என் காதல் கனா 27
மாலை தேநீர் அருந்திவிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். சதீஷ் வீட்டினுள் இருக்கும் வரையிலும் சுபாஷினி அந்த இடத்திற்கு அருகில் கூட வரவில்லை.
ஆனால் வேண்டுமென்றே போகும் பொழுது சுஜி நேராக மதுமிதாவிடம் சென்றவள், மதுவை சற்றே தனியே அழைத்தாள். “மது உங்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும். ஆக்ட்சுவலி நானும் சதீஷும் லவ்வர்ஸ் இல்ல மது”
“என்ன சொல்லறீங்க? இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி..”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் சொன்னது பொய். சுபாஷினியோட வாயை அடைக்கத் தான் அப்படி சொன்னேன். பட், வி லைக் ஈச் அதர். ஆஸாஃப் நவ் வீ ஆர் குட் ஃப்ரெண்ட்ஸ். நீங்களும் சுபாவும் பேசினதை முதல்ல இருந்தே நான் கேட்டுட்டு தான் இருந்தேன்.”
“சுபா சதீஷை அசிக்கப்படுத்தினது கூட எனக்கு கோபம் வரலை, ஆனா சம்பந்தமில்லாம நிஷாவோட கல்யாணத்தை நிறுத்த யோசிச்சது கொஞ்சம் டூமச்னு தோணிச்சு அதனால தான் சுபாவை கொஞ்சம் மிரட்டிப் பார்க்க நினைச்சேன். தன்னோட பொய்களை யாரும் நம்பலைங்கறப்போ இந்த மாதிரி அடுத்து யோசிக்கத் தோணாது இல்லையா மது?” என ஆதவாக வினவ, மதுமிதா சுஜியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“பரவாயில்லை சுஜி. எனக்குப் புரியுது. நீங்க என்ன மனநிலையில அதை சொல்லியிருபீங்கன்னு. நான் சுபாக்கு மெதுவா புரிய வச்சுக்கறேன். யு கீப் இன் டச். மேரேஜ்ல பார்க்கலாம் திரும்ப” என சுஜியின் குழப்பத்தைப் போக்கி சிரிப்புடன் விடையளித்தாள் மதுமிதா.
“என்னவாம் அவளுக்கு. உங்கிட்ட தனியா என்னமோ சொல்லிட்டுப் போறா?” என சற்றே தொலைவில் நின்றிருந்த சுபா, சுஜி அவ்விடம்விட்டு நீங்கியதுமே படபடப்புடன் வினவினாள்.
“அவ ஃபோன் நம்பர் கேட்டேன். குடுத்துட்டுப் போறா. நாளைக்கு எதுக்காவது உபயோகமாகும்ல” என பூடமாக பதிலளித்தாள் பயமுறுத்தி மட்டுமே சிலருக்கு சில விஷயங்களை புரியவைக்க இயலும் என்பதை உணர்ந்திருந்த மதுமிதா.
சுபாஷினியின் முகத்தில் ஈயாடவில்லை. எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே அன்றைய தினம் முழுக்க கழித்திருந்தாள் அவள். தன் வரையிலும் சதீஷை கெட்டவனாகவே காட்டிக்கொண்டு, தான் மிகவும் உத்தமி என தோழிகளிடம் சொல்லிக் கொண்டு வலம் வந்தவளுக்கு, இப்படி ஒரே நாளில் தான் கட்டிய கோட்டை சடசடவென சரிந்துவிடும் என்று தெரியாமல் போயிருந்தது.
சதீஷின் குடும்பம் திரும்ப நியூஜெர்சியில் இருந்து பிலடெல்பியா நோக்கி பயணம் ஆயினது. காரில் அமர்ந்ததும், சதீஷோ சுஜியை பார்ப்பதும், அங்கே இங்கே வேடிக்கை பார்ப்பதுமாக தன் பயணத்தைத் தொடர இம்முறை கிஷோரின் பார்வை இவற்றையெல்லாம் மனதில் உள்வாங்கிக் கொண்டது.
அதற்கு சுஜியின் மறுமொழிகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தது கிஷோரின் கண்கள். இது எதுவும் அறியாத சதீஷ், சுஜியுடன் கழித்த இனிமையான இந்த ஒரு நாளையும், அவளது காதுகளில் ரகசியம் பேசிய அந்த சிவ நிற ஜிமிக்கியையும், அவன் கைகள் அவள் கன்னத்தை தட்டிச் சென்ற இனிமையையும் மனதிற்குள் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக பயணத்தைத் தொடர்ந்தான்.
[the_ad id=”6605″]
அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளை சதீஷின் அன்னையும் தந்தையும் பேசிக்கொண்டே வந்தனர். கிஷோரின் வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். அன்றைய இரவு விமானத்தில் திரும்ப சதீஷும் சுஜியும் மட்டும் ஆரிகன் செல்வதாக ஏற்பாடு. “ இன்னைக்கு நைட்டு போதுமாடா? இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே?” என சதீஷிடமும் சுஜியிடமும் மாறி மாறிக் கேட்டனர்..
அடுத்த தினம் நிச்சயமாக கல்லூரி செல்ல வேண்டி இருந்தது சதீஷிற்கு. அதேபோன்று சுஜிக்கு இவர்களுடன் பொழுதை கழிக்க ஆசை இருந்தபோதும் அவளது உணவகத்தில் அப்போதைக்கு அவள் தேவைப்பட்டாள். அன்றைய இரவு 11 மணி வாக்கில் இருவருக்கும் பிலடெல்பியாவில் இருந்து ஓரிகன் மாகாணம் செல்ல விமானம் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பட்டு சேலையை மாற்றிக்கொண்டு சாதாரண உடையை அணிந்து வர எத்தனித்த சுஜி பெட் ரூம் சென்று கதவை தாளிட்டாள். ஒரு சில நிமிடம் கண்ணாடி முன் அமர்ந்தவள், கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து மெல்லச் சிரித்தாள். அப்போதும் அவளது ஜிமிக்கு அழகாய் ஆடியது. “அழகு ஜிமிக்கி பேபி” என சதீஷி சொல்லிச் சென்ற வார்த்தைகளும், அவள் முகத்தை திருப்பிக் கொள்ளும் சமயம், அவனது கைவிரல்கள் அவள் கன்னத்தில் பட்ட இடமும் லேசாக இப்போதும் எரிவது போலத் தோன்றியது.
மெல்லமாக சிரித்துக்கொண்டாள். மனதின் ஒரு மூலையில் தான் இப்போது சதீஷ் மனைவி என்னும் ஸ்தானம் வகிப்பது போன்றும், வெளியே அமர்ந்திருப்பவர்கள் தனது உறவினர் என்பது போன்றும் கற்பனைக் குதிரை தடதடத்தது. மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒன்றுசேர சுஜியின் முகம் பூரிப்பாக காணப்பட்டது.
அவளது கவனத்தை கைபேசி சிணுங்கல் கலைத்தது. அதிலும் சதீஷின் எண் மிளிர சற்றே குழப்பத்துடன் கைபேசியை எடுத்தாள்.
“வந்து.. எங்க இருக்க?” என கம்மிய குரலில் பேசியவன், எடுத்த எடுப்பிலேயே நிறைய தடுமாற்றத்துடன் துவங்கியிருந்தான். என்ன சம்பந்தம் இல்லாம எங்க இருக்கேன்னு கேட்கிறான். இப்போ எல்லாத்துக்கும் முன்னாடி சொல்லிட்டுத்தான் டிரஸ் மாத்த ரூமுக்கு வந்தேன் என மனதில் நினைத்தவள், “இங்கதான் இருக்கேன். வீட்ல. இப்பதானே என்ன நீ பார்த்த?” ஏதாவது ப்ராப்ளமா?” என சற்றே பதட்டத்துடன் வினவினாள்.
“அப்படியெல்லாம் எதுவுமில்லை. அதுவந்து, அதாவது எனக்கு எப்படி சொல்லணும்? ஐ மீன், சுஜி, டிரஸ் மாத்திட்டியா?” என சம்பந்தமில்லாமல் வினவினான். அவனது தடுமாற்றமும் அவனது குழப்பமான வார்த்தைகளும் சுஜிக்கு சிரிப்பை வரவழைத்தன. “இன்னும் இல்ல ஏன்? என்ன விஷயம் சதீஷ்? சொல்லி முடி” என்றாள்.
“இல்ல, இந்த சாரி உனக்கு நல்லா இருக்கு. ரெட் ஜிமிக்கி ரொம்ப அழகா இருந்துச்சு”
“ஆமா, காலையிலேயே சொல்லிட்டியே? அதுக்கென்ன இப்போ? என்ன சதீஷ் உன் பிரச்சனை என்னன்னு வாய தொறந்து சொன்னாதானே தெரியும் வெளிய வரட்டுமா” என்றாள் சிரிப்புடன்.
“இல்ல.. இல்ல.. இல்ல.. வேண்டாம். உனக்கு நான் டெக்ஸ்ட் மெசேஜ் பண்றேனே” என கூறி அடுத்த நொடி கைபேசியை அணைத்திருந்தான். சுஜியும் தனது வாட்ஸ்அப்பை திறந்தாள். மறுமுனையில் சதீஷ் ஆன்லைனில் இருந்தது தெரிந்தது. ஒவ்வொரு நொடி ஏதோ எழுதுவதும் பின்பு அதை அழிப்பதும், திரும்ப எழுதுவதுமாக இரண்டு மூன்று நிமிடங்களைக் கடத்தினான்.
பின்பு “இந்த ட்ரஸ் மாத்தாம, இந்த பட்டுசேலை, ஜிமிக்கியோடவே என் கூட பிளைட்ல வர முடியுமா?” என இரு கேள்வி குறிகளுடன் ஒரு செய்தி அனுப்பியிருந்தான். “ஒ.கே” என்று மட்டும் பதிலனுப்பினாள் சுஜி.
சதீஷின் செய்தியை படித்த சுஜிக்கு அங்கேயே தலை கிறுகிறுத்துப் போனது. துள்ளிக்குதித்து குறையாக அந்த அறையினுள் இங்குமங்கும் நடந்தவள், சதீஷின் செய்தியை ஒரு பத்து முறையாவது திரும்ப திரும்ப வாசித்துப் பார்த்திருந்தாள்.
“உராங்குட்டான்.. என்னடா இன்னைக்கு இப்படி நடந்துக்கற? செம ஃபீல் இது. நான் உன் வைஃப் மாதிரியும், இது நம்மளோட வீடு, நம்ம சொந்தகாரங்க மாதிரியும் தோணுது. உரிமையா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு குடும்பத்துல நான் இருக்கேன் அப்படிங்கற உணர்ச்சி..” என நினைக்க நினைக்க சசியின் கண்கள் ஆனந்தத்தில் லேசாக கலங்கிப் போயின.
ஆனால் அவளது கவலையையும் மீறி மனம் முழுக்க ஆயிரம் பூக்களை கொண்டு பூமாரி பொழிந்தது போல சில்லென்று இருந்தது. மழைச் சாரல் முகத்தில் தெறிக்க, சில்லென காற்று மோதும் வேளையில், முடிக்கற்றை காற்றில் பறக்க, நம்மை மறந்து கொட்டும் மழையை வேடிக்கைப் பார்க்கும் போது எங்கோ தூரத்தில் கேட்டிடும் இளையராஜா பாடல்கள் போல் மனதில் அப்படி ஒரு திருப்தி சுஜிக்கு ஏற்ப்பட்டிருந்தது.
[the_ad id=”6605″]
உடனே வேக வேகமாக தனது உடமைகளை மட்டும் எடுத்து பெட்டியில் அடக்கிக் கொண்டவள் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஹாலுக்கு வந்திருந்தாள். இன்னமும் அவள் உடை மாற்றாமல் வந்து நின்ற கோலத்தை கண்டு சதீஷ்க்கு கண்கள் விரிந்தன. வார்த்தைகளால் சொல்ல இயலாத மகிழ்ச்சியை அவனது கண்கள் உணர்த்தியிருந்தன.
ஆனால் அதேநேரம் சதீஷின் அன்னையோ, “ ஐயோ என்னம்மா நீ இன்னும் டிரஸ் மாத்தலையா? ஃப்ளைட்டுக்கு டைமாச்சு பாரு ..போய் டிரஸ் மாத்து போ” என உரிமையாக கடிந்துகொண்டார்.
சுஜினி என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் விழித்தாள். “ இல்ல, ஆண்டி நான் இந்த ட்ரெஸோடவே ஃப்ளைட்ல போய்கிறேனே”
“என்னது பட்டு சாரியோட 6 மணிநேரம் பிளைட்ல உனக்கு அனீஸியா இருக்கும்மா. குளிர் வேற. ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் போட்டுட்டு நல்ல ஸ்வெட்டரா போட்டுட்டு வா சுஜி” என திரும்ப வலியுறுத்தினார். சுஜியும் சற்று தடுமாறித்தான் போனாள். சதீஷ் ஏதேனும் சொல்லி காப்பாற்றுவானோ என அவன் பக்கம் நோக்கமே செய்வதறியாது அன்னையின் முகத்தை பார்த்த வண்ணம் நின்றான்.
ஆனால் அவன் ஸ்தம்பித்துப் போனதென்னவோ ஒரு நொடிதான். அதற்குள் சுதாரித்தான். “ அவங்க அம்மாட்ட தன்னோட அலங்காரம், இந்த சேலை, ஜிமிக்கி எல்லாம் காட்டணும்னு ஆசையா இருக்குமோ என்னவோ? அங்க போய் வீடியோ கால் பேசுவாளா இருக்கும்.” என அன்னையின் காதுகளில் விழும்படிக்கு தெளிவாகவே முனுமுனுத்தான்.
“ ஓ.. அப்போ இங்கையே வீடியோ கால் பேசிட்டு, டிரஸ் மாத்திட்டு ஃப்ரீயா கிளம்பலாமே சுஜி” என மகனின் கூற்றைக் கேட்ட அன்னை திரும்ப சுஜியிடம் வினவினார்.
“இல்லமா இப்போ மணி இங்க 7, அங்க காலையில 10 மணியிருக்கும். அம்மா வேலையா இருப்பாங்க. இந்த நேரத்துல எதுக்கு அம்மாவை டிஸ்டர்ப் பண்ணனும். ஈவினிங்க் ஃப்ரீயா பேசலாம் கொஞ்ச நேரம்னு.” என சுஜி இழுக்க, பத்மா அவள் அருகில் வந்தார்.
“இதுக்கு தான் பொன் குழந்தைகள் வேணூங்கறது. எவளோ தொலைவில இருந்தும் தன் அம்மாவுக்காக எவளோ யோசிக்கறா?” என்ற பத்மா சுஜியின் கன்னத்தை செல்லமாக தட்டி சென்றார். சுஜி அப்பாடா என பெருமூச்சு விட்டாள். அவள் வரையில் சேலை உடுத்தியதுமே அன்னைக்கு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பியிருந்தாள்.
பின்னர் மதியம் ஒரு மூறை வீடியோ கால் அழைத்து பேசியும் முடித்திருந்தாள். ஆன போதும் சதீஷின் பெற்றோரிடம் சொல்லிய பொய் சற்றே உருத்தலாக இருந்தது. சுஜியின் பேச்சைக் கேட்ட சதீஷ் கண்களை பெரிதாக உருட்டி “தேங்க்ஸ்” என சத்தம் வராமல் உதட்டசைத்தான்.
இந்த சம்பாஷனைகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த கிஷோர் தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான். “சரியான கேடிடா சதீஷ் நீ. எப்படித்தான் பொண்ணுகளை கரெக்ட் பண்ணுவியோ? உன் அண்ணனா பிறந்து என்ன பிரயோஜனம்? உனக்கு இருக்கிற திறமையில 10 பர்செண்ட் கூட எனக்கு இல்லையேடா?” என மனதில் வேடிக்கையாக நினைத்துக் கொண்டவன் இருவரையும் விமான நிலையத்தில் கொண்டு சேர்க்க ஆயத்தங்கள் செய்தான்.
“அம்மா கிஷோர் தான் எங்கள ட்ராப் பண்ண வரானேம்மா.. எதுக்கு இந்த ராத்திரியில் கூட வரீங்க?” என சதீஷ் தன் பெற்றோரை விமான நிலையம் வர வேண்டாமென எவ்வளவு தடுக்க முயன்ற பொழுதும் இருவரும் பிடிவாதமாக வந்தனர்.
கனமான ஒரு கோட்டைப் போட்டுக் கொண்டு குளிருக்கு இதமாக சற்றே கதகதப்பாக நின்றிருந்த சுஜியும் அவளருகில் திறந்துவிடப்பட்ட ப்ரவுன் நிற லெதர் கொட்டும் அலட்சியமாக மடித்து விடப்பட்டிருந்த சட்டையுடன், கலைந்திருந்த தலைமுடியும் இரண்டு நாட்கள் சவரம் செய்யாத தாடி என சதீஷ் உடன் நின்றிருந்தது பார்க்க கிஷோருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
இருவரும் விடைபெற்றுக் கொண்டு விமான நிலையம் உள்ளே செல்ல சதீஹின் தாய் காத்திருந்தது போல, “ரெண்டு பேரும் பார்க்க ரொம்ப பாந்தமா, பொருத்தமா இருக்கு. இல்லங்க. படிப்பு முடிஞ்சதும் லக்ஷிமியம்மாகிட்ட பேசிப் பார்க்கணும் இதைப் பத்தி” என தன் கணவரின் காதல் மட்டும் கேட்கும்படியாக மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.
பெற்றோர் இருவருக்கும் நடுவில் நின்றிருந்த கிஷோருக்கு அன்னையின் பேச்சு தெளிவாக காதில் விழுந்திருந்தது. இதுதான் சமயமென அருகில் வந்தவன், “அதெல்லாம் நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க சதீஷ். உங்க சின்னவன் இதுல எல்லாம் ரொம்ப தெளிவு. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க”
“டேய் என்னடா சொல்ற? நிஜம்மாவா?”
“ஆமாம்மா. இன்னைக்கு சுஜி நிஷாவோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இதை பத்தி சொல்லிகிட்டிருந்தா. அத நிஷாவும் நானும் வாக் போயிட்டு வர்றப்போ கேட்டோம்.”
“நீயா ஏதாவது கேட்டுட்டு உளறாத? அவன் இப்போ தானே அந்த லவ் ப்ரேக்கப்பில இருந்து வெளிய வந்திருக்கான்.. அதுக்குள்ள எப்படி?”
“ம்மா..நீங்க நம்பினா நம்புங்க..ஆனா சுஜி தன் வாயால நிஷாவோட ஃப்ரெண்ட்ஸ் அவளும் சதீஷும் லவ் பண்றதா சொன்னா. என் காதுபடவே நான் கேட்டேன். நிஷாவும் சாட்சி” என சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தான்.
“அப்போ நான் இன்னைக்கே இலட்சுமியம்மாகிட்ட இதை பத்தி பேசுறேன்” என பரபரப்பாக பேசிய பத்மாவை அவனது தந்தை சற்றே மட்டுப்படுத்தினார்.
“பார்ப்போம் பத்மா. எடுத்தோம் கவிழ்த்தோம்னு நீ எதுவும் பேச வேண்டாம் இப்போதைக்கு. மொதல்ல கிஷோருக்கு நல்லபடியா நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகட்டும். முதல்ல கிஷோர் கல்யாணத்தை முடிப்போம்.” என்றவரை நன்றியுடன் நோக்கினான் கிஷோர்.
“இவர் ஒருத்தருக்காவது என் ஃபீலிங்க்ஸ் புரியுதே… தேங்கியு டாடி” என மானசீகமாக தன் தந்தையிடம் சொல்லிக் கொண்டான். பரந்தாமன் மேலும் தொடர்ந்தார். “ நாம சென்னை போய் நேர்ல இதைப்பத்தி பேசிக்கலாம். இதெல்லாம் போன்ல பேசற விஷயம் கிடையாது. புரியுதா” என திட்டவட்டமாக தன் மனைவிக்கு சொல்லிவிட சதீஷின் அன்னை சற்றே முகம் வாடி போன போதும் தன் இரு மகன்களுக்கும் வெகு சீக்கிரத்தில் திருமணமாகப் போவதை எண்ணி மகிழ்ச்சியாகவே காணப்பட்டார்.
சதீஷின் அன்னைக்கும் தந்தைக்கும் முகத்தில் அவ்வளவு பூரிப்பாக இருந்தது. “ஏம்மா லவ் பண்ணறான்னு சொல்லரேன். இதான் நீங்க குடுக்கற ரியாக்ஷனா? சீரியல் மாமியார் மாதிரி ஏ…ஊஊஊ.னுலாம் கத்த மாட்டியா? கடைசிக்கு ரெண்டு சொட்டு கண்ணீராவது விட்டு அழுக மாட்டியா” என வண்டியை ஓட்டியபடிக்கே வினவினான் கிஷோர்.
“நான் ஏண்டா அழுகனும்? அவனுக்கு எப்படிபட்ட பொண்ணு தேடனுமோன்னு கொஞ்சம் கவலையா இருந்துச்சு.. அவன் சமத்து தனக்கான பொண்ணை எவளோ அழகா தேடிகிட்டான். நீயும் இருக்கியே”
“ஏன் சொல்லமாட்டம்மா, லவ்மேல லவ்வா பண்ணற அவன் சமத்து, நான் வேஸ்டா..என்னடா உங்க லாஜிக்கு?”
“ஐய்யோ என் பெரிய லட்டுக்கு கோவமெல்லாம் வருது பாருங்க. பார்த்துடா கிஷோர், கோபமெல்லாம் படலாமா அலவுடான்னு நிஷாட்ட கேட்டுக்கோ, அப்பறம் சண்டை போட்டா சமாதானம் பண்ண நாங்கள்ளாம் வரமாட்டோம்” என கூறி நகைத்தார்.
[the_ad id=”6605″]
இப்படி லகுவாக பேசிக் கொண்டே காரை ஓட்டினான் கிஷோர். விவேக்கிடம் இது பற்றி பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அதேநேரம் விமானத்தினுள் இதுபற்றிய எந்த கவலையுமின்றி காதல் பறவைகள் போல சுஜியின் பறந்து கொண்டிருந்தது. விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் கூட சதீஷ் அனுப்பிய குறுஞ்செய்தியை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்து உருகிப் போனது அவள் மனம்.
சதீஷ் வார்த்தைகளால் இன்னது என எதையும் இப்போதுவரை சொல்லி விடவில்லை. ஆனால் தனது பெற்றோரின் கண்பார்வையில் இருந்து மறைந்த அடுத்த நிமிடத்திலிருந்து சுஜியைவிட்டு ஒரு நொடி அகலாது அருகிலேயே நின்று கொண்டான்.
ஒரு விதமாய் அவளை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தான். எஸ்கலேட்டரில் புடவையை சற்றே தூக்கிக்கொண்டு படி ஏற முயன்ற பொழுது வழுவில் அவளது கைகளை கோர்த்துக் கொண்டவன் படியேறி முடிந்து நீண்ட நேரமாக பின்னரும் பிடித்த கைகளை விடவேயில்லை. எதுவும் இருவரும் சொல்லிக் கொள்ளாத ஒருவித ஊமை உடன்படிக்கை பிடித்துதான் இருந்தது.
எங்கே வார்த்தைகளால் சொல்லி இந்த மாய குமிழ் உடைந்து போகுமோ என்ற பயமும் ஒருபுறம் சேர்ந்துகொள்ள சுஜி தானாக கையை விடுவித்துக் கொள்ளவில்லை. விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்ட போது சுஜிக்கு முதல் முறை விமான நிலையத்தில் சதீஷை சந்தித்த நிமிடங்கள் மனதில் கடந்து போயின.
அதைப்போலவே சதீஷிற்கும் சுஜியின் அன்னையுடன் உண்டான சிறிய மனக்கசப்பும், அதன்பின்னர் சுஜியை திட்டிக்கொண்டே அவன் பயணித்த நினைவுகளும் எழுந்தன. அத்தோடு மட்டுமில்லாமல் அன்று பின்னிரவு நேரத்தில் வாஷ்ரூம் செல்லும் சமயம், சுஜி அன்று சின்ன O வடிவில் சிறியதாய் வாய்திறந்து 2படுத்திருந்த கோலமும் மனதில் வந்து சென்றது. தனக்குள்ளாகவே மெல்ல சிரித்துக் கொண்டவன் இருக்கையின் மேல் வைத்திருந்த சுஜியின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டான்.
விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு முடிந்தவுடன் இரவு விளக்கு மட்டும் அங்கங்கே எரிந்துகொண்டிருந்தது சுஜி தனக்கு கொடுக்கப்பட்டிருந்த போர்வையில் கழுத்துவரை போர்த்திக்கொண்டு உறங்கலாம் என நினைத்த சமயம் “கோட் வேண்டாம்னா கழட்டிக்கோ” என அத்தனை நேரம் நீடித்த மெளனத்தை மெல்ல கலைதான் சதீஷ். அவன் சொல்லியவாறே அணிந்திருந்த கோட்டை கழற்றி சீட்டின் அடியில் வைத்துக் கொண்டு சாய்வாக அமர்ந்துகொண்டாள்.
அடுத்த நிமிடம் சதீஷின் கைகள் தானாக வந்து அவளது கைகளுடன் கோர்த்துக் கொண்டன. இதை எதிர்பார்த்த சுஜியும் அவனது கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். இருவரும் பேசாமலேயே ஒருவரை ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
சுஜி ஏதோ சொல்ல வாயை திறக்க சதீஷ் ஒரு விரலை அவளது உதட்டின் மேல் வைத்து எதுவும் பேசாதே என்பதுபோல் சைகை செய்தான். அத்தோடு அவளது சிவப்பு ஜிமிக்கியை மெல்ல அசைக்கவும், சுஜி சற்றே கன்னங்களில் செம்மை படர மெல்ல தலையை கவிழ்த்துக் கொண்டாள். எதுவும் பேசாத இந்த மெளனம் மனதிற்கு வெகு நெருக்கமாக இருந்தது.
ஆனால் அவளது மனதில் அடுத்ததாக நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் தோன்றி தோன்றிக்கொண்டே இருந்தன. “இவன் பண்றேன்னு சொல்றானா? இதெல்லாம் லவ் தானே?” நாளைக்கு வேற மாதிரி மாத்தி பேசிடுவானோ?” என மனதில் தோன்றிய ஆயிரமாயிரம் கேள்விகளில் ஒன்றைக்கூட வாய் திறந்து சொல்ல இயலாத நிலையில் சுஜி அமர்ந்திருந்தாள்.