்பந்திகள் சீருடையான கருப்பு நிற ஜீன்ஸையும், வெளீர் பிங்கில் அடர் பிங்க கோடுகள் போட்ட டி-ஷர்ட்டையும் அணிந்து, சமையலறையில் மீண்டும் பிரவேசித்தாள்.
“டு யூ வாண்ட் எனி ஹெல்ப் ஸ்டீவ்?”என்று ஸ்டீவிடம் வினவியவளிடம், “நோ சூ…ஐம் குட்….” என்று பதிலளித்தான் ஸ்டீவ். சமையலறையை விட்டு, பில் செய்யும் இடத்திற்கு வந்தவள், அன்றைய தினப்படி வேலைகளை கவனிக்கத் துவங்கினாள். வெள்ளிக்கிழமை என்பதால் மெல்ல மெல்ல உணவகத்திற்கு கூட்டம் வரத் துவங்கியது.
வாடிக்கையாக வரும் ஒரு தம்பதியினரின் டேபிளில் ஆடர் எடுத்துக் கொண்டிருந்த போதுதான், சில ஆண்களுடன் அந்த உணவகத்தினுள் நுழைந்த சதீஷையும் விவேக்கையும் கவனித்தாள். சுஜினிக்கு கூச்சமாகவோ சங்கடமாகவோ இருக்கவில்லை. நல்ல வேளையாக, சதீஷ் மற்றும் விவேக்கின் கும்பல் அமர்ந்த மேஜையை கவனிக்க வேண்டியது வேறு ஒரு வெயிட்ரெஸ்ஸாக இருந்ததால் முடிந்த மட்டும் சகஜமாகவே தன் தினப்படி அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.
காற்றில் பறக்கும் கூந்தலை சிறிய போனி டெயிலுக்குள் அடக்கி, ஒப்பனை ஏதுமின்றி, எதார்த்தமாக நடமாடிய அந்த வெயிட்ரெஸ்ஸை சதீஷி கும்பலில் ஒருவன் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்த சதீஷின் காதில் “ஹே, செக் அவுட் ஹெர்…ஷி லுக்ஸ் லைக் ஏஸ்யன்…ப்ராபப்ளி இந்தியன்”என்று கிசுகிசுக்க, அப்போது தான் சதீஷ் சுஜினியை கவனித்தான். “இவ இங்க என்ன வெயிட்ரெஸ்ஸா வேலை செய்யறா?”என்று கேள்வி எழ, விவேக்கிடம் ஜாடை காட்டினான்.
விவேக்கிற்கு சுஜினியை ஒரு மாதம் கழித்து பார்த்த ஆர்வத்தில், “ஹே சுஜி”என்று சுஜினியின் காதில் விழும் வண்ணம் கத்தி அழைத்திருந்தான். ஆடர் எடுத்துக் கொண்டிருந்த மேஜையில் இருந்து திரும்பி, இவர்களது மேஜையைப் பார்த்தாள் சுஜினி. விவேக் தன்னை நோக்கி வேகமாக கை அசைப்பது தெரிய, மெல்லமாக சிரித்து தன்னை நேர்படுத்திக் கொண்டவள், அந்த மேஜையின் உணவுத்தேவை பட்டியலில் எழுதிக் கொண்ட பின்னர், இவர்களது மேஜையின் அருகில் வந்தாள்.
“ஹாய் சுஜினி…. இங்க வர்க் பண்ணரையா என்ன? உன்னை இங்க எதிர்பார்க்கவேயில்லை….ப்ளெசண்ட் சப்ரைஸ்… ஆனா உன்னை இந்த இடத்தில் கொஞ்சம் கூட இமெஜின் பண்ணவே முடியலை…உனக்கு எதுக்கு இந்த மாதிரி வெயிட்றெஸ் வேலையெல்லாம்..உன்னைப் பார்த்தா ஆர்கன் யுனிவர்சிட்டில மெரிட் ஸ்காலர்ஷிப்ல படிக்கற பொண்ணுன்னு யாரும் நம்பவேமாட்டாங்க….”என்று அவசர அவசரமாக நிறைய உரிமை உள்ளவன் போல் பேசிய விவேக்கை கொஞ்சம் ஆழ்ந்த பார்வையுடன் ஏறிட்டவள், “ஹாய் விவேக்…”என்று மட்டும் பதிலளித்தாள். விவேக் வாயை மூடமாட்டானா என தோன்றவும் செய்தது. அவளது கண்கள் இயல்பாக அருகில் அமர்ந்திருந்த சதீஷின் மேல் சென்று மீள, சுஜினியை அதே நேரம் பார்வையால் அளந்து கொண்டிருந்த சதீஷ், விவேக் போல் நிறைய குடைந்து கேள்வி கேட்காமல் ஒற்றை தலை அசைவுடன் அமைதியானான். சுஜினிக்கும் சதீஷின் இந்த செய்கை போதுமானதாக இருந்தது.
விவேக் அடுத்து கேள்விகள் கேட்கும் முன்னர், அந்த மேஜைக்கு உரிய வெயிட்ரெஸ் ஆடர் எடுக்க வந்துவிட, சுஜினி, “ஒ.கே கைஸ்…எஞ்சாய் யுவர் மீல்….பை”என்று நாசூக்காக விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தாள். வேகமாக நகர்ந்த ஒரு மணி நேரத்திற்குப் பின், அந்தக் கும்பல் உணவை முடித்துக் கொண்டு கிளம்ப சித்தமாயினர். ஆனால் விவேக்கை நகர்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை. “சுஜி, உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே…ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய வர்றியா?”என்று பில்லைக் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பும் சமயம் வினவினான்.
[the_ad id=”6605″]
நண்பர்கள் முன்பு என்ன பேசுகிறோம் என்றே உணராமல் பேசிய விவேக், சுஜினியின் நன்மதிப்பை ஏற்கனவே கொஞ்சம் இழந்திருந்தான். இப்போது ஏதோ பேச வேண்டும் என்று கூறியது சுஜினிக்கு ரசிக்கவில்லை. “இப்போ வர்கிங் ஹவர்ஸ்…அதும் வீக் எண்ட்….இப்போ பேச முடியாது விவேக்.. எனக்கு ஷிஃப்ட் முடிய ஒன்பது மணி ஆகும் ”என்று முடிந்த மட்டில் நாசூக்காக மறுத்துவிடவே சுஜினி எண்ணினாள். ஆனால் விவேக் விடுவதாயில்லை. பில்லிங்கில் நின்றிருந்த மார்க் வில்கின்சன்னிடம், “ஹாய்… கான் யூ கிவ் டு மினிட்ஸ் ப்ரேக் ஃபார் மை ஃப்ரெண்ட்..”என்று அனுமதி கேட்க, மார்க், சுஜினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையசைத்தார்.
“என்ன விவேக்…சீக்கரமா சொல்லு” என்று உணவகத்தின் வெளியே இருந்த பெயர் தெரியாத மரத்தின் கீழ் நின்று கொஞ்சம் ஆத்திரமாகவே வினவினாள் சுஜினி. சதீஷ் அந்த கும்பல் ஆண்களுடன் சற்று தொலைவில் நின்று பேசிக் கொண்டிருந்தான். வாயிலில் நின்றிருந்த சுஜினியைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் தன் நண்பர்களின் பக்கம் திரும்பிக் கொண்டான்.
“சுஜி…எவ்வளோ நாள் கழிச்சு பார்க்கறேன்…உன்னை கேம்பஸ் ஃபுல்லா தேடினேன்…நீ என்ன மேஜர்ன்னு கூட அன்னைக்கு கேட்டுக்கலை….அதனால உன்னை தேடறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு…. “ என்று சுஜினியை தேடிய புராணக் கதையை விவேக் வெகு ஆர்வமாக விவரிக்கத் துவங்க, சுஜினிக்கு ஏனோ விவேக்கின் செய்கை கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.
ஐந்தடி தூரத்தில் நண்பர்களுடன் நின்றிருந்த போதும், அவ்வப்போது சுஜினியின் பக்கம் ஒரு பார்வையை செலுத்திக் கொண்டிருந்த சதீஷிடமே சுஜினியின் கண்கள் திரும்பத் திரும்ப லயித்தன. “அங்க நின்னு பார்க்கறதுக்கு கிட்டவந்து பேசவாது செய்யலாம் இல்லை….உர்ராங்குட்டான்”என மனம் சதீஷை திட்டத் துவங்கியிருக்க, விவேக் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுகாமலே போனது.
“சுஜி, சுஜி…என்ன யோசனை…ப்ளான் ஒ.கே தான…..நீ வர்ற தான?”என விவேக் மீண்டும் மொழிய, சுஜினி தன்னை உலுக்கிக் கொண்டாள். விவேக் என்ன கேட்டான் என்றே தெரியாத நிலையில் என்னவென்று பதில் சொல்ல? இருந்தாலும் கொஞ்சம் போல் சமாளித்தவள், “நான் யோசிச்சு சொல்லறேன்…”என்று பொதுவாக பதிலளித்தாள்.
“ஒ…ஒ.கே”என்று கூறிய விவேக்கின் முகம் சட்டென சுருங்கிப் போனதைப் போல் உணர்ந்த சுஜினிக்கு விவேக்கை காயப்படுத்திவிட்டோமோ என்ற குற்ற உணர்வும் உடன் எழுந்தது. “அக்கரையா பேசற மனுஷனை விட்டுட்டு, தூரத்தில எனக்கென்னன்னு நின்னுகிட்டிருக்கற உராங்குட்டான் முக்கியமா போச்சா?”என மனம் குமுறத் துவங்க, சுஜினி விவேக்கை சமாதானப்படுத்தும் விதமாக, அழகாக முறுவலித்தாள். “நான் யோசிட்டு உங்களுக்கு சொல்லறேன்…உங்க காண்டேக்ட் நம்பர் இருந்தா குடுங்க”என்று மொழிய, விவேக் அவசரமாக தனது கைப்பேசியில் இருந்து சுஜினியின் கைப்பேசி எண்ணைக் கேட்டுப் பெற்று, ஒரு ரிங் கொடுத்திருந்தான்.
“ஒ.கே சுஜி….பை, டேக் கேர்…..மறக்காம கால் பண்ணு…பை”என்று நண்பர்கள் இருக்கும் இடம் வரை கத்திக் கொண்டே சென்றவன், கை அசைத்து விடை பெற்றான். கூட்டத்துடன் மெல்லமாக நடக்கத் துவங்கியிருந்த சதீஷ் ஒரு கையை மட்டும் உயர்த்தி, கண்களின் அருகில் சின்ன ராயல் சல்யூட் போல் வைத்துவிட்டு நகர்ந்துவிட்டிருந்தான். சுஜினியின் மனம் குழம்பிக் கிடந்தது. தன்னிடம் நட்பு பாராட்ட விரும்பும் விவேக்கை நினைத்து சிறிது மகிழ்க்சியாக இருந்த போதிலும், வலுவில் வந்து பேச முனையும் விதம் நெருடலாகத் தெரிந்தது.
அதே நேரம் அருகில் வராமல், அதிகம் பேசாமல் தன் வேலைகளை மட்டுமே கவனித்துச் சென்ற சதீஷின் மீதும் தன் கவனம் குவிவதை சுஜினியால் உணரமுடிந்தது. தூரத்தில் தன் சகாக்களுடன் நின்றிருந்த போதும், சதீஷின் பார்வை தன் பக்கம் திரும்புவதையும், தன் கண்களும் மனமும் கூட சதீஷ் எங்கு இருக்கிறான்? என்ன செய்கிறான்? எங்கே பார்க்கிறான் என தேடுவதையும் நினைத்து குழப்பம் கொண்டாள். இந்தக் கலவையான எண்ணங்களுடன் தன் மீதமுள்ள பணிகளை கவனிக்க உணவகத்தினுள் விரைந்தாள்.
விவேக் தனது கைப்பேசி எண்ணை சுஜினியிடம் கொடுத்து விடை பெற்றுக் கொண்டு, காத்திருந்த தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டான். நண்பர்கள் குழுவில் ஒரு சீனா மாணவன் இருந்தான். அவன் அறிவுரையின் படிதான் “சிம்பிளீ ஏஸ்யா” உணவகத்திற்குச் செல்லும் வாய்ப்பு அன்று அமைந்தது.
உணவகம் அமைந்திருந்த நகரின் மையப் பகுதியில் இருந்து, கல்லூரி வளாகம் இருந்த நகரின் மூலைக்குச் செல்ல குறைந்தது முப்பது நிமிடங்கள் பிடித்தன. மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டே நடந்த சதீஷ், மெல்ல மெல்ல வேகத்தைக் குறைந்து விவேக்குடன் இணைந்து நடந்தான்.
“சோ, என்ன சொல்லறா உன் ஃப்ரெண்டு?”என்று ஆர்வம் இல்லாதது போல் வினவினாலும், விவேக்கிற்கு சதீஷிற்கு சுஜினியைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆசை நிறைய இருப்பது அப்பட்டமாகப் புரிந்தது. பிடிக்காத விஷயங்கள் பற்றி அவ்வளவாக குழப்பிக் கொள்ளாத, அக்கறை காட்டாத சதீஷின் குணம் விவேக் அறிவான். அப்படிப்பட்டவன் தானாக சுஜினியைப் பற்றி வினவுகிறான் என்றால் நிட்சயமாக, சதீஷிற்கு சுஜினியைப் பிடித்திருப்பதாகக் தானே அர்த்தம் என்று விவேக்கின் மனம் நொடிப் பொழுதில் ஆயிரம் கணக்குகள் இட்டது.
“ஏன் இவ்வளோ அக்கறையா கேட்கற? உனக்குத் தான் அந்தப் பொண்ணை பிடிக்கலையே” என்று தன் மனதின் எண்ணங்களை முழுவதுமாகக் காட்டாமல், அதே சமயம் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் விதமாக விவேக் மொழிந்தான். நண்பனின் கேள்வியில் கொஞ்சம் துணுக்குற்ற சதீஷ், கண்களை குறுக்கி விவேக்கை ஏறிட்ட சதீஷ்,
“நான் எப்படா அந்தப் பொண்ணை பிடிக்கலைன்னு உங்கிட்ட சொன்னேன்? ஏன் அந்த பொண்ணு கிட்ட நீ மட்டும் தான் பேசலாமா… நான்லாம் பேசக்கூடாதா?”என்று மறுகேள்வி கேட்பான் என விவேக் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அப்படியில்ல மச்சி….” என்று எச்சில் மென்று விழுங்கினான். விவேக்கின் சங்கடத்தைக் கண்டு கொஞ்சம் போல் சிரித்த சதீஷ், “டே, விவேக், சும்மா கேட்டேண்டா…ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகற? ஏன் மச்சி லவ் பண்ணறியா?” என்று நேரடியாக விஷயத்தைத் தொட்டான்.
சதீஷை ஏறிட்ட விவேக், விளையாட்டிற்குக் கேட்கிறானா? உண்மையாக வினவுகிறானா என சதீஷின் முகத்தில் கவனத்தைப் பதித்தான். சதீஷ் ஆர்வமாக விவேக்கின் பதிலுக்காக காத்திருப்பது கண்டான். “தெரியலை சதீஷ்” என்று தன் பதில் கூற சதீஷ் இன்னமும் தன் பற்களை அகலவிரித்து சிரித்தான்.
“என்னடா லவ் பண்ணறியான்னு கேட்டா தெரியலைன்னு சொல்லற…ஆமா , இல்லைன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லாம…இதென்ன பதில் தெரியலைன்னு”என்று விவேக்கை சீண்டினான். சதீஷ் சிரிப்புடன் பேசும் போது தான், விவேகிற்கு சதிஷின் மேல் கொண்ட சந்தேகம் முற்றிலும் விலகியது. சதீஷ் ஒருவேளை சுஜினியின் மேல் கரிசனம் கொண்டிருந்தால், தன்னிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாதே என்ற எண்ணம் தோன்றவும் நீண்ட பெருமூச்சை சொரிந்தான். இதையும் சதீஷ் கவனித்துக் கொண்டிருந்தான்.
“என்ன அப்பாடான்னு இவ்வளவு பெரிய மூச்சு….அப்படி என்ன தாண்டா நினைக்கற.. சொல்லித் தொலையேன்…”என்று வழியில் கிடந்த கல் ஒன்றை தட்டிக் கொண்டே நடந்தபடிக்கு சதீஷ் வினவினான். நகரத்திற்கு சற்றே ஒதுக்குப்புறமாக சிறு மலை மீது ஏறி இறங்கியபின் அமைந்திருக்கும் கல்லூரி வளாகத்திற்கு செல்லும் பாதையில் அவ்வளவாக வாகனங்கள் இருக்கவில்லை. மற்ற நண்பர்கள் சில தூரம் முன்னால் நடந்து சென்றிருக்க, இவர்களிருவர் மட்டும் பிந்தங்கி மெல்லமாக நடக்கத் துவங்கினர். நேரம் ஏழைத் தொட்டிருந்த போதும், இன்னமும் இருள் கவியத் தொடங்கவில்லை. நல்ல வெளிச்சமாகவே இருந்தது.
[the_ad id=”6605″]
தூய்மையாக இருந்த பாதையின் இருமருங்கிலும் பச்சை புற்கள் படர்ந்திருந்தன. புற்களைத் தாண்டியதும் சிறிது தூரத்திலேயே நெடிய சைப்ரஸ் மரங்கள் அடர்வாக வளர்ந்திருக்கும் காடுகள் தொடங்கிவிடும். அந்த சிறிய மலையை ஏறி இறங்கியதும், சமதளம் தவங்கும் இடத்தில் ஒரு சிறிய ஓடையும், அதனை அடுத்து, கல்லூரியின் வளாகமும் துவங்கும்.
நீண்ட நேரமாக பதில் கூறாமல், யோசித்தவண்ணமே உடன் நடந்த விவேக், சற்று தூரத்தில் சதீஷ் நின்றுவிட, அவனுடன் சேர்ந்து நடந்து கொண்டே, “எனக்கு அவளை பிடிச்சிருக்கு சதீஷ்…ஆனா லவ்வான்னு தெரியலை. அவளைப் பார்க்கணும், பேசணும், பழகணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு” என்று கொஞ்சம் தயக்கத்துடனும், நிறைய வெட்கத்துடனும் மொழிந்தான். சதீஷ் நண்பனின் பதிலைக் கேட்டு சிரித்தவன், “புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, அந்த மணமகள் தான்” என்று சீக்கி அடித்துக் கொண்டே, நில்லாமல் நடந்தான்.
“டே ஏதாவது சொல்லுடா…ஒன்னுமே சொல்லாம போற”என்று இரண்டடி ஓடி சென்று நண்பனுடன் சேர்ந்து கொண்ட விவேக் வினவ, சதீஷ் மீண்டும் சிரித்தான்.
“இதுல நான் என்னடா சொல்லறது. அட்வைஸ் பண்ணற அளவுக்கு எனக்கு அறிவில்லை மச்சி”
“டே, ஏன் இப்படியெல்லாம் பேசற… நான் சுஜினியை லவ் பண்ணறதுல உனக்கு இஷ்டம் இல்லையா” என்று கண்களில் கேள்வியுடன் தன் நண்பனின் முகம் பார்த்து வினவினான் விவேக்.
“டே, என்ன மச்சி ஆச்சு உனக்கு? சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் பெருசா பார்க்கற…. நான் ஜாலியா தாண்டா பேசறேன். உனக்கு இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு சொல்லற அளவுக்கு எனக்கு தகுதியில்லை விவேக். அதுவுமில்லாம, இதெல்லாம் தனிப்பட்ட விஷயம். யார் முடிவையும் கேட்டு நடக்கற விஷயமில்லை. உனக்கு அவளை பிடிச்சிருக்கு, அவளுக்கும் உன்னை பிடிச்சிருந்தா லவ் பண்ணுங்க, ரொம்ப பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணுங்க… சிம்பிள்….இதுக்கே ஏன் இவ்வளோ டென்ஷனாகற?”
“அதுக்கில்லை சதீஷ், வீட்டில அம்மா என்ன சொல்லுவாங்களோ என்னம்மோன்னு…” என்று விவேக் முடிக்கும் முன்னரே, சதீஷ் கலகலவென்று சிரித்திருந்தான்.
[the_ad id=”6605″]
“தோ பாரு விவேக். இது லவ்…மனசு சம்பந்தப்பட்ட விஷயம்….இதுல உன்னோட முடிவு தான் இறுதியானது. அம்மாக்கு பிடிக்காது, எங்க வீட்டு ஆயாக்கு பிடிக்காதுன்னு யோசிக்கறவன் லவ்லாம் பண்ணவே கூடாது… யாரு எதிர்த்தாலும் உன் காதலை விட்றகூடாது…”என்று சதீஷ் கூறியதைக் கேட்ட விவேக்கின் மனம் கொஞ்சம் குழம்பியது. காதல் என்று உரைத்துமே தன் மனம் வீட்டைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும், தம்பி தங்கைகளைப் பற்றியும் யோசிக்க சென்றுவிட்டதே என கவலை கொண்டான் விவேக்.
“என்ன அப்படியே நின்னுட்ட, இதெல்லாம் சொல்லறதுக்கு எனக்கு என்ன அருகதை இருக்கு? என் லவ்வரே என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டான்னு யோசிக்கறியா?”என்று சதீஷ் சிரிக்காமல் வினவ, விவேக் சங்கடப்பட்டான். ஏனென்றால் உண்மையில் அந்தக் கணம் விவேக்கின் மூளை சதீஷ் சொல்லியதைத் தான் எண்ணிக் கொண்டிருந்தது.
“அப்படியெல்லாம் நான் நினைக்கலைடா சதீஷ்…”என்று வாய் மொழிந்தாலும், கண்கள் உண்மையை பேசியிருந்தன. நல்லவேளையாக சதீஷ் கோபப்படவில்லை. முகத்தின் புன்னகையை மாற்றிக் கொள்ளவும் இல்லை.
“நீ அப்படி நினைச்சாலும் தப்பில்லை டா மச்சி…ஏன்னா சுபா என்னை விட்டுப் போனதுக்குக் காரணம் நான் இல்லை. சுபாக்கு ஸ்டிராங் மைண்ட் கிடையாது. ரொம்ப குழப்பவாதி… மே பி ஒரு விதத்தில அவ என்னை விட்டுப் போனதும் நல்லது தான் .அவ எனக்கு செட் ஆகியிருக்க மாட்டா….ஒரு சின்ன பிரச்சனைன்னாலும் என் உயிரை எடுத்திருப்பா….”என்று கண்களில் சிரிப்பு மின்ன சதீஷ் மொழிந்த பின்னரே விவேக்கிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.