என் காதல் கனா 31
மயங்கி சரிந்த சுஜி கண்விழித்த போது, அவளது கட்டிலில் படுத்திருந்தாள். எம்மாவும் வித்யாவும் வேகமாக பெட்டியில் தேவையான துணிமணிகளை எடுத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தனர். ஆண்கள் மூவரையும் காணவில்லை. சுஜி மெல்ல கட்டிலில் எழுந்து அமர்ந்தவளின் முகத்தைக் காணச் சகிக்கவில்லை.
முந்தினம் அழுததால் வீங்கியிருந்த கண்களும், முகமும் என பார்க்கவே பாவமாக இருந்தது. எழுந்ததும் தனது கைப்பேசியை எடுத்து வேகமாக மாமாவின் எண்களைத் தொடர்பு கொண்டாள்.
“மாமா, அம்மா எப்படி இருக்காங்க.. என்னாச்சு திடீர்னு.. நேத்து காலையில பேசினப்போ நல்லா தானே பேசினாங்க?”
“நைட்ல இருந்து கொஞ்சம் இருமலா இருந்துச்சு… மூச்சு திணறல் வேற.. காலையில பால் வாங்க போறப்போ ரேளியில மூச்சை பிடிச்சுட்டே உட்கார்ந்துட்டா.. அப்பறம் மைலாப்பூர்ல காவேரி ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்தோம். எமர்ஜென்ஸி, சிவியர் அட்டாக்ன்னு சொல்லியிருக்கா. இன்னும் ஐ.சியு தான். கண் விழிக்கலை.” என மாமா செய்தி வாசிப்பாளர் போல் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.
சுஜிக்கு இது எதுவுமே காதுகளில் விழவில்லை. அம்மா அம்மா என்ற வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப மனக் கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது. “ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணது எவளோ பெரிய தப்பு… அம்மா ஒரு வேளை எங்கிட்ட பேசணும்னு நினைச்சிருப்பாங்களோ.. இனிமே பேசாமயே போயிட்டா என்ன பண்ணறது?” என தேவையில்லாத பயம் சூழ்ந்து கொண்டது.
அம்மாவைப் பற்றி தன் மனதில் பொதிந்திருந்த நிகழ்வுகள் மெல்ல மெல்ல தலை தூக்கின. அவளது எண்ணவோட்டத்தைக் கலைக்கும் வண்ணம், கைப்பேசியில் இன்னமும் மாமா ராமனாதனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.
“நீ டிக்கெட் போட்டுட்டியா? எப்ப வர்றதா இருக்கே? வர முடியுமோன்னோ? ஏன் கேட்கறேன்னா.. “ என சொல்லி நிறுத்தியவர், சுஜி மறுமுனையில் எதுவும் பதில் சொல்லாததை அறிந்து, “சுஜி…சுஜி.. லைன்ல இருக்கியா?” என வினவினார்.
“டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லறேன்..” என நிறுத்தியவள், சிறிய இடைவெளி விட்டு, “அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க.. “ என சொல்லி முடிக்கும் முன்னர் வார்த்தை கெட்டித்துப் போய் விட்டிருந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. அம்மாவை தனியே விட்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது உரைத்தது.
“அங்கையே இன்ஃபோசிஸ்ல கிடைச்ச வேலையை பார்த்துட்டு அம்மாகூடவே இருந்திருக்கணும். மடத்தனம் பண்ணிட்டேன்.. பெருமாளே காப்பாத்திரு.. “ என மனம் அரற்றியது. ராமனாதன் கைப்பேசியை அணைத்திருந்தார்.
எம்மா பெட்டியை அடுக்கிக் முடித்திருக்க, வித்யா ஆதரவாக சுஜியை தோளுடன் அணைத்துக் கொண்டாள். “சதீஷும் விவேக்கும் விசா, டிக்கெட் பார்க்க டிராவல் ஏஜென்சி போயிருக்காங்க.. நீ எதும் கவலைப்படாத சுஜி.. எல்லாமே சரியாகிடும்.. ஷி வில் பி ஆல்ரைட்” என குலுங்கி அழும் தோழிக்கு தன்னாலான ஆறுதலை சொல்லிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம், சதீஷும் விவேக்கும் டிக்கெட்டுடன் வந்திருந்தனர். “டைரெக்ட் ஃப்ளைட் கிடைக்கலை. துபாய்ல கொஞ்சம் வெயிட்டிங்க் டைம் இருக்கும். பட் எப்படியும் நாளைக்கு நைட்குள்ள சென்னை ரீச் ஆகிடலாம்.” என விவேக் சொல்லிக் கொண்டிருந்தான். சதீஷும் பேசாமல் அமைதியாக உடன் நின்றிருந்தான்.
சில மணி நேரத்தில் அனைவரும் சுஜியை வழியனுப்ப விமான நிலையம் வந்திருக்க, அவர்களுடன் சிறு தோள் பையை எடுத்துக் கொண்டு விவேக்கும் தயாராக நின்றிருந்தான். “நம்ம மூனு பேருக்குமே விசா ப்ராசஸ் பண்ணோம். பட் சதீஷ் விசா கேன்சல் ஆகிடுச்சு.. எனக்கும் உனக்கும் மட்டும் கிடைச்சிருக்கு.” என மொழிந்தவன், சுஜியின் கைப்பையையும் எடுத்துக் கொண்டு, சுஜியின் பதிலுக்காக காத்திராமல் முன்னால் நடந்தான்.
சுஜியும் தன் தோழிகளிடம் தலையசைத்து விடை பெற்றவள், மறந்தும் கூட சதீஷ் நின்றிருந்த திசையில் திரும்பவில்லை. சட்டென விசா கிடைத்ததையும், அதை விடவும் துணைக்கு நண்பன் என்ற அளவிலேனும் விவேக் உடன் வருவதையும் நினைத்தும் சற்றே திருப்திபட்டுக் கொண்டாள்.
ஆனால், மூவர் விசாவில், தனது விசாவை வேண்டுமென்றே சதீஷ் கேன்சல் செய்திருந்தான் என்பது விவேக்கிற்குத் தெரிந்திருக்கவில்லை. முன் தின நிகழ்வுகளுக்குப் பின்னர் சதீஷுடன் தேவைக்கு அதிகமாக விவேக் எதுவுமே பேசிவிடவில்லை. சூழ்நிலை கருதி விவேக் எங்கு சென்றாலும் துணையாக சென்றானே தவிற, மறந்தும் கூட விவேக்கின் முகம் பார்த்து சதீஷ் பேசவில்லை.
இந்த ஒதுக்கம் விவேக்கின் மனதை வாட்டிய போதும், தானாக முன்வந்து பேச விஷயங்கள் இருக்கவில்லை. இப்போதைக்கு பிடிக்காத போதும், கடமை காரணமாக சதீஷுடன் ஒரு உடன்படுக்கை போல பேச்சு வைத்துக் கொண்டான். சதீஷிற்கும் இருவர் முகத்திலும் விழிக்கவே சங்கடமாக இருந்தது. அதிலும், சுஜி தன்னால் தான் கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டாள் என்ற குற்ற உணர்வு வேறு.
“சாரி” என்று சொல்லக் கூட வாய் வரவில்லை. அவள் இந்தியா செல்ல ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டான். சுஜியை தனியே அனுப்ப மனம் வரவில்லை. விவேக்கும் சதீஷுமே இந்தியா சென்று ஒன்னரை வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட படியால் மூவருக்குமாகவே விசாவிற்கு அப்ளை செய்தான்.
ஆனால் இருவருடனும் செல்ல மிகவும் அவமானமாகவே உணர்ந்தான். அதானாலேயே கிடைத்த விசாவை கேன்சல் செய்தான். விவேக்கிற்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும் தான். ஆனால், “ஏன்டா?” என்று ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அதிலிருந்தே அவன் எந்த அளவு தன்னை வெறுக்கிறான் என்பதை சதீஷால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
கோபத்தில் உரிமையில் சண்டை இடுவது வேறு. அடிக்க கூட செய்யலாம். அதிலும் ஒரு உரிமை மிளிரும். கண்டவரையும் அடிக்கவோ, கோபித்துக் கொள்ளவோ இயலாது. நமக்கு முக்கியமானவர்களிடம் மட்டுமே உரிமையாக சண்டை போடவும், கோபித்துக் கொள்ளவும் தோன்றும்.
எந்த சம்பந்தமும் வேண்டாம் என நினைப்பவர்களிடம் ஒதுங்கிப் போய்விட எண்ணுவோம். இந்த “நீ யாரோ” ஒதுக்கத்தை சதீஷால் தாங்கிக் கொள்ள இயலாவிடினும், இது தனக்கான தண்டனை என்றே ஏற்றுக் கொண்டான். அப்போதைக்கு அவனது பிராத்தனை, “சுஜி அம்மாவுக்கு எதுவும் ஆகிடக் கூடாது” என்பது மட்டுமே. இந்த ப்ராத்தனையிலும் கூட அவனது சுயநலம் கலந்து தானிருந்தது.
“அவங்க அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிட்டா, சுஜி தன்னோட ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிட்டோமேன்னு காலம் பூரா வருத்தப்படுவா. அந்த ஃபோனை ஆஃப் பண்ண காரணமான என்னை எந்தக் காலத்திலையும் மன்னிக்க மாட்டா. அதுவுமில்லாம, அந்த அம்மா தன் பொண்ணுகிட்ட ஏதாவது பேசணும்னு நினைச்சிருப்பாங்களோ?” என்னால அது நடக்காம போயிருச்சே” என்ற கவலை அவனை மிகவும் அழுத்தியது.
தனது குற்ற உணர்ச்சியின் காரணமாக, அவனது தாய் தந்தையை மருத்துவமனையில் இருந்து முடிந்த அளவு ஒத்தாசையாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். இவன் சொல்லாவிடினும் அவர்கள் லக்ஷ்மியம்மாவிற்காக அங்கே சென்றிருப்பார்கள் தான். ஆனாலும், மகன் வாயிலாக ஒரு முறைக்குப் பலமுறை, “கூட இருந்து பார்த்துக்கோங்க..” என்ற வார்த்தை வரவும், அரை மணிக்கு ஒருமுறை அவனுக்கு தொலைப் பேசியில் அழைத்து விவரம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தன் பெற்றோர் கேட்டறிந்த வரையில், லக்ஷ்மியம்மா நன்றாகவே உள்ளார் எனவும். நாளையோ, அதற்கு மறு நாளோ டிஸ்சார்ஜ் செய்து விடுவர் என்றும் தெரிந்த பின் சற்றே அமைதியானான் சதீஷ்.
விவேக், சதீஷின் தந்தை மூலம், மருத்துவமனையில் நிலவரத்தை அவ்வப்போது தெரிந்து கொண்டான். ஆனால் சுஜியிடமும் அவன் எதுவும் உரையாடவில்லை. சம்பிரதாயமாக, “தண்ணீர் வேண்டுமா? ஏதாவது சாப்பிடிடுகிறாயா?” என்ற மட்டில் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
அவனுக்கு சுஜியின் மேல் கோபமோ, வருத்தமோ தோன்றவில்லை. இன்னமும் சொல்லப் போனால் சதீஷின் மேல் நேற்று தோன்றிய கோபம் கூட, அவன் இடத்தில் இருந்து யோசித்த போது, சதீஷின் செய்கையுமே சரியாவே தோன்றியது.
ஆனாலும், சட்டென அவனிடம் பேசிவிடவும் நினைக்கவில்லை. இந்த பதினைந்து நாள் அவகாசம் சற்றே நிலைமையை மாற்றியமைக்கும் என எண்ணிக் கொண்டான். காலமும் தூரமும் ஆராத பல வடுக்களை ஆற்றும் வல்லமை மிக்கவை என்பதை உணர்ந்திருந்தான் விவேக்.
எண்ணங்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க, விமானப் பயணம் இப்படியாகவே கழிந்தது. துபாய் விமான நிலையத்தில் ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டியிருந்தது. அவ்வப்போது சுஜியின் மாமாவிடமும், சதீஷின் தந்தையிடமும் நிலவரம் கேட்டு தெரிந்து கொண்டிருந்தனர்.
துபாய் சென்று சேர்ந்ததில் இருந்தே சதீஷின் தந்தை சற்றே சுரத்தில்லாமல் தான் பேசினார். “ஒன்னும் சொல்லலை விவேக். கொஞ்சம் சீரியஸா இருக்காப்ல தான் தெரியுது. சுஜியோட மாமா டாக்டர்கிட்ட பேசிட்டு வற்றேன்னு போயிருக்கார், வந்ததும் நான் கூப்பிடறேன் விவேக்” என மொழிந்திருந்தார்.
அதற்குள் அவர்கள் செல்லவிருந்த சென்னை விமானத்திற்கான அழைப்பு வந்துவிட்டிருக்க, சதீஷின் அப்பா கேட்டறிந்த விஷயம் என்னவென்று தெரியாமலேயே இருவரும் விமானம் ஏறினர்.
சுஜியிடம் அவ்வப்போது மருத்துவமனை நிலவரத்தை விவேக் பகிர்ந்து கொண்டான். மற்ற பயண நேரம் முழுக்கவே அவளது நினைவுகளுடன் மூழ்கிப் போயிருந்தாள். தந்தையின் அன்பு என்பது சிறு வயதிலேயே கிடைக்காமல் போயிருக்க, தன் வாழ்நாளின் பெரும் பகுதியை முழுக்க ஆக்கிரமித்த ஒரே ஆளுமை உருவமாகிப் போயிருந்தார் லக்ஷ்மி.
சொந்தம் என உடன் பிறந்தவன் இருந்த போதும், அவனிடம் கையேந்தாமல், அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும் தன் தலைமேல் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும் அன்னையின் முகம், சுஜியின் நினைவில் மோதியது.
சோம்பல் என்பதையே பார்த்திராத தேகம். காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும் முன்னர், தானாகவே விழிப்பு தட்டிவிடும் சுபாவம். சமையல் கூடத்தைத் கடந்து கேட்டின் வரை வீசும் ஃபில்டர் காபியின் மனம், தேங்காய் எண்ணெய் வாசம் வீசும் அசத்தலான அவியல், என தன் அன்னையைப் பற்றி எண்ணிப் பார்க்க சுஜிக்கு அழகழகாய் நிறைய நினைவுகள் இருந்தன.
அதிலும் அவள், மேல் படிப்பு, அதுவும் அமெரிக்காவில் படிக்க விருப்பம் தெரிவித்த நாள் முதல், மகள் எடுக்கும் முடிவை யோசித்து, அவளுக்கு அதில் கிடைக்கப் போகும் சாதகங்கள், வீட்டில் ஏற்படப் போகும் பாதகங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு செய்யும் மனம்.
எங்கே அடித்தால் என்ன காய் விழும் என்ற சாமர்த்தியமான புத்தி இருந்த போதிலும், அதை இது நாள் வரையிலும் மற்றவரிடம் காட்டாது வைத்திருந்த திறம், எப்படியும் மகளை படிக்க வைத்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் என சுஜி அந்த பயணம் முழுவதையுமே அன்னையின் நினைவுகளுடனேயே கழித்தாள்.
இத்தனை நேரமும் விவேக் உடன் இருந்தானே தவிர, தேவையின்றி சுஜியை தொந்தரவு செய்யவில்லை. கவுண்டரில் காபி வாங்கி வந்து கொடுத்தான். துபாயில் காத்திருந்த சமயம், சாண்ட்விட்ச் தருவித்தான். அவளது வயிற்றைக் காயப்போடாமல் பார்த்துக் கொள்வது ஒன்று தான் தன் வேலை என்பது போன்றே நடந்து கொண்டான்.
சென்னை வந்தடைய அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. விமானம் விட்டு இறங்கியதுமே கைப்பேசியில் சதீஷி தந்தைக்கு விவேக் தொடர்பு கொள்ள, அதே நேரம் சுஜியும் தன் மாமாவிற்கு அழைத்தாள்.
“முடிஞ்சது விவேக். நைட் பதினொரு மணிக்கே. மாசிவ் அட்டாக்.. செகண்ட் அட்டாக் வேற. வயசாயிட்டதால தாங்க முடியலை அவங்களால..பாவம்.. நீ நேரா அந்த பொண்ணை காவேரி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துடு..” என சதீஷின் அப்பா மொழிந்திருந்தார்.
விவேக்கிற்கு இந்த செய்தியை எப்படி சுஜியிடம் செல்வது என புரியாமல் தடுமாற, சுஜியின் கைப்பேசி நழுவி கீழே விழுந்திருந்தது. “அம்மா..” என்ற அரைக் கூவலுக்கு மேல அவளிடம் வார்த்தைகள் வெளிப்படவில்லை. விவேக் ஆதரவாக கைகளைப் பற்றிக் கொள்ள, சுஜி, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு கதறியிருந்தாள்.
தெளிவாக எந்த வார்த்தையும் வரவில்லை அவளிடமிருந்து. சற்றும் தாமதிக்காமல், டாக்ஸி அமர்த்திக் கொண்டு காவேரி மருத்துவமனைக்கு சென்று சேர்ந்த போது, அதிகாலை ஐந்தாகியிருந்தது.
மருத்துவமனையில், மாமா, அத்தை மற்றும் ஸ்ரீயும் இருந்தனர். இவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுத அத்தையின் அழுகை சுஜிக்கு உரைக்கவில்லை. ஓரமாய் நின்றிருந்த மாமா சுஜியின் அருகே வந்து, ஆறுதலாய் தலைக் கோதினார்.
“தைரியமா இரு.. இப்போ தான் தைரியமா இருக்கணும்..” என மெல்லமாக பேசினார்.
“அம்மா, மணி ஐஞ்சு ஆச்சேம்மா… அலாரம் அடிக்கறதுக்கு முன்னாடி எழுந்துக்குவியேம்மா.. ஐஞ்சரைக்கு பால்காரர் வந்துருவாரே.. எழுந்துரும்மா.. போய் பால் வாங்க்கும்மா..இனிமேல் எழுந்திரிக்க மாட்டியாம்மா.. இனிமேல் நீ இல்லையாமா.. என்னை இந்த உலகத்தில அனாதையா விட்டுட்டுப் போயிட்டியேம்மா..“
“உன்னை அமெரிக்கா கூட்டிட்டு போயிடணும்னு நினைச்சேனேம்மா.. அதெல்லாம் பார்க்காமையே போயிட்டியாம்மா? உனக்கு கடமை இருக்கேம்மா? என்னை பார்த்துக்கற கடமை இருக்கே.. அதை முடிக்காம ஏம்மா போன? நீ இல்லாம என்னம்மா பண்ணப் போறேன்” என காணாமல் போன குழந்தையாய் சுவற்றில் சாய்ந்து அழுதவளைத் தேற்ற யாரிடமும் சொற்கள் இருக்கவில்லை.
பொழுது புலரத்துவங்க, வேகமாக அடுத்த காரியங்கள் நடந்தேறின. சில மணி நேரத்தில் சுஜியின் வீட்டில் வைத்து சடங்குகள் துவங்கியிருந்தன. விவேக்கின் அம்மா வந்திருந்தார். சதிஷீன் தாய் தந்தை, அம்மாவுடன் நெருக்கமானவர்கள், அக்கம் பக்கம், ராமனாதன் மாமாவிற்குத் தெரிந்தவர்கள் என யார் யாரோ வந்தார்கள், யார் யாரோ சென்றார்கள்.
“அம்மா, அம்மா” என தாயின் தலைமாட்டில் அமர்ந்திருந்த சுஜிக்கு சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. வற்புறுத்தி யாரோ கொடுத்த பால் உள்ளே இறங்கவில்லை. தாயை இறுதியாக தூக்கிச் செல்லும் போது, ரோட்டில் அமர்ந்து என்ன சொல்லி அழுதால் என்பது கூட நினைவில்லை.
அன்னை இறந்து அன்று மூன்றாம் நாள் காரியம். நெருங்கிய பந்துக்கள் மட்டுமே இருந்தனர். இவள் சார்பாக விவேக், அவன் அன்னை, சதீஷின் பெற்றோர், மற்றும் இவளுடன் படித்த பள்ளி மற்றும் கல்லூரி சினேகிதிகள் சிலர் வந்திருந்தனர்.
படையல் முடித்து, பந்துக்கள் ஓரளவு சென்று விட்டிருக்க, சுஜியைப் பற்றிய பேச்சு கூடத்தில் நடந்து கொண்டிருந்தது. “எங்க லக்ஷ்மிக்கு அப்படி ஒரு கைப்பக்குவம், அவ வைக்கற வத்த குழம்பு தெரு வரைக்கும் மணக்கும்.” என லலிதா அத்தை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மா உயிருடன் இருந்த போது ஒரு முறை கூட இப்படி பாராட்டியதில்லை என்பது அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்து தான் இருந்தது. “எங்க லக்ஷ்மி..” என வார்த்தைக்கு வார்த்தை உரிமை கொண்டாடிப் பேசியபடிக்கே இருந்த அத்தையின் வார்த்தைகள் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் வலித்தது சுஜிக்கு.
சுஜி தன் அறையில் அமர்ந்திருந்தாள். அவளுடன், பக்கத்து வீட்டு சியாமளா அத்தையும், சதீஷின் அன்னையும், விவேக்கின் அன்னையும் உடனிருந்தனர். கூடத்தில் லலிதா அத்தையின் பேச்சிற்கு, இங்கே சியாமளா அத்தை பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“வார்த்தைக்கு வார்த்தை லக்ஷ்மி அப்படி, இப்படின்னு எப்படி பேசறா பாருங்கோ… உயிரோட இருக்கறச்சே, வீட்டு வேலைக்காரி மாதிரி நடத்தினா.. இப்போ என்ன தேனொழுக பேச்சு.. இங்க இருக்கற எல்லாருக்குமே தெரியும் இவா எப்படின்னு? அப்பறம் என்னத்துக்கு இந்த மாய்மாலம்.” என பதில் சொல்லிக் கொண்டார்.
“லக்ஷ்மி ரொம்ப தைரியசாலி. அழுத்தமானவ. அவ மனசில நினைக்கறதை லேசில வெளிய சொல்ல மாட்டா. வைராக்கியம் ஜாஸ்தி. அவ கனவு, ஆசை எல்லாமே சுஜி தான். நன்னா படிக்கவைக்கணும், பெரிய ஆளாக்கணும்னு ஆசை. முடிஞ்ச அளவு செஞ்சிட்டாளே..”
“இவா ஆத்துலையே, அமெரிக்கா போய் படிக்கற மொத பொண்ணு நம்ம சுஜி தான். மத்தவா கல்யாணம் முடிஞ்சு புருஷனை தொத்திண்டு அமெரிக்கா போவா. தன்னோட உழைப்பால, தன்னோட அறிவால போயிருக்கற சுஜி அவாளுக்கு ஈடா?” என பெருமையாக சுஜியைப் பற்றிப் மற்ற பெண்களிடம் சொல்லிக் கொண்டார்.
அத்தையின் அந்த மாய்மாலம் எதற்கு என சிறிது நேரத்திலேயே தெரிந்து போயிற்று. “எங்க லக்ஷ்மிக்கு என் ஸ்ரீகாந்தை அவளோ பிடிக்கும். அவனை மருமகனேன்னு தான் கூப்பிடுவா. அவ ஆசைப்பட்ட மாதிரியே, சுஜியை ஸ்ரீக்கு பண்ணி வைக்கலாம்னு யோசிக்கறோம். பாவம் அவளுக்கும் இனி எங்களை விட்டா யார் இருக்கா?” என உருகி உருகி பேச்சு வெளிப்பட்டது.
“இது என்ன கொடுமையா இருக்கு. லக்ஷ்மி ஒரு நாளும் ஸ்ரீயை சுஜிக்கு யோசிச்சதேயில்லை.. என்னவாம் இந்த லலிதாக்கு? தன்னோட உதவாக்கரை பையனை சுஜி தலையில கட்டப் பார்க்கறாளாக்கும்? எப்படியும் அவனுக்கு உருப்படியான வேலை வெட்டி அமையப் போறதில்லை. அதனால சுஜியை தொத்திண்டு அமெரிக்கா அனுப்பிட ப்ளானா இருக்கும்” என சியாமளா அத்தை உள்ளே அறையில் பதிலளித்துக் கொண்டார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க சுஜிக்கு கொஞ்சமும் சகிக்கவில்லை. தன் அன்னையைப் பற்றிய நினைவுகளை மனதில் அசைப் போடக் கூட அவளுக்கு இடமில்லாது போய்விட்டது போல் தோன்றியது. சுஜியின் தவிப்பு இரண்டு அம்மாக்களுக்குமே புரிந்தது.
அதிலும் சதீஷின் அன்னைக்கு, சுஜி தன் மருமகள் என்ற எண்ணமே மனதில் தோன்றிக் கொண்டிருக்க, சுஜியை இந்த நிலையில் அங்கே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. அதிலும் தன் பெரிய மகன் கூறிய விஷயங்களும், தன் இளைய மகன், அரை மணிக்கு ஒரு தடவை சுஜியைப் பற்றி விசாரிக்கும் கரிசனமுமே சுலோச்சனாவிற்கு போதுமானதாக இருந்தது.
“சுஜி, நீ வேணும்னா என் கூட நம்ம வீட்டுக்கு வந்து இருந்துக்கறியா? தனியா இங்க உன்னை விட்டுப் போக மனசில்லைம்மா..” என தன்மையாக சுஜியிடம் வினவினார்.
சுஜிக்கு சதீஷின் அன்னை கேட்டது மனதுக்கு ஆறுதலாக இருந்த போதும், அவருடன் செல்ல ஒப்பவில்லை. அவர், தன்னை கிஷோர் கூறிய விஷயங்களை வைத்து அன்புடன் அழைக்கிறார் என்பதை சுஜி அறிவாள்.
ஆனால், அங்கே செல்லும் போது அவர் தன்னை என்ன கண்ணோட்டத்துடன் நடத்துவார் என்பதும் தெரிந்தது. முக்கியமாக, சதீஷின் இல்லத்தில் அவனது நினைவுகளும், பொருட்களும் நொடிக்கொரு முறை அவனை நினைவு படுத்திக் கொண்டே அல்லவா இருக்கும்.
பிறகு அங்கே தங்குவது எப்படி சாத்தியமாகும் என யோசித்தவள், “இல்லை ஆண்ட்டி, பரவாயில்லை.. இங்கேயே இருக்கேன். உங்களுக்கு கல்யாண வேலைகள் இருக்குன்னு அம்மா சொல்லியிருந்தாங்க.. நான் வேற இடைஞ்சலா எதுக்கு?” என மென்மையாக மறுத்தாள்.
“ஐய்யோ இடைஞ்சல் எல்லாம் இல்லடாம்மா.. அது உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ.. இன்னும் பத்து நாள் இருக்கு நீங்க ஊருக்கு திரும்பி போக, அதுவரை உனக்கு ஒரு மாறுதலா இருக்கும் இல்லையா” என சுலோச்சனா வற்புறுத்தி அழைத்தார்.
நடக்கும் சம்பாஷனை எதிலும் பங்கேற்றுக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் விவேக்கின் அன்னை ராதா. அவருக்கு சுஜியின் நிலைமையும், சுஜியுடன் சதீஷ் தாய் காட்டிய உரிமையும் நெருக்கமும், நிறைய விஷயங்களை உணர்த்தின. அதனால் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.
சதீஷின் அன்னையுடன் சுஜி செல்ல காட்டிய தயக்கம் சற்றே உருத்தியது. அவளுக்கு அந்த வீட்டிலிருந்து சென்று விட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்கனவே தோன்றியிருக்க, ஆனால் சுலோச்சனாவுடன் செல்ல பிடித்தம் இல்லை என்பதையும் அவள் உடல்மொழி காட்டிக் கொடுத்தது.
அதுவரையிலும் அமைதியாக இருந்த ராதா, “சுஜிக்கு ஆட்சேபனை இல்லைன்னா, என் கூட கடலூர் வர்றியா? வீடு அவளோ வசதியா இருக்காது தான், ஆனா வீடு நிறைய குழந்தைங்க இருக்கு, நாங்க ரெண்டு பேர் இருக்கோம், விவேக் இருக்கான், உனக்கு ஒரு மாறுதலா இருக்கும். அவங்களும் அவங்க பையன் கல்யாண வேலையா அலைவாங்க, எப்படியும் நீ அங்க தனியா தானே இருக்கணும்.. அதுக்கு என் கூட வற்றியா.. ஒரு மாறுதலா இருக்கும்?” என சுஜிக்கு எந்த வகையிலும் கஷ்டம் கொடுத்துவிடா வண்ணம் தன்மையாக வினவினார்.
சுஜி எங்கே தவறாக எண்ணிக் கொள்வாளோ என நினைத்தவர், “உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம் சுஜி. கம்பல் பண்ணலை. ஏன்னா வீடு உனக்கு வசதியா இருக்கா..” என ராதா பேசிக் கொண்டிருக்கும் போதே, “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ஆண்ட்டி. நான் உங்க கூட வர்றேன். “என அவசரமாக மறுத்தபடிக்கு மென்மையாக மொழிந்திருந்தாள் சுஜினி.