என் காதல் கனா 24
அன்றைய இரவு பீசா பர்கர் என தருவித்து அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து உணவு உண்டனர். அடுத்த தினம் அதிகாலையிலேயே கிளம்பி நியூஜெர்சி செல்ல வேண்டியிருந்ததால் உணவு முடிந்ததும் பெரியவர்கள் இருவரும் உறங்கச் சென்று விட்டிருந்தனர்.
கீழே படுத்து உறங்குவது பெற்றோர்களுக்கு வசதியாக இருக்காது என்று எண்ணிய கிஷோர் இருவரையும் பெட்ரூமில் படுத்துக் கொள்ளும்படியும், பெட்ரூமில் சிறிய மெத்தை விரித்து அங்கேயே சுஜியும் படுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தான்.
ஹாலின் சோபாவில் ஒருவரும் சோபாவின் கீழே சதீஷும் படுத்துக்கொண்டனர். எப்பொழுதும் படுத்ததும் சட்டென உறங்கிவிடும் சுபாவம் கொண்டிருந்த சதீஷ்க்கு, அன்றைக்கு சுத்தமாக உறக்கம் வரவில்லை. கிஷோர் மெல்லிய குறட்டை விட்டு உறங்க துவங்கி இருந்தான்.
சதீஷ் குளிருக்கு இதமாக ஒரு பெரிய கம்பளியை எடுத்து சுற்றிக்கொண்டு பால்கனியில் போடப்பட்டிருந்த மடக்கு நாற்காலியில் அமர்ந்து டீப்பாயின் மேல் கால்களை வைத்து சொகுசாக உட்கார்ந்து கொண்டான். அவனது எண்ணம் முழுக்க வீட்டில் அப்போதைக்கு தங்கியிருந்த அனைவரைப் பற்றியுமே உழன்று கொண்டிருந்தது.
சுஜி பழகும் விதமும் தன் பெற்றோருடன் அவள் சகஜமாக பேசுவதும் என தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது அவள் இந்த வீட்டில் ஒருத்தி என்ற எண்ணம் தானே அனைவருக்கும் தோன்றும் என நினைத்துக் கொண்டிருந்தான். அதேநேரம் விவேக் ஏன் உடன் வரவில்லை என்ற சிறிய மனவருத்தமும் தோன்றத்தான் செய்தது.
விவேக்குடன் வந்திருந்தால் இந்த லகுவான மனநிலை தனக்கு வாய்க்கப் பெறாது என்பதும், சின்னச் சின்ன விஷயங்களுக்கும் “அவன் என்ன நினைப்பானோ? எப்படி எடுத்துக் கொள்வானோ?”என்று கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கும்.
விவேக்கின் மனமாற்றத்தை சதீஷ் அறிந்திருக்கவில்லை. இப்படி ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருக்க, சுஜியும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். சுஜிக்கு ஒரு பக்கம் மனம் நிம்மதியாகவும் அதேநேரம் கொஞ்சம் படபடப்புடன் இருந்தது. சதீஷின் அன்னை அவளை உடன் அழைக்கும் பொழுது முதலில் மறுத்து விட வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் முந்தினம் அவளது அன்னை லட்சுமி உரைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. “அவங்க ரொம்ப நல்ல மாதிரி தெரியுமோ. மாசத்துல ஒரு நாள் நான் போய் அவங்களை பாத்துட்டு தான் வரேன். அந்த வீட்டு ஐயாவுக்கு என்னோட வத்தகுழம்பு ரொம்ப பிடிச்சிருக்கு. அவ்வளவு பிரியமா சாப்பிடுகிறார்.”
“எனக்கும் மாசம் முழுக்க நம்ம வீட்டுக்குள்ளேயே சுத்திக்கிட்டு, வீடு விட்டா கோவில், மார்க்கெட் இதைத் தவிர எனக்கு வேற எதுவுமே தெரியரதில்லை. நமக்கும் மாமாவ தவிர இன்னும் ரெண்டு பேரு தெரிந்திருப்பது அவசியமா தோணித்து. நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வர்றச்சே நமக்குன்னு நாலு பேராவது கூட வந்து நிற்கனும் இல்லையா?
“அதனால அங்க அவங்க வந்து இருக்குறப்போ உன்னால முடிஞ்சா அவங்களுக்கு உதவியா இரு. இங்க நேக்கு பெரிய துணியா மாறிப்போயிட்டா அவா.அத மறந்துடாத” என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக தன் அன்னை லட்சுமி மொழிந்தார்.
அதனாலேயே சதீஷின் அன்னை அவளை உடன் அழைத்த போது, அவர்களுடன் அவ்வளவாக மறுப்பு தெரிவிக்காமல் செல்ல ஒப்புக்கொண்டாள். சதீஷும் விவேக்கும் தான் உடனே ஒப்புக் கொண்டதை நினைத்து என யோசிப்பார்கள் என சில நொடிகள் தோன்றத்தான் செய்தது.
[the_ad id=”6605″]
ஆனால் அதைவிடவும், “ யார் என்ன நெனச்சா என்ன? கூப்பிடுறாங்க நான் போறேன். அவனுக்கும் வரவேண்டாம், இஷ்டம் இல்லைன்னா அவன் வர வேண்டாம்” என விவேக்கின் மறுப்பிற்கு தன் மனதளவில் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
சதீஷ் எந்த விருப்பு வெறுப்புகளும் காட்டாது அமர்ந்திருந்தது போலத்தான் தோன்றியது. ஏனென்றால் சுஜியை வா என வற்புறுத்தி நண்பனின் முன்னால் அவனால் அழைக்க இயலாத சூழ்நிலையில் இருந்திருப்பான் என்பது புரிந்தது. சதீஷ் தன்னை வற்புறுத்தி அழைக்கவில்லையே தவிர விவேக்கிடம் நொடிக்கொருமுறை “ஏன்டா? வாடா.. நீ வாடா” என அழைத்தது சுஜிக்கு சற்றே நெருடலாக இருந்தது.
“அதான் அவன் வான்னு வெத்தலை பாக்கு வைக்கறதுக்கு முன்னாடி நீ மாடு மாதிரி தலையாட்டி சம்மதம் சொல்லிட்டியே.. அப்பறம் வான்னு வான்னு வேற தனியா சொல்லனுமா உன்னை?” என மூளை பதிலளித்துக் கொண்டே தான் இருந்தது. என்ன ஆனாலும் நான் ரெண்டாம் பட்சம் அப்படிங்கறது இவன் காட்டிக்கொண்டே இருக்கிறானே என்ற எண்ணமும் தலை தூக்கியது.
அதனாலேயே அன்றைக்கு முழுக்க விமான நிலையத்தில் சதீஷ் தானாக பேசும் வரையிலும் சுஜி ஒதுக்கமே காட்டினாள். பயணத்தின் போதும் சதீஷிடம் எதுவும் பேச நினைக்கவில்லை. “ ஒருவேளை விவேக் வராம, நான் மட்டும் வந்தது இவனுக்கு நெஜமாவே பிடிக்கலையோ?” என்ற எண்ணமும், “இவனுக்கு என்ன பிடிச்சிருக்கா பிடிக்கலையா?” என்ற குழப்பமும் மேலோங்கியது.
“சரி எது என்ன ஆனாலும் நம்ம முன்னால முடிவெடுத்த மாதிரி நடந்து கொள்வது தான் சரி. படிக்கணும், நல்ல வேலைக்கு போகணும், சதீஷயும் விவேக்கையும் நல்ல நண்பர்கள் அப்படிங்கற அளவில வச்சுக்கணும். ரொம்ப யோசிக்கக்கூடாது” என தீர்மானித்து அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு உறங்கியும் போய்விட்டாள்.
அடுத்த தினம் பிலடெல்பியாவில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் நியுஜெர்சிக்கு. கிஷோரின் காரிலேயே அனைவரும் செல்வதாக ஏற்பாடானது. அதிகாலை எழுந்ததுமே அனைவரும் பரபரப்பாக குளித்து முடித்து தயாராகினர். சதீஷும் கிஷோரும் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை காரில் ஏற்றி முடித்திருந்தனர். தாய் தந்தையர் சுஜி என அனைவரும் வீட்டினுள் தயாராகிக் கொண்டிருந்தனர். சதீஷின் தாய் தான் தொடுத்திருந்த ரோஜாப்பூ செண்டை எடுத்து வந்து அவளது பின்னலை சுற்றி வைத்து அழகு படுத்தினார்.
“உன் கலருக்கு இந்த டார்க் பிங்க் சாரி ரொம்ப அழகா இருக்கு சுஜி.” என அழகாக சேலை உடுத்தி தலையை விரித்து போடாமல் பின்னி அதில் பூச்சூடி இருந்த சுஜிக்கு திருஷ்டி கழித்தார் அந்த அன்னை. அவரது செய்கையை கண்டு சுஜிக்கு கண்களை லேசாக கரித்துக் கொண்டு வந்தது. அத்தோடு அவர் நின்றிருந்தால் அவள் அழுதிருக்க மாட்டாள் தான்.
பத்மாவோ தான் கையில் கொண்டு வந்திருந்த அழகிய சிறு ரூபிகற்கள் பதியப்பட்ட சிறிய நெக்லஸ்ஸை அவள் கழுத்தில் பூட்ட அவ அழுதே விட்டாள். “அம்மா இதெல்லாம் வேண்டாம்..எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு” என சொல்லச் சொல்லவே கண்கள் குளமாகின.
“எதுக்கு அழற இப்போ? பைத்தியமாட்டாம். இதுல என்ன இருக்கு? இந்த சாரிக்கு மேட்சிங்கா இருக்கு அதனால நீ இன்னிக்கி போட்டுக்கோ. அதுவுமில்லாம கிஷோருக்கு பொண்ணு பார்க்க போறோம். மதிப்பா போகவேண்டாமா?” என்றவரிடம் “இதெல்லாம் போட்டால் தான் மனிதனுக்கு மதிப்பா? அப்படி மதிப்பிடுபவர்கள் எப்படி நல்லவர்களாவார்கள்?” என கேட்டுவிடத் தோன்றிய துடுக்குத்தனமான கேள்வியை கண்ணீர் கரைத்திருந்தது.
ஏனோ காலை எழுந்ததிலிருந்தே தன் தாயின் நினைப்பாகவே இருந்தது. அதை உணர்ந்த சதீஷின் அன்னையும், “சரி நாங்க கீழே போறோம். நீ கொஞ்சம் உன்னை அசுவாசப்படுத்திட்டு, ரெண்டு நிமிஷம் கழிச்சு கீழ வா சுஜி. நல்ல விஷயத்துக்கு போறோம் நீ அழுத கண்ணோட வரது சங்கடமா இருக்கும்மா..” என நாசூக்காக மொழிந்த சதீஷின் அன்னை அறையை விட்டு வெளியே சென்றிருந்தார்.
அவர்கள் அறையை விட்டு சென்றதும் சுஜி அந்தக் கட்டிலின் மேல் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கொண்டாள். நீண்ட பெருமூச்சுகளாக எடுத்து தன்னை சமன்படுத்தி கொண்டாள். “சுஜி கொஞ்சம் எமோஷனலா ஆயிட்டா நினைக்கிறேன். நீ போய் பார்த்து கூட்டிட்டு வாடா” என காரினுள் அமர்ந்திருந்த சதீஷிடம் மொழிந்தார்.
[the_ad id=”6605″]
“ஏன் என்னாச்சு? ஏதாவது சொல்லிட்டீங்களா?” என படபடத்தான் சதீஷ்.
“நான் என்னடா சொல்ல போறேன். சேலைக்கு மேட்சிங்கா என்னோட ரூபி நெக்லெஸ் நல்லா இருக்குமேன்னு அவ கழுத்துல போட்டு விட்டேன். அவளுக்கு கண்ணு கலங்கிடுச்சு பாவம்.. அவ அம்மாவை நெனச்சு” என்கிறாற்.
சுஜி அழுகிறாள் எனக் கேள்வியுற்றதும் உள்ளே செல்ல சதீஷிற்கு சங்கடமாக இருந்தது. அன்று பார்க்கில் அவள் கலங்கிய கண்களை கண்டதும் தன் மனதின் ஆசைகள் எப்படி நிலையில்லாமல் ஓடித் தவித்தன என்பதை மனதில் நினைத்துக் கொண்டான். “அன்னைக்கு அத்தனை பேர் இருந்த பார்க்கில அவ கண்ணு கலங்கினப்போ ஒரு நிமிஷம் எல்லாமே மறந்து போய் நின்னுட்டேன். இப்போ ரூம்ல யாரும் இல்லாம இருக்கற இடத்தில.. உஹூம்.. இது நல்லதுக்கு இல்லடா சத்தீ…” என மனதினுள் சொல்லிக் கொண்டான்.
“நீங்களே போய் கூட்டிட்டு வாங்க. நான் எப்படி போய் சமாதானப்படுத்தறது?” என அன்னையையே செல்லும் படிக்கு பணிந்தான்.
“அப்படி இல்லடா. என்ன பாத்தா திரும்பியும் ரொம்ப பீல் பண்ணத்தான் செய்வா. நீ போய் விளையாட்டா கமெடியா ஏதாவது பேசி சகஜமாகி கூட்டிட்டு வருவ” என பதிலுரைத்தார்.
“ நான் இப்போ மேல போனா காமடி சீன் இல்லை, ரொமாண்டிக் சீனாகிடும். அப்பறம் கிஷோர் கல்யாணத்துக்கு முன்னாடியே, என் கல்யாணத்தை நடந்த வேண்டியிருக்கும்.. இது புரியாம இந்த அம்மா வேற” என நினைத்தான் சதீஷ்.
முந்தைய தினம் முழுவதுமாக சுஜி தன்னிடம் எதுவுமே பேசாமல் அமர்ந்து விட்டிருக்க, இப்பொழுது தானே சென்று அவளிடம் என்ன சமாதானம் சொல்வது? “டே கிஷோர் நீ போ.. உன் கல்யாணத்துக்கு தான பொண்ணு பார்க்க போறோம். சோ நீ தான் போகணும்..” என தன் அண்ணனை ஏவி விட்டான் சதீஷ்.
“ என்னடா இது? சரியான அழுகினி ஆட்டமா இருக்கு! நீயாவது அவளுக்கு பிரெண்ட். நான் போய் என்னடா பேசி சமாதானப் படுத்துவேன்.. அதெல்லாம் எனக்கு பழக்கமில்லை..”
“பழகிக்கோடா.. அதான் கல்யாணம் ஆகப்போகுதில்ல.. யூஸ் ஆகும்” என ஆளாளுக்கு மாற்றி மாற்றி பேசிக் கொண்டே அவ்விடத்திலேயே நின்றிருக்க அதற்குள் தன்னை முழுவதுமாக சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சுஜி அந்த அப்பார்ட்மெண்டில் இருந்து வெளிப்பட்டாள்.
காலை சூரியன் அவள் முகத்தில் பட்டு ஜொலித்தது. நாற்பதடி தூரத்தில் நல்ல அடர் பிங்க் நிற புடவையும் அதற்கு தோதாக தங்க நிற ரவிக்கையும் கழுத்தில் தன் தாய் அணிவித்த மெல்லிய ருபி நெக்லஸும் என அபார்ட்மெண்ட் படியே ஏதோ தேவலோகம் போலவும், அங்கிருந்து இறங்கி வந்த பெண் போல சின்னச் சிரிப்புடன் நடந்தாள்.
காரில் அமர்ந்தபடி அவள் நடந்து வருவதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே ஒரு நிமிடம் சுஜியின் அமைதியான அழகில் மயங்கித் தான் போயிருந்தனர். சதீஷ் கண்ணிமைக்க கூட மறந்திருந்தான். சுற்றிலும் தன் தாய் தந்தை தமையன் என இருக்கிறார்களே என்பது கூட கவனத்தில் பதியவில்லை.
சதீஷின் தந்தையோ நிலைமை தெரியாமல், “இந்த பொண்ணு சேலை ரொம்ப மங்களகரமா லட்சணமா இருக்கா இல்ல பத்மா” என தன் மனைவியிடம் சிலாகித்துக் கொண்டிருந்தார். “ஏண்டா ஒரு பொண்ணை ஒரு குடும்பமா சேர்ந்தாடா சைட் அடிப்பீங்க… பக்கத்துல வந்துட்டா. கொஞ்சம் அமைதியா டீசெண்டா இருங்க எல்லாரும்” என கிஷோர் காரில் அமர்ந்த வண்ணம் சத்தமாக் கூறினான்.
காரின் அருகில் வந்த சுஜி “ஹாய்” என பொதுவாக கையசைக்க, எவருமே பதில் சொல்லவில்லை. நிலைமையை சற்றே சகஜமாக்க எண்ணிய கிசோர், கதவைத் திறந்து விட்டவன், “யு லுக் சோ ப்ரெட்டி சுஜி. இந்த சாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு” என சிரிப்புடன் தெரிவித்தான்.
சுஜி ஆமோதிப்பாக தலையை மட்டும் அசைத்து ஒரு மென் சிரிப்பை உதிர்த்தாள். சுஜி ஏறியவுடன் கிஷோர் கதவுகளை அடைத்து டிரைவர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். முன்னிருக்கையில் தமையனின் அருகில் அமர்ந்திருந்த சதீஷ் சுஜியிடம் எதுவுமே பேசவில்லை.
அவன் பேசவில்லை என்ற போதும் அவனது கண்கள் அமோதிப்பாய் அவளிடம் நிறைய பேசி இருந்தன. முன்னிருக்கையில் பக்கவாட்டு ரியர் வியூ மிரர் வழியாக சுஜியின் முகத்தில் மட்டுமே அவனது கண்கள் பதிந்திருந்தன. சுஜி ஒரு நிமிடம் கண்ணாடியைப் பார்ப்பதும், சதீஷ் பார்க்கிறான் என தெரிந்ததும் வெளியே ஜன்னலில் வேடிக்கை பார்ப்பதும் திரும்ப அவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறானா என கண்ணாடியை பார்ப்பதுமாக பயணத்தை தொடர்ந்தாள்.
சதீஷிடம் தனக்கு உண்டான ஈர்ப்பு சுஜிக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. “இந்த அட்ராக்ஷன், இந்த ஈர்ப்பு இதுவரை யார்கிட்டயும் எனக்கு வந்ததில்லை. நான் உன்னை காதலிக்கறேனா சதீஷ்? இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறது அவளோ புடிச்சிருக்கு எனக்கு. அப்போ நீயும் என்னை காதலிக்கறியா சதீஷ்?” என விடை தெரிந்த கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தாள்.
பிலடெல்பியாவில் இருந்து நியூஜெர்சி செல்லும் வரையிலும் இந்த பார்வை பரிமாற்றங்கள் நீண்டு கொண்டே இருந்தன. சதீஷின் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. அப்போதைய சூழலில் தன் நண்பன் தன் நட்பு என எதுவுமே முதலிடம் பிடிக்கவில்லை.
நியூஜெர்சியில் திருமணப் பெண்ணின் வீட்டின் வாயிலில் சென்று இறங்கும் வரையிலும் மனம் ஒரு நிலை இல்லாமல் தவித்துக் கொண்டே இருந்தது. “அவளா வந்து எங்கிட்ட பேசினா. அவகிட்ட அப்படி எதுவும் இல்ல. நாம வெறும் பிரண்ட்ஸ் அப்படின்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சாச்சு.”
“ எனக்கு என் நண்பன் தான் முக்கியம். அவனுக்கு அப்புறம் தான் நீ அப்படின்னு சீன் போட்டாச்சு. இப்ப போய் இவளை எப்படி பாக்கறது சரியில்ல டா மடையா. இந்தப் பார்வை அவ மனசுல தப்பான எண்ணங்களை விதைக்கும். ஏற்கனவே இருக்கிற எண்ணங்களை பெருசா வளர வைக்கும். சதீஷ்டா கண்ட்ரோல்..பார்க்காத” என தன் மனதை ஒருநிலை படுத்த முயன்று முயன்று தோற்றுக் கொண்டே இருந்தான் சதீஷ்.
“இன்னைக்கு இந்த நிமிஷம் விவேக் என் கூட இல்லை. இன்னைக்கு ஒருநாள் சைட் அடிச்சுகறனேடா ப்ளீஸ். என்னால பாக்காம இருக்க முடியல. மன்னிச்சிடு விவேக்” என மானசீகமாக தன் நண்பனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
மடத்தனமான அவனது செய்கை நினைத்தால் அவனுக்கு சிரிப்பாக இருந்தது. “விவேக்கும் சுஜியும் லவ்வர்ஸ் கிடையாது. கல்யாணம் ஆனவங்க கிடையாது. அவங்க ஒரு couple கிடையாது. சொல்லப்போனால் அந்த பொண்ணு வேற என்னதான் புடிச்சிருக்குன்னு சொல்லுது. அப்ப நான் அவளை திரும்பி பார்க்கிறது தப்பில்லை தானே” என தன் செய்கைகளுக்கு தானே அர்த்தம் கற்பித்துக் கொண்டு தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயற்சிதான்.
நல்ல வேளையாக மணப்பெண்ணின் வீட்டை அடைந்திருந்தனர். மணப் பெண்ணின் வீட்டார் வாசல் வரை வந்து வரவேற்க தொடங்கியிருந்தனர். அனைவரும் காரில் இருந்து இறங்கி கையுடன் கொண்டு சென்றிருந்த பழத்தட்டுகள், பூமாலை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றனர்.
[the_ad id=”6605″]
வழக்கமான பெண் பார்க்கும் படலம் போல டிவியில் சினிமாக்களில் காட்டுவது போல எல்லாம் ஆர்ப்பாட்டமாக எதுவும் நடக்கவில்லை. வாசல்வரை பெற்றோருடன் வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் மணப்பெண் நிஷா. இன்னமும் சொல்லப்போனால் மணப்பெண்ணை காட்டிலும் சுஜி தான் சற்றே தூக்கலாக பட்டுப் புடவை நகை என அணிந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது சுஜிக்கு.
“கல்யாண பொண்ணை சிம்பிளா இருக்கா! நான் எதுக்கு இப்படி பட்டு சாரி செயினை போட்டுட்டு இருக்கேன் “என சற்றே சுஜி சங்கடப்பட்டு தான் போனாள். ஏனென்றால் நிஷா ஒரு அழகிய சில்க் காட்டன் புடவை மட்டுமே அணிந்திருந்தாள். தலைக்கு குளித்து தலையை ஒரு சிறிய கேட்ச் சொருகி இருந்தாள்.
சிறிய அளவிலான தோடுகள் கண்ணுக்கே தெரியாத ஒரு மெல்லிய சங்கிலியில் கோர்க்கப்பட்ட ஒற்றை வைரக்கல் டாலர். அவ்வளவே சுஜிக்கு தான் பட்டிக் காட்டுத்தனமாக பட்டுப்புடவை பின்னல் ஜடை அதை சுற்றி ரோஜா பூச்செண்டு என அதீத ஒப்பனையில் இருப்பது போலவே தோற்றம் அளித்தது.
நல்லவேளையாக அதற்குள் அனைவரும் விருந்து உபசாரங்களில் ஈடுபட்டிருக்க ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சுஜியை சதீஷின் அன்னை “குடும்ப நண்பரோட பொண்ணு” என்று அறிமுகப்படுத்தினார்.
நிஷா நல்ல மாதிரியாக தான் தெரிந்தாள். அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிரித்தாள் இயல்பாக பேசினாள். சிறிது நேரத்தில் சுஜியை கைப்பற்றீ அழைத்து, “ என் கூட வந்து உட்காருங்க? டெல் மீ அபவுட் யு” என சொல்லி உரிமையாக அழைத்துச் சென்றாள்.
அத்தோடு நில்லாமல் “யு லுக் ப்ரிடி. முக்கியமா இந்த பூ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என சிரிப்புடன் மொழிந்தாள். இதைக் கேட்ட சுஜி, இதுதான் சாக்கு என்று “உங்க வருங்கால மாமியாரோட கைவண்ணம் இது. உங்களுக்கும் கொண்டு வந்திருக்காங்க” எனக் கூறியவள் நேரே சதீஷின் அன்னையிடம் சென்று கூறினாள்.
சதீஷின் அன்னைக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. “நிஷாவுக்கு இந்த பூச்செண்டு ரொம்ப பிடிச்சிருக்காம் ஆண்ட்டி” என கூறவும் சதீஷின் அன்னை தான் தொடுத்திருந்த பூச்செண்டு எடுத்து நிஷாவின் கையில் கொடுத்தார்.
“உனக்கு ரெட் கலர் பிடிக்கும்னு கிஷோர் சொன்னான். இந்தாம்மா வச்சுக்கோ..” என நீட்டினார். நிஷா பூச்செண்டை வாங்கிக் கொண்டவள், “வச்சு விடுங்க” என அவளிடமே இரு ஹேர்பிங்களை நீட்டினாள்.
“எனக்கு ரெட் கலர் பிடிக்கும் ஆண்ட்டி. ஆனா பூவில பேஸ்டில் கலர் பூ பிடிக்கும். நெக்ஸ்ட் டைம் மைல்ட் பிங்க், ஐவரி, இந்த மாதிரி கலர்ல கட்டி குடுங்க” என சொல்லியவளை பத்மாவிற்கு பிடித்துப் போனது.
“ரொம்ப அழகா இருக்கு ஆன்ட்டி. ரொம்ப பொறுமையா எனக்காக கட்டிக்கொண்டு வந்ததற்கு தேங்க்ஸ் ஆன்ட்டி” என மனப்பூர்வமாக பதிலளித்தாள். தன் குணத்தையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தனக்கு இது பிடிக்கும் என சொல்லி, தனக்காக கட்டிக் கொண்டு வந்திருந்தவர்களின் உழைப்பையும் பாராட்டிய மனப்பாங்கு பிடித்தது அனைவருக்குமே.
வந்திருந்தவர்கள் அவர்களது உறவினர்களை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். பெரிதாக கூட்டம் என்று இல்லாமல் அவர்கள் பக்கத்தில் ஒரு ஐந்து பத்து பேர் வந்திருந்தனர்.
“சோ, டெல் மீ அபவுட் யு. என்ன பண்ணறீங்க நீங்க?” என சகஜமாகப் பேசிக் கொண்டே சுஜியை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள் நிஷா. அங்கே ஏற்கனவே இரு பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
“இது என்னோட neighbourஸ். இவங்க சுபாஷினி.. இவங்க மதுமிதா.” என்றவள்,
“இவங்க கிஷோரோட ஃபேமிலி பிரெண்ட் , சுஜினி” என பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
சுபாஷினி என்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணை சற்றே கூர்மையுடன் பார்த்தாள் சுஜி.