என் காதல் கனா 28
சுஜியின் கண்களில் கொப்பளித்த மகிழ்ச்சியுடன் சேர்ந்து அவளது மனக்குழப்பங்கள் ஓரளவு சதீஷிற்குப் புரிந்து தான் இருந்தது. ஆனபோதும் அவனது மனமே நிலையாக ஓரிடத்தில் இருக்கவில்லை எனும் போது சுஜியை சமாதானப்படுத்தும் எண்ணம் அரவே எழவில்லை.
“என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? அந்த பொண்ணுக்கு நீ பொய்யான நம்பிக்கை கொடுக்கறியேடா? கையை பிடிக்கிற, டிரஸ் மாத்தாதன்னு சொல்லற, சேலை உனக்கு அழகா இருக்குனு பாக்கறப்போலாம் சொல்லற?இதெல்லாம் என்னடா நினைச்சு பண்ணாற?” என அவனது மனசாட்சி அவனை உறுத்திக் கொண்டே தான் இருந்தது.
ஆனால் அதையும் மீறி அவனது மனம் அன்றைய தினம் முழுக்க அவனது கட்டுப்பாட்டிலேயே இல்லை. இதெல்லாம் சரியா தவறா என்ற எந்த ஒரு விஷயத்தையும் அந்த நொடியில் சதீஷ் நினைக்கவில்லை. அவன் மனம் முழுக்க முழுக்க அந்த ஒரு நொடியில் உறைந்து போயிருந்தது.
ஒரு மாய பூமியில் வாழ்வது போலவும், இங்கே அதிர்ந்து மூச்சு விட்டால் கூட அந்த அழகிய குமிழ் உடைந்து போய்விடும் என்ற எண்ணமும் தோன்றியது. விவேக்கை பற்றி ஒரு நொடி கூட மனம் சிந்திக்கவில்லை. அதில் தவறு இருப்பதாகவும் தோன்றாமல் போனது தான் ஆச்சரியம்.
இந்த மெளனமான நேரத்தில் சுஜினியை தவிர வேறு ஏதும் எண்ணங்கள் இல்லாமல் போனது. சுஜியோ இது கனவா நினைவா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஒரு நிலைமையில் நின்றிருந்தாள்.
அவள் முகத்தை விட்டு நொடி கூட அகலாத அவன் பார்வை அவள் நெற்றி, கண்கள், மூக்கு, கன்னம் என்ற நொடிக்கு நொடி நிதானித்து அவளது முகத்தை அளவெடுத்த மனதில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தக் கணம் இப்படியே நீண்டு போய்விடக் கூடாதா என மனதினுள் வேண்டிக் கொண்டாள் சுஜி.
அவன் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்பது போன்றிருந்தது. இந்த நொடி கண்களை மூடினால் கூட அவன் முகமும் அந்தச் சின்னச் சிரிப்பும் மறந்து போகுமோ என்ற அச்சத்தில் கண்சிமிட்டக் கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியே பார்த்துக் கொண்டு எத்தனை நேரம் அமர்ந்திருந்தாள் என்றே தெரியவில்லை.
எப்பொழுது உறங்கினோம் என இருவருக்குமே அறியா வண்ணம் அப்படியே தூங்கிப் போயிருந்தனர். விமானம் தரையைத் தொட சில மணி நேரங்கள் இருந்தன. சதீஷ் தான் முதலில் விழித்துக் கொண்டான். அவனது இடது பக்கத் தோள் பட்டையில் தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த சுஜியின் மேல் அவனது இடது கை பாதுகாப்பாக அணைத்துப் பிடித்திருந்தது.
அவளது தலையின் மேல் தலையை சாய்த்து உறங்கி விட்டிருந்தவனுக்கு எங்கே தான் அசைந்தால் அவள் விழிப்பு தட்டி எழுத்து கொள்வாளோ என்று எண்ணினான. சிறிது நேரம் அசையாமல் அப்படியே படுத்திருந்தவன் மெல்ல உடலை சற்றே சாய்க்க அந்த அசைவில் சுஜி கண் விழித்துக் கொண்டாள். விழித்தவுடன் சட்டென எழுந்து அமர்ந்து கொள்வாள் என்றே சதீஷ் நினைத்திருந்தான்.
ஆனால் சுஜியோ ஒரு நிமிடம் தலைதூக்கி சதீஷின் முகத்தை பார்த்தவள் திரும்ப அவனது கழுத்தை வளைவில் தன் முகத்தை இன்னமும் ஆழமாக புதைத்துக் கொண்டாள். எதுவுமே பேசிக் கொள்ளாத போதும், சதீஷின் மனம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தது. பக்கவாட்டில் தென்பட்ட வெண்மேகப் பொதிகளினூடே இருவரும் மிதப்பது போல் ஒரு மாயை.
மனதில் ஒருவிதமான நிறைவு தோன்றியிருந்தது. அதே நேரம், “சுஜி பத்தி, விவேக்கிட்ட பொறுமையா சொல்லி அவனுக்கு புரிய வெச்சுட்டா போதும். எந்த பிரச்சினையும் இல்ல” என மனதில் தோன்றிய சிறிய சஞ்சலத்திற்கு விடை தேடிக் கொண்டிருந்தான் சதீஷ்.
[the_ad id=”6605″]
சுஜியின் தூக்க கலக்கமும் விடைபெற்றிருந்தது. எழுந்து கொள்ளலாம் என்றே முதல் நினைத்த சுஜி, சதீஷ் என்ன நினைப்பானோ என ஒரு நிமிடம் அவன் முகத்தை ஏறிட்டாள். சதீஷி விலக்கிவிடுவது போல் சிறு அசைவு செய்திருந்தாலும் சுஜி எழுந்துகொண்டிருப்பாள். அவனோ எதுவும் சொல்லாமல் மெல்லிய புன்னகை சிந்த, அவன் கழுத்தில் இன்னமும் ஆழமாக புதைந்து நிம்மதியாக திரும்பவும் உறங்கி போனாள்.
அதிகாலையில் அந்த ஆகாயப்பறவை தரை இறங்கியது. இருவருக்கும் நடுவில் இனம் கூறமுடியாத ஒருவிதமான பிணைப்பு உண்டாகியிருந்தது. பிடித்திருந்த கைகளை இருவருமே விலக்கிக் கொள்ளவில்லை. விமான நிலையத்திலிருந்து டாக்ஸி வைத்துக்கொண்டு கல்லூரி வளாகம் சென்றதும், முதலில் சுஜியை அவளது விடுதியில் இறக்கி விட்டான்.
இறங்கும் தருவாயிலும் கூட இவளிடம் என்ன சொல்லி விடை பெற்றுக் கொள்வது என்று சதீஷ் யோசித்தபடிக்கே இருந்தான். பையை எடுத்துக் கொண்ட சுஜி, சதீஷ் ஏதேனும் சொல்வானோ என நீண்ட நேரம் அவன் முகத்தில் கண்களைப் பதித்தாள். அவன் எதுவும் சொல்லாமல் போக மெல்ல சிரித்து, “தேங்க்யூ..” என மொழிந்தவள், சற்றாஎ இடைவெளிவிட்டு, “ஃபார் எவ்ரிதிங்க்” என முடித்தாள்.
சதீஷ் மறுமொழி கூறாமல், தனது ட்ரேட்மார்க் சல்யூட் வைத்தவன், “மை ப்ளஷர் பேபி. சி யு சூன்” என கண்களில் குறும்பு மின்ன விடைபெற்றான். சதீஷிற்கு மனதில் விவேக்கிற்கு எப்படி எடுத்துக் கூறுவது, அடுத்து என்ன செய்வது என யோசனை சென்றிருந்தது.
இந்த அமைதியான, லகுவான, மகிழ்ச்சிகரமான மனநிலை சுஜிக்கு அந்த வாரம் முழுவதுமே நீடித்திருந்தது. வழக்கம்போல தனது கல்லூரி மற்றும் உணவக வேலைகளை கவனித்தபோது மனதில் ஒருவித அமைதி நிலவியதை உணரமுடிந்தது. இத்தனை தினங்களும் தான் எங்கே போகிறோம் என்று விடையே தெரியாத ஒரு கேள்விக்கு பதில் தேடிக்கொண்டிருந்தது போலவும் நேற்றைய நிகழ்வுகளுக்குப் பின்னர் தனக்கு உண்டான இடம் இதுதான் என்பதை உணர்ந்து கொண்டது போலவும் மனம் தெளிவடைந்திருந்தது.
அதேநேரம் சதீஷிற்குத் திரும்ப கைபேசியில் அழைத்துப் பேசவும் குறுஞ்செய்தி அனுப்பவும் தோன்றவில்லை. எங்கே அவன் ஏதேனும் சொல்லி இந்த மனமகிழ்ச்சியை முறித்து போய் விடுமோ என்ற தேவையற்ற பயம் ஒரு பக்கம் இருந்தபடியால் சுஜி இந்த மனநிலையை இழக்க விருப்பமில்லாமல் தன் அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஊரில் இருந்து திரும்பி வந்த பிறகு விவேக்கின் நடத்தையில் சற்றே மாற்றம் இருப்பதை போல சதீஷ் எண்ணினான். “பழைய மாதிரி என்கிட்ட பேசறது இல்ல. கொஞ்சம் டிஸ்டன்ஸ் காட்டுற மாதிரி தான் தோணுது. கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லறான்” என சதீஷின் மனம் சஞ்சலப்பட்டது.
“இப்படி இருக்கிறவன்கிட்ட எனக்கும் சுஜிக்கும் இப்படின்னு சொல்ல முடியாதே” என சற்றே பரிதவித்துப் போனான் சதீஷ். இந்த மன உறுத்தல் காரணமாக சுஜியிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை. “முதல்ல விவேக்கிட்ட தெளிவுபடுத்திட்டுத் தான் மறுவேலை” என சரியான சந்தர்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தான் சதீஷ்.
பிலடெல்பியாவில் நடந்த திருமண நிகழ்வுகள், அதிலும் சுபாஷினியைக் கண்டது, அவள் தன் மீது குற்றம் சுமத்தி தன்னைக் கெட்டவன் போல் சித்தரித்திருந்தது என சுஜியைத் தவிர்த்து மற்ற விஷயங்களை தன் நண்பருடன் பகிர்ந்து கொண்டான் சதீஷ்.
விவேக் அதிகமாக பதில் சொல்லாமலேயே இருந்ததை கவனித்தவன், “டேய் என்னடா ஆச்சு உனக்கு? ஏதாவது பிரச்சினையா?” என மொழிய, விவேக் “அதெல்லாம் ஒன்னும் இல்லடா சதீஷ். நீ சொல்றத கேட்டுட்டு தான் இருக்கேன். பொண்ணுக யூஸ்வல்லா அப்படி தான்டா. தன்மேல ஒரு தப்பு இருந்தாலும் அதை வெளியே வந்து நாலு பேர்கிட்ட ஒத்துக்க மாட்டாங்க. சுபாஷினி தன்னோட பிரெண்ட்ஸ்கிட்ட அவ ரொம்ப நல்லவங்கற மாதிரியும் நீதான் கெட்டவன் அப்படிங்கற மாதிரியும் சொல்லியிருப்பாளா இருக்கும். இது நேச்சுரல் டா. இதெல்லாம் பெரிசு படுத்தாத” என சட்டென பேச்சை முடித்துக் கொண்டிருந்தான்.
விவேக்கின் வாதம் சதீஷ்க்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. எப்பொழுதும் சுபாஷினி பற்றி ஏதேனும் பேச்சு எழுந்தால், “டேய் விடுடா சதீஷ். அவ எல்லாம் ஒரு ஆளுன்னு பேசிட்டு இருக்க?” என அவளை மட்டம் தட்டி தன்னை உயர்வான இடத்தில் நிறுத்தி வைத்து பேசும் நண்பன் இன்று இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்பதுபோல பேசுவதை சதீஷால் ஒப்புக் கொள்ள இயலவில்லை.
சதீஷின் மனதில் இருந்த குற்ற உணர்வு அவனை மேலும் மேலும் வெகுவாக வருத்தியது. தானாக சுஜி பற்றி துவங்கவும் மனம் வரவில்லை. இந்த நிலையில் சென்றுகொண்டிருக்க, அடுத்து வந்த தினங்களில் வேலை முடித்து திரும்பும் சமயம், சுஜியுடன் விவேக் சற்றே ஒதுக்கத்துடன் நடந்து கொண்டான்.
வழக்கமாக ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வினை பற்றி பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் நடக்கும் இருவரும் தமது எண்ணங்களுடன் மெளனமாக நடந்தனர். சம்பிரதாயமான கேள்விகளும், அதற்கு தகுந்த பதிகளுமென ஒரு வித ஒதுக்கம் பிறந்திருந்தது.
விடிய பெறும் சமயம், “சுஜி, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும், நாளையிலிருந்து இன்னும் ஒன் அவர் ஓவர்டைம் பார்க்க சொல்லி ஹார்ட்வேர் ஸ்டோர்ல சொல்லியிருக்காங்க. சோ இனிமேல் நீ தனியா தான் போக வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்” என விவேக் கூறியிருந்தான்.
இத்தனை நேரமும் அமைதியாக இதைப்பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தானோ என்று யூகித்த சுஜி, “ ஓ, அப்படியா? இட்ஸ் ஓ.கே” என மேம்போக்கா பதில் சொல்லியிருந்தாள்.
சதீஷ் விவேக்கிடம் அவர்களைப் பற்றி சொல்லியிருப்பான் என்றே தோன்றியது. “அதனால தான் இவன் இனிமே என் கூட வரமாட்டேன்னு சொல்லறான் போல.” என்ற எண்ணமும் தோன்றியிருந்தது. “ஃப்ரெண்டிலியா பேசிட்டு வர்ற துணையை மிஸ் பண்ணுவேன் என மனதினுள் நினைத்தாள். ஆனாலும் விவேக்கின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, “வேலை முடிச்சுட்டு திருப்பி எப்படி வருவீங்க?” என சாதாரணமாகவே வினவினாள்.
“ ரான்.. டிராப் பண்றேன்னு சொல்லியிருக்கான்” என விவேக் சொல்லியே விதத்திலேயே அது உண்மை இல்லை என்பது வரை சுஜிக்கு உரைத்தது. “இதுவும் நல்லதுக்குதான். நானா எப்படி இவன்கிட்ட இதைப்பத்தி பேசுறதுன்னு இருந்தேன். அவனா இனிமேல் என்கிட்ட பேசக்கூடாது, டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணனும்னு நினைக்கிறான். அது நல்லதுதானே” என சொல்லிக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
அவளது விடுதி வந்துவிட சாதாரணமாகவே விடைபெற்று உள்ளே சென்று விட்டிருந்தாள். அவள் செல்வதையே சிறிது நொடி நின்று பார்த்துக்கொண்டிருந்த விவேக். “இவளுக்கு நம்ம மேல எந்த ஒரு பீலிங்கும் இல்ல. பொதுவா ஒரு நல்ல ஃப்ரெண்ட் அப்படிங்கற அளவில இவளுக்கு என்ன பிடிக்குது. ஆசைகளை வளர்த்திகிட்டது என்னோட தப்பு. அவ மேல எந்த தப்பும் இல்ல” என தான் முன்னர் எடுத்திருந்த முடிவினை இன்னமும் வலுப்படுத்திக் கொண்டான்.
காலம் எவருக்கும் நிற்காமல் வேக வேகமாக சுழன்று இரு மாதங்களை கடத்தியிருந்தது. அந்த வருடத்திற்கான பரீட்சைகளை எதிர்நோக்கிய மூவரும் மற்ற சிந்தனைகளை சற்றே ஒதுக்கிவைத்து, படிப்பதில் கவனமாயினர். பரீட்சைகளை நல்ல முறையில் எழுதி முடித்தனர்.
இந்த நிலையில், தன் அறை தோழனான விவேக்கின் நடத்தையில் தோன்றிய மாற்றங்களை ரான் வெகுவாக கவனிக்கலானான். அதை விவேக்கிடம் கேட்கவும் செய்தான். “உனக்கு ஏதாவது பிரச்சனையா டியூட்? நீ பழைய மாதிரி சதீஷ்கிட்ட பேசுறதில்ல. நிறைய அவாய்ட் பண்ற? ஏன்?” என நேரடியாகவே ஒருநாள் வினவினான்.
தன் கவலைகளை சட்டென ஒருவரிடம் சொல்லி ஆறுதல் தேட பழக்கப்படாத விவேக், முதலில் “அப்படியெல்லாம் எதுவுமில்லை ரான்” என்று மறுக்கவே செய்தான். ஆனால் ரான் விவேக்கின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
“இல்ல யு ஆர் நாட் நார்மல்.” என்று திட்டவட்டமாக கூறியிருந்தான்.
விவேக் வேறு வழியின்றி சதீஷின் பெற்றோர் வந்திருந்த தினம் உணவகத்தில் அவர்கள் நால்வரையும் கண்டபொழுது தன் மனதில் தோன்றிய எண்ணத்தை ரானியிடம் பகிர்ந்து கொண்டான். “நீ பேசறது ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு. சதீஷ் அந்த பொண்ணு லவ் பண்றதா உன்கிட்ட இப்ப வரைக்கும் சொல்லல இல்லையா? இன்ஃபேக்ட் பிலடெல்ஃபியா போகும்போது, நீ வா, அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண உனக்கு சான்ஸ் கிடைக்கும் அப்படின்னு சொல்லிட்டு தான் போயிருக்கான்.” என கவனமாக கேட்டிருந்த ரான் மொழிய, விவேக் தலையை மட்டும் அசைத்தான்.
“சோ, அவனுக்கு அந்த பொண்ணு மேல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு தெரியுது. அப்படி இருக்கறப்போ நீ எதுக்கு தேவை இல்லாம உன் ஆசைகளை மனசுல வெச்சு பூட்டிக்கற?”
“என் குடும்பத்தை பத்தி உனக்கு நான் சொன்னேனே ரான்” என விவேக் ஆரம்பிக்கும் முன்பே ரான் அவனை கையமர்த்தினான்.
“இதுல என்ன பெரிய பிரச்சனை? உனக்கு பெரிய குடும்பம் இருக்கு. கொஞ்சம் ரேஸ்பொன்சிபிலிடீஸ் இருக்கு. சோ வாட் மேன்?”
“என்னை நம்பி அவங்க..”
“ப்ளீஸ் மறுபடியும் அதே பழைய பல்லவியைப் பாடாதே விவேக். படிப்பு முடித்துவிட்டு இங்கேயே நல்ல வேலை தேடிக்கோ. நல்லா சம்பாதிச்சு வீட்டுக்கு அனுப்பு. அவங்கள பார்த்துக்கோ. தட்ஸ் ஆல். அதுக்காக உன்னோட வாழ்க்கையை நீ வாழவே கூடாதுன்னு அர்த்தம் இல்லையே. இன்ஃபேக்ட் இதுல இன்னும் பிராக்டிகலா சொல்லனும்னா, நீ சுஜியை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு இன்னமும் ரொம்ப ஈஸியா இருக்கும்.”
“என்ன சொல்லற ரான்?”
”ஆமா அவளும் இங்கே உன் கூட வேலை பார்ப்பா. அவளுக்கும் அம்மாமட்டும் தான். பெருசா குடும்பம்னு கிடையாது. சோ நாளைக்கு உன்னோட குடும்பம் தான் அவளோட குடும்பம்னு ஆகிப்போகும். அதனால ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சு எல்லாத்தையும் பாத்துக்கோங்க, நீங்களும் ஹேப்பியா இருக்கலாம். இதில் என்ன சிக்கல் இருக்கு?” என ரான் கூறியது விவேக்கின் மனவுறுதியை சற்றே தட்டிப் பார்த்திருந்தது.
“இல்லடா அன்னைக்கு அவங்க எல்லாத்தையும் சேர்ந்து பார்த்தப்போ அவங்க எல்லாம் ஒரு பெரிய குடும்பம் மாதிரிதான் எனக்கு தெரிஞ்சாங்க.”
“அதெல்லாம் உன் கற்பனை. நீ சுஜியை எப்படி அவாய்ட் பண்ணலாம்னு காரணம் தேடிகிட்டு இருந்த. இந்த எண்ணத்தை காரணமாக்கிகிட்ட. அவளோ தான். நீ நினைக்கற மாதிரி எந்த காம்பிலிகேஷனும் இல்ல.. நீயா காம்பிளிகேட் பண்ணிக்கற.”
[the_ad id=”6605″]
“சுஜிக்கும் என் மேல பெருசா ஒரு இம்பிரஷன் இருக்கற மாதிரி தெரியல. அவகூட இனிமே ஈவினிங் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதுன்னு சொன்னப்போ அவ பெருசா ரியாக்ட் பண்ணல ரான். ஜஸ்ட் லைக் தட் பாய் சொல்லிட்டு போயிட்டே இருந்தா”
“அதனால் என்ன?”
“அவளுக்கு சதீஷ் தான் செட் ஆகும்.”
“அப்படின்னு அவ சொன்னாளா? இல்ல சதீஷ் சொன்னானா?”
“அப்படியில்ல. அவளுக்கு சதீஷ் மேலதான் இன்டிரெஸ்ட்.”
“இருக்கட்டுமே.. ஆனா சதீஷ் அதே அளவு இண்டிரெஸ்ட் காட்டலையே. அவ கூட உன்னை டைம் ஸ்பெண்ட் பண்ண சொன்னான். இதிலிருந்தே உனக்கு தெரியலையா அவனுக்கு அந்த பொண்ணு மேல ஸ்பெஷலா எந்த இன்ட்ரஸ்டும் இல்லைன்னு. கொஞ்சம் அழகா இருக்கா, அதனால ஜஸ்ட் ஃப்ளேர்ட் பண்ணறான், பேசுறான். இது ரொம்ப நேச்சுரல். தப்பான விஷயம் கிடையாதே விவேக்” என ரான் கூறிய வார்த்தைகள், விவேக்கின் தெளிந்த மனதில் கல்லெறிந்திருந்தன.
“குடும்பம், பொறுப்புகள் அப்படின்னு சொல்லி என் மனசு நானே ஏமாத்திக்கறேனோ? அவகிட்ட நேரா பேசினா ரெண்டுல ஒரு முடிவு தெரின்சிடும்” என எண்ணிய விவேக்கிற்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தபடியிருந்தது. எந்தப் பக்கமும் முழுவதுமாக செல்ல முடியாத சூழலை மனம் கொண்டிருந்தது. சுஜி தனக்குக் கிடைப்பாளோ என்ற நப்பாசையை இழக்கவும் மனம்வராத தவிப்புடன் அடுத்து வந்த நாட்களை கழித்தான்.
அவனது தவிப்புகளுக்கு முற்றுப் புள்ளியாய் ரானின் மூலமாக ஒரு விடிவும் கிடைத்தது. “ எல்லாருக்கும் எக்ஸாம்ஸ் முடிஞ்சாச்சு. சோ இதை செலிபிரேட் பண்ண ஒரு சின்ன பார்ட்டி அரேஞ்ச் பண்ண போறேன். எல்லாரும் ரிலாக்ஸ்டா இருக்கற டைம்ல உன் மனசு அவ கிட்ட சொல்லிப் பாரு.” என அறிவுருத்தினான். விவேக் அந்த பார்ட்டிக்காக எதிர்நோக்கிக் காத்திருந்தான்.